ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கல்லூரிகளும் உயர் கல்வியும்

                                         Image result for பட்டமளிப்பு விழா
உயர்கல்வி எனப்படுவது இளங்கலைப் பட்டப்படிப்பு முடிந்த பிறகு மேற்கொள்ளும் கல்வி ஆகும். முதுகலைப் பட்டப்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு ஆகிய இரண்டும் இதில் அடங்கும். இளங்கலைப் பட்டப்படிப்புக்கு மேல் 6 மாதம், மூன்று மாதம் ஆகிய குறுகிய காலங்களில் சில படிப்புகள் நடத்தப்பட்டு, அதற்கான பட்டயம் கொடுக்கப்படும். இது ஆங்கிலத்தில் சர்டிபிகேட் கோர்ஸ்கள் என்று அறியப்படும்.

இந்த உயர்கல்விப் படிப்புகளில் முக்கியமானது ஏதாவது ஒரு ஆராய்ச்சியை திட்டமிட்டு நடத்தி அதற்கான கட்டுரையை சமர்ப்பிக்கவேண்டும். வெறும் புத்தகப்படிப்பு மட்டும் அந்தத் துறையின் முழு அறிவையும் கொடுக்காது, தானே ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை வகுத்து அதை நடத்தி அனுபவம் பெற்றால்தான் அந்தத் துறையில் பல நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன் வளரும் என்ற நோக்கில் ஏற்பட்ட ஒரு முறை.

குமுதம் என்ற வாரப் பத்திரிகையில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நகைச்சுவைத் துணுக்கு போட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பவன் இளங்கலைப் பட்டதாரி. கொஞ்சம் விஷயங்களைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருப்பவன் முதுகலைப் பட்டதாரி. ஒன்றுமில்லாததைப்பற்றி எல்லாம் தெரிந்து வத்திருப்பவன் முனைவர் பட்டதாரி. இவ்வாறு ஒரு நகைச்சுவைத் துணுக்கு போட்டிருந்தார்கள்.

இந்த நகைச்சுவை ஒரு புறமிருக்க, முனைவர் பட்டம் வாங்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் மாணவனாகச் சேரவேண்டும். இப்படி சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை வரையரைக்குட்பட்டது. அங்கு அனுபவப்பட்ட முனைவர் பட்டத்திற்கான வழிகாட்டுதலுக்கு எவ்வளவு ஆசிரியர்கள் இருக்கிறார்களோ, அதற்குத் தகுந்த மாதிரிதான் மாணவர்களைச் சேர்க்க முடியும்.

மாணவர்களைச் சேர்த்த பிறகு அந்த மாணவர் ஒரு ஆசிரியரின் கீழ் தன் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியைத் துவங்குவார். முனைவர் பட்டத்திற்கு ஒரு நல்ல ஆரய்ச்சிப் பொருள் தேவைப்படும். இதை அந்த மாணவர் ஆசிரியர் வழிகாட்டுதலின்படி தேர்ந்தெடுப்பார். பிறகு அந்தப்பொருள் பற்றி என்னென்ன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று ஒரு திட்டம் வகுப்பார்கள். அந்த திட்டத்தின்படி ஆராய்ச்சிகள் செய்து அதனுடைய முடிவுகளை பல விதத்தில் ஆராய்ந்து ஒரு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். இதை "தீசிஸ்" என்பார்கள்.

இந்த ஆய்வு அறிக்கை இரண்டு அல்லது மூன்று வல்லுநர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளை வாங்குவார்கள். இந்த அறிக்கை முனைவர் பட்டம் வழங்குவதற்கு ஏற்றதுதானா என்று அந்த வல்லுநர்கள் சொல்லவேண்டும். பிறகு அந்த மாணவனை ஒரு வல்லுநர் முன்பு நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தப்படுவான். அதிலும் அவன் தகுதியானவனாக மதிப்பிடப்பட்டால் அவனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் உண்மையானதாக இருக்கவேண்டும். தன் கற்பனையில் உதிக்கும் முடிவுகளை ஒருவன் முனைவர் பட்டத்திற்கு சமர்ப்பிக்க முடியாது. இப்படித்தான் நான் முனைவர் பட்டம் வாங்கினேன். என் முனைவர் பட்டத்திற்கான "தீசிஸ்" அமெரிக்காவிலுள்ள மூன்று நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அங்கீகாரம் பெற்றது. நான் வழிகாட்டிய சில மாணவர்களும் இவ்வாறுதான் முனைவர் பட்டம் வாங்கினார்கள்.

ஆகவே ஒருவர் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார் என்றால் கல்வி வட்டாரத்தில் அவருக்கு ஒரு நல்ல மதிப்பு உண்டு.

ஆனால் இன்று நடக்கும் நடைமுறைகளைப் பார்த்தால் கண்ணில் நீர் வரும். ஒவ்வொரு ஊரிலும் கல்லூரிகளுக்குப் பக்கத்தில் இங்கு "தீசிஸ்" தயார் செய்து கொடுக்கப்படும் என்று பல போர்டுகளைப் பார்க்கலாம். அந்தந்த கல்லூரிகளுக்குப் பொருத்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இங்கு தயார் செய்து கொடுக்கிறார்கள். மாணவர்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை.

மாணவர்கள் பணம் மட்டும் கொடுத்தால் போதும். இந்த கடைக்காரர்களே ஒரு பொருத்தமான பொருளில் ஆராய்ச்சிக் கட்டுரையை முழுமையான வடிவில் கொடுத்து விடுவார்கள். அந்த மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களும் இதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். இந்த முறை மாணவர்களுக்கும் வசதி, ஆசிரியர்களுக்கும் வசதி. புதிதாக ஆரம்பிக்கும் பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஒன்றும் இருக்காது. அங்கு எப்படி ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்க முடியும்?

புதுக்கல்லூரிகளில் ஆரம்பித்த இந்த நோய் பழைய கல்லூரிகளையும் பிடித்துவிட்டது. இதில் சில பல்கலைக் கழகங்களில் வருமானத்தைப் பெருக்குவதற்காக மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். யாரை வேண்டுமானாலும் வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம் என்று விதிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

யாராவது முனைவர் பட்டம் வைத்திருப்பவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கினால் போதுமானது. சில வருடங்கள் முன்பு என் நண்பர் சிபாரிசின் பேரில் ஒரு மாணவர் இந்த மாதிரி கையெழுத்து வேண்டும் என்று வந்திருந்தார். என்ன ஆராய்ச்சி செய்திருக்கிறாய் என்று கேட்டால் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒரு சிடியைக் கொண்டு வந்திருந்தார். இதில் எல்லாம் இருக்கறது என்றார்.

அந்த சிடியை வாங்கி கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தேன். அது வேறு மாகாணத்திலுள்ள ஏதோ  ஒரு கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரை. இதை அப்படியே என் பெயர் போட்டு என் ட்யூட்டோரியல் இன்ஸ்டிட்யூட்டில் டைப் அடித்துக் கொடுத்து விடுவார்கள். அந்த சர்டிபிகேட்டில் நீங்கள் ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும் என்றார். நான் தம்பி. அது எனக்கு சரிப்படாது, நீ வேறு யாரையாவது பார்த்துக்கொள் என்று அனுப்பி விட்டேன்.

வட இந்தியாவில் பல இடங்களில் பல்கலைக் கழக பட்டங்களை விற்கிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். அது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம் நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

அப்துல் கலாமுக்கு தர்ப்பணம்.

                                     Image result for அப்துல் கலாம் quotes

சில நாட்களுக்கு முன் தினத்தாள்களில் ஒரு செய்தி படித்தேன். சிலர் அப்துல் கலாமைப் புதைத்த பகுதியிலிருந்து கொஞ்சம் மண் எடுத்து சட்டியில் போட்டு அதை அவருடைய அஸ்தியாகப் பாவித்து அதை காவிரியில் கரைத்து அய்யரை வைத்து அப்துல் கலாமுக்கு தர்ப்பணம் கொடுத்தார்களாம்.

அப்துல் கலாம் மனித நேயம் மிக்க ஒரு நல்ல மனிதர். யாரும் இதை மறுக்கமாட்டார்கள். ஆனாலும் அவர் பேரில் ஏதோ தங்களுக்கு மட்டும்தான் தனியாக பக்தி இருப்பது மாதிரியும், அவருக்காக தாங்கள் உயிரையே வேண்டுமானாலும் அர்ப்பணிப்போம் என்கிற மாதிரி சிலர் விளம்பரத்திள்காக பண்ணும் முறைகேடான காரியங்கள் பயித்தக்காரனின் காரியத்தை ஒத்திருக்கின்றன.

மேலும் அப்துல் கலாம் கடைப்பிடித்த மதத்தில் இந்த செயலை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இதே மாதிரி தாங்கள் கொண்டாடும் ஒரு அரசியல்வாதிக்கு ஏதாவது சங்கடம் என்றால் அந்த சங்கடம் நீங்க கோவில்களில் தனியாக பூஜைகள், யாகங்கள் இவைகளை நடத்துகிறார்கள். இது முற்றிலும் விளம்பரே. கடவிள் யார்யாருக்கு எந்தெந்த சமயத்தில் என்ன நடக்கவேண்டும் என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறார். இவர்கள் யாகம் நடத்துவதால் கடவுளின் கணக்கு மாறப் போகிறதா என்ன?

இதைப் போலவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று செல் போன் டவர்களின் மேல் ஏறிக்கொண்டு சிலர் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். இது எல்லாம் மட்ட ரகமான விளம்பரம் தவிர வேறு ஒன்று மில்லை.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இதுதான் இந்திய மக்களின் மடத்தனம். இது என்று மாறுமோ அன்றுதான் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா பலிதமாகும்.

புதன், 19 ஆகஸ்ட், 2015

நானும் மாணவர்களின் கட்டுப்பாடும்.

                                       Image result for அக்ரி காலேஜ் கோவை

மாணவர்களின் கடமை படிப்பது மட்டும்தான். என்னென்ன படிக்கவேண்டும்? பாடம் மட்டுமல்ல. கட்டுப்பாடு, ஒழுங்கு, நேரம் தவறாமை, மற்றவர்களிடம் அனுசரித்துப் போதல், ஆசிரியரிடம் மரியாதை இவை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே என் தாரக மந்திரம்.

விவசாயக் கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பார்கள். ஆகவே அவர்கள் ஏறக்குறைய 24 மணி நேர மாணவர்கள். இந்த வாழ்வு முறையில் அவர்கள் வாழ்க்கையின் நுணுக்கங்களை முழுவதுமாகக் கற்றுக் கொள்கிறார்கள். விவசாயக் கல்லூரியில் படித்த மாணவர்கள் விவசாயம் மட்டும் அல்லாது பல்வேறு துறைகளிலும் (IAS, IPS, IRS, Banking, Social Work)ஈடுபட்டு பிரகாசிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முதல் காரணம் ஆசிரியர்களின் ஈடுபாடே. ஏதோ வந்தோம், வகுப்பு எடுத்தோம், சென்றோம் என்று இல்லாமல் மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். இதில் நான் கடைப்பிடித்த சில கொள்கைகள் இன்றைய நாளில் செல்லுபடியாகாது. ஆனால் அன்று இருந்த சூழ்நிலையில் என் கொள்கைகள் வெற்றிகரமாக நடந்தன.

அப்போது விவசாயக் கல்லூரி பல்கலைக் கழகமாக உருவாகவில்லை. சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆண்டு தேர்வுகளெல்லாம் பல்கலைக்கழகமே நடத்தும். கல்லூரியில் இருக்கும் விரிவுரையாளர்கள் உள் தேர்வு அதிகாரிகளாகவும், வெளி மாநிலத்து வேளாண்கல்லூரிகளிலிருந்து விரிவுரையாளர்களை வெளித் தேர்வு அதிகாரிகளாகவும் நியமிப்பார்கள். செயல் முறைத்தேர்வை இருவரும் சேர்ந்து நடத்துவார்கள்.  எழுத்துத்தேர்வின் விடைத்தாள்கள் வெளித்தேர்வு அதிகாரிகளால் திருத்தப்படும்.

இந்த மதிப்பெண்கள் எல்லாம் சென்னை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்படும். அங்கு இந்த வெளித் தேர்வு அதிகாரிகள் மட்டும் ஒரு நாள் சந்தித்து இந்த முடிவுகளை ஆராய்ந்து முடிவு செய்வார்கள், தேவைப்படுபவர்களுக்கு ஓரிரு மதிப்பெண்கள் தேவையானால் இங்கே அதைச் சேர்ப்பதுண்டு. குறிப்பாக மொத்தம் உள்ள ஆறு பாடங்களில் ஐந்து பாடங்களில் ஒரு மாணவன் தேர்வு பெற்றிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பாடத்தில் மட்டும் ஒரு மதிப்பெண் குறைகிறது. அதைச்சேர்த்தால் அவன் முழுத்தேர்வு பெற்ற விடுவான். அந்த சூழ்நிலையில் அந்த ஒரு மதிப்பெண்ணைச் சேர்க்க அந்தக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

ஒரு கட்டத்தில் ஒரு வெளி தேர்வு அதிகாரி கடைசி கட்டத்தில் தன்னால் வரமுடியவில்லை என்று பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதி விட்டார். போதிய கால அவகாசம் இல்லாததினால் பல்கலைக் கழகம் உள்தேர்வு அதிகாரியாக இருந்த என்னை வெளித்தேர்வு அதிகாரியாக நியமனம் செய்தது. அதில் இங்குள்ள பலருக்கு, (மேல் அதிகாரிகள் உட்பட) என் மேல் பொறாமை. ஏனெனில் கல்லூரியிலேயே பாடம் நடத்தும் ஒருவரை வெளித்தேர்வு அதிகாரியாக நியமனம் செய்வது அதுதான் முதல் தடவை. இது ஒரு பெரிய கௌரவம். மாணவர்கள் மத்தியில் என்க்கு ஒரு பெரும் மரியாதை கலந்த மதிப்பு கூடியது.

பல்கலைக் கழகம் நடத்தும் தேர்வுகளில் விவசாயக் கல்லூரியின் அதிகாரிகளின் தலையீடு எதுவும் இருக்காது. அதனால் தேர்வு அதிகாரிகள் சதந்திரமாக செயல்புரிய முடிந்தது. ஆனால் யாரும் மனச்சாட்சிக்கு விரோதமாக மதிப்பெண் போடுவதோ, குறைப்பதோ செய்யமாட்டார்கள். அதிகமாகப்போனால் ஒருவனுக்கு சலுகை காட்டமாட்டார்கள். அவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் வருட ஆரம்பத்தில் நான் என் வகுப்புகளை ஆரம்பிக்கு முன் மாணவர்களுக்கு சில குறிப்புகள் கொடுப்பேன்.

1. என் வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டும். 50 சதத்திற்கு குறைவாக வரும் மாணவர்கள் தேர்வு பெறமாட்டார்கள்.

2. 95 சதம் வருகை புரிந்த மாணவர்கள் தேர்வுக்கு வந்தால் போதும், அவர்கள் பேப்பரில் என்ன எழுதிக் கொடுத்திருந்தாலும் தேர்வு பெறுவார்கள்.

3. என் வகுப்புகளிலோ அல்லது மாணவர் விடுதியிலோ அல்லது கல்லூரி வளாகத்தினுள் எங்கேயாவதோ ஏதாவது கலாட்டா அல்லது சண்டையில் கலந்து கொண்டிருந்தால் அவர்கள் தேர்வில் கட்டாயம் வெற்றி பெற மாட்டார்கள்.

4. இந்த விதிகளுக்கு உற்பட்டு நல்ல மதிப்பெண்கள் வேண்டுபவர்கள் அவர்களாக முயற்சி செய்து வாங்கிக் கொள்ளவேண்டியது.

இந்த விதிகளைச் சொல்லிவிட்டுத்தான் பாடங்களை ஆரம்பிப்பேன். வருடத்திற்கு ஒன்றிரண்டு மாணவர்கள் அவர்களாகவே தேர்வில் வெற்றி பெறாவிட்டலும் நான்தான் அவர்களை வேண்டுமென்றே தோல்வி பெறச்செய்தேன் என்று வதந்தி பரப்புவதுண்டு. அதனால் என் பேரில் எல்லா மாணவர்களுக்கும் ஒரு பயம் உண்டு. நான் அவைகளைக் கண்டுகொள்ளமாட்டேன்.

இவ்வாறாக மாணவர்களை பல வகையில் வளர்வதற்கு ஆசிரியர்கள் பங்களித்தார்கள். நானும் என் பங்களிப்பை அர்ப்பணித்தேன்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 2

                               

இப்படி நான் கொடுங் கோலோச்சிக் கொண்டிருக்கையில் எனக்கு பதவி உயர்வு வந்தது. என்னை ஆசிரியர் பிரிவிலிருந்து மாற்றி ஆராய்ச்சிப் பிரிவில்
கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாக நியமனம் செய்தார்கள். அந்தக் காலத்தில் கெஜட்டட் ஆபீசர் என்றால் மதிப்பு வாய்ந்த பதவி. இன்று ஆபீஸ் அட்டெண்டர் தவிர மற்றவர்கள் எல்லோரும் கெஜட்டட் ஆபீசர்கள்தான்.  ஒரு வருடம் கழித்து நானாக கேட்டுக்கொண்டதின் பேரில் மீண்டும் ஆசிரியப் பிரிவிற்கு மாற்றல் வந்தது.

இப்போது நான் விரிவுரையாளர் என்ற பதவியில் இருந்தேன். பாட வகுப்புகள் எடுப்பது, செயல்முறை வகுப்புகளை மேற்பார்வை செய்வது ஆகியவை என் பணிகள். அந்தக் காலத்தில் விவசாயக் கல்லூரிகளுக்கென்று தனியாக அச்சிட்ட பாட புத்தகங்கள் இல்லை. லைப்ரரி புத்தகங்களைப் பார்த்து விரவுரையாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும். மாணவர்கள் தாங்கள் கொண்டு வரும் நோட்டுப் புத்தகங்களில் அந்தக் குறிப்புகளை எழுதிக் கொள்வார்கள்.

ஆகவே யாரும் கவனக்குறைவாக வகுப்புகளில் இருக்க முடியாது. நான் எடுத்த பாடம் மண்ணியல் பாடம்.

முதல் வகுப்பில் மாணவர்களுக்கு சில பொதுவான விஷயங்கள் சொல்வேன்.

முதலில் மாணவர்கள் மிகப் பழைய காலத்திலேயே எப்படி வகைப்படுத்தப்பட்டார்கள் என்று சொல்வேன். அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட நன்னூல் சூத்திரத்தைச் சொல்வேன்.




அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்


அன்னப்பறவை பாலையும் நீரையும் கலந்து குடிக்கக் கொடுத்தாலும் நீரை விட்டு விட்டு பாலை மட்டும் குடிக்கும் திறன் வாய்ந்தது. அதே போல் பசுமாடு (ஆ) தின்பதற்கு கொடுக்கும் வைக்கோலையும் தவிட்டையும் நாம் உண்ணக்கூடிய பாலாக மாற்றித் தருகின்றது. அது போல் மாணவர்கள் ஆசிரியர் கூறும் சொற்களிலிருந்து சாரத்தை மட்டும் பிரித்து மனதில் பதிக்கவேண்டும். அவன்தான் முதல் மாணாக்கனாவான்.

மண்ணையும் கிளியையும் அவைகளின் குணங்களைத் தெரிந்து இங்கு உவமானமாக நன்னூலில் அந்தக் காலத்திலேயே சொல்லியிருப்பதை காணும்போது அந்தக்காலத்து தமிழர்களின் நுண்ணிய அறிவை நாம் பாராட்டவேண்டும். மண்ணில் நாம் என்ன போடுகிறோமோ அதுதான் விளையும். இதில் நாம் போடும் உரங்களும் அடக்கம். அது போல் கிளி நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தான் திருப்பிச்சொல்லும்.

அது போல் சில மாணாக்கர்கள் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகளை மட்டுமே நினைவில் கொள்வார்கள். அதன் உட்பொருளை மனதில் கொள்ளமாட்டார்கள். அவர்களை இடை மாணாக்கர்கள் என்பார்கள். மண்ணியல் என்பது எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்பேன்.

இல்லிக்குடம் = ஓட்டைக்குடம் இதில் எதுவும் நிற்காது.

நெய்யரி = பன்னாடை. தென்னை மரத்தில் மட்டைகளை மரத்தோடு இணைத்துப் பிடித்திருக்கும் ஒரு நார் வலை. இதை அந்தக் காலத்தில் நெய்யை வடிகட்ட ஒரு சல்லடை போன்று உபயோகித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. சல்லடை என்ன செய்யும்? சாரத்தை எல்லாம் கீழே விட்டு விட்டு கசடுகளை மட்டும் தன் மேல் நிறுத்திக்கொள்ளும்.

ஆடு கண்டதை எல்லாம் தின்னும். எருமைக்கு மந்த புத்தி. எப்போதும் சோம்பித் திரியும்.

இந்தக் குணங்களைக் கொண்டவர்களை கடை மாணாக்கர்கள் என்று அந்தக் காலத்திலேயே வர்ணித்திருக்கிறார்கள்.

இவைகளை விளக்கி விட்டு நீங்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று முடிப்பேன்.

தொடரும்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 1

                                       Image result for chemistry lab
நான் மண்ணியல் துறையில் முதுகலைப் படிப்பு (1959-61) படித்து முடித்தவுடன் இரண்டு வருடங்கள் பரம்பிக்குளம் - ஆளியார் பாசனப் பகுதியில் மண் ஆய்வுத்திட்டத்தில் பணி புரிந்தேன். அந்த ஆய்வுத்திட்டம் முடியும் வரை அதில் இருந்து அதன் இறுதி அறிக்கையையும் தயார் செய்தேன். அந்த அறிக்கை பலராலும் பாராட்டப்பெற்று, உலக வங்கிக்காரர்கள்  அந்த அறிக்கையின் பல பிரதிகளை வாங்கிப்போனார்கள். பரம்பிக்குளம் - ஆளியார் பாசனத் திட்டம் உலக வங்கியின் உதவியுடன்தான் செயல்படுத்தப் பட்டது.

பிறகு என்னை ஆசிரியப் பகுதிக்கு மாற்றினார்கள். முதலில் ஆய்வகத்தில் செயல்முறைப் பயிற்சி கொடுக்கும் உதவிப் பேராசிரியராக பணியாற்றினேன்.
விஞ்ஞானப் படிப்புகளில் இந்த வேதியல் செயல்முறைப் பயிற்சிகள்தான் கடினமானவை மற்றும் ஆபத்து நிறைந்தவை. குறிப்பாக கந்தக அமிலம் பல சோதனைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டி வரும்.

அந்த கந்தக அமிலத்தை சோதனைக் குழாயில் அரை சிசி எடுத்து ஒரு சோதனை செய்யவேண்டும். அதற்குள் நாங்கள் கொடுக்கும் ஒரு ரசாயனத்தை ஒரு சிட்டிகை அளவு போட்டு அந்த சோதனைக்குழாயை "புன்சன்பர்னரில்" காய்ச்ச வேண்டும். காய்ச்சின பிறகு அதை வெளியில் எடுத்து முகர்ந்து பார்க்கவேண்டும். அதில் வரும் வாசனையை வைத்து அந்த ரசாயனம் என்னவாக இருக்கலாம் என்று யூகிக்கலாம்.  நிச்சயமாக அது என்ன ரசாயனம் என்று உறுதி செய்ய வேறு பல சோதனைகள் செய்யவேண்டும்.
                         
                                                          Image result for test tube

இப்படி செய்யும்போது பல மாணவர்கள் அரை சிசி கந்தக அமிலம் எடுப்பதற்குப் பதிலாக 2 அல்லது 3 சிசி எடுத்து விடுவார்கள். அதைக் காய்ச்சி முகரும்போது அந்த அமிலம் கொதித்து வெளியே சீறி அடிக்கும். அது நேராக அந்த முகரும் மாணவனின் கண்ணுக்குள் போகும்.

கந்தக அமிலத்தின் குணங்கள் தெரியாதவர்களுக்காக ஒரு வார்த்தை. அமிலங்களிலேயே வீரியம் மிகுந்ததுவும் மனித உடலுக்கு மிகவும் கேடு விளவிக்கக் கூடியதுவும் கந்தக அமிலமே ஆகும். உங்கள் உள்ளங்கையில் மூன்று சொட்டு கந்தக அமிலத்தை விட்டுவிட்டு அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு இரண்டு நிமிடம் நின்றீர்களேயானால், உங்கள் உள்ளங்கையை ஓட்டை போட்டுவிடும்.

இதே கந்தக அமிலம் ஒரு பங்கு, நைட்ரிக் அமிலம் மூன்று பங்கு சேர்த்து கலக்கினால் வரும் திரவத்திற்கு "ராஜ அமிலம்" (Aqua regia)  என்று பெயர். இதைத்தான் தெருவில் தங்க நகை பாலீஷ் போடுகிறவர்கள் கொண்டு வருவார்கள். உங்கள் மனைவியின் 10 பவுன் நகையை இதில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்தால் அந்த நகை அப்படியே பளபளக்கும். கூடவே அந்த நகை இரண்டு பவுன் எடை குறைந்திருக்கும். அந்த ஐந்து நிமிடங்களில் இரண்டு பவுன் தங்கத்தைக் கரைத்துவிடக்கூடிய ஆற்றல் அந்த அமிலத்திற்கு உண்டு.
                                      Image result for gold chain design images

இப்படிப்பட்ட கந்தக அமிலம் கண்ணில் பட்டால் கண் என்ன ஆகும்? அந்த மாதிரி யாராவது மாணவனுக்கு கண் பாதிக்கப்பட்டால் அந்த விளைவிற்கு யார் பொறுப்பு? அந்த வகுப்பில் இருக்கும் ஆசிரியர்தான் பொறுப்பாவார். கந்தக அமிலத்தை எச்சரிக்கையாக கையாள்வதற்கு மாணவனுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வரும்.
இதனால் நான் என்ன செய்வேனென்றால் அப்படி யாராவது அரை சிசிக்கு மேல் கந்தக அமிலத்தை சோதனைக்குழாயில் எடுத்திருந்தால் உடனே அவனை அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டு வருகைப் பதிவேட்டில் அவனுக்கு ஆப்சென்ட் போட்டு அவனை சோதனைச்சாலையிலிருந்து வெளியே அனுப்பி விடுவேன். இதை மற்ற மாணவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்தத் தவற்றை எப்போதும் செய்ய மாட்டார்கள். வெளியில் அனுப்பிய மாணவனும் ஆயுளுக்கும் இதை மறக்க மாட்டான்.

வெளியில் அனுப்பிய மாணவன் சோதனைச்சாலைக்கு வெளியில்தான் நான்று கொண்டிருப்பான். ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அவனை உள்ளே கூப்பிட்டு சோதனைகளைத் தொடரும்படி கூறுவேன். ஆனால் ஆப்சென்ட் போட்டது போட்டதுதான்.


மாணவர்களுக்கு ஒவ்வொரு செயல்முறை வகுப்பிலும் நான் சொல்வது. இங்கு நான் சொல்வது போல்தான் செய்யவேண்டும் மாற்றிச்செய்தால் உங்களை வகுப்புக்கு வெளியில் அனுப்பி விடுவேன் என்பதுதான்.

அந்தக் காலத்தில் நானும் என்னுடன் பணிபுரிந்த மற்ற ஆசிரியர்களும்
இவ்வாறு சர்வாதிகாரம் செலுத்திக் கொண்டு இருந்தோம். மாணவர்களும் எங்கள் கண்டிப்பின் பின் உள்ள மாணவர்களின் நலனை உணர்ந்திருந்தார்கள்.   பல ஆண்டுகள் கழித்துப் பார்க்க நேரும் மாணவர்கள் "சார், நீங்கள் அன்று அவ்வளவு கண்டிப்புடன் இருந்ததால்தான் நாங்கள் ஒழுங்காகப் படித்தோம், நீங்கள் சொல்லிக் கொடுத்தவைகள் இன்றும் மறக்காமல் இருக்கிறது" என்பார்கள். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன விருது வேண்டும்?

மாணவர்களின் குணங்கள் பற்றி நன்னூலில் சொல்லியிருப்பது.



கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவ னன்னவார் வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர்.

இந்த நன்னூல் சூத்திரத்தை வருட ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சொல்லி இதன் பொருளையும் கூறுவேன். இதுதான் மாணவர்களுன் இலக்கணம். அப்புறம் நாங்கள் நடந்து கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் என் வகுப்புகளில் நான் சொல்வதுபோல்தான் நடக்கவேண்டும் என்று சொல்லி விடுவேன்.

பயிற்சி வகுப்புகளுக்கு காக்கி அரை டிராயரும் காக்கி அரைச் சட்டையும்தான் யூனிபார்ம். வேறு சட்டை, பேன்ட் போடுடக்கொண்டு வந்தால் அனுமதி இல்லை. சட்டையின் அனைத்து பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். மேல் பட்டன்களைப் போடாமல் திறந்த மார்புடன் வருகிறவர்களை வெளியே அனுப்பப்படும்.. வருகைப் பதிவேட்டில் பெயர்கள் வாசித்து முடித்தவுடன் பரிசாதனைச்சாலையின் கதவு மூடப்பட்டு விடும். அதற்குப் பின் வருபவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் அது அந்தக் காலம். இன்று அப்படியெல்லாம்  செய்தால் அடுத்த நொடியில் மாணவர்கள் அனைவரும் கூட்டாக வெளியில் போய் வாத்தியார் ஒழிக என்று கோஷம் போடுவார்கள். அதிகாரிகளும் மாணவர்களுக்குச் சாதகமாகவே பேசுவார்கள்.

தொடரும்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

என் அப்பா எனக்குக் கொடுத்த தண்டனை


                                                           Image result for நன்னூல்
நான் சிறுவனாக இருந்தபோது தவறுகள் செய்தால் என் அப்பா எனக்கு கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா? எங்களை வீட்டில் தேவாரம் திருவாசகம் முதலான புத்தகங்கள் இருந்தன. அவற்றில் நன்னூல் என்று ஒரு பத்தகமும் உண்டு. அது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்ற விவரங்கள் எல்லாம் அறியாத காலம் அது. அதை எடுத்து ஆரம்பத்திலிருந்து 25 வரிகள் படித்து ஒப்புவிக்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்.

அந்த வரிகள் வருமாறு.

சிறப்புப் பாயிரம்

மலர் தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவை உம் விளக்கும்
பரிதி இன் ஒரு தான் ஆகி முதல் ஈறு
ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த
அற்புத மூர்த்தி தன் அலர்தரு தன்மையின்
(5)
மன இருள் இரிய மாண் பொருள் முழுவது உம்
முனிவு அற அருளிய மூ அறு மொழி உள் உம்
குண கடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடல் உள்
அரும் பொருள் ஐந்து ஐ உம் யாவர் உம் உணர
(10)
தொகை வகை விரியின் தருக என துன்னார்
இகல் அற நூறி இரு நிலம் முழுவது உம்
தனது என கோலி தன் மத வாரணம்
திசை தொறு உம் நிறுவிய திறல் உறு தொல் சீர்
கரும் கழல் வெண் குடை கார் நிகர் வண் கை
(15)
திருந்திய செங்கோல் சீயகங்கன்
அரும் கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழி ஏ நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன் மதில் சனகை சன்மதி முனி அருள்
(20)
பன்ன அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத்து இரும் தவத்தோன் ஏ 

இதில் கொஞ்சம் சந்தி பிரித்து எழுதியிருக்கிறது. நான் படித்த புத்தகத்தில் இவ்வாறு சந்தி பிரிக்கப்படவில்லை. அந்தத் தமிழைப் படிப்பதே கடினம். பிறகு எவ்வாறு அதை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது? வீட்டின் ஒரு மூலையில் சப்பணம் இட்டு உட்கார்ந்து கொண்டு இந்த நன்னூலைப் படிக்கவேண்டும். இவ்வாறு அடிக்கடி சப்பணமிட்டு உட்கார்ந்து பழகியதால் இன்றும் கூட நான் சப்பணமிட்டு ஒரு மணி நேரம் வரை உட்காருவேன்.

இப்படி ஒரு மணி நேரம் கழிந்த பிறகு என் அப்பா இதைப்பற்றி அப்புறம் கேட்க மாட்டார். நானும் எழுந்திருந்து மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவேன். இவ்வாறு நன்னூல் எனக்கு அறிமுகமாயிற்று. பிற்காலத்தில் நான் கல்லூரி சென்ற பிறகு இந்த நூலை எப்போதாவது புரட்டுவேன்.

அதில் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும், மாணவன் எப்படி இருக்கவேண்டும், பாடம் கேட்பது எப்படி என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. கல்லூரிப்படிப்பு முடிந்து நான ஆசிரியனான பிறகு இதையெல்லாம் மீண்டும் படித்து வகுப்பில் மாணவர்களுக்கும் சொல்லுவேன்.

இந்த நூல்கள் எப்படி என் வீட்டில் இருந்தன என்பதை பிற்காலத்தில் என் பாட்டியிடமிருந்து தெரிந்து கொண்டேன். அந்தக் கதைகளில் என்னைப் பற்றிய ஒரு முக்கியமான குறிப்பு இருக்கிறது. அதை கடைசியில் சொல்லுகிறேன்.

என் தகப்பனாருடன் பிறந்த ஒரு மூத்த சகோதரர் இருந்திருக்கிறார். அவருக்கு தமிழ் ஆர்வம் மிகுதி. ஒரு தமிழ்ப்புலவரிடம் பாடம் கற்றிருக்கிறார். அப்போது வாங்கிய புத்தகங்கள்தாம் அவை. அந்தப் புத்தகங்கள் எல்லாம் திருநெல்வேலி சைவ சிந்தாந்த சபையினரால் பிரசுரிக்கப்படவை. அவைகளின் விலை ரூ.1-2-0 அல்லதி ரூ. 1-7-6 என்று போட்டிருக்கும். இந்த விலைகளின் அர்த்தம் இந்தக்கால இளைஞர்களுக்கு விளங்காது. ரூபாய், அணா, பைசா இருந்த காலம் அது. நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்குப் போகும் வரை இந்த நாணயமுறைதான் அமுலில் இருந்தது.

அந்தப் பெரியப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாததால், தான் கல்யாணம் செய்து கொள்ளாமல், தன் தம்பிக்கு (அதாவது என் அப்பாவிற்கு) கல்யாணம் செய்து வைத்தார். நான் பிறந்து ஓராண்டு வரைக்கும் உயிருடன் இருந்தார். அவர் என் பிறந்த தேதி, நட்சத்திரம், அங்க லட்சணங்கள் இவற்றைப் பார்த்து இவன் நன்றாகப் படித்து நல்ல உத்தியாகம் பார்த்து நன்றாக இருப்பான் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய ஆரூடப்படி நான் இப்போது நன்றாக இருக்கிறேன்.

நன்னூலை நான் எவ்வாறு என் வகுப்புகளில் பயன் படுத்தினேன் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.

புதன், 12 ஆகஸ்ட், 2015

ஆட்டோக்களும் டாக்சிகளும்


இந்தப் பதிவை பிளாக்கரில் போடுவதற்காகத்தான் எழுதினேன். பல அன்பர்கள் விக்கிபீடியாவிலும் எழுதுங்கள் என்று அன்புக் கட்டளை இட்டபடியால் இதையே விக்கிபீடியாவில் போடுவதாக இருந்தால் எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு மாதிரி (Sample) தயாரித்திருக்கிறேன். பார்த்து ரசியுங்கள். 

                                                Image result for ஆட்டோ ரிக்சா
Ref: Google Images. No permission obtained. No idea whether copyright rules will apply.

ஆட்டோ மற்றும் டாக்சிகள் எல்லா ஊர்களிலும் மக்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.(1) ஆனாலும் எனக்கு இவைகளின் மேல் ஒரு தனிப்பட்ட வெறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது.(2)

(1) பார்க்க. தமிழ்நாடு அரசு கெஜட் அறிவிப்பு தேதி 22-3-1967
(2) பார்க்க. பழனி கந்தசாமியின் சுயசரிதம்.வானதி பதிப்பகம், சென்னை. பக்.54,

நான் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சராசரி மனிதன். அத்தியாவசியத் தேவைகளுக்கு மேல் எந்த சௌகரியமும் கிடைக்காமல் வளர்ந்தவன். நான் சிறுவனாக இருந்தபோது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. 1940-50 களில் கோயமுத்தூரில் டவுன் பஸ், ஆட்டோக்கள் முதலியன கிடையாது.(3) டாக்சிகளைக்கூட நான் பார்த்த நினைவு இல்லை. குதிரை வண்டி, மாட்டுவண்டி, சைக்கிள் இவைகள்தான் சாதாரண மக்களின் போக்குவரத்து சாதனங்கள்.(4)

(3) பார்க்க: கோயமுத்தூர் மாவட்ட District Gazetteer, 1935. பக்.672. பத்தி 4
(4) பார்க்க: கோயமுத்தூர் நகராட்சி வரி வசூல் ரசீது எண்  BZ 267539/ தேதி14-8-1924

ஆனால் இவைகளை உபயோகிக்க பணம் வேண்டும். (5) அது ஒரு ஆடம்பரச் செலவாகக் கருதப்பட்ட காலம். மூன்று நான்கு மைல் தூரத்தை எல்லாம் நடந்துதான் போய் வரவேண்டும். அதை ஒரு கஷ்டமாகக் கருதாத காலம் அது. இப்படி வளர்ந்த நான் எங்கு போவதென்றாலும் நடந்தே போய்வந்தேன். டவுன் பஸ் வந்த பிறகும் கூட நான் கல்லூரிக்கு (2 1/2 மைல் = 3 1/2 கி.மீ.) நடந்துதான் போய் வந்தேன்.(6)

(5) Reserve Bank of India - Report on National Policy on Currency Affairs published by Govt. Of India,,Printed at National Security Prison, Eravada, 1942, page 3675.
(6) கோயமுத்தூர் கலைக் கல்லூரி ஆண்டு விழா மலர்,1952. பக்.23

பிற்காலத்தில் நான் வேலைக்கு சேர்ந்த பிறகு (7) கூட ஆட்டோ, டாக்சிகளை மிகமிக அவசரமாக இருந்தால் தவிர உபயோகித்தது கிடையாது. இதற்கு என்ன காரணம் என்றால் இந்த ஆட்டோ மற்றும் டாக்சிக்காரர்கள் எல்லோரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதே ஆகும். போகவேண்டிய இடத்தை நாம் சரியாகச் சொன்னாலும் தெரியாத மாதிரியே பாவனை செய்து ஊரைச் சுற்றிக் கொண்டு போய் அந்த இடத்தை அடைவார்கள்.(8)

(7) பார்க்க: விவசாய இலாக்கா டைரக்டர் அவர்களின் 12-7-1956 தேதியிட்ட வேலைக்கான நியமன ஆணை, தமிழ்நாடு கெஜட் தேதி 17-7-1956 பக்.417 
(8) பார்க்க: கோயமுத்தூர் பஜார் போலீஸ் ஸடேஷன் FIR நெ. 26578390 தேதி 19-8-1945

தவிர அவர்களிடத்தில் ஒரு சிநேக பாவத்தைப் பார்ப்பது அரிது. நம்முடைய வாடிக்கையாளராச்சே, அவர் கொடுக்கும் காசில்தானே நம் பிழைப்பு ஓடுகிறது என்ற எண்ணம் கொஞ்சம் கூடக் கிடையாது. ஒரு விரோதியிடம் பேசுவது போல்தான் பேசுவார்கள்.(9)

(9) பார்க்க: ஒரு ஆட்டோ ஓட்டுனரின் பேட்டி, குமுதம் வார இதழ் தேதி 9-8-1924 பக் 456 பத்தி 2 

அரசு என்ன சட்டம் போட்டாலும் இவர்கள் மீட்டர் சார்ஜுக்கு எங்கும் வரமாட்டார்கள். (10) இவர்களிடம் பேரம் பேசுவதற்குள் மனிதனுக்கு போதும் போதும் என்றாகிவிடும். இவர்களில் எங்காவது நூற்றில் ஒருவர் மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளலாம். அப்படிப்பட்டவர்கள் அபூர்வம்.

(10) G.O. Ms 1878 dated 26-6-2012, Transport Department, Fort St.George, Chennai

ஆகவே நான் எங்கு போனாலும் பொது போக்குவரத்து வசதிகளையே பயன்படுத்துவேன். முன்கூட்டியே இந்த பொது போக்குவரத்துகளின் விவரங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். பணிக்காலத்தில் பல ஊர்களுக்கு பணி நிமித்தமாகப் போய்வந்திருக்கிறேன். டில்லி, மும்பாய், கல்கத்தா போன்ற ஊர்களுக்குப் போனாலும் அங்கிருந்து நான் தங்கவேண்டிய இடத்திற்குப் போக பஸ்  அல்லது லோகல் ரயில் விபரங்களை அறிந்து வைத்திருப்பேன். அவைகளில்தான் போய்வருவேன்.(11)

(11) Railway Time Table, Indian Railways, 2014

சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தபோது நண்பர் ஜிஎம்பி அவர்களைப் பார்க்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். கூகுள் மேப்பில் பார்த்தால் நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அவர் வீடு 25 கிமீ தூரத்தில் இருந்தது. இதற்கு ஆட்டோ வைப்பதாயிருந்தால் அந்த ஊரில் குறைந்தது 500 ரூபாய் கேட்பான். பேரம் பேசினாலும் 400 ரூபாய்க்கு குறைந்து வரமாட்டான். போக வர 800 ரூபாய் ஆகும். இது ஒரு அனாவசிய செலவாக எனக்குப் பட்டது.

ஆகவே நான் இருக்குமிடத்திலிருந்து பஸ் ஸ்டேண்டிற்கு ஆட்டோவில் 50 ரூபாய் கொடுத்து போனோம். (நானும் என் மனைவியும்). அங்கிருந்து ஜலஹள்ளி கிராஸ் என்னும் இடத்திற்கு பஸ்சில் போனோம். அங்கு இறங்கி ஜிஎம்பி வீட்டிற்கு இன்னொரு ஆட்டோ 50 ரூபாய்க்குப் பேசி போய்ச் சேர்ந்தோம்.(12)
(12) பார்க்க. பிளாக்கரில் ஜிஎம்பி பதிவிட்ட பதிவு லிங்க்;http://gmbat1649.blogspot.in/2015/07/blog-post_22.html

இதைச் சிலர் கஞ்சத்தனம் என்று சொல்லலாம். ஆனால் இந்த மாதிரி பண விரயம் செய்ய மாட்டேன். இந்த குணம் ரத்தத்தில் ஊறிப் போய்விட்டது. ஆனால் என் பேரன்கள் செலவு செய்யும் விதத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சமீபத்தில் என் பேரன் ஒருவன் 3000 ரூபாய் கொடுத்து ஒரு செருப்பு (ஷூ அல்ல) வாங்கியிருக்கிறான். நான் வாயைத் திறக்கவில்லை. நமக்கு எதற்கு வம்பு. (13)

(13) பார்க்க: பாட்டா கடை விலைப் பட்டியல், பாட்டா ப ப்ளிஷிங்க் கம்பெனி, மும்பாய் -123456.

இதுதான் தலைமுறை இடைவெளி. வயசான காலத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால்தான் நிம்மதி நிலைக்கும்.


பதிவர்கள் இந்தப் பதிவை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் உங்கள் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஆதாரம் வேண்டும். ஆதாரம் இல்லாத செய்திகளை விக்கிபீடியாவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அது 100 சதம் உண்மை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும் அங்கே செல்லுபடியாகாது.

இன்னொரு அறிவிப்பு: ஆதாரங்கள் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். பழனி கந்தசாமியை அணுகுங்கள். எவ்வளவு ஆதாரங்கள் வேண்டுமென்றாலும் தரப்படும். ஆதாரம் ஒன்றுக்கு விலை. 100 ரூபாய். மொத்த ஆர்டர்களுக்கு சலுகை காட்டப்படும்.

எப்படி?


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தமிழ் இளங்கோவும் நானும்.

                               Image result for five star hotel
தமிழ் இளங்கோவை அறியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அவருக்கு என் மேல் ஒரு பூனைக்குட்டி விசுவாசம் இருக்கிறது. அடிக்கடி என் பதிவுகளைப் படிப்பார் போல இருக்கிறது !  அப்படி படிக்கும்போது என்னுடைய பழைய பதிவு ஒன்றை படித்திருப்பார் போல் இருக்கிறது.

அந்தப் பதிவு.

"வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்":   இதைச்சுட்டினால் அந்தப் பதிவைப் பார்க்கலாம். படிப்பது உங்கள் சௌகரியம்.

இந்தப் பதிவு நீண்ட நாட்களுக்கு முன் போட்ட பதிவு. நானும் அந்தப் பதிவை இப்போது போய்ப் படித்தேன். என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பதிவை எழுதியது நான்தானா என்று சந்தேகம் வந்து விட்டது.


எனக்கு சில சமயம் என்னை அறியாமல் சில மேதைத்தனமான கருத்துகள் தோன்றி விடும். இது சாதாரணமாக நடக்காது. அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படிப்பட்ட சமயத்தில் இந்த பதிவை எழுதியிருப்பேன் போல இருக்கிறது.

தமிழ் இளங்கோ அவர்கள் இதைப் படித்தவுடன், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பெரு நோக்கில் இந்தக் கருத்துகளைத் தொகுத்து என்னை ஒரு புத்தகமாக வெளியிடச்சொல்லி ஒரு அன்பு மடல் எழுதியிருக்கிறார்.

அதற்கு நானும் தனிப்பட்ட முறையில் ஒரு பதில் அனுப்பினேன். அப்புறம்தான் எனக்கு ஒரு யோசனை வந்தது. திரு தமிழ் இளங்கோ மாதிரி இன்னும் பல பதிவர்கள் என்னை ஒரு பெரிய மேதை என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட தவறான எண்ணங்களைப் போக்குவது என் கடமை என்று கருதுகிறேன்.

அதனால் தமிழ் இளங்கோவின் மடலையும் அதற்கு நான் எழுதின பதிலையும் இங்கே கொடுக்கிறேன். என்னைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ள இந்தக் கடிதம் பயன்படும் என்று நம்புகிறேன்.

தி.தமிழ் இளங்கோ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்"வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்":

இன்று மீண்டும் இப்பதிவை படிக்க நேர்ந்தது. இதுபோன்ற உங்களது வாழ்வியல் சிந்தனை பதிவுகளை தொகுத்து ஒரு புத்தகமாக வரும் வலைப்பதிவர் திருவிழாவில் புதுக்கோட்டையில் வெளியிட்டால் என்ன? (அதிகம் அச்சடித்து கையை சுட்டுக் கொள்ள வேண்டியதில்லை. சிக்கன முறைகளை கரந்தை ஜெயக்குமாரிடம் கேட்டால் சொல்லுவார்)

வெளியிடு
நீக்கு
ஸ்பேம் என குறி

இந்த வலைப்பதிவின் கருத்துரைகளை மதிப்பாய்வு செய்க

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 9:03:00 முற்பகல் IST அன்று மனஅலைகள் இல் தி.தமிழ் இளங்கோ ஆல் உள்ளிடப்பட்டது

DrPKandaswamyPhD drpkandaswamy1935@gmail.com

9:45 AM (0 minutes ago)
to தி.தமிழ்
அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
உங்கள் அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி.

என் முக்கிய குணத்தைப் பற்றி சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சரித்திரத்திற்காக சொல்லித்தானாக வேண்டும். நான் ஒரு வாழைப்பழ சோம்பேறி. ஏதோ என் மண்டைக்குள் களிமண் அதிகம் இல்லாததினால் பெரிய சாதனையாளன் மாதிரி உலகிற்கு ஒரு பாவ்லா காட்டிக்கொண்டு வாழ்ந்து வருகிறேன். அவ்வளவுதான். நான் ஒரு மேதை அல்ல. மூளை மட்டும் எப்போதாவது சில சமயம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். மற்ற சமயங்களில் நன்றாக குறட்டை விட்டுத் தூங்கும்.

புத்தகம் எழுதி, அதை அச்சிட ஏற்பாடுகள் பண்ணி, அதை புரூப் பார்த்து, புத்தகங்கள் வந்தவுடன் அதை வீட்டில் வைத்துப் பாதுகாத்து (வீட்டுக்காரி தினமும் அவைகளைப் பார்த்து முணுமுணுப்பாள்) அதை வருகிறவர் போகிறவர்களுக்கெல்லாம் கொடுத்து, ஐயா, எனக்கு வேண்டாம் இந்த புத்தகம் போடும் வேலையும் அதனால் வரக்கூடிய புகழும்.

ஒரு நல்ல பைஃவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு ஓரு வாரம் நன்றாகச் சாப்பிட்டு (சோமபானம் உட்பட) தூங்கச் சொல்கிறீர்களா? இப்பவே ரெடி. இந்தப் புத்தகம் போடற வேலையெல்லாம் வேண்டாங்க. அதுக்குன்னு சில ஆட்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் வேலை. அவர்கள் செய்யட்டும். எனக்கு அது ஒத்துக் கொள்ளாது.

அன்புள்ள,
பழனி. கந்தசாமி

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தமிழ் விக்கிபீடியா - கையைச் சுட்டுக்கொண்டேன்.

Kanags விக்கிப்பீடியாஇல் உங்களுக்கு ஒரு புதிய செய்தியினை விட்டுச்சென்றுள்ளார்

அனுப்புனர் : விக்கிப்பீடியா wiki@wikimedia.org

கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்[தொகு]

Stop hand nuvola.svg
வணக்கம்பழனி.கந்தசாமி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்றுஎன்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.

புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

என்னுடைய கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட சுட்டிக்குப் போகவும்.
http://swamysmusings.blogspot.com/2011/08/1.html