புதன், 6 ஏப்ரல், 2011

கடன் வாங்கி விட்டுத் திருப்பித் தராமல் சமாளிப்பது எப்படி?



“கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று அந்தக் காலத்தில் கம்பன் எழுதினான். அவன் இப்போது இருந்தால் “கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்” என்று எழுதியிருப்பான்.   

பொதுவாக யாராக இருந்தாலும் கடன் வாங்கும்போது அந்தக் கடனை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்பதை யோசித்துத்தான் கடன் பத்திரத்தில் கையெழுத்து போடுவார்கள். ஆனால் சிலர் கடன் வாங்கினபின் இருக்கும் நிலையைப் பார்த்தால் அவர் கடன் வாங்கின மாதிரியே தெரியாது. எப்போதும் போல் டம்பமாகச் செலவு செய்து கொண்டும், சவடால் அடித்துக் கொண்டும் இருப்பார்.

இன்னும் சிலபேர் “எனக்கு இரண்டு கோடி கடன் இருக்கிறதாக்கும்” என்று பெருமையாகக் கூட சொல்லிக்கொள்ளுவார்கள். அதாவது கடன் இரண்டு கோடி இருந்தால் அவர் சொத்து எவ்வளவு இருக்குமோ என்று நாம் யூகித்துக்கொள்ள வேண்டுமாம். நான் யாருக்காவது ஒரு பத்து ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தால் அன்று இரவு முழுவதும் சரியாகத் தூக்கம் வராது. அடுத்த நாள் முதல் வேலையாக அந்தப் பணத்தைக் கொடுத்த பிறகுதான் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இருக்கும்.

ஆனால் இந்த இரண்டு கோடிக்காரரோ சர்வ சாதாரணமாக இருக்கிறார். எப்போதும்போல் சாப்பிடுகிறார், எப்போதும்போல் தூங்குகிறார். இவரால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்பது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம்!

அதைவிட ஆச்சரியம் எந்த மடையர்கள் இவரை நம்பி இவ்வளவு கடன் கொடுத்தார்கள் என்பதுதான். இந்த மாதிரி கடன் வாங்கியிருப்பவர்களின் வாய்ச்சாலம் அருமையானது. இவர்கள் பேச்சைக் கேட்பவர்கள் இவருக்கு கடன் கொடுப்பது நம் பாக்கியம் என்று நம்புகிற அளவுக்கு பேச்சுத்திறமை கொண்டவர்கள். அப்படி கடன் கொடுப்பவர்களும் வெளியில் நான் இன்னாருக்கு கடன் கொடுத்திருக்கிறேனாக்கும் என்று பெருமை பேசிக்கொள்வார்கள். பணம், யானை வாயில் போன கரும்புதான் என்பது ரொம்ப நாள் கழித்துத்தான் அவர்களுக்கு உறைக்கும்.

கடன் கொடுத்தவர் கடன் வாங்கினவர் வீட்டுக்குப் போனால் அவருக்கு கிடைக்கிற மரியாதையே தனி தினுசாக இருக்கும். நிறைய சமயங்களில் அவரைப் பார்க்கவே முடியாது. ஏதாவது ஒரு சமயத்தில் பார்க்க முடிந்தாலும் “எதுக்கய்யா வீட்டுக்கெல்லாம் வர்ரே? உன் பணத்தை யாரும் தூக்கீட்டு ஓடிவிட மாட்டார்கள். உன் வீடு தேடி பணம் வரும். இனிமேல் இங்க வீட்டுக்கு வர்ர வேலையெல்லாம் வச்சுக்காதே” என்று நாயை விரட்டுகிற மாதிரி விரட்டுவார்கள். இவனுக்கு என்னமோ தனக்கு கடன் கேட்டுப் போன மாதிரி ஒரு எண்ணம் வரும். சில சமயம் ஆளைவிட்டு மிரட்டுவார்கள். கொலை நடந்த கேஸ்களும் உண்டு.

எனக்கு வாழ்நாள் ஆசை ஒன்று இருக்கிறது. நாமும் இந்த மாதிரி ஒரு இரண்டு கோடி கடன் வாங்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. சக பதிவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அப்படி இரண்டு கோடி கடன் கொடுக்கக் கூடிய வள்ளல்கள் (அதாவது இளிச்சவாயர்கள்) யாராவது இருந்தால், உடனே தெரியப்படுத்தினால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். தவிர கடன் பத்திரத்தில் கையெழுத்துப் போடும் அரிய வாய்ப்பை உங்களுக்கே கொடுக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

தொலை பேசியில் பேசும்போது அனுசரிக்கவேண்டிய பண்புகள்



தொலைபேசியில் பேசுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. பெரும்பாலோருக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வே கிடையாது. போன் என்பது பேசுவதற்குத்தானே, யாரையும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டுப் பேசலாம் என்று பலர் தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

விடியற் காலையில் 5 மணிக்குப் போன் வந்தால் என்னைப்போன்ற உள்ளூரில் வசிப்பவர்கள் என்ன நினைப்போம்? யாரோ இன்றைக்கு மண்டையைப் போட்டு விட்டார்கள், இன்றைய பொழுது அவ்வளவுதான் என்று முடிவு செய்துதான் போனை எடுப்போம். செய்தியும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். “இன்றைக்கு என்ன புரொக்ராம்” என்று ஒரு நண்பன் அந்நேரத்தில் கேட்டானென்றால் என்ன நினைப்போம்? பாவி, உன்னை எளவெடுக்க, காலங்கார்த்தாலே ஏண்டா என் தூக்கத்தை கெடுத்தே? என்றுதான் எண்ணுவோம் அல்லவா?

சிலர் அர்த்த ராத்திரியில் போன் பண்ணி, நாளைக்கு அவனைப் பார்க்கப் போகலாமா என்று விசாரிப்பார்கள். அவர்கள் அன்றைக்கு அன்று, தூங்காத ஜாதியைச் சேர்ந்தவர்கள். இரவு 1 மணிக்கு மேல்தான் படுக்கப்போவார்கள். காலையில் 11 மணிக்குத்தான் அவர்களுக்குப் பள்ளியெழுச்சி. நாம காலைல 7 மணிக்கு எழுந்திருச்சு 8 மணிக்கு ஆபீஸ் போறவங்களா இருந்தா, இந்தப் பீடைங்களுக்கு அர்த்த ராத்திரியில என்ன வாழ்த்துச் சொல்றது?

போன் என்பது அவசர, அத்தியாவசியச் செய்திகளைச் சொல்வதற்காக ஏற்படுத்திய சாதனம் என்று என்னைப் போன்ற கிழடுகள் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கின்றன. வடச்சட்டியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு, தாளிப்பதற்கு என்னென்ன போடவேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து, இந்தியாவிலிருக்கும் அம்மாவிற்குப் போன் போட்டுக் கேட்கும் மகள்கள் ஏராளம். “அடியே, நேற்று அந்த சீரியலில் என்ன நடந்தது, எனக்கு நாத்தனார்ப் பீடைகூட கோவிலுக்குப் போகச் சொல்லி அந்தக் கெழம் உயிரைப் பிடுங்கிச்சு, அதனால அந்த சீரியலப் பாக்க முடியல. அதில அவ புருசன் சாகறாப்பில இருந்தானே, அவன் செத்துட்டானா?” என்று அரை மணி நேரம் போனிலேயே கதை கேட்கும் மாமிகளும் உண்டு. அன்றைக்கு வெள்ளிக்கிழமையாக இருக்கும். வீட்டில் மங்களகரமாக நாலு ஸ்லோகம் சொல்றத விட்டுட்டு இந்த எளவு விசாரணை. கதை கேக்கற சுவாரஸ்யத்தில நாளாவது, கிழமையாவது?

சிலர் அவர்கள் வழக்கமாகப் போகும் டாக்டருக்கு போன் செய்து “டாக்டர், வயிற்றில் இடது புறமாக வலிக்கிறது, அன்றைக்கு கொடுத்தீர்களே, அந்த மருந்தைச் சாப்பிடலாமா என்று கேட்பார்கள். என்ன அட்வைஸ் சொல்ல முடியும்? நேரில் பார்க்காமல் ஒன்றும் சொல்ல முடியாதம்மா, நேர்ல வாங்கன்னு சொன்னா, “பார்மசியில கேட்டாக் குடுக்கறான், இந்த டாக்டருக்கு கொம்பு மொளச்சிடுச்சு”, என்று பேசும் மக்கள்தான் அதிகம். இப்படிப்பட்ட சாவு கிராக்கிகள் வராததே நல்லதுக்குத்தான் என்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் நினைப்பார்கள்.

என்னைப் பொருத்தவரையில் நான் போனில் சொல்லவேண்டியவற்றை சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிடும் வழக்கமுடையவன். சிலர் அவர்களின் வீட்டுப் பிரச்சினைகளால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க இந்தப் போனைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பேசுவது நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையென்றாலும் கடனே என்று கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் போன் பேசுவதில் ஒரு பண்பு, எட்டிக்கெட், என்னவென்றால், யார் கூப்பிடுகிறார்களோ அவர்கள்தான் பேச்சை முடித்து போனைக் கட் செய்யவேண்டும்.

என்னுடைய நண்பர்கள் இருவர் இப்படி போனில் ஒரு நிமிஷம் பேசவேண்டியதை ஒன்பது நிமிஷம் பேசுவார்கள். அவர்கள் பேசும்போது நாம் சும்மாவும் இருக்கமுடியாது. “ஊம்”, “அப்படியா”, “அப்புறம்”, இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும். இல்லாவிட்டால், என்ன, கேட்டுட்டு இருக்கீங்களா, இல்லே தூங்கிட்டீங்களா, என்று கேள்வி வேறு வரும். இப்படியாக தடவைக்கு ஒரு அரை மணி நேரமாவது அறுப்பார்கள். விஷயம் ஒன்றுமிருக்காது.    

இதில் சமீபத்தில் நடந்த ஒரு சோகத்தைக் கேளுங்கள். “குதிரை கீழே தள்ளியதுவுமில்லாமல் குழியும் பறித்ததாம்” என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இவர்கள் தங்கள் டென்ஷனைக் குறைக்க ஏதோ பேசுகிறார்களே என்று அனுதாபப்பட்டு கேட்கப்போக, என் மீது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள். அதாவது, நான் அவர்களுடன் போனில் பேசினால் சீக்கிரம் கட் பண்ணி விடுகிறேன், அவர்கள் என்னுடன் பேசினால் நீண்ட நேரம் பேச அவர்களைத் தூண்டுகிறேன், என்று கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்போமே என்று பேச்சைக் கேட்கப்போக, குற்றச்சாட்டு என் பேரிலேயே திரும்பி விட்டது. அதாவது அவர்கள் சொல்வது என்னவென்றால் நான் “அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே” என்று அலைகிறேன் என்பதை இவ்வாறு சொல்லி விட்டார்கள். அடுத்தவன் காசில் அனுபவிக்கிற ஜாதி என்பதை இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் “எனக்கு வேண்டும், இவர்கள் பேரில் அனுதாபம் காட்டியதிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று என் தலைவிதியை நொந்து கொண்டு இனி மேலாவது புத்தியாய் பிழைக்கவேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்துகொண்டேன்.

இந்த நிகழ்ச்சியின் நீதி என்னவென்றால், எந்த வயதிலும் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு என்பதுதான்.

புதன், 30 மார்ச், 2011

சேவைகளும் சேவைக்களங்களும்



வழுக்கைத் தலைக்காரர் ஒருவர் ஹேர் கட்டிங் சலூனுக்குப் போனால் நாம் என்ன சொல்வோம்- “ இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை” – என்று சொல்வோம். 
நீதி: முடி இருக்கிறவன்தான் அதை வெட்டிக்கொள்ள சலூனுக்குப் போகவேண்டும். 

அதே மாதிரி ஒருவனுக்கு பேங்க்கில் கணக்கே கிடையாது, அவன் நான் பேங்கில் பணம் எடுக்கப்போகிறேன் என்றால் என்ன சொல்ல முடியும்? (கொள்ளையடிப்பது இதில் சேராது). 
நீதி: பேங்கில் கணக்கு இருந்தால்தான் பணம் எடுக்க முடியும்.

இது வரையிலும் நான் சொன்னது புரிகிறதா? புரிந்தால் மேலே படியுங்கள். புரியாவிட்டால் அடுத்த பிளாக்கிற்குப் போங்கள்.

அது போல் எலக்ஷ்ன் சமயத்தில் சொல்வதற்கு நல்ல, மக்களின் மனதைக் கவரக்கூடிய இனிமையான கோஷங்கள் வேண்டும்.

உதாரணமாக- 
வறுமைக் கோட்டை அழிப்பேன்.
லஞ்சத்தை ஒழிப்பேன்.
குடிசைகளை மாளிகைகள் ஆக்குவேன்.
எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்.

இந்தக் கோஷங்களெல்லாம் எவ்வளவு இனிமையாக இருக்கின்றன? காதில் விழும்போது தேன் பாய்வது போல் இருக்கிறதல்லவா?. இவைகள் எல்லாம் எப்போது சாத்தியப்படும்?  
வறுமை இல்லாவிட்டால் வறுமையை அழிப்பது எப்படி?           லஞ்சம் இல்லாவிட்டால் அதை ஒழிப்பது எப்படி?               குடிசைகள் இல்லாவிட்டால் அவைகளை எப்படி மாளிகைகள் ஆக்க முடியும்?

மாக்களே, கவலைப்படாதீர்கள். இவைகள் நம் நாட்டில் என்றும் சிரஞ்சீவியாய் இருக்கும்.


செவ்வாய், 29 மார்ச், 2011

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.


சரித்திரம் படித்தவர்கள் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் ரஷ்யப் புரட்சி பற்றியும் படித்திருப்பார்கள். அந்தப் புரட்சிகளின் பின்னணி பற்றியும் நன்கு அறிந்திருப்பார்கள். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி பற்றி எல்லோரும் செய்தித் தாள்களில் படித்துக் கொண்டிருந்தோம்.
சரித்திரம் படிப்பதின் நோக்கமே, நம் முந்தைய தலைமுறையினர் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் செய்த தவறுகள் என்ன, அந்த தவறுகளிலிருந்து நாம் நம்மை எவ்வாறு காத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளத்தான். இந்த தத்துவத்தில் யாருக்கும் ஐயப்பாடு இருக்காதென்று நம்புகிறேன்.

எகிப்திய மன்னர் இந்தத் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன். அல்லது தம் மக்கள் ராஜ விசுவாசம் மாற மாட்டார்கள் என்ற மயக்கத்தில் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

ஆனால் நம் நாட்டு அரசியல் வாதிகள் இந்தத் தத்துவத்தை நன்கு புரிந்தவர்கள். அதாவது மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துள்ளார்கள். மக்களுக்கு வயிறு எப்போது காய்ந்து போகிறதோ அப்போதுதான் புரட்சிக்கான விளை நிலம் உருவாகிறது. பல சமயங்களில் வயிறு நிறைந்திருந்தாலும் அவன் சும்மா இருந்தால் அவன் மனதில் வேண்டாத எண்ணங்கள் தோன்றும். இப்படி பலர் சிந்திக்க ஆரம்பிப்பது நல்லதல்ல. அவர்களை எப்போதும் ஒருவித மயக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும். ஆட்சியாளர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்காது.

அப்படி வைத்திருந்தாலும், இந்தப் படித்த முட்டாள்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் அவ்வப்போது குட்டையைக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஒரு கட்சிக்கும் பிடிப்பதில்லை. ஆனால் ஒரு நல்ல காலம், அவ்வாறு படித்த சிந்தனையாளர்கள் அதிகமாக உருவாவதில்லை. அப்படி ஒன்று இரண்டு உருவாகும்போது அவர்களை எப்படி கையாளவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.

இந்த சூழ்நிலையை நிலை நிறுத்தத்தான் இலவசங்கள். கிராமிய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலை செய்யாமல் காசு கிடைக்கிறது. சலீசாக அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க டி.வி. யும் டாஸ்மாக்கும் இருக்கின்றன. குடிசைமாற்றுத் திட்டத்தின் மூலம் குடியிருக்க வீடு கிடைக்கிறது. இந்த நிலையில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவது?
ஆகவே இலவசங்களின் நன்மையைப் புரிந்து கொண்டீர்களா? இனியாவது இலவசத்தைக் குறை கூறாமல் அவைகளை வாங்கி அனுபவியுங்கள். வாழ்க இலவசம். வாழ்க குடி மக்கள்!

ஞாயிறு, 27 மார்ச், 2011

தொழில் நுட்பம் - பதிவில் வரியின் இடைவெளியை அதிகப்படுத்த


முதலில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு அமெச்சூர். கம்ப்யூட்டரின் எல்லா தொழில் நுட்பங்களும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் குருட்டாம்போக்கில் சில நுட்பங்களைக் கற்றிருக்கிறேன். அவைகளில் ஒன்று பதிவில் வரிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தல். நான் எழுதியிருப்பவைகளை அப்படியே செய்தால் விரும்பிய விளைவுகள் ஏற்படும்.  பல முறை படித்துவிட்டு அப்படியே செய்யவும். 
 
1.   முதலில் பதிவின் டேஷ்போர்டுக்குப் போகவும்.
2.   அங்கு Design என்று உங்கள் பதிவின் கீழ் இருக்கும். அதை அழுத்தவும்.
3.   இப்போது தோன்றும் ஸ்கிரீனில் Edit HTML  என்று இருப்பதை அழுத்தவும்.
4.   இப்போது Back up/Restore Template என்கிற இடத்தில் இருப்பீர்கள். அந்த இடத்தை நன்றாக, முழுவதும் சுற்றிப் பார்த்து என்னென்ன இருக்கிறது என்று நன்றாகப் பார்த்துக்கொள்ளவும்.
5.   இப்போது Download Full Template என்று இருப்பதை அழுத்தவும்.
6.   இப்போது you have chosen to open என்று ஒரு விண்டோ வரும்.
7.   அதில் Save File ஐ செலக்ட் செய்யவும். பிறகு OK ஐ அழுத்தவும்.
8.   இப்போது உங்கள் டெம்ப்ளேட் பத்திரமாக உங்கள் Desk Top  இல் ஸ்டோர் ஆகியிருக்கும். இது எதற்கென்றால் நீங்கள் நான் சொன்னபடி செய்யாமல் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்திருந்தீர்களென்றால் வம்பு வந்துவிடும் அப்போது அந்த வம்பிலிருந்து மீண்டு வர இது உதவியாயிருக்கும்.
9.   அடுத்து Edit Template க்கு கீழே ஒரு சதுரக் கட்டத்தினுள் என்னென்னவோ எழுதியிருக்கும். அதைப்பார்த்து பயப்படாதீர்கள். அந்தக் கட்டித்திற்குள் கர்சரை வைத்து ஒரு லெப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் ஒரு கோடாக உள்ளே கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.
10. அப்படிக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தால் இது வரை நீங்கள் செய்தது சரியென்று அர்த்தம். இப்போது Ctrl  என்று ஒரு கீ உங்கள் கீபோர்டில் இடது கோடியில் கீழே இருக்கும். அதை அழுத்துக்கொண்டு மூடவே F கீயையும் அழுத்தவும். அழுத்திவிட்டு கையை கீ போர்டிலிருந்து எடுத்து விடவும்.
11. இப்பொது டெம்ப்ளேட் கட்டத்துக்கு கீழே x Find என்று ஒன்று தோன்றியிருக்கும். அதற்குப்பக்கத்தில் ஒரு கட்டம் இருக்கும். அந்தக் கட்டத்தில் .post-body என்று டைப் அடிக்கவும். இப்போது இந்த எழுத்துக்கள் டெம்ப்ளேட்டில் ஹைலைட் ஆகித் தெரியும்.

முக்கிய குறிப்பு; இது வரையில் நீங்கள் செய்ததெல்லாம் உங்கள் பிளாக்கை ஒன்றும் செய்துவிடாது. இப்போது உங்களுக்குப் பயமாக இருந்தால் உங்கள் ஸ்கிரீனின் வலது கோடி டாப்பில் ஒரு சிகப்பு x இருக்கிறதல்லவா, அதை கிளிக் செய்துவிட்டு ஓடி வந்து விடலாம். பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் கூகுளாண்டவர் துணை நிற்பார்.

12. இப்போது கர்சரை வைத்து இந்த .post-body என்ற எழுத்துகள் சிறிது மேலே போகும்படி செய்யுங்கள்.
13. இப்போது தெரிபவை:
       .post-body {
        Font-size 110%
        Line-height 1.2;

14. இதில் லைன் ஹைட் 1.2 என்று இருப்பதை 1.8 என்று மாற்றுங்கள். எப்படியென்றால், கர்சரை 2 க்கு முன்னால் வைத்து 2 ஐ டெலீட் செய்துவிட்டு 8 என்று டைப் செய்யுங்கள். அவ்வளவுதான். வேறு எந்த கீயையும் உபயோகப்படுத்தவேண்டாம்.
15. இப்போது டெம்ப்ளேட் சதுரத்தை விட்டு வெளியில் வாருங்கள். கட்டத்துக்கு அடியில் SAVE TEMPLATE என்று இருப்பதை அழுத்தவும். கண்களை மூடிக்கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
16. இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். Your changes have been saved. View Blog என்று இருக்கும்.  View Blog ஐ அழுத்தவும். ஆஹா, உங்கள் பிளாக் இப்பொழுது அதிக இடைவெளியுடன் ஜ்வலிக்கும்.
17. இடைவெளியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமானால் திரும்பவும் இதே மாதிரி செய்து லைன் ஸ்பேசிங்க்கை 2.0 க்கு மாற்றலாம். இதே மாதிரி எழுத்துகளின் சைஸையும் 120, 130 % என்று உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம்.
18. இவைகளை எல்லாம் வெற்றிகரமாக செய்த பின், உடனே என்னுடைய இந்த பிளாக்குக்கு வந்து நன்றி தெரிவிக்கவும். இல்லாவிட்டால் குருவின் சாபத்திற்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வெள்ளி, 25 மார்ச், 2011

பெயர்க் காரணம்.





அன்னு அவர்கள் என்னுடைய  "பதிவர்களுக்கான தொழில் நுட்பங்கள்"   பதிவில் போட்டுள்ள பின்னூட்டம்.
{ ஹெ ஹே... ஏன் இப்படி???

அடுத்தடுத்து வரப்போற டிப்ஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஹெ ஹெ :))

கந்தஸ்வாமி சார், உங்களை ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். வழக்கம் போல கோவை லோலாயுடன் கலாய்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில். }
இந்த “ஹெ ஹே” வுக்கு அர்த்தம் தெரியாமத்தான் முளிச்சிகிட்டு இருக்கேன். நல்ல பாராட்டா இல்லை நக்கலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தொடர் பதிவுன்னு அழைப்பு வந்த பிறகு சும்மா இருந்தா நம் (தன்மைப்பன்மை – Royal We) சுயமரியாதை என்ன ஆவது? ஆகவேதான் ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தாலும் திருமதி அன்னுவிற்காக இன்னொரு பதிவு. 
இப்போது இருக்கும் பதிவின் தலைப்பு நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். ஏறக்குறைய ஒரு முப்பது வருடம் தப்பு, தப்பு, முப்பது நாள் சீ, இதுவும் தப்பு, முப்பது நிமிஷம் ஆயுசில முப்பது நிமிஷம் எதையும் யோசித்ததே இல்லை, முப்பது செகண்ட் யோசித்து எடுத்த தலைப்பு ஆகும். ஏன்னா முப்பது செகன்ட்டுக்கு மேல நம்ம மூளை வேலை செய்யாது.
இதுக்கு முன்னால பல தலைப்புகளை யோசித்து வைத்திருந்தேன். அவைகளை ஏன் கைவிட்டேன் என்பதற்கான விளக்கம்.
மசக்கவுண்டன் கிறுக்கல்கள்:  நீ எழுதறது எல்லாமே கிறுக்கல்கள்தான். அதைத் தனியா வேற சொல்லோணுமாக்கும் என்று நண்பர்கள் சொல்லவே அதைக் கைவிட்டேன்.
பயித்தயக்காரன் பிதற்றல்: பதிவுலகத்தில ஒருத்தரும் நிஜப்பேரை வைப்பதில்லை. நீ மட்டும் ஏன் உன்னுடைய நிஜப்பேரை வைக்கிறே, பயித்தக்காரா ? என்று நண்பர்கள் இதையும் நிராகரித்து விட்டார்கள்.
முட்டாள் பையன், ரெட்டை மண்டை, அழுகுணி, பல்லவராயன் (என்னுடைய பல் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் வந்த காரணப்பெயர்), இப்படி பல பெயர்களை நான் சொல்லச் சொல்ல நண்பர்களும், வீட்டு அம்மணிகளும் நிராகரிக்க, கடைசியில் யாரையும் கேட்காமல் நானே இப்போது இருக்கும் பெயரை முப்பது செகன்ட் யோசித்து வைத்துவிட்டேன். இதுதான் இந்தப் பதிவின் பெயர்க்காரணம்.
அம்மணி அன்னு, தொடர் பதிவு போட்டுவிட்டேன். இதற்கு மேல் மூளை வேலை செய்யாததால் இத்துடன் முடிக்கிறேன்.

திங்கள், 21 மார்ச், 2011

பதிவர்களுக்கான தொழில் நுட்பங்கள்


சில பிளாக்குகளில் அதிகமான பின்னூட்டங்கள், ஹிட்கள், பாலோயர்ஸ் வந்து பிராண்டுவார்கள். அந்த மாதிரி பிளாக்குகளுக்கு ஒரு சுலப வைத்தியம்.

DashBoard போய் Settings க்குப் போகவும். அங்கே Template Designer என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் பலவிதமான டெம்ப்ளேட்டுகள் இருக்கும். இருப்பதில் திக் கலராக இருப்பதை செலக்ட் செய்யவும். எழுத்துகளையும் திக் கலரில் செலக்ட் செய்யவும். அதாவது கருப்பு பேக்ரவுண்ட்டில் – ஊதா எழுத்துக்கள் சிறப்பாக இருக்கும். இப்போது Apply ஐ அமுக்கிவிட்டு வெளியில் வரவும். உங்கள் பிளாக் கீழே கண்டவாறு இருக்கும்.


உங்கள் பிளாக்குக்கு பின்னூட்டத் தொந்திரவுகள் போயே போச். அவ்வளவுதான். இனி நீங்கள் நிம்மதியாக பதிவுகள் போடலாம்.

இன்னும் இது மாதிரியான தொழில் நுட்பங்கள் நிறைய கைவசம் இருக்கின்றன. இந்தப் பதிவுக்கு வரும் ஆதரவைப் பார்த்துவிட்டு அவைகளையும் வெளியிடுகிறேன்.




         










சனி, 19 மார்ச், 2011

பெண்களின் எழுத்துக்கள்


காப்பி குடிக்க கத்துக்கொடுத்த 
டாக்டர் அய்யாவே.
தாங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வாருங்கள். கருத்தினையும் பகிருங்கள்..
   க்டர். Dr PKandaswamyPhD

மொதல்ல நன்றி சொல்லிக்கொள்கிறேன். அப்புறம் மறந்து போய்விடும்.


காப்பி குடிக்க கத்துக் கொடுத்ததிற்கே இந்த பரிசு என்றால் இன்னும் இந்த வரிசையில் வர இருக்கும் மற்ற பதிவுகளுக்கு என்னென்ன பரிசுகள் வரப்போகுதோ என்கிற பயம் வந்து விட்டது. “முட்ட நனைந்த பின் முக்காடு எதற்கு” என்று ஒரு பழமொழி உண்டு. பதிவுலகத்துக்குள்ள வந்தாச்சு, இனி என்ன வந்தாலும் பார்த்துட வேண்டியதுதான்.
எல்லோரையும் கொஞ்சம் மொக்கை போட்டு வறுத்தெடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும். அப்பறம் ஒருத்தரும் நம்ம வழிக்கே வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

 (அன்புடன் மலிக்காவுக்கு - உங்களைச் சொல்றதா நெனச்சுக்காதீங்க, அப்படி நெனச்சீங்கன்னா, நான் ஒரு மொழக்…… தேடீடுவனுங்க)

உடல், மனம், புத்தி, சொல், செயல், இவையெல்லாம் உயிரோடு இருக்கும் மனிதனின் அங்கங்கள். மனம் என்பது எண்ணல்களின் தொகுப்பு. எண்ணங்கள் சொல்லாக வெளிப்படுகின்றன. இந்த வெளிப்படுதல் பேச்சாகவும் இருக்கலாம், எழுத்தாகவும் இருக்கலாம். அப்பாடி, ஒரு வழியா சப்ஜெக்ட்டுக்கு வந்தாச்சு.


பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள ஒற்றுமை, இரண்டும் மனதின் எண்ணங்களை வெளிப்படுத்தலேயாகும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், பேச்சு ஒரு முறை பேசிவிட்டால் அப்புறம் திரும்ப எடுத்துக் கொள்ளமுடியாது. அரசியல் வாதிகள் வேண்டுமென்றால் “நான் அப்படிச் சொல்லவேயில்லை, இந்தப் பத்திரிக்கைக் காரர்கள் எதிர்க் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு என் பேச்சை வேண்டுமென்றே திரித்துப் போட்டுவிட்டார்கள்” என்று நாக்கூசாமல் சொல்லி விடலாம். ஆனால் நம்மைப் போன்ற சாதாரண குடி மக்கள் அந்த மாதிரி தப்பிக்க முடியாது. ஆகவே பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக (டாஸ்மாக்கில் தவிர) இருக்கவேண்டும். 


ஆனால் எழுதுவதில் நாம் ஜாலங்கள் செய்யலாம். எழுதினதை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம். குறுக்கலாம், நீட்டலாம், அடிக்கலாம், பெருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக யாராவது மேல் கோபம் வந்தால் அவரைப்பற்றி கன்னாபின்னாவென்று திட்டி எழுதி, பிறகு கோபம் தணிந்தவுடன் அதைக் கிழித்து எறிந்து விடலாம். இப்படி பல சௌகரியங்கள் இருக்கின்றன.


அதுவும் பதிவுலகில் உங்களை யாரென்றே அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ, யாராக இருந்தாலும் சரி, உங்கள் நிஜ அடையாளத்த காட்ட வேண்டிய அவசியம் இல்லை. விவரம் போறாத சிலர்தான், தாங்கள் ஆணா, பெண்ணா, உண்மைப் பெயர் இவற்றைக்கூறி வீணான வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். இல்லை, நான் காந்தியின் வம்சாவளியில் வந்தவன், வானமே இடிந்து விழுந்தாலும் சத்தியத்தின் பாதையிலிருந்து விலக மாட்டேன் என்றால், அதன் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்.
ஆணானாலும் பெண்ணானாலும் விதி இதுதான். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பொது வெளிக்கு வந்து விட்டால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் தைரியமும் மனப்பக்குவமும் வேண்டும். ரத்த பூமியில் பயந்தாங் கொள்ளிகளுக்கு இடம் இல்லை. ரத்தத்தைப் பார்த்து மயக்கம் போடுபவர்களுக்கு இங்கு என்ன வேலை? 


பெண்கள் போற்றத் தகுந்தவர்கள். அவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டியது அவசியம். ஆனால் அவர்கள் பெண்கள் என்பதாலேயே அவர்களுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் அதை எதிர்பார்க்கக் கூடாது. ஆகவே பதிவுலகில் எல்லோரும் சமம். மூக்கில் குத்து வாங்க ஆண்கள் தயார் என்றால் பெண்களும் அதற்கு சளைக்கக்கூடாது.


நான் பக்கா சுயநலவாதி. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு பரோபகாரி (இளிச்சவாயன்) இல்லை. ஆகவே இந்த தொடர் பதிவுக்கு ஒருவரையும் அழைக்கப் போவதில்லை. அவர்களாகவே தொடர் பதிவு என்று போட்டால் நான் பொறுப்பில்லை.