அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 2


பழைய தொடர்ச்சி  ("எதற்கும் டெஸ்ட் செய்து பார்த்து விடலாம் என்று  அந்த லாக்கரில் சொன்ன பணத்தைப் போட்டு நெம்பரை செட் செய்து லாக்கர் கதவை இழுத்தேன்.")

லாக்கர் கதவு வெண்ணையில் கத்தி இறங்குவது போல் நைசாகத் திறந்தது. ஒன்றும் பிரச்சினை பண்ணவில்லை. அப்போதுதான் மூளையில் ஒரு பொறி தட்டியது. அடடா, இப்போ போட்ட காசு கோவிந்தாதான் அப்படீன்னு பட்டது. இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் திரும்பவும் நெம்பரை செட் செய்து லாக்கரை சாத்தினேன். நெம்பரை அந்த டயலில் மாற்றி வைத்தேன். பிறகு இழுத்துப்பார்த்தேன். திறக்கவில்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்டு விட்டு அடுத்தவேலைக்குத் தயாரானேன்.

இந்த லாக்கர்களை ஒருவர் 48 மணி நேரம்தான் பயன்படுத்தலாம். அதற்கு மேல் டயம் ஆகிவிட்டால் லாக்கர் ஆட்டோமேடிக்காக லாக் ஆகிவிடும். இப்படி அந்த லாக்கரில் எழுதியிருந்தது. என் முதல் புரோக்ராம் வேகனிங்கன் போவது. இரண்டாவது புரொக்ராம் அங்கு போய் வந்தபின் இரண்டு நாள் ஆம்ஸ்டர்டாமில் தங்குவது. 

ஒரு மனக்கணக்கு போட்டுப் பார்த்தேன். வேகனிங்கன் போய்விட்டு 48 மணி நேரத்தில் திரும்பிவிடலாம் என்று தெரிந்தது. சரி, அப்போது ஒரு தடவை திறந்து மூடினால் சரியாய்ப்போய்விடும் என்று முடிவு செய்து வேகனிங்கன்  புறப்பட்டேன். இதைப்பற்றி முன்பே பதிவிட்டு விட்டபடியால் அந்தக் கதை மறுபடியும் வேண்டியதில்லை.

வேகனிங்கனிலிருந்து திரும்ப வந்து லாக்கரைத் திறந்து மூடி விட்டு ஆம்ஸ்டர்டாம் ஓட்டலுக்குப் புறப்பட்டேன். ஓட்டல் விலாசம் மட்டும் தெரியும். அங்கு எப்படி போகவேண்டும் என்று தெரியாது. வல்லவனுக்கு ஆயுதம் வாயிலே என்று பெரியவர்கள் சொன்னதை நினைவில் கொண்டு அங்கு இருந்த ஒரு செக்யூரிடியிடம் விசாரித்தேன். அவர் ரயிலில் இன்ன ஸ்டேஷன் வரை சென்று, அங்கு ஒரு பஸ்சைப் பிடித்து அந்த டிரைவரிடம் சொன்னால் அந்த ஓட்டலுக்குப் பக்கத்தில் இறக்கி விடுவார் என்று சொன்னார். தேங்க்ஸ் சொல்லிவிட்டு ரயில்வே பிளாட்பாரத்திற்கு வந்தேன். 

ஏர்போர்ட்டிலிருந்து லக்கேஜ் வண்டியைத் தள்ளிக்கொண்டே பொடி நடையாய் ஒரு பத்து நிமிடம் நடந்தால் ரயில்வே பிளாட்பாரம் வந்துவிடும். நம் சென்னையிலும் அப்படி ஏர்போர்ட்டிலிருந்து திரிசூல் ஸ்டேஷனுக்குப் போகிற மாதிரி ஏற்பாடு செய்தால் வசதியாயிருக்கும்.

வழி சொன்னவர் குறிப்பிட்ட ஸ்டேஷனில் இறங்கி, வெளியில் வந்து பஸ் பிடித்தேன். அந்த டிரைவரிடம் நான் போகவேண்டிய ஓட்டலின் பெயரைக் காட்டியதும் அங்கு இறக்கி விடுவதாகச் சொன்னார். நல்ல மனுஷன். அங்கெல்லாம் பஸ்களுக்கு டிரைவர் மட்டும்தான். கண்டக்டர் கிடையாது. கூட்டமும் கிடையாது.

டிரைவர் இறக்கிவிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் ஓட்டல் தெரிந்தது. அங்கு போய் என் பெயரைச் சொன்னவுடன் ரூம் கொடுத்து விட்டார்கள். எனக்கு டூர் ஏற்பாடு செய்தவர்கள் எவ்வளவு கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள் பாருங்கள். ரூம் சாவி என்று ஒரு கிரெடிட் கார்டு மாதிரி, அதைவிடப் பெரிய சைஸில் ஒரு அட்டை கொடுத்தார்கள். அதில் ஓட்டை ஓட்டையாக டிசைன் போட்டிருந்தது. இது என்ன என்று கேட்டேன். இதுதான் ரூம் சாவி. இதை ரூம் கதவில் உள்ள துவாரத்தில் செருகினால் கதவு திறக்கும் என்றார்கள்.

எல்லாம் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்த கதைதான். ரூமிற்குச் சென்று செட்டில் ஆனேன். ரூமை விட்டு வெளியில் வந்த பிறகு கதவைச்சாத்தினால் அதுவே பூட்டிக்கொள்ளும். சாவியை எடுக்காமல் வெளியில் வந்து கதவைச்சாத்தினால் பிறகு உள்ளே போக முடியாது. இதில் நான் ஜாக்கிரதையாகவே இருந்தேன்.

இத்தகைய சாவிகள் பெரிய ஓட்டல்களில் கம்ப்யூட்டர் மூலமாக அவ்வப்போது தயார் செய்கிறார்கள். ஒருவர் ஒரு ரூமில் தங்கிவிட்டுப் போனபிறகு அடுத்தவர் வரும்போது அதே ரூமிற்கு வேறு சாவி தயார் செய்து கொடுக்கிறார்கள். இதேபோல் மலேசியாவில் ஜென்டிங்க் ஹைலேண்ட்டில் உள்ள பர்ஸ்ட் வர்ல்டு ஓட்டலிலும் செய்வதை அங்கு சென்றவர்கள் பார்த்திருக்கலாம். சாவியில் ஒரு வித்தியாசம். டிசைன் ஓட்டைகளுக்குப் பதிலாக மேக்னடிக் ஸ்ட்ரிப் வைத்துள்ளார்கள். டெக்னாலஜி முன்னேற்றம்.

கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு ஊரைச்சுற்றிப்பார்க்கலாம் என்று வெளியில் வந்தேன். முன் ஜாக்கிரதையாக சாவியை எடுத்துக்கொண்டுதான் ரூம் கதவைச் சார்த்தினேன். எதற்கும் முன்ஜாக்கிரதையாக திறந்து பார்த்து விடலாமே என்று திறக்க சாவியை துவாரத்தில் போட்டேன். கதவு திறக்கவில்லை.
பகீரென்றது.

மீதி அடுத்த பதிவில். இப்படியேதான் இந்தத் தொடர் பதிவு சஸ்பென்ஸ்களுடன் முடியும். பழைய காலத்து கிரைம் நாவல்கள் நம் வாரப்பத்திரிக்கைகளில் வந்திருப்பதைப் படித்திருப்பீர்கள். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் ஒரு சஸ்பென்ஸ்சில் நிறுத்துவார்கள். சுஜாதா கடைப்பிடித்த உத்தி. இப்போது பதிவுலகில் "பரம(ன்) ரகசியம்" எழுதும் கணேசன் தவறாமல் இந்த உத்தியைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். ஆகவே நான் புதிதாக ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை. மற்றவர்களைக் காப்பிதான் அடிக்கிறேன்.

ஈயடிச்சான் காப்பி அடிக்கும் கலையில் பிஎச்டி பட்டம் வாங்கினவனாக்கும் நான்!!!

புதன், 12 செப்டம்பர், 2012

ரயில் எப்படி ஓடுகிறது? சில நடைமுறைகள்


ஒரு மாதத்திற்கு முன்னர்தான் எங்கள் கோவை கல்லூரியிலிருந்து இதே மாதிரி டூர், இரண்டு குழுவினர் வந்து சென்றுள்ளனர். அவர்கள் புறப்படும் தினத்தன்று அவர்களின் கோச், அவர்கள் செல்லவேண்டிய ரயிலில் இணைக்கப்படவில்லை. அவர்கள் கோச் இருக்கும் ஸ்பெஷல் லைனுக்குப் பக்கத்து லைனிலேயேதான் அவர்கள் செல்லும் ரயில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கோச்சை அந்த ரயிலில் சேர்க்க முடியவில்லை. மாணவர்கள் ரயிலுக்கு முன்னால் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். போலீஸ்காரர்கள் வந்துவிட்டார்கள். உங்களை எல்லாம் கைது பண்ணப் போகிறோம் என்றதும்தான் அவர்கள் ட்ரேக்கை விட்டு வெளியில் வந்தார்கள்.

என்ன பண்ணியும் அந்த ரயிலில் அவர்கள் கோச்சை இணைக்க முடியவில்லை. அடுத்த ரயிலில்தான் இணைக்க முடிந்தது. இதனால் அவர்கள் பயணத்திட்டம் சரியாக நிறைவேறவில்லை. இந்தச் செய்தியை நான் கேள்விப்பட்டு, நாம் போகும்போது இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும் என்று எல்லோரையும் தீர விசாரித்தேன்.

அப்படி விசாரித்ததில் நான் அறிந்து கொண்டது என்னவென்றால்:

   1.   எங்கள் கோச் டில்லியிலிருந்து ஹௌரா வரைக்கும் வருவதுவடக்கு ரயில்வேயின் எல்லைக்குட்பட்டது. நாங்கள் செல்லவிருப்பது புவனேஸ்வரம். அதுகிழக்கு ரயில்வேயின் எல்லைக்குட்பட்டது. ஹௌரா ஸ்டேஷனில் இந்த இரண்டு ரயில்வே பிரிவுகளும் இருக்கின்றன. பக்கத்துப் பக்கத்து ரூம்கள்தான். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஒரு எல்லைக்கோடு இந்த இரண்டு ரயில் பிரிவுகளுக்கு இடையில் இருக்கிறது. எங்கள் கோச்சை வடக்கு ரயில்வே, அதிகாரபூர்வமாக தெற்கு ரயில்வேக்கு ஒப்படைக்கவேண்டும். அப்போதுதான் எங்கள் கோச் புவனேஸ்வரம் செல்லும் ரயிலில் இணைக்கப்படும். இதற்குத் தேவையான கிரீஸ் போடவேண்டும்

   2.   இரண்டாவது, ஸ்டேஷன் வளாகத்தில் ஷண்டிங்க் வேலைகள் செய்ய முடியாது. ஷண்டிங்க் யார்டு 15 கி.மீ. தள்ளி இருக்கிறது. எங்கள் கோச் அங்கு சென்றால்தான் அதை நாங்கள் போகவிருக்கும் ரயிலில் சேர்த்து, பிறகு சரியான நேரத்திற்கு பிளாட்பாரம் வரும். இதற்கும் கிரீஸ் தேவை.

இந்த நுணுக்கங்களை நான் தெரிந்து வைத்திருந்ததினால், ஹௌராவில் பல சிரமங்களைத் தவிர்த்தேன். அங்கு நாங்கள் மொத்தம் ஐந்து நாட்கள் தங்கினோம். இரண்டாவது நாளே வடக்கு ரயில்வே ஆபீசுக்குச் சென்று நாங்கள் இங்கிருந்து புவனேஸ்வரம் போகவேண்டும், அதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஒன்றும் தெரியாத மாதிரி கேட்டேன். அவர்கள் நாங்கள் ஒரு கோச் டிரான்ஸ்பர் லெட்டர் கொடுக்கிறோம், அதைக் கொண்டுபோய் கிழக்கு ரயில்வே ஆபீசில் கொடுத்தால் மற்ற ஏற்பாடுகள் அவர்கள் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

அதற்கு உரிய தட்சிணை செலுத்திவிட்டு அந்த லெட்டரை கிழக்கு ரயில்வே ஆபீசுக்கு எடுத்துச் சென்றேன். அங்கு வாசலில் நிற்கும் பியூனிடம் விஷயத்தைச் சொன்னேன். அவன் 25 ரூபாய் கொடுங்கள் என்று வாங்கிக்கொண்டு, ஒரு கிளார்க்குடம் கூட்டிக்கொண்டு போய் விட்டான். அந்தக் கிளார்க்கிடம் இந்த பியூன் விபரங்களைச் சொல்லி நாங்கள் கொடுத்த பணத்தைக் கொடுத்தான். கிளார்க்குக்கு திருப்தியாகிவிட்டபடியால், சரி சார் நீங்கள் எப்போது எந்த ரயிலில் புவனேஸ்வரம் போகவேண்டும் என்று எழுதிக்கொடுங்கள். நான் மற்றவைகளைப் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போய்விட்டு புறப்படும் நாளைக்கு முதல் நாள் வந்து என்னைப் பாருங்கள் என்று சொன்னான்.
வெளியில் வந்து லெட்டரை எழுதி பியூன் கையில் கொடுத்துவிட்டு,  அவனுக்கு இரண்டு ரூபாயைக் கையில் திணித்துவிட்டு, எங்கள் வேலைகளைக் கவனிக்க சென்று விட்டோம்

இரண்டு ரூபாய் அந்தக் காலத்தில் ஒரு கணிசமான தொகை. இன்று இரண்டு ரூபாயை பிச்சைக்காரன்கூட வாங்கமாட்டான். இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த கவர்மென்ட ஆபீசிலும் இந்த பியூன்களுக்கு இருக்கும் இன்புளூயென்ஸ் அந்த ஆபீசின் ஜெனரல் மேனேஜருக்குக் கூட இருக்காது. அந்த ஆபீசில் என்ன காரியம் ஆகவேண்டுமென்றாலும் இந்தப் பியூன்கள் அதைச் சாதித்துக் கொடுத்து விடுவார்கள்.  

அந்தக் கிளார்க் சொல்லியபடி நாங்கள் புறப்படவேண்டிய நாளைக்கு முன்தினம் அவரைப்போய் பார்த்தோம். அவர் சொன்னார். சார் உங்கள் கோச் இங்கு நின்றுகொண்டிருந்தால் எக்காலத்திற்கும் புவனேஸ்வரம் போகாது. இது இங்கிருந்து 15 கி.மீ. தூரத்திலிருக்கும் ஷண்டிங்க் யார்டு போனால்தான் இன்று இரவு நீங்கள் போகவேண்டிய ரயிலில் இணைத்து, நாளைக்கு பிளாட்பாத்திற்கு வரும். ஆகவே இன்று இரவு இந்தக் கோச்சை ஷண்டிங்க் யார்டு கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டேன். நீங்கள் உங்கள் மாணவர்களை இரவு எட்டு மணிக்குள் கோச்சுக்கு வந்து விடச்சொல்லுங்கள் என்றார். அது போல மாணவர்களுக்குச் சொல்லிவிட்டோம்.

மறுநாள் எங்கள் கோச் நாங்கள் செல்லவேண்டிய ரயிலில் இணைக்கப்பட்டு பிளாட்பாரத்திற்கு வந்து விட்டது. மாணவர்களும் நாங்கள் சொன்ன மாதிரியே இரவு எட்டு மணிக்குள் கோச்சுக்குப் போய்விட்டார்கள். இப்படியாக எங்கள் ஹௌரா புரொக்ராம் எந்தவித வில்லங்கங்களும் இல்லாமல் திருப்தியாக முடிந்தது. ஆனால் இதற்கு தண்டனை போல் புவனேஸ்வரத்தில் வில்லங்கம் வந்தது.