திங்கள், 8 மார்ச், 2010

பிரபல பதிவர் ஆனபின்பு.....



என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான் ‘பணம் சம்பாதிப்பது சுலபம், அதை வைத்திருப்பதுதான் கஷ்டம்’ என்று. நான் சிரிப்பேன். பணத்தை வைத்திருப்பதில் என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது என்று நினைத்துக்கொள்வேன். என்னிடமும் கொஞ்சம் பணம் சேர்ந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு பைனான்ஸ் கம்பெனியில் போட்டு, அந்த கம்பெனி திவாலானவுடன் அங்கே ஓடி இங்கே ஓடி, பல வருடங்கள் ஆனபின் ரூபாய்க்கு 50 பைசா வீதம் (5 வருட வட்டி ஹோகயா) செட்டில்மென்ட் முடித்து மீதிப்பணத்தை கையில் வாங்கும்போதுதான் நண்பன் சொன்னது எவ்வளவு சரி என்பதை உணர்ந்தேன்.

அதேபோல் பதிவுலகத்தில் அடியெடுத்து வைத்து சில மாதங்கள் ஆனபின்பு நாமும் பிரபல பதிவர் ஆகமாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. பதிவுலகில் ஏற்பட்ட சில பல சலசலப்புகள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் பிரபல பதிவர் ஆகும் ஆசை விடவில்லை. பதிவுலக நடவடிக்கைகளை கவனித்து வந்ததில் சில நுணுக்கங்கள் புலப்பட்டன. அவைகளை ஒரு எட்டு பதிவுகளாகப் போட்டேன். ஆனால் அவைகளை நானே கடைப்பிடிக்கவில்லை. மற்றவர்கள் கடைப்பிடித்து பிரபலமானார்களா என்று தெரியவில்லை.

நமது நித்தியானந்தாவின் கடைக்கண் பார்வை என்மீது விழுந்தவுடன் அவர் அருளினால் அவரைப்பற்றி ஒரு நாலைந்து பதிவு போட்டேன். அவருடைய அருளாசியின் மகிமையினால் என்னுடைய வலைப்பதிவு கொஞ்சம் பிரபலமடைந்துள்ளது. ஹிட் லிஸ்ட்டில் நெம்பர் கூடியிருக்கிறது. பின்னூட்டங்கள் அதிகரித்துள்ளன. இப்போது எனக்கு முக்கியமான வேலைகள் என்னவென்றால் :-



1. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது எழுதியாக வேண்டும்.

2. அதை பிளாக்கில் போட்டவுடன் ஒவ்வொரு திரட்டிக்கும் சென்று நம் பதிவைச்சேர்க்க வேண்டும்.

3. ஒரு மணிக்கொரு தடவை பிளாக்குக்குள் போய் எத்தனை ஹிட்ஸ்கள் வந்துள்ளன என்று பார்க்க வேண்டும்.

4. அதே சமயத்தில் எத்தனை பாலோயர்ஸ் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்று செக் செய்யவேண்டும்.

5. நமது பிளாக்குக்கு ஒவ்வொரு திரட்டியிலும் எவ்வளவு ஓட்டு விழுந்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். ஓட்டுகள் அதிகம் விழுவதற்காக, அம்மா, தாயே, ஓட்டுப்பிச்சை போடுங்கள் என்று ஒவ்வொரு பதிவிலும் கடைசியில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

6. நமக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை மாடரேட் செய்து நமது பதிவில் ஏற்றவேண்டும். அந்த பின்னூட்டங்களுக்கு பதில்கள் நமது பதிவில் போடவேண்டும். பிறகு அவற்றுக்கு எதிர்வினைகள் வரும். அவற்றுக்கு நாம் பதில் போட, ஒரே தொடர்கதைதான். சில பதிவுகளில் அவர்கள் பதிவு இட்ட சில மணி நேரத்திலேயே 70 – 80 பின்னூட்டங்கள் சேர்ந்துவிடும். இது எப்படி என்று யோசித்து அதற்கு விடையும் கண்டுபிடித்துவிட்டேன். அதை இங்கே எழுத முடியாது.

7. பிறகு நமக்கு பின்னூட்டமிட்டவர்களின் பதிவுகளைத்தேடிப்போய் நாம் பின்னூட்டம் இடவேண்டும். You scratch my back, I scratch your back கதைதான்.

8. அந்தப்பதிவர்கள் நம்முடைய பின்னூட்டங்களை கண்டு கொண்டார்களாவென்று கண்காணிக்கவேண்டும். அப்படி கண்டுகொள்ளாமல் விட்ட பதிவர்களை நம் அடுத்த பதிவில் உண்டு இல்லை என்று ஆக்கிவிடவேண்டும். அந்தப்பதிவில் பின்னூட்டமிடும்போது அங்கு இருக்கும் கட்டங்களில் விளையாட்டாக டிக் செய்து விட்டால். வினை வந்துவிடும். பிறகு நமது மெயில் பாக்சைத் திறந்தால் வரும் மெயில்கள் நம்மை மூச்சு முட்ட செய்துவிடும்.

9. பின்னூட்டம் இடுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல சமயங்களில் நம் பதிவை எடிட் செய்யவேண்டி வரும்.

10. இத்தனைக்கும் நடுவில் நான் காலைக்கடன்களை முடித்து விட்டு குளிக்கவேண்டும், டிபன், சாப்பாடு இத்தியாதிகளை சாப்பிட வேண்டும், சொந்த வெளி வேலைகளை கவனிக்கவேண்டும், வீட்டம்மா சொல்லும் எடுபிடி வேலைகளை முடிக்கவேன்டும், போன் பேசவேண்டும், நண்பர்களைப் பார்க்கவேண்டும், தூங்கவேண்டும்.

அப்பப்பா, என்னால் முடியவில்லை. எனக்கு பிரபல பதிவர் பட்டம் வேண்டாம், வேண்டவே வேண்டாம், என்னை ஆளை விட்டால் போதும் சாமி (நித்தியானந்த சாமி இல்லை, இது நிஜ சாமி.) நான் ஓடி விடுகிறேன்.

கோள்களும் மனிதனின் வாழ்க்கையும்.



கேள்வி: அன்பு அண்ணா, வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

பதில்:- இரண்டாம் பாகம்.

மனிதனின் வாழ்க்கை கோள்களின் நிலையைப்பொருத்து அமையும் என்று பார்த்தோமல்லவா. அப்படியானால் ஒருவனின் முழு எதிர்காலத்தையும் ஜோசியர்கள் முழுவதுமாக கணித்து சொல்லமுடியாதா? முக்காலத்தையும் துல்லியமாக கணித்து எங்களால் சொல்ல முடியும் என்றுதான் பெரும்பாலான ஜோசியர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.


அப்படி ஜோசியர்கள் சொல்வது மறுக்க முடியாத உண்மையாக இருந்தால், இந்த உலகில் உள்ள அனைவரும் தங்களுடைய எல்லாக்காரியங்களையும் ஜோசியர்களைக் கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள் அல்லவா? ஆனால் தற்போது நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்த்தால்,

1. எல்லோரும் ஜோசியரிடம் போவதில்லை.

2. அப்படி ஜோசியரிடம் போனவர்களின் அனுபவமும் ஜோசியர்களின் வாக்கு முழுவதும் நடந்ததாக கூறவில்லை.


இந்த நிலைக்கு ஜோசியர்கள் பல சமாதானங்கள் கூறுவார்கள். ஜோசியம் நம்புபவர்களுக்குத்தான் பலிக்கும், அவருடைய ஜாதகம் தவறு, அந்த ஜோசியன் அரைகுறையாக படித்தவன் இப்படியெல்லாம் கூறி மக்களை குழப்புவார்கள்.


பொதுவாகவே ஜோசியர்கள் எல்லோரும் நல்ல மனோதத்துவ வல்லுநர்களாக இருப்பார்கள். வந்த ஆட்களின் சில நிமிடப்பேச்சிலேயே அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள், எந்த மாதிரியான பலன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை யூகித்து விடுவார்கள். அதற்குத்தகுந்த மாதிரியான டெக்னிகல் வார்த்தைகளை உபயாகப்படுத்தி வந்தவர்களை ஒருமாதிரியாக பிரெய்ன்வாஷ் பண்ணி முடிந்தமட்டும் வசூல் செய்துவிட்டு அனுப்பி வடுவார்.


அவர் சொன்னமாதிரி நடந்தால் ஜோசியர் கெட்டிக்காரர் என்ற பெயர் வந்துவிடும். இப்படி நாலு பேர் சொன்னால் அந்த ஜோசியருக்கு இன்னும் பத்து வருஷத்துக்கு தொழில் கவலை விட்டது.


ஆனால் ஜோசியர் சொன்னமாதிரி கோள்களின் நிலையைப்பொருத்து மனிதனின் வாழ்வு அமைந்துவிடும் என்றால் மனிதன் எந்த முயற்சியையும் எடுக்காமலேயே அவன வாழ்க்கை நடக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படி நடப்பதில்லையே? அதற்கு என்ன காரணம்?


இங்குதான் நம் ஆன்மீகம் காரணம் காட்டுகிறது. என்னதான் ஒருவனுடைய கிரக பலன்கள் சாதகமாக இருந்தாலும், ஒவ்வொருவனுக்கும் கர்மவினை என்று ஒன்று இருக்கிறது, அது கிரகபலனை மாற்றக்கூடிய சக்தி படைத்தது, இந்த இரண்டும் ஒரே மாதிரியான பலனைக் கொடுக்கக்கூடிய நிலை இருந்தால்தான் ஜோசியர் சொன்னது முழுவதுமாக நடக்கும். இரண்டும் வெவ்வேறு பலன்களைக்கொடுக்கும் நிலையில் இருந்தால், எது அதிக சக்தியுடன் இருக்கிறதோ, அந்தப் பலன்தான் நடக்கும். இது ஆன்மீகவாதிகளின் விளக்கம். கர்மவினையைப்பற்றி தெரிந்து கொள்ள பகவத்கீதையைப் படிக்கவும்.


அப்படியானால் நம் முயற்சி எதற்கு என்ற கேள்வி எழும். வாழும் மனிதன் ஒவ்வொருவனும் வாழ்வதற்கான முயற்சிகளை செய்துதான் ஆகவேண்டும். அந்த முயற்சிக்குத்தகுந்த பலன்களை நம் கர்ம வினைகளும் கோள்களின் இருப்பும் நமக்குத்தருகின்றன. முயற்சி செய்யாவிடில் மனிதன் அழிந்து விடுவான்.

இன்னும் வரும்..

என்னாலெ முடியல, நான் வெலகிக்கிறேன் - பாகம் 1


நான் பிளாக் எழுத வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. முதல் வருடத்தில் ஏறக்குறைய ஒரு ஐம்பது பதிவுகள் எழுதியிருப்பேன். பல விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். அதில் குறிப்பாக ‘பிரபல பதிவர் ஆவது எப்படி?’ எனபதைப்பற்றி எட்டு பதிவுகள் போட்டிருக்கிறேன்.


எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு-அதாவது நெய்யறவன் கட்டறது கிழிசல்- அப்படீன்னு சொல்வாங்க. நெசவாளி ஊருக்கெல்லாம் புதுத்துணி நெய்து கொடுப்பான், ஆனால் அவனுக்கு உடுத்த முடிவதோ கிழிசல் துணிதான். அந்த மாதிரி நான் மற்றவர்களுக்கெல்லாம் பிரபலமாவது எப்படி என்று உபதேசம் செய்துவிட்டு நான் பிரபலமாகாமலேயே இருந்தேன். ஏன் என்றால் நான் உபதேசம் செய்தவைகளை நான் கடைப்பிடிக்கவில்லை.


ஒரு பதிவு பிரபலமானதா இல்லையா என்று எப்படி அறிவது? அதன் அளவுகோல்களாவன-

1. அந்தப்பதிவின் ஹிட்ஸ் அதிகமாக இருக்கவேண்டும். பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஹிட்ஸை தாண்டியிருக்க வேண்டும். (என்னுடையது 300 ஐத்தாண்டவில்லை).

2. அந்தப்பதிவின் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 100 ஐத்தாண்டியிருக்க வேண்டும். (நான் 5)

3. ஒவ்வொரு பதிவிலும் 50 க்கு குறையாமல் பின்னூட்டங்கள் போட்டிருக்கவேண்டும். அதில் 10 பர்சென்ட் பதிவரைத்திட்டி இருக்கவேண்டும். (முதல் வருடம் பூராவும் 50 பதிவிற்கும் சேர்த்து வந்த பின்னூட்டங்கள் மொத்தமே 10 க்கும் கீழ்)

4.அப்புறம் நம்ம பதிவுக்கு ஐயா, சாமீன்னு எல்லாத்தையும் கெஞ்சி ஓட்டு வாங்கவேண்டும்

5. ஒவ்வொரு பதிவிலும் குறைந்தது பத்து கொலைகளாவது நடந்திருக்க வேண்டும் - அதாவது தமிழ்க்கொலை. – கீழ்க்கண்டவற்றுக்குள் வித்தியாசம் பாராட்டக்கூடாது. எதை எங்கு வேண்டுமென்றாலும் உபயோகிக்கலாம்.

1. ல , ள

2. ர , ற

3. ன , ண , ந

4. எங்கு வேண்டுமானாலும் ‘ஒற்று’ சேர்க்கலாம். உ-ம். பயிற்ச்சி, முயற்ச்சி


இந்த அளவுகோல்களின்படி என்னுடைய பதிவு அடிமட்டத்தில் இருந்தது. நான் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதை சிறப்பாகச் செய்யவேண்டும் என்று எண்ணுபவன். என்னடா இந்த பதிவுலகத்திலே நாம் பிரபலமாகாமல் இருக்கிறோமே என்ற கவலை என்னைப்பீடித்தது. என் நண்பர்களும் என்னைக்கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.


இந்த சமயத்தில்தான் அதாவது கரெக்டாக 2-3-2010 அன்று மாலை 8.30 மணிக்கு ஆபத்பாந்தவனாக ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த ஸவாமிகள் சன் டிவி மூலமாக தன் கடைக்கண்களை என் பக்கம் திருப்பினார். 8.35 க்கு எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது. சரியாக 8.40க்கு ஸ்வாமிகளைப்பற்றிய முதல் பதிவை இட்டேன். அதிலிருந்து நான்கு நாட்கள் தினமும் இரண்டு பதிவுகள் வீதம்(எல்லாம் ஸ்வாமிகளைப்பற்றித்தான்)போட்டேன். கூகுளாண்டவர் எந்த படம் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள் மகனே என்று அருள் பாலித்தார்.

அந்த வரிசையில்தான் கடைசியாக என்னுடைய பக்தி முற்றிப்போய் ஸ்வாமியின் பிரதம சிஷ்யை ரஞ்சிதா அவர்களின் ஒரு நல்ல படத்தைப்போட்டேன். என்ன, படம் ரொம்ப நன்றாக இருந்து விட்டது. என்னுடைய பதிவின் ஹிட்ஸ், பின்தொடருபவர்கள், பின்னூட்டங்கள் எல்லாம் மளமளவென்று தாறுமாறாக ஏறி, நானும் பிரபல பதிவர்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.


என்னுடைய இந்த இமாலய வளர்ச்சியைப்பார்த்து பொறாமை கொண்ட ஒரு சில பதிவர்கள் அதெப்படி ஸ்வாமியின் பிரதம சிஷ்யையின் படத்தை நீ மட்டும் போடலாம், நாங்கள் போடலாமென்று இருந்தோமே என்று என்னிடம் சண்டைக்கு வந்தார்கள். (முகுந்த் அம்மா – மன்னிக்கவும்). நான் சண்டை போடும் வயதெல்லாம் தாண்டி (சும்மா 75 தான்) விட்டபடியால் எதற்கு வம்பு என்று அந்த படத்தை எடுத்துவிட்டேன்.


இப்போது நான் பிரபலமாகிவிட்டேன் அல்லவா! அதனால் நான் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளைப்பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

கேள்வி:அன்பு அண்ணா, வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

பதில்:- முதல் பாகம்.


இந்தக் கேள்வி என்னிடம் என் நெருங்கிய உறவினர் ஒருவர் கேட்ட கேள்வி. வழக்கமாக இப்படிப்பட்ட கேள்விகள் ஆன்மீக ஞானிகளிடம் மட்டுமே கேட்கப்படும். என் உறவினர் என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்டாரென்றால், நான் சாதாரண மனிதனுக்குப் புரிகிற மாதிரி பதில் கொடுக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில்தான்.

வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவில்தான் என்னால் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும். அந்த பதில்கள் ஏதோ ஒரு அளவிற்கு அவருடைய மனதிற்கும் மற்ற வாசகர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.




சூரியனும் அதைச்சார்ந்த கிரகங்களும் ஓயாது சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அவைகளிடமிருந்து பல்வேறு வகையான ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தக்கதிர்கள் பல வகைகளில் மனிதனைப் பாதிக்கின்றன என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி வரும் கதிர்களின் வீரியம் அதாவது அவைகளின் சக்தி, அந்த சமயத்தில் சூரியனும் மற்ற கிரகங்களும் ஆகாய ஓடு பாதையில் எங்கு இருக்கின்றன, ஒன்றுக்கொன்று எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதைப்பொருத்து அமையும் என்றும் விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு கிரகத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்ற கிரகத்தின் கதிர்வீச்சுடன் சேர்ந்து அதிக வீரியம் பெறலாம். அல்லது ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருந்து அந்த கதிர்வீச்சின் வீரியத்தைக்குறைக்கலாம்.

இந்தப்பாராவை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்கவும். அதன் பொருள் முழுவதும் நன்கு மனதில் பதிந்த பிறகு மேற்கொண்டு படிக்கவும்.

இந்துக்கள் எல்லோரும் ஒரு குழந்தை பிறந்தவுடன் செய்யும் முதல் காரியம், அந்த குழந்தையின் ஜாதகத்தைக் கணிப்பது. ஜாதகம் என்பது அந்த குழந்தை பிறந்தபோது இந்த சூரியன் உட்பட்ட நவகிரகங்களும் ஆகாயவீதியில் எந்தெந்த இடத்தில் இருந்தன என்ற ஒரு குறிப்பு.




அந்த நவக்கிரகங்களிலிருந்து வரும் கதிர் வீச்சுகள் ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கின்றன என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தோம். இந்த விஞ்ஞான உண்மைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பாகவே நம் நாட்டு ஞானிகள் இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு அதை ஜோதிட சாஸ்திரமாக நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

நவக்கிரகங்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறதல்லவா, அவைகள் இடம் மாறும்போது அவைகளிடமிருந்து வரும் கதிர்வீச்சுகளும் மாறும் அல்லவா, அப்படி கதிர்வீச்சுகள் மாறும்போது மனிதர்களின் மேல் அவைகள் ஏற்படுத்தும் விளைவுகளும் மாறும் அல்லவா, இந்த சமாசாரங்களைத்தான் ஜோசிய சாஸ்திரம் சொல்கிறது.

இந்த சாஸ்திரத்தை நன்கு கற்றுத்தேர்ந்த பண்டிதனால் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களையும் துல்லியமாக கணித்து சொல்ல இயலும்.



தொடரும்.....

சனி, 6 மார்ச், 2010

அப்பாடா, ஒரு வழியாக நித்திய ஆனந்த சுனாமி ஓய்ந்தது!




பெரியவரின் புண்ணியத்தில் ஒரு வழியாக சன் டிவி சுனாமி ஓய்ந்தது. இன்னும் இரண்டு மூன்று நாளில் மேட்டர் கோர்ட்டுக்கு போய்விடும். பிறகு ஒருவரும் வாயைத்திறக்க முடியாது. அதற்குள் நாம் சில விஷயங்களை யோசிப்போம்.


எப்படி இந்த சாமியார்களுக்கு மவுசு வருகிறது? இன்றைய நிலையில் பெரும்பாலான ஜனங்கள் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள். பணம், வீடு, வாசல், மனைவி, மக்கள், தோப்பு, துரவு என்று இருந்தாலும் அவர்கள் ஆழ்மனத்தில் ஒரு வெறுமை அல்லது பச்சாதாபம் அல்லது குற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. பல காரணங்களினால் அவர்களால் மனைவி மக்களுடன் வெளிப்படையாகவும் மனம்விட்டு பேசமுடிவதில்லை. உறவினர்களுடன் நல்ல முறையில் பழகமுடிவதில்லை. மனம்விட்டு பேசக்கூடிய நண்பர்களை வளர்க்கவில்லை.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்குத் தேவையான மன ஆறுதல் கிடைக்காததால் அதைத்தேடும்போது இந்த சாமியார்கள் அவர்களுக்கு தேவையான ஆறுதலை தருகிறார்கள். சாமியார்கள் எல்லோரும் நல்ல மனோதத்துவ நிபுணர்கள். இந்த மாதிரி வரும் நபர்களுக்கு எப்படி, எதைச்சொன்னால் அவர்கள் மயங்குவார்கள் என்று நன்றாகத் தெரியும். அந்தந்த பக்தர்களுக்கு அவரவர்கள் தேவைக்கு ஏற்ப அருள் வழங்கி அவர்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்துவிடுகிறார்கள். அவர்கள் வலையில் சிக்கியவர்கள் வெளியில் வருவது மிகவும் கடினம்.




இப்படி வலைக்குள் விழுந்தவர்களிடம் அவர்களிடம் இருந்து என்ன கறக்க முடியுமோ அதைக்கறப்பதில் இந்த சாமியார்கள் வல்லவர்கள். பணம் இல்லாதவர்களிடம் உழைப்பைக் கறப்பார்கள். செல்வந்தர்களிடம் பணத்தைக் கறப்பார்கள். இந்த இரண்டிலும் சேராதவர்களிடம் என்ன கறப்பார்கள் என்பதை இந்த நான்கு நாட்களாக மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஒளி, ஒலி, எழுத்து, போட்டோ, வீடியோ, இன்டெர்நெட் ஆகிய எல்லா ஊடகங்களின் மூலமாகவும் பார்த்து அனுபவித்தோம்(!).



சாமியார்கள் அப்பாவி மக்களை நம்பவைத்து மோசடி செய்வது காலங்காலமாக நடந்து வந்தாலும், நம் மக்கள் அதிலிருந்து ஒரு பாடமும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. பைனான்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் திரும்ப திரும்ப அங்கே கொண்டுபோய் பணத்தைப் போடுவதும் அவன் ஏமாற்றி ஓடினபிறகு குய்யோ முறையோ என்று புலம்பிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் ஓடுவதும் ஆன இந்த டிராமா 6 மாதத்திற்கு ஒரு முறை அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அதே மாதிரி இந்த சாமியார்களின் டிராமாவும் நடந்துகொண்டேதான் இருக்கும்.


நம் ஜனங்கள் திருந்தப்போவதுமில்லை. சாமியார்களின் அட்டூழியங்களும் நிற்கப்போவதுமில்லை.

வியாழன், 4 மார்ச், 2010

ஒரே சவத்தை எத்தனை நாளைக்கி கட்டி எளவெடுக்கறது?

அய்யா பதிவர்மாருங்களே,



நித்யானந்தத்தை கட்டி அழுதது போறுமையா! வேற ஒண்ணும் காத்துக்கிட்டிருக்கையா. அதை மறந்துடாதீங்க? அந்தப்பக்கமும் போலாங்கையா!

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்


காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
இந்த பழமொழி யாவரும் அறிந்ததே. இத்துடன் கூட இன்னும் பலவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.




உதாரணத்திற்கு-
அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத்தட்டும். அதனால் அதிர்ஷ்டம் முதல் தடவை கதவைத்தட்டும்போதே கதவைத்திறந்து அதை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது மறுபடியும் நம் கதவைத்தட்டுவது அரிது.


ஆனால் நேற்றிலிருந்து வலைப் பதிவர்களின் நிலையைப் பாருங்கள். அதிர்ஷ்ட தேவதை அரை மணிக்கொரு தடவை கதவைத்தட்டாமலேயே உள்ளே வந்து உங்களுக்கு அருள் புரிகிறாள். இந்த அருள் பிரவாகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் உங்கள் இல்லம் ஒரே வெள்ளக்காடாகிவிடும். அதற்காகத்தான் இந்த பதிவு.


ஒரே ஆளின் படத்தையே போட்டால் போரடிக்காதா? அதற்காக ஒரு மாறுதல்

புதன், 3 மார்ச், 2010

பதிவுலகத்திற்கு இன்று ஒரு பிளாட்டின நாள்



ஆஹா, 3-3-2010 ஆகிய இன்றைய நாள் பதிவுலகத்திற்கு ஒரு பிளாட்டின நாள். (எத்தனை நாட்களுக்குத்தான் பொன் நாள் என்றே சொல்லிக்கொண்டு இருப்பது). நேற்று இரவு 8.30 மணி சன் நியூஸ் ஒளிபரப்பானதிலிருந்து பதிவர்கள் ஒருவரும் தூங்கவே இல்லை. அவரவர்கள் தங்கள் பதிவுகளை போட்டபின் அடுத்த பதிவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்து, அவர்கள் வேண்டியவர்களாயிருந்தால் ஒரு + ஓட்டும், பின்னூட்டமும் போட்டுவிட்டு உடனே நம்முடைய பதிவில் ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று செக் பண்ணிவிட்டு, அப்படி ஏதாவது பின்னூட்டம் வந்திருந்தால் அதற்கு எதிர்வினை போட்டுவிட்டு, பிறகு மற்ற பதிவுகளுக்கு ஓடி, இப்படியாக ராத்திரி பூராவும் முழித்திருந்து ஓவர்டைம் வேலை செய்தார்கள்.

கொஞ்ச நாட்களாகவே பதிவுலகம் மிகவும் டல்லாகிப்போய் விட்டது. டோண்டு, போலி டோண்டு விவகாரம் சுவாரஸ்யமாக பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது (டோண்டு ராகவன் மன்னிப்பாராக). அதன் பிறகு ஜ்யோவ்ராம் சுந்தரும் இன்னொருவரும் குஸ்தி பழகி சுந்தர் ஆஸ்பத்திரி போய் வந்ததில் பதிவுலகம் கொஞ்ச நாள் நன்றாக இருந்தது. அப்புறம் நம் ஜோக்கர் பதிவர் அவ்வப்போது வெறும் வாயை மெல்லுவதற்கு அவல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரையும் சொஞ்ச நாட்களாக காணவில்லை. பதிவுலகம் ரொம்பவுமே டல்லடித்துக்கிடந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக, அநாதரட்சகனாக, அவதார புருஷனாக வந்து கைகொடுத்த நித்திய ஆனந்தனுக்கு பதிவர்கள் எல்லோரும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். அவரை நமக்கு அடையாளம் காட்டிய சன்நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் பதிவர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.




நிற்க, ஒரு சமயம் ஆனந்தர் நம் சகாயத்திற்கு வராமலிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். பதிவிடுவதற்கு இது மாதிரி வேறு விஷயம் கிடைக்குமா? எவ்வளவு பதிவுகள், பின்னூட்டங்கள், எதிர்வினைகள் ? ஒவ்வொரு பதிவரும் நாம் இந்த ரேசில் கலந்து கொள்ளாவிட்டால் நம் ஜன்மம் சாபல்யமடையாது என்ற ஒரே நோக்கத்துடன் பதிவுகள் போட்டுவிட்டார்கள். இன்னும் பதிவு போடாதவர்கள் வெளிநாட்டு பதிவர்களும் பெரும்பான்மையான பெண் பதிவர்களும்தான். நான் நேற்றே 8.30 மணி செய்தி வெளியான சில நிமிடங்களில் 8.40க்கு என் பதிவைப்போட்டுவிட்டேன். அநேகமாக நான்தான் பர்ஸ்ட் ஆக இருக்கலாம். சரி, இனி என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ஏன் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்கலாமே என்று தோன்றியது. நமக்கு வழக்கமாக நாலு ரவுண்டு போட்டால்தான் சரிப்படும். இரண்டாவது ரவுண்டு ஆரம்பித்துவிட்டேன். ஜாயின் பண்ணுபவர்கள் ஜாயின் பண்ணலாம்.

ஜோசியர் குடும்பம் விபத்துக்குள்ளான பரிதாபம்




கோவை : குழந்தைக்கு "சோறு ஊட்ட' குருவாயூர் கோவிலுக்கு சென்றபோது, போலீஸ் ஸ்டேஷன் எதிரே நடந்த விபத்தில், மாருதி ஆம்னியில் பயணித்த ஜோதிடர் குடும்பம், நண்பர் குடும்பம் என ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.



பாலக்காடு அருகேயுள்ள மங்கலத்தைச் சேர்ந்தவர் தினேஷ்(29); ஜோதிடர். இதே பகுதியைச் சேர்ந்த தீபா(25)வை காதல் திருமணம் செய்துகொண்டார். இரு ஆண்டுகளுக்கு முன் மனைவியுடன் கோவை வந்தவர், ஆர்.எஸ்.புரத்தில் தங்கி ஜோதிடம் பார்த்து வந்தார். இவரது ஆறுமாத குழந்தை லட்சுமிஸ்ரீக்கு, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், "சோறு ஊட்டல்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நெருங்கிய நண்பரும், பீளமேடு தண்ணீர்பந்தல், விக்னேஷ் நகரில் வசிக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியருமான சீனிவாசன் குடும்பத்தினரை மட்டும் அழைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மாருதி ஆம்னி வேனில், தினேஷ் மற்றும் சீனிவாசன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர், குருவாயூர் புறப்பட்டுச் சென்றனர். ஆம்னி வேனை கால்டாக்சி டிரைவர் மது ஓட்டினார்.

நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் வேன், பாலக்காடு கஸ்பா போலீஸ் ஸ்டேஷன் எதிரே சென்றபோது, எதிரே பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த லாரி மோதியது. விபத்தில், ஜோதிடர் குடும்பம் சென்ற மாருதி ஆம்னி வேன் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த ஜோதிடர் தினேஷ்(29), இவரது மனைவி தீபா(25), ஆறு மாத குழந்தை லட்சுமிஸ்ரீ, நண்பர் சீனிவாசன்(39), இவரது மனைவி சரிதா(30), இவர்களது மகன் ஹனிஷ்கிருஷ்ணா(6) மற்றும் கார் டிரைவர் மது(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். தகவல் அறிந்த இரு வீட்டாரின் உறவினர்கள் பாலக்காடு புறப்பட்டுச் சென்றனர். பாலக்காடு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நொறுங்கிக் கிடந்த வேனில் இருந்து, இறந்தவர்களின் நசுங்கிய உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இவர்களில், ஜோதிடர் குடும்பத்தினரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின், பாலக்காட்டில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கம்ப்யூட்டர் இன்ஜினியர் சீனிவாசன்,அவரது மனைவி மற்றும் மகன் உடல்கள் நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
நன்றி; தினமலர் கோவைப்பதிப்பு


இந்த விபத்தை மக்களின் அறியாமை என்று சொல்வதா? அல்லது விபத்துக்கள் மற்றவர்களுக்கு ஏற்படுபவை, நான் அதற்கு அப்பாற்பட்டவன் என்ற இறுமாப்பா? அல்லது விதியின் வலிமை என்பதா? அல்லது ஜோசியம் அவரவர்களுக்கு பலிக்காது என்று கொள்வதா?
இந்த விபத்தை எந்த வகையில் சேர்க்கமுடியும்?

செவ்வாய், 2 மார்ச், 2010

சாமியார்களின் லீலைகளும் ஏமாறும் மனிதர்களும்





சாமியார்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் அவர்களும் மனிதர்கள்தான். சாதாரண மனிதர்களுக்கு உண்டான அனைத்து ஆசாபாசங்களும் அவர்களுக்கும் இருப்பது இயற்கை. ஆனால் நாம்தான் அவர்களுக்கு அமானுஷ்யமான சக்திகள் இருப்பதாகவும், அவர்கள் உலக ஆசாபாசங்கள் அற்றவர்கள் என்றும், அவர்கள் உலகநடைமுறையிலிருந்து வேறுபட்டவர்கள் என்றும் நம்பி அவர்கள் விரிக்கும் வலையில் விழுகிறோம். தவறு யாருடையது? விளக்கு வெளிச்சத்திற்கு மயங்கி விட்டில் பூச்சி விழுந்து மடிவது விளக்கின் குற்றமா? யோசியுங்கள் !

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

டீலா நோடீலா

இன்று காலை மார்க்கெட்டில் காய் வாங்கிக்கொண்டு இருந்தேன். பக்கத்து கடையிலிருந்து திடீரென்று ஒரு குரல் – “டீலா,நோ டீலா” என்று கேட்டது. எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என்னடா இது, காலங்கார்த்தாலயே மார்க்கெட்டிலே இந்த ஷோ நடக்குதா என்று எட்டிப்பார்த்தேன். ஒன்றுமில்லை. பக்கத்து வெங்காயக்கடைக்காரர் ஒருத்தருக்கு விலை சொல்லியிருக்கிறார். அவர் கொஞ்சம் தயக்கம் காட்டியிருக்கிறார். உடனே கடைக்காரர் “டீலா,நோ டீலா” என்று கேட்டு பேரத்தை முடிக்க அவசரப்படுத்தியிருக்கிறார். டி.வி. சீரியல் எப்படி மக்களைச் சென்றடைகிறது பார்த்தீர்களா.




மார்க்கெட்டிலிருந்து திரும்பி வரும்போது என்னுடைய கற்பனைக்குதிரை ஓட ஆரம்பித்தது. இந்த “டீலா நோடீலா” வை எங்கெல்லாம் பிரயோகம் ஆகலாம் என்று யோசித்தேன்.
1. காலேஜ் படிக்கும் பையன் அவன் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா, அம்மா, என் கூட படிக்கும் பையன்கள் எல்லாம் பைக் வைத்திருக்கிறார்கள் அம்மா, அப்பாகிட்ட சொல்லி எனக்கும் ஒரு பைக் வாங்கிக்கொடுக்க சொல்லம்மா, என்கிறான். அம்மா சொல்கிறாள், திடீரென்று அவ்வளவு பணத்திற்கு அப்பா என்ன செய்வார் என்கிறாள்.
பையன் கத்துகிறான்- “டீலா,நோடீலா” – எனக்கு இப்பவே கேட்டுச்சொல்லு.

2. மனைவி கணவனிடம் மெதுவாக,
ஏனுங்க அடுத்த மாதம் என் மாமா பையன் கல்யாணம் வருதுங்க.

ஆமா, அதுக்கென்ன இப்போ?




கட்டிட்டு போறதுக்கு நல்லதா ஒரு புடவையும் இல்லீங்க, ஒரு பட்டுப்புடவை வாங்கலாங்க.

இங்கெ எங்க காசு கொட்டுக்கிடக்குது, நெனச்சப்ப பட்டுப்புடவை வாங்க.

“டீலா,நோடீலா”, நேரா சொல்லுங்க.

3. பள்ளிப்பையன் சக மாணவனிடம், டேய் இண்ணைக்கு சினிமா போகலாமா?

சக மாணவன் –பார்க்கலாம்.

முதல் மாணவன்- டேய் டீலா,நோடீலா?


உலகம் ரொம்ப வேகமாப்போய்ட்டிருக்கு, நம்மாலதான் அதுகூட ஓடமுடியலை.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சூரியாஸ்தமனக்கூத்து - தொடர்ச்சி

“ஆஹா, சூரியன் மறைய ஆரம்பித்துவிட்டான் ................................................................ அனைவரும் இப்போதுதான் மூச்சை விட்டார்கள்.”

இப்படி எழுத எனக்கும் ரொம்ப ஆசைதான். பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் சூரியாஸ்தமனக்காட்சியின் வர்ணணை பத்தாம் வகுப்பில் படித்தது இன்னும் மறக்கவில்லை. ஆனால் நாங்கள் கொடுத்து வைத்திருக்கவில்லை.

சூரியாஸ்தமனத்திற்கு இன்னும் 15 நிமிடமே இருக்கும்போது மெள்ள மெள்ள மேகங்கள் சூரியனை மறைக்க ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்குள் சூரியன் முழுவதுமாக மறைந்துவிட்டது. அவ்வப்போது சூரியனின் கதிர்கள் மேகங்களின் இடைவெளியில் எட்டிப்பார்த்தன. பிறகு முற்றிலுமாக மறைந்து போனான். எல்லோருமாக இந்த பாழாய்ப்போன மேகங்களைத்திட்டி விட்டு ரூமுக்கு திரும்பினோம்.

வரும் வழியில் ஒரு ஓட்டலில் 37 ரூபாய் வீதம் ஆளுக்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு பக்கத்திலுள்ள ஆவின் பூத்தில் ஒரு டம்ளர் பால் குடித்தோம். அங்கு பார்த்தால் ஒரு தட்டி விலாஸ் ஓட்டலில் சுடச்சுட ஊத்தப்பமும் பரோட்டாவும் சுட்டுக்கொண்டிருந்தாரகள். சும்மா விலை கேட்போமென்று விலை கேட்டேன். நாலு ஊத்தப்பம் அல்லது நாலு பரோட்டாவின் விலை சட்னி, குருமாவுடன் 10 ரூபாய் என்று சொன்னார்கள். வட இந்திய டூரிஸ்ட்டுகள் வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்தார்கள். அடடா, முன்னால் இதைப்பார்த்திருந்தால் பார்சல் வாங்கிக்கொண்டு ரூமில் போய் சாப்பிட்டிருக்கலாமே என்று நினைத்துக்கொண்டோம்.

ரூமில் நன்றாகத் தூங்கினோம். காலையில் எழுந்து குளித்துவிட்டு அங்குள்ள கேன்டீனில் சாப்பிடலாம் என்று முடிவு செய்து ரிசப்ஷனில் விலை விசாரித்தோம். ரிசப்ஷனிஸட் சொன்னார், “சார் காலை டிபன் கெஸட் ஹவுஸின் காம்ப்ளிமென்டரி ட்ரீட் சார், அதுவும் பஃபே சிஸடம் சார் ” என்றார். ஆஹா பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆயிற்று என்று சந்தோஷமாகப்போய் இரவு சரியாக சாப்பிடாததையும் சேர்த்து ஒரு வெட்டு வெட்டினோம்.



பிறகு விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம், அதற்குள் (திருச்செந்தூரில் இளைத்த பர்ஸை சரி செய்வதற்காக) அருகில் இருந்த ஒரு ஏ.டி.எம்மில் பணம் எடுக்கலாம் என்று போனேன்.. கார்டைப்போட்டு பின் நெம்பரை அழுத்தினால் ‘இன்று நீங்கள் பணம் எடுத்துக்கொள்வதற்கான கோட்டா’ முடிந்து விட்டது’ என்று பதில் வந்தது. எனக்கு மயக்கம் வராத குறைதான். போச்சு, நம்ம பணம் ‘ஹோகயா’ தான் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது காலை 81/2 மணி. பக்கத்திலுள்ள பேங்கில் விசாரிக்கலாம் என்றால் பேங்க் 10 மணிக்கு மேல்தான் திறப்பார்கள். சரி ஆனது ஆகட்டும், நம்ம புரொகிராமை முடிக்கலாம் என்று படகுத்துறைக்கு போனாம். எல்லோருக்கும் டிக்கட் வாங்கினேன். டிக்கட் விலை 20 ரூபாய் என்றார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு போனபோது அதிக விலை கொடுத்த்தாக ஞாபகம். சரி, சர்க்காருக்கு கருணை பிறந்து டூரிஸ்டுகளுக்கு சலுகை காட்டுகறார்கள் போலும் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்த்து, திருவள்ளுவர் சிலைக்கு படகு போவதில்லை என்று.



விவேகானந்தர் பாறைக்கு போய்விட்டு 91/2 மணிக்கெல்லாம் கரைக்கு திரும்பிவிட்டோம். வரும்போதே யோசித்தேன். இனி பார்க்கவேண்டியது சுசீந்திரம் கோவில் மட்டுமே. அதற்கு ஒரு முக்கால் மணி நேரம் ஆகும். பிறகு ஊருக்குப்போய் விடலாமே என்று தோன்றியது. மேலும் பர்ஸும் பிழைக்கும். ஆகவே கன்னியாகுமரியில் இரண்டு நாள் தங்கலாம் என்று போட்ட பிளானைக் கேன்சல் செய்து விட்டு ரூமைக்காலி செய்தோம்.

சரியாக 10 மணிக்கு புறப்பட்டு சுசீந்திரம் சென்று தரிசனம் செய்தோம். அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டோம். எங்கும் நிற்காமல் 2 மணிக்கு கோவில்பட்டி வந்து சேர்ந்தோம். நல்ல சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று விசாரித்ததில் ‘லக்ஷ்மி மெஸ்ஸில்’ சாப்பாடு நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். நிஜமாகவே அங்கு சாப்பாடு நன்றாகவே இருந்தது.
சாப்பிட்டுவிட்டு கோவில்பட்டியில் கடலை மிட்டாய் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். எந்த கடையில் நன்றாக இருக்கும் என்று விசாரித்ததில் மார்க்கெட் ரோட்டில் கே.டி.ஆர். என்கிற கடையில் நன்றாக இருக்கும் என்றார்கள். அந்தக்கடையை தேடிக்கண்டு பிடித்து போனால் அந்தக்கடை பார்ப்பதற்கு ரொம்ப சாதாரணமாகத்தான் இருந்த்து. கடலை மிட்டாய் வேண்டும் என்று கேட்டதற்கு கடைக்காரர் ‘சார், ஆட்கள் எல்லாம் சாப்பிடப் போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து மிட்டாய் போட்டபிறகுதான் கிடைக்கும்’ என்றார். ஆஹா, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாக்கடைக்காரருக்கு அண்ணன் போலிருக்கு என்று முடிவு செய்து, சரி இப்போதைக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கொடுப்பினை இல்லை என்று நினைத்துக்கொண்டு நேராக கோவையை நோக்கி புறப்பட்டோம்.

டிரைவர் எங்கும் சாப்பிடவில்லை. ஒரே சீராக வண்டி ஓட்டினார். மாலை 8 மணிக்கு சுகமாக வீடு வந்து சேர்ந்தோம். மகள் சூடாக சாதம் செய்து வைத்திருந்தாள். சாப்பிட்டுவிட்டு செந்திலாண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தூங்கினோம்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

கன்னியாகுமரி... தொடர்ச்சி

(மூன்றாம் நாள்)
திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வந்து சேர்ந்து ரெஸ்ட் எடுத்தபின் மாலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி அம்மனைத்தரிசிக்க சென்றோம். கூட்டம் அதிகமாக இல்லை. ஒரு அரை மணி நேரத்தில் தரிசனம் முடிந்த்து. அடுத்த வேலைதான் இந்த டுரிலேயே முக்கியமான வேலை. அதாவது சூரியாஸ்தமனம் பார்ப்பது.
இந்தியா முழுவதுமிலிருந்து டூரிஸ்ட்டுகள் கன்னியாகுமரி வருவது இதற்காகத்தான். அன்று கன்னியாகுமரியிலிருந்த அத்தனை டூரிஸ்ட்டுகளும் அந்த பீச் ரோட்டில் மேற்கு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். நாங்களும்தான். நீல வானமும் கடலும் சேரும் அடிவானம் நன்கு தெரியும்வரை மேற்கே சென்றோம். அந்த இடத்தில் உயரமாகச்சென்று அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக ஒரு டவர் கட்டிவைத்திருக்கிறார்கள். அதனுடைய உயரத்தைப் பார்த்தவுடன் அதன் மேல் ஏறும் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டோம்.
ரோடு ஓரமாக சிமெண்ட்டு தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கே உட்கார்ந்து சூரியனை சௌகரியமாக பார்த்து ரசிக்கலாம். ஆனால் ஒரு அசௌகரியம். நமது மக்கள் எங்கும் அவர்களது காலைக்கடன்களை முடித்து வைத்திருக்கிறார்கள். உள்ளூர் ஜனங்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மூன்று நாளில் முப்பது க்ஷேத்திரங்கள் என்று நம் மக்களை பஸ்களில் புறிமூட்டை போல் அடைத்துக்கொண்டு வரும் நம் டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் பண்ணும் சமூகசேவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எப்படியோ ஒரு மாதிரி ஒரு இடத்தைக்கண்டுபிடித்து நின்றுகொண்டோம். சூரியன் மறைவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்த்து. நாங்களும் சூரியனைப்பார்ப்பதும் கண் ரொம்ப கூசினால் வேறு பக்கம் பார்ப்பதுமாக இருந்தோம்.


இந்தப்படம் கோவையில் என் வீட்டில் இருந்து எடுத்தது. பழைய படங்கள் கம்ப்யூட்டர் வைரஸ சூறாவளியில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன.

“ஆஹா, சூரியன் மறைய ஆரம்பித்துவிட்டான். எங்கும் செவ்வானம். இதோ சூரியன் கடலைத்தொட்டு விட்டான். தகதகவென்று கண்ணைக்கூச வைத்துக்கொண்டிருந்த சூரியன் இப்போது கண்ணுக்கு மிகவும் இதமாக செக்கச்செவப்பாக தெரிகிறான். கால்வாசி கடலுக்குள் முழுகிவிட்டான். இப்போது பாதி சூரியன் கடலுக்குள்ளும் பாசி வெளியேயுமாக காணக்கிடைக்காத அபூர்வக்காட்சி. முக்கால் சூரியன் கடலுக்குள். ஒரு கீற்றுதான் இப்போது தெரிகிறது. ஓஓஓ சூரியன் முழுவதுமாக கடலுக்குள் போய்விட்டான். மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் இப்போதுதான் மூச்சை விட்டார்கள்.”
தொடரும்.....

சனி, 20 பிப்ரவரி, 2010

கன்னியாகுமரியும் சூரியாஸ்தமனமும்.

(மூன்றாம் நாள்)
திருச்செந்தூரில் காலை 10 மணிக்கு புறப்பட்டு 111/2 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வந்து சேர்ந்தோம். நெல்லையப்பரையும் காந்திமதி அம்மனையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தோம்.

கோயமுத்தூரிலிருந்து புறப்படும்போதே எனது மகள் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வாங்கிக்கொண்டு வருமாறு சொல்லியிருந்தாள். விசாரித்ததில் அந்த அல்வா கடை நெல்லையப்பர் கோவில் எதிரில் இருப்பதாக சொல்லியிருந்தார்கள். சரி, அந்த கடையைப்பார்க்கலாம் என்று விசாரித்து கடையைக்கண்டு பிடித்தோம். கடை மூடியிருந்த்து. அக்கம் பக்கம் விசாரித்த்தில் அந்த கடை காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே திறப்பார்கள் என்றும் அந்த சமயங்களிலும் கூட்டமாக இருக்கும் என்றும் சொன்னார்கள். ஆஹா, இந்த அல்வா நமக்கு உதவாது என்று முடிவு செய்து அங்கிருந்து பஸ் ஸ்டேண்ட் வந்தோம். அங்கு இரண்டு மூன்று கடைகள் இருந்தன. அதில் கூட்டம் அதிகமாக இருக்கும் கடைக்குப்போய் (கூட்டம் அதிகமாக இருக்கும் கடையில்தான் சரக்கு புதிதாகவும் நன்றாகவும் இருக்குமாம்-என் இல்லத்தரசியின் அபிப்பிராயம்) 5 கிலோ அல்வா வாங்கினோம். எதற்கு இவ்வளவு என்று கேட்காதீர்கள். ஊரில் எல்லோருக்கும் அல்வா (?) கொடுக்கவேண்டுமல்லவா!

இதற்குள் பகல் ஒரு மணி ஆகிவிட்டது. எங்கேயாவது சாப்பிடலாம் என்று முடிவு செய்தவுடன் எங்கள் டிரைவர் கன்னியாகுமரி போகும் பைபாஸ் ரோட்டில் ஆர்யபவன் இருக்கிறது, அங்கேயே சாப்பிடலாம் என்றார். சரி என்று அங்கே சென்று சாப்பிட்டோம். சாதம் வெள்ளை வெளேர் என்று கண்ணைப்பறித்த்து. சரி ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அப்போதுதான் தெரிந்தது அது சாதம் அல்ல, அரிசியை வெந்நீரில் ஊறவைத்து இலையில் போட்டிருக்கிறார்கள் என்று.

என்ன செய்யமுடியும். எப்படியோ சாப்பிட்டோம் என்று பெயர் பண்ணிவிட்டு கன்னியாகுமரி புறப்பட்டோம். சாதாரணமாக சாப்பிட்டு விட்டு காரில் போனால் தூக்கம் சுகமாக வரும். ஆனால் அன்று வயிறு நிரம்பாததால் யாருக்கும் தூக்கம் வரவில்லை.

மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அடைந்தோம். தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் நடத்தும் ரெஸ்ட் ஹவுஸில் ரூம் ரிசர்வ் செய்திருந்தோம். ரூம் வாங்கி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வெளியில் புறப்பட்டோம். கன்னியாகுமரி அம்மனையும் சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பதாக பிளான்.
மிகுதி தொடரும்....

புதன், 17 பிப்ரவரி, 2010

திருச்செந்தூரில் ஆட்சி புரிவது யார்?

(மூன்றாம் நாள்)
[இந்த தலைப்பிலுள்ள விஷயத்திற்கு போவதற்கு முன்பாக இந்த பதிவை தொடர்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இடப்போகிறவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்ளுகிறேன். இந்த பதிவுலகத்தில் நான் நுழைய காரணமாய் இருந்த என் நண்பர் டாக்டர் நாராயணனுக்கு என் தனியான நன்றி.
இந்த பதிவுலகத்தில் வேடிக்கை பார்க்கத்தான் நுழைந்தேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இதிலேயே மூழ்கிவிட்டேன். என்னுடைய பதிவுலக அனுபவம் ரொம்பவும் கம்மி. ஒரு வருடம் கூட முடியவில்லை. யாரையும் கேட்காமல் நானே கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையைக்  (மண்டைக்கனம்!) கடைப்படிப்பதால் நான் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. ]
காலையில் எழுந்து ரூமிலேயே குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றோம். ஊரிலிருந்து புறப்படும்போதே என் மாப்பிள்ளை ஒரு அர்ச்சகரின் போன் நெம்பரைக்கொடுத்து திருச்செந்தூர் போன்வுடன் அவரை தொடர்பு கொண்டால் அவர் தரிசனத்திற்கு உதவி செய்வார் என்று சொல்லியிருந்தார்.
நாங்களும் முன்தினம் பகலிலிருந்தே அவரிடம் தொடர்பு கொண்டிருந்தோம். அவரும் திருச்செந்தூர் வந்தவுடன் பேசச்சொன்னார். அப்படியே நாங்கள் தொடர்பு கொண்டவுடன் மறுநாள் காலையில் 81/2 மணிக்கு கோவிலின் முன் மண்டபத்திற்கு வரச்சொன்னார். வந்தபிறகு அவரை செல்போனில் கூப்பிட்டால் வந்து எங்களை தரிசனத்திற்கு அழைத்துப்போவதாகவும் சொன்னார்.

அதன்படியே நாங்கள் சரியாக 81/2 மணிக்கு கோவில் முன் மண்டபத்தில ஆஜரானோம். அங்கே டஜன் கணக்கில் அர்ச்சகர்கள் எங்களை முற்றுகையிட்டு ஒவ்வொருவரும் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள். நாங்கள் முன்பே ஏற்பாடு செய்து விட்டோம் என்று சொல்லி அந்த அர்ச்சகரின் பெயரைச்சொன்னவுடன் எல்லோரும் பயபக்தியுடன் ஒதுங்கி வழி விட்டார்கள். அப்போதுதான் எங்கள் அர்ச்சகரின் பிரதாபம் எங்களுக்குப்புரிந்தது. கூடவே என் பர்ஸ் கணிசமாக இளைக்கப்போகிறது என்கிற உண்மையும் புரிந்தது.
முன் மண்டபம்

கோவில் முழுவதும் ஜே ஜே என்று கூட்டம். எங்கு பார்த்தாலும் மனித தலைகளைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்தக்கூட்டத்தில் நம் அர்ச்சகர் நமக்கு எப்படி தரிசனம் செய்து வைக்கப்போகிறார் என்கிற பயம் வேறு சேர்ந்துகொண்டது. அர்சகருக்கு போன் போட்டோம். அவர் மூலகர்ப்பக்ரகத்தினுள் இருந்திருக்கிறார். நான் பேசுவது அவருக்கு புரியவில்லை. அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை. அவரை நாங்கள் முன்பின் பார்த்ததில்லை. ஆனாலும் அந்த அர்ச்சகர் எங்களைப்போல் எத்தனை இளச்சவாயன்களைப் பார்த்திருப்பார். நான் போன் பண்ணின 5வது நிமிடத்தில் எங்கள் முன்னே வந்து நீங்கதானே கோயமுத்தூர் பார்ட்டி என்று எங்களைப் பிடித்துவிட்டார். (எங்கள் நெற்றியிலேயே எழுதி ஒட்டியிருக்கும் போல).
எங்களிடம் அவர் ‘என் பின்னாலேயே வாங்கோ, கூட்டம், நெரிசல் அதையெல்லாம் கண்டுக்கப்படாது. யார் என்ன சொன்னாலும் காதிலே வாங்கிக்காம ஒருத்தருக்கொருத்தர் இடைவெளி விடாம என் பின்னாலயே வாங்க இப்படி சொல்லிவிட்டு விருவிரு என்று முன்னால் போனார். நாங்களும் அவர் சொல்லிக்கொடுத்தபடியே ‘கருமமே கண்ணாகஎல்லோருடைய திட்டுகளைப்பொருட்படுத்தாது அவர் பின்னாலேயே போனாம். போனால் சிறிது நேரத்தில் கர்ப்பக்ரக வாசலில் நிற்கறோம். அர்ச்சகர் என் சம்பந்தி கையில் ஒரு அர்ச்சனைத்தட்டைக்கொடுத்துவிட்டு எல்லோர் பேர், நட்சத்திரம் சொல்லுங்கோங்கிறார். எங்களுக்கு இருந்த பதட்டத்தில் எப்படியே தட்டுத்தடுமாறி எல்லோருடைய பெயர் நட்சத்திரம் சொன்னோம்.
அர்ச்சகர் நாங்கள் சொல்லச்சொல்ல அந்தப்பெயர் நட்சத்திரங்களைத் திருப்பிச்சொன்னார். அதுதான் அர்ச்சனை. ஒரு குரூப் உட்கார்ந்து கொண்டிருந்ததை ‘போதும் எழுந்திருங்கோ என்று கிளப்பிவிட்டு அந்த இடத்தில் எங்களை உட்காரவைத்தார். நன்னா சாமிதரிசனம் செய்துக்கோங்க என்று மூன்று முறை சொல்லிவிட்டு எங்களை எழுப்பி விட்டார். ஆனாலும் சும்மா சொல்லப்படாது. அர்ச்சகருக்கு கோயிலுக்கு உள்ளே செம இன்பளூயென்ஸ். கர்ப்பக்ரகத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஆளுக்கு ஒரு மாலையைக்கொடுத்து (எங்கேயிருந்து எப்படி புடிச்சாருன்னு தெரியல) போட்டுக் கொள்ளச்சொன்னார். எனக்கு இந்த மாதிரி, கோயிலில் மாலை போட்டுக்கொள்வதில் விருப்பமில்லை. காரணம், சாமிக்கு போட்டமாலை புனிதமானது. அதை நாம் போட்டுக்கொண்டால் பிற்பாடு அதை என்ன செய்வது? அதை பத்திரமாக ஊருக்கு எடுத்துவந்து அது காய்ந்து சருகாகும் வரை காத்திருந்து பிற்பாடு அதை ஆறு குளம் கிணறு ஆகிய நீர்நிலைகளில் விடவேண்டும். இந்த சமாசாரமெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது. ஆகவே இப்படி மாலைகளைத் தவிர்த்து விடுவது என் வழக்கம்.
பிறகு நீங்கள் எல்லாம் வெளியில் சென்று நாம் புறப்பட்ட இடத்தில் இருங்கள். யான் பிரசாதம் எல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று எங்களை அனுப்பினார். நாங்கள் வெளியில் வந்த 15 நிமிஷத்தில் அவரும் வந்து பிரசாதம் எல்லாம் கொடுத்துவிட்டு எப்படி எல்லாம் திருப்திதானே என்றார். நாங்கள் என்ன சொல்லமுடியும், ஆஹா பரமதிருப்தி என்று சொல்லிவைத்தோம். அவருக்கு வேண்டியது அந்த வார்த்தைதானே.
சரி, நாங்கள் உத்திரவு வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு ஒரு தொகையைக்கொடுத்தோம். அவர் அதை வாங்கிக்கொண்டு,  இத பாருங்கோ, நீங்க 5 பேர், உள்ளே போக ஆளுக்கு 100 ரூபாய், அப்புறம் செக்யூரிட்டி. தேவஸ்தானம் ஆபீஸ் இதெல்லாம் இருக்கு என்றார். சரி ஸ்வாமி, இன்னும் எவ்வளவு வேண்டும் என்றேன். முதலில் கொடுத்ததைப்போல் இன்னொரு பங்கு வேண்டும் என்றார். இந்தாங்கோ என்று அவர் கேட்டதைக் கொடுத்துவிட்டு தலை தப்பியது தம்பிரான் (செந்திலாண்டவன்) புண்ணியம் என்று ரூமுக்கு திரும்பினோம். ஆகவே எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள வேண்டியது என்னவென்றால் திருச்செந்தூரில் செந்திலாண்டவன் ஆட்சி செய்கிறான் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். செந்திலாண்டவன் அர்ச்சகர்கள் கைப்பிள்ளை. (அப்பாடா, எப்படியோ தலைப்பிற்கு சம்பந்தம் கொடுத்தாகிவிட்டது)
அன்றே கன்னியாகுமரி சேரவேண்டியிருந்த்தால் ரூமைக்காலி செய்து விட்டு கன்னியாகுமரி புறப்பட்டோம்.
தொடரும்....  

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்



11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்தோம். ஆண்டாள் சந்நிதியில் கூட்டமே இல்லை. திவ்யமான தரிசனம். ஆண்டாள் திருவுருவம் அலங்காரத்தில் அழகாக காட்சியளித்தாள். பொதுவாகவே தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் தவிர மற்ற பெருமாள் கோவில்களுக்கு மவுசு கொஞ்சம் கம்மிதான்.
பிறகு ஆண்டாள் அவதரித்த ஸ்தலத்திற்குப் போனோம். போன தடவை பார்த்ததற்கு இப்போது பரவாயில்லை. கொஞ்சம் சுத்தம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கிறார்ப்போல் இல்லை.
பெருமாளைச்சேவித்து துளசி தீர்த்தமும் சடாரியும் வாங்கிவிட்டு புறப்படும்போது மணி 12½ ஆகிவிட்டது. பசியும் வந்துவிட்டது. பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இராஜபாளையத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று புறப்பட்டோம்.

இராஜபாளையம் கொஞ்சம் பெரிய ஊர் என்றுதான் அங்கு சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் ஊர்தான் நீளமாக இருந்ததே தவிர ஒரு ஹோட்டல் கூட கண்ணில் படவில்லை. எல்லா ஹோட்டல்களையும் மெயின் ரோட்டிலிருந்து மறைத்து வைத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது. கையில் எடுத்துக்கொண்டு போன முறுக்கு இத்தியாதிகளை மென்றுகொண்டே போனால் வழியில் எந்த ஹோட்டலும் கண்ணில் படவில்லை. ஏறக்குறைய இரண்டு மணி ஆகிவிட்டது. பசி வந்துவிட்டு போய்விட்டது.

இப்படியே போய்க்கொண்டிருக்கும்போது தென்காசி 5 கி.மீ. என்ற மைல்கல் தெரிந்தது. சரி, தென்காசியில்தான் நமக்கு மதிய உணவுக்கு ஆண்டாள் ஏற்பாடு செய்திருக்கிறாள் போல என்று மனதைத்தேற்றிக்கோண்டோம். அங்கு விசாரித்து ஒரு நல்ல ஹோட்டலைக்கண்டு பிடித்து சாப்பிட்டோம். நிஜமாகவே உணவு நன்றாக இருந்த்து. ஆண்டாளுக்கு மனசிலே நன்றி  சொல்லிவிட்டு குற்றாலம் சென்றோம்.

நாம் எல்லோருமே பல விஷயங்களைப்பற்றி, ஊர்களைப்பற்றி ஒரு விதமான கற்பனை பண்ணி வைத்திருப்போம். ஆனால் நேரில் பார்க்கும்போது நம் கற்பனைக்கும் நிஜத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கும். நான் குற்றாலத்திற்குப் போய் பல வருடங்கள் ஆகின்றன. என் மனதிற்குள் ஒரு ரம்யமான அருவியும் இயற்கைக்காட்சிகளும் நிறைந்த ஒரு கற்பனை இருந்தது. ஆனால் நான் நேரில் கண்டதோ முற்றிலும் மாறுபட்டு  இருந்தது. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக், பழைய துணிகள், காலி ஷாம்பு பாக்கெட்டுகள் இறைந்து கிடந்தன.


நாங்கள் போன கோவில்களிலும் இப்படித்தான் இருந்தது. நம் மதத்தலைவர்கள் மத மாற்றம் பற்றி பிரமாதமாகப் பேசுவார்கள். ஒரு மதத்தலைவர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘ மதமாற்றம் ஒரு கிரிமினல் குற்றம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் மற்ற மதத்தினரின் வழிபாட்டு இடங்களையும் இந்து வழிபாட்டு இடங்களையும் ஒப்பிட்டு பார்த்து இந்து வழிபாட்டு இடங்களையும் சுத்தமாக வைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? தவிர இந்து தலித் மக்களை இந்த மத குருக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

குற்றாலம் வந்துவிட்டு குளிக்காமல் போகக்கூடாது என்று நான் மட்டும் அருவியில் குளித்தேன். என் கூட வந்த மற்றவர்கள் குளிக்கவில்லை. பிறகு அங்கிருந்து கிளம்பி நேராக நெல்லை வந்து சேர்ந்தோம். நெல்லையில் நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த ஓட்டலில் போய்க்கேட்டால் ரூம் இன்னும் காலியாகவில்லை, இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்கோ அலுப்பும் களைப்பும். எங்காவது உடம்பைக்கிடத்தவேண்டும் போல் இருந்தது. எப்படியும் அடுத்த நாள் திருச்செந்தூர் போவதாகத்தான் பிளான். இன்றே திருச்செந்தூர் போய்விட்டால் என்ன என்று முடிவு செய்து திருச்செந்தூர் சென்றோம். டாக்சி டிரைவர் ஒரு லாட்ஜுக்கு கூட்டிக்கொண்டு போனார் (சிவமுருகன் லாட்ஜ்). ரூம்கள் நன்றாக இருந்தன. வாடகையும் அதிகமில்லை. ஆகவே அங்கேயே ரூம் எடுத்து தங்கினோம். பக்கத்திலேயே மணிஅய்யர் ஓட்டல். டிபன் நன்றாகவே இருந்தது. சாப்பிட்டுவிட்டு படுத்தோம். பயண அலுப்பில் உடனே தூங்கி விட்டோம்.

 
பார்க்காமல் விட்ட தென்காசி விஸ்வநாதர் கோவில்


தொடரும்.....

புதன், 10 பிப்ரவரி, 2010

திருச்செந்தூர் பயணம்-2


தமிழ்நாடு சுற்றுலாத்துறை தங்கும் விடுதிகள்.
மதுரையில் நாங்கள் தமிழக சுற்றுலாத்துறை தங்கும் விடுதியில் தங்கினோம். இது ஒரு அரசுத்துறை நிறுவனம். அந்தத் துறைக்கே உரிய மெத்தனமும் அலட்சியமும் வெளிப்படையாகத் தெரிகிறது. வாடகையும் தனியார் விடுதிகளைக்காட்டிலும் அதிகமே. வேறு வழியில்லாமல் தங்க வேண்டியிருந்தது. இங்கே வாடகை வசூலில் முதியோர்களுக்கு ஒரு சலுகை கொடுக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாடகையில் 20 விழுக்காடு சலுகை தருகிறார்கள். வாடகைக்கான வரிக்கு இந்த சலுகை கிடையாது.
நாள் இரண்டு: காலையில் 7 ½ மணிக்கே புறப்பட்டு மீனாட்சி  கோவிலுக்கு சென்றோம்.
பொற்றாமரைக்குளம் தண்ணீர் இல்லாமல் வற்றி இருந்தது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகத்தான் போனது. இல்லாவிட்டால் அந்த தண்ணீரில் கைகால் கழுவ வேண்டியதாக இருக்கும்.
காலை 7 மணிக்கே கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. வடநாட்டு யாத்திரீகர்கள் கூட்டம் கூட்டமாக க்யூவில் நின்று கொண்டிருந்தார்கள். உடனே ஸ்பெஷல் தரிசன டிக்கட் வாங்கி சென்றால் அதிலும் கூட்டம். எப்படியோ ஒரு முக்கால் மணி நேரத்தில் மீனாட்சியைத் தரிசித்து விட்டு கால் மணி நேரத்தில் ஈஸவரனைத் தரிசித்து விட்டு வெளியில் வந்தோம்.
ஈஸ்வரன் சந்நிதிக்கு எதிரே ஒரு தூணில் அனுமார் புடைப்பு சிற்பமாக இருக்கிறார். நானும் அதை ஏறக்குறைய 35 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அந்த சிற்பம் வளர்ந்து கொண்டு வருவதாகத் தோன்றுகிறது.
வெளியில் (மேற்கு சித்திரை வீதியில்) தெரு ஓரத்தில் 10 ரூபாய்க்கு 4 இட்லி என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். ஆளுக்கு 4 இட்லி வாங்கி சாப்பிட்டுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க புறப்பட்டோம்.
தொடரும்....





புதன், 27 ஜனவரி, 2010

திருச்செந்தூர் பயணம்-1

(முதல் நாள்)
முருகன் பேரில் எனக்கு ஒரு விசுவாசம் – பக்தி. ஆகவே என்னுடைய சம்பந்தி திருச்செந்தூர் போய்விட்டு அப்படியே கன்யாகுமரியும் போய்விட்டு வரலாமே என்றவுடன் சரியென்று சொல்லிவிட்டேன்.
ஒரு நல்ல நாளில் ஒரு வாடகைக்கார் பேசி 

நாங்கள் ஐந்து பேர்கள் புறப்பட்டோம். முதலில் மதுரை சென்று ஒரு நாள் தங்கினோம். அன்று மாலை அழகர் கோவில் சென்று கல்லழகரை தரிசித்து விட்டு
பின்பு பழமுதிர்சோலை சென்றோம். முன்பு பழமுதிர்சோலைக்கு நடந்துதான் போகவேண்டும். இப்போது அழகான தார்ச்சாலை போடப்பட்டு இருக்கிறது. நாங்கள் சென்றபோது சாயரட்சை நடந்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து திரை விலக்கியபின் முருகனைத்தரிசித்தோம்.
அறைக்கு திரும்புவதற்குள் மீனாட்சியையும் தரிசிக்கலாம் என்ற திட்டம் இருட்டிவிட்டதால் கைவிடப்பட்டது.
தொடரும்...





வெள்ளி, 1 ஜனவரி, 2010

விவாதத்திற்கு உரிய விஷயங்கள்


விவாதத்திற்கு உரிய விஷயங்கள்
பட்டிமன்ற தலைப்புகளை பார்த்திருப்பீர்கள். எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடிய தலைப்புகளைத்தான் வைப்பார்கள்.
ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரியா தவறா?
கற்பில் சிறந்தவள் மாதவியா கண்ணகியா?
இவை பழைய கால தலைப்புகள்-
தற்கால தலைப்புகள் சில-
சிறந்த சைட் டிஷ் ஊறுகாயா அல்லது சிப்ஸா?
வருங்கால சூபர் ஸ்டார் யார்-விஜய்யா சிம்புவா?
ஆனால்
மதங்களில் சிறந்தது இந்து மதமா இஸ்லாமிய மதமா?
என்று தலைப்பு வைத்தால் என்ன ஆகும்? வீணான கலவரம் உண்டாகும். விவாதம் செய்வது ஒரு தத்துவத்தைப்பற்றி ஒரு தெளிவு ஏற்படுவதற்காக. அதை விட்டு விட்டு ஒரு பிரச்சினைக்குரிய பொருள் பற்றி விவாதம் செய்தால் வீண் சண்டையும் மோசமான கருத்து வேறுபாடும்தான் மிஞ்சும்.
சமீபத்தில் ஒரு பதிவர் அந்த மாதிரியான ஒரு பொருளைப்பற்றிய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். சிறிய நெருப்புப்பொறியாக ஆரம்பித்தது சக பதிவர்கள் விசிறி விட பெருந்தீயாக உருவெடுத்தது.
இதற்கு காரணம் விவாதத்திற்கு உள்ளான பொருள் மத நம்பிக்கை சார்ந்தது. நல்ல பெயருடன் வலம் வந்து கொண்டிருந்த அந்த பதிவரின் நிலை பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளது. நடுநிலையில் இருந்த பதிவர்கள் கூட வார்த்தைகளினால் காயப்பட்டு நிற்கிறார்கள்.
எது விவாதத்திற்கு உரிய சரியான பொருள் என்ற விவேகம் இல்லாமல் போனால் இந்த நிலை எவருக்கும் வரும்.
பெயர்கள் குறிப்பிடாததற்கு காரணம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் என்பதால்தான்.