திங்கள், 7 நவம்பர், 2011

பேயை மேய்ப்பது எப்படி?


பணம் என்பது ஒரு பேய் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். ஆனாலும் அந்தப் பேயுடன் வாழ்ந்தே ஆகவேண்டும். வேறு வழி - இந்த உலகை விட்டுப் போய்விடுவதுதான். அது நம் கையில் இல்லை. ஆகையால் அது வரை அந்தப் பேயை எப்படி கட்டி மேய்ப்பது என்று பார்ப்போம்.

தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு குறிப்பாக, வரிசை எண்ணுடன் கொடுத்திருக்கிறேன். மூத்த குடிமக்களுக்கு என்று இருந்தாலும் இளைய தலைமுறையும்இவைகளைக் கடைப்பிடிக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

1. மூத்த குடிமக்களுக்கு பேங்க் அக்கவுன்ட் இன்றியமையாதது. (அதற்கு முன் பணம் இன்றியமையாதது !)

2. முடிந்த வரை வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பேங்குகளில் கணக்குகளை ஆரம்பிக்கவும்.

3. இரண்டு பேங்குகளில் கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

4. ஒரு அக்கவுன்டில் செக் புக், ஏடிஎம் கார்டு, மொபைல் அலெர்ட், இன்டர்நெட் வசதி, இப்படி என்னென்ன கருமாந்திரங்கள் இருக்கோ, அத்தனையையும் வைத்துக்கொள்ளுங்கள்.

5. ஆனால் பணம் மட்டும் அளவாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மொத்தப் பணத்தில் 10% மட்டும் இங்கே இருக்கட்டும்.

6. இன்னொரு பேங்கில் கணக்கு ஆரம்பித்து விடுங்கள். செக் புக், ஏடிஎம் கார்டு, இன்டர்நெட் பேங்கிங்க், மொபைல் அலெர்ட் இது மாதிரி எந்த ஒரு கண்றாவி வசதியையும் பெற்றுக்கொள்ளாதீர்கள். நாமினேஷன் மட்டும் உங்கள் மனைவி பெயரில் இருக்கட்டும்.

7. பேங்கை இரண்டு நாட்கள் நோட்டம் போடுங்கள். பாங்க் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். வித்டிராயல் பார்ம்கள் அங்கே டேபிளில் இறைந்து கிடக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அந்தப் பேங்கை மறந்து விடுங்கள்.

8. அக்கவுன்ட் பாஸ்புக் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள். பாஸ் புக்கை முடிந்தவரை யார் கண்ணிலும் காட்டாதீர்கள்.

9. பணம் செலுத்த நீங்களே நேரில் சென்று செலுத்துங்கள். செலான் பாரம் அவ்வப்போது ஒவ்வொன்றாக மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்.

10. பணம் எடுக்கும்போது நீங்களே நேரில் சென்று ஒரு வித்டிராயல் பாரம் வாங்கி அவர்களையே எழுதச்சொல்லி கையெழுத்து மட்டும் நீங்கள் போட்டு பணத்தை எடுங்கள்.

11. ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதாயிருந்தால் துணைக்கு நம்பகமான ஒருவரைக் கூட்டிக்கொண்டு போகவும். அப்படிக் கூட்டிக்கொண்டு போகும் நபருக்கு 100 ரூபாய் கொடுக்கவும். அப்போதுதான் அடுத்த தடவை கூப்பிடும்போது உற்சாகமாக வருவார்.

12. இப்படி செய்தால் உங்கள் பணம் உங்கள் பெயரில் பத்திரமாக இருக்கும்.

13. உங்கள் காலத்திற்குப் பிறகு??? இதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்க்ள?  யாரோ எப்படியோ என்னமோ செய்து கொள்ளுகிறார்கள்? உங்களுக்கென்ன, பேசாமல் உங்கள் படுக்கையில் (?!) படுத்துக்கொண்டிருங்கள்.