வியாழன், 17 மே, 2012

நேனோ டெக்னாலஜி


இது ஒரு விஞ்ஞானத் தொழில்நுட்பப்பதிவு. இது கொஞ்சம் படித்துப் புரிந்து கொள்வது சிரமம். படித்துவிட்டு மொக்கை என்று சொல்லாதீர்கள். சும்மா, சும்மா தாய்க்குலத்தை கிண்டல் செய்து மட்டும் பதிவுகள் எழுதினால் நான் விஞ்ஞானி என்று உலகிற்கு எப்படித் தெரியும்?

நரி வாலறுந்த கதை உங்களுக்குத் தெரியும். அது எப்படி எல்லா நரிகளையும் வாலறுக்க வைத்தது என்பதுவும் உங்களுக்குத் தெரியும்.

அது போல இப்பொழுது விஞ்ஞானிகள் ஒரு புது வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதுதான் "நேனோ டெக்னாலஜி" என்னும் வார்த்தை. அதாவது இந்த டெக்னாலஜி உலகத்தை அப்படியே புரட்டிப் போடக்கூடிய டெக்னாலஜி என்று சொல்லப்படுகின்றது.

இது என்னவென்று தெரிந்து கொள்ளலாம் என்று கூகுளைப் புரட்டிப் பார்த்ததில் நான் அறிந்தவற்றை இங்கே கூறுகிறேன்.

அதற்கு முன் சில விஞ்ஞான வார்த்தைகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

Atom: அணு: இந்த வார்த்தையை எல்லோரும் அறிவோம். உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணிக்களால் ஆனவை. அணுக்களைப் பிரிக்க முடியாது என்று முதலில் கருதினார்கள். ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும். அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருக்கின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டது.

நான் இந்த அணுவைப் பற்றி என் முதுகலைப்படிப்பின் போது படித்திருக்கிறேன். பிறகு ஆசிரியரான பிறகு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக மீண்டும் ஆழமாகவும் படித்திருக்கிறேன்.

ஆனால் இதுவரை அணுவைக் கண்ணால் பார்த்ததில்லை. அது எப்படி ஒரு பொருளைக் கண்ணால் பார்க்காமலேயே அதைப் பற்றிப் பாடம் நடத்த முடியும் என்ற கேள்வி இதற்குள் உங்கள் மனதில் தோன்றியிருக்கவேண்டும். அதுதான் தத்துவ ஞானம் என்று சொல்லப்படுவது. ஒன்றைப் பார்க்காமலேயே அது இப்படித்தான் இருக்கும் என்று பலவித ஐதீகங்களைக் கூறி நம்ப வைப்பது.

ஏறக்குறைய கடவுள் நம்புக்கை மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். கடவுளைப் பார்த்தவர்கள் ஒருவருமில்லை. ஆனால் எத்தனை தர்க்க வாதங்களுடன் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள், பாருங்கள்.

Molecule: தனிமங்கள் என்றால் புரியும் என்று நினைக்கிறேன். (Elements). தனிமங்கள் பொதுவாக ஒரு அணு அல்லது இரண்டு அல்லது அதற்கு மேலும் அணுக்கள் சேர்ந்ததாக இருக்கும். இதை அணுக்கூட்டம் என்று சொல்லலாம். இயற்கையில் இதுதான் அடிப்படைக் கூறு. அதாவது எப்படி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கு ஒரு கட்டடம் அருவாகிறதோ அவ்வாறே இந்த அணுக்கூட்டங்கள் பல சேர்ந்து ஒரு பொருளாக உருவாகிறது.

Nanometer: இது ஒரு அளவு. ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு. இதை கற்பனை செய்துதான் பார்க்கவேண்டும். அணுக்கூட்டங்களின் பரிமாணம் இந்த அளவுகளில்தான் இருக்கும்.

இப்போது ஏறக்குறைய உங்கள் தலை சுற்ற ஆரம்பித்திருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டுப் பிறகு படியுங்கள்.

அனைத்து ரசாயன மாற்றங்களும் அணுக்களுக்குள்தான் நடைபெறுகின்றன. ஆனால் கட்டிடத்தை ஒவ்வொரு செங்கல்லாக வைத்துக் கட்டுகிறமாதிரி இல்லை. கோடிக்கணக்கான அணுக்கள் பங்கெடுக்கும் நிகழ்ச்சிதான் ரசாயன மாற்றங்கள். இந்த மாற்றங்கள் உலகில் பல்லாயிரக்கணக்கான இடங்களில் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டே இருக்கின்றன.

இந்த ராசாயன மாற்றங்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் நடக்கின்றன. ஒர் எளிய உதாரணம் கொடுக்கிறேன். தாவரங்களின் இலையிலுள்ள பச்சையகங்கள் தன்னுள் இருக்கும் தண்ணீரையும், காற்றில் இருக்கும் கரியமல வாயுவையும் சேர்த்து சூரிய ஒளியின் சக்தியினால் ஸ்டார்ச் உற்பத்தி செய்கின்றது. பகல் நேரங்களில் ஒவ்வொரு விநாடியும் இந்த ரசாயனச் சேர்க்கை நடந்து கொண்டே இருக்கிறது.

இந்த பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் உணவிற்கு இந்த ரசாயன மாற்றமே அடிப்படை. ஆனால் நாம் இதை அணுவளவு கூட கண்டு கொள்வதில்லை. அது பாட்டுக்கு இயற்கையாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் பலனை நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

இப்போது இந்த விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், இந்த மாதிரி தானாக நடக்கும் ரசாயன மாற்றங்கள் வருங்காலத்திற்குப் போதாது. பலவிதமான புதிது புதிதான பொருட்களின் உற்பத்திகள் தேவைப்படும். அதற்காக இந்த ரசாயன மாற்றங்களை நாங்கள் எங்கள் கட்டுக்குள் கொண்டு வரப் போகிறோம். அது எப்படி என்றால் நாங்கள் மிக மிகச் சிறிய தொழிற்சாலைகளை உருவாக்கப்போகிறோம். அவைகளில் ஒவ்வொரு அணுதான் ரசாயன மாற்றங்களில் ஈடுபடும். இப்படி நிறைய தொழிற்சாலைகளை வடிவமைத்து உங்கள் டேபிள் மேல் வைக்கக்கூடிய அளவில் கூடத் தயார் செய்து விடுவோம். அவை உங்களுக்குத் தேவையான பொருட்களை அவ்வப்போது தயார் செய்து கொடுத்து விடும்.


கொக்கு எப்படிப் பிடிப்பது என்று ஒரு கிராமத்தான் ஒரு விஞ்ஞானியைக் கேட்டானாம். அந்த விஞ்ஞானி அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? நல்ல வெய்யில் நேரத்தில் கொஞ்சம் வெண்ணை எடுத்துக்கொண்டு போய் அந்தக் கொக்கின் தலையில் வைத்து விடு. வெயிலில் அந்த வெண்ணை உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும். அப்போது போய் கொக்கை லபக்கென்று பிடித்துக் கொள்ளலாம் என்றானாம்.

அதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லையென்று எனக்குப் பட்டது. புது வார்த்தைகளை உபயோகித்து மக்களை மயக்குகிறார்கள். பழைய கள், புதிய மொந்தை. இந்த நேனோடெக்னாலஜி பற்றி அதிக விவரம் அறிந்தவர்கள் உங்களில் அநேகர் இருக்கலாம். இதைப்பற்றி மேல் விவரங்கள் கொடுத்தால் நானும் இன்னும் கொஞ்சம் அறிவாளியாகிக் கொள்வேன்.


திங்கள், 14 மே, 2012

நீங்கள்தான் குடும்பத் தலைவரா?


புதுசா ஒருவர் இந்திய நாட்டின் ஜனாதிபதி ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குப் பதவிப் பிரமாணம் எடுத்தவுடனே, அவரைக் கொண்டு போய் ஜனாதிபதி மாளிகையில் குடி வைத்து விடுவார்கள். அந்த மாளிகையில் எத்தனை அறைகள் இருக்கின்றன என்று இதுவரை இருந்த ஒரு ஜனாதிபதிக்கும் தெரிந்திருக்காது என்று நம்புகிறேன். அந்த மாளிகையைக் கட்டின இஞ்சினீயருக்குத் தெரிந்திருக்கலாம்.

அந்த புது ஜனாதிபதிக்கு தான்தான் இந்த பரந்த நாட்டின் ஜனாதிபதி என்று உணருவதற்கே சில வாரங்கள் ஆகும். அது மாதிரி நம் நாட்டில் வாழ்க்கை நடத்தும் பலருக்கு, தான்தான் குடும்பத்தலைவர் என்பது மறந்து போயிருக்கும். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

நீங்கள் உங்களை குடும்பத் தலைவன் என்று நினைக்கிறீர்களா? அதை உறுதி செய்ய சில கேள்விகள்.

1. ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் என்கிற இடத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா?

2. குடும்பத்தின் வருமானம் உங்கள் மூலமாக மட்டுமே வருகிறதா?

3. சம்பளம் வாங்கியதும் சம்பளக் கவரை அப்படியே மனைவி கையில் கொடுக்கிறீர்களா?

4. உங்களுடைய அன்றாட செல்வுகளுக்கு மனைவியிடம் வாங்கிக் கொள்கிறீர்களா? அதற்கு மாலையில் கணக்கு சொல்கிறீர்களா?

5. தீபாவளிக்கு உங்களுக்கு புது வேஷ்டி சட்டை உங்கள் மனைவி வாங்கிக் கொடுக்கிறார்களா?

6. பள்ளி சுற்றுலா போக உங்கள் குழந்தைகள் அம்மாவிடம் பர்மிஷனும் பணமும் வாங்குகிறார்களா?

7. தினம் சாப்பிடும்போது உங்களுக்கு அர்ச்சனை நடக்கிறதா?

8. உங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது சமையலறையில் பாத்திரங்கள் உருளுகின்றனவா?

9. காலையில் ஆறிப்போன காப்பியைக் குடிக்கிறீர்களா?

10. வீட்டில் பல முக்கியமான காரியங்கள் உங்களுக்குத் தெரியாமல் நடக்கின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆம்" என்று நீங்கள் பதில் சொன்னால் கண்டிப்பாக நீங்கள்தான் குடும்பத் தலைவர். எந்த சந்தேகமும் வேண்டாம்.



சனி, 12 மே, 2012

உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ.


என்னை மயக்கிய சிங்காரியே

உன்னைக் காணாவிடில் நான் சோர்கிறேன்

உன்னைக் கண்டாலோ உன்மத்தம் அடைகிறேன்

உன் வயது குறைந்தால் கள்வெறி கொள்கிறேன்

உன் வயது கூடினாலோ என் நெஞ்சம் கனக்கிறது

உன் நிறமோ என் குருதியின் நிறம்

காலைச் செவ்வானம் உன்னில் தெரிகிறது

உன்னைக் காணாவிடில் உறக்கம் போகிறது

நீயே எந்தன் உயிர்

நீயே எந்தன் மூச்சு

உன்னை எனக்களித்த

பின்னூட்டமிட்டோரும்

வருகை புரிந்தோரும்

ஓட்டுப் போட்டோரும்

வாழ்க, வாழ்க, வாழ்கவே


அவள் யார்?


இதோ:


அவள்தான் தமிழ்மணம்தர வரிசைப் பெண்





Tamil Blogs Traffic Ranking


வியாழன், 10 மே, 2012

பேசுவது எப்படி?


பேசறதுக்குத் தெரியாதா? பிறந்ததிலிருந்து பேசிக்கொண்டுதானே இருக்கிறோம். இப்ப என்ன புதுசாக் கத்துக்கொடுக்கறாரு இந்த பதிவுலக விஞ்ஞானி அப்படீன்னு நினைக்கறீங்கதானே. உங்க நினைப்பு சரிதான். நம்ம வீட்டுக்குள்ளே, அல்லது ஊருக்குள்ளே விவசாயத்தைப் பார்த்துகிட்டு இருக்கறவங்களுக்கு அது போதும்.


ஆனால், இப்பொழுது எல்லோருக்கும் படிப்பில் ஆர்வம் மேலோங்கியுள்ள காலம். கிராமத்தில் படித்தவர்கள் எல்லாம் அமெரிக்காவில் வேலை பார்க்கும் காலம் இது. நம் கல்லூரிகளில் படிப்பைச் சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு வாழ்க்கைக் கலையை சொல்லிக் கொடுப்பதில்லை. மேல் நாடுகளுக்குச் செல்லும் நம் இளைஞர்களும் இளைஞிகளும் இந்த நடைமுறைகளில் சங்கடப்படுகிறார்கள். ஒவ்வொரு பகுதியாகப் பார்ப்போம்.


முதலில் பேசுவது எப்படி என்று பார்ப்போம். பேசுவது சந்தர்ப்பங்களைப் பொருத்து அமையும். ஒரு நேர்முகத்தேர்வுக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு பத்துப் பதினைந்து பேர்கள் வந்திருக்கலாம். நீங்கள் அவர்களுடன் எப்படி உரையாடுகிறீர்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்படும். ஆகவே நீங்கள் எதிர்பாராத தருணங்களில் கூட உங்கள் பேச்சின் தரம் வகைப்படுத்தப்படுகிறது.


உலகில் ஏறக்குறைய எல்லா செயல்களும் பேச்சின் மூலமாகத்தான் நிறைவேறுகின்றன. ஆகவே அந்தக் கலையை முறையாகக் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம். எனக்குத்தெரிந்த சில குறிப்புகளைக் கொடுத்திருக்கிறேன். வளரும் இளைஞர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


1. உங்கள் குரலின் தன்மை:


கருணாநிதியின் கரகரத்த குரலை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதுவே அவருக்கு அடையாளமாக மாறிப்போய்விட்டது. உங்கள் குரல் மற்றவர்களுக்கு எப்படி கேட்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. நம் குரல் நன்றாகத்தானே இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருப்போம். உங்கள் குரலை டேப் ரிகார்டரில் பதிவு செய்து திரும்ப போட்டுக் கேளுங்கள். அது உங்கள் குரலை சரியாகக் காட்டும்.


பேச்சின் ஏற்ற இறக்கங்கள், வேகம், பேச்சின் சத்த அளவு, இடைவெளிகள் இவைகளை கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்கே பல குறைகள் தெரியும். உங்கள் நலனில் உண்மையான அக்கறையுள்ள நண்பர் யாருக்காவது அதைப் போட்டுக் காட்டுங்கள். அவருடைய கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். எந்தெந்த வகைகளில் உங்கள் பேச்சை முன்னேற்ற முடியும் என்று யோசித்து அந்த மாற்றங்களை யடைமுறைப்படுத்துங்கள். சில நாட்களில் உங்கள் பேச்சின் தொனி மாறுவதை உணருவீர்கள்.


2. வார்த்தைகள்:


உங்கள் பேச்சில் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. அடக்கம், பணிவு, அன்பு இவைகளுடன் கூடிய வார்த்தைகள் இனிமையானவை. கேட்பவர்களை மயக்கக் கூடியவை. உங்களுடைய மதிப்பைக் கூட்டக்கூடியவை. பேசுமுன் யோசனையும் சிந்தனைத் தெளிவும் இருந்தால் பொருத்தமான வார்த்தைகளை உபயோகிக்க முடியும். ஆகவே இதில் கவனம் தேவை.


3. உணர்ச்சி வசப்படுதல்.


ஒருவரைக் கெடுக்க வேறு யாரும் வரவேண்டியதில்லை. அவரவர்களின் வார்த்தைகளே அவர்களை குழி தோண்டி அதில் தள்ளி விடும். பேச்சின் இடையில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்கள் அறிவு மங்கி வார்த்தைகள் தாறுமாறாக வெளிப்படும். இதுதான் மிகவும் கொடுமையான நிகழ்வு. இத்த் தவிர்க்க முறையான பயிற்சி தேவை.


4. தெளிவு:


உங்கள் பேச்சு தெளிவாக இருக்கவேண்டும். தேவையில்லாத வார்த்தைகளை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது. தொலுக்கட்சியில் ஒளிபரப்பப் படும் நேர் காணல் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கேட்டால் இந்த மாதிரி தவறுகளை காணலாம். உதாரணமாக "வந்து" என்கிற வார்த்தை. இதை தைவையில்லாமல் பேச்சின் நடுவே அடிக்கடி உபயோகிப்பார்கள். இத் பேச்சின் சுவையைக் கெடுக்கும்.


5. இடம், பொருள், ஏவல் தெரிதல்:


உங்கள் பேச்சு சந்தர்ப்பத்திற்கு பொருத்தமாக இருக்கவேண்டும். துக்கவீட்டில் நகைச்சுவைக்கும் கல்யாண வீட்டில் ஒப்பாரிக்கும் இடமில்லையல்லவா? இதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் நாலு பேர் இருக்கும்போது பாராட்டவும். கண்டிக்கவேண்டுமென்றால் தனிமையில் கண்டிக்கவும்.


இன்னும் பல உத்திகள் இருக்கும். எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஒன்றை மட்டும் மறக்காதீர்கள். உங்களை உங்கள் பேச்சை வைத்துத்தான் எடை போடுவார்கள். எல்லோரும் பேச்சில் திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

செவ்வாய், 8 மே, 2012

புதிதாக கல்யாணம் செய்பவர்களுக்கு


கல்யாணம் செய்யப்போகும் ஆண்களுக்கு மட்டும். பெண்களுக்கான குறிப்புகளை தாய்க்குலப் பதிவர்களைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கல்யாணம் செய்பவர்கள் இரு வகைப்படுவர். முதல் வகை தாய் தகப்பன் பேச்சைக்கேட்டு நடப்பவர்கள். இரண்டாம் வகை தாங்களே தங்களுக்குத் தலைவன் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்தப் பதிவிலுள்ளவைகள் முதல் வகைக்கு மட்டும். இரண்டாம் வகைக்கு எந்த ஆலோசனைகளும் தேவையில்லை. அவர்களே ராஜா, அவர்களே மந்திரி.

அம்மாவின் முந்தானையை இன்னும் விடாத ஆண்மக்கள் முதலில் அதை விடவும். இரண்டாவது நீங்கள் ஒரு ஆண்மகன் என்பதை மறக்காமலிருக்கவேண்டும்.

உங்களுக்குத் துணை தேடும்போது உங்கள் குடும்பத்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித எதிர்ப்பார்ப்பு இருக்கும். உங்கள் அம்மாவிற்கு அவர்களுக்குத் துணையாக, குடும்பப் பொறுப்புகளை (அதாவது வேலைகளை) ஏற்றுக்கொள்ளும் ஒரு மருமகள் தேவை. உங்கள் தந்தைக்கு தன் மகனை ஒரு பொறுப்புள்ளவனாக மாற்றக்கூடியவளாக யாராக இருந்தாலும் சரி, அது போதும். உங்களுக்கு ஒரு சினிமா நடிகை அளவில் அழகுள்ள ஒருத்தி வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புகளில் நடுத்தர மக்களிடையே நடப்பது என்னவென்றால், கொஞ்சம் வசதியுள்ள பெண்ணைப்பெற்றவன் நமக்கு கைக்கடக்கமாக ஒரு மாப்பிள்ளை வேண்டுமென்று புரோக்கரிடம் சொல்லி வைத்திருப்பான். அந்த புரோக்கர் வந்து உங்க அம்மாவைச் சரிக்கட்டி கல்யாணத்தை முடிவு செய்து விடுவான். நீங்கள் பொறியில் அகப்பட்ட எலிமாதிரி சிக்கிக் கொள்வீர்கள். இதற்கு மாற்றே கிடையாது.

கல்யாணம் முடிந்து மறுவீடு சம்பிதாயங்கள் முடிகிற வரை எல்லாம் இன்ப மயம்தான். அதற்குப் பிறகுதான் விதி வேலை செய்யும். வளைகாப்பு, தலைப்பிரசவம் முடிந்து தாயையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்த பின்தான் இருக்கிறது உங்கள் வேதனையெல்லாம். ஏன் கல்யாணம் செய்து கொண்டோம் என்று உங்களை வருந்த வைக்கும் அனுபவங்கள் நிறைய ஏற்படும்.

நீங்கள் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் குடும்பம் சீராக ஓடும். இல்லாவிட்டால் சமீப காலங்களில் கோவில் திருவிழாக்களில் தேர்கள் சாய்கின்ற மாதிரி உங்கள் வாழ்க்கையும் சாய்ந்துவிடும்.

ஆகவே கல்யாணம் செய்யப்போகும் இளைஞர்களே, இவைகளெல்லாவற்றையும் யோசித்து முடிவு செய்யுங்கள்.

ஞாயிறு, 6 மே, 2012

ஒரு அனுபவமும் அதன் நீதியும்



இரண்டு தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. நான் வசிக்கும் தெருவில் பாதாளச் சாக்கடை பதிப்பதற்காக குழிகள் தோண்டியுள்ளார்கள். தோண்டின மண் பூராவும் ஒரு புறம் குவித்து வைத்துள்ளார்கள். மண் குவிக்காத பக்கம் ஒரு ஐந்து அடி அகலம் மட்டுமே உள்ளது. அதில் நடக்கும் மக்களும் இரு சக்கர வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தன.

நான் காலை 7 மணிக்கு நடைப்பயிற்சி போய்விட்டு வரும்போது ஒரு கார்க்காரன் படு வேகமாக அந்த இடைவெளியில் சென்றான். நான் அதிசயப்பட்டேன். இதில் கார் செல்ல முடியாதே, இவன் என்ன செய்யப்போகிறான் என்று பார்த்துக்கொண்டே வந்தேன். கொஞ்ச தூரம் போன பிறகு மேலே செல்வதற்கு வழி இல்லை. குறுக்கே சிமென்ட் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்தார்கள்.

அந்த கார் டிரைவர் இறங்கி பாதியாக இருந்த ஒரு சிமென்ட் மூட்டையைத் தூக்கி வீசினான். அது சாக்கடைத் தண்ணீரீல் விழுந்தது. அதைத் திரும்ப தூக்கப் போனவன், ஹூம், இது சர்க்கார் சிமென்ட்டுதானே என்று சொல்லிவிட்டு அதை அப்படியே விட்டு விட்டான். நான் அப்போது அந்த இடத்திற்கு வந்து விட்டேன்.

நான் அவனைப் பார்த்து சொன்னேன். சர்க்கார் சொத்தாயிருந்தால் அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா, அதை எடுத்து தரையில் போடு என்று சொன்னேன். அவன் அதைக்கேட்க நீ யார் என்றான். நான் இந்த வீதியில் குடியிருப்பவன் என்று சொன்னேன். அதற்கு அவன் கண்ட மேனிக்கு சத்தம் போட ஆரம்பித்தான். நீ எங்கே வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் போய்க்கொள், எனக்கு கவலையில்லை என்று தாறு மாறாகப் பேச ஆரம்பித்தான். அப்போதுதான் கவனித்தேன், அவன் ஏகத்திற்கும் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.

இனி இவனிடம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று நான் அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த இடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்ற கொண்டு வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவராவது எனக்குத் துணையாக அவனைத் தட்டிக் கேட்க வரவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் எனக்கு நன்றாகப் பரிச்சயம் ஆனவர்களே. ஒரே தெருவில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்கள்தாம்.

இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் ஆபத்துக் காலங்களில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் தவறு என்பதுதான். பக்த்து வீட்டில் கொலை நடந்தாலும் கூட கதவைப் பலமாக சாத்திக்கொள்வார்களே தவிர உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்.
இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்களே, இந்த நீதியை மனதில் கொள்ளவும்.

சனி, 5 மே, 2012

உணர்ச்சி வசப்படுதலும் அதன் விளைவுகளும்


சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளியான ஒரு செய்தியை அநேகமாக அனைவரும் படித்திருப்பீர்கள்.

கயத்தாற்றில் ஒரு குடும்பம். தாய் தகப்பன், இரண்டு பையன்கள்,பெரியவனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள். வெளியூரில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். மனைவி பெற்றோருடன் இருக்கிறாள். தம்பி ஒரு கழிசடை. குடித்துவிட்டு ஊர்ப்பெண்களை மேய்வதுதான் அவன் வேலை. யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் தம்பி அண்ணியிடமே வம்பு செய்திருக்கிறான். அவள் முடிந்த வரையில் பொறுமையாக இருந்திருக்கிறாள். முடியாமல் போகவே கணவனிடம் புகார் செய்திருக்கிறாள்.

அண்ணன்காரன் அதீத உணர்ச்சி வசப்பட்டு ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்கு இருந்த உணர்ச்சி வெறியில் விவேகம் அவனை விட்டுப் போய்விட்டது. தன் உறவினன் ஒருவனைத் துணைக்கு கூப்பிட்டுக் கொண்டான். தம்பியை நைச்சியமாய் பேசி தங்கள் தோட்டத்து பம்ப் செட் ரூமுக்கு கூட்டிப்போய் குடிக்க வைத்து 70 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டான்.

இதன்பிறகு என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். போலீஸ் கேஸ், சிறை வாசம், கோர்ட்டு விசாரணை, தீர்ப்பு. இந்தக் கூத்து எல்லாம் நடந்து முடிய ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். இந்த சமயத்தில் கேஸ் நடத்த, குடும்பம் நடத்த ஆகும் செலவுகளை எப்படி செய்வது? இருக்கும் சொத்துகளை விற்று செலவுகள் நடக்கும். முடிவில் அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம்.

இதன் பிறகு அவன் மனைவி குழந்தைகள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய எதிர்காலம் எப்படி ஆகும்? உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியத்தினால் என்னென்ன விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன? இந்த நிகழ்வில் எங்கு தவறு நேர்ந்தது?

அந்தக் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் மூத்த மகனை அவன் மனைவியைத் தன்னோடு அழைத்துப் போகச் சொல்லியிருக்க வேண்டும். அது முதல் தவறு. அந்த மூத்த மகனாவது நிலைமையைப் புரிந்துகொண்டு தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அந்த மனைவியாவது நல்ல யோசனை சொல்லியிருக்கவேண்டும். அல்லது அவளுடைய தாய் தகப்பனாவது ஏதாவது மாற்றுத் திட்டங்கள் சொல்லியிருக்கவேண்டும்.

இவைகளெல்லாம் நடக்கவில்லை. கடைசி காலத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவன் செய்த கொலையினால் ஒரு குடும்பம் சீரழிந்து நடுத்தெருவில் நற்கும் நிலை உருவாகிவிட்டது.

இது மாதிரி சம்பவங்கள் இப்போது அதிகமாக நடக்கின்றன. காரணம் பொறுமையின்மை. ஒரு நிமிடம் விளைவுகளைப் பற்றி யோசித்திருந்தால் இந்த செயல்கள் நடந்திருக்குமா?

இதைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்தப் பிரச்சினை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நேரலாம். அப்படி நேரும் பட்சத்தில் உணர்ச்சி வசப்படாமல் அந்தப் பிரச்சினையை கையாள்வது எப்படி என்று இப்போதே யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.

வெள்ளி, 4 மே, 2012

மனச்சோர்வும் தற்கொலைகளும்



வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். இதைத் தவிர காரணமே இல்லாமலும் மனச்சோர்வு ஏற்படலாம். காரணம் எதுவாயினும், இது ஒரு நோய் என்று அறியவேண்டும். பொதுவாக இந்த நோய் தாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது என்று உணர மாட்டார்கள். தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முனைவார்கள். சுற்றி உள்ளவர்கள்தான் சில அறிகுறிகளை வைத்து ஒருவர் இந்த நோயினால் தாக்கப்பட்டுள்ளார் என்று அறிந்து அதற்கான முறையான வைத்தியம் செய்ய வேண்டும்.

இந்த நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்:

  1.   தனிமையை விரும்புதல்: கலகலப்பாக இருக்கும் ஒருவர் தனிமையை விரும்புகிறார் என்றால் அவருக்கு மனக்கலக்கம் ஏற்பட்டுள்ளது என்று அறியலாம்.
  
  2.   நண்பர்களிடம் தொடர்பு இல்லாமை: ஒருவர் வழக்கமாக பழகி வரும் நண்பர்களை விட்டு விலகி இருப்பாரேயானால் அது மனச்சோர்வாக இருக்கலாம்.

  3.   போதை மருந்துகள்/பானங்கள்: இவைகளை உபயோகப்படுத்துதலும் இவைகளுக்கு அடிமையாதலும் நிச்சயமான மன நோய்க்கு அறிகுறிகள்.
  
  4.   பசியின்மை/அதிகப்பசி: இவை இரண்டும் நல்ல அறிகுறிகள் அல்ல. சாதாரணமாக இருக்கும் ஒருவர் சாப்பிடாமலோ அல்லது அதிகமாகச் சாப்பிட்டாலோ அது மனச்சோர்வாக இருக்கலாம்

  5.   எரிந்து விழுதல்/கோபப்படுதல்: வழக்கத்துக்கு மாறான கோபம் அல்லது எரிச்சல் ஒருவரிடம் காணப்படுமாயின் அது மன நோயாக இருக்கலாம்
.
இவ்வகையான மன நோய்க்கு காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த நோய் பீடித்தவருக்கு சரியான கவனிப்பு இல்லையானால் பல விளைவுகள் ஏற்படும். பொதுவாக பலர் தற்கொலை செய்யக் காரணம் மனச்சோர்வே.

குறிப்பாக இளைஞர்களிடத்திலும் வயதானவர்களிடத்திலும் இந்த மனச்சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. சூழ்நிலை மாற்றம், எதிர்பாராத துக்கங்கள், தீராத நோய்கள், பரீட்சையில் தோல்வியடைதல் அல்லது மதிப்பெண்கள் குறைவாக வாங்குதல் போன்ற காரணங்களினால் இந்த சோர்வு ஏற்படலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பவர்கள் கவனமாக இருந்து அந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் யாராவது இந்த சோர்விற்கு ஆளாகி உள்ளார்களா என்று கவனிப்புடன் இருப்பது அவசியம்.

மனச்சோர்வு ஆரம்ப நிலையில் இருந்தால் குடும்ப அங்கத்தினர்களே இதை சரி செய்து விடலாம். நல்ல ஆறுதல், கவனிப்பு, கண்காணிப்பு, ஆலோசனைகள் மூலம் ஒருவரின் மனச்சோர்வைப் போக்கலாம். கொஞ்சம் தீவிரமாக இருந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியம். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இளைஞர்களும், முதியவர்களும் தங்கள் மன வலிமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இது ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பொறுத்தது. குடும்பத்திலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்தக் குடும்பத்தில் யாருக்கும் மனச்சோர்வு வராது.