சனி, 20 நவம்பர், 2010

அதிர்ஷ்டம் என் பக்கம்

பதிவுலக நண்பர்களுக்கு,

இன்று எனக்கு வந்த ஈமெயிலைப் பாருங்கள்.

எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் காலையில் கோழி கூப்பிடும் முன்பாகவே என் வீட்டுக்கதவைத் தட்டுகிறது பார்த்தீர்களா?

எழுநூற்றைம்பது ஆயிரம் பவுண்ட் என்றால் இந்திய மதிப்பில் எவ்வளவு இருக்கும்? பதட்டத்தில் கையும் ஓடமாட்டேன் என்கிறது. காலும் ஓடமாட்டேன் என்கிறது. இந்தப் பாழாப்போன கால்குலேட்டர் இந்நேரம் பார்த்து கைக்கு கிடைக்கமாட்டேன் என்கிறது. சார், சார், யாராவது உதவிக்கு வாங்களேன். ஒரு பவுண்ட் என்றால் எத்தனை ரூபாய் சார்? எண்பது ரூபாயா? அப்போ எழுநூற்றைம்பது ஆயிரம் பவுண்ட்டுக்கு, ஐயோ, ஐயோ, ஆறு கோடி ரூபாயா? யாராச்சும் சொல்லுங்களேன் சார், கணக்கு சரிதானா?

ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ !

இந்த ஆறு கோடி ரூபாயை வச்சுட்டு நான் என்ன பண்ணுவேன், வீட்ல வக்கறதுக்கு எடம் பத்தாதே? பாங்குல போட்டா இன்கம்டாக்ஸ்காரன் கணக்கு கேப்பானே? ஐயோ, நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன்? ஒண்ணுமே புரியலயே? நாகேஷ் இருந்தாலாவது பொலம்பறதுக்கு தொணைக்கு வருவார், அவரும் போய்ச்சேந்துட்டாரே?

யாராச்சும் ஏதாச்சும் ஐடியா கொடுத்து என்னைக் காப்பாத்துங்களேன்? வர்ற பணத்தில பாதி கொடுக்கிறேன், பாதி என்ன, பூராத்தையும் கொடுத்து விடுகிறேன். உதவி பண்ணுங்கையா !

----------------------------------------------------------------------------------------

E-mail Promo Notification

MICROSOFT [noreply@microsoft.net]

Sent: Sat 20-Nov-10 1:46 AM

To: undisclosed-recipients:

MICROSOFT END OF YEAR NOTIFICATION

This is to inform you that you have been selected for a cash prize of seven hundred and fifty thousand Pounds (Ј750,000.00) in Microsoft End of year award held in United Kingdom, with

REF No: L/200-26937

BATCH No: 2010MJL-01

Do fill out your details for payment:

1.Full Name 2.Full Address 3.Marital Status 4.Occupation 5.Age 6.Sex 7.Nationality 8.Country Of Residence 9.Telephone Number

PROGRAM CO-ORDINATOR

Dr.Pinkett Graffin

TEL:+44-758-789-2992

Email: prinnket.graffin@vista.aero

-------------------------------------------------------------------------------------------

எவ்வளவு தத்ரூபமா இருக்கு பாத்தீங்களா?

செவ்வாய், 16 நவம்பர், 2010

ஹரித்துவாரும் ரிஷிகேசமும் - 2.

ஹரித்துவாரில் பார்க்கவேண்டிய இடங்களில் தலையானதுகங்கா ஆரத்தி”. பலரும் இதைப்பற்றி பதிவிட்டிருப்பார்கள் அல்லது யூட்யூப்பில் விடியோவாக தரவேற்றியிருப்பார்கள். இருந்தாலும் நானும் என் கடமையைச் செய்ய வேண்டுமல்லவா? அதற்காக என் பங்கை இங்கே அளிக்கிறேன்.

வட இந்தியாவில் கங்கை நதிக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், பக்தியும் உண்டு. கங்கை நதியை கடவுளாகவே அங்குள்ள மக்கள் வணங்குகிறார்கள். கங்கா மாதாவுக்கு ஜே! என்பது அங்கு அடிக்கடி கேட்கக்கூடிய கோஷம். காரணம் கங்கை நதிதான் அவர்களுக்கு உயிர் போன்றது. அந்த ஜீவநதிதான் கங்கை சமவெளியில் விவசாயத்திற்கு ஆணிவேர் போன்றது. எல்லா முக்கிய நகரங்களும் கங்கை அல்லது யமுனா நதிக்கரையில்தான் அமைந்துள்ளன. கங்கை அவர்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆகவே அவர்கள் அந்நதியை பக்தியுடன் வழிபடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

காசியிலும் ஹரித்துவாரிலும் அனுதினமும் மாலையில் கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹரித்துவார் சென்றுவிட்டு கங்கா ஆரத்தி பார்க்காமல் வருபவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்த ஆரத்தி மாலை சுமார் ஆறரை மணிக்கு ஆரம்பிக்கிறது. இந்த நேரம் சூரிய அஸ்தமன நேரத்தை ஒட்டி மாறும். ஆரத்தி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே யாத்திரீகர்கள்ஹரி-கி-பியாரிஎன்னுமிடத்தில் கூட ஆரம்பித்து விடுகிறார்கள். உண்மையில் இந்த இடம் கங்கை நதிக்கரை அல்ல. கங்கையின் வேகத்தைக் கட்டுப்படுத்தி கால்வாயின் மூலம் கங்கை நீரை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ரிஷிகேசத்தில்தான் உண்மையான கங்கைக்கரையில் ஆரத்தி நடைபெறுகிறது.

ஹரி-கி-பியாரியில் கங்கா மாதாவுக்காக ஒரு புராதன கோவில் இருக்கிறது. அதைச்சுற்றி பல கோவில்கள் இருக்கின்றன. கோவில் என்றால் உடனே மதுரைக் கோவிலைக் கற்பனை பண்ண வேண்டாம். சென்னையில் தெருவோரங்களில் இருக்கும் நடைபாதைக் கோவில்கள் சைஸில்தான் எல்லாக்கோவில்களும் இருக்கின்றன. அபரிமிதமான பக்தி மனதில் இருந்தால்தான் இந்தக்கோவில்களை ரசிக்க முடியும். இந்த கங்கா மாதா கோவில் பூஜாரி ஆரத்தி காட்ட ஆரம்பித்த பிறகுதான் மற்ற கோவில்களின் பூஜாரிகள் ஆரத்தி காட்டுகிறார்கள்.

மாலை ஐந்து மணியிலிருந்தே பக்தர்கள் ஹரி-கி-பியாரியில் கூட ஆரம்பித்து விடுகிறார்கள். கூட்டம் ஓரளவிற்கு சேரும்போது, கூட்டத்தை ஒழுங்கு படுத்த சில தொண்டர்கள் வருகிறார்கள். அவர்கள் ஏதோவொரு சேவா-ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள். கூட்டத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருக்கும்போதே, அவர்கள் செய்யும் பொதுத் தொண்டுகளுக்காக நன்கொடையும் வசூலிக்கிறார்கள். நன்கொடை கட்டாயமல்ல. ஆனாலும் நிறையப் பேர்கள் நன்கொடை கொடுக்கிறார்கள். மைக்கிலும் இந்த சேவா ஸ்தாபனத்தைப்பற்றி அறிவிப்பு செய்கிறார்கள். ஆரத்தி நேரம் நெருங்க நெருங்க கூட்டம் நிறையவே சேர்ந்து விடுகிறது. எங்கு பார்த்தாலும் மனித தலைகள்தான் தெரிகின்றன. உட்கார இடம் கிடைக்காதவர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டும் இருக்கிறார்கள்.

ஆரத்தி நேரம் வந்தவுடன் மைக்கில் ஆரத்தி பாட்டு போடப்படுகிறது. எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு கோவில்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாக்கோவில்களின் முன்பும் ஆரத்தி விளக்குகள் திரி போட்டு எண்ணை விட்டு தயாராக வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆரத்தி நேரம் வந்தவுடன் கங்கா மாதா கோவிலில் அம்மனுக்கு வழிபாடு செய்கிறார்கள். அந்த மணி ஓசை கேட்டவுடன் அனைத்து கோவில் பூஜாரிகளும் தயாராக நின்று கொள்கிறார்கள். தலைமைப்பூஜாரி அம்மன் பூஜையை முடித்துவிட்டு வெளியில் வந்து நிற்கிறார். அவருடைய ஆரத்தி விளக்கை (பல அடுக்குகள் கொண்டது) அசிஸ்டன்ட் பூஜாரி ஏற்றி அவரிடம் கொடுக்கிறார். எல்லோரும் பலமாககங்கா மாதா கி ஜேஎன்று கோஷமிடுகிறார்கள். தலைமைப்பூஜாரி அந்த விளக்கை வாங்கிக்கொண்டு கங்கைக்கு ஆரத்தி காட்ட ஆரம்பிக்கிறார். உடனே மற்ற கோவில் பூஜாரிகளும் அவரவர்கள் விளக்குகளைப் பற்ற வைத்து ஆரத்தி காட்டுகிறார்கள். சுமார் இருபத்தியைந்து பூஜாரிகள் ஆரத்தி காட்டுகிறார்கள். எல்லோரும் ஆரத்தி காட்டும்போது அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. மக்கள் கோஷம் விண்ணைப் பிளக்கிறது.

இந்த பூஜாரிகள் ஆரத்தி காட்ட ஆரம்பித்தவுடன், மக்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு இலையால் ஆன பூக்கூடையில் உள்ள விளக்கைப் பொருத்தி, கங்கை நதியில் பக்தியுடன் விடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வாறு விடும் விளக்குகளினால் கங்கை ஆறே விளக்கு மயமாக காட்சி தருகிறது. ஒரு பக்கம் பூஜாரிகள் காட்டும் ஆரத்தி விளக்குகள்! இன்னொரு பக்கம் மக்கள் விடும் விளக்குக்கூடைகள்! பார்க்க மிகவும் பரவசமாக இருக்கிறது. மக்களின் பக்திப்பெருக்கு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பூஜாரிகள் காட்டும் ஆரத்தி விளக்குகள் பல அடுக்குகள் கொண்டவை. கனமும் பல கிலோக்கள் இருக்கும். அந்த கனம் மிகுந்த விளக்குகளை அநாயாசமாகப் பிடித்துக்கொண்டு அவர்கள் ஆரத்தி காட்டும் நேர்த்தியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதுவும் ஏறத்தாழ பத்து நிமிடங்களுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள். இது உண்மையிலேயே ஒரு சாதனைதான். இவ்வாறு ஆரத்தி காட்டி முடிந்ததும் பூஜாரிகள் கோவிலுக்குள் போய்விடுகிறார்கள். மக்கள் கூட்டம் கலைய ஆரம்பிக்கிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கலைய ஆரம்பித்தால் எப்படிப்பட்ட களேபரம் இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனாலும் எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. நல்ல இருட்டு வந்து விடுவதால் குழுவாகச் செல்பவர்கள் சிறிது நேரம் பொறுத்திருந்து வழிதெரிந்தவர்களின் பின்னாலேயே போவது நல்லது. புது ஊரில் வழி தவறிவிட்டால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவேண்டும்.



திரும்பும்போது மனது பக்தி பரவசத்தினால் நிறைந்து இருந்தது. இந்துக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கங்கா ஆரத்தியைக் காணவேண்டும்.

தொடரும்

சனி, 13 நவம்பர், 2010

ஹரித்துவாரும் ரிஷிகேசமும்-பாகம் 1

முன் தொடர்ச்சி: மாலை ஐந்து மணி சுமாருக்கு ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். ஒரு லாட்ஜ் பிடித்து தங்கினோம்.”

இப்படி போன பதிவில் முடித்திருந்தேன். ஆனால் இதன் பின்னணியில் ஒரு இரண்டாயிரம் ரூபாயைப் பறிகொடுத்த சோகக்கதை ஒன்று இருக்கிறது.

கோவையிலிருந்து டில்லிவரையில் விமானப்பயணம். அங்கிருந்து ஹரித்துவார் வரை ரயில் பயணம். ஹரித்துவார் வந்து இறங்கியதும் நாங்கள் புக் செய்திருந்த டூரிஸ்ட் டாக்சிக்காரர் அன்றே கேதார்நாத்திற்கு புறப்படவேண்டுமென்று சொல்லியிருந்தார். ஆகவே காலைக்கடன்களை முடித்துவிட்டுப் புறப்படுவதற்காக, ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவில் ரூமுக்குச் சென்று 2 மணி நேரத்துக்கு ரூம் எடுத்து குளித்து தயாரானோம். ஐயப்பன் கோவில் வாசலில் சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஒரு தள்ளுவண்டியில் இட்லிக்கடை நடத்துகிறார். அந்தக்கடையில் ஆளுக்கு நாலு இட்லி வாங்கி சாப்பிட்டோம். எங்கள் டாக்சிக்கு போன் செய்தோம். டாக்சி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்போது ஒரு யோசனை தோன்றியது. கேதார்நாத், பத்ரிநாத் பார்த்துவிட்டு வந்ததும் ஹரித்துவாரில் 4 நாட்கள் தங்குவதாக புரோக்ராம். அதனால் ஒரு லாட்ஜில் ரூமுக்கு சொல்லிவிட்டுப்போனால் சௌகரியமாக இருக்குமே என்ற முன்னெச்செரிக்கை உணர்வு வந்தது. அதனால் பக்கத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருந்த ஒரு லாட்ஜில் நாங்கள் திரும்பி வரும் நாளைக்கு இரண்டு ரூம் வேண்டுமென்று பேசி இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸாகக் கொடுத்தோம். அப்புறம் டாக்சி வந்தது. அதில் ஏறி கேதார்நாத், பத்ரிநாத் போய் வந்ததை விரிவாகப் பார்த்தோம்.

திரும்பி வந்ததும் நேராக நாங்கள் ரிசர்வ் செய்திருந்த லாட்ஜுக்குப் போய் எங்களுக்குக் கொடுத்த ரூமில் தங்கினோம். அப்போது மாலை மணி நான்கு. ரூமுக்குள் போனதுமே ஒரு மாதிரியான வாடை எங்கள் மூக்கைத் தாக்கியது. படுக்கை, தலையணைகளை வெகு நாட்கள் வெயிலில் போடாமல் வைத்திருந்தால் வருமே அந்த வாடை. ஒருவரும் பெட்டிகளைத் திறக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் ஒரு சில நிமிடங்கள் யோசித்தேன். பிறகு இந்த ரூம்களில் தங்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன். உடனே சம்பந்தியைக் கூட்டிக்கொண்டு மெயின் ரோடுக்குச் சென்று சர்வே செய்தேன். ஒரு லாட்ஜ் கொஞ்சம் நன்றாக இருந்தது. அங்கு சென்று விசாரித்ததில் ரூம்கள் இருக்கிறதென்று சொன்னார்கள். உடனே இரண்டு ரூம்கள் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தோம்.


பழய லாட்ஜுக்கு வந்து விவரத்தை சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது பிரச்சினை என்னவென்றால் லாட்ஜுக்காரனிடம் என்ன சொல்லி வெளியேறுவது என்பதுதான். அரசுப்பணியில் இந்த மாதிரி சமயங்களில் எவ்வளவு பொய் சொல்லி சமாளித்திருக்கிறோம். அந்த அனுபவம் கை கொடுத்தது. அந்த லாட்ஜ் மேனேஜரிடம் போய்ஊரிலிருந்து அர்ஜன்டாக வரச்சொல்லி ஒரு போன் வந்தது. நாங்கள் உடனே போக வேண்டும். ஆகவே ரூமைக்காலி செய்கிறோம். எங்கள் அட்வான்ஸைத் திருப்பித்தர வேண்டாம்என்று சொன்னோம். அவனும் சந்தோஷப்பட்டு எங்களைப் பத்திரமாகப் போகச்சொல்லி விடை கொடுத்தான். அவனிடம் என்னுடைய வோட்டர் ஐ.டி. கார்டை அடையாளத்திற்காக கொடுத்து வைத்திருந்தேன். அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு இரண்டு ஆட்டோ பிடித்து புது லாட்ஜுக்கு வந்து சேர்ந்தோம். ரூமைப்பார்த்தவுடன் பெண்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. பணம் போனால் போகிறது, நாம் சௌகரியமாக இருப்பதுதான் முக்கியம் என்று எல்லோரும் ஏக மனதாகச் சொல்லி விட்டார்கள். இப்படியாக இரண்டாயிரம் ரூபாயை காந்தி கணக்கில் எழுதினோம்.

அடுத்ததாக சாப்பாட்டுப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று யோசித்து எனக்குத் தெரிந்த ஐயப்பன் கோவில் வட்டாரத்தில் ஒரு வட்டம் அடித்தோம். நம்ம இட்லிக்கடை முருகேசன் ஒரு ஹோட்டலை சிபாரிசு செய்தார். அன்று இரவு அங்கு சாப்பிட்டோம். திருப்திப்படவில்லை. அடுத்த நாளும் சர்வே செய்து ஒரு ஹோட்டலைக் கண்டுபிடித்தோம். ஓரளவு பரவாயில்லை. சம்பந்திகள் சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். அந்த ஹோட்டலின் படத்தைப் பார்க்கவும்.



தொடரும்….

சனி, 6 நவம்பர், 2010

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகள்.


அன்புள்ள வாசகப்பெருமக்களுக்கு,

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகளைப் பற்றி என்னுடைய இன்னொரு பிளாக்கில் (மசக்கவுண்டன் கிறுக்கல்கள்) எழுதி வருவது நிறையப் பேருக்குத் தெரியும். என்னை ஜாதி வெறி பிடித்தவனென்று தூற்றினாலும் பரவாயில்லை என்றுதான் இந்தப்பதிவை எழுதுகிறேன். காரணம், கவுண்டர்களின் கல்யாணங்களில் தாலி கட்டி முடித்தபிறகு "குடிமகன்" அதாவது நாவிதர், மங்கல வாழ்த்து பாட்டு சொல்வது முக்கியமானது.

பலர் கல்யாணத்தின் போது அவசரத்தின் காரணமாக இந்த மங்கல வாழ்த்தை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பாட்டு கம்பர் எழுதிக்கொடுத்ததாக நம்பப்படுகிறது. கவுண்டர்களின் கல்யாண முறைகளைப்பற்றிய முழு விவரங்களும் இந்தப்பாட்டில் இருக்கிறது.

எல்லோரும் இந்தப்பாட்டை முழுமையாக கேட்டு பயன் பெறும் வகையில், பாட்டின் வசனத்தையும் பாட்டாகப் பாடினதையும் கீழே கொடுத்திருக்கும் பதிவில் போட்டிருக்கிறேன்.
யாவரும் கேட்டு இன்புற்று, தங்கள் கருத்துகளை மறக்காமல் பின்னூட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மங்கல வாழ்த்து பாடல் – வசனமும் பாடலும்

http://masakavunden.blogspot.com/2010/11/blog-post_05.html

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பத்ரிநாத்தில் இரண்டாவது நாள்.


மறுநாள் விடிந்தது. ஆனால் ரஜாயை விட்டு வெளியே வர ஒருவருக்கும் மனதில்லை. எப்படியோ ஒரு மாதிரி மனதைத் திடப்படுத்திக்கொண்டு எழுந்து, ஒரு காப்பி போட்டுக் குடித்தோம். அப்பறம்தான் உடம்பு சரியாக வேலை செய்ய ஆரம்பித்தது. எவ்வளவு சீக்கிரம் இந்த ஊரை விட்டுப் போக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு விடலாம் என்று எல்லோருமாக ஏகோபித்த முடிவு எடுத்தோம். டிரைவர் ஒரு இடத்தில் மரவட்டை மாதிரி சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி விவரம் சொன்னேன். அவருக்கும் அது சௌகரியமாகவே இருந்தது. ஏனெனில் பத்ரிநாத்திலிருந்து ஒரே நாளில் ஹரித்துவார் போக முடியாது. நடுவில் எங்காவது தங்கித்தான் போக வேண்டும். அதனால் சீக்கிரம் புறப்பட்டால் தங்கவேண்டிய இடத்திற்கு சீக்கிரம் போய் சேர்ந்து ரெஸ்ட் எடுக்கலாம். ஆகவே அவர் சந்தோஷமாக இந்த மாறுதலுக்கு ஒத்துக்கொண்டார்.

லாட்ஜ் நிர்வாகம் ஆளுக்கு ஒரு பக்கெட் வெந்நீர் கொடுத்தார்கள். எல்லோரும் குளித்து விட்டு, எதிரில் இருந்த ஒரு ஹோட்டலில் அபூர்வமாகக் கிடைத்த இட்லியையும் தோசையையும் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினோம். ரொம்ப வயசான, நடக்க முடியாதவர்களை ஒரு கூடையில் உக்கார வைத்து ஒரே ஆள் முதுகில் சுமந்து கொண்டுபோய் கோவிலில் இறக்குகிறான். இதற்கு போகவர முந்நூறு ரூபாய் சார்ஜ். படத்தைப்பார்க்க.


நாங்கள் நடந்தே சென்றோம். கோவிலில் காலை நேரம் என்பதால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. கோவிலுக்கு வெளியில் பூஜைக்காகத் தட்டு விற்கிறார்கள். கொஞ்சம் பூ, பட்டாணிக்கடலை, வெள்ளை கற்கண்டு மிட்டாய், இவ்வளவுதான் பூஜை சாமான்கள். இதை தலை மேல் வைத்துக்கொண்டு சாமிக்கு முன்னால் போய் பூஜாரியிடம் கொடுத்தால், பூஜாரி அதை வாங்கி சாமியின் மேல் வீசுகிறார். பிறகு அந்தத் தட்டில் அவர் முன்னால் இருக்கும் தட்டிலிருந்து கொஞ்சம் மிட்டாயும் கடலையையும் நம் தட்டில் போட்டுத் திருப்புத் தருகிறார். அதுதான் பத்ரிநாதரின் பிரசாதம்.

தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது என் சகோதரிக்கு முன் தினம் போலவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. டாக்சி டிரைவருக்கு போன் போட்டு காரை வரவழைத்து காரில் ரூம் திரும்பினோம்.

{ஒரு முக்கிய குறிப்பு: இப்போது பரவலாக செல்போன் உபயோகிப்பவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக டாக்சி டிரைவர்கள் அனைவரும் செல்போன் வைத்திருப்பார்கள். நீங்கள் எங்காவது டாக்சியில் சென்றால் முதல் வேலையாக டாக்சி டிரைவரின் செல்போன் நெம்பரை வாங்கி உங்கள் செல்போனில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் உபயோகமாக இருக்கும். }

ரூமைக்காலி செய்துவிட்டு பத்ரிநாத்துக்கு குட்பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம். ஆனால் கொஞ்சதூரம் வந்ததும் எல்லா வண்டிகளும் நின்றுகொண்டிருந்தன. என்னவென்றால்கேட்திறக்கவில்லை என்றார்கள். இந்த கேட் முறை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். பத்ரிநாத்திலிருந்து ஜோஷிமட் வரை ஒரு வழிப்பாதைதான். மாற்றி மாற்றிதான் வண்டிகளை விடுவார்கள். நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.





சுமார் 11½ மணிக்கு கேட் திறந்தார்கள். நாங்கள் புறப்பட்டு ஜோஷிமட் வழியாக கர்ணப்பிரயாக் வந்து சேர்ந்தோம். வழியெங்கிலும் பாதையை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. பாதையோரத்தில் இருக்கும் பாறைகளை வெடிவைத்து உடைக்கிறார்கள். உடனேயே அந்த பாறை துகள்களை இயந்திரங்கள் மூலமாக அப்புறப்படுத்துகிறார்கள். இதற்கு ஓரிரண்டு மணி நேரம் பிடிக்கிறது. அது வரை எல்லா வண்டிகளும் நிற்க வேண்டியதுதான். அப்பொழுதும் வண்டிகள் ரோட்டின் ஓரமாகவே, அதாவது கீழே விழுந்தால் அதலபாதாளம் என்ற நிலையிலேயேதான் செல்ல வேண்டியிருக்கிறது.

கர்ணப்பிரயாக் - ருத்ரப்பிரயாக் ஹைவே பாகீரதி நதி ஓரமாகவே வருகிறது. இந்த ரோட்டிலும் பாதை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. அந்தப்பாதையில் வந்த ஒரு வழக்கமாக வரும் ரூட் பஸ் பாதை ஓரத்தில் வரும்போது ஸ்லிப் ஆகி நாற்பது பயணிகளுடன் ஆற்றில் விழுந்து விட்டது. அங்கெல்லாம் ஆற்றில் இருபது ஆடி தண்ணீர் சாதாரணமாக ஓடும். பஸ்ஸையும் காணவில்லை. பஸ்ஸில் இருந்தவர்களையும் காணவில்லை. நாங்கள் கர்ணப்பிரயாக் வரும்போது இந்த காரணத்தினால் பொது ஜனங்கள் ரோடு பந்த் செய்துகொண்டிருந்தார்கள். எங்கள் வண்டியை வேறொரு மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டார்கள். இந்தப்பாதை ஆற்றுக்கு மறு பக்கம் இருக்கிறது. சாதாரண ரோடு என்பதால் அகலம் குறைவு. எப்பொழுது வேண்டுமானாலும் பஸ்ஸைத் தொடர்ந்து நாங்களும் பாகீரதியின் மடிக்குப் போய்ச் சேரலாம் என்கிற பயம் ஹரித்துவார் வந்து சேருமட்டும் இருந்தது.

எப்படியோ ஒரு வழியாக ருத்ரப்பிரயாக் வந்து சேர்ந்தோம். ஊரிலிருந்து ஒருக்குப்புறமாக ஒரு நல்ல லாட்ஜ்ஜுக்கு டிரைவர் எங்களைக் கூட்டிக் கொண்டுபோய் தங்க வைத்தார். ரூம்கள் சுத்தமாக இருந்தன. சாப்பிட்டுவிட்டு படுத்தோம். தூக்கத்தில் நாங்கள் எல்லோரும் ஆற்றில் விழுவதாகவே கனவு வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலையில் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு (டிபன் என்ன, மாத்திரைகள்தான்) புறப்பட்டு மாலை ஐந்து மணி சுமாருக்கு ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். ஒரு லாட்ஜ் பிடித்து தங்கினோம்.

தொடரும்