விதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மதியும் விதியும்

விதி, விதி என்று அடிக்கடி பேசுகிறோம். ஆனால் அது என்ன என்று தீவிரமாய் சிந்தித்திருக்கிறோமா
 
உதாரணத்திற்கு, நாம் நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு செயல் செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு இரண்டு வழிகள் தென்படுகின்றன. ஏதோ ஒரு வழியை தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின் விளைவுகள் என்னவென்று தெரியாது. இந்த நிலையில் பொதுவாக எல்லோரும் தம்முடைய அனுபவத்தின் காரணமாக ஒரு வழியைத் தேர்வு செய்வோம். விளைவு சாதகமாக இருந்துவிட்டால் ஆஹா, நாம் தேர்ந்தெடுத்த வழி நல்ல வழி என்று திருப்திப் பட்டுக்கொள்வோம். இல்லையென்றால் ஆஹா, இந்த வழியை ஏன் தேர்ந்தெடுத்தோம்? என்று வருத்தப்பட்டுக்கொள்வோம்

நடைபெற்ற செயல் சாதாரணமானதாக இருந்துவிட்டால் சீக்கிரமே அதை மறந்துவிடுவோம். ஆனால் அதுவே வாழ்வா-சாவா என்ற ஜீவமரணப் பிரச்சினையாக இருந்து, நடந்த விளைவு மிகவும் மோசமானதாக இருந்தால் மனம் வருந்தி சோர்வில் ஆழ்ந்து, மனிதன் உடைந்துபோய், ஒன்றுக்கும் உதவாதவனாய் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது

அதாவது, குற்ற உணர்வு மேலோங்கி, சுய பச்சாத்தாபத்தில் மூழ்கி தீவிர மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இங்குதான் ஒரு மனோதத்துவ ஆறுதலை பெரியவர்கள் ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

குழந்தை கீழே விழுந்து அழுது கொண்டு வந்தால் அம்மா என்ன செய்கிறாள்? குழந்தையை, அது கீழே விழுந்த இடத்திற்கு கூட்டிப்போய், அந்த இடத்தை குச்சியால் இரண்டு அடி கொடுத்தால் குழந்தை சமாதானமாகி விடுகிறது. நாமும் வளர்ந்த குழந்தை மாதிரிதான். நமக்கும் இந்த மாதிரி நொண்டி சமாதானம் மன ரீதியாகத் தேவைப்படுகிறது. நடந்தது நம் விதிப்பயன், நாம் என்ன முயன்றிருந்தாலும் இந்த விளைவு ஏற்பட்டேயிருக்கும் என்ற தத்துவத்தை நம் மனதில் ஆழமாக ஏற்றியிருப்பதால், அதைச்சொல்லி சமாதானப்பட்டுக் கொள்கிறோம்.

நம் சுய பச்சாத்தாபத்தை மாற்ற இதைவிட வேறு உபாயம் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் இந்த சமாதானத்தின் உட்பொருளை விளங்கிக்கொண்டிருந்தால் சரி. இல்லாமல் முழு மூடத்தனமாக என்னுடைய எல்லாச் செயலையும் விதிதான் நிர்ணயிக்கிறது என்று எண்ணி செயல்களைச் செய்வானானால் விளைவுகள் மோசமாக இருக்கும். அவன் வாழ்வு சிறப்பாக இருக்காது.


செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தைக் கடந்த பெண்ணும், காரை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குபவர்களும் இவ்வாறு தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஆவார்கள். நமக்கு இயற்கை கொடுத்திருக்கும் மதியைப் பயன்படுத்தி வாழ்க்கையை நடத்த வேண்டும். இதைத்தான் பெரியவர்கள் விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

கேள்வி:அன்பு அண்ணா, வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

பதில்:- முதல் பாகம்.


இந்தக் கேள்வி என்னிடம் என் நெருங்கிய உறவினர் ஒருவர் கேட்ட கேள்வி. வழக்கமாக இப்படிப்பட்ட கேள்விகள் ஆன்மீக ஞானிகளிடம் மட்டுமே கேட்கப்படும். என் உறவினர் என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்டாரென்றால், நான் சாதாரண மனிதனுக்குப் புரிகிற மாதிரி பதில் கொடுக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில்தான்.

வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவில்தான் என்னால் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும். அந்த பதில்கள் ஏதோ ஒரு அளவிற்கு அவருடைய மனதிற்கும் மற்ற வாசகர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.




சூரியனும் அதைச்சார்ந்த கிரகங்களும் ஓயாது சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அவைகளிடமிருந்து பல்வேறு வகையான ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தக்கதிர்கள் பல வகைகளில் மனிதனைப் பாதிக்கின்றன என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி வரும் கதிர்களின் வீரியம் அதாவது அவைகளின் சக்தி, அந்த சமயத்தில் சூரியனும் மற்ற கிரகங்களும் ஆகாய ஓடு பாதையில் எங்கு இருக்கின்றன, ஒன்றுக்கொன்று எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதைப்பொருத்து அமையும் என்றும் விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு கிரகத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்ற கிரகத்தின் கதிர்வீச்சுடன் சேர்ந்து அதிக வீரியம் பெறலாம். அல்லது ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருந்து அந்த கதிர்வீச்சின் வீரியத்தைக்குறைக்கலாம்.

இந்தப்பாராவை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்கவும். அதன் பொருள் முழுவதும் நன்கு மனதில் பதிந்த பிறகு மேற்கொண்டு படிக்கவும்.

இந்துக்கள் எல்லோரும் ஒரு குழந்தை பிறந்தவுடன் செய்யும் முதல் காரியம், அந்த குழந்தையின் ஜாதகத்தைக் கணிப்பது. ஜாதகம் என்பது அந்த குழந்தை பிறந்தபோது இந்த சூரியன் உட்பட்ட நவகிரகங்களும் ஆகாயவீதியில் எந்தெந்த இடத்தில் இருந்தன என்ற ஒரு குறிப்பு.




அந்த நவக்கிரகங்களிலிருந்து வரும் கதிர் வீச்சுகள் ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கின்றன என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தோம். இந்த விஞ்ஞான உண்மைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பாகவே நம் நாட்டு ஞானிகள் இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு அதை ஜோதிட சாஸ்திரமாக நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

நவக்கிரகங்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறதல்லவா, அவைகள் இடம் மாறும்போது அவைகளிடமிருந்து வரும் கதிர்வீச்சுகளும் மாறும் அல்லவா, அப்படி கதிர்வீச்சுகள் மாறும்போது மனிதர்களின் மேல் அவைகள் ஏற்படுத்தும் விளைவுகளும் மாறும் அல்லவா, இந்த சமாசாரங்களைத்தான் ஜோசிய சாஸ்திரம் சொல்கிறது.

இந்த சாஸ்திரத்தை நன்கு கற்றுத்தேர்ந்த பண்டிதனால் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களையும் துல்லியமாக கணித்து சொல்ல இயலும்.



தொடரும்.....