வெள்ளி, 9 மார்ச், 2012

நிறைவேறின ஆசைகள்

கொஞ்சும் சலங்கை என்ற சினிமா வந்த புதிதில், 1962 என்று ஞாபகம், சிங்கார வேலனே தேவா என்ற பாடல் பிரபலமாகி பட்டி தொட்டிகளிலெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தது. திருமதி ஜானகி திரை உலகத்தில் பிரவேசித்த முதல் பாடல். ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல். திரு காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையோடு பின்னிப்பிணைந்த பாடல். அதற்கு முன்பும் அப்படி ஒரு பாடல் வந்ததில்லை. அதற்குப்பின்பும் அந்த பாடல் மாதிரி வரவில்லை.

நான் அப்போதுதான் முதுகலை படிப்பு முடித்துவிட்டு வேலையில் சேர்ந்திருந்தேன். படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்கவேண்டும். குடித்தனம் நடத்தவேண்டும். அப்போது நான் பிரம்மச்சாரிதான். இருந்தாலும் பாட்டியுடன் தனிக்குடித்தனம். என் அம்மாவிற்கும் பாட்டிக்கும் ஆகாது. ஆனால் நான் பாட்டி செல்லம். ஆகவே என்னை பாட்டியுடன் தனிக்குடித்தனம் அனுப்பி விட்டார்கள்.

இந்த சிங்கார வேலன் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு ஏக்கம் தோன்றும். ஆஹா, இந்தப் பாட்டை கிராமபோன் ரிக்கார்டில் வீட்டில் போட்டு கேட்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்று ஏங்கியிருக்கிறேன். கிராமபோன் வாங்கும் அளவிற்கு என்னுடைய அன்றைய பொருளாதார நிலை இல்லை. இந்த ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

பல வருடம் கழித்து டேப் ரிகார்டர் வாங்கினேன். அதில் இந்தப் பாடல் கேசட் வாங்கி என் மனம் திருப்தியடையும் வரையிலும் இந்தப் பாடலைக்கேட்டேன். இப்போது கம்ப்யூட்டர், சி.டி.ப்ளேயர், ஐபாட், டேப் ரிகார்டர் என்று பலவித உபகரணங்களும் வீட்டில் இருக்கின்றன. இந்தப் பாட்டு பல வடிவங்களில் இந்த உபகரணங்களில் இருக்கின்றன. ஆனால் அன்று டீக்கடைகளில் ஓரமாக நின்று கேட்டு ஆனந்தித்த அனுபவம் இப்போது வரவில்லை.

ஒரு பொருள் இல்லாதபோது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு, அந்தப் பொருளை நாம் அடைந்த பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.

வியாழன், 8 மார்ச், 2012

என் தன்னம்பிக்கை வளர்ந்த விதம்


அனுபவங்கள் இரு வகைப்படும். ஒருவகை நேர்மறை வழி. இந்த வழியில் போ, இந்த மாதிரி செய், இப்படிப் பேசு என்றெல்லாம் சொல்லிக்கொடுப்பது நேர் மறை வழி.

இன்னொரு வழி எதிர்மறை வழி. இப்படிப்போகாதே, இப்படி செய்யாதே, நீ செய்வது தப்பு, இப்படியெல்லாம் சொல்வது எதிர்மறை வழி.
இரண்டு வழிகளிலும் நன்மை-தீமை இரண்டும் உண்டு. இதுதான் சிறந்த வழி என்று எதையும் கூற முடியாது.

நான் இரண்டாவது வழியில் வளர்ந்தவன். எந்த காரியத்தையும் செய்து முடித்தபின் என் பெற்றோர்கள் குறை கூறுவார்களே தவிர, எந்தக் காரியத்தையும் முன்கூட்டியே இப்படி செய் என்று கூற மாட்டார்கள். ஆகவே நான் தனிக்காட்டு ராஜாவாகவே வளர்ந்தேன். எப்படி என்றால் எந்தக் காரியத்தையும் சொல்வதில்லை. நானாகவே செய்து கொள்வேன். அதனால் வரும் நன்மை தீமைகளை நானே ஏற்றுக் கொள்வேன்.

இப்படி வளர்ந்து கொண்டிருந்தபோது நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும்போது எனக்கென்று சிலபல அபிலாக்ஷைகள் தோன்ற ஆரம்பித்தன. பெரியதாக ஒன்றுமில்லை. ஒரு பென்சில் வாங்கவேண்டும் என்ற ஆசை வந்தது. சாதாரண பென்சிலாக இருந்தால் வீட்டில் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் புது பென்சிலை முழுதாகத் தரமாட்டார்கள். நான் தொலைத்து விடுவேனாம். அதனால் அந்தப் பென்சிலை இரண்டாகத் துண்டு பண்ணி ஒவ்வொரு துண்டாகத்தான் கொடுப்பார்கள்.

நான் ஆசைப்பட்டது இந்தப் பென்சில் அல்ல. அப்போது புதிதாக கடைகளில் ஒரு பென்சில் விற்பனைக்கு வந்திருந்தது. அது எப்படி என்றால், பென்சிலின் எழுதும் பகுதியான கருப்பு "லெட்" மட்டும், ஒரு பென்சில் சைசில், ஐந்து அங்குல நீளத்தில், வெளியில் பெயின்ட் அடித்து, பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வசதியாக ஒரு கிளிப்பும் சேர்த்து வந்திருந்தது. இதைப் பார்த்ததும் அதை நான் வாங்கி ஸ்டைலாக பாக்கெட்டில் குத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது.

ஆனால் அதன் விலையோ என் சக்திக்கு மீறியதாக இருந்தது. என் சக்தி அந்தக் காலத்தில் காலணாதான். அதாவது இந்தக் காலத்திய ஒன்றரை பைசா. அந்தப் பென்சிலின் விலை இரண்டணா அதாவது பனிரெண்டு பைசா. என்ன செய்வது என்று பல நாட்கள் இரவும் பகலும் யோசித்தேன். ஒரு வழியும் சிக்கவில்லை. வீட்டில் அம்மா வைத்திருக்கும் பணத்தில் திருடினால் அப்பா என் முதுகில் டின் கட்டி விடுவார். அது தவிர இதற்கு முன் அவ்வாறு காசு திருடிப் பழக்கமுமில்லை.

இப்படி இருக்கையில் ஆபத்பாந்தவனாக ஒரு நண்பன் காசு சம்பாதிக்க ஒரு வழி காட்டினான். அந்தக் காலத்தில் கடைக்காரர்கள் தாங்களே  காப்பிக் கொட்டையை வறுத்து பொடி பண்ணித்தான் விற்பார்கள். அந்தக் காலத்தில் காப்பிக்கொட்டையை வறுக்க ஒரு உபகரணம் உபயோகப்படுத்துவார்கள். இந்தக் காலத்தில் தார் ரோடு போடும்போது தாரையும் ஜல்லியையும் சேர்த்து ஒரு டிரம்மில் போட்டு கீழே தீ மூட்டி கலக்குவதற்கு ஒரு உபகரணம் இருக்கிறதல்லவா? அதை ஒரு ஆள் ஒரு கைப்பிடியினால் சுத்திக்கொண்டே இருப்பானல்லவா? அதே மாதிரி சிறிய அளவில் காப்பிக்கொட்டை வறுப்பதற்கு ஒரு உபகரணம் இருந்தது. இதை 40 நிமிடம் சுற்றினால் காப்பிக்கொட்டை வறுபட்டுவிடும்.

இந்த வேலைக்கு தினக்கூலியில் ஆள் போட்டால் கட்டுப்படியாகாது. ஆகவே கான்ட்டிராக்ட் முறையில் இந்த வேலையைக் கொடுப்பார்கள். ஒரு பேட்ச் காப்பிக்கொட்டையை வறுப்பதற்கு ஐந்து அணா கூலி. அதாவது முப்பத்தியொரு பைசா. இந்த வேலை சரியான போர் வேலை. இடைவிடாமல் அந்த டிரம்மை சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும். சற்று நேரம் சுற்றாமல் விட்டால் கீழ்ப்பகுதி கொட்டைகள் கறுகிவிடும். ஆகவே இந்த வேலைக்குப் பெரிய ஆட்கள் வரமாட்டார்கள். சிறுவர்களைத்தான் இந்த வேலைக்கு உபயோகப்படுத்துவார்கள். ஸ்கூல் லீவு தினங்களில் ஸ்கூல் சிறுவர்கள் இந்த வேலைக்குப் போவார்கள். அவர்களுக்கு கொஞ்சம் பாக்கெட் மணி (Money)  கிடைக்கும்.

இந்த வாய்ப்பைப் பற்றி என் நண்பன் சொன்னான். உடனே என் மூளை ஆஹா, நம் ஆசை நிறைவேறும் நாள் வந்து விட்டது என்று அங்கே போனேன். ஒரு பேட்ச் காப்பிக்கொட்டை வறுக்கும் வேலை கொடுத்தார்கள். வறுத்து முடித்ததும் கையில் ஐந்தணா கொடுத்தார்கள். உடனே நான் என்ன செய்திருப்பேனென்று நீங்கள் யூகித்திருப்பீர்கள். ஆம், உடனே ஓடிப்போய் அந்தப் பென்சிலை வாங்கி சட்டைப் பையில் குத்தி அழகு பார்த்தேன். தலை நிமிர்ந்து விட்டது. 

இப்படியெல்லாம் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தால் வீட்டில் யாரும் கண்டுகொள்ள மாட்டார்களா என்று கேட்கிறீர்களா? அதுதான் முதலிலேயே சொன்னேன் அல்லவா? என் காரியங்களுக்கு நானே பொறுப்பு. சாப்பாட்டு நேரத்திலும் தூங்கும் நேரத்திலும் வீட்டில் இருந்தால் போதும். மற்ற நேரத்தில் எங்கு போனாலும் யாரும் கவலைப்படமாட்டார்கள். அப்படி ஒரு சுதந்திரத்தை அந்தக் காலத்தில் அனுபவித்தேன். பையன் எங்கே என்று யாராவது வீட்டிற்கு வருபவர்கள் கேட்டால், "கழுத, எங்கயாவது ஊர் சுத்திக்கிட்டு இருக்கும், சோத்து நேரத்துக்கு வந்துடும்" என்று சொல்வார்கள்.

இப்படியாக நான் முதன் முதலில் தனியாக என் உழைப்பில் பணம் சம்பாதித்ததில் என் தன்னம்பிக்கை வளர ஆரம்பித்தது. நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு (ஹைஸ்கூல் படிக்கும்போது) இன்னும் பல வகைகளில் பணம் சம்பாதித்தேன். அதைப் பற்றி தனியாக பதிவு போடுகிறேன்.

புதன், 7 மார்ச், 2012

நிர்வாணபுரியில் ஒரு பைத்தியக்காரன்


பழமொழியைப் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எங்க ஊர்ல கடைவீதிக்குப் போனால் ஒவ்வொரு ஜவுளிக்கடை வாசலிலும் ஒரு பையன் அல்லது ஆள் இருப்பான். அந்த வழியில் போகிறவர்களையெல்லாம் " அம்மா வாங்க, ஐயா வாங்க, நல்ல துணிகள் சலீசாக இருக்கு" என்று கூவி அழைத்தவாறே இருப்பான். அவனுக்கு அதுதான் வேலை. சம்பளம் அதுக்காகத்தான்.

பழனிக்குப் போனால் பழக்கடைக்காரர்கள் இவ்வாறு ஆட்கள் வைத்து தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள்.

இதே டெக்னிக்கை சோப்புக் கம்பெனிகள் எப்படி உபயோகப்படுத்தினார்கள் என்றால், தங்கள் சோப் சுற்றிவரும் காகிதத்தை நல்ல வர்ணத்துடனும் ஒரு சினிமா நடிகை போட்டோவுடனும் போட்டார்கள். பிறகு ஏறக்குறைய எல்லாப் பொருட்களின் பேக்கிங்க்குகளும் மிகவும் கவர்ச்சிகரமாக மாறின.

சரக்கு எப்படியிருந்தாலும் அது நல்ல முறையில் கவர்ச்சிகரமாக பேக் செய்தால்தான் விறபனை ஆகும் என்ற நிலை வந்து விட்டது. எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் கல்யாண தினத்தில் பல ஆயாரம் செலவழித்து மேக்கப் போடுகிறார்கள்.

இந்த நிலை வந்த பிறகு விளம்பரக் கம்பெனிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. விளம்பரத்துக்காக பெரும் தொகையை கம்பெனிகள் செலவிடுகின்றன.

நிஜ உலகில் இருக்கும் இந்த நிலை பதிவுலகத்திலும் எதிரொலிக்கிறது. ஆள் வைத்துக் கூவுவதற்குப் பதிலாக ஈமெயில் ஆனுப்புகிறார்கள். கவர்ச்சி பேக்கிங்க்குக்குப் பதிலாக கவர்ச்சிகரமான தலைப்பு வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இந்த டெக்னிக்குகளெல்லாம் தேவைப்படுகின்றன. என்னுடைய சரக்கு அருமையான சரக்காக்கும், எனக்கு இந்த கவர்ச்சிகளெல்லாம் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் சரக்கு விலை போவதில்லை.

என்னுடைய பதிவில் இந்தத் தத்துவத்தை பரிசோதனை செய்து பார்த்தேன். கவர்ச்சிகரமான தலைப்பு நிச்சயமாக அதிக வாசகர்களைக் கொண்டு வருகிறது. ஆனாலும் எனக்கு அந்த மாதிரி தலைப்புகள் வைக்க கஷ்டமாக இருக்கிறது. ஆகவே நான் பைத்தியக்காரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

திங்கள், 5 மார்ச், 2012

மட ஆசிரியனும் மணியான மாணவனும்.


நான் சுமார் பத்து வருடம் விவசாய இளங்கலை மாணவர்களுக்கு ஆசிரியனாக இருந்தேன். அதனால் பல இடங்களில் என் பழைய மாணவர்கள் என்னைப்பார்த்து வணக்கம் சொல்லி நலம் விசாரிப்பார்கள். மனதுக்கு இதமாகவும் பெருமையாகவும் இருக்கும். இந்த மாதிரி பல சமயங்களில் நடக்குமாதலால் கொஞ்சம் தலைக்கனம் வந்துவிட்டது. (அந்தக் காலத்தில் ஆகாயத்தைப் பார்த்துத்தான் நடப்பேன். தரையைப் பார்த்து நடக்கும் வழக்கம் இல்லை).

ஒருவர் அனுபவம் பெறப்பெற, அவருக்கு பதவி உயர்வு கொடுப்பது அரசு முறைமை. அப்படி நான் ஆசிரியப்பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று ஆராய்ச்சிப்பணி மேற்பார்வையாளராக (Professor and Head) தஞ்சாவூருக்கு மாற்றலானேன். அங்கு எங்கள் ஆராய்ச்சிப் பண்ணை நாகப்பட்டினம் ரோடு மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. எங்கள் பண்ணை வளாகத்திலேயே விவசாய இணை இயக்குநர் அலுவலகமும் இருக்கிறது.

இந்தப் பண்ணையின் ஆபீஸ் தஞ்சாவூரில் இருக்கிறது. பண்ணை தஞ்சாவூர் டவுனிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. டவுன் பஸ்கள் அடிக்கடி இல்லை. வரும் பஸ்களும் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த ஸ்டாப்பில் நிறுத்தமாட்டார்கள். நான் காலையில் பண்ணைக்குப் போய்விட்டு 12 மணி வாக்கில் ஆபீஸ் திரும்புவேன். அப்போது அந்த பஸ் ஸ்டாப்பில் யாராவது நின்றிருந்தால் அவர்களை என் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்து டவுனில் இறக்கி விடுவது உண்டு. பொதுவாக விவசாய இணை இயக்குநர் ஆபீசுக்கு வரும் ஆட்கள் அப்படி நிற்பார்கள்.

ஒரு நாள் அப்படி ஒருவரை ஏற்றிக்கொண்டேன். ஜீப்பில் வரும்போது அவர் என்னைத் தெரிகிறதா, சார் என்று கேட்டார்.

நான்தெரியவில்லையே, நீங்கள் யார்என்று கேட்டேன்.

அவர் : நான் உங்களிடம் படித்த மாணவன் சார். என்றார்.

எனக்கு கர்வம் தலைக்கு ஏறி விட்டது. நம் மாணவர் ஒருத்தர் நம்மை ஞாபகம் வைத்திருக்கிறார், ஆஹா, என்னே நம் மகிமை என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு மேலும் விசாரித்தேன். எந்த வருஷம் படித்தீர்கள், பெயர் என்ன என்றெல்லாம் விசாரித்த பிறகு அவர் சொன்னார்.

சார், நீங்கள் கெமிஸட்ரியில் என்னை பெயில் பண்ணிவிட்டீர்கள், என்றார். அப்போது நான் கெமிஸ்ட்ரி அசிஸ்டன்ட் புரொபசராக இருந்தேன்.

நான்: ஐயையோ, அப்படியா, வருந்துகிறேன், வேண்டுமென்று நடந்திருக்காது, என்றேன்.

அவர்: பரவாயில்லை, சார், அப்படி பெயிலானதினால்தான் பிரைவேட் கம்பெனியில் சேர்ந்து இப்போது நன்றாக இருக்கிறேன், என்றார்.

நான்: அப்படியா, ரொம்ப சந்தோஷம் என்றேன்.

இதற்கு அப்புறம்தான் கிளைமாக்ஸ். போட்டாரே ஒரு போடு.
இல்லையென்றால் நான் உங்கள் மாதிரி அசிஸ்டென்ட் புரொபசர் ஆகி லோல்பட்டுக் கொண்டிருந்திருப்பேன், என்றார்.

நான் காற்றுப் போன பலூன் மாதிரி நொந்து நூடுல்ஸ் ஆனேன்.



வெள்ளி, 2 மார்ச், 2012

மலைவாழ் மக்களின் விருந்தோம்பல்



நான் மதுரையில் வேலையில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம். குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்படியே அலுவலக வேலை ஒன்றையும் முடித்துவிடலாம் என்று திட்டம்.

அதன்படி கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தூரத்திலுள்ள பண்ணைக்காடு என்னும் கிராமத்திற்குப் போகவேண்டும். அங்குள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு மதுரை விவசாயக் கல்லூரியில் மண்வளப் பரிசோதனை செய்யும் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது. மண்வளப் பரிசோதனை செய்யும் உபகரணங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அதை வைத்து அவர் எவ்வளவு மண் மாதிரிகள் பரிசோதனை செய்திருக்கிறான் என்று ஆய்வு செய்வதுதான் என் பயணத்தின் நோக்கம்.

காலை சுமார் 11 மணிக்கு அந்த ஊருக்குப் போய் சேர்ந்தேன். அந்த இளைஞனுக்கு முன்பே தபால் மூலம் தகவல் அனுப்பியிருந்ததால் அவர் என்னை வரவேற்கத் தயாராக இருந்தார். அவர் வேலைகளைப் பார்த்து அவருக்கு சில வழிமுறைகளைச் சொல்லி முடிக்கும்போது ஏறக்குறைய 1 மணி ஆகிவிட்டது. அவர்கள் வீட்டில் எனக்காக விருந்து தயார் பண்ணிவிட்டார்கள். அதை மறுத்துவிட்டுப் போவது நாகரிகமல்ல என்பதால் விருந்தைச் சாப்பிட்டேன். சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின்பு கொடைக்கானலுக்குப் புறப்பட்டேன். அவர்கள் வீட்டிலிருந்து பஸ் நிற்குமிடத்திற்கு மூன்று பேர் துணைக்காக வந்தார்கள். அதில் ஒருவர் ஒரு பையில் நிறைய ஏதோ போட்டு எடுத்துக் கொண்டு வந்தார்.


அதில் ஒரு கிலோ காப்பிக்கொட்டை, ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்கள், ஒரு சீப்பு மலைவாழைப்பழம் ஆகியவை இருந்தன. இது எனக்குப் பிற்பாடுதான் தெரிந்தது. பஸ் நிலையத்திற்கு வந்து சிறிது நேரத்தில் தூரத்தில் பஸ் வருவது தெரிந்ததும் அந்தப் பையை அவர்கள் என்னிடம் கொடுத்து ஊருக்கு கொண்டுபோங்கள் என்றார்கள். நான கொஞ்சம் பிகு பண்ணிப் பார்த்தேன். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக என் கையில் கொடுத்து விட்டார்கள். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. பணம் பத்து ரூபாயை என்னிடம் பஸ் சார்ஜுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தார்கள். நான், ஐயா, எனக்கு நீங்கள் இந்தப்பையைக் கொடுத்ததே அதிகம், ஏதோ அன்பினால் கொடுக்கிறீர்கள் என்று வாங்கிக்கொண்டேன். பஸ்சிற்கும் பணம் கொடுப்பது என்பது அதிகப்படியான சமாசாரம், எனக்கு அரசு பயணப்படி கொடுக்கிறது என்று சொல்லி அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டேன்.


அதற்கு அப்புறம் நடந்ததுதான் கிளைமாக்ஸ். நான் பஸ்சில் ஏறியதும் அவர்கள் அந்தப் பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து விட்டு டிக்கட்டையும் மீதி சில்லறையையும் என்னிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். கண்டக்டரிடம் நான் பணம் கொடுத்து டிக்கட் கேட்டால் கண்டக்டர் இந்த விவரத்தைச் சொல்லி, டிக்கட்டும் மீதி சில்லறையையும் என்னிடம் தந்தார். மலைவாழ் மக்களின் விருந்தோம்பும் பண்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.

  

புதன், 29 பிப்ரவரி, 2012

செயல் திட்டம் (புராஜெக்ட் வொர்க்) என்றால் என்ன?


நேற்று நடைப் பயிற்சிக்காக போகும்போது தெரு முனையில் ஒரு பது விளம்பரத்தைப் பார்த்தேன். Final Year Projects இங்கே கிடைக்கும் என்று எழுதியிருந்தது. என்னவென்று விசாரித்தேன். அந்த விசாரணையில் தெரிய வந்ததை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.

இப்போதுள்ள பாடத்திட்டங்களின்படி ஏறக்குறைய எல்லா தொழில் நுட்பப் படிப்புகளுக்கும் அந்தப் படிப்பின் கடைசி வருடத்தில் ஒரு புராஜெக்ட் வேலை கொடுத்து அதை முடித்து வருமாறு சொல்வார்கள். முன்பெல்லாம் இது முதுகலைப் பட்டப் படிப்புகளுக்குத்தான் இருந்தது. அதை தீஸிஸ் சமர்ப்பித்தல் என்று சொல்லுவார்கள்.

அந்த தீஸிஸ் வேலை என்றால் என்னவென்றால், ஒவ்வொரு மாணவனும் ஒரு ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும். இதை ஒரு ஆய்வாளர் பரிசீலித்து, படிக்கும் படிப்புக்கு ஏற்றதாக இருக்கிறது என்றால்தான் அந்த மாணவனுக்கு அந்தப் பட்டம் கிடைக்கும். இந்த தீஸிஸ் வேலையில் அந்த மாணவனை வழி நடத்த ஒரு அனுபவம் உள்ள ஆசிரியரை வழிகாட்டியாக நியமிப்பார்கள். அவர் அந்த மாணவர் எழுதும் தீஸிஸ் அவராகவே புள்ளிவிபரங்கள் சேகரித்து அவராலேயே எழுதப்பட்டது என்று சான்று கொடுக்கவேண்டும். அப்போதுதான் அந்த தீஸிஸ் முழுமையானதாகக் கருதப்படும்.

இந்த வேலை எதற்காக என்றால், ஒரு முதுகலைப் பட்டப்படிப்பு படித்த மாணவனிடம் ஒரு வேலை கொடுத்தால், அந்த வேலையை எவ்வாறு திட்டமிட்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்து அந்த வேலையை முடித்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும் திறமையை வளர்ப்பதற்காகத்தான். அப்போதுதான் அவன் எந்த வேலையில் சேர்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் அந்த வேலையைச் செய்வான்.
நமது கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் அவ்வப்போது கொண்டு வருவார்கள். அது எதற்காக என்றால் அப்போதுதான் நமது மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்குமாம். இந்த மாற்றங்களில் எல்லா வித தொழில் படிப்புகளுக்கும் இந்த செயல் திட்டத்தை கட்டாயமாக்கினார்கள். நல்ல, உயரிய நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட மாற்றம்தான் இது.

ஆனால் கால ஓட்டத்திலே இந்த முறை சீரழிந்து, வெறும் சடங்காக மாறிவிட்டது. இது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாக தற்போது இருக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்குப் பக்கத்திலும் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டர்கள் இந்த செயல்திட்ட அறிக்கையை ரெடிமேடாக தயார் செய்து ஒரு விலை போட்டு கொடுக்கிறார்கள். மாணவர்களும் அதை வாங்கி அப்படியே கல்லூரியில் கொடுத்து விடுகிறார்கள். அவர்களை மேற்பார்வை பார்க்கும் ஆசிரியர்களும் சான்று கொடுத்து விடுகிறார்கள்.  

ஆக மொத்தம் செயல் திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. காலத்தின் மாற்றத்தினால் ஏற்படும் சீரழிவு இது. எங்களைப் போல் வாழ்வின் இறுதியில் இருக்கும் ஆசிரியர்கள் புலம்பத்தான் முடியும்!