செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி



நேற்றைய தினத்தந்தியில் வந்த செய்தி. இந்தியாவில் இயற்கை விளை பொருட்கள் விற்பனை ரூ. 1000 கோடியாக உயர்வு. மேலும் விபரங்கள்.

தனியார் துறையைச் சேர்ந்த “யெஸ் பேங்க்” அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இவ்வங்கியின் “இந்திய இயற்கை உணவுப் பொருள்கள் சந்தை” என்ற ஆய்வறிக்கையில் நம் நாட்டில் இயற்கையான முறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் தயாரிப்புகள் பெருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் நாட்டில் இச்சந்தை 22 சதம் சராசரி வளர்ச்சி கண்டு வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல அறிகுறி. மக்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதற்கு இந்த செய்தி நல்ல ஆதாரம். என்னென்ன பயிர்களில் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதென்றால், தேயிலை, பாசுமதி அரிசி, பருப்பு, பருத்தி, நறுமணப்பொருள்கள், எண்ணை வித்துக்கள் ஆகிய பயிர்களில் ஏற்றுமதி ஆகும் பொருள்கள் இந்த விழிப்புணர்வின் கீழ் வருகின்றன.

ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்பது தெரியும். அது மட்டுமல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்கள் என்றால் நிச்சயம் கூடுதல் விலை கிடைக்கும். இந்த ஊக்கத்தினால்தான் இந்தப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.

எப்படியோ, விவசாயிகளுக்குப் பயன் கிடைத்தால் மகிழ்ச்சியே. இந்தியாவில் வசிப்பவர்களுக்கு நேரடியாக இந்த விற்பனை அதிகரிப்பால் பயன் ஏதும் இல்லை. நாம் வழக்கம்போல் செயற்கை விவசாயத்தில் விளைந்த நச்சு கலந்த உணவைச் சாப்பிடுவோம்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

இலவசக் கலாச்சாரம் ஏன்?


இலவசம்னு சொல்லக்கூடாதாம், "விலையில்லா" என்று சொல்லணுமாம். அம்மாவின் லேடஸ்ட் அறிவுறுத்தல். "விலையில்லா" என்றால் மதிப்பில்லாதது என்றே என் களிமண் மூளை சிந்திக்கிறது. அதனால் இலவசம் என்றே நாம் கூறுவோம். இலவசம் என்றாலும் மதிப்பில்லாததுதான். ஆனாலும் இந்த வார்த்தை பழகிப்போனதால் அவ்வளவு கேவலமாகத் தெரியவில்லை.

என் பாட்டி ஒரு கதை சொல்லும். ஒருத்தன் சாப்பிட்டுட்டு இருந்தானாம். அப்போது வீதியில் ஒருத்தன் "யானை வாங்கலியோ யானை, யானை கடனுக்கு விற்கிறோம்" அப்படீன்னு கூவிட்டுப் போனான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய் நிறைய சோறு, வாயைத்திறந்து பேச முடியவில்லை. இடது கையினால் ஐந்து என்று ஜாடை காட்டினானாம். ஆகவே மக்கள் கடனில் கிடைக்கிறது என்றால் யானையைக்கூட ஐந்து வாங்க விரும்புகிறார்கள். கடனும் இலவசமும் ஒன்றுதான் என்று என்னுடைய போன பதிவைப் படித்தவர்களும்முத் தெரியும்.

ஏன் ஒவ்வொரு அரசும் பதவி ஏற்றவுடன் இலவசங்களை அறிவிக்கிறார்கள் தெரியுமா? ரஷ்யப் புரட்சி பற்ற அறிந்தவர்களுக்குத் தெரியும். அந்தப் புரட்சி சமுதாயத்தின் அடித்தள மக்கள் பட்டினியினால் அவதிப்பட்டதால் வந்தது. இதை நம் அரசியல்வாதிகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அடித்தள மக்கள் பட்டினியால் வாடாமலிருக்க தேவையான இலவசங்களைக் கொடுத்து அவர்களை மயக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களும் நாம் மயங்கிக்கிடக்கிறோம் என்ற உணர்வில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் சொந்தக் காசிலிருந்தா இந்த இலவசங்களைத் தருகிறார்கள்? எல்லாம் மக்கள் வரிப்பணத்திலிருந்துதானே நடக்கிறது. அப்படி வரிப்பணம் போதாவிட்டால் கடன் வாங்குகிறார்கள். எங்கிருந்து வாங்குகிறார்கள்? இதற்காகத்தானே உலக வங்கி போன்ற நிறுவனங்க்ள இருக்கின்றன.

சரி, கடன் வாங்கினால் எப்படி திருப்பிக் கொடுப்பது என்று கேட்கிறீர்களா? சுத்த விவரங்கெட்ட ஆளா இருக்கிறீங்களே? என்னுடைய பதிவுகள்ப் படிப்பதில்லையா? இப்பத்தானே ஒரு பதிவு போட்டேன். கடன் வாங்கினால் திருப்பிக் கட்டவேண்டியதில்லை என்று. இந்தக் கொள்கைக்கு அரசுதான் வழிகாட்டி. இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.

இலவசங்களுக்கு வருவோம். சாப்பாட்டுக்கு இலவச அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க என்ன செய்வது? அதற்குத்தான் இலவச டி.வி. யும் இலவச மின்சாரமும். இதெல்லாம் சரி, அப்பப்ப "கிக்" வேண்டுமே, அதற்கென்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதற்குத்தான் வேலை வாய்ப்புத்திட்டம். ஒரு தாளைக்குப் போய் புளிய மரத்தடியில் நான்கு மணி நேரம் உட்கார்ந்து கொண்டு ஒரு தூக்கம் போட்டால், தூங்கி எழுந்தவுடன் ஒரு குவார்ட்டருக்குத் தேவையான காசு கொடுக்கப்படும்.

வெயில் கடுமையாக இருக்கிறதா? இதோ ஃபேன். ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி கை வலிக்கிறதா? இதோ கிரைண்டர். குழம்புக்கு ஆட்டவேண்டுமா? இதோ மிக்சி. என்ன இல்லை நம் தாய்த்திரு நாட்டில்? சரி, நம்ம தோஸ்த் கூடப் பேசணுமே? என்ன பண்றதுன்னு யோசனையா? இதோ செல் போன் வந்து கொண்டே இருக்கிறது.

எல்லாம் சரி, தினசரி வெளிக்கி வருதே, அதுக்கு என்ன பண்றதுன்னு கேக்கப்படாது. இந்தியாவில பொறந்த ஒவ்வொருத்தனுக்கும் இதுக்கு என்ன பண்ணனும்னு தெரியும். ஊரு நாத்தமடிக்குதே? அதப்பத்தி நீ ஏனய்யா கவலைப் படறே? உன் காரியம் ஆச்சா? உன்வேலையைப் பார்த்தமான்னு இரு.


வியாழன், 23 ஆகஸ்ட், 2012

பேங்கில் கடன் வாங்கினால் திருப்பிக் கட்டவேண்டியதில்லை


சில மாதங்களுக்கு முன் ஸ்விஸ் வங்கிகளில் போட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை திரும்பக் கோண்டு வரவேண்டும் என்று எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பார்லிமென்ட்டில் போராட்டம் நடத்தியது ஞாபகம் இருக்கலாம்.

அவர்கள் அப்போது கூறியது, அந்தப் பணம் முழுவதும் கள்ளப் பணம், அதைப் பூராவும் இந்தாயவிற்குத் திரும்பக் கொண்டு வந்தால் இந்தியா வெளி நாடுகளிலுருந்து வாங்கியிருக்கும் கடன் முழுவதையும் அடைத்து விடலாம், கடன் சுமை இல்லாத இந்தியா வேகமாக முன்னேறி, வல்லரசாகிவிடும் என்றெல்லாம் கூறினார்கள். அப்புறம் வேறு பிரச்சினைகள் தோன்ற, இந்த ஸ்விஸ் சமாசாரம் கிடப்பில் போடப்பட்டது.

இன்று காலையில் தினத்தந்தியில் ஒரு செய்தி படித்தேன்.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.1.23 லட்சம் கோடியைத் தாண்டியது, முதல் காலாண்டில் மட்டும் ரூ.11000 கோடி உயர்வு.

இதை சாதாரண மக்கள் பத்தோடு பதினொரு செய்தியாக வாசித்து விட்டுப் போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆனால் நான் தற்பொழுது சமூக மாற்றங்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்ளைப் பதிவில் எழுதி வருகிறேன். பலர் பின்னூட்டத்தில் நல்ல செய்திகளே உங்கள் கண்ணில் படாதா என்று கேட்டதன் விளைவாக இந்தச் செய்தியை உங்கள் கவனத்திற்கு கோண்டு வருகிறேன்.

இந்தச் செய்தியின் சாரம் என்னவென்றால் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிக் கட்டவேண்டியதில்லை என்பதே. எவ்வளவு நல்ல செய்தி பார்த்தீர்களா? இனி மேல் என் மேல் "கெட்டதை மட்டும் பார்ப்பவன்" என்ற பழியைப் போடமாட்டீர்கள் என்று  நம்புகிறேன்.

புதன், 22 ஆகஸ்ட், 2012

ஒரு மனக்கணக்கு


சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

அப்படியானால் ஒரு நாளைக்கு 20 கோடி

100 தியேட்டர் என்றால் தியேட்டருக்கு 20 லட்சம்

1000 தியேட்டர் என்றால் தியேட்டருக்கு 2 லட்சம்

ஒரு நாளைக்கு 4 ஷோ என்றால் ஷோவிற்கு 50000 ரூபாய்

ஒரு ஷோவில் 1000 பேர் என்றால் ஒரு டிக்கட் 500 ரூபாய்

அல்லது

ஒரு ஷோவில் 2000 பேர் என்றால் ஒரு டிக்கட் 250 ரூபாய் 

அதாவது ஒரு நாளில் 1000 தியேட்டர்களில் 4 ஷோவில் பார்த்தவர்கள் 
4000 x 2000 = 8,00,000  = எட்டு லட்சம் பேர் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்து சினிமா பார்த்திருக்கிறார்கள்.

இந்தியா நிச்சயம் வல்லரசாகிறதோ இல்லையோ பணக்கார நாடு ஆகிவிட்டது.
 

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தமிழ்மணம் தரவரிசையில் என்னுடைய வலைப்பதிவு



இன்று (21-8-2012 காலை 8.00 மணிக்கு) என்னுடைய வலைத்தளத்தின் தமிழ்மணத் தரவரிசை 20 வது ரேங்கில் இருக்கிறது. இது ஒரு நல்ல ரேங்க் என்று நான் நம்புகிறேன்.

Tamil Blogs Traffic Ranking

தமிழ் மணத்தின் ந்த அங்கீகாரத்திற்குப் பொறுப்பாளர்கள் என்னுடைய பதிவுகளைப் படிக்கும் நீங்கள்தான். நீங்கள் படிக்கும் தகுதிக்கு என்னுடைய பதிவுகள் இருக்கிறதென்பது எனக்கு ஒரு மனத்திருப்தியைத் தருகின்றது. நான் எழுதுவது ஒரு வீண்வேலை அல்ல என்பதுவும் எனக்கு தெளிவாகிறது.

இந்தப் பெருமையை எனக்களித்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

இயற்கை உரம் எங்கிருந்து கிடைக்கும்?


இயற்கை விவசாயத்தைப் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வு இன்று நம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறது. நல்ல மாற்றம். அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள்  ஆவார்கள். நான் தேசத்துரோகியாக விரும்பவில்லை. முன்பு இருந்தேன். இப்போது மாறி விட்டேன்

தேசத் துரோகிகளுக்கு அவர்கள் முக்தியடைந்த பிறகு நரகப் பிராப்திதான் கிடைக்கும். அங்கு அவர்களை கொதிக்கும் எண்ணைக் கொப்பறைகளில் குளிப்பாட்டிய பின் செயற்கை விவசாயத்தில், செயற்கை உரங்களும், செயற்கைப் பூச்சி மருந்துகளும் அடித்து வளர்க்கப்பட்ட பயிர்களின் மகசூல்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளே கொடுக்கப்படும்.

இயற்கை விவசாயத்தை ஆதரித்தவர்களை எல்லாம், நேராக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரித்த உணவுகள் வழங்கப்படுவார்கள்.

நரகத்தில் இருக்கும் முன்னாள் விவசாய மந்திரி திரு.சி. சுப்பிரமணியம் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட தகவல் இது. அவர்தான் செயற்கை விவசாயத்தை இந்தியாவில் புகுத்தியவர். அவருடைய சகா ஒருவர் இன்னும் இருக்கிறார். அவரும் சுப்பிரமணியம் போன இடத்திற்குத்தான் போவார் என்பது உறுதி.


இயற்கை விவசாயத்தின் முக்கிய அம்சம் "இயற்கை உரங்களை மட்டும்" உபயோகப்படுத்துவது. மற்ற அம்சங்களைப் பிறகு பார்க்கலாம்.

இயற்கை உரங்கள் எங்கிருந்து கிடைக்கும்?

1. மிருகங்களின் கழிவுகள்.
2. மனிதனின் கழிவுகள்
3. பசுந்தாள் உரப்பயிர்கள்
4. மரங்கள் செடிகளில் இருக்கும் இலை, தழைகள்
5. நுண்ணுயிர் உரங்கள்
6. குளங்கள், ஏரிகளில் இருக்கும் வண்டல் மண்

பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் 1960 வரை, மேற்கண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். அப்போது மக்கள் எவ்வளவு ஆரோக்யமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

(தேசத்துரோகிகள் சொல்வதை நம்பாதீர்கள் - அப்போது இந்தியனின் சராசரி ஆயுட் காலம் 45 வருடம் என்றும் இப்போது இந்தியனின் சராசரி வயது 65 என்றும் சொல்வார்கள். தவிர, அப்போது இந்தியாவில் பல பஞ்சங்கள் தலைவிரித்தாடின, ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்றும் சொல்வார்கள். எல்லாம் வயித்தெரிச்சலில் சொல்வது.அவர்கள் எல்லாம் கட்டாயம் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம்).

இந்த இயற்கை உரங்கள் இந்தியாவில் மிகுந்து கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் அறியாமையினாலும் விஞ்ஞானிகளின் துர்ப்போதனையினாலும் இந்த உரங்களைப் பயன்படுத்துவதில்லை. அவை வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றன. தவிர, கால்நடைகளை வளர்ப்பதற்குச் சோம்பல்பட்டு அவைகளை மாமிசத்திற்காக அனுப்புகிறார்கள். மனிதக்கழிவுகளை சேகரித்துப் பயன்படுத்துவதில்லை. விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தவேண்டும். இந்தியாவில் இயற்கை விவசாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். இதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார். இந்தப் போராட்டம் அடுத்த சுதந்திர தினத்தன்று டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கும். அனைவரும் தயாராக இருங்கள். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல விசா கொடுப்பதற்காக சித்திரகுப்தன் ஸ்பெஷல் அலுவலகம் திறக்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்.

தேசப் பற்றுள்ளோரே, இயற்கை விவசாயத்தை ஆதரிப்பீர்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

கீழ்ப்பாக்கத்துக்கு இன்னொரு வழி!

"All roads lead to Rome" அப்படீன்னு இங்கிலீசுல சொல்வாங்க. யாரு சொன்னாங்கன்னு தெரியல. ஆனா நான் சொல்றேன் கேட்டுக்குங்க. ஆன்மீகத்தில எல்லா வழிகளும் கீழ்ப்பாக்கத்திற்கே செல்லுகின்றன.

நேற்று ஒரு வழி பார்த்தோம். இன்று இன்னொரு வழி பார்ப்போம். பிரபஞ்சம் கொஞ்சம் பெரிய சமாசாரம். அதை நெனச்சா தலை சுத்துதுன்னு ரெண்டு மூணு பேர் சொல்லீட்டாங்க. அதனால அதை உட்டுடுவோம். நம்மளுக்கு சௌகரியமா, நம்மளை எடுத்துக் கொள்வோம். நண்பர் GMB சொல்லியிருக்காரு. பிரபஞ்சத்தை உட்டுடுங்கோ, சாமி, நான் யாருன்னு பாருங்கோ, அப்படீன்னு சொல்லீட்டாரு. அதைப் பார்க்கலாமா?

ரொம்ப எளிமையா சொல்லிக்கொடுக்கிறேனுங்க. ஏன்னா, இது ரொம்ப, ரொம்ப பெரிய விசயம். பகவத்கீதை முழுவதும் இதைப் பத்தித்தான் பேசியிருக்காரு, நம்ம கிருஷ்ணன். ரமண மகரிஷி "நான் யார்" அப்டீன்னு கேட்டே அவர் போதனைகளை எல்லாம் முடிச்சிட்டாரு. இதையெல்லாம் நம்ம ஆன்மீகவாதிகள் வருடக்கணக்கில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நான் யார்? ரொம்ப சாதாரணமான கேள்வி. நான் "கந்தசாமி" அப்படீன்னு சொன்னா, உடனே, அது உன் பெயர், நீ யார்னு சொல்லு, அப்படீம்பாங்க.

உங்களுக்குத் தெரிகின்ற இந்த உடல் மற்றும் உள்ளே இருக்கின்ற சதை, ரத்தம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி, இதெல்லாம் சேர்ந்தவன்தான் நான்.

இப்படி சொன்னா உடனே, நீ எப்பொழுது "என் உடம்பு" என்று சொல்கிறாயோ, அப்போதே நீ வேறு, உன் உடம்பு வேறு என்றாகிறதல்லவா, அகையால் நீ யாரென்று சொல்லு, என்பார்கள்.

ஐயா, இந்த உடம்பில்தான் என் உயிர், மனசு, மண்ணாங்கட்டி (நான் களிமண்ணைப் பற்றி எழுதியதை மறந்து விடாதீர்கள்) எல்லாம் இருக்கிறது, இது எல்லாம் மொத்தமா சேர்ந்ததுதான் நான், அப்படீன்னு சொன்னீங்கன்னு வச்சுக்கோங்க. அதுக்கு என்ன பதில் வரும் தெரியுமா, உனக்கு இன்னும் ஆன்மீக ஞானம் பத்தாது, நல்லா ஒரு குருகிட்ட உபதேசம் வாங்கிட்டு வா, அப்புறம் இதைப் பற்றிப் பேசலாம் என்பார்கள்.

எல்லாம் முடிஞ்சு கடைசீல "ஆத்மா"தான் "நான்" என்று முடிப்பார்கள். சரீங்க, ஆத்மான்னா என்னங்கன்னு கேட்டுட்டாப்போச்சு. பகவத்கீதை முழுவதையும் விளக்கிவிட்டுத்தான் ஓய்வாங்க. அதுக்குள்ள நம்ம ஆயுசும் முடிஞ்சு போகும்.

ஆகவே மக்களே, 'நான் யார்" அப்படீன்னு அலையறதை உட்டுட்டு அவங்கவங்க தொழில், பொண்டாட்டி, புள்ளைங்களை ஒழுங்கா கவனிச்சீங்கன்னா போதும். கீதை அதைத்தான் கடைசியா சொல்லுது. மடையா, அர்ஜுனா, போயி சண்டை போடற வேலையைக் கவனி, மிச்சத்தை எல்லாம் நான் பாத்துக்கறேன், அப்படீன்னுதான் கிருஷணன் கடைசியா சொல்லி முடிக்கிறான்.

களிமண்ணுல ஏறுச்சுங்களா? ஆகவே கீழ்ப்பாக்கம் போகாதீங்க, ஊட்லயே இருங்க.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய பிரபஞ்ச ரகசியம்


அதென்ன பெரிய சிதம்பர ரகசியமா? என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். சிதம்பரம் கோவிலில் சிதம்பர ரகசியம் காட்டுகிறேன் என்று சிவாச்சாரியார் உங்களிடம் சொன்னால் நூறு ரூபாய் அவுட் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களைக் கூட்டிக்கொண்டுபோய் ஒரு திரையை விலக்கி ஒரு அறையைக் காட்டுவார்.

"சிதம்பர ரகசியம் பாருங்கோ" என்று கூவுவார். அந்த அறையில் மேற்கூரை இல்லை. ஆகாயம்தான் தெரியும்.  கூடவந்த அனைவரும் கும்பிடுவதைப் பார்த்து நீங்களும் அப்படியே கும்பிட்டு விட்டு ஒன்றும் புரியாமல் வந்து விடுவீர்கள். இது என்ன ரகசியம் என்று கேட்டு உங்கள் அறியாமையை வெளியில் காட்ட வெட்கம். அதனால் பேசாமல் ஊருக்கு வந்து விடுவீர்கள்.

அது ஒண்ணும் ரகசியமே அல்ல. சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். அதாவது சிவன் ஆகாயமாக இருக்கிறான் என்பது ஐதீகம். அதைக் காட்டுமுகமாகத்தான் வெற்றறையைக் காண்பிக்கிறார்கள்.

அது போல பிரபஞ்ச ரகசியம் என்று ஒன்றும் இல்லை. பெரிய உண்மைகளை ரகசியம் என்று கூறுவது மரபு. பிரபஞ்சம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

எந்த தத்துவம் அல்லது பிரச்சினையானாலும் அதைப் புரிந்து கொள்ள தெளிவான சிந்தனை இருக்கவேண்டியது அவசியம். அதற்கு அந்தப் பிச்சினையை அல்லது தத்துவத்தை எளிமைப் படுத்தி, பிறகு அணுக வேண்டும். எடுத்தவுடன் முழுமையாகப் புரிந்து கொள்ள முயன்றால் சிந்தனைக் குழப்பம்தான் ஏற்படும்.

இரண்டாவது, நமக்குத் தெரிந்ததை வைத்துத்தான் தெரியாததைப் புரிந்து கொள்ள முடியும். நான்கு குருடர்கள் யானையைப் பார்த்த கதை எல்லோருக்கும் தெரியுமல்லவா? இதை வைத்து முதலில் இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது, எப்படி உண்டாகியது என்ற இரண்டு சமாசாரங்களை மட்டும் சிந்திப்போம்.

நம் பூமி இருப்பது சூரிய மண்டலம். அதாவது சூரியனை மையமாகக் கொண்டு
பல கிரகங்களும் உப கிரகங்களும் இருப்பது சூரிய மண்டலம். சூரியன் ஒரு நட்சத்திரம் என்று வானவியலில் கூறப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் இதுபோல் ஆயிரக்கணக்கான (இன்னும் முழுதாக கணக்கு எடுத்து முடியவில்லை) நட்சத்திரங்கள் இருப்பதாக வானவியலார் சொல்கிறார்கள்.

நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி புறப்பட்டதிலிருந்து பூமிக்கு வந்து சேர 4.2 ஒளி ஆண்டுகள் ஆகிறதாம். அதாவது ஒளியின் வேகம், விநாடிக்கு 1,86,000 மைல். ஏறக்குறைய மூன்று லட்சம் கி.மீ.  பூமியின் சுற்றளவே சுமார் 36000 கி.மீ. தான்.

முதலில் இதைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஒளி ஒரு செகன்ட்டில் மூன்று லட்சம் கி.மீ. செல்லும். 4.2 வருடங்களுக்கு எவ்வளவு செகன்ட்டுகள். அவ்வளவு செகட்ன்டுகளை மூன்று லட்சத்தினால் பெருக்கினால் எவ்வளவு வருகிறது என்று மனதால் யோசிக்க முடியாது. கம்ப்யூட்டரில் வேண்டுமானால் போடலாம். அப்படிப்போட்டதில் வந்த விடை - மூன்று கோடி லட்சம் கி.மீ. இதை கற்பனை செய்து பார்ப்பதே கடினம்.

ஒருக்கால் நாம் அந்த நட்சத்திரத்திற்குப் போக முடிந்து, அங்கிருந்து அதே திசையில் பார்த்தால் அங்கும் ஒரு நட்சத்திரம் இருக்கும். அது எவ்வளவு தூரத்தில் இருக்கும்? இப்படியே கற்பனை செய்து பாருங்கள். பிரபஞ்சத்தில் இப்படி கோடானுகோடி நட்சத்திரங்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அப்போது இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு தூரம் வியாபித்திருக்கும்?

 இது எங்கு முடியும்? அப்படி முடிந்தால் அதற்கு அப்பால் என்ன இருக்கும்? இது ஒரு முடிவில்லாத கற்பனை. ஆகவே பிரபஞ்சம் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பெரிதானது என்பது புரிந்தால், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குப் போதும்.

அடுத்த கேள்வி: இதை யார் உண்டு பண்ணினார்கள்? கேள்வி என்னமோ ரொம்ப லாஜிக்கலாத்தான் இருக்கிகிறது. ஆனால் பதில் சொல்வது அவரவர்கள் கற்பனைக்குத் தக்கபடி இருக்கும். நாம் வாழும் உலகில் நடைமுறையில் பல செயல்களைக் காண்கின்றோம். அவை எப்படி  ஏற்படுகின்றன என்று கண்டு, கேட்டு, விசாரித்து அறிந்திருக்கிறோம். அதன்படி ஒரு பொருள் இருந்தால் அதற்கு ஒரு உற்பத்தியாளனும்/படைப்பாளியும் இருக்கவேண்டும் என்று நம்புகிறோம். நண்பர் ஜெயதேவ் தாஸ் சொல்வது போல், ஒரு சட்டி இருந்தால் அதைச் செய்த குயவனும் இருந்தே ஆகவேண்டும். இட்டிலி இருந்தால் அதைச் சுட்டவர் இருந்தே ஆகவேண்டும்.

இந்த லாஜிக் பிரகாரம் எந்தப் பொருளும் ஒரு படைப்பவன் இல்லாமல் உண்டாவதில்லை. ஆகவே இந்தப் பிரபஞ்சமும் யாரோ ஒருவனால்தான் படைக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த விவாதத்தில் ஏதாவது தவறு தெரிகிறதா? இல்லையல்லவா?

இங்குதான் கருத்து வேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பாளி யார்? இதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அப்படி ஒரு படைப்பாளி இருந்தால், அவர் எதைக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார்? குயவன் சட்டியை உருவாக்கினான் என்றால் அவன் களிமண்ணிலிருந்து சட்டியை உருவாக்குகிறான் என்ற அறிவோம். இந்த லாஜிக் பிரகாரம் எப்படி குயவன் களிமண்ணிலிருந்து சட்டியை உருவாக்குகிறானோ அப்படி இந்தப் பிரபஞ்சத்தை அந்தப் பெயர் தெரியாத ஆள் எதை வைத்து படைத்தார்?

அப்படி ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன்பு என்ன இருந்தது? அந்தப் படைப்பாளி எங்கிருந்து உற்பத்தியானார்?

எனக்கே தலை சுற்றுகிறது. ஆகவே இது போன்று, "சிந்தனையாளர்களுக்கு" என்று வரும் பதிவுகளைப் படிக்காதீர்கள். கீழ்ப்பாக்கத்தில் நிறைய சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இந்த சிந்திக்கும் வேலையை அவர்களுக்கு விட்டுவிடுங்கள். அவர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சிந்தித்து பதில் சொல்வார்கள்.அது வரையில் நாம் காத்திருப்போம்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தலைல என்ன களிமண்ணா இருக்கு?

இந்த வசவை பலரும் தங்கள் இளம் வயதில் கேட்டு வருந்தியிருக்கலாம். நீங்கள் அப்படி வருந்தியிருக்கத் தேவையில்லை. ஏனென்றால் களிமண்ணும் மூளையும் ஒரே வேலையைத்தான் செய்கின்றன. அது எப்படி என்று பார்ப்போம்.

மூளை என்ன செய்கிறது? தான் கேட்கும் விஷயங்களை எல்லாம் தன்னுள் வைத்துக் கொண்டு நமக்குத் தேவைப்படும்போது கொடுக்கிறது. அவ்வளவுதானே. களிமண் எவ்வாறு இந்த வேலையைச் செய்கிறது என்று பார்க்கலாமா?

மண் என்பது பாறைகள் சிதைந்து உருவானதாகும். இதில் பல அளவிலான துகள்கள் இருக்கின்றன. அளவில் 0.002 மி.மீ. க்கு குறைவான துகள்களையே களிமண் துகள்கள் என்கிறோம். இதன் நுண்ணிய அளவினால் இது சில சிறப்பான குணங்களைக் கொண்டிருக்கிறது.

இதன் மேற்பரப்பில் மிக நுண்ணிய மின் காந்த சக்தி அணுக்கள் இருக்கின்றன. அந்த மின் அணுக்கள், பல வித கனிம அணுக்களை ஈர்த்து தன்னிடம் வைத்துக் கொள்கிறது. பயிர்கள் மண்ணில் வளரும்போது அவைகளுக்குத் தேவையான சத்துக்களை களிமண் தன்னிடமிருந்து கொடுக்கிறது. இந்த தன்மை களிமண்ணிடம் இல்லாதிருந்தால் நாம் விவசாயமே செய்ய முடியாது.

இயற்கை உரங்களை நிலத்தில் போடும்போது, அதிலுள்ள அங்ககப் பொருள் இந்தக் களிமண்ணுடன் சேர்ந்து ஒரு கூட்டுப் பொருளாக மாறுகிறது. இந்தக் கூட்டணி விவசாயத்திற்கு பல விதங்களில் உதவுகின்றது. விவசாயப் பயிர்களுக்கு வேண்டிய அனைத்து ஊட்டங்களும் இந்தக் கூட்டணியில் இருந்துதான் கிடைக்கின்றன.

இப்போது புரிகிறதா, களிமண்ணின் மகிமை. மூளை என்ன செய்கிறது? எல்லா செய்திகளையும் தன்னிடம் சேர்த்து வைத்துக்கொண்டு நாம் வேண்டும்போது கொடுக்கிறது. ஆகவே, யாராவது உங்கள் தலையில் என்ன களிமண்ணா இருக்கிறது என்று கேட்டால் பெருமையுடன் "ஆமாம்" என்று சொல்லுங்கள்.

களிமண் இல்லையென்றால் விவசாயம் இல்லை. விவசாயம் இல்லையென்றால் மனிதன் இல்லை. மனிதன் இல்லையென்றால் இந்த வலைத்தளமும் இல்லை. ஆகவே களிமண்ணின் மகத்துவத்தை மனதில் நன்றாகப் பதிந்து கொள்ளுங்கள்.

இப்படிச் சொல்கிறீர்களே, உங்கள் தலையில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? கொஞ்ச நாள் பொறுங்கள். மண்டையை உடைத்துப் பார்த்து விடுவோம்! நிச்சயம் களிமண்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை!

புதன், 15 ஆகஸ்ட், 2012

அம்மன் அருளால் ஈமு பிரச்சினை தீர்ந்தது!

(படம் சும்மானாச்சுக்கும்)
ஈமு பிரச்சினை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு வருவதை எல்லோரும் செய்தித் தாள்களில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இந்தப் பிரச்சினை வெடித்த நாளில் இருந்து நான் தூங்குவதேயில்லை. கணைண மூடினால் ஈமு கோழிகள் என்னைக் கொத்த வருவது போலவே காட்சிகள் வருகின்றன.

ஈமு கோழிகள் கொத்தினால் கொத்தின இடத்திலுள்ள எலும்புகள் பொடிப்பொடியாக ஆகிவிடும் என்கிறார்கள். அப்புறம் அந்த எலும்புத் தூள்களை பயிர்களுக்கு உரமாகப் போடத்தான் லாயக்காம். எலும்புத்தூள் நல்ல இயற்கை உரமாகும். பாஸ்பரஸ் சத்தை பயிர்களுக்குக் கொடுக்கும். எனக்கு என் எலும்புகளை இயற்கை உரமாக்கும் ஆவல் தற்சமயம் இல்லாததால் நான் தூங்குவதில்லை.

விழித்திருக்கும்போது கூட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஈமுக்கோழிகளும் தீனி எங்கே, தீனி எங்கே என்று கேட்கிற மாதிரியே காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காது-மூக்கு-தொண்டை வைத்தியரிடம் போனேன். அவர், உங்களுக்கு வயசாயிடுச்சு அல்லவா, அதனால இப்படித்தான் காதில் ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்கும் என்றார். டாக்டர், அண்ணைக்கு எனக்கு காது ஏறக்குறைய டமாரமாகி விட்டது என்று சொன்னீர்களே, இது மட்டும் எப்படி கேட்குது, டாக்டர் என்று கேட்டேன். டமாரமான காதில் ஏதோ கேட்கிறதல்லவா, சந்தோஷப் படுங்கள் என்று சொல்லி தன் பீஸை வாங்கிக்கொண்டு என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்.

அப்புறம் நான் வழக்கமாக செய்யும் யோக நித்திரையில் இருக்கும்போது ஒரு பொறி தட்டியது. அது என்னவென்றால், இப்போது ரம்ஜான் காலமல்லவா, ரம்ஜான் தினத்தன்று நம் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அசைவ விருந்து தயாரித்து தாங்களும் உண்டு, மற்றவர்களுக்கும் கொடுப்பார்களல்லவா? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஈமு பிரச்சினையை தீர்த்து விடலாமேயென்று தோன்றியது.

ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், அந்த திட்டத்தை அம்மாவிடம் தகுந்த நேரத்தில் எடுத்துச் சொன்னால், அவர்களுடைய விலையில்லாத் திட்டத்தில் இதையும் சேர்த்துக்கொளவார்களே என்று தோன்றியது. திட்டம் என்னவென்றால், ரம்ஜான் தினத்திற்கு முந்தின நாள், ஈமு கோழி வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்கள் கோழிகளை அருகில் உள்ள இஸ்லாமிய தொழுகைத் தலங்களுக்கு கொண்டுபோய் கேட்பவர்களுக்கு விலையில்லாமல் கொடுத்துவிடவேண்டியது.

அப்படியே கையோடு அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தாங்கள் இவ்வளவு கோழிகளைக் கொடுத்திருக்கிறோம் என்று எழுதிக்கொடுத்து விட்டு வந்து விடவேண்டியது. ஒரு வாரத்தில் கோழிகளின் விலை அவரவர்களுக்கு மணிஆர்டர் மூலம் வீட்டுக்கு வந்து சேரும்.

அம்மன் அருள் இருந்தால் எதுவும் நடக்கும்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

எனக்கெதிராக மாணவர்கள் நடத்திய ஸ்ட்ரைக்


நான் இப்படி ஒரு கொடுங்கோல் ஆசிரியனாக கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் என்னை ஒரு விடுதிக் காப்பாளனாகவும் நியமனம் செய்துவிட்டார்கள். கொஞ்ச காலம்  இந்தப் பதவியில் வேறூன்றிய பிறகு, ஒரு நாள் நானும் இன்னொரு சக விடுதிக்காப்பாளரும் ஒரு விடுதியில் மாணவர்கள் அறைகளுக்குச் சென்று பார்வையிட்டோம்.

அந்தக்காலத்தில் இப்படியெல்லாம் விடுதிக்காப்பாளர்கள் மாணவர்களின் அறைகளைப் பார்ப்பது வழக்கம். இன்று காப்பாளர்கள் மாணவர்களைப் பார்ப்பதே இல்லை. அவ்வளவு பயம்.

நாங்கள் அனைத்து அறைகளையும் பார்வையிட்டு விட்டு வெளியே வரும்போது மாணவர்கள் அனைவரும் ஓவென்று ஊளையிட்டார்கள். அதாவது நாங்கள் அவர்கள் அறைகளைப் பார்வையிட்டதற்கு எதிர்ப்பு காட்டுகிறார்களாம்.

நானும் ஒரு காலத்தில் மாணவனாக இருந்தவன்தானே. இவர்கள் டெக்னிக்கெல்லாம் தெரியாதா என்ன? வெளியில் வந்தவன் உள்ளே போய் எல்லா மாணவர்களையும் ரூம்களை விட்டு வெளியே வரச்சொன்னேன். எல்லோரும் வந்தார்கள். அவர்களைப்பார்த்து இப்போது எதற்காக ஊளையிட்டீர்கள் என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்வார்களா என்ன? எல்லோரும் ஆடு திருடின கள்ளன் மாதிரி முளித்துக்கொண்டு நின்றார்கள்.

நான் சொன்னேன்- நானும் உங்களை மாதிரி மாணவனாக இருந்தவன்தான். இப்ப கூட நான் ஓங்கி சத்தம் போட்டா அது மாதிரி உங்கள்ல ஒருத்தனும் போட முடியாது. நீங்க இப்ப சத்தம் போட்டது எங்களை அவமானப் படுத்துவதற்காகத்தான் என்பது எனக்குத் தெரியும். நாளை மதியத்திற்குள் நீங்கள் இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால், உங்களில் ஒருவருக்கும் இந்த வருடம் அரசு உதவித்தொகை கிடைக்காமல் செய்து விடுவேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

அடுத்த நாள் காலை ஆபீஸ் போனால் அந்த குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் மட்டும் ஸ்ட்ரைக் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கோரிக்கை, என்னை விடுதிக் காப்பாளனாக தொடர அனுமதிக்கக் கூடாது என்பதுதான். கல்லூரி டீன் இடம் போய் பெடிஷன் கொடுத்திருக்கிறார்கள். அவர் என்னைக் கூப்பிடவுமில்லை, என்ன ஏது என்று விசாரிக்கவும் இல்லை. மாணவர்களைத் திட்டிவிட்டு, எல்லோரும் போய் ஒழுங்காப் படிக்கற வேலையைப் பாருங்க என்று சொல்லி அனுப்பி விட்டார்.

பிறகு வேறு ஒரு வகுப்பு மாணவர்கள் வந்து என்னிடம் சொல்லியது, சார் அப்படி உங்களை காப்பாளர் பதவியிலிருந்து நீக்கியிருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் ஸ்ட்ரைக் செய்திருப்போம் என்றார்கள். இப்படி எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர அனுபவித்தேன்.

இன்றும் என் பழைய மாணவர்கள் என்னைச் சந்திக்கும்போது சார், உங்கள் கண்டிப்பால்தான் நாங்கள் இன்று நன்றாக இருக்கிறோம் என்று சொல்வார்கள். அப்போது நினைத்துக் கொள்வேன் - நம் கண்டிப்பு வீண் போகவில்லை என்று. 


திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆசிரியராக வேலை பார்த்தபோது நான் செய்த கொடுமைகள்


தலைப்பு சரியாக அமையவில்லை. பரவாயில்லை. பதிவைப் படித்தபின் உங்களுக்குப் பிடித்த தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பில் நான் சொல்ல விரும்பியது என்னவென்றால் நான் ஆசிரியனாக இருந்தபோது என் கொள்கைகள் என்னென்ன என்பதுதான். தலைப்பு புரிஞ்சு போச்சா, செய்திக்குப் போவோம்.

ஒரு பத்து வருடம் இளநிலை விவசாயப் படிப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். ஐந்து வருடம் செய்முறை விளக்க பரிசோதனைக் கூடத்திலும் ஐந்து வருடம் வகுப்புப் பாடம் நடத்துபவனாகவும் பணி புரிந்திருக்கிறேன். பிறகு பதவி உயர்வுகள் காரணமாக வேறு பதவிகளுக்கு மாற்றப்பட்டேன். இருந்தாலும் அவ்வப்போது முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன்.

இளங்கலை ஆசிரியனாக இருந்தபோது கொஞ்சம் கொடுமைக் காரனாகத்தான் இருந்தேன். மாணவன் கல்லூரிக்கு வருவது பாடம் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல. வாழ்க்கையின் ஒழுக்கங்களையும் அவன் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் நான்.

நான் சொல்லிக்கொடுத்தது இயல்பியல் பாடங்கள் அதாவது கெமிஸ்ட்ரி. விவசாயப் பட்டப்படிப்பில் முதல் வருட மாணவர்களுக்கு நான் இயல்பியல் பரிசோதனை வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தேன. பரிசோதனைச் சாலைக்கு வரும் மாணவர்கள் காக்கி அரைக்கால் டவுசரும், அரைக்கை சட்டையும் போட்டுக்கொண்டு வருவார்கள். ஏறக்குறைய அனைத்து செயல்முறை வகுப்புகளுக்கும் இந்த யூனிபார்ம்தான்.

இதில் மேல் சட்டையில் எல்லா பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் வகுப்பில் அனுமதி இல்லை. (டிராயரில் ஜிப் போடாவிட்டால் பரவாயில்லையா என்று கேட்கக்கூடாது. ஆப்சன்ட் போட்டுவிடுவேன், ஜாக்கிரதை.) மாணவர்கள் வகுப்புக்குள் வரும்போது எல்லா பட்டனையும் போட்டுக் கொண்டுதான் வருவார்கள். இன்றும் கூட என் பழைய மாணவர்கள் என்னைப் பார்த்தால் அவர்கள் அறியாமலேயே கை சட்டைப் பட்டனுக்குப் போகும்.

வருகைப் பதிவேடு பெயர்கள் படித்து முடிப்பதற்குள் வந்தால்தான் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நான் பெயர்கள் வாசித்து முடிந்தவுடன் பரிசோதனைச் சாலையின் கதவு மூடப்படும். அதன் பிறகு வருபவர்கள் திரும்பித்தான் செல்லவேண்டும்.

பரிசோதனைச் சாலையில் பரிசோதனைகள் செய்யும்போது நான் சொல்லி, செய்து காட்டியவாறுதான் செய்யவேண்டும். வேறு மாதிரி செய்தால் அந்த மாணவன் வெளியேற்றப்படுவான். காரணம், வேறு மாதிரி செய்யும்போது தவறுகள் ஏற்படும். அதையெல்லாம் அவன் புரிந்து கொள்ளும் வயதில்லை. ஆகவே சர்வாதிகாரம்தான்.

சரி, இதற்கெல்லாம் மாணவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்களா, கொடி பிடிக்க மாட்டார்களா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. பிடித்தார்களே! அதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.




வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

இயற்கை விவசாயம் என்றால் என்ன?



இயற்கை விவசாயத்தைப் பற்றி ஓரிரு பதிவுகள் போட்டிருந்தேன். ஆனால் இயற்கை விவசாயத்தைப் பற்றி முறையாகத் தெரிந்துகொள்ளும் விதமாக நான் ஒரு பதிவும் இடவில்லை. அந்தக் குறையை நீக்கும்பொருட்டு இந்தப் பதிவை போடுகிறேன்.

இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய், அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நல்ல மகசூல் எடுப்பதுடன், விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும்.

இந்த முறையில் முக்கியமான அம்சங்கள்:
  1.   பயிர்களின் கழிவுகளை கம்போஸ்ட் செய்தும், பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்.
  2.   சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்.
  3.   பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்.
  4.   பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்.
  5.   மண்ணிற்கு மேல் “மல்ச்சிங்க்” செய்தல். (அதாவது மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுக்கும் ஒரு உத்தி)

  பூச்சிகள், பூஞ்சாளங்கள், களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்:
  1.   சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  2.   நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  3.   நல்ல பயிர் மேலாண்மை
  4.   பயிற் சுழற்சியைக் கடைப்பிடித்தல்
  5.   பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை வளர்த்தல்
  6.   இயற்கை பூச்சிகொல்லிகளை உபயோகித்தல்

இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை.

ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.

ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் என்றால் என்னென்ன என்று அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.