வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஜூலை, 2012

அந்தரங்கமா அல்லது அம்பலமா?




மனிதனுக்கு அந்தரங்கம் என்று ஒன்று இருக்கிறது. அவன் நினைத்த, நினைக்கும் எண்ணங்கள், செய்த, செய்யப்போகும் செயல்கள் இவைகளைப்பற்றி, எல்லாவற்றையும் எல்லோரிடத்திலும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அப்படிச் சொல்பவனை பைத்தியக்காரன், வெள்ளைச்சோளம், விவேகமற்றவன், இப்படி பல பட்டங்களினால் அழைக்கப்படுவான்.


இப்படித்தான் எங்கள் காலத்தில் இருந்தது. காலங்கள் மாறுகின்றன. வாழ்க்கை நெறிகள் மாறுகின்றன. இன்று open Society என்று சொல்லுகிறார்கள். மனிதன் வாழ்வில் ஒளிவு மறைவு கூடாது. எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மனிதன் நாகரிகம் அடைந்தபோது மானத்தை மறைக்க ஆடைகள் அணிய ஆரம்பித்தான். இப்போது நாகரிகம் முற்றிப்போய் Nude club ஆரம்பித்து நடக்கின்றன.


இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் மனித வாழ்விற்கு வேண்டிய கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்கா வண்ணம் வந்து கொண்டிருக்கின்றன. பாதி பேருக்கு அதிகமாக வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் நமது புண்ணிய பூமியில் ஆளுக்கு ஒன்று என்ற அளவில் செல்போன்கள் இருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ரோட்டில் நடந்து செல்லும் பாதி ஆட்கள் செல்போன் பேசியபடிதான் நடக்கிறார்கள். மீதிப் பேர் செல்போனைக் கையில் வைத்தபடிதான் நடக்கிறார்கள்.


காலையில் தூங்கி எழுந்தவுடன் எல்லோரும் செய்யும் காரியங்களை காலைக்கடன்கள் என்று பூடகமாகச் சொல்லிவந்தோம். அதே மாதிரி தம்பதிகள் குடும்பம் நடத்தினார்கள் என்று குறிப்பிட்டோம். ஆனால் அவற்றை இன்று படம் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். பிறகு வம்பில் மாட்டிக்கொண்டு குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறார்கள். 


இன்டர்நெட்டில், செல்போனில் முகம் பார்க்காமலேயே தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். தங்கள் அந்தரங்கங்களை முன்பின் தெரியாதவர்களுடன் பகிர்கிறார்கள். தேவையில்லாத பிரச்சினைகள் எழுகின்றன.


விஞ்ஞான வளர்ச்சியின் பயனை இவ்வாறு விவஸ்தையில்லாமல் பயன்படுத்தி சீரழிந்து போகும் இந்திய சமுதாயத்தினை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியுமா என்று சொல்ல முடியவில்லை.



வியாழன், 28 ஜூன், 2012

நாட்டிய அரங்கேற்றங்கள்.

சமீபத்தில் இரண்டு நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தேன். நாட்டியம் ஒரு நுண்கலை. நுண்கலைகளுக்கென்றே சிலர் இருக்கிறார்கள். மற்றும் சிலர் இதில் ஆர்வம் மிகுந்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சங்கீதம்  (அரங்கேற்றம்) மாதிரி இது சாதாரண விஷயமில்லை.

மிகுந்த வசதி படைத்தவர்களுக்கே சாத்தியமாகக்கூடிய ஒரு விஷயம். ஏறக்குறைய ஒரு ஐந்து வருடம் ஒரு நல்ல குருவிடம் பயிற்சி பெறவேண்டும். அந்தக் குருவிற்கு கலை ஞானத்துடன் நல்ல லோகாதய அனுபவமும் வேண்டும். இல்லாவிட்டால் கற்றுக்கொண்ட கலை குடத்தினுள் விளக்காகப் போய்விடும்.

ஓரளவு நாட்டியம் கற்றுத் தேர்ந்தவுடன் அரங்கேற்றம் செய்யவேண்டும். அரங்கேற்றம் நடத்துவது என்பது ஒரு கல்யாணம் நடத்துவது போலத்தான். அந்த அளவு சிரமங்களும் செலவுகளும் பிடிக்கும். ஒரு சில லட்சங்கள் ஆகும்.


முதலில் ஒரு குளிரூட்ட வசதி உள்ள ஹால் வேண்டும். ஒளி, ஒலிக்கருவிகள், போட்டோ, விடியோ எடுக்க ஸ்பெஷலிஸ்ட்டுகள், அரங்கு அலங்காரம், விளம்பரம், இன்விடேஷன், நடன மணிகளைப் பற்றி ஒரு விளக்க அட்டை, நடன மணிக்கு உடைகள், அலங்காரம் செய்பவர், குரு, பக்க வாத்தியம், அவர்களுக்கு சம்பாவனை, தலைமை தாங்க ஒரு பெரிய மனிதர், அரங்கேற்றம் முடிந்த பிறகு விருந்து, இப்படி ஏகப்பட்ட வேலைகள்.

தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று வருபவர்களை வரவேற்று அரங்கேற்றத்தை நடத்தி முடித்தால் பெரிய விடுதலையாக இருக்கும். ஆனாலும் அந்தப் பெண்ணின் கல்யாணம் முடியும் வரையிலும் இதைப்பற்றியே பெருமை பேசிக்கொண்டிருக்கலாம்.

அரங்கேற்றம் செய்பவர்கள் பெரும்பாலும் அதற்கப்புறம் நிகழ்ச்சிகள் செய்வது அபூர்வம். அதை முழுநேர தொழிலாக ஏற்றுக்கொள்பவர்கள் பெரும்பாலும் இல்லை.

ஆனாலும் இதற்காக அந்தப்பெண்ணும் அவர்கள் குடும்பத்தாரும் படும் பாடு இருக்கிறதே அது ஒரு சரித்திரக் காவியம்!



சனி, 23 ஜூன், 2012

ஆழ்குழாய் கிணற்றுக்குள் 4 வயது குழந்தை


டில்லிக்கு அருகில் ஒரு கிராமத்தில் நான்கு வயது குழந்தை, வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த ஒரு ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து, இரண்டு நாட்களாய் வெளியில் எடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நினைத்தால் மனது பதறுகிறது. சோகத்திலும் மகா சோகம். ஒரு குழந்தையை உயிருடன் பலி கொடுப்பதென்பது மகாக் கொடுமை.

இந்த வேதனை கோபமாக உருவெடுக்கிறது. வீட்டிற்குப் பக்கத்தில் இத்தகைய ஆபத்தை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

இரண்டாவது அந்த நாலு வயது குழந்தை ஆழ்குழாயில் இரவு 11 மணிக்கு விழுந்தது என்கிறார்கள். அப்போது அந்தக் குழந்தையின் அம்மா என்ன செய்து கொண்டிருந்தாள்? ஒரு 4 வயது குழந்தையை 11 மணிக்குள் தூங்க வைக்க மாட்டார்களா? பெற்றுப்போட்டு விட்டு எக்கேடோ கெட்டுப்போ என்று தண்ணி தெளித்து விட்டுவிட்டார்களா?

இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?

வெள்ளி, 22 ஜூன், 2012

நான் வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள்

அன்றாட குடும்ப வாழ்க்கையில் வீட்டில் பலவிதமான சில்லறை ரிப்பேர் வேலைகள் வரும். ஒவ்வொன்றிற்கும் அந்தந்த ஆளைத் தேடிப்போய் அந்த ரிப்பேரைச் செய்து முடிப்பதென்றால் மிகுந்த பொருட்செலவும் நேர விரயமும் ஆகும். இந்த சில்லறை வேலைகளைச் செய்வது ஒன்றும் பெரிய இந்திரஜால வேலை இல்லை. இருந்தாலும் நிறையப் பேர் இந்த வேலைகளுக்கு ஆட்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள். அந்த வேலைகளும் நிரந்தரமாக பெண்டிங்க் ஆகவே இருக்கும்.

அத்தகைய வேலைகளின் சேம்பிள்கள் சில.

எலெக்ட்ரிக் ப்யூஸ் போடுதல்.

ட்யூப் லைட் மாற்றுதல்.

லீக்காகும் பைப்புக்கு வாஷர் மாற்றுதல்.

கதவு, ஜன்னல்களில் கழண்டு போன ஸ்க்ரூவை மாட்டுதல்.

இப்படியான பல சில்லறை வேலைகளை அவ்வப்போது செய்து விட்டால் வீட்டு வேலைகள் சுலபமாக நடக்கும். இதற்கு வீட்டில் சில பொதுவான கருவிகள் வேண்டும். தவிர நம் வாழ்வில் பல காகிதங்களைப் பேண வேண்டியிருக்கிறது. இதற்கும் சில சாதனங்கள் தேவைப்படுகின்றன.

நான் வீட்டில் வைத்திருப்பவை:

1. ஸ்குரூ டிரைவர் - பல சைஸ்களில்.

2. கட்டிங்க் பிளையர்.

3. கரன்ட் டெஸ்டர்

4. ப்யூஸ் வயர் - 5 ஆம்ப்ஸ்

5. ஸ்பேனர்கள் - சைஸ் 5 முதல் 22 வரை

6. பைப் ரெஞ்ச்

7. எலெக்ட்ரிக் வயர்கள்

8. சுத்தி - பெரியது 1, சிறியது 1

9. ஸ்டேப்ளர் + பின்கள்

10. செல்லோ டேப் + டிஸ்பென்சர்

11. கோந்து

12. டபுள் பஞ்சிங்க் மிஷின்

13. இங்க் பேனா + இங்க்

14. பால் பாயின்ட் பேனாக்கள் - 25

15. மெக்கானிகல் + ஆர்டினரி பென்சில்கள்

16. அழி ரப்பர்

17 ரப்பர் பேண்டுகள்

18. குண்டூசி

19. ஜெம் கிளிப்புகள்

20. துண்டு காகிதங்கள் (பேட்)

21. பைண்டிங்க் நூல் + ஊசிகள்

22. கத்தரிக்கோல்

23. கத்திகள்

24. பைல்கள்

இது தவிர சில ஐட்டங்கள் நீங்கள் சாதாரணமாக கேள்விப்படாதவை.

1. பஞ்ச் ஹோல் கார்டு - பேப்பர்களை பஞ்ச் செய்து பைலில் போட்டால் கொஞ்ச நாளில் அந்த ஹோல் கிழிந்து விடும். இவ்வாறு ஏற்படுவதைத் தடுக்க ஹோல் கார்டு கடைகளில் கிடைக்கிறது. இது ஒரு சிறிய பிளாஸ்டிக் வாஷர். இதை அந்த ஹோல்களில் ஒட்டி விட்டால் அப்புறம் அந்த பேப்பர் கிழியாது.

2. மெக்கானிகல் பென்சில் ஷார்ப்பனர். அமெரிக்கா போன அன்பர்கள் பார்த்திருப்பார்கள். பென்சில் விளம்பரங்களில் வரும் பென்சில்கள் எப்படி அவ்வளவு கூராக சீவப்பட்டிருக்கிறது தெரியுமா? இந்த மாதிரி ஷார்ப்பனர்களால்தான். பென்சில் வைத்திருந்தால் அதன் முனை கூராக இருக்கவேண்டும்.

இவை எல்லாம் இல்லாவிட்டால் காலம் ஓடாதா என்று கேட்பவர்களுக்கு - எப்படியும் வாழலாம், ஆனால் இப்படித்தான் வாழ்வேன் என்பது ஒரு சில பைத்தியக்காரர்களின் ஆசை.

திங்கள், 4 ஜூன், 2012

தலைமுறை இடைவெளி என்பது என்ன?


நேற்று என் பேரன்கள் - பேரர்கள் என்று மரியாதையாகச் சொன்னால் அர்த்தம் வேறு விதமாகப் போய்விடும்- KFC போய் விட்டு வந்தார்கள். அங்கு என்ன விசேஷம் என்று கேட்டால் "அதெல்லாம் உங்களுக்குப் புரியாது தாத்தா" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

அப்புறம் வெளியில் விசாரித்ததில் தெரிய வந்தது. கோழிக்கறிக்கு முலாம் பூசி கொள்ளையடிக்கும் இடம் என்று சொன்னார்கள். கோரைப் பாயில் படுத்துத் தூங்குகிறவனுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் ரூமில் படுக்கவைத்தால் அவன் எப்படித் தூங்குவான்?

இந்தக் காலத்துப் பசங்களுக்கு அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க அவர்கள் பெற்றோர் தயங்குவதில்லை. நமக்குத்தான் அந்தக் காலத்துல அனுபவிக்க முடியலே. நம்ம பசங்களாவது அனுபவிக்கட்டுமே என்பது அவர்கள் எண்ணம். நமக்கு ஒவ்வொரு பைசாவையும் எண்ணி செலவு செய்துதான் பழக்கம். எதுவானாலும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க என்பதுதான் நம் காலத்தில் எழுதாத சட்டம்.

அப்புறம் இன்னொண்ணு. இந்தக் காலத்துப் பசங்க காசைத் தொடுவதே இல்லை. எதற்கும் அட்டைகள்தான். காசு எங்கிருந்து, எப்படி வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

அந்தக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு போவோம். "அரை டவுசர்" என்பது சிறு பையன்களைக் குறிக்கும் சொல். ஒருநாள் ஜவுளிக்கடையில் 70 வயசு கிழவர் முக்கால் பேன்ட் வாங்கிக்கொண்டிருந்தார். என்ன சார், பேரனுக்கா என்று கேட்டேன். இல்லைங்க, எனக்குத்தான் என்றார். அவர் அமெரிக்காவிலிருக்கும் கமனைப் பார்க்கப் போகிறார். அங்கே அதுதான் பேஷனாம்.

அந்தக் காலத்தில முடி வெட்ட காசு இல்லாமல் முடி காடாக வளர்ந்தாருக்கும். இப்ப என்னடா என்றால் அதுதான் பேஷன் என்கிறான் என் பேரன்.

இதுதாங்க தலைமுறை இடைவெளி. இன்னும் என்னென்ன கண்றாவிகளெல்லாம் வரப்போகுதோ, தெரியாது. அதுக்குள்ள போய்ச்சேர்ந்துட்டா பரவாயில்லை.

வெள்ளி, 1 ஜூன், 2012

விவாக ரத்து வாங்குவது எப்படி?


பத்து வழிகள் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு எது பொருந்துமோ அதை எடுத்துக்கொள்ளவும்.

1. விவாக ரத்து வாங்குவதற்கு முதல் தேவை நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். அதாவது முதல் கல்யாணம் முடிந்த பிறகு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். முதல் மனைவி தானாகவே விவாகரத்து வாங்கிக்கொண்டு போய்விடுவாள்.

2. நல்ல விவாக ரத்து வக்கீலைப் பிடித்து நண்பனாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் வரும் கேஸ்களிலிருந்து பல ஐடியாக்கள் கிடைக்கும்.

3. அவரும் ஏதாவது புது ஐடியா கொடுப்பார். அவரையே உங்கள் கேசுக்கும் வக்கீலாக வைத்துக் கொள்ளுங்கள்.

4. மனைவி ஷாப்பிங்க் போகவேண்டும் என்று சொல்லுகிறபோது தலைவலி தாங்க முடியவில்லை என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொள்ளவும். இப்படி நாலு தடவை செஞ்சா வக்கீல் நோட்டீஸ் தானாக வரும்.

5. ஆபீசிலிருந்து வீட்டுக்கு இரவு 10 மணிக்கு முன் வராதீர்கள். வந்தவுடன் ஒன்றும் பேசாமல் படுத்துக் கொள்ளவும்.

6. அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து வீட்டோடு வைத்துக் கொள்ளவும். ஒரு மாதத்தில் விவாக ரத்துக்கு நான் கேரன்டி.

7. ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு காலை 8 மணிக்கு வெளியில் சென்று விட்டு இரவு 10 மணிக்குத் திரும்பி வரவும். அன்று முழுவதும் வீட்டில் ஒன்றும் சாப்பிடக்கூடாது.

8. சாப்பிடும்போது ஏதாவது குறை சொல்லிக்கொண்டே சாப்பிடவும். குறிப்பாக எங்க அம்மா செய்யற மாதிரி இல்லை என்று அடிக்கடி சொல்லவும்.

9. மாமியார், மாமனாரைப் பற்றி அடிக்கடி மோசமாகப் பேசவும். செய்த சீர் வகைகளைப் பற்றி புகார் சொல்லவும். தலை தாபாவளிக்கு எடுத்த துணிகளைப் பற்றி மோசமாக கமென்ட் சொல்லவும்.

10. இவை ஒன்றும் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்றால் உங்கள் தலைவிதி அவ்வளவுதான் என்று திருப்திப் பட்டுக்கொள்ளவும்.

பி.கு. நான் 10 வது முறையைத்தான் கடைப்பிடிக்கிறேன்.

செவ்வாய், 8 மே, 2012

புதிதாக கல்யாணம் செய்பவர்களுக்கு


கல்யாணம் செய்யப்போகும் ஆண்களுக்கு மட்டும். பெண்களுக்கான குறிப்புகளை தாய்க்குலப் பதிவர்களைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கல்யாணம் செய்பவர்கள் இரு வகைப்படுவர். முதல் வகை தாய் தகப்பன் பேச்சைக்கேட்டு நடப்பவர்கள். இரண்டாம் வகை தாங்களே தங்களுக்குத் தலைவன் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்தப் பதிவிலுள்ளவைகள் முதல் வகைக்கு மட்டும். இரண்டாம் வகைக்கு எந்த ஆலோசனைகளும் தேவையில்லை. அவர்களே ராஜா, அவர்களே மந்திரி.

அம்மாவின் முந்தானையை இன்னும் விடாத ஆண்மக்கள் முதலில் அதை விடவும். இரண்டாவது நீங்கள் ஒரு ஆண்மகன் என்பதை மறக்காமலிருக்கவேண்டும்.

உங்களுக்குத் துணை தேடும்போது உங்கள் குடும்பத்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித எதிர்ப்பார்ப்பு இருக்கும். உங்கள் அம்மாவிற்கு அவர்களுக்குத் துணையாக, குடும்பப் பொறுப்புகளை (அதாவது வேலைகளை) ஏற்றுக்கொள்ளும் ஒரு மருமகள் தேவை. உங்கள் தந்தைக்கு தன் மகனை ஒரு பொறுப்புள்ளவனாக மாற்றக்கூடியவளாக யாராக இருந்தாலும் சரி, அது போதும். உங்களுக்கு ஒரு சினிமா நடிகை அளவில் அழகுள்ள ஒருத்தி வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புகளில் நடுத்தர மக்களிடையே நடப்பது என்னவென்றால், கொஞ்சம் வசதியுள்ள பெண்ணைப்பெற்றவன் நமக்கு கைக்கடக்கமாக ஒரு மாப்பிள்ளை வேண்டுமென்று புரோக்கரிடம் சொல்லி வைத்திருப்பான். அந்த புரோக்கர் வந்து உங்க அம்மாவைச் சரிக்கட்டி கல்யாணத்தை முடிவு செய்து விடுவான். நீங்கள் பொறியில் அகப்பட்ட எலிமாதிரி சிக்கிக் கொள்வீர்கள். இதற்கு மாற்றே கிடையாது.

கல்யாணம் முடிந்து மறுவீடு சம்பிதாயங்கள் முடிகிற வரை எல்லாம் இன்ப மயம்தான். அதற்குப் பிறகுதான் விதி வேலை செய்யும். வளைகாப்பு, தலைப்பிரசவம் முடிந்து தாயையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்த பின்தான் இருக்கிறது உங்கள் வேதனையெல்லாம். ஏன் கல்யாணம் செய்து கொண்டோம் என்று உங்களை வருந்த வைக்கும் அனுபவங்கள் நிறைய ஏற்படும்.

நீங்கள் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் குடும்பம் சீராக ஓடும். இல்லாவிட்டால் சமீப காலங்களில் கோவில் திருவிழாக்களில் தேர்கள் சாய்கின்ற மாதிரி உங்கள் வாழ்க்கையும் சாய்ந்துவிடும்.

ஆகவே கல்யாணம் செய்யப்போகும் இளைஞர்களே, இவைகளெல்லாவற்றையும் யோசித்து முடிவு செய்யுங்கள்.

புதன், 25 ஏப்ரல், 2012

பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!

பணம் ஒரு பேய்.


பணக்காரனுக்குத் தூக்கம் இல்லை.


பணம் வந்தால் குணம் போய்விடும்.

இப்படிப் பல பழிமொழிகளைக் கேட்டிருப்பீர்கள். அவை அனைத்தும் உண்மைதான்.

கூடவே இந்தக் கதையையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு ராஜாவிடம் ஒரு அதிகாரி வேலை பார்த்து வந்தான். நல்ல வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் ராஜா கொடுத்து வந்தார். அவனும் தன் மனைவி மக்களுடன் நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு வேலையாக வெளியூர் போகவேண்டியிருந்தது. கட்டுச்சாதம் கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டான். போகும் வழியில் ஒரு காடு. அதன் வழியாகப் போகும்போது அவனுக்குச் சிறிது களைப்பாயிருந்ததால் ஒரு மரத்தடியில் இளைப்பாறப் படுத்தவன் அப்படியே தூங்கிப்போனான்.

தூங்கி எழுந்து கட்டுச்சோற்றை சாப்பிடலாமென்று பார்க்கையில் கட்டுச் சோத்தைக் காணவில்லை. இந்தக் காட்டில் என் கட்டுச்சோற்றிற்கு எந்தத் திருடன் வந்தான் என்று சத்தமாகப் புலம்ப ஆரம்பித்தான்.

அப்போது அவன் படுத்திருந்த மரத்தில் இருந்து ஒரு பூதம் இறங்கி வந்தது. அது சொல்லிற்று; நான் இந்த மரத்தில் வசிக்கும் பூதம். நான் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. உன்னுடைய கட்டுச்சாத வாசனை என்னை மயக்கியது. அதனால் அதை எடுத்து சாப்பிட்டு விட்டேன். அதற்குப் பதிலாக நான் உனக்கு ஏழு ஜாடி தங்கக்காசுகள் கொடுக்கிறேன்  நீ அதை வைத்துக்கொள். இப்போது நீ வீட்டுக்குப் போனால் அந்த ஏழு ஜாடிகளும் இருக்கும் என்றது.

இவனும் உடனே ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்து பார்த்தான். பூதம் சொன்ன மாதிரி ஏழு ஜாடிகள் இருந்தன. அவைகளை ஆவலுடன் திறந்து பார்த்தான். எல்லா ஜாடிகளிலும் தங்கக் காசுகள் இருந்தன. அவன் சந்தோஷத்துடன் எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். ஏழாவது ஜாடியைப் பார்த்ததும் அவன் சந்தோஷம் காணாமல் போனது. காரணம் அந்த ஜாடியில் தங்க நாணயங்கள் ஒரு அரைக்கால் ஜாடி அளவு குறைவாய் இருந்தது.

இவனுக்கு ரொம்ப வருத்தமாய்ப் போய்விட்டது. அந்த ஜாடியையும் நிரப்பிப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்து விட்டது. ராஜாவிடம் சம்பளம் அதிகம் வேண்டுமென்று கேட்டுப் பெற்றான். மூன்று வேளைச் சாப்பாட்டை இரண்டு வேளையாக்கி பறகு ஒரு வேளையாக்கினான். வீட்டில் இருக்கும் பண்ட பாத்திரங்களையெல்லாம் விற்றான். என்ன செய்தும் அந்த ஏழாவது ஜாடியை நிரப்பவே முடியவில்லை. இந்த ஏக்கத்திலேயே உடல் மெலிந்து பயித்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டான்.

ராஜா அவனை அழைத்து என்ன காரணத்தினால் இப்படி இளைத்து விட்டாய் என்று கேட்டார். அதற்கு அவன் ஒன்றுமில்லைங்க என்றான். ஆனால் ராஜாவிற்கு காரணம் விளங்கி விட்டது. அந்த ஏழு ஜாடி தங்கக்காசுகள்தானே என்றார். அவனுக்கு ஆச்சரியமாய் போய் விட்டது. நம் வீட்டில் இருக்கும் ஜாடிகள் ரகசியம் ராஜாவிற்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டான்.

இவன் ஆச்சரியப்பட்டதைக் கண்ட ராஜா சொன்னார். அந்த பூதத்தையும் அதன் ஏழு ஜாடி தங்கக் காசுகளையும் எனக்குத் தெரியும். நீ உயிரோடு வாழ விரும்பினால் அந்த ஏழு ஜாடிகளையும் கொண்டுபோய் அந்த பூதத்திடமே கொடுத்து விட்டு வா என்றார். இவனும் அதை மாதிரி செய்து கொஞ்ச நாளில் பழைய மாதிரி ஆனான்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், பணத்தின் மீதுள்ள ஆசையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதுதான். நமக்காகத்தான் பணமே தவிர பணத்துக்காக நாம் இல்லை என்பதை உணரவேண்டும். நம் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கவேண்டும். எதிர்காலத்திற்காக சேமிக்கவும் வேண்டும்.

பணம் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை இல்லை. எதிர்காலத்திற்காக சேமிக்கிறேன் என்று சொல்லி நிகழ்காலத்தை நாம் இழந்து விடக்கூடாது.

புதன், 11 ஏப்ரல், 2012

திருட்டு மாங்காய்க்கு சுவை அதிகம்.



இது மனிதனின் மனப்பாங்கைக் குறிக்கும் ஒரு பழமொழி. எவ்வளவுதான் ஒருவனுக்கு செல்வம் இருந்தாலும் இன்னும் ஏதாவது கிடைத்தால் நன்றாயிருக்குமே என்றுதான் அவன் சிந்தனை போகும். இந்தப் பேராசையைக் குறிக்கும் விதத்தில் சொல்லப்பட்ட பழமொழிதான் இது.

இந்தப் பேராசையை நம் அரசியல்வாதிகள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இலவசங்கள் என்ற திருட்டு மாங்காய்களை அவர்கள் பக்கம் வீசுகிறார்கள். மக்களும் அந்த இலவசங்களுக்கு மயங்கி அவர்களைப் பதவியில் அமர்த்துகிறார்கள்.

இது பல காலமாக நமது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. தமிழன் தன்மானம் மிக்கவன் என்று ஏடுகளில் வேண்டுமானால் மார் தட்டிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் இலவச வேட்டி சீலைகளுக்காக உயிரையும் விடுபவன்தான் தமிழன்.

இந்த இலவசங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அதை அறிந்து அவனை வீழ்த்துவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச யாரும் இல்லை. நம் நாட்டில் லஞ்சம் உருவானது இப்படித்தான்.

சிலருக்கு வேட்டி சீலை கொடுத்தால் போதும். சிலருக்கு பிரியாணியும் குவார்ட்டரும் வேண்டும். ஊட்டுப் பொம்பளைகளுக்கு டி.வி. பொட்டி போதும். சில தொரைகளுக்கு 5 ஸ்டார் ஓட்டலில் ரூம் போடவேண்டியிருக்கும். இப்படி பல வகைகளில் திருட்டு மாங்காய்களை அனுதினமும் ருசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.





செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கொடுப்பினை!



இந்த வார்த்தை மனிதனின் வாழ்வோடு ஒன்றிப் பிணைந்தது. மேலோட்டமாக இந்த வார்த்தையின் பொருள் எளிதானதுதான். நமக்கு விதிக்கப்பட்டது என்னவோ அதை கொடுப்பினை என்று சொல்லி விடுகிறோம். ஆழ்ந்து சிந்தித்தால்தான் இந்த வார்த்தையினுடைய முழு அர்த்தமும் விளங்கும்.


கொடுத்துவைத்த வினை அதாவது வினைப்பயன் என்பதுதான் சரியான விளக்கமாக அமையும். நாம் நம் முன் ஜன்மங்களில் செய்த நல்வினை தீவினைகளின் பலன்களை அனுபவிக்கவே இந்த ஜன்மம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது இந்து சமய நம்பிக்கை. இதன் கூட நம் முன்னோர்கள் செய்த வினைப்பயன்களும் நம்மைத் தொடரும் என்றும் இந்து சமயம் நம்புகிறது.


இவைகளை விஞ்ஞானத்திற்கு பொருந்தாத மூட நம்பிக்கைகள் என்று பலர் விவாதிக்கிறார்கள். காரணம் இதுதான், அதாவது வினைப்பயன்களின், செயல்பாடுகள் நமக்குப் புரியும்படியாக நடப்பதில்லை. எந்தக் கோட்பாடும் நாம் அறிந்த விஞ்ஞானத் தத்துவங்களுக்குள் அடங்கவில்லையானால் அது உண்மையல்ல என்று நாம் நமது மனதை எண்ணப் பழக்கிவிட்டோம்.


ஒரு காலத்தில் பூமி உருண்டை என்று சொன்ன விஞ்ஞானிகளை அந்தக் காலத்து மதவாதிகள் என்ன செய்தார்கள் என்று சரித்திரம் படித்தவர்களுக்கு நினைவு இருக்கலாம். பிற்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்று இப்போது நாம் புரிந்துள்ளோம்.


நாம் செய்யும் செயல்கள் யாவும் நம் புத்தியில் உதித்து, மனதில் எண்ணங்களாக உருப்பெற்று, நம் உடலால் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு செயல்களும் காரண-காரியத் தொடர்பு இருக்கிறது. புத்தி காரணமாகவும், உடல் காரியமாகவும் இயங்குகின்றன.


இந்தக் கோட்பாட்டின்படி நாம் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை எதிர்பார்த்து செய்யப்படுகின்றன. ஆனால் எல்லாக் காரியங்களிலும் நாம் எதிர்பார்த்த பலனே விளைகிறதா? இல்லையே? ஏன் அப்படி நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று நாம் நம் புத்தியைக் கொண்டு யோசித்தால் ஒரு விடையும் கிடைப்பதில்லை.


வீட்டைவிட்டு வெளியூர் செல்லும் எவரும் நாம் விபத்தில் மாட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டுப் புறப்படுவதில்லை. வாகனம் ஓட்டுபவரும் விபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாகனத்தை ஓட்டுவதில்லை. அப்படி இருக்க, தினமும் ஏன் விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர்கள் மடிகின்றன. மனித புத்திக்கு அப்பாற்பட்ட ஒரு செயல் என்றுதானே கருதவேண்டியிருக்கிறது.


அன்றாட வாழ்க்கையில் பல முடிவுகள் எடுக்கிறோம். ஆனால் அதன் விளைவுகள் நாம் எதிர்பார்த்தபடியே அமைவதில்லை. ஏன்? 


இதைத்தான் பூர்வ ஜன்ம பலன் அல்லது வினைப்பயன் என்று ஒரு சமாதானம் சொல்லிக் கொள்ளுகிறோம். இது உண்மையாக இருக்கலாம் அல்லது மனிதனின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் எப்படியோ மனித மனம் இந்த தத்துவத்தை ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைகிறது. இந்த சமாதானம் அடைதல்தான் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது.


மனம் சமாதானமடையாமல் ஒவ்வொரு செயலின் விளைவையும் எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் ஒருவனுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.


உண்மையோ, பொய்யோ, இந்த கொடுப்பினைத் தத்துவம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகிறது.




திங்கள், 23 ஜனவரி, 2012

நீங்கள் சாதனையாளரா?


"வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்வதில் என்ன பயன்? வாழ்நாளில் ஏதாவது ஒரு சாதனை செய்வதுதான் பிறவியின் பயனை அடைந்ததாகும்."

இவ்வாறு பல அறிஞர்கள் தங்கள் நூல்களிலும், பேச்சாளர்கள் தங்கள் மேடைப் பேச்சுகளிலும் முழங்குவதைப் படித்தும் கேட்டுமிருப்பீர்கள்.
நம் வாழ்நாளில் பல சாதனையாளர்களைப் பார்த்தும் இருக்கிறோம். அவர்கள் லட்சத்தில் ஒருவராகவோ அல்லது கோடியில் ஒருவராகவோதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற வகையைச் சேர்ந்தவர்களே. நானும் அப்படித்தான்.

நீங்கள் ஒரு சாதனையாளராக இருந்தால் மிக்க சந்தோஷம். அதற்காக முயற்சி செய்பவராக இருந்தால் வாழ்த்துக்கள். அப்படி இல்லையென்றால் அதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை. அப்படியிருக்கும் நாம்தான் பெரும்பான்மைக் கட்சி. அதற்காக நாம் எந்த குற்ற உணர்ச்சியுடனும் வாழவேண்டியதில்லை.

நீங்கள் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு உங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொண்டிருந்தால், அதுவே போதும் உங்களை முழு மனிதன் என்று சொல்வதற்கு. உலக மனிதர்கள் அனைவரும் சாதனையாளர்களாக மாறினால் இந்த உலகம் தாங்குமா?



வியாழன், 10 நவம்பர், 2011

எதற்கெடுத்தாலும் புலம்பாதீர்கள்


சிலர் எதற்கெடுத்தாலும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். “ நான் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அது தவறாகவே நடக்கிறது. எனக்கு ராசியில்லை”  என்பார்கள்.

சிலர், “அவனுக்கு அந்தக்காலத்தில் நான்தான் வேலை வாங்கிக்கொடுத்தேன். இப்போது பெரிய மேனேஜர் ஆயிட்டான். என்னைப் பார்ப்பதேயில்லை”, என்று புலம்புவார்கள்.

இந்தப் புலம்பல்கள் அவர்களின் மனோநிலையைக் காட்டுகிறது. மனதில் தெளிவும் உறுதியும் உள்ளவர்கள் இந்த மாதிரி புலம்பிக்கொண்டு இருக்க மாட்டார்கள். வாழ்க்கையின் நோக்கம் என்ன? நம்மால் என்ன சாதிக்க முடியும்? என்ற தெளிவுடன் அவர்கள் வாழ்க்கையில் முன்னே போய்க்கொண்டு இருப்பார்கள்.

இந்த உலகத்தில் பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி குண அமைப்புடன்தான் பிறக்கின்றன. உடம்பு அமைப்பில் அந்தந்த தேசத்திற்கு உண்டான மாறுதல்கள் இருக்கும். அது தவிர எல்லோருடைய மூளையும் எந்த விதமான எண்ணங்களோ, குணங்களோ இல்லாமல்தான் இருக்கும்.

அவர்கள் வளர வளர அவர்களின் குணபேதங்கள் வெளியில் தெரிய வருகின்றன. இந்த குணபேதங்களுக்கு பல காரணிகள் இருக்கலாம். அவர்களின் மரபணுக்கள், வளர்ந்த, வளர்க்கப்பட்ட சூழ்நிலை ஆகியவை முக்கிய பங்கு ஆற்றுகின்றன. ஆனால் அவைகளின் மேல் அந்த மனிதனுக்கு ஒரு காலகட்டம் வரையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. அவன் சுயமாக சிந்திக்கத் தொடங்கும்போதுதான் அவனுக்கென்று ஒரு சுய சூழ்நிலை உருவாகிறது.

அதற்குப் பிறகு அவன் தன்னை ஆராய்ந்து, தான் சென்று கொண்டிருக்கும் பாதை சரிதானா என்று முடிவு செய்யவேண்டும். இந்தக் காலகட்டத்தில்தான் ஒருவனுடைய குணம் நிலைபெறுகிறது.  இதன் அடிப்படையில்தான் ஒருவன் வளர்ச்சியோ அல்லது தாழ்ச்சியோ அடைகிறான். ஆகவே ஒருவன் தன்னுடைய நிலைக்கு தானே காரணம் என்ற அறிவைப் பெற்றால், பிறகு அவனுக்குப் புலம்புவதற்கு காரணம் கிடையாது.

புலம்புவதினால் ஒருவனுடைய நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இதை உணர்ந்தவனே அறிவாளி. மற்றவர்கள் என்ன என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

புதன், 9 நவம்பர், 2011

தலைமுறை இடைவெளி


வயசானவங்க கிட்ட இருக்கிற ஒரு பெரிய துர்க்குணம் என்னன்னா, எதையாச்சும் புடிச்சுகிட்டு, தொணதொணன்னு பேசிக்கிட்டே இருக்கறதுதான். (இப்ப நான் பதிவில பண்ணுகிறேன் பாருங்க, அந்த மாதிரி).

“நாங்கல்லாம் அந்தக்காலத்தில” அப்படீன்னு ஆரம்பிச்சா அன்னக்கி பூராவும் அதையே வேறு வேறு வார்தைகள்ல பேசிக்கிட்டே இருப்பாங்க. சங்கீத வித்வான்கள் இதை “சங்கதி” பாடறது என்பார்கள். ஒரே பல்லவியை வெவ்வேறு பாணியிலே ஒரு பத்து இருபது தடவை பாடுவார்கள். எவ்வளவு அதிக தடவை பாடுகிறாரோ அந்த அளவுக்கு அவர் பெரிய வித்வான்.

ஆனா இந்தக் கெளடுக பேசறது ஒரே கழுத்தறுப்பா இருக்கும். பொண்டாட்டி சத்தமா ஒரு கொரல் கொடுத்தாத்தான் இது நிக்கும். பேராண்டிகளெல்லாம் ஒரே ஓட்டமா ஓடி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவார்கள். சில பெரிசுக, எதிர ஆள் இல்லாட்டியும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மூளையில் இரண்டொரு மறைகள் வயதானதினால் லூசாகி இருக்கும். அதனால்தான் இந்த தனி ஆவர்த்தனம்.

அடுத்த தலைமுறைக்காரங்க என்ன செய்தாலும் தப்பு கண்டு பிடிப்பாங்க. இந்தக் காலத்துப் பசங்க சட்டை, பேன்டெல்லாம் வாங்கற பணம் ஒரு பெரிய குடும்பத்தின் ஒரு மாதச்செலவுக்கு மேல் இருக்கும். என் நண்பர் ஒருவர் பேராண்டி வாங்கி வந்த துணியின் விலையைக் கேட்டிருக்கிறார். அவன் அதன் உண்மை விலையில் பாதி சொல்லியிருக்கிறான். அவரும் இவ்வளவு விலையா என்று சொல்லிவிட்டு, அவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார். இரண்டு நாள் கழித்துத்தான் அதன் உண்மை விலையை யாரோ அவருக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் பேரனைக் கூப்பிட்டு என்னிடம் ஏன் அப்படி சொன்னாய் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பேரன் “ நான் உண்மை விலையைச் சொல்லியிருந்தால் உங்களுக்கு “ஹார்ட் அட்டேக்” வந்திருக்குமே, அதனால்தான் உண்மை விலையைச் சொல்லவில்லை” என்று சொன்னானாம். இது எப்படியிருக்கு பாருங்க. ஆனாலும் பேராண்டி விவரமாத்தான் சொல்லியிருக்கிறான்.

இதுதான் தலைமுறை இடைவெளி. இன்றைய இளைய தலைமுறையினரின் பொருளாதார நிலை வயதானவர்களின் இளமைக்கால பொருளாதாரத்திலிருந்து மிகவும் மாறுபட்டது. அதை வயதானவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆகவேதான் இந்த இடைவெளி. வயதானவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் இன்றைய இளைய சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உங்களால் முடியாது. ஆகவே அவர்களை அனுசரித்துக் கொண்டு போனால் எல்லோருக்கும் மகிழ்ச்சியாயிருக்கும்.

ஞாயிறு, 29 மே, 2011

கடன் வாங்குதல்


கடனைக்கண்டு சிலர் பயப்படுவார்கள். கடன் வாங்கினால் அதைத் திருப்பிக் கட்டுவது எப்படி? கட்டமுடியாமல் போனால் மானம் போகுமே! என்றெல்லாம் கவலைப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் கடன் வாங்க மாட்டார்கள். தங்கள் வரவுக்குள்ளேயே செலவைக் குறுக்கிக் கொள்வார்கள்.

பலர் இவ்வாறெல்லாம் கவலைப்படுவதில்லை.  இவர்கள் கடனைக்கண்டு பயப்படாதவர்கள்.  கடன்தானே இருக்கட்டுமே. அவனிடம் இருந்தால் அந்தப்பணம் சும்மாதானே இருக்கப்போகிறது. நம்மிடம் வந்ததால் அது பயனுள்ள பல வேலைகளைச் செய்கிறது. நல்ல விஷயம்தானே. இதற்கு ஏன் வீணாக உடம்பை அலட்டிக்கொள்வானேன்?

சரி, அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டாமா? என்றால் அது அவன் (கடன் கொடுத்தவன்) கவலை. நான் ஏன் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டும்? என்பார்கள்.

இதுதான் கலியுகம்!

வியாழன், 7 ஏப்ரல், 2011

முழுமையாக வாழும் வழிகள்.


1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2.
நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

3.
நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4.
ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5.
சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6.
மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7.
உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8.
தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9.
விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10.
மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!
இது என் சரக்கல்ல. ஒரு நண்பர் மின் அஞ்சலில் அனுப்பியது.