அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 செப்டம்பர், 2015

பட்டறிவு இல்லையே, ஏன்?

                                           Image result for knowledge symbol

அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று உயிரினங்களுக்கு இயற்கையாக இருக்கும் அறிவு. இன்னொன்று அனுபவத்தின் மூலமாகப் பெறப்படும் அறிவு. மனிதனும் உயிரினங்களில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே. குழந்தை கொஞ்சம் பெரிதானதும் நடக்க ஆரம்பிக்கிறது. அப்படி நடக்க ஆரம்பிக்கும்போது அது நிலை தடுமாறி பல தடவை கீழே விழும். பிறகுதான் கீழே விழாமல் நடக்கப் பழகி விடுகிறது.

இதுதான் பட்டறிவு. தானே பட்டு அதாவது அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளும் அறிவு. ஒவ்வொரு அனுபவத்தையும் தானே அனுபவித்துத் தெரிந்து கொள்வது என்பது ஒரு முட்டாளின் செயல். மற்றவர்களின் அனுபவத்திலுருந்தும் பாடம் கற்றுக்கொள்பவனே புத்திசாலி. இந்த ஞானம் இயற்கையாகவே இருக்கவேண்டும்.

தன்னுடைய அனுபவத்திலிருந்தே பாடம் கற்றுக் கொள்ளாதவர்களை எதில் சேர்த்துவது? மிகவும் கஷ்டமான காரியம்தான்.

சரி, இந்த பீடிகை எல்லாம் எதற்காக என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. காது கொஞ்சம் தகறாருதான். இருந்தாலும் இதெல்லாம் துல்லியமாகக் கேட்டுவிடும்.

தினமும் செய்தித்தாள்களில் சாலை விபத்துச் செய்திகளைப்பற்றிப் படித்து   சலித்து விட்டது. வாகனம் ஓட்டும் அனைவரும் இச்செய்திகளைப் படிக்கிறார்கள். ஆனாலும் விபத்துகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொருவரும் இச்செய்திகளைப் படிக்கும்போது, தான் மிகவும் தேர்ச்சி பெற்றவன், நான் இப்படிப்பட்ட விபத்துகளை ஏற்படுத்த மாட்டேன் என்று நினைத்துக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் பல நண்பர்களுக்கு இரு சக்கர, நாற்சக்கர வாகனங்கள் ஓட்டக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். கற்றல் முடிந்த பிறகு அவர்களுக்கு நான் கடைசியாகச் சொல்லும் அறிவுரை என்னவென்றால்-

நீங்கள் ஓட்டுவது ஒரு சக்தி வாய்ந்த இயந்திரம். அதை கவனமாக ஓட்டினால் அதற்கு நீங்கள் எஜமானர். கொஞ்சம் கவனம் தப்பினால் கூட அது உங்களுக்கு எஜமானனாகி விடும். அது எஜமானனாகும்போது என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. உங்கள் உயிருக்கே கூட ஆபத்து விளையலாம். ஆகவே வாகனம் ஓட்டும்போது முழுக் கவனமும் வாகனம் ஓட்டுவதில்தான் இருக்கவேண்டும்.

இதுதான் என் முடிவான அறிவுரையாக அமையும்.

ஆனால் இப்போது செய்தித்தாள்களில் வெளிவரும் பெரும்பான்மையான விபத்துகள் ஓட்டுனரின் கவனக்குறைவினாலேயே ஏற்படுவதுதான் வேதனைக்குரிய விஷயம்.

சென்னையில் இருக்கும் ஒரு வியாபாரி திருநெல்வேலியில் இருக்கும் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்குப்போகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த உறவினர் இவர் மாதிரி வியாபாரத்தில் இருக்கும் எல்லோருடைய சௌகரியத்திற்காகவும் அந்த விசேஷத்தை ஞாயிற்றுக்கிழமை வைத்திருக்கிறார்.

சென்னை வியாபாரி என்ன திட்டம் போடுகிறார் என்றால், சனிக்கிழமை வியாபாரத்தை மாலை 10 மணிக்கு முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு கிளம்பினால் காலை 7 அல்லது 8 மணிக்கு திருநெல்வேலி போய்விடலாம். அன்று பகல் முழுவதும் விசேஷ வீட்டில் இருந்து விட்டு மாலை சாப்பிட்டுவிட்டு 8 மணிக்கு கிளம்பினால் திங்கட்கிழமை விடிவதற்குள் சென்னை வந்து விடலாம். திங்கள் காலை 10 மணிக்கி வியாபாரத்தைக் கவனிக்க சென்று விடலாம்.

அவருடைய கார் ஓட்டுனர் இந்த திட்டத்தை ஆமோதிப்பார். எனக்கு இரவு நேரங்களில் கார் ஓட்டும் அனுபவம் நன்றாக இருக்கிறது. இது ஒன்றும் கஷ்டமேயில்லை. மாலையில் திருநெல்வேலி போனதும் நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். நிங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள். அன்று இரவு புறப்படுவதற்குள் நான் முழு ஓய்வு எடுத்துவிடுவேன். அதனால் திரும்பும்போது நான் புத்துணர்ச்சியுடன் இருப்பேன் என்று தைரியம் சொல்லி விடுவார்.

கார் முப்பது லட்சம் போட்டு வாங்கினது. ஆக்சலரேட்டரில் கால் வைத்தால் வண்டி 100 கிமீ வேகத்தில்தான் புறப்படும். நெடுஞ்சாலையில் சர்வ சாதாரணமாக 150 கிமீ வேகத்தில் போகும்.  ஓட்டுனர் நியாயமாக சனிக்கிழமை பகல் முழுவதும் ஓய்வு எடுத்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருக்கமாட்டார். பகலில் முதலாளி கொடுக்கும் சல்லரை வேலைகளைக் கவனித்திருப்பார். இரவு 11 மணிக்குப் புறப்பட்டுப் போகும்போது காலை 5 மணிக்கு அவரை அறியமால் கண் சொருகி வரும். அப்போது கொஞ்ச நேரம் நிறுத்தி ஓய்வு எடுப்பாரா? மாட்டார். அப்படி ஓய்வு எடுத்தால் அந்த ஓட்டனரின் தன்மானம் என்ன ஆவது?

ஆகவே அப்படியே சமாளித்துக்கொண்டு ஓட்டுவார். ரோடு எங்கே போகிறது, வண்டியின் வேகம் என்ன என்ற உணர்வுகள் அற்ற மோன நிலையில் அவர் அப்போது இருப்பார். வண்டியில் சவாரி செய்யும் முதலாளியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். ஓட்டுனரின் நிலைமையைப் புரிந்து கொள்ள யாரும் விழித்திருக்கமாட்டார்கள்.

ஓட்டுனர் ஒரு நொடி கண்ணயர்ந்து விட்டால் 150 கிமீ வேகத்தில் போகும் வாகனம் சுமார்  40 மீட்டர் ஓட்டுனரின் கவனமில்லாமல் சென்று விடும். அந்த தூரத்திற்குள் ஏதாவது லாரி நின்று கொண்டிருக்கலாம். அல்லது ரோடு வளைவு இருக்கலாம். இதனால் விபத்து ஏற்படலாம். 150 கிமீ வேகத்தில் போகும் ஒரு வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் அதில் பயணம் செய்யும் எவ்வளவு பேர் மிஞ்சுவார்கள் என்று யோசியுங்கள்?

ஏன் இவ்வளவு ஆபத்தை ஒவ்வொருவரும் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது எனக்குப் புரியாத ஒன்று. விபத்துகள் என்பது அடுத்தவர்களுக்கு ஏற்படுவது. நமக்கு விபத்து என்றும் ஏற்படாது என்று ஒவ்வொருவரும் நினைப்பதுதான் இதற்குக் காரணம்.

வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் எந்த நொடியும் விபத்து ஏற்படலாம் என்ற ஜாக்கிரதை உணர்வுடன் வாகனத்தை ஓட்ட வேண்டும், எப்போது அவர் எனக்கு விபத்து ஏற்படாது என்று நினைக்கிறாரோ அடுத்த நொடி அவர் வாகனத்திற்கு விபத்து ஏற்படும்.

சனி, 25 ஜூலை, 2015

பல்லெல்லாம் பல்லல்ல


                                          Image result for ஸ்னேகாவின் சிரிப்பு

"முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டறான் பாரு" என்று காக்கா பிடிப்பவர்களை இளக்காரமாகச் சொல்வது வழக்கம். ஸ்நேகா பல் போல் இருந்தால் முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டுவதில் தவறில்லை. ஆனால் கோபு சார் கதையில் வருகிற பஞ்சாமியின் பல் மாதிரி இருந்தால் என்ன செய்வது?

ஏன் இந்தப் பல் விசாரம் என்றால் எனக்கு இப்போது நேரம் சரியில்லை. என் பற்கள் தொந்தரவு செய்கின்றன. அவைகளை என் பற்கள் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. வெட்கப்பட்டு ஆகப்போவது என்ன? ஒன்றுமில்லை.

ஆகவே என் ஆஸ்தான பல் மருத்துவரிடம் சரண்டைந்தேன். அவர் என் பற்களைப் பார்த்துவிட்டு உங்கள் 32 பற்களில் இப்போது 14 பற்கள்தான் இருக்கின்றன. பேசாமல் அவைகளை எடுத்து விட்டு பல் செட் வைத்து விட்டால் நீங்களும் ஸ்நேகா மாதிரியே சிரிக்கலாம் என்றார். நானும் அவர் வார்த்தையில் மயங்கி அப்படியே செய்யுங்கள் என்றேன்.

கீழ்த்தாடையில் ஐந்து பற்கள் மட்டுமே இருந்தன. அவைகளில் மூன்று பற்கள் ஒழுங்காக விடுபட்டு விட்டன. இரண்டு பற்கள் மட்டும் தாடை எலும்புடன் இணைந்து, விடுபடமாட்டேன் என்று ரகளை செய்தன. இந்த மாதிரி எத்தனை பற்களை அந்த டாக்டர் பார்த்திருப்பார்? ஒரு மகாபாரத யுத்தம் நடத்தி அவைகளை ஒருவாறாக பெயர்த்து எடுத்தார். இப்போது என் கீழ்த் தாடை மகாபாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்திரம் போல் ஆகிவிட்டது.

எங்கும் ரத்தக்களரி. கடைசியாக எடுத்த இரண்டு பற்களுக்குப் பக்கத்தில் இருந்த ஈறுகள் சரியாக சேர்வதற்காக தையல்கள் வேறு. இப்படியாக ஏறக்குறைய யமதர்ம ராஜாவின் அரசு எல்லை வரைக்கும் போய் மீண்டேன். சாப்பிடுவது, தூங்குவது, விழித்திருப்பது ஆகிய மூன்று மட்டுமே இப்போது பிரச்சினை. அது கொஞ்சம் சரியானதும் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவைகளைச் சொல்கிறேன்.

வியாழன், 23 ஜூலை, 2015

பெங்களூர் விஜயம்.


ஒரு மனிதனின் பலம் அவன் தன்னை அறிந்து கொள்வதில்தான் இருக்கிறது. தன்னால் எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது, தன் வலிமை எது, வீக்னெஸ் எது என்று அறிந்து வைத்திருப்பவன்தான் அறிவு முதிர்ச்சி அடைந்தவன். அந்த வகையில் நான் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று என் மனது சொல்கிறது.

என் பெரிய பேரன் மருத்துவ மேல் படிப்பிற்காக பெங்களூர் மெடிகல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவனைப் பார்க்கும் சாக்கில் பெங்களூர் ஒரு முறை போய்வரலாம் என்று திட்டமிட்டேன். இதற்கு வீட்டில் எல்லோரும் ஒப்புதல் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதே சமயம் என் கார் ஓட்டும் திறனையும் பரிசோதித்து விடலாமே என்றும் நினைத்தேன்.

கார் நன்றாகவே ஓட்டுவேன். ஆனால் நான் விரும்பியது இப்போது போட்டு முடித்திருக்கும் கோயமுத்தூர்-பெங்களூர் நான்கு வழிச்சாலையில் என் புதுக்கார் எந்த வேகத்தில் போகும் என்று பார்த்துவிடலாம் என்றும், நான்கு வழிச்சாலையில் கார் ஓட்டும் சுகத்தை அனுபவிக்கலாம் என்றும் நினைத்தேன். கோவை-பெங்களூர்  தூரம் மொத்தம் 375 கிமீ. இதை ஒரே மூச்சில் கடக்க என்னால் முடியாதென்பது எனக்குத் தெரியும். அதனால் வழியில் சேலம், ஓசூர் ஆகிய இரண்டு இடங்களில் தங்கி விட்டு, ஓசூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டால் 7 மணிக்குள் பெங்களூர் சேர்ந்து விடலாம் என்பது என் திட்டம்.

இதற்கு என் மனைவி மற்றும் மகள்கள் பெரிதாக ஒன்றும் ஆட்சேபணை சொல்லவில்லை. நானும் கற்பனையில் ஹைவேயில் காரை 120 கிமீ வேகத்தில் ஓட்டுவதாக கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். இங்குதான் என் முதிர்ச்சியின்மை வெளிப்பட்டது. என் வீட்டினர் ஆட்சேபணை சொல்லாத தின் காரணம் "முதலிலேயே தடங்கல் சொன்னால் இந்தக் கிறுக்கு முரண்டு பிடிக்கும், அதனால் விட்டுப் பிடிப்போம்" என்ற கொள்கை என்று எனக்குத் தெரியாமல் போயிற்று.

பெங்களூர் செல்லும் நாள் நெருங்கும்போதுதான் என் குடும்பத்தினரின் திட்டமிட்ட சதி வெளியானது. "ஆமாம், நீங்கள் காரில் போகும்போது ஏதாவது நடந்தால் என்ன செய்வீர்கள்" என்று ஒரு நாள் கேட்டார்கள். இதில் ஏதாவது என்பதில் கார் விபத்து, டயர் பஞ்சர். எனக்கு வரக்கூடிய மாரடைப்பு, ரத்த த்தில் சர்க்கரை குறைந்து போய் வரும் மயக்கம் ஆகியவை அடக்கம். இதில் கார் விபத்து எப்படி ஏற்படும் என்று சொல்ல முடியாது. நான் எவ்வளவு ஜாக்கிரதையாக கார் ஓட்டினாலும் அடுத்தவர்களின் அஜாக்கிரதையினால் ஏற்படும் விபத்தைத் தடுக்க முடியாது அல்லவா?

இத்தகைய இடர்பாடுகள் கண்டிப்பாக வராது என்று என்னால் உறுதியுடன் கூற முடியவில்லை. ஆகவே அவர்களை கூறுவதை ஏற்றுக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அனைவரும், பேசாமல் பஸ்சில் போய் வாருங்கள் என்று ஏகமனதாகக் கூறி விட்டார்கள். ஹைவேயில் 120 கிமீ வேகத்தில் கார் ஓட்டும் கனவு சிதைந்து போனது.

சரியென்று மனதைத் தேற்றிக்கொண்டு எங்கள் ஊர் தனிப்பேருந்து நிலையத்திற்குப் போனேன். எனக்குத் தெரிந்த பழைய காலத்து தனிப்பேருந்து கம்பெனி KPN Travels தான். அதில் பெங்களூருக்குப் போகவர இரு டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு வந்தேன். இப்படி இந்தக் கம்பெனியில் டிக்கெட் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னவுடன் என் ஒரு மகள் அது பாடாவதி பஸ் கம்பெனி ஆயிற்றே, அதில் ஏன் டிக்கெட் எடுத்தீர்கள் என்றாள். வயதான பிறகு என்னென்ன பேச்சு கேட்கவேண்டியிருக்கிறது பாருங்கள்.

சரி டிக்கெட் வாங்கியாச்சு, இப்போ ஒண்ணும் மாற்ற முடியாது என்று சொல்லி அவள் வாயை அடைத்து விட்டேன். அப்போதுதான் நான் சிறு வயது முதல் பிரயாணம் செய்த பஸ் வகைகள் நினைவிற்கு வந்தன.

நான் அறியாச்சிறுவனாக இருந்தபோது எங்கள் வூட்டில் ஒரு பஸ்சின் போட்டோ மாட்டியிருக்கும். அந்த பஸ் ஏறக்குறைய இப்படியிருக்கும்.

                                    Image result for Old wooden buses

அதைப் பற்றிக் கேட்டபோது அது என் அத்தைமாமா அவர்களின் சொந்த பஸ். பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். அதைப்பற்றி மேலும் சில கதைகளை என் மாமா சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் பஸ் ஓட்டுவதில் வரைமுறைகள் ஒன்றும் இல்லை. பஸ் ஸ்டேண்ட் என்றும் ஒன்றும் இல்லை. தேர்முட்டியில் பஸ்சை நிறுத்தியிருப்பார்களாம். ஊரைச் சுற்றிச்சுற்றி வருவார்களாம். ஊரில் அப்போது தேர் ஓடும் நான்கு வீதிகள்தான் பிரதான சாலைகள். ஒரளவு ஆட்கள் ஏறினவுடன் பழனிக்குப் பொறப்படுவார்கள். போகுத் வழியில் யாரெல்லாம் கையைக் காட்டுகிறார்களோ அவர்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு ஊர் போய்ச்சேருவார்களாம்.

அப்போது பொள்ளாச்சியில் உள்ள பெரிய கவர்ன்மென்ட் ஆபீசர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். ஏதாதோரு சமயத்தில் அவர் பழனிக்குப் பொக நேரிடும். அப்போது அவர் முந்தின நாளே இந்த பஸ் ஓட்டுனர்களிடம் சொல்லி வைத்து விடுவார். இந்த பஸ் ஓட்டுனர் ஊருக்குள் கிடைக்கும் ஆட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் காத்திருக்கவேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் வரும் வரை காத்திருந்து அவரை ஏற்றிக்கொண்டு போகவேண்டும். அவர் பெரிய துரை ஆதலால் டிக்கெட் வாங்கமாட்டார். ஓசிப் பயணம்தான்.

நான் அந்தப் பஸ்சைப் பார்த்ததில்லை. நான் பள்ளி விடுமுறைகளில் பொள்ளாச்சி போவேன். அது இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். பெட்ரோல் எல்லாம் சண்டைக்குப் போய்விட்டது. அதாவது சண்டையில் உபயோகப்படுத்தப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமையாகப் போய்விட்டது. ஆகவே பொது மக்களுக்காக ஒரு புது வகையான பஸ் கண்டு பிடித்தார்கள். விறகுக் கரியில் ஓடும் பஸ்.

பஸ்சின் பின்புறம் ஒரு உயரமான பாய்லர் இருக்கும். அதில் விறகுக்கரியைப் போட்டு ஒரு துருத்தியில் உள்ள விசிறியை வேகமாகச் சுற்றவேண்டும்.  அப்போது ஏதோ ஒரு ஆயு உற்பத்தியாகி அதனால் பஸ் ஓடும். உங்களில் எத்தனை பேர் அந்த மாதிரி பஸ்சைப் பார்த்திருப்பீர்க்ள என்று தெரியவில்லை. இங்கே பாருங்கள்.

                                    Image result for charcoal bus

இத்தகைய பஸ்களிலிருந்து இன்று முன்னேறியுள்ள மல்டி ஏக்சில் பஸ்களைப் பார்த்தால் ஏதோ கனவில் நடப்பது போல் இருக்கிறது.

                      Image result for multi axle volvo bus





                                   Image result for volvo multi axle sleeper bus



                               Image result for volvo multi axle sleeper bus

தொடரும்

திங்கள், 24 மார்ச், 2014

என் பள்ளி அனுபவம்


என் பதிவைப் படித்து வரும் நண்பர்களுக்கு என் நினைவில் நீங்காமல் நிற்கும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த சம்பவம்தான் நான் போன பதிவில் கூறிய பைகள் சேமிப்புக்கான ஆரம்பம்.

எங்கள் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர வகை. அதாவது மூன்று வேளையும் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். அதற்கு மேல் எந்த ஆடம்பரமும் கிடைக்காது. அந்த உணவும் எனக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. "என்ன தினமும் இதேதானா" என்று கேட்டால் வரும் ஸ்டேண்டர்ட் பதில் - "பிடித்தால் சாப்பிடு, பிடிக்கவில்லையானால் எழுந்து போ".

அப்போது நான் செகண்ட் பாரம் அதாவது ஏழாவது கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கு ஒரு கித்தான் பையில்தான் புஸ்தகம், நோட்டுகள் ஆகியவற்றைப் போட்டுக்கொண்டு போகவேண்டும். எங்கள் வீட்டில் அந்த ஒரு பைதான் இருந்தது. நான் மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் அதை பையைத்தான் காய்கறி வாங்க என் அம்மா எடுத்துக் கொண்டு போவார்கள்.

மறுநாள் நான் பள்ளிக்கு எடுத்துப் பொக அந்தப் பையை எடுத்தால் அதற்குள் வெங்காயச் சருகு, கருவேப்பிலை இலைகள், சில சமயம் சிறு கத்தரிக்காய் இப்படி பலது இருக்கும். பொதுவாக நான் அவைகளை அப்புறப்படுத்தி விட்டு பள்ளிக்கு கொண்டு போவேன். சில சமயம் அவசரத்தில் மறந்து போய் அந்தப் பையை அப்படியே கொண்டு போய் விட்டால் சக மாணவர்கள் இந்த காய்கறி மிச்சங்களைப் பார்த்து என்னைக் கலாட்டா செய்வார்கள்.

இதனால் மனம் வெறுத்து விட்டது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் போய் முறையிட்டேன். அந்தக் காலத்தில் பையன்கள் அப்பாக்களிடம் நேருக்கு நேர் நின்று பேசும் வழக்கம் இல்லை.

நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையை அம்மா காய்கறி வாங்க எடுத்துக்கொண்டு போய் அழுக்காக்கி விடுகிறார்கள். அதனால் அந்தப் பையை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போக வெட்கமாய் இருக்கிறது. அதனால் எனக்கென்று தனியாக ஒரு பை வாங்கித்தரவேண்டும் என்று சொன்னேன்.

என் அப்பா என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு சொன்ன பதில்தான் என் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.

அவர் சொன்ன பதில்;

"இப்படி ஆள்ஆள் விதமாக பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் பள்ளிக்கூடம் போ, இல்லாவிட்டால் நின்றுகொள்".

அவ்வளவுதான், மேட்டர் முடிந்தது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. மரியாதையாக அந்தப் பையையே வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போனேன். பெயிலாகாமல் படித்தேன். வேலைக்குப் போனேன். சம்பாதித்தேன். பைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி சேமித்தேன். இன்று அவைகள் சுமையாகி விட்டபடியால் வேண்டியவர்களுக்கெல்லாம் தானமளிக்கிறேன்.

திங்கள், 27 ஜனவரி, 2014

பேங்க் கணக்குகள்- உபயோகிப்பாளரின் பார்வையில் - பாகம் 1


paul jayakanthan - பேங்க் கணக்கு வைத்திருக்கிறீர்களா?": என்ற இடுகையில்  விட்டுச்சென்ற பின்னூட்டம்"

பயணுள்ள தகவல் நன்றி மேலும் வங்கி பற்றிய செய்திகளை பதியலாம்
உ.ம் IFC CODE,MICR,NEFT,RTGS,SWIFT,CTS, இவற்றின் விரிவாக்கம்,விளக்கமும் தந்தால் அனைவருக்கும் பயன்படும்.

இப்படி ஒரு பின்னூட்டம் என்னுடைய ஒரு பதிவிற்கு வந்திருந்தது. இதைப்பற்றி சிந்தித்தபோது பலருக்கு பேங்குகளின் அடிப்படை விவரங்களே தெரியாமல் இருக்கிறது என்ற உண்மை மனதில் பட்டது. இதைப் பற்றி ஒரு பேங்க் உபயோகிப்பாளன் என்ற முறையில் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

நான் பேங்க் ஆபீசரல்ல. ஆனாலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பேங்க் கணக்குகள் வைத்திருக்கிறேன். தற்போது கம்ப்யூட்டரும் வைத்திருப்பதால் இன்டர்நெட் பேங்கிங்க், மொபைல் பேங்கிங்க் விஷயங்களும் அறிந்து வைத்திருக்கிறேன். ஆகவே ஒரு உபயோகிப்பாளன் என்ற முறையில்தான் இந்த பதிவை எழுதுகிறேன். பேங்கிங்கில் கரை கண்டவர்கள் இருப்பார்கள். அவர்க்ள பின்னூட்டத்தில் கருத்துகளைத் தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாயிருக்கும். 

பேங்க் சமாசாரங்கள் முழுவதையும் ஒரு பதிவில் அடக்க முடியாது. ஆகையால் இது ஒரு தொடர் பதிவாக அமையும். 

பாகம்-1 முன்னுரை;

பேங்குகள் இன்று வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றன. ஆனாலும் வாழ்க்கையின் அடித்தட்டு மக்களுக்கு பேங்கின் தேவை அவ்வளவு அவசயமில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர்களும் பேங்க் சேவைகளை உபயாகப்படுத்தவேண்டிய அவசியம் வரும். 

இன்றைய கால கட்டத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை பேங்க் மூலமாகவே கொடுக்கிறார்கள். காரணம் இன்றைய சூழ்நிலையில் பேங்கிலிருந்து அதிகமான பணத்தை எடுத்து வருவது ஒரு ஆபத்தான செயலாக ஆகிவிட்டது. அதேபோல் அதிக பணத்தை வசூல் செய்து பேங்கில் கட்டுவதும் ஆபத்தாக மாறி வருகிறது.

தனிமனித வாழ்விலும் அதிகமான ரொக்கப் பணத்தை கையாள்வது ஆபத்தான சமாசாரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஆதனால் பேங்கின் சேவைகளை எல்லா தரப்பினரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஒரு சாதாரண மனிதன் பேங்க் கணக்கு தொடங்கி அதைப் பயன்படுத்துவதைப் பற்றி கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசயமாகிறது.

பேங்க் கணக்கின் தேவை: 

1. உங்கள் வருமானத்தில் நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்கள்.

2. நீங்கள் வேலை செய்யும் ஸ்தாபனம் உங்கள் சம்பளத்தை பேங்க் கணக்கில் போடப்போகிறார்கள்.

3. உங்களுக்கு ஏதாவது செக்குகள் வருகின்றன. அல்லது நீங்கள் செக் மூலமாக அடிக்கடி ஏதாவது பணம் கொடுக்கவேண்டுயிருக்கிறது.

4. அடிக்கடி வெளியூர் செல்வதால் ஏடிஎம் கார்டு தேவைப்படுகிறது.

5. பேங்கில் ஏதோ கடன் வாங்க உத்தேசித்துள்ளீர்கள்.

இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் பேங்கில் கணக்கு துவங்க ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்யவேண்டியது என்ன?

பேங்க் கணக்கு துவங்க தேவையானவை.

1. உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பேங்கைத் தேர்ந்தெடுங்கள். அது ஒரு ஷெட்யூல்டு பேங்க்காக இருக்கவேண்டும்.

2. உங்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இரண்டு வேண்டும். ரேஷன் கார்டு இருக்கவேண்டும். அதில் உங்கள் பெயர் என்ன இருக்கிறதோ அந்தப் பெயரில்தான் கணக்கு ஆரம்பிக்க முடியும்.

3. பேங்க் கணக்கு ஆரம்பிக்க குறைந்தது 1000 ரூபாய் வேண்டும். இந்தப் பணத்தை உங்களுடையது என்ற எண்ணத்தை உடனே மறந்து விடவேண்டும். ஏனெனில் இந்த குறைந்த பட்ச பணம் உங்கள் கணக்கில் எப்போதும் இருக்கவேண்டும்.

4. ஓரளவிற்கு படிவங்களை பூர்த்தி செய்யும் திறமை இருக்கவேண்டும். ஒவ்வொரு தடவையும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது.

5. அந்த பேங்கில் ஏற்கெனவே கணக்கு வைத்திருக்கும் ஒருவரை நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அவர் உங்களை பேங்கில் அறிமுகம் செய்து வைக்க தயாராய் இருக்கவேண்டும். இது மிகவும் அவசியம்.

6. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இரண்டு வேண்டும்.

இவை எல்லாவற்றையும் கொண்டு போனால், பேங்க் அதிகாரிக்கு உங்களைப் பிடித்துப்போனால் நீங்கள் கணக்கு ஆரம்பிக்கலாம். பொதுவாக நீங்கள் ஆரம்பிக்கும் கணக்கைத் தொடர்ந்து வைத்திருப்பீர்களா, உங்கள் நிதி நிலை என்ன, என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் உங்களுக்கு கணக்கு ஆரம்பிப்பார்கள். எப்படியும் இரண்டு மூன்று தடவை உங்களை இழுத்தடிப்பார்கள். தொடர்ந்து முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.

எப்படியோ, யாருடைய கையையோ, காலையோ பிடித்து கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். கணக்கு ஆரம்பிக்கும்போதே உங்களுக்கு என்னென்ன தேவை என்று சோல்லிவிட வேண்டும்.

அத்தியாவசியத்தேவைகள்.

1. பாஸ்புக்:  இது கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களே கோடுத்து விடுவார்கள். இதில்தான் உங்கள் கணக்கின் வரவு செலவுகளைக் குறிப்பார்கள். அடிக்கடி பேங்கில் வரவு செலவு செய்பவராயிருந்தால் அவைகளை இந்த பாஸ்புக்கில் அவ்வப்போது பதிவு செய்து கொள்ளவேண்டும்.  

உங்கள் கணக்கில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச அளவு பணம் எவ்வளவு என்று ஒவ்வொரு பேங்கிலும் ஒரு அளவு வைத்திருப்பார்கள். அதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அந்த அளவிற்கு குறைந்தால் அபராதக் கட்டணம் போடுவார்கள்.

2. செக்புக்: நீங்கள் அடிக்கடி யாருக்காவது செக் மூலமாக பணம் கொடுக்கவேண்டிய அவசியம் இருந்தால் செக் புக் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அப்படி வாங்கிக்கொண்டால் உங்கள் கணக்கில் ஒரு குறைந்த பட்சம் பணம் வைத்திருக்கவேண்டும். அந்த தொகை குறைந்தால் அபராதம் உண்டு.

3. ஏடிஎம் கார்டு: இது ஒரு சௌகரியமான வசதி. அவசரத் தேவைகளுக்கு இப்போது மூலைக்கு மூலை முளைத்திருக்கும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதை உபயோகப்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டும். தவிர நேரங்கெட்ட நேரங்களில் அநாமத்தான இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

இப்போது நீங்கள் பேங்க் கஸ்டமர் ஆகி விட்டீர்கள். அடுத்தது பேங்க்கில் பணம் போடுவதும் எடுப்பதும்தான். அவைகளை எப்படி செய்வது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கொசுறு:

முதலில் குறிப்பிட்ட சில "சுருக்கி" களின் விரிவாக்கம். இவைகளின் உபயோகத்தைப் பற்றி பின்னால் கூறுகிறேன்.

 IFSC CODE: Indian Financial System Code.

MICR: Magnetic Ink Character Recognition

NEFT: National Electronics Fund Transfer

RTGS: Real Time Gross Settlement

SWIFT: Society for Worldwide Interbank Financial Telecommunication

CTS:     Core Treasury System

புதன், 4 டிசம்பர், 2013

குளிரிலிருந்து தப்பித்தேன்.


நேரம் ஆக, ஆக, என் கவலை அதிகரித்தது என்று சொன்னேனல்லவா? அப்போது கடவுள் என் முன்னால் பிரசன்னமானார். பசித்தவனுக்கு கடவுள் ரொட்டி ரூபமாகக் காட்சியளிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அது மாதிரி எனக்கு கடவுள் ஒரு ஆப்பிரிக்க இளைஞன் ரூபத்தில் காட்சியளித்தார்.

அந்த இளைஞன் அங்கு காப்பி சாப்பிட்டுவிட்டு தான் வந்திருந்த காரில் புறப்பட ஆயத்தமானார். நான் வெட்கம், மானம் எல்லாவற்றையும் விட்டு விட்டு (கடவுளிடம் வெட்கம், மானம் என்ன வேண்டியிருக்கிறது) அவரிடம் போய் பக்கத்து ஊர் பெயரைச்சொல்லி, "அந்த வழியாகப் போவீர்களா?" என்று கேட்டேன். அவர் "ஆமாம்" என்றார். நான் "எனக்கு அந்த ஊர் வரை லிப்ட் கொடுக்க முடியுமா" என்று கேட்டேன். அவர் "தாராளமாக" என்று சொல்லி என்னை அவர் காரில் ஏற்றிக்கொண்டார்.

அந்த ஊர் வந்ததும் என்னை இறக்கி விட்டார். அவருக்கு மிகவும் நன்றி சொல்லிவிட்டு, இறங்கினேன். அப்படியே நான் வணங்கும் முருகனுக்கும் ஒரு நன்றி சொல்லிவிட்டு அங்குள்ள பஸ் நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு நிறைய பஸ்கள் இருந்தன.

கொஞ்சம் நேரம் இருந்ததாலும், தங்கும் ஓட்டலுக்குப் போக நிச்சயமான வழி பிறந்து விட்டதாலும், பக்கத்திலுள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குப் போனேன். காரணம் போகப்போகத் தெரியவரும். அங்கு சுற்றிப்பார்க்கும்போது தின்பண்டங்கள் விற்கும் பகுதியில் நம்ம ஊர் வேர்க்கடலை பொட்டு நீக்கி, வெள்ளை வெளேர் என்று பாக்கட் பண்ணி வைத்திருந்தார்கள். அரை கிலோ பாக்கட் இரண்டு வாங்கிக்கொண்டேன். ஆப்பிள் ஜூஸ் "டேட்ராபேக்" என்று சொல்லப்படும் பாக்கெட்டில் இருந்தது. அதில் இரண்டு ஒரு லிட்டர் பேக்கட் வாங்கிக்கொண்டேன்.

இந்த இரண்டும் எதற்காக என்றால்............... உண்மையைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும் இத்தனை வயசுக்கப்புறம் கூச்சத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். ஆகவே உண்மையைச் சொல்லுகிறேன்.

வெளி நாடுகளில் எல்லா ஓட்டல்களிலும் "பெட் & பிரேக்பாஸ்ட்" என்ற முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் நாட்டிலும் இப்போது தெரிய ஓட்டல்களில் இந்த முறை வந்து விட்டது. ஆகவே காலை உணவு என்னைப் போன்றவர்களுக்கு இலவசமாக கிடைத்து விடுகிறது.  அங்கு ஓட்டல்களில் சாப்பிடும் பொருள்கள் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று வெளிநாடு போய் வந்தவர்களுக்குத் தெரியும். எல்லாம் யானை விலை குதிரை விலைதான்.

ஆகவே மதியமும் இரவும் ஓட்டல்களில் சாப்பிடுவதென்றால் ஏகப்பட்ட செலவு செய்யவேண்டி வரும். தவிர ஓட்டலில் மெனு கார்டைப் பார்த்து ஆர்டர் செய்தால் என்ன கொண்டு வருவார்களென்று தெரியாது. புது ஊரில் தனியாகப் போய் ஓட்டலில் சாப்பிடவும் பயம். அது போக ஒரு சாப்பாட்டிற்கு 500 ரூபாய் (1990 ல்)  செலவு செய்ய யாருக்கு மனசு வரும்? யாருக்கு வருமோ வராதோ, எனக்கு மனசு வரவில்லை. ஆகவே நான் என்ன செய்வேன் என்றால் காலை ஓட்டலில் கொடுக்கும் இலவச பிரேக்பாஸ்ட்டை ஒரு பிடி பிடித்துவிடுவேன். இது மாலை வரை தாங்கும்.  மதியம் நடுவில் ஏதாவது ஒரு ஜூஸ் வாங்கி சாப்பிட்டால் போதும்.

இரவு உணவுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதற்குத்தான் நிலக்கடலையும் ஆப்பிள் ஜூஸும். இவை எல்லாம் விலை சலீசாக ஸ்டோரில் கிடைக்கின்றன. இரண்டு கை கடலையைச் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து விட்டால் அன்றைய இரவிற்குப் போதும். இப்படியாகத்தான் என் வயிற்றுப் பாட்டை வெளி நாடுகளில் சமாளித்தேன்.

இப்படியாக எனது நெதர்லாந்து டூரை முடித்து அடுத்து இஸ்ரேலுக்குச் சென்று விட்டு இந்தியா திரும்பினேன். தொடரை அவசரமாக முடித்துவிட்டேன் என்று வருந்தவேண்டாம். எதுவும் அளவோடு இருந்தால்தான் சுவைக்கும்.