புதன், 27 ஜனவரி, 2010

திருச்செந்தூர் பயணம்-1

(முதல் நாள்)
முருகன் பேரில் எனக்கு ஒரு விசுவாசம் – பக்தி. ஆகவே என்னுடைய சம்பந்தி திருச்செந்தூர் போய்விட்டு அப்படியே கன்யாகுமரியும் போய்விட்டு வரலாமே என்றவுடன் சரியென்று சொல்லிவிட்டேன்.
ஒரு நல்ல நாளில் ஒரு வாடகைக்கார் பேசி 

நாங்கள் ஐந்து பேர்கள் புறப்பட்டோம். முதலில் மதுரை சென்று ஒரு நாள் தங்கினோம். அன்று மாலை அழகர் கோவில் சென்று கல்லழகரை தரிசித்து விட்டு
பின்பு பழமுதிர்சோலை சென்றோம். முன்பு பழமுதிர்சோலைக்கு நடந்துதான் போகவேண்டும். இப்போது அழகான தார்ச்சாலை போடப்பட்டு இருக்கிறது. நாங்கள் சென்றபோது சாயரட்சை நடந்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து திரை விலக்கியபின் முருகனைத்தரிசித்தோம்.
அறைக்கு திரும்புவதற்குள் மீனாட்சியையும் தரிசிக்கலாம் என்ற திட்டம் இருட்டிவிட்டதால் கைவிடப்பட்டது.
தொடரும்...





வெள்ளி, 1 ஜனவரி, 2010

விவாதத்திற்கு உரிய விஷயங்கள்


விவாதத்திற்கு உரிய விஷயங்கள்
பட்டிமன்ற தலைப்புகளை பார்த்திருப்பீர்கள். எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடிய தலைப்புகளைத்தான் வைப்பார்கள்.
ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரியா தவறா?
கற்பில் சிறந்தவள் மாதவியா கண்ணகியா?
இவை பழைய கால தலைப்புகள்-
தற்கால தலைப்புகள் சில-
சிறந்த சைட் டிஷ் ஊறுகாயா அல்லது சிப்ஸா?
வருங்கால சூபர் ஸ்டார் யார்-விஜய்யா சிம்புவா?
ஆனால்
மதங்களில் சிறந்தது இந்து மதமா இஸ்லாமிய மதமா?
என்று தலைப்பு வைத்தால் என்ன ஆகும்? வீணான கலவரம் உண்டாகும். விவாதம் செய்வது ஒரு தத்துவத்தைப்பற்றி ஒரு தெளிவு ஏற்படுவதற்காக. அதை விட்டு விட்டு ஒரு பிரச்சினைக்குரிய பொருள் பற்றி விவாதம் செய்தால் வீண் சண்டையும் மோசமான கருத்து வேறுபாடும்தான் மிஞ்சும்.
சமீபத்தில் ஒரு பதிவர் அந்த மாதிரியான ஒரு பொருளைப்பற்றிய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். சிறிய நெருப்புப்பொறியாக ஆரம்பித்தது சக பதிவர்கள் விசிறி விட பெருந்தீயாக உருவெடுத்தது.
இதற்கு காரணம் விவாதத்திற்கு உள்ளான பொருள் மத நம்பிக்கை சார்ந்தது. நல்ல பெயருடன் வலம் வந்து கொண்டிருந்த அந்த பதிவரின் நிலை பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளது. நடுநிலையில் இருந்த பதிவர்கள் கூட வார்த்தைகளினால் காயப்பட்டு நிற்கிறார்கள்.
எது விவாதத்திற்கு உரிய சரியான பொருள் என்ற விவேகம் இல்லாமல் போனால் இந்த நிலை எவருக்கும் வரும்.
பெயர்கள் குறிப்பிடாததற்கு காரணம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் என்பதால்தான்.

புதன், 30 டிசம்பர், 2009

புது வருட தீர்மானங்கள்







மனிதன் எப்பொழுதும் தன்னை உயர்த்திக்கொள்ளவே அல்லது உயர்ந்தவனாகவோ காட்டிக்கொள்ளவே விரும்புகிறான். இதில் உள்ள முரண்நகை என்னவென்றால் அவன் மற்றவர்களுடைய அபிப்ராயங்களுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து தன்னைத்தாழ்த்திக் கொள்கிறான். ஒருவனுடைய மனச்சாட்சிதான் அவன் உயர்ந்தவனா இல்லையா என்று கூற முடியும். அடுத்தவர்கள் பல காரணங்களுக்காக ஒருவனைப் புகழ்ந்து ‘உன்னைப்போல் உலகில் உண்டா! ‘ என்று சொல்லி தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த புகழ்ச்சியில் ஒருவன் மயங்குகிறானென்றால் அவன் தன் நிலையிலிருந்து கீழே செல்கிறான் என்றுதான் கொள்ளவேண்டும்.
அதேபோல் ஒருவன் ஒரு நியாயமான கருத்தைச் சொன்னாலும் பலர் அதை வெவ்வேறு காரணங்களுக்காக எதிர்க்கலாம். ஆனால் தன்னுடைய கருத்து நேர்மையானதாக இருந்தால் அடுத்தவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் உணர்ச்சிகள் மேலோங்கி அறிவை மழுங்கச்செய்து விடுகின்றன. அச்சமயங்களில் தெறித்து விழும் வார்த்தைகள் மிகவும் காரமாக இருக்கின்றன. சொல்லாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான், சொல்லிவிட்ட வார்த்தைகள் நமக்கு எஜமான். பின்னால் எவ்வளவு வருந்தினாலும் கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது. ஆனாலும் பல நேரங்களில் வார்த்தைகளை கொட்டிவிட்டு பின்பு வருந்துகிறோம்.
பதிவுலகில் இந்த சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. நான் என்னுடைய பதிவிற்கு ஒருவரும் வரக்காணோமே என்று வருத்தப்பட்ட நாட்கள் உண்டு. ஆனால் இப்போதோ யாரும் நம் பதிவிற்கு வந்து பின்னூட்டம் போடாமலிருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளேன். நானும் யாருடைய பதிவிற்கும் சென்று பின்னூட்டம் போடப்போவதுமில்லை.
இதுவே 2010 ல் என் புது வருடத்தீர்மானம்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மொழிக்கொலை!





Obsessive & Compulsive Disorder (OCD)  என்று ஒரு வகை வியாதி உண்டு. இந்த வியாதியின் வகைகளை லிஸ்ட் போட்டால் ஒரு நான்கைந்து பக்கமாவது வரும். அதில் ஒன்று-எதிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பது. அவர்களுக்கு வீட்டில் அந்தந்த பொருள்கள் அந்தந்த இடங்களில் இருக்க வேண்டும். நாட்காட்டி, படங்கள் ஆகியவை சரியாக செங்குத்தாக தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பயங்கர கோபம் வந்து காச்மூச்சென்று கத்தி வீட்டையே இரண்டு பண்ணிவிடுவார்கள்.
இந்த வியாதி எனக்கு இருக்கிறது. என்ன, இப்போது வயதாகிவிட்டதால் சத்தம் போடுவதில்லை. நேற்று ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தபோது அங்கு ஒரு படம் சாய்வாக தொங்கிக்கொண்டு இருந்தது. அதை நேர்செய்த பிறகுதான் என் மனம் சமாதானமடைந்தது.
அதேபோல் புத்தகங்களைப் படிக்கும்போது எழுத்துப்பிழைகள் இருந்தால் அதைத்திருத்திய பிறகுதான் மேலே படிக்கமுடியும். இப்படியான நான் ஆசிரியராக வேலை பார்த்தால் எப்படியிருக்கும?
விவசாயக்கல்லூரியில் உதவி விரிவுரையாளனாக (வேதியல் பிரிவு) பணிபுரிந்தபோது மாணவர்களின் செய்முறை குறிப்பேடுகளை திருத்துவது ஒரு முக்கியப்பணியாகும். மாணவர்கள் எழுத்துப்பிழைகள் செய்வது சகஜம். ஆங்கிலத்தில் எழுத்துப்பிழைகளை பொருத்துக்கொள்வேன். ஆனால் வேதியல் கனிமங்களின் பெயர்களில் தவறு செய்தால் என்னால் பொறுக்கமுடியாது. குறிப்பாக பொட்டாசியம் என்ற கனிமத்தை பலர் Pottassium  என்று எழுதுவார்கள். Potassium என்பதுதான் சரியானது.  அப்படி எழுதியிருந்தால் அந்த மாணவனிடம் –தம்பி நாளைக்கு ஒரு 40 பக்க நோட்டு வாங்கி அது முழுவதும் Potassium என்று எழுதிக்கொண்டு வந்துவிடு- என்று கூறிவிடுவேன். அப்படி கொண்டுவராவிட்டால் அடுத்த வகுப்பில் அவனுக்கு அனுமதி இல்லை. கல்லூரியில் இந்த மாதிரி தண்டனை கொடுப்பதற்கு 60 களில் முடிந்தது. இன்று அதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
நேற்று புதுகைத்தென்றல் என்ற பதிவில் Magnesioum என்று எழுதியிருந்தது. அதைப்பார்த்த்தும் எனக்கு என்னுடைய ஆசிரியப்பணி காலங்கள் நினைவுக்கு வந்த்து. அந்த பதிவு எழுதுவது ஒரு சகோதரி என்று நினைக்கிறேன. எப்போதாவது நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு 40 பக்கநோட்டு நானே வாங்கிக்கொடுத்து இந்த Magnesioum என்பதை Magnesium என்று சரியாக அந்த நோட்டு முழுவதும் (நானும் கூடவே இருந்து) எழுதச்சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த பதிவைப்படிக்கும் யாருக்காவது அந்த பெண்மணியைத் தெரியுமானால் என்னைச்சந்திப்பதை தவிர்க்கச்சொல்லுங்கள்.
தொடரும்....

வியாழன், 17 டிசம்பர், 2009

பதிவுலக நுணுக்கங்கள்



நான் ஒரு 38 வருடங்கள், ஒரு ஆராய்ச்சியாளனும் ஆசிரியனுமாக இருந்து ஓய்வு பெற்றவன். இவ்வளவு நீண்ட காலம் பணி புரிவது அரசுத்துறையில் மட்டுமே சாத்தியம் என்பது அரசுப்பணியில் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றாகத்தெரியும். ஓய்வு பெற்ற பின்பும் பழகின ஆராய்ச்சி மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் இந்த பதிவுலகத்தின் பக்கம் வந்தேன்.
யாருக்குமே தெருச்சண்டையை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். அப்படி ஒரு சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது. சில பதிவுகள் மட்டும் எப்படி பிரபலமாகின்றன என்றால் அவைகளில் மக்கள் இடும் பின்னூட்டங்கள்தான் காரணம் என்ற அரிய உண்மையை கண்டுபிடித்தேன். அதிலும் பதிவைப்பற்றிய வெறும் பின்னூட்டங்கள் போதாது. பதிவின் கருத்தை விட்டு விட வேண்டும். பதிவூட்டங்களில் வரும் கருத்துக்களை எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ஏசிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆரிய-திராவிட வகுப்பு வாதம்தான் சீக்கிரம் சூடு பிடிக்க நல்ல விஷயம்.
ஒரு பள்ளிக்கூட கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். வாத்தியார் ஒரு மரத்தைப்பற்றி கட்டுரை எழுதச்சொன்னார். பையன் பால்காரரின் பையன். அவனுக்கு மாட்டைப்பற்றிதான் தெரியும். என்ன செய்தானென்றால் கட்டுரையை இப்படி ஆரம்பித்தான். ஒரு காட்டில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு மாடு கட்டியிருந்த்து என்று ஆரம்பித்து இரண்டு பக்கம் மாட்டைப்பற்றியே எழுதி கட்டுரையை முடித்து விட்டான்.
இப்படி பதிவில் எழுதப்பட்டிருக்கும் விஷயமே வேறாக இருக்கும். ஆனாலும் எப்படியாவது நமது சமாசாரத்திற்கு (மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு) விவாதத்தை இழுத்து நம் கும்மியை போட்டுவிட வேண்டும். இப்படி ஒரு பதிவில், பதிவு 4 பக்கம், கும்மிகள் 80 பக்கம். இப்படி போடச்சொல்லி அந்த பதிவரே சொன்னாலும் சொல்லியிருக்கலாம். இப்படித்தான் பதிவுகளைப்பிரபலப்படுத்த வேண்டும்.
தொடரும்.....

செவ்வாய், 15 டிசம்பர், 2009

வணக்கம்






வணக்கம். உலகம் நன்றாகவே போயக்கொண்டு இருக்கிறது. என்ன, நீண்ட நாட்களாக பதிவு எழுதவில்லை என்ற குற்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. இந்த குற்ற உணர்வுகள்தான் நம்முடைய பெரிய தடைக்கல். முதலில் சோம்பல் படாமல் பதிவு எழுதியிருக்க வேண்டும். சரி, அது முடியலையா, எப்போது முடிகிறதோ அப்போது பதிவு எழுதவேண்டியதுதான். அதை விட்டு விட்டு குற்ற உணர்வால் பதிவு எழுதுவதை மேலும் மேலும் ஒத்திப்போடுவதுதான் மிகவும் மோசமான மனப்போக்கு. அதிலிருந்து மீள முயற்சிக்கிறேன்.
பதிவு எழுதத்தான் சோம்பலாக இருந்தேனே தவிர பதிவலகத்தை விட்டு விலகிவிடவில்லை. தினமும் ஒரு மணி நேரமாவது பதிவுலகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், என்னைத்தவிர மற்ற பதிவர்கள் எல்லோரும் மிக மிக சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் எழுதும் அளவைப்பார்த்தால் இந்த பதிவு எழுதுவதைத்தவிர அவர்கள் வேறு எந்த வேலையையும் (தூங்குவது உட்பட) பார்க்க முடியாது என்பது என் கணிப்பு. அப்படியானால் அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்று பல இரவுகளில் தூக்கம் வராத சமயங்களில் யோசித்திருக்கிறேன்.  75 வயதில் என்ன தூக்கம் வரப்போகிறது !
பதிவுலகத்திலிருந்து பெரிய வருமானம் வருமென்று தோணவில்லை. ஆகவே அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக ஏதோவொரு வேலை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு வேலையில் இருந்து கொண்டு இவ்வளவு பதிவுகள் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுடைய அபரிமிதமான ஆர்வத்தை மனமாரப்பாராட்ட வேண்டும். பாராட்டுகிறேன்.
அடுத்த பதிவு சீக்கரத்தில்.....


செவ்வாய், 17 நவம்பர், 2009

கேள்வி பதில்?!


கேள்வி பதில்?!
அநேகமாக எல்லோரும் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தைப்பார்த்து ரசித்திருப்பார்கள. அதில் சிவாஜி ஒரு பாட்டில் ‘பாட்டும் நானே, பாவமும் நானே என்று ஒரு பாட்டு பாடுவார். என்னுடைய பதிவை என்ன செய்தும் பிரபலப்படுத்த முடியவில்லை. இப்படி கேள்வி-பதில் போட்டாலாவது பிரபலமாகிறதா என்று முயற்சிக்கிறேன்.
1.     கேள்வியின் நாயகனே! சில பதிவுகளில் மட்டும் ஹிட்டுகள் லட்சக்கணக்கில் வருகிறதே? அது எப்படி?

அது அந்தந்த பதிவுகளில் உள்ள ஹிட் கவுண்டரைப்பொருத்த்து. தனியாக ஆர்டர் கொடுத்து செய்யவேண்டும்.

2.     நீங்கள் மட்டும் ஏன் இலக்கியத்தமிழில் பதிவு போடுகிறீர்கள்?

மெட்ராஸ் பாஸைலெ என்கு ஜாஸ்தி பலக்கம் லேது.

3.     மனைவி அடித்தால் எப்படி தாங்குவது?

வடிவேலுவிடம் ஆறு மாதம் பாடம் படிக்கவும்.

4.     ஒரு நல்ல பதிவரின் இலக்கணம் என்ன?

நல்ல கேள்வி. டாஸ்மாக்கில் எட்டு ரவுண்ட் போட்டபிறகும் ஸ்டெடியாக நிற்கவேண்டும.



5.     என்னென்ன பதிவுகள் போடலாம்?

எந்த கருமாந்தரத்தையும் போடலாம். ஆனால் தலைப்பு மட்டும் அட்டகாசமாக இருக்கவேண்டும்.



இது ஒரு சரியான மொக்கைப்பதிவாக வந்துவிட்டது.
மீதி அடுத்த பதிவில்..




சனி, 14 நவம்பர், 2009

தமிழ் வளர்ப்போம்



தமிழ் கூறும் நல்லுலகில் ‘இன்டெர்நெட்’ என்னும் கணினி வசதி வந்தவுடன் எழுத்தார்வமிக்க இளைஞர், முதியோர், மகளிர், சிறார் என்று பலரும் தங்களின் பொங்கி வரும் கற்பனைப்படைப்புகளை வலைப்பதிவில் பதிய ஆரம்பித்து விட்டார்கள். பாரதி சொன்னதுபோல் ‘’சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கொணர்ந்திடுவீர் செல்வமனைத்தும்’’ என்ற கொள்கைப்படி பல பல செய்திகளைக்கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் தமிழ் மொழியை எப்பாடு பட்டாவது முன்னேற்றியே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாடு படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த முயற்சியிலே அவர்கள் ஈடுபடும்போது நாம் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகவே இந்த பதிவு.
ஒரு மொழி எவ்வாறு வளர்கிறது? ஆங்கில மொழி ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். எந்த மொழியிலிருந்து வேண்டுமானாலும் சொற்களை தங்கள் மொழியில் சேர்த்துக்கொள்வார்கள். எந்தப்பாகுபாடும் இல்லை. தமிழிலிருந்து கூட பல சொற்கள் ஆங்கிலத்திலே இருக்கின்றன. அவை ஆங்கில அகராதியிலும் கூட சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் இப்போது உலகப்பொது மொழியாக இருக்கிறது.
ஆனால் பிரஞ்சு மொழியைப்பாருங்கள். அவர்கள் மிகுந்த தன்மானம் உள்ளவர்கள் (தமிழர்களைப்போல). வேற்று மொழி சொற்கள் ஒன்று கூட தங்கள் மொழியில் கலவாமல் வைத்திருக்கிறார்கள். தமிழர்களும் அப்படித்தான் இருந்தார்கள். செந்தமிழே எங்கள் மூச்சு என்றுதான் இருந்தோம். ஆனால் இந்த வலைப்பதிவுகள் வர ஆரம்பித்தவுடன் தமிழர்களுக்கு தமிழ் மொழியை எப்பாடு பட்டாவது வளர்த்து விடுவது என்ற முடிவில் இருக்கிறார்கள். ஆங்கிலத்தைப்போல் மற்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளைக்கொண்டு வரலாம். ஆனால் அதற்கு மற்ற மொழிகளில் புலமை வேண்டும். அதுதான் நம்மிடம் கிடையாதே? ஆகவே ஒரு சுலபமான வழியை கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது இப்போது இருக்கும் சொற்களையே மேம்படுத்துவது! எப்படி?
இப்போது வரும் சில விளம்பரங்களில் எழுத்துக்களை மாற்றிப்போட்டு இருப்பார்கள். பார்ப்பவர்கள் ‘என்னடா இவன் தப்பாக எழுதியிருக்கிறான்’ என்று நினைத்துக்கொண்டு போவார்கள். அதுதான் விளம்பர உத்தி. விளம்பரம் மக்கள் மனதில் பதியவேண்டும். அவ்வளவுதான்.
அது போல் நம் பதிவர்கள் தமிழை எப்படி முன்னேற்றுகிறார்கள் என்று பாருங்கள்.
என் உல்லம், தமில் வால்க, பயிர்ச்சி, மறு அழைப்பிதல்
ல,ள.ழ = இந்த மூன்றுக்கும் வேறுபாடு இல்லை.
ரகரமும் றகரமும் ஒன்றே

எப்படியோ தமில் வலர்ந்தால் சறிதான்! வால்க தமில், வளர்க தமிலன்!

ஞாயிறு, 8 நவம்பர், 2009

தமிழ் பதிவுகளில் பின்னூட்டங்கள்


தமிழ் பதிவுலகில் தினமும் ஆயிரக்கணக்கான பதிவுகள் பதிவாகின்றன. ஆனால் ஒவ்வொரு பதிவிற்கும் பல பின்னூட்டங்கள் போடப்படுகின்றன. நாமும் ஒரு வருடமாக இந்த பதிவுலகத்தில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கறோம். நம் பதிவுகளுக்கு ஏன் இப்படி பின்னூட்டங்கள் யாரும் போடுவதில்லை என்ற எண்ணம் (ஏக்கம்!) ஏற்பட்டது.
சரி, இதற்கு என்ன பண்ணலாம் என்று ஆராய்ச்சியில் இறங்கினேன் (பழைய தொழில் புத்தி?). இந்த ஆராய்ச்சியில் நான் கண்டு பிடித்தவைகளை புதிய பதிவுலக நண்பர்களுக்காக இங்கே கொடுக்கிறேன்.
1.       நீங்கள் குறைந்தது ஒரு பத்து பதிவுலக நண்பர்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2.       அவர்களுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்கள் பதிவிற்கு அவர்கள் பின்னூட்டம் போடவேண்டும். பதிலுக்கு நீங்கள் அவர்கள் பதிவிற்கு பின்னூட்டம் போட ஒத்துக்கொள்ள வேண்டும்.
3.       நீங்கள் ஒரு பதிவை இற்றைப்படுத்தியவுடன் இந்த பத்து பேருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்திட வேண்டும்.
4.       உடனே மளமளவென்று உங்கள் பதிவிற்கு பின்னூக்கள் குவிந்து விடும். சில சமயங்களில் ஆர்வக்கோளாறு காரணமாக ஒருவரே பத்துப்பதினைந்து பின்னூட்டங்கள் போட்டு விடலாம. கண்டு கொள்ளாதீர்கள்.
5.       எல்லா பின்னூக்களுக்கும் தவறாது பதில் பின்னூட்டங்கள் உடனே போட்டு விடுங்கள். ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
6.       அதேபோல் உங்கள் நண்பர்களின் பதிவுகளைப்பற்றிய விவரங்களும் உங்களுக்கு மின்னஞ்சலில் வரும். அவைகளுக்கு உடனுக்குடன் பின்னூட்டம் போடுவது உங்கள் கடமை.
7.       இதையெல்லாம் நேரத்துடன் செய்யவேண்டுமென்றால் சிறிய தியாகங்கள் செய்யவேண்டியிருக்கும். ஒன்றுமில்லை. நீங்கள் தூங்கக்கூடாது. அவ்வளவுதான்.
அவ்வளவுதான், நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்கள்!


சனி, 24 அக்டோபர், 2009

பதிவுலக நாற்றம்-2

கடந்த சில நாட்களாக வரும் சில பதிவுகளைப்படித்தால் இவர்கள் படித்த, அறிவு ஜீவிகள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் கொடுத்துக்கொண்டு இப்படி எழுத எப்படி முடிகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு முன் பதிவுலக நாற்றம் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது வெறும் கூவம் நாற்றம் மட்டும்தான் இருந்தது. இப்போது ''பிண நாற்றம்'' வீசுகின்றது.

இந்த பதிவுகளைப் பார்க்கும்போது எனக்கு புரிந்தவை என்னவென்றால் பதிவர்கள் வழக்கமாக சந்திப்பது தாகசாந்தி வசதி இருக்கும் ஹோட்டல்களில் மட்டுமே. பிரபல பதிவராவது எப்படி என்ற என்னுடைய பதிவில் வேடிக்கையாக ''பதிவர் என்றால் 5 ரவுண்டிற்குப்பிறகும் ஸ்டெடியாக நிற்கவேண்டும்'' என்று எழுதியிருந்தேன். ஆனால் உண்மையிலேயே பதிவர்கள் இப்படி இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

பதிவர்கள் பொது சமாசாரங்களைப்பற்றி எழுதுவார்கள் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். அது மிகத்தவறு என்று இப்போது புரிந்து விட்டது. அடுத்த பதிவரைப்பற்றி தனி மனித வசைகள், அதுவும் நாகரிகமற்ற வார்த்தைகளைப்பயன்படுத்தி எழுதுவது எந்த ரகத்தில் சேரும் என்று புரியவில்லை. ஒருகால் நான் ஒரு பைத்தியக்காரனாக இருக்கிறேனோ என்னமோ தெரியவில்லை. அதைத்தவிர அந்தப்பதிவரின் குடும்ப நபர்களைப்பற்றி எழுதுவது இன்னும் கேவலம். இன்னும் வேடிக்கை என்னவென்றால் அப்படி மோசமாக எழுதப்பட்ட பதிவரை நேரில் சந்திப்பது.

குழாயடிச்சண்டையை நான் நேரில் பார்த்ததில்லை. கேள்வி ஞானம்தான். அங்குதான் பெண்கள் ஒருவருக்கொருவர் வாயில் வரக்கூடாத வார்த்தைகளினால் ஏசிக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பதிவுலக வசைகள் அதையும் மிஞ்சி இருக்கின்றன. பதிவுலகம் எங்கு போய் நிற்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-8)




இப்படியாக உங்கள் பதிவை பிரபல பதிவாக அறிமுகப்படுத்தியாகி விட்டது. அடுத்த வேலை விளம்பரங்களை பிடிக்க வேண்டியதுதான். அவைகள் உங்களைத்தேடியும் வரும். அல்லது நீங்களே தேடிப்போகவேண்டி வரலாம். எப்படியோ கணிசமான விளம்பரங்களைப்படித்துப்போட்டு விட்டீர்களானால் உங்கள் பேங்க் பேலன்ஸும் அதிகரிக்கும்.
ஆனாலும் தொடர்ந்து உங்கள் பதிவை முன்னிலையிலேயே வைத்திருக்க நீங்கள் கொஞ்சம் உழைக்க வேண்டும். பிற பதிவுகளைப் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருங்கள். அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகளை கொஞ்சம் மாற்றி பதிவு போடவேண்டியதுதான்.
நீங்கள் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முற்றும்.


செவ்வாய், 20 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-7)




டிஸ்கி* - இந்த பகுதியில் கூறப்போகும் விஷயங்கள் மிகவும் sensitive ஆனவை. அவைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டும். முக்கியமாக இவைகளின் ரகசியம் கண்டிப்பாக காக்கப்படவேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.
• டிஸ்கி = Disclaimer
• இதை இன்னும் பொடி எழுத்தில் போடவேண்டும். என்னுடைய கம்ப்யூட்டரில் அதற்கு வசதி இல்லை.

அடுத்த்தாக கவனிக்க வேண்டியது ‘’வருகை எண்ணிக்கை’’. இந்த எண்ணிக்கை கூடினால்தான் உங்கள் தளத்தின் மதிப்பு கூடும்.

இதற்கு நீங்கள் முதலில் ஒரு வருகைப்பதிவு விட்ஜெட்டை உங்கள் தளத்தில் நிறுவ வேண்டும். இது மிகவும் சுலபம். ஏதாவது ஒரு தளத்தில் இதை நிறுவியிருப்பார்கள். அதை அப்படியே லிங்க் கண்டுபிடித்து உங்களுடைய தளத்தில் ஏற்றவேண்டியதுதான்.
பிறகு இந்த வருகைப்பதிவிற்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதத்தில் ஒரு லட்சம் என்று நிர்ணயித்துக்கொள்ளுங்கள். முடியுமா என்று மலைக்காதீர்கள்! முயன்றால் முடியாதது உலகில் ஒன்றும் இல்லை. உங்கள் திறமையின் பேரிலும் உங்கள் குருவின் மேலும் நம்பிக்கை வையுங்கள். நினைத்தது நடக்கும்.
உங்களுக்கு ஓரளவாவது கணக்குப் போட வரும் என்று நினைக்கிறேன். பின்வறும் கணக்கை உன்னிப்பாக கவனிக்கவும். உங்களிடம் கைவசம் 108 தளங்கள் இருக்கின்றன அல்லவா? ஒவ்வொரு தளத்திலிருந்தும் உங்கள் பிரபல தளத்தை தினம் 10 முறை ஹிட் செய்யவேண்டும். ஆக ஒரு நாளில் உங்கள் தளத்திற்கு 1080 ஹிட்கள் கணக்காகி விட்டது. இனி நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளலாம். மாத்தஃதிற்கு ஏறக்குறைய 32400 வரும். மூன்று மாத்தஃதில் 97200 ஹிட்கள். இது போக வழியில் போகும் சிலரும் போகிறபோக்கில் வேடிக்கை பார்க்க வருவார்கள். எல்லாமாகச்சேர்ந்து சுலபமாக ஒரு லட்சம் இலக்கை அடைந்துவிடலாம்.
உடனே ஒரு பெரிய பதிவு போட்டு ‘’ஆஹா, மூன்று மாதத்தில் ஒரு லட்சம் வருகை. பாருங்கள், பாருங்கள், இந்த தளத்தின் சாதனை’’ என்று டாம் டாம் போடவேண்டியதுதான்.
மீதி அடுத்த பதிவில்.. (அடுத்ததே இந்த வரிசையில் கடைசி பதிவு.)