புதன், 25 ஜனவரி, 2012

பொழுது எப்படி போகுதுங்க?


கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குப் போகும்போது சமீப காலங்களில் நான் படும் கஷ்டங்கள் பலவகையானவை. முதல் சங்கடம் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் அறிமுகமில்லாதவர்கள். இதில் ஒன்றும் தொந்தரவு இல்லை. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு எதையாவது கற்பனையில் மூழ்கி இருப்பேன்.

இந்த நூற்றில் ஒருவர் தெரிந்தவர் இருக்கிறாரே அவரிடம் சிக்கிக் கொண்டால்தான் கஷ்டமே ஆரம்பிக்கும். கொஞ்ச நேரம் ஏதாவது பொதுப்படையாகப் பேசிக்கொண்டு இருந்த பிறகு அவர் இந்த பிரம்மாஸ்திரத்தை பிரயோகிப்பார். “பொழுது எப்படி போகுதுங்கஅப்படீன்னு கேப்பார்.

நானோ பணியிலிருந்து ஓய்வு பெற்றவன். ஒரு வேலையும் கிடையாது. வேலைக்குப் போவதென்றாலும் வயது ஆகிவிட்டது. என்னுடைய வயதுக்கு எங்கவது கம்பெனியில் காவல்காரன் வேலைதான் கொடுப்பார்கள். அந்த வேலைக்குப் போவதற்கு என் சுயமரியாதை இடம் கொடுக்காது. ஆகவே வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டுசும்மாஇருக்கிறேன்.

திடீரென்று நம்மைப் பார்த்துபொழுது எப்படிப் போகுதுங்கஎன்று கேட்டால் பதில் சொல்வது கொஞ்சம் கடினம்தான். நான் இதற்கு ஒரு பதில் வைத்திருக்கிறேன்.

காலைல 3 மணிக்கு எழுந்திருப்பனுங்க, பல வெளக்கி மூஞ்சி கழுவிட்டு, சமையல் ரூம்ப்ல போயி ஒரு காப்பி போட்டுக் குடிப்பனுங்க. அப்புறம் கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இன்டர்நெட்ல பிளாக் பார்ப்பனுங்க. அப்புறம் 6 மணிக்கு விடியுதுங்களா, எந்திருச்சு வாக்கிங்க் போவனுங்க, …… .” இந்த ஸ்டேஜ் வரப்பவே பல பேர் வேற கிராக்கிய பார்த்துட்டு ஓடிடுவாங்க.

சில சமயம் அவங்களையே பார்த்துபொழுது போகமாட்டேங்குது, என்ன பண்ணலாம், சொல்லுங்கஅப்படீன்னாப் போதும். பார்ட்டி ஓடிடும்.

அப்புறம் சிலர்பென்சன் எவ்வளவு வருதுஅப்படீம்பாங்க. ஏதோ நான் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படற மாதிரியும், இவர்கள் நமக்கு அனுதாபம் காட்டுகிற மாதிரியும் சீன் போடுவாங்க. உண்மையான பென்ஷனைச் சொன்னால் இவர்கள் ஒன்று நம்ப மாட்டார்கள் அல்லது நான் பொய் சொல்லுகிறேன் என்று நினைப்பார்கள். ஆகவே நான் யாரிடமும் என் உண்மையான பென்ஷன் தொகையைச் சொல்வது இல்லை.

அவர்களிடமே பதில் கேள்வி கேட்பேன். எவ்வளவு வரும்னு நெனைக்கிறீங்க அப்படீம்பேன். என் பென்ஷனில் நாலில் ஒரு பங்கு சொல்வார்கள். ஆமாங்க, ஏறக்குறைய அவ்வளவுதானுங்க வருது என்று சொல்லிவிட்டால் அப்புறம் வாயைத் தெறக்க மாட்டார்கள்.
இப்படியாகத்தானே என் ஓய்வு வாழ்க்கை ஒடிக்கொண்டு இருக்கிறது.