செவ்வாய், 17 நவம்பர், 2009

கேள்வி பதில்?!


கேள்வி பதில்?!
அநேகமாக எல்லோரும் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தைப்பார்த்து ரசித்திருப்பார்கள. அதில் சிவாஜி ஒரு பாட்டில் ‘பாட்டும் நானே, பாவமும் நானே என்று ஒரு பாட்டு பாடுவார். என்னுடைய பதிவை என்ன செய்தும் பிரபலப்படுத்த முடியவில்லை. இப்படி கேள்வி-பதில் போட்டாலாவது பிரபலமாகிறதா என்று முயற்சிக்கிறேன்.
1.     கேள்வியின் நாயகனே! சில பதிவுகளில் மட்டும் ஹிட்டுகள் லட்சக்கணக்கில் வருகிறதே? அது எப்படி?

அது அந்தந்த பதிவுகளில் உள்ள ஹிட் கவுண்டரைப்பொருத்த்து. தனியாக ஆர்டர் கொடுத்து செய்யவேண்டும்.

2.     நீங்கள் மட்டும் ஏன் இலக்கியத்தமிழில் பதிவு போடுகிறீர்கள்?

மெட்ராஸ் பாஸைலெ என்கு ஜாஸ்தி பலக்கம் லேது.

3.     மனைவி அடித்தால் எப்படி தாங்குவது?

வடிவேலுவிடம் ஆறு மாதம் பாடம் படிக்கவும்.

4.     ஒரு நல்ல பதிவரின் இலக்கணம் என்ன?

நல்ல கேள்வி. டாஸ்மாக்கில் எட்டு ரவுண்ட் போட்டபிறகும் ஸ்டெடியாக நிற்கவேண்டும.



5.     என்னென்ன பதிவுகள் போடலாம்?

எந்த கருமாந்தரத்தையும் போடலாம். ஆனால் தலைப்பு மட்டும் அட்டகாசமாக இருக்கவேண்டும்.



இது ஒரு சரியான மொக்கைப்பதிவாக வந்துவிட்டது.
மீதி அடுத்த பதிவில்..




சனி, 14 நவம்பர், 2009

தமிழ் வளர்ப்போம்



தமிழ் கூறும் நல்லுலகில் ‘இன்டெர்நெட்’ என்னும் கணினி வசதி வந்தவுடன் எழுத்தார்வமிக்க இளைஞர், முதியோர், மகளிர், சிறார் என்று பலரும் தங்களின் பொங்கி வரும் கற்பனைப்படைப்புகளை வலைப்பதிவில் பதிய ஆரம்பித்து விட்டார்கள். பாரதி சொன்னதுபோல் ‘’சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கொணர்ந்திடுவீர் செல்வமனைத்தும்’’ என்ற கொள்கைப்படி பல பல செய்திகளைக்கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் தமிழ் மொழியை எப்பாடு பட்டாவது முன்னேற்றியே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாடு படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த முயற்சியிலே அவர்கள் ஈடுபடும்போது நாம் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகவே இந்த பதிவு.
ஒரு மொழி எவ்வாறு வளர்கிறது? ஆங்கில மொழி ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். எந்த மொழியிலிருந்து வேண்டுமானாலும் சொற்களை தங்கள் மொழியில் சேர்த்துக்கொள்வார்கள். எந்தப்பாகுபாடும் இல்லை. தமிழிலிருந்து கூட பல சொற்கள் ஆங்கிலத்திலே இருக்கின்றன. அவை ஆங்கில அகராதியிலும் கூட சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் இப்போது உலகப்பொது மொழியாக இருக்கிறது.
ஆனால் பிரஞ்சு மொழியைப்பாருங்கள். அவர்கள் மிகுந்த தன்மானம் உள்ளவர்கள் (தமிழர்களைப்போல). வேற்று மொழி சொற்கள் ஒன்று கூட தங்கள் மொழியில் கலவாமல் வைத்திருக்கிறார்கள். தமிழர்களும் அப்படித்தான் இருந்தார்கள். செந்தமிழே எங்கள் மூச்சு என்றுதான் இருந்தோம். ஆனால் இந்த வலைப்பதிவுகள் வர ஆரம்பித்தவுடன் தமிழர்களுக்கு தமிழ் மொழியை எப்பாடு பட்டாவது வளர்த்து விடுவது என்ற முடிவில் இருக்கிறார்கள். ஆங்கிலத்தைப்போல் மற்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளைக்கொண்டு வரலாம். ஆனால் அதற்கு மற்ற மொழிகளில் புலமை வேண்டும். அதுதான் நம்மிடம் கிடையாதே? ஆகவே ஒரு சுலபமான வழியை கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது இப்போது இருக்கும் சொற்களையே மேம்படுத்துவது! எப்படி?
இப்போது வரும் சில விளம்பரங்களில் எழுத்துக்களை மாற்றிப்போட்டு இருப்பார்கள். பார்ப்பவர்கள் ‘என்னடா இவன் தப்பாக எழுதியிருக்கிறான்’ என்று நினைத்துக்கொண்டு போவார்கள். அதுதான் விளம்பர உத்தி. விளம்பரம் மக்கள் மனதில் பதியவேண்டும். அவ்வளவுதான்.
அது போல் நம் பதிவர்கள் தமிழை எப்படி முன்னேற்றுகிறார்கள் என்று பாருங்கள்.
என் உல்லம், தமில் வால்க, பயிர்ச்சி, மறு அழைப்பிதல்
ல,ள.ழ = இந்த மூன்றுக்கும் வேறுபாடு இல்லை.
ரகரமும் றகரமும் ஒன்றே

எப்படியோ தமில் வலர்ந்தால் சறிதான்! வால்க தமில், வளர்க தமிலன்!

ஞாயிறு, 8 நவம்பர், 2009

தமிழ் பதிவுகளில் பின்னூட்டங்கள்


தமிழ் பதிவுலகில் தினமும் ஆயிரக்கணக்கான பதிவுகள் பதிவாகின்றன. ஆனால் ஒவ்வொரு பதிவிற்கும் பல பின்னூட்டங்கள் போடப்படுகின்றன. நாமும் ஒரு வருடமாக இந்த பதிவுலகத்தில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கறோம். நம் பதிவுகளுக்கு ஏன் இப்படி பின்னூட்டங்கள் யாரும் போடுவதில்லை என்ற எண்ணம் (ஏக்கம்!) ஏற்பட்டது.
சரி, இதற்கு என்ன பண்ணலாம் என்று ஆராய்ச்சியில் இறங்கினேன் (பழைய தொழில் புத்தி?). இந்த ஆராய்ச்சியில் நான் கண்டு பிடித்தவைகளை புதிய பதிவுலக நண்பர்களுக்காக இங்கே கொடுக்கிறேன்.
1.       நீங்கள் குறைந்தது ஒரு பத்து பதிவுலக நண்பர்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2.       அவர்களுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்கள் பதிவிற்கு அவர்கள் பின்னூட்டம் போடவேண்டும். பதிலுக்கு நீங்கள் அவர்கள் பதிவிற்கு பின்னூட்டம் போட ஒத்துக்கொள்ள வேண்டும்.
3.       நீங்கள் ஒரு பதிவை இற்றைப்படுத்தியவுடன் இந்த பத்து பேருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்திட வேண்டும்.
4.       உடனே மளமளவென்று உங்கள் பதிவிற்கு பின்னூக்கள் குவிந்து விடும். சில சமயங்களில் ஆர்வக்கோளாறு காரணமாக ஒருவரே பத்துப்பதினைந்து பின்னூட்டங்கள் போட்டு விடலாம. கண்டு கொள்ளாதீர்கள்.
5.       எல்லா பின்னூக்களுக்கும் தவறாது பதில் பின்னூட்டங்கள் உடனே போட்டு விடுங்கள். ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
6.       அதேபோல் உங்கள் நண்பர்களின் பதிவுகளைப்பற்றிய விவரங்களும் உங்களுக்கு மின்னஞ்சலில் வரும். அவைகளுக்கு உடனுக்குடன் பின்னூட்டம் போடுவது உங்கள் கடமை.
7.       இதையெல்லாம் நேரத்துடன் செய்யவேண்டுமென்றால் சிறிய தியாகங்கள் செய்யவேண்டியிருக்கும். ஒன்றுமில்லை. நீங்கள் தூங்கக்கூடாது. அவ்வளவுதான்.
அவ்வளவுதான், நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்கள்!