பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 செப்டம்பர், 2011

பதிவர்களுக்கு பத்து குறிப்புகள்


பதிவுலகத்தில் எழுதும் அனைவரும் பதிவர்களே. பதிவுலகத்தின் நெளிவு சுளிவுகளை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் அல்லது அவர்களின் பதிவுலகப் பயணத்தில் அறிந்து கொள்வார்கள். ஆகவே பதிவர்களுக்கு அறிவுரை கூற எனக்கு அருகதை இல்லை. தேவையும் இல்லை. ஆனாலும் நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் என்னவென்றால் நான் கூறப் போகும் குறிப்புகள் நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்தவை. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.

1.   பதிவுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவை சீக்கிரம் தரவிறங்கும். பார்வையாளர்களுக்கு பதிவுகளுக்காக அதிக நேரம் காத்திருக்க பொறுமை இருக்காது. வேறு தளத்திற்கு சென்று விடுவார்கள்.

2.   பதிவுகளின் எழுத்துக்கள் பெரிதாகவும், வரிகளுக்கிடையில் உள்ள இடைவெளி போதுமானதாகவும் இருக்கட்டும். இதை மிக எளிதாக செயல்படுத்தலாம். Edit Template  சென்று அதில் Line height 1.2 என்று இருப்பதை 2.0 என்று மாற்றவும். அதே போல்  Font size 110%  என்று இருப்பதை 120 அல்லது 130 என்று மாற்றவும். தவிர வெள்ளை பின்புலத்தில் கருப்பு எழுத்துகள்தான் படிப்பதற்கு மிகவும் எளிதானது.

3.   பதிவுகளின் தலைப்பைப் பார்த்துத்தான் பார்வையாளர்கள் பதிவுக்குள்ளே வருகிறார்கள். ஆகையால் தலைப்பு கவர்ச்சியாக இருப்பது அவசியம். பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் காலம் இது.

4.   எல்லோரும் தங்கள் பதிவுகளை அதிகம் பேர் படிக்கவேண்டும் என்கிற ஆவலுடன்தான் எழுதுகிறார்கள். அப்படி எழுதப்படும் பதிவில் ஏதாவது ஒரு உபயோகமான செய்தி அல்லது பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு விஷயம் இருக்கவேண்டும்.

5.   தமிழில் எழுதும் அனைவரும் தமிழை பிழையில்லாமல் எழுத முயல வேண்டும். ற,ர வின் உபயோகம்,  ல,ள,ழ இவைகளின் வித்தியாசம், சந்தி விதிகள், ஆகியவைகளை உணர்ந்து பயன் படுத்தினால் உங்கள் பதிவின் தரம் கூடும்.

6.   பதிவுகளின் எழுத்து நடை சரளமாக, எளிதில் புரிந்து கொள்ளும்படியாக  இருக்கவேண்டும். பதிவை எழுதி முடித்தவுடன் ஒரு தடவைக்கு இரு தடவை படித்துப் பாருங்கள். பிழைகளைக் களைய இது உதவும்.

7.   பதிவுகள் அதிக நீளமாக இருந்தால் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும். இன்றுள்ள அவசர கதியில் பதிவுகளுக்காக செலவிடப்படும் நேரத்தில் அதிக பதிவுகளைப் படிப்பதற்கே அனைவரும் விரும்புவர்.

8.   போட்டோக்கள் பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது முற்றும் உண்மை. அதற்காக அதிகப் போட்டோக்களை சேர்த்தால் அனைத்து போட்டோக்களையும் முழுவதுமாக ரசிப்பது சிரமமாகி விடுகிறது.

9.   பதிவர்கள் தங்களுக்குப் பிடித்த தளங்களில் “பின்தொடர்பவர்கள்” ஆகிறார்கள். அவர்களுடைய Dash Board ல் அந்த தளங்களின் பதிவுகள் தானாகவே தெரிகின்றன. ஆகவே தனியாக email அனுப்புவது தேவையில்லை. Word Verification இருப்பது பெரும்பாலான சமயங்களில் பின்னூட்டமிடுபவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்கிறது.

10. தங்கள் பதிவுகளில் பின்னூட்டங்கள், ஹிட்ஸ்கள், முதலானவை அதிகரிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

இப்பதிவைப் பார்வையிட்டதற்கு நன்றி. 


திங்கள், 5 செப்டம்பர், 2011

என் பதிவுலக வயிற்றெரிச்சலும் ஆற்றாமையும்



இனிய உளவாக இன்னாத கூறுதல்
கனி இருப்ப காய் கவர்ந்தற்று – குறள் (100)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள் (784)

இந்த இரண்டு குறள்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தோன்றுகின்றன அல்லவா? தெய்வப்புலவர் தம் நூலில் இவ்வாறு முரண்பாடான கருத்துக்களைக் கூறியிருப்பாரா என்ற கேள்விக்கு தமிழ் அறிஞர்கள்தான் விடை கூற இயலும்.

தமிழ் அஞ்ஞானியான நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவரவர்களுக்கு பொருத்தமான குறளை அவரவர்கள் கடைப்பிடிக்கலாம் என்பதே. இக்கொள்கைப்படி இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போய்விட்டது. இதை மாற்ற கடும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறேன். உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும். பொய்தான் இனிக்கும். கசப்பு மாத்திரைக்கு சர்க்கரைப்பூச்சு பூசி கொடுப்பதில்லையா என்று இதைப் படிப்பவர்கள் நினைக்கலாம். நான் அதை “பசப்பு” என்று கருதுகிறேன். “பசப்பு” பத்தினிகளின் குணமாகாது. ஆகவே இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போனது. அப்படியிருக்க மற்றவர்கள் இடித்துக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். சந்தோஷமாக  ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இது தவறு என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. என்னுடைய போன பதிவில் “வயிற்றெரிச்சல்” என்பதற்குப் பதிலாக “ஆற்றாமை” என்று போட்டிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஆனால் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருக்காது. மேலும் என் பதிவுலக வாழ்வில் முதன் முறையாக தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில் மைனஸ் ஓட்டுகளும் விழுந்திருக்காது. தவிர, அருமையான பல கருத்துக்கள் ஜனனமாகாமலேயே மரித்துப் போயிருக்கும். அதனால் பதிவுலகத்திற்கு எப்படிப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?! ஆகவே எந்த ஒரு கெடுதலிலும் ஒரு நன்மை உண்டென்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்தக் கிழடுகளுக்கே எதையும் குறை கூறத்தான் தெரியும், இன்றைய இளைஞர்களுக்கு ஆக்க பூர்வமாக ஏதாவது அறிவுரைகள் கூறுகிறார்களா? என்று ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். அது மிகவும் நியாயமான கருத்து. அடுத்த பதிவு இந்த குறிப்புகள்தான். தயை கூர்ந்து பொறுத்திருங்கள்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பதிவுலக நிதர்சனங்களும், என் வயிற்றெரிச்சலும்



பதிவுகளில் எதைப்பற்றி எழுதலாம் என்பதற்கு எந்த வரைமுறைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படி எழுதவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. யாரும் யாரைப் பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது என்கிற நடைமுறை ஒழுங்கெல்லாம் பதிவுலகில் தேவையில்லை.

அவரவர்களுக்குத் தோன்றியதை எழுதலாம். கூகுளாண்டவர் இந்த சுதந்திரத்தை எல்லாப் பதிவர்களுக்கும் வரமருளியிருக்கிறார். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், பதிவின் தலைப்பு பார்ப்பவர்களின் கவனத்தை சுண்டி ஈர்த்து பதிவுக்குள் கொண்டு வரவேண்டும். அவ்வளவுதான். தலைப்புக்கும் பதிவில் எழுதியிருப்பதற்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய சட்டம் ஒன்றுமில்லை. தலைப்பு எவ்வளவு கேவலமாக இருக்கிறதோ அந்த அளவு பதிவின் ஹிட்ஸ் கூடும்.


அவதூறு பதிவுகள் போட்டால், அதைப்பற்றி யாரும் வெட்கப்படத் தேவையில்லை. பூக்காரி பதிவை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்தப் பதிவை படிக்காதவர்கள் அபாக்கியசாலிகள். அத்தகைய பதிவுகள் உங்கள் பதிவுகளுக்கு நல்ல விளம்பரமாக அமையும். எதிர்ப்புகள் அதிகமாக வந்தால் ஒரு மன்னிப்பு பதிவு போட்டுவிட்டால் மேட்டர் முடிந்து விடும்.

பதிவுகளினால் சமூகத்திற்கு என்ன நன்மை என்று அடிக்கடி சில மேதாவிகள் கேட்பதுண்டு. இது ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக கேட்கப்படும் கேள்விதானே தவிர இதற்கு யாரும் பதிலை எதிர்பார்ப்பதில்லை. பதில் சொல்வாரும் இல்லை.

ஆக மொத்தம் பதிவுகள் எதற்காக எழுதப்படுகின்றன என்று சுருக்கமாகச் சொல்லப்போனால் அவரவர்கள் பெருமை கொள்வதற்காகத்தான். நான் இவ்வளவு பதிவுகள் போட்டிருக்கிறேன், இத்தனை ஹிட்ஸ், etc. etc. என்று அவ்வப்போது அவர்கள் பதிவிலேயே போட்டுக்கொள்வார்கள். இது போக இந்தப் பதிவர்களை ஊக்கப்படுத்தவென்றே சில பதிவுகள் இருக்கின்றன. அவர்கள் இன்னாருடைய பதிவில் சமுதாய சீர்திருத்த சிந்தனைகள் கொட்டிக்கிடக்கின்றன, தேவையானவர்கள் போய் அள்ளிக்கொள்ளலாம் என்கிற மாதிரி எழுதுவார்கள். எல்லாம் இலவசம்தான்.

அபூர்வமாக நல்ல கருத்துகள் அல்லது பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட பதிவுகளும் இருக்கின்றன. அவைகளை எழுதுபவர்களும் படிப்பவர்களும் என்னைப் போன்ற, “காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது” மாதிரி ஆட்கள்தான். மக்களை எப்படியும் ஆண்டவன் அருளுக்கு ஆளாக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆன்மீகப் பதிவுகள் சிலர் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு அருள் மழையை தாங்கும் சக்தியை ஆண்டவன்தான் கொடுக்கவேண்டும்.

கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்த யார் வேண்டுமானாலும் பதிவு போடலாம். கம்ப்யூட்டர்கள் அவரவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வேலை செய்யும் ஆபீசில் இருந்தால் போதும். எப்படிப் பதிவுகள் ஆரம்பிப்பது என்பதற்கே பல பதிவுகள் போடப்படுகின்றன. தினம் மூன்று பதிவுகள் போடும் பதிவர்களிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒரு பதிவு போடுபவர்கள் வரை பல தரப்பட்ட பதிவர்கள் இருக்கிறார்கள். பதிவு போடுவதோடு நின்று விடாமல் கிடைத்த ஈமெயில் விலாசங்களுக்கெல்லாம் மெயில் தவறாது அனுப்புபவர்களும் உண்டு. யாம் பெற்ற இன்பம் (துன்பம்) எல்லோரும் பெறவேண்டும் என்கிற பரந்த மனப்பான்மை. அதுதான் ஏகப்பட்ட திரட்டிகள் இருக்கின்றனவே! அப்புறம் எதற்கு இந்த வாதனை?

தமிழில் பதிவு எழுதுவதில் ஒரு பெரிய சௌகரியம் என்னவென்றால் தமிழ் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படிப்பட்ட தப்புகளையும் செய்யலாம். தமிழாசிரியர் படித்தால் தூக்குப்போட்டுக் கொள்ள (கொல்ல)  வைக்கும் அளவுக்கும் எழுதலாம். கேட்பார் யாருமில்லை.

பதிவுகளுக்கு நீள, அகல வரம்புகள் எதுவுமில்லை. நாலு வரி கவிதையும் போடலாம். நாற்பது பக்கம் கட்டுரையும் எழுதலாம். அப்படி எழுத ஒரு தனி அலுவலகம் வேண்டும். கூட, அத்தகைய பதிவுகளில் வரும் போட்டோக்களை எடுப்பதற்கு ஒரு தனி போட்டோகிராபி டீமே வேண்டும். இந்தப் பதிவுகளினால் என்ன வருமானம் வந்து, அலுவலர்களுக்கு எப்படி சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகிறது என்பதைப்பற்றி யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும். அப்படியே மொக்கைப் பதிவு போட்டாலும் முந்நூறு பின்னூட்டங்கள் வரவழைப்பது எப்படி என்பது போன்ற டிப்ஸ்களும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஏன் இப்படி திடீரென்று ஞானோதயம் வந்தது என்றால், இத்தகைய பதிவுகளுக்குத்தான் மவுசு கூடுகிறதே தவிர, என்னை மாதிரி நல்ல, தரமான, ஆழ்ந்த கருத்துகளுடன் எழுதும் பதிவுகளை சீந்துவாரைக் காணோம். அந்த வயிற்றெரிச்சல்தானே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. அப்படி யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அமிர்தாஞ்சனம் வாங்கி தடவுங்கள். சரியாகப் போய்விடும்.