திங்கள், 31 மார்ச், 2014

நாய் பெற்ற தங்கப் பழம்


தங்கப் பழம் ஒரு விலை மிகுந்த பொருள்தான். ஆனால் ஒரு நாய்க்கு அது கிடைப்பதால் அதற்கு என்ன பயன்? அதுபோல் நான் பலவற்றைச் சேமித்து வந்தேன். பைகளைச் சேர்த்த கதையை சென்ற பதிவுகளில் பார்த்தோம். இப்போது அது போக சேகரித்த மற்றவை என்னவென்று பார்ப்போம்.

சிறு வயதில் மகாத்மா காந்தியின் சுய சரிதையைப் படித்திருக்கிறேன். சத்திய சோதனை என்பது அதன் பெயர். அது போக அவரைப்பற்றிய பல துணுக்கு செய்திகளையும் படித்திருக்கிறேன். அதில் என் மனதில் தைத்த ஒரு செய்தி - அவர் எந்தப் பொருளையும் வீண் பண்ணமாட்டார் என்பதே.

உடுத்தும் வேஷ்டி கிழிந்து விட்டால் அதை கிழித்து துண்டாக உபயோகப்படுத்துவார். அதுவும் கிழிந்தால் அதை இன்னும் சிறிய துண்டுகளாக்கி கைக் குட்டையாகப் பயன்படுத்துவார்.

அதே மாதிரி, எழுதும் காகித விஷயத்திலும் அவர் எந்தவொரு துண்டுக் காகிதத்தையும் வீணாக்க மாட்டார். தபால்கள் வரும் உறைகளையும் கூட கிழித்து அதன் உள் பக்கத்தை எழுதுவதற்கு உபயோகப்படுத்துவார்.

நான் மகாத்மா காந்தியின் சீடன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய கொள்கைகளை கடைப்பிடிப்பவன் அல்ல. இருந்தாலும் இந்த காகிதம், துணி விஷயங்கள் என்னை உடும்புப்பிடி போல் பிடித்துக்கொண்டன.

ஒரு பக்கம் காலியாக இருக்கும் காகிதங்கள், நன்றாக இருக்கும் கவர்கள், பழைய நோட்டுகளில் எழுதாமல் இருக்கும் காகிதங்கள், பழைய டைரியில் காலியாக இருக்கும் காகிதங்கள், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீசுகள், சாமான் வாங்கிய பில்கள், இப்படி எந்தக் காகிதத்தைப் பார்த்தாலும் அவைகளை சேகரித்து, ஒரே அளவாக வெட்டி, அதை நூலால் தைத்து பின்னால் உபயோகப்படும் என்று வைத்துக் கொள்வேன்.

இப்படியே சில கம்பெனிகள் ரெடி மேடாக சிறிய, நடுத்தர சைசில் நோட்டுப் புத்தகங்கள் போட்டு தங்கள் கஸ்டமர்களுக்கு கொடுப்பார்கள். அத்தகைய நோட்டுகள் கிடைத்தால் விடுவதில்லை. முடிந்தால் இரண்டு அல்லது மூன்று வாங்கி விடுவது வழக்கம். இவைகளையும் சேமித்து வைத்துக் கொள்வேன்.

எங்காவது வெளியூர் போனால் அங்கு பிளாட்பாரக் கடைகளில் இந்த மாதிரி சிறிய பாக்கொட் நோட்டுகள், குறிப்பெடுக்கும் நோட்டுகள் விற்பதைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு கால்கள் நகருவதில்லை. இரண்டு மூன்று ஐட்டங்கள் வாங்கினால்தான் மனம் அமைதிப்படும். இவ்வாறு சேமித்த நோட்டுகள் ஏராளம்.

ஆபீஸ் விஷயமாக பல மீட்டிங்குகள் நடக்கும். அந்த மீட்டிங்குகளில் எழுதுவதற்காக நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பார்கள். இவைகளை விடுவதில்லை.(கூடவே ஒரு பால் பாய்ன்ட் பேனாவும் கொடுப்பார்கள் - பேனாக்கள் கதை தனிக்கதை, அடுத்த பதிவில் கூறுகிறேன்)

வெளி நாடுகள் போகும்போது அங்கு ஆபீசில் கிடைக்கும் நோட்டுகளை ஒன்றுக்கு நான்காக லவட்டிக் கொண்டு வருவேன்.

புது வருட ஆரம்பத்தில் கம்பெனிகள் டைரி கொடுப்பது உங்களுக்குத் தெரியும். இப்படி நமக்கு யாராவது டைரி கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கியிருந்த காலம் போய், வருடத்திற்கு குறைந்தது அரை டஜன் டைரிகள் வரும் பொற்காலம் துவங்கியது. டைரிகள் எல்லாம் கோல்டு கில்ட் போட்டவைகள். பொதுவாக டைரிகளை பத்து நாளைக்கு மேல் எழுதுபவர்கள் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

நான் சாதாரண மனிதன். வந்த டைரிகளில் சாதாரணமாக இருக்கும் ஒன்றில் வெகு வேகமாக டைரிக் குறிப்புகள் எழுதுவேன். பத்து நாள் இது நடக்கும். அத்தோடு நின்று விடும். மற்ற டைரிகளை பத்திரமாக அலமாரியில் வைத்துக்கொள்வேன். ஏன் அப்படி டைரிகளை சேகரித்தேன் என்று இன்று யோசித்தால் ஒரு விடையும் கிடைக்க மாட்டேன் என்கிறது. எது கிடைத்தாலும் சேகரித்து வைத்துக் கொள்ளும் பைத்தியக்காரன் போல்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.

இப்படி சேர்த்த டைரிகள், நோட்டுப் புத்தகங்களை நான் ஒழுங்காக எந்த வேலைக்கும் பயன்படுத்திய ஞாபகமே இல்லை. பின்னால் உபயோகப்படும், அதனால் இப்போது வேண்டும். அவ்வளவுதான்.

இப்படிச்சேர்த்த நோட்டுப் புத்தகங்கள் இரண்டு மூன்று பெட்டிகள் ஆகி விட்டன. இப்போது அலமாரி, மற்றும் அட்டாலிகளை (Loft) சுத்தம் செய்யும்போது திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது. இவைகளை இனிமேல் என்ன செய்யப்போகிறோம்? என் சிற்றறிவிற்கு எட்டியவரையில் எந்த உபயோகமும் தெரியவில்லை. அப்புறம் எதற்கு இந்தக் கண்றாவிகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பட்டது.

இதில் என்ன கஷ்டம் வந்தது என்றால் இவைகளை என்ன செய்வது என்பதுதான். சிலவற்றை எதிரில் உள்ள மளிகைக் கடையில் கொண்டு போய் அவர்கள் பில் போட உதவுமென்று கொடுத்தேன். கொஞ்சம் நன்றாக இருப்பவைகளை அக்கம் பக்கம் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கொடுத்தேன். இப்படியாக எப்படியோ கஷ்டப்பட்டு எல்லா நோட்டுப் புத்தகங்களையும் தானம் கொடுத்து முடித்தேன்.

டைரிகள் மட்டும் இன்னும் என் புத்தக அலமாரியில் இருக்கின்றன. அவைகளை கொடுத்துவிட்டால் அப்புறம் அலமாரி காலியாக இருக்கும். ஒரு முனைவர் பட்டம் வாங்கின ஆராய்ச்சியாளரின் அலமாரி காலியாக இருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? இவருடைய மேல் மாடியும் காலிதான் போலிருக்கிறது என்று நினைக்க மாட்டார்களா? வக்கீல் வீட்டு அலமாரியில் சட்டப் புத்தகங்கள் இல்லாவிட்டால் அந்த வக்கீலுக்கு கேஸ்கள் வருமா? ஆகவே டைரிகள் இன்னும் இருக்கின்றன.

நோட்டுப் புத்தகங்களை தானம் கொடுத்து முடித்தவுடன் ஏதோ தலைமேல் இருந்த பெரிய சுமை இறங்கினது போல் உணர்ந்தேன். அடுத்த பதிவில் நான் துணிகள் வாங்கி சேகரித்த கதை (உண்மைக் கதைதான்) சொல்கிறேன்.

திங்கள், 24 மார்ச், 2014

என் பள்ளி அனுபவம்


என் பதிவைப் படித்து வரும் நண்பர்களுக்கு என் நினைவில் நீங்காமல் நிற்கும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த சம்பவம்தான் நான் போன பதிவில் கூறிய பைகள் சேமிப்புக்கான ஆரம்பம்.

எங்கள் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர வகை. அதாவது மூன்று வேளையும் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். அதற்கு மேல் எந்த ஆடம்பரமும் கிடைக்காது. அந்த உணவும் எனக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. "என்ன தினமும் இதேதானா" என்று கேட்டால் வரும் ஸ்டேண்டர்ட் பதில் - "பிடித்தால் சாப்பிடு, பிடிக்கவில்லையானால் எழுந்து போ".

அப்போது நான் செகண்ட் பாரம் அதாவது ஏழாவது கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கு ஒரு கித்தான் பையில்தான் புஸ்தகம், நோட்டுகள் ஆகியவற்றைப் போட்டுக்கொண்டு போகவேண்டும். எங்கள் வீட்டில் அந்த ஒரு பைதான் இருந்தது. நான் மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் அதை பையைத்தான் காய்கறி வாங்க என் அம்மா எடுத்துக் கொண்டு போவார்கள்.

மறுநாள் நான் பள்ளிக்கு எடுத்துப் பொக அந்தப் பையை எடுத்தால் அதற்குள் வெங்காயச் சருகு, கருவேப்பிலை இலைகள், சில சமயம் சிறு கத்தரிக்காய் இப்படி பலது இருக்கும். பொதுவாக நான் அவைகளை அப்புறப்படுத்தி விட்டு பள்ளிக்கு கொண்டு போவேன். சில சமயம் அவசரத்தில் மறந்து போய் அந்தப் பையை அப்படியே கொண்டு போய் விட்டால் சக மாணவர்கள் இந்த காய்கறி மிச்சங்களைப் பார்த்து என்னைக் கலாட்டா செய்வார்கள்.

இதனால் மனம் வெறுத்து விட்டது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் போய் முறையிட்டேன். அந்தக் காலத்தில் பையன்கள் அப்பாக்களிடம் நேருக்கு நேர் நின்று பேசும் வழக்கம் இல்லை.

நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையை அம்மா காய்கறி வாங்க எடுத்துக்கொண்டு போய் அழுக்காக்கி விடுகிறார்கள். அதனால் அந்தப் பையை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போக வெட்கமாய் இருக்கிறது. அதனால் எனக்கென்று தனியாக ஒரு பை வாங்கித்தரவேண்டும் என்று சொன்னேன்.

என் அப்பா என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு சொன்ன பதில்தான் என் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.

அவர் சொன்ன பதில்;

"இப்படி ஆள்ஆள் விதமாக பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் பள்ளிக்கூடம் போ, இல்லாவிட்டால் நின்றுகொள்".

அவ்வளவுதான், மேட்டர் முடிந்தது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. மரியாதையாக அந்தப் பையையே வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போனேன். பெயிலாகாமல் படித்தேன். வேலைக்குப் போனேன். சம்பாதித்தேன். பைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி சேமித்தேன். இன்று அவைகள் சுமையாகி விட்டபடியால் வேண்டியவர்களுக்கெல்லாம் தானமளிக்கிறேன்.

வியாழன், 20 மார்ச், 2014

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


ஆரம்பப் பள்ளிப் பாடத்தில் படித்த இந்த வாசகம் "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற வாசகம் என்னுடைய உள் மனதில் ஆழமாகத் தைத்திருந்தது. இதன் கூடவே இன்னொரு வாசகமும் தைத்திருந்தது. அது "எந்தப் பொருளையும் வீணாக்காதே" என்பதாகும்.

இந்த இரண்டு வாசகங்களும் உண்மையில் பொன்மொழிகளாகக் கருதப்பட வேண்டிய தகுதி உடையவை. ஆனால் பொன்மொழிகள் ஏட்டில் பொன்னெழுத்துகளால் பொறித்து சட்டம் போட்டு வைக்கத்தான் லாயக்கே தவிர வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காக அல்ல என்ற உண்மையை நீங்கள் கற்றிருப்பீர்கள்.

என் வாழ்வில் இந்த பொன்கொழிகளைக் கடைப்பிடித்ததின் விளைவுகளை சொல்கிறேன். வருடத்தில் இரண்டு முறை எங்கள் வீட்டைத் திருப்பிப் போட்டு சுத்தம் செய்வதை என் சகதர்மிணி வழக்கமாகக் கொண்டுள்ளாள். தமிழ் வருடப் பிறப்பிற்கும் ஆயுத பூஜைக்கும் இரண்டு தடவை. பொதுவாக இந்த நாட்களில் நான் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஒரு வாரம் வெளியூர் போய்விடுவது வழக்கம்.

இந்த முறை அப்படி செய்ய உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. பொறியில் சிக்கிய எலி போல் மாட்டிக்கொண்டேன். இங்க பாருங்க, உங்க கப் போர்டை எல்லாம் சுத்தம் செய்வது உங்கள் பொறுப்பு, கொஞ்சம் கொஞ்சமாகச் செய்தால் போதும் என்று உத்திரவு போட்டு விட்டாள். சுப்ரீம் கோர்ட்டு உத்திரவை அலட்சியம் செய்ய நானென்ன மத்திய அரசு மந்திரியா என்ன, ஆகவே ஒழுங்காக சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

முதல் நாள் ஒரு கப்போர்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அதில் பல காலமாக வாங்கின சாமான்கள் பேக் செய்து கொடுத்த பிளாஸ்டிக் பைகள் கட்டு கட்டாக இருந்தன. பின்னால் எதற்காகவாவது வேண்டியிருக்கும் என்று சேமிக்கப்பட்டவை அவை. கல்யாண வீட்டில் கொடுக்கப்படும் தாம்பூலப் பைகளும் இதில் அடக்கம். கரப்பான் பூச்சிகள் அங்கு பல தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் போலத் தோன்றியது.

இது எல்லாம் வேண்டுமா என்று பார்யாளைக் கேட்டேன். எனக்கு வேண்டாம் உங்களுக்கு வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று முடிவை என்னிடம் விட்டு விட்டாள்.

நான் எப்போதோ படித்த இன்னொரு பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது. "எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்." இதுவும் மனதில் தைத்த ஒரு வாசகம்.

இந்த அளவுகோலில் பார்த்தால் இந்தப் பைகளை பல வருடங்களாக உபயோகப் படுத்தவில்லை. ஆகவே இவை நம் வாழ்விற்குத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். அவைகளை எல்லாம் தூக்கி வெளியே போட்டேன். கரப்பான் பூச்சிகள் மிகவும் ஆட்சேபணை தெரிவித்தன. எல்லாவற்றிற்கும் "ஹிட்" ஸ்ப்ரே கொடுத்தேன். எல்லாம் தங்கள் ஆட்சேபணையை வாபஸ் வாங்கிக்கொண்டன.

தொடரும்...

செவ்வாய், 11 மார்ச், 2014

என் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு வந்த சோதனை


போன வாரத்திலிருந்தே என் கம்ப்யூட்டருடைய மானிட்டர் உயிரை விடுவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்க ஆரம்பித்தது. மானிட்டர் லைட் விட்டு விட்டு எரிந்தது. பிறகு ஒரேயடியாக அணைந்து விட்டது.

எனக்குத் தெரிந்த கை வைத்தியம் ஒன்றே ஒன்றுதான். அது கேபிள்களை கழட்டி மாட்டுவதுதான். அதை செய்தேன். மானிட்டரும் சாதுவாக வேலை செய்தது. இப்படி இரண்டு நாள் செய்தது. மூன்றாம் நாள் திரும்பவும் மக்கர் செய்தது.

கூகுளில் தேடினேன். சிபியுவில் குப்பைகள் இருந்தாலும் இப்படி செய்யும் என்று போட்டிருந்தது. சிபியூ புதிதாக வாங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று. சரி, அதையும் செய்து பார்த்து விடலாமென்று ஒரு மாலைப்பொழுதில் சிபியுவை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

சிபியுவை சுத்தம் செய்வது ஒரு பெரிய இந்திர ஜால வேலை என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் அதில் செருகியிருக்கும் ஒரு டஜன் கேபிள்களை பிடுங்க வேண்டும். பிடுங்குவது சுலபம். மாட்டும்போதுதான் அதில் உள்ள வம்பு புரியும். எந்த கேபிளை எங்கு மாட்டுவது என்பதில் குழப்பம் ஏற்படும்.

முன் அனுபவம் காரணமாக கேபிள்களை கழட்டும்போதே அவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும்  லேபிள் எழுதி அது அதில் சொருகி வைத்து விட்டேன்.
பிறகு வேகுவம் கிளீனரை எடுத்து வைத்துக் கொண்டேன். சிபியுவில் உள்ள சைடு கதவைத் திறந்தேன். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. இரண்டே ஸ்க்ரூதான். திறந்தால் உள்ளே ஏகப்பட்ட தூசு, குப்பைகள் மண்டிக்கிடந்தன.

நல்ல காலம் இந்த வேலையை வீட்டு வாசலில் வைத்து செய்தேன். வீட்டிற்குள் இந்த வேலையைச் செய்திருந்தால் வீட்டு அம்மாள் சிபியுவை அப்படியே தூக்கி எறிந்திருப்பார்கள். முதலில் ஒரு பழைய துணியைக் கொண்டு முடிந்த வரை துடைத்தேன். பிறகு வேகுவம் கிளீனரில் புளோயரை ஆன் செய்து புளோயர் நாசிலை சிபியுவின் உள்ளே எல்லா இடங்களிலும் காண்பித்தேன்.

உள்ளேயிருந்து அவ்வளவு தூசிகள் வெளியேறின. வீட்டுக்குள் வைத்திருக்கும் கம்ப்யூட்டருக்குள் இவ்வளவு தூசிகள் எப்படி புகுந்தன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே. அவைகளை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு மறுபடியும் புளோயரால் கிளீன் செய்தேன். இப்படி நாலைந்து முறை செய்த பின் உள்ளேயிருந்து தூசிகள் வருவது நின்று விட்டது.

பிறகு உள்ளேயிருக்கும் விசிறிகளைக் கவனித்தேன். அதில் இறக்கைகளுக்குப் பின்னால் தூசிகள் அடை அடையாய் ஒட்டிக்கொண்டு இருந்தன. அவைகளை எல்லாம் நைசாக ஒரு குச்சியின் மூலம் அகற்றி வெளியே எடுத்தேன். பிறகு அந்த விசிறிகளுக்கு புளோயர் மூலம் காற்று அடித்தேன். மேலும் தூசிகள் வெளியே வந்தன.

இந்த விசிறிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் சிபியுவில் காற்றோட்டம் சரியாக ஏற்பட்டு டெம்பரேச்சர் கன்ட்ரோலில் இருக்கும். இல்லையென்றால் டெம்பரேச்சர் அதிகமானால் சிபியு ஸ்ட்ரைக் செய்து விடும். இப்படி சிபியுவை வருடம் ஒரு முறையாவது சுத்தம் செய்வது அவசியம்.

இப்படி சிபியூவை சுத்தம் செய்த பிறகு எல்லா கேபிள்களையும் சிபியுவில் மாட்டினேன். ஒரு கேபிளும் அநாமத்தாக கிடக்கவில்லை என்று சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டேன். பிறகு சிபியுவிற்கு கரண்ட் கனெக்ஷன் கொடுத்தேன். பழைய குருடி கதவைத்திறடி என்ற கதையாக மறுபடியும் மானிடர் வம்பு செய்தது.

ஓஹோ, இது கொஞ்சம் சீரியசான விவகாரம் போல இருக்கிறது என்று அப்போதுதான் ஞானோதயம் ஏற்பட்டது. இனி ஸ்பெஷலிஸ்ட்டைக் கூப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தேன்.

எனக்கு என்று ஒரு ஆஸ்தான வித்வான் இருக்கிறார். அவரைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன். நான் வந்து பார்க்கிறேன் என்று சொன்னார். இரண்டு மணி நேரத்தில் வந்து பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். வந்தது வம்பென்று நினைத்துக் கொண்டு என்னவென்று கேட்டேன். அவர் ஒன்றுமில்லை, இதை இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் (வொர்க் ஷாப்பில்) சேர்த்து ஒரு ஆபரேஷன் செய்தால் சரியாய்ப்போகும் என்றார்.

சரி, அப்படியே செய்யுங்கள் என்றேன். அவர் மானிட்டரை எடுத்துச்சென்று விட்டார். எனக்கு ஒரு கை ஒடிந்தது போல் ஆயிற்று. விடிந்ததும் கம்ப்யூட்டர் முகத்தில் விழித்தே பழக்கமாகிப் போனதால் இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறைதான்.

எப்படியோ மூன்று நாட்களுக்குப் பிறகு மானிட்டர் நேற்று மாலை வந்து சேர்ந்தது. கம்ப்யூட்டர் மெக்கானிக் எல்லாவற்றையும் இணைத்து பவர் ஆன் செய்தார். கம்ப்யூட்டர் பழையபடி வேலை செய்ய ஆரம்பித்தது. போயிருந்த என் உயிர் திரும்ப வந்தது.

திங்கள், 10 மார்ச், 2014

An accident

I am sorry to report that my monitor developed a serious ailment and had to be hospitalised. Hence I could not write my post today. This post is written from my mobile and hence in English.



 

ஞாயிறு, 2 மார்ச், 2014

பேங்க் விவகாரங்கள் - கடைசி பகுதி


ஏன் தலைப்பில் விவகாரங்கள் என்று போட்டேன் என்றால், பேங்க் கணக்குகளில் ஏதாவது குளறுபடி வந்து விட்டது என்றால் அதைத் தீர்ப்பதற்குள் உங்கள் தாவு தீர்ந்து விடும். எப்போது குளறுபடி வரும்? அது உங்கள் தலையெழுத்தைப் பொருத்தது.  ஆகவே இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு கணக்கைத் தொடருங்கள்.

எனக்கு ஒரு முறை என்னுடைய பிபிஎப் கணக்கில் வட்டியைத் தவறுதலாக கணக்கிட்டு விட்டார்கள். சில ஆயிரங்கள் விட்டுப்போயின. சும்மா இருக்க முடியுமா? போய்க்கேட்டேன். எழுதிக்கொடுங்கள் என்றார்கள். எழுதிக்கொடுத்தேன். பாஸ் புக் நகல் எடுத்துக் கொடுங்கள் என்றார்கள். எடுத்துக் கொடுத்தேன். சில நாட்கள் ஆகும், பொறுத்திருங்கள் என்றார்கள்.

ஒரு மாதம் கழித்துப் போய் கேட்டேன். அப்படியா, எழுதிக்கொடுங்கள் என்றார்கள். முன்பே எழுதிக்கொடுத்தேனே என்றேன். அது அந்த மேனேஜர் மாற்றலாகிப் போய்விட்டார், அதனால் பழைய விண்ணப்பங்களும் அவருடன் போய் விட்டன. நீங்கள் ஒன்று செய்யுங்கள். இப்போது புதிதாக ஒரு விண்ணப்பம் கொடுத்து விடுங்களேன் என்றார்கள். புதிதாக ஒரு விண்ணப்பம் எழுதி பாஸ் புக் காப்பியுடன் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றார்கள்.

இரண்டு வாரம் கழித்து போனேன். திரும்பவும் விண்ணப்பம் கொடுத்தீர்களா என்றார்கள். என்னடா இது, திரும்பவும் முதலிலிருந்தா என்று யோசித்தேன். விண்ணப்பம் எழுதி பத்து காப்பி சீராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டேன். கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு காப்பியாக கொடுத்து வந்தேன். ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி விட்டது. மூன்று மேனேஜர்கள் மாறி விட்டார்கள்.

புதிதாக வந்த மேனேஜருக்கு என்ன தோன்றியதோ, ஒரு நாள் இன்று மாலை 4 மணிக்கு வாருங்கள் சார் என்றார். மாலை 4 மணிக்குப் போனேன். கம்ப்யூட்டரில் என்னமோ பண்ணி பத்து நிமிடத்தில் கணக்கை நேர் செய்து விட்டார். மிகவும் நன்றி என்று சொல்லி விட்டு என் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பொறுமை, விடாமுயற்சி, சாதுர்யம் என்பவை எல்லாம் தேவை என்பதே. இரண்டு பேங்கில் கணக்கு வைத்திருந்தீர்களானால் இவையெல்லாம் உங்களுக்கு கை வந்து விடும். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.