சனி, 19 ஜனவரி, 2013

காது குடைதல் எப்படி?


ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி இப்படிக் கேட்டு விட்டார்.

"காது குடைவது எப்படி?" என்பது உங்கள் அடுத்த பதிவு என்பதை

எதிர்பார்க்கலாமா சார்?

அவருடைய ஆசையை நிறைவேற்றுவதை விட வேறென்ன வெட்டி முறிக்கப் போகிறேன். ஆதலினால் இந்தப் பதிவு.

காது குடைதலினால் வரும் இன்பம் தெனாலிராமன் சொல்லிய சுகத்திற்கு சிறிதும் குறைந்ததல்ல. அனுபவித்தவர்களுக்குத்தான் இது தெரியும்.

திரு.சக்திவேல் சொல்லுகிறார்:

எஸ் சக்திவேல் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுத்துச் சென்றுள்ளார்"கால் கழுவுவது எப்படி?": 
காது குடைவது ரொம்ப ஆபத்தானது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். 

இது எல்லாம் நிலாவில பாட்டி வடை சுடுகிற கதை. "ஈஎன்டி" வைத்தியர்கள் தங்களுக்கு வரும்படி போய்விடுமே என்பதற்காக கட்டிவிட்ட கதை. எங்கே, காது குடைந்ததால் காது செவிடாய்விட்டது என்பதற்கு ஒரு உதாரணம் காட்ட முடியுமா? முடியாது. ஏனென்றால் இறைவன் காதைப் படைத்ததே, காது குடைவதற்காகத்தான்.

இந்த டாக்டர்கள் இந்தக் காது குடைதலில் உள்ள சூட்சுமம் புரியாமல் பேசுகிறார்கள். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல இருக்கிறது இவர்களின் பேச்சு. அது எப்படி என்று கடைசியில் விளக்குகிறேன்.

தேவலோகத்தில் கூட இந்த சுகம் இல்லையென்று நினைக்கிறேன். ஏனென்றால் எந்தப் புராணத்திலும், எந்தக் கடவுளோ அல்லது தேவர்களோ, காது குடைந்ததாக எழுதப் படவில்லை. அது போலவே, தெனாலிராமன் கூறிய சுகமும் அங்கு இல்லையென்று தெரிகிறது. அப்புறம் எதற்காக மக்கள் தேவலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) போக ஆசைப் படுகிறார்கள் என்று புரியவில்லை.

இது நிற்க, சப்ஜெக்ட்டுக்கு வருவோம். காது குடைதல் என்றால் என்ன? அவ்வப்போது காதிலே நமைச்சல் உண்டாகும். இது இறைவன் கொடுக்கும் வரம். அப்போது காதுக்குள் எதையாவது விட்டுக் குடைந்தால் மிகவும் சுகமாக இருக்கும். இந்த சுகத்திற்கு ஈடு இணை கிடையாது. அப்படியே மெய்மறந்து போகும்.

இதை சைன்டிபிக்காக எப்படி குடைவது என்று விளக்குவதே இந்தப் பதிவின் நோக்கம்.

காது குடைவதற்கான உபகரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. அவரவர்கள் சுண்டு விரல் : இதுதான் அவசரத்திற்கு கிடைக்கக் கூடியது. சுண்டு விரலை காதுக்குள் விட்டு குடையலாம். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், காதுக்குள் அதிக தூரம் இந்த விரல் உள்ளே போகாது. அதனால் காது குடைவதின் சுகம் அரைகுறையாகத்தான் இருக்கும்.

2. அடுத்து அவசரத்திற்கு உபயோகப் படக்கூடியது, கார் அல்லது இரு சக்கர வாகனத்தின் சாவி. இது ஓரளவிற்கு காதினுள் புகும். இதனால் குடையும்போது ஓரளவிற்கு சுகமாயிருக்கும்.

3. நீங்கள் அலுவலகத்தில் இருந்தீர்களானால் உங்களுக்கு உடனடியாக கிடைக்கக் கூடியவை, பென்சில் அல்லது பால்பாய்ன்ட் பேனா. இவைகள் நல்லவையே. என்ன, பென்சிலின் கூர் உடைந்திருந்தால் நல்லது. இல்லையென்றால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டியிருக்கும்.

4. துண்டு பேப்பர்: இது ஆபீசிலும் வீட்டிலும் தாராளமாகக் கிடைக்கும். இதை ஒரு பக்கத்தில் இருந்து சுருட்டி, கூப்பு வடிவத்திற்கு கொண்டு வந்து, கூராக இருக்கும் முனையை சிறிது மடக்கி விட்டு, உபயோகிக்கலாம். தினசரி காலண்டர் தாளைக் கிழித்தவுடன் அநேகர் செய்யும் முதல் காரியம் இதுதான். இது எந்த விதமான ஆபத்தும் இல்லாதது.

5. பறவைகளின் இறகுகள்: இவை இயற்கை நமக்குக் கொடுத்த வரம். இதனால் காதைக் குடையும்போது அப்படியே வானத்தில் சஞ்சரிப்பது போல உணர்வீர்கள்.

6. "இயர்பட்ஸ்" (earbuds): இவை ஓரளவிற்கு பாதுகாப்பானவை. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மெடிகல் ஷாப்புகளில் விற்பது. இது விலை அதிகம். அடுத்தது, வீட்டில் தயார் செய்வது (Home-made). இது ரொம்பவும் செலவில்லாதது. ஊர்க்குச்சியை எடுத்து ஒரு முனையில் கொஞ்சம் பஞ்சை வைத்து திருகினால் "இயர்பட்" தயார்.

ஆனால் ஒரு அக்கிரமம் பாருங்கள், இதையும் டாக்டர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் காது குடைந்து வரும் சுகத்திற்கு ஏதாவது விலை கொடுக்கவேண்டாமா? இப்படி குடைவதால் காது டிரம்மில் போய் குத்தி, காது செவிடாகிவிடும் என்று டாக்டர்கள் சொல்வதை நம்பாதீர்கள். காது டிரம் இறைவனால் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வேண்டுமென்றே அதை கெடுக்கவேண்டும் என்றாலும் முடியாது.

பிறகு என்ன நடக்குமென்றால் உள்காதில் எங்காவது காயம் ஏற்படும். அது உடனே உங்களுக்குத் தெரியாது. ஒரு வாரம் பத்து நாள் கழித்து காதில் வலி ஏற்பட்டு சீழ் வடியும். மனிதனுக்கு வரும் வலியில் பல் வலிக்கு அடுத்தபடியாக கொடுமையான வலி இதுதான்.

உடனே "ஈஎன்டி'' டாக்டரிடம் போய்த்தான் ஆகவேண்டும். அவர் பேசாமல் காதைப்பார்த்து வைத்தியம் செய்யவேண்டியதுதானே? பண்ணமாட்டார். காதைப் பார்த்தவுடனே, "காதைக் குடைந்தீர்களா" என்று கேட்பார். இந்தக் கேள்விதான் உலகத்திலேயே மகாக் கொடுமையான கேள்வி. ஆம் என்றும் சொல்ல முடியாது, இல்லையென்றும் சொல்ல முடியாது. எப்படிச்சொன்னாலும் டாக்டர் அர்ச்சனையைக் கேட்டே ஆகவேண்டும்.

வேறு வழியில்லை. எப்படியோ டாக்டரைச் சமாளித்து மருந்து வாங்கிக்கொண்டு வரவேண்டும். மருந்தை நேரம் தவறாமல் காதில் விட்டு, பஞ்சால் காதை மூடிவைக்கவேண்டும். பார்பவர்களுக்கெல்லாம் காதில் என்ன என்று பதில் கூறவேண்டும்.

ஒரு சுகம் வேண்டுமென்றால், ஒரு துக்கத்தை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். இது உலக நியதிதானே.

இப்படி காது குடைவதினால்  "ஈஎன்டி'' டாக்டர்களுக்கு அதிக வருமானம்தானே தவிர, அவர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் இல்லையே. பின் ஏன் அவர்கள் காது குடையாதீர்கள் என்று சொல்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு சமயம் காது குடைவது அவர்களது ஏகபோக உரிமை என்று நினைக்கிறார்களோ, என்னமோ?


வெள்ளி, 18 ஜனவரி, 2013

கால் கழுவுவது எப்படி?

இந்தியன் டைப் அல்லது வெஸ்டர்ன் டைப், இதில் எதில் நீங்கள் காலைக் கடனைக் கழித்தாலும் "கால் கழுவ" வேண்டும். "கால் கழுவுதல்" என்றால் என்ன என்று புரியும் என்று நினைக்கிறேன். புரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நேரடி டெமான்ஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்படும்.


இந்தியன் டைப் டாய்லெட் உபயோகப்படுத்திய பின் கால் கழுவுவது எப்படி என்று பார்ப்போம். வலது கையில் "மக்" கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு பின்புறம் கொண்டு சென்று அந்த நீரை முக்கிய இடத்தில் மெதுவாக ஊற்றி, இடது கையால் அந்த பாகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். இரண்டாவது முறையும் இதே மாதிரி செய்யலாம். அது நல்லதே. ஒரு முக்கிய குறிப்பு. இவ்வாறு நீங்கள் கால் கழுவும்போது அந்த தண்ணீர் முழுவதும் டாய்லெட் பேசினுக்குள் விழுமாறு கழுவ வேண்டும். இது முக்கியம். பாத்ரூம் முழுவதையும் அசிங்கப் படுத்தி விடக்கூடாது.  இதற்குப் பிறகு மக்கில் தண்ணீர் எடுத்து டாய்லெட் சீட்களை கழுவி விடவும்.

எனக்கு முன்னாடியே ஒரு அன்பர் இந்தப் பிரச்சினையை அலசி, ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் செய்திருக்கிறார். அந்தக் கோணொளியைக் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=dKkryfdtMNQ

இதன் பிறகு நம் ஆட்கள் செய்வதுதான் கொடுமையின் உச்ச கட்டம். இந்தக்காரியம் முடிந்தபின் அப்படியே அல்லது இடது கையை வெறும் தண்ணீரில் கழுவிவிட்டு மற்ற வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். மனிதக் கழிவில் எவ்வளவு நோய்க் கிருமிகள் இருக்கின்றன என்ற அறிவு இல்லாததால் அவர்கள் செய்யும் காரியம் இது. கால் கழுவிய பின், இரு கைகளையும் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். கழுவிய பின் ஒரு சுத்தமான துவாலையில் கைகளை ஈரம் போகத் துடைக்கவேண்டும்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தினம் ஒரு முறைதான் இதைச் செய்யவேண்டி வரும். அதற்குக் கூட சோம்பல்பட்டால் உங்கள் சுகாதார உணர்வை என்ன சொல்லி, எப்படித் திருத்துவது? வட இந்தியாவில் ஒவ்வொருவரும் டாய்லெட் உபயோகிக்கச் செல்லும்போது தவறாமல் சோப்பு டப்பாவை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் இரண்டு கையாலும் சாப்பிடுபவர்கள், அவர்களுக்கு இந்த முன்ஜாக்கிரதை அவசியம்.

அடுத்து வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டில் நம் காரியத்தை முடித்தபின் கால் கழுவுவது எப்படி என்று பார்ப்போம். இதற்கு பல வழிகள் இருக்கின்றன.

முதல் வழி - டாய்லெட் பேப்பர் உபயோகிப்பது. இது நம் ஊருக்கு சரிப்பட்டு வராது. ஆகையால் அதை விட்டு விடுவோம். 

இரண்டாவது வழி - இந்தியன் டாய்லெட்டில் கடைப்பிடிப்பது போலவே, மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கால் கழுவுவது. இதற்கு நீங்கள் டாய்லெட் சீட்டில் சிறிது முன் நகர்ந்து உட்காரவேண்டும். கால் கழுவும் தண்ணீர் முழுவதும் பேசினுக்குள்ளேயே விழ வேண்டும். பின்பு டாய்லெட்டை மற்றுமொரு முறை பிளஷ் செய்யவேண்டும். பின்பு எழுந்து டாய்லெட்டை மூடிவிட்டு, கைகளை சோப்பு போட்டு கழுவிக் கொள்ளவேண்டும்.

மூன்றாவது வழி - "பிடெட்" உபயோகிப்பது. 


இதை எடுத்து பின்புறம் கொண்டுபோய் அந்த லிவரை அழுத்தினால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். நாம் கழுவ வேண்டிய பகுதிக்கு தண்ணீர் செல்லுமாறு சிறிது நேரம் பிடித்துக்கொண்டு இருந்தால் அந்தப் பகுதி நன்றாகச்சுத்தமாகிவிடும்.
நம் கை அசுத்தமாகாது. ஆகவே இது மிகுந்த சுகாதாரமானது. இது மாதிரியே டாய்லெட்டுடன் சேர்ந்தே இருக்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் குழாய்களும் உண்டு.

இப்படியாக நாம் கால் கழுவும் படலத்தை முடித்தோம். ஏதாவது குறிப்புகள் விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் மக்களுக்கு உபயோகப்படும். 

அடுத்த பதிவில் "வாஷ் பேசினை" உபயோகிப்பது பற்றியும் மற்ற குளியல் விஷயங்களையும் பார்ப்போம்.

புதன், 16 ஜனவரி, 2013

நவீன டாய்லெட்களை உபயோகிப்பது எப்படி?



அதி நாகரிக சுந்தரர்கள் - சுந்தரிகள், மற்றும் மென்மையான இருதயம் படைத்தவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டாம். அவர்கள் இதில் எழுதப்பட்டிருக்கும் விளக்கங்களைப் படித்து அருவருப்படைவார்கள். ஏனெனில் அவர்கள் தேவலோகத்திலிருந்து நேரடியாக பூமிக்கு வந்தவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி காலைக் கடன்களுக்கு அவசியம் இல்லை.

இந்தப் பதிவு, காலைக் கடன்களில் அதிமுக்கியமானதைப் பற்றியது. இதைப் பற்றிய தெனாலிராமனின் வேடிக்கைக் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக இந்தப் பதிவில் அந்தக் கதையை போட்டிருக்கிறேன்.

உங்கள் சொந்த வீடானாலும் அடுத்தவர் வீடானாலும் இந்த செயலில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் ஒன்றே.

நெ.1 மற்றும் நெ.2 என்று மறைபொருளாகக் குறிப்பிடப்படும் இந்த "வெளிக்குப் போதல்" என்ற காலைக் கடனைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கின்றன. "லண்டனுக்குப் போய்ட்டு வரேன்" என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு.

காலை பொழுது விடிவதற்கு முன் எழுந்து காலாற கம்மாய்க் கரைக்குப் போய் "உட்கார்ந்து" விட்டு கம்மாயில் "கால் கழுவி" விட்டு, வரும் வழியில் ஒரு வேப்பங்குச்சியை முறித்து வாயில் வைத்துக் கொண்டு எதிரில் வருபவர்கள் எல்லோருடனும் ஊர் வம்பு, வழக்கு பேசிவிட்டு, வீட்டிற்கு வந்து வாய் கொப்பளித்து விட்டு, கால்கை கழுவிவிட்டு, காப்பி குடிக்கும் அனுபவமே தனி சுகம். சொர்க்கத்தில் கூட இத்தகைய சுகம் கிடைக்காது என்று சத்தியம் செய்யும் பெரிசுகள் இன்றைக்கும் நம் கிராமங்களில் உண்டு.

ஆனால் இன்றைய நகர (நரக) வாழ்க்கையில் இந்த சுகத்திற்கு இடம் இல்லை. "டாய்லெட்" என்று நாகரிகமாக அழைக்கப்பெறும் நவீன கக்கூஸ்கள் தவிர்க்க முடியாதனவையாக ஆகிவிட்டன.


இவைகளில் "இந்தியன் டைப்" எனப்படுபவை இந்திய பாணிக்காக வடிவமைக்கப்பட்டவை. குத்துக்காலிட்டு உட்காரும் வழக்கத்திற்கேற்ப உள்ளவை. வெட்டவெளியில் காலைக்கடனைக் கழிப்பது போன்றது. என்ன, இது நாலு சுவர்களுக்குள் இருக்கும். இவைகளில் நம் காரியம் முடிந்து வெளியில் வரும்போது தண்ணீர் விட்டு கிளீன் செய்து விட்டு வெளியில் வரவேண்டும். (இப்போதெல்லாம் தானியங்கி பிளஷ்கள் வந்து விட்டன). ஆனாலும் அவைகளை இயக்குவதற்கு உண்டான பட்டனை அழுத்தவேண்டும் அல்லது செயினை இழுக்கவேண்டும்.


இங்குதான் நம் "கனவான்கள்" சொதப்பும் இடம். தண்ணீர்விட்டு பேசினை கழுவ மாட்டார்கள். வெட்ட வெளியில் வெளிக்குப் போனபின் எழுந்து நடையைக் கட்டுவது போலவே இங்கும் போய்விடுவார்கள். அடுத்து அங்கு செல்லும் நபர் என்ன பாடுபடுவார் என்று சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள்.

இந்த நிலை மறதியால் ஏற்படுவது அல்ல. அறியாமையினால் ஏற்படுவது. அதற்காகத்தான் இந்தப் பதிவு. பல பொது இடங்களில் இதைப் பற்றிய ஒரு அறிவிப்பு வைத்திருப்பார்கள். "டாய்லெட்டை உபயோகித்தபின் பிளஷ்ஷை உபயோகியுங்கள்" என்று அறிவிப்பு இருக்கும். பலர் அந்த அறிவிப்பு தங்களுக்குத்தான் என்று உணராமல் டாய்லெட்டை உபயோகித்த பின் அப்படியே வந்து விடுவார்கள். இதைப் போன்ற கொடுமை வேறு இல்லை.


அடுத்தது "வெஸ்டர்ன் டைப்" டாய்லெட்டுகள். WC என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். வெளி நாடுகளில் இந்த சௌகரியம் உள்ள பொது இடங்களில், இதை Comfort Room, Rest Room என்று பலவாறாக அழைப்பது உண்டு. Rest Room என்றால் ஏதோ ஓய்வு எடுப்பதற்கான இடம் என்று தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம்.


இதை உபயோகப் படுத்துவதில் உலகம் முழுவதும் கொஞ்சம், கொஞ்சம் என்ன, நிறையவே, குளறுபடிகள் உண்டு. இந்தப் படத்தைப் பார்க்கவும்.


நாகரிகமடைந்த மேலை நாடுகளிலேயே இப்படி படம் போட்டு விளக்க வேண்டியிருக்கிறது என்றால், நம் நாட்டைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

டாய்லெட்டில் உட்காருவதற்கு முன், அதன் அமைப்பை சற்று பாருங்கள்.


1 = டாய்லெட் மூடி
2 = டாய்லெட் சீட்
3 = டாய்லெட் பேசின் (மேல் பாகம் மட்டும் காட்டியிருக்கிறது)


டாய்லெட் சாதாரண நிலையில் இப்படி இருக்கும்.



நீங்கள் டாய்லெட்டை உபயோகிக்கு முன் டாய்லெட் கவரை மேலே தூக்கி விடவேண்டும். இந்த நிலையில் டாய்லெட் மேல் உட்கார்ந்து கொண்டு, வெளிக்குப் போவதும் சிறுநீர் கழிப்பதும் செய்யலாம். எக்காரணம் கொண்டும் இந்த நிலையில் ஆண்கள், நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது. டாய்லெட் சீட்டில் சிறுநீர் பட்டு அதை அசுத்தம் செய்தால் அடுத்து வருபவர்கள் எப்படி அதன் மேல் உட்கார முடியும்? பொது கழிப்பறைகளில் இந்த சீட்டில் உட்காரும் முன், இந்த சீட்டை தண்ணீரால் நன்கு கழுவிவிட்டு பின்பு உட்காருவது நல்லது.



ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதானால், டாய்லெட் சீட்டையும் மேலே தூக்கி வைத்து விட்டு உபயோகிக்க வேண்டும். இந்த நிலையில் வெளிக்குப் போகும் அன்பர்கள் டாய்லெட் பேசின் மேல் நேரடியாக உட்காருவது ஏற்படலாம். அது மகாத் தவறு.

இதன் பிறகு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. (அடுத்த பதிவில்)

இந்த டாய்லெட்டை உபயோகப் படுத்திய பின் தவறாமல் டாய்லெட்டை பிளஷ் செய்யவேண்டும். பிளஷ் செய்த பின் டாய்லெட் பேசின் சரியாக சுத்தமாய் விட்டதா என்று பார்த்து, ஏதாவது அசுத்தம் இருந்தால் பிரஷ் உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டும். பின்பு டாய்லெட் சீட்டையும் கவரையும் கீழ்நோக்கி தள்ளி டாய்லெட்டை மூடி விட்டு வரவும்.

வெளிநாடு செல்லும் அன்பர்களுக்காக இன்னொரு குறிப்பு. எல்லா ஊர்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான கழிப்பறைகள் உண்டு. குறிப்பாக விமான நிலையங்களில். இந்தக் கழிப்பறைகளுக்கு உண்டான அடையாளங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதில் தவறு ஏற்பட்டால் பெரும் சங்கடங்கள் ஏற்படும். இந்தப் படத்தைப் பாருங்கள்.

பெண் ஆண்

இந்தப் படத்திலும் சந்தேகம் ஏற்பட்டால், யாராவது டாய்லெட்டை உபயோகிக்க வரும் வரையிலும் காத்திருந்து அவர்கள் பின்னால் போகவும்.

பதிவு நீளமாகி விட்டதால் அடுத்த பகுதியில் பாக்கியை விளக்குகிறேன். பாக்கி எது என்பதை யூகித்து வைக்கவும்.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

தெனாலிராமனின் எது சுகம் கதை

தெனாலிராமன் கிருஷ்ணதேவராயர் அரசவையில் ஆஸ்தான விகடகவியாக இருந்து, அரசரையும், அரசவையில் இருந்தோரையும் சிரிக்கவைத்த பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். அவ்வளவாக பிரபலம் ஆகாத கதை ஒன்றை இந்தப் பதிவில் சொல்ல ஆசைப் படுகிறேன்.

ஒரு நாள் அரசவையில் எல்லோரும் கூடியிருக்கும்போது அரசர் ஒரு கேள்வியை எழுப்பினார். "மனிதனுக்கு மிகவும் சுகமான அனுபவம் எது?" என்பதுதான் அந்தக் கேள்வி. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய பதில்களைச் சொன்னார்கள்.

ஒருவர் "நல்ல அழகிகளுடன் பேசிக்கொண்டு இருப்பதுதான் சுகமானது" என்றார். இன்னொருவர் "நல்ல அறுசுவை விருந்து சாப்பிடுவதுதான் சுகமானது" என்றார். மற்றொருவர் "நல்ல சங்கீதத்தைக் கேட்பதுதான் சுகமானது" என்று சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மனதிற்குப் பிடித்ததைச் சொன்னார்கள்.

அரசர் தெனாலிராமனைப் பார்த்து, "என்ன நீ ஒன்றுமே சொல்லவில்லையே" என்று கேட்டார். அதற்கு தெனாலிராமன் "நான் நினைப்பதைச் சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்" என்றான். அரசர், "பரவாயில்லை, எதுவானாலும் சொல்" என்றார்.

அப்போது தெனாலிராமன் சொன்னான். "உலகிலேயே சுகமானது வெளிக்குப் போவதுதான்" என்றான். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். அரசருக்குக் கோபம் வந்துவிட்டது. "அரசவையில் இப்படிப்பட்ட அருவருப்பான சமாசாரத்தை சொன்ன நீ அறிவற்றவன்" என்று அவனைத்திட்டினார். அப்போது தெனாலிராமன் சொன்னான் - நான் இதை நிரூபிப்பேன் என்று சொன்னான். அரசரும் நீ அவ்வாறு நிரூபிக்காவிட்டால் உனக்கு சிறைத் தண்டனை கொடுப்பேன் என்றார். தெனாலிராமன் ஒத்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் கழித்து தெனாலிராமன் ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தான். அரசவையின் முக்கிய பிரமுகர்களையெல்லாம் அந்த விருந்திற்கு அழைத்திருந்தான். அரசரும் வந்திருந்தார். விருந்து மிகவும் தடபுடலாக நடந்து முடிந்தது. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அதனால் அரசரைத் தவிர மற்ற அனைவரையும் தெனாலிராமன் அரண்மனையில் ஒரு அறையில் தங்க வைத்தான். அந்த அறையின் கதவைப் பூட்டி சாவியை தன்னிடமே வைத்துக் கொண்டான். காலையில் விடிந்த பிறகு வெகு நேரம் கழித்தே அவன் அந்த அறைப் பக்கம் சென்றான்.

அந்த அறையில் சிக்கிய அனைவரும் காலைக் கடனைக் கழிக்க முடியாமல் மிகுந்த வேதனையில் இருந்தார்கள். தெனாலிராமனைப் பார்த்தவுடன் எல்லோரும் அவனைக்  கதவைத்திறந்து விடுமாறு கெஞ்சினார்கள். தெனாலிராமன் அவர்களிடம் நான் சொன்ன பிரகாரம் கேட்பதாக இருந்தால் கதவைத் திறந்து விடுவேன் என்று சொன்னான். அவர்கள்,நீ என்ன சொன்னாலும் கேட்கிறோம் என்று உறுதி கூறிய பின்பே கதவைத் திறந்து விட்டான். அனைவரும் ஓடிப்போய் காலைக்கடனைக் கழித்து விட்டு அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக்கொண்டார்கள்.

அப்போது தெனாலிராமன் அவர்களிடம் கேட்டான். இரவு சாப்பிட்ட விருந்து சுகமா அல்லது இப்போது வெளிக்குப் போய்விட்டு வந்தீர்களே இது சுகமா என்று கேட்டான். அப்போது அவர்கள் எல்லோரும் ஏகமனதாக, அப்பனே தெனாலிராமா, இதுதான் சுகம் என்றார்கள். தெனாலிராமன் அப்படியானால் இதை அரசரிடம் சொல்லுவீர்களா என்று கேட்டான் சொல்லுகிறோம் என்று ஒப்புக்கொண்டார்கள்.

அன்று அரசவை கூடிய பின், தெனாலிராமன், அரசே, இப்போது இங்கு கூடியுள்ள பிரமுகர்களை எது சுகம் என்று கேளுங்கள் என்றான். அரசர் அவ்வாறு கேட்டதற்கு அனைவரும் வெளிக்குப் போவதுதான் சுகம் என்றார்கள். அரசரும் தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி அவனுக்குப் பரிசுகள் கொடுத்தார்.

இந்தக் கதையின் முக்கியத்துவத்தை என்னுடைய அடுத்த பதிவுகளில் தெரிந்து கொள்வீர்கள்.

திங்கள், 14 ஜனவரி, 2013

நல்ல குளியல் அறை அமைப்பது எப்படி?

நான் கட்டிடப் பொறியாளன் இல்லை. ஆனால் கட்டிட அமைப்புகளில் ஆர்வம் மிக்கவன். எங்கள் வீட்டுக் குளியலறையில் நானே டிசைன் செய்து அமைத்தவைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். இதற்கு மேல் பலமடங்கு வசதிகளும் டிசைன்களும் கொண்ட பாத் ரூம்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு நடுத்தரக் குடும்பத்தில், பாத்ரூமை அதிக செலவில்லாமல் எப்படி அமைக்கலாம் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் படம் மட்டும் கூகுளில் இருந்து எடுத்தது.
மற்ற படங்கள் அனைத்தும் என் வீட்டில் எடுத்தது.

குளியலறை குறைந்தது 50 சதுர அடியாவது இருக்கவேண்டும். அதில் ஒரு புறம் டாய்லெட் இருக்கும். வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டே சிறந்தது. வயதானபின் இந்த உண்மையை எல்லோரும் உணர்வார்கள்.

அதை அடுத்து குளிப்பதற்கான இடம். அதற்கடுத்து உடை மாற்றுவதற்கான இடம். இந்த இடம் குளிக்கும் இடத்தைவிட சிறிது உயரமாக இருக்கவேண்டும். அப்போதுதான் இந்த இடம் ஈரமாகாமல் இருக்கும்.

குளியலறையில் தண்ணீர் எங்கும் தேங்காமல் வடிந்து போகவேண்டும். இதை பாத்ரூம் தரை அமைக்கும்போது கூடவே இருந்து சரி பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் கொத்தனார்கள் சொதப்பி விடுவார்கள்.

இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் வசதிகள் ஒரு மத்தியதரக் குடும்பத்திற்கானது.

1.  வெஸ்டர்ன் டைப் டாய்லெட். (மூடியிருக்கிறது)


உபயோகத்திற்காக திறந்திருக்கும்போது


பிளஷ் டேங்க்



2. குளிக்கும் இடமும் அதற்கான வெந்நீர், தண்ணீர் பைப்புகளும். (மிக்சிங்க் டைப்)


புதிதாக உபயோகப்படுத்துபவர்கள் வெந்நீர் மற்றும் தண்ணீர் எதில் வரும், இந்தப் பைப்புகளை உபயோகப்படுத்துவது எப்படி என்று கேட்டுத் தெரிந்து கொள்வது நலம். இது தெரியாமல் உபயோகப்படுத்தினால் பைப்புகள் உடைந்து போகும். ரிப்பேர் செய்வது எளிதல்ல. அதிகம் செலவு ஆகும்.

அருகில் செல்லும் குழாய் கையில் பிடித்துக்கொள்ளும் ஷவருக்காக.


சாதாரண ஷவர்




3. முகம் கழுவும் பேசின்.


இரு பக்கத்திலும் கூடுதலாக கண்ணாடி ஸ்டேண்டுகள் இருப்பதைக் கவனிக்கவும். இந்த ஸ்டேண்டின் உபயோகத்தைக் காணுங்கள்.


4. அன்றாடம் மாற்றும் உள் ஆடைகளுக்காக தனி ரேக்குகள். இதில் தேவையான டாய்லெட் ஐட்டங்களையும் வைத்துக் கொள்ளலாம். குளிக்கப் போன பிறகு "அதை எடுத்து வா, இதை எடுத்து வா" என்று பெண்டாட்டியை ஏவ வேண்டியதில்லை.



ஒரு கடிகாரம் இருப்பதைக் கவனிக்கவும். இரவில் பாத்ரூம் உபயோகப்படுத்தும்போது நேரம் தெரிவதற்காக.

5. துண்டு போடுவதற்கான ராடு.


6. பாத்ரூம் கிளீன் செய்வதற்கான பலவகை மருந்துகள். 



குளியலறையில் எக்ஹாஸ்ட் பேனும் வெளிச்சம் வருவதற்காக கிரவுன்ட் கிளாஸ் போட்ட, திறக்க முடியாத ஜன்னலும் அவசியம். 

7. கிளீன் செய்யத் தேவையான பிரஷ்களும் அதை தொங்க விடத்தேவையான ஸ்டேண்டும்.


8. குளிக்குமுன் உடுத்தியிருந்த துணிகளைப் போட்டு வைக்க ஒரு தொட்டி அமைப்பு.


9. வழுக்கலில்லாத தரை அமைப்பு







ஒரு புறம் தரை சிறிது உயரமாக இருப்பதைக் கவனியுங்கள்.


10. வயதானவர்களுக்கு இன்றியமையாத ஒரு அமைப்பு. வயதானவர்கள் தடுமாறினால் பிடித்துக்கொள்ள வலுவான கைப்பிடிகள்.



கைப்பிடிக்கு வலது பக்கத்தில் இருப்பதுதான் "பிடெட்"

11. கால் கழுவ - பிடெட் (இதன் உபயோகம் பற்றி அடுத்த பதிவில்)


இப்பொழுதெல்லாம் தரை முதல் சீலிங்க் வரை டைல்ஸ் ஒட்டுவது என்பது அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. அதனால் அதைப்பற்றி தனியாகச் சொல்லவில்லை.


இந்த வகையான குளியலறையைக் கட்டுவது பெரிதல்ல. அதை முறையாகப் பயன்படுத்துவதுதான் மிகவும் முக்கியம். அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

சனி, 12 ஜனவரி, 2013

குளியல் அறை எப்படி இருக்கவேண்டும்?


முன்னொரு காலத்தில் மனிதர்கள் கிராமங்களில் வசித்தார்கள். அவர்களின் முக்கிய தொழில் விவசாயம். அந்தக் காலத்தில் ஜனங்கள் விடிவதற்கு முன் எழுந்தார்கள். எழுந்தவுடன் கம்மாய்க் கரைக்கோ, வாய்க்கால் கரைக்கோ சென்று காலைக் கடன்களை முடித்து விட்டு அப்படியே அவரவர் கழனிகளுக்குச் சென்று அன்றாட வேலைகளை ஆரம்பிப்பார்கள்.

பொழுது விடிந்து சூரியன் பனைமரம் உயரம் போன பிறகுதான் அவர்களுக்கு பழைய சோறு வந்து சேரும். இப்படியாக அன்று முழுவதும் பாடுபட்டு முடித்தபின், பொழுது சாய்ந்த பிறகு வீடு வந்து சேர்வார்கள். அதன் பிறகுதான் குளியல் நடக்கும். வீட்டு வாசலில் ஒரு கல் இருக்கும். அதன் மேல் இவன் கோமணத்தைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து கொள்வான். இவன் ஊட்டுக்காரி வெந்நீர்த் தவலையில், காய்ச்சிய வெந்நீரைக் கொண்டுவந்து சொம்பில் மோண்டு ஊற்றி, இவனைக் குளிப்பாட்டுவாள். முதுகு தேய்த்து விடுவதென்று ஒரு பழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. குளித்து விட்டு அங்கேயே துணி மாற்றிக்கொள்வான்.

இது எல்லாம் அந்தக் காலத்து மாமூல். இதையெல்லாம் ஒருவரும் விகல்பமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பெண்கள் குளிப்பதற்கென்று ஒவ்வொரு வீட்டு புடக்களையிலும் தட்டி வைத்து ஒரு மறைப்பு செய்திருப்பார்கள். பெண்கள் அங்கு அவர்களுக்கு நேரம் இருக்கும்போது குளித்துக் கொள்வார்கள். அன்றாடம் குளியல், காலையில் எழுந்தவுடன் குளியல், சோப்பு, ஷாம்பு குளியல் என்பதெல்லாம் நவயுக நாகரிகம். அந்தக் காலத்தில் ராஜாக்கள் அரண்மனையில் இப்படி நடந்திருக்கலாம். சாதாரண மனிதனுக்குத் தெரியாதவை இவைகள்.

இன்று நகரங்களிலும் கிராமங்களிலும் குளியலறை இல்லாத வீடுகள் இல்லை. குளியலறை என்றால் இன்றும் பெரும்பாலானோர் நினைப்பது, நான்கு சுவர்களும் ஒரு கதவும்தான். இன்றும் பல குளியலறைகளில் குளிக்கப் போனால் துண்டைப் போடுவதற்கு ஒன்றும் இருக்காது. குளியலறைக்கதவின் மேல் போட்டு விட்டுத்தான் குளிக்கவேண்டியிருக்கும். அதுவும் ஒரு வகையில் நல்ல ஏற்பாடுதான், ஏனென்றால் குளியலறைக்கு உட்புறம் தாட்பாள் போடும் வசதி இருக்காது. கதவின் மேல் துண்டு இருந்தால் உள்புறம் ஆள் இருக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ள வேண்டியதுதான்.

குளியலறையில் வெளிக்குப் போகும் வசதியை அமைப்பது இன்றும் பலருக்கு ஒத்துக் கொள்ள முடிவதில்லை. அதற்கு வீட்டை விட்டு வெளியில் தனியாக ஒரு அறை கட்டியிருப்பார்கள். அதை நவீன முறையில் அவரவர்களுக்குத் தோன்றின மாதிரி அமைத்திருப்பார்கள். அந்த அறை எப்படி இருக்கும் என்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

இப்படிப்பட்ட பின்புலத்தில் பழக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய நவீன குளியலறையைப் பார்த்தால் "பணக்கொழுப்பைப் பார்" என்றுதான் சொல்லத்தோன்றும். இன்றைய நாகரிக உலகில் குளியலறைக்கு சில லட்சங்கள் செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. ஆனால் அப்படி பல லட்சங்கள் செலவு செய்து கட்டிய குளியலறையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் கொடுமையை அமெரிக்காவில் வாழும் நம் ஆட்கள், அவர்கள் வீட்டிற்கு இந்தியாவில் இருந்து விருந்தாளிகள் வரும்போது தவறாமல் அனுபவித்திருப்பார்கள்.

இந்த பிரச்சினை உலகளாவிய ஒன்று. ஆகவே குளியலறையை எவ்வாறு அமைக்கவேண்டும், எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தெரிந்த வகையில் சொல்லுகிறேன். ஒரே பதிவில் சொல்ல முடியாதாகையால் தொடர் பதிவுகளாக எழுதுகிறேன். ஏற்கனவே குளியலறை உபயோகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இந்த குறிப்புகள் தேவையில்லை. தெரியாதவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்காகத்தான் இந்தத் தொடர்.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

மனிதனுக்கு ஓமெகா-3 சத்து தேவையா?


சரவணன் போட்டிருந்த பின்னூட்டம்.
மீன் எண்ணெய் இல்லாத தாவர ஒமேகா-3 வெஜிடபிள் ஆயில் பத்தி எழுதுங்களேன். அது நல்லதா?

அடுத்து எந்த சமையல் எண்ணெய்கள் நல்லது? இது பற்றி ஆங்கிலப் பத்திரிகைகள் மாற்றி மாற்றி எழுதுவதால் குழப்பமாக இருக்கிறது. இதையும் ஒரு பதிவிடுங்கள்!




ஓமெகா-3 சத்து - இதைப்பற்றிய விவரங்கள் கீழே கொடுத்துள்ள லிங்க்கில் இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/Omega-3_fatty_acid

இது கொஞ்சம் டெக்னிகலா இருக்கும். எளிய முறையில் நான் கொடுக்கும் விளக்கம்  கீழே.

மனிதனின் உணவில் முக்கியமாகத் தேவையானவை மூன்று - அவை - மாவுச்சத்து, புரதம், எண்ணைச்சத்து.

எண்ணைகள்  (கொழுப்பு என்றும் சொல்வார்கள் - பதிவுகளில் சொல்லும் கொழுப்பு அல்ல) ஒரு வகையான வேதியல் கூட்டுப்பொருள். இதில் பல விதமான கொழுப்பு அமிலங்கள் சேர்ந்திருக்கின்றன. அவைகளில் சில நல்லவை, சில அவ்வளவாக நல்லவை அல்லாதவை.

இந்த நல்ல அமிலங்கள் உள்ள எண்ணை வகைகளை உபயோகிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சாதாரணமாக திரவ ரூபத்தில் இருக்கும் எண்ணை வகைகள் அனைத்திலும் இந்த நல்ல வகையைச் சேர்ந்த அமிலங்கள் இருக்கின்றன. சில எண்ணைகளில், சூரியகாந்தி, லின்சீடு, அரிசித்தவிட்டு எண்ணை ஆகியவைகளில் இந்த நல்ல வகை அமிலங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றன.

வெண்ணை, மாமிசங்களில் உள்ள கொழுப்புச்சத்துகளில் இந்த நல்ல வகை அமிலங்கள் குறைவு. ஆகவே அவைகளை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த நல்ல வகையைச் சேர்ந்த கொழுப்பு அமிலங்களை ஒமெகா-3 அமிலங்கள் என்றும் சொல்வார்கள். மனிதனில் உடல் வாகைப் பொருத்து சிலருக்கு இந்த அமிலங்கள் சேர்ந்த எண்ணை வகைகளைப் பயன்படுத்தினால் நல்லது என்று டாக்டர்கள் சொல்வார்கள். ஆனால் இந்த ஒமெகா-3 வகை அமிலங்களை சர்வ ரோக நிவாரணி என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அவை நல்லவை. அவ்வளவுதான்.

இந்த ஒமெகா-3 வகை அமிலங்கள் மீன் எண்ணையில் அதிகமாக இருக்கிறது. தாவர எண்ணைகளில் கொஞ்சம்தான் இருக்கிறது. ஆகவே மீன் எண்ணை டாக்டர்களால் பரிந்துரைக்கப் படுகிறது.

எரிகிற வீட்டில் பிடுங்கின வரையில் லாபம், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,   ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, என் கல்லா நிறைந்தால் போதும் என்று கொள்ளையடிக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கு இது இன்னொரு வரப்பிரசாதம்.

இதில் ஒமெகா-3 இருக்கிறது என்று சொன்னால் அதை, என்ன விலையானாலும் கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். பிறகு என்ன, காசை வாங்கி கல்லாவில் போட மருந்துக் கம்பெனிக்காரர்களுக்கு கசக்குமா, என்ன? இதுதான் இப்போது நடக்குது.

நாம் வழக்கமாக உபயோகப் படுத்தும் நல்லெண்ணையும் கடலை எண்ணையுமே மிகச்சிறந்தவை. அவைகளை அளவுடன் பயன்படுத்தினாலே போதும். வேறு எந்த எண்ணையையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ எண்ணை என்பது நல்ல அளவாகும்.

நம் ஊருக்கு தேங்காய் எண்ணையை, தலைக்கு தேய்க்க மட்டும் உபயோகிக்கலாம்.

உங்கள் குழந்தைகளை இந்த மாதிரி வளர்க்காதீர்கள்.


வியாழன், 10 ஜனவரி, 2013

தமிழ்ப் பண்பாடு வாழ்க


தொலைக் காட்சியில் பார்த்த ஒரு விவாதம் பற்றி சில கருத்துகள் சொல்ல விரும்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு பொழுது போகாத வேளையில் (எப்பத்தான் பொழுது போச்சுங்கறது வேற விஷயம்) டிவி யை நோண்டிக்கொண்டிருந்த போது சங்கீதத்தைப் பற்றிய ஒரு விவாதம் கண்ணில் பட்டது. எனக்கு கொஞ்சம் சங்கீதத்தில் ஆர்வம் இருப்பதால் அது என்ன விவாதம் என்று ஒரு பத்து நிமிடம் பார்த்தேன்.

தமிழ் தொலைக்காட்சிதான். சங்கீத சபாக்களில் தமிழிசையை ஆதரிப்பதில்லை என்பதுதான் தலைப்பு. ஒரு தலைவர், நான்கு பங்களிப்பவர்கள். கொஞ்ச நேரம் தனித்தனியாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. கொஞ்ச நேரத்தில் அதில் ஒருவர் மட்டும் அதிகமாகப் பேசிக்கொண்டு இருந்தார். மற்றவர்கள் கருத்து சொல்வதற்கே விடவில்லை.

யாராவது பேச ஆரம்பித்தால் "ஒரு நிமிடம்" என்று சொல்லிக்கொண்டு நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். இதில் இன்னொரு பரிதாபம் என்னவென்றால் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார். தலைவரால் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் டிவியை நிறுத்திவிட்டு யோசித்தேன். நிஜ வாழ்விலும் இப்படித்தானே நடக்கிறது என்று மனதில் உறைத்தது. நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கும்போது கொஞ்ச நேரத்தில் ஒரே சமயத்தில் இரண்டிரண்டு பேராகவும், அப்புறம் சிறிது நேரம் கழித்து நான்கு பேரும் ஒன்றாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். முடிவில் யார் என்ன பேசினார்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியாது.

இது தமிழனின் தனிப்பண்பு. மேலைநாட்டினர் சிலருடன் பழகியிருக்கிறேன். அவர்க்ள ஒருவர் பேசும்போது குறுக்கே பேசுவதேயில்லை. அப்படிப் பேசுபவரும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பாய்ன்டைச் சொல்லிவிட்டு நிறுத்துகிறார். அப்போது மற்றவர்களில் ஒருவர் பேச ஆரம்பிக்கிறார்.

இப்படிப்பேசுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கும். நம்மாட்கள் பத்து பேர் சேர்ந்து விட்டால் அங்கு ஒரு சந்தைக்கடை உருவாகிவிடும். யார் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் புரியாது. இது தமிழனின் ஸ்பெஷல் பண்பாடு.     

செவ்வாய், 8 ஜனவரி, 2013

மருமகன்களுக்குப் பிடித்த மாமனார் எப்படியிருப்பார்?


வர வர பதிவுகளுக்கு சப்ஜெக்ட் தேத்தறது கஷ்டமாப் போச்சுதுங்க. எத்தனை நாட்களுக்கு விவகாரமில்லாத சப்ஜெக்டுகளை வைத்தே காலத்தை ஓட்டறது? அதனால கொஞ்சம் வெவகாரமான சப்ஜெக்டைப் பிடித்திருக்கிறேன். நண்பர் ஸ்ரீராம் தன் பின்னூட்டத்தில் ஒரு சப்ஜெக்ட் கொடுத்து உதவியிருக்கிறார்.

இது பெரிய உதவி அல்லவா? அவருக்கு மிக்க நன்றி.

பதிவிலிருந்து விலகி ஒரு கேள்வி... ஏன் மாமனாருக்கும் மருமகன்களுக்கும் ஒத்துக் கொள்வதேயில்லை?!! அதுபோலவே நாத்தனார் Vs அண்ணி..!

நான் மருமகனாக இருந்து இப்போது மாமனாராக இருக்கிறேன். எனக்கு மூல நட்சத்திரம் ஆனதால் மாமனார் இல்லாத வீட்டில் பெண்ணைக் கட்டினேன். ஆகவே எனக்கு மாமனாரை விரட்டும் பாக்கியம் இல்லாமல் போயிற்று.

எனக்கு இரண்டு பெண்கள். ஆகவே இரண்டு மாப்பிள்ளைகள்.

பொதுவாக அனைத்து தகப்பனார்களுக்கும் பெண் குழந்தைகள் பேரில்தான் பாசம் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டும் பெண்கள் என்பதால் இந்த வித்தியாசத்தை நான் அனுபவித்ததில்லை.

இந்த இயற்கையினால், பெண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது தன் சொத்தைப் பறிகொடுத்தது போல், ஒவ்வொரு தகப்பனும் உணருவான். தாய்க்கு அந்த உணர்வு வராது. ஏனென்றால், அவள் இந்த நடைமுறையை நன்கு அனுபவித்திருக்கிறாள்.

சொத்தைப் பறிகொடுத்தவனுக்கு, அந்தச் சொத்தை பிடுங்கி அனுபவித்துக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் எரிச்சல் வருவது இயல்புதானே. இதுதான் மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையில் வரும் பிரச்சினை.

அது போக, மாமனாரிடம் இருக்கும் மற்ற சொத்துக்ளையும் ஏன் நமக்கே, இப்பொழுதே  கொடுக்கக்கூடாது என்று ஒவ்வொரு மருமகனுக்கும் தோன்றுவது இயற்கை. இது மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்க்கிறது. இப்போதெல்லாம் பெண் பார்க்கப் போகும்போதே, மாமனாரின் உடல் நிலையையும் ஒரு நோட்டம் போட்டுவிடுகிறார்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்தால் வேறு இடம் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

இதே மாதிரிதான் நாத்தனார்-அண்ணி பிரச்சினையும். இவ்வளவு நாளாக தங்கைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த அண்ணன்காரன், தனக்கு கல்யாணமானவுடன் தன் பெண்டாட்டிக்குத்தான் எல்லாம் வாங்கிக் கொடுப்பான். தங்கையை புறக்கணித்து விடுவான். இதனால் நாத்தனாருக்கு அண்ணி பேரில் பொறாமை வந்து விடுகிறது.

இது உலக இயற்கை. இந்த மனத்தாங்கல்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

எல்லா மருமகன்களுக்கும் பிடித்த மாமனார் சொத்தையெல்லாம் மருமகன் பேரில் எழுதி வைத்துவிட்டு இப்படித்தான் சுவரில் தொங்கிக்கொண்டு இருப்பார்.



திங்கள், 7 ஜனவரி, 2013

ஒரு மனதைத் தொடும் கதை


இந்தக் கதை இன்று எனக்கு ஈமெயில் மூலம் வந்தது. அதனுடைய உருக்கம் என்னை கண் கலங்க வைத்தது. நீங்களும் அந்த உருக்கத்தை உணர, அந்தக் கதையை அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்கிறேன்.

This is great. Take a moment to read it; it will make your day!

The ending will surprise you.


Take my Son.....


A wealthy man and his son loved to collect rare works of art. They had everything in their collection, from Picasso to Raphael. They would often sit together and admire the great works of art..

When the Vietnam conflict broke out, the son went to war. He was very courageous and died in battle while rescuing another soldier. The father was notified and grieved deeply for his only son.


About a month later, just before Christmas,

There was a knock at the door. A young man stood at the door with a large package in his hands..



He said, 'Sir, you don't know me, but I am the soldier for whom your son gave his life. He saved many lives that day, and he was carrying me to safety when a bullet struck him in the heart and he died instantly... He often talked about you, and your love for art.' The young man held out this package. 'I know this isn't much. I'm not really a great artist, but I think your son would have wanted you to have this.'


The father opened the package. It was a portrait of his son, painted by the young man. He stared in awe at the way the soldier had captured the personality of his son in the painting. The father was so drawn to the eyes that his own eyes welled up with tears. He thanked the young man and offered to pay him for the picture.. 'Oh, no sir, I could never repay what your son did for me. It's a gift.'


The father hung the portrait over his mantle. Every time visitors came to his home he took them to see the portrait of his son before he showed them any of the other great works he had collected.


The man died a few months later. There was to be a great auction of his paintings. Many influential people gathered, excited over seeing the great paintings and having an opportunity to purchase one for their collection.


On the platform sat the painting of the son. The auctioneer pounded his gavel. 'We will start the bidding with this picture of the son. Who will bid for this picture?'


There was silence...


Then a voice in the back of the room shouted, 'We want to see the famous paintings. Skip this one.'

But the auctioneer persisted. 'Will somebody bid for this painting? Who will start the bidding? $100, $200?'


Another voice angrily. 'We didn't come to see this painting. We came to see the Van Gogh's, the Rembrandts. Get on with the Real bids!'


But still the auctioneer continued. 'The son! The son! Who'll take the son?'


Finally, a voice came from the very back of the room. It was the longtime gardener of the man and his son. 'I'll give $10 for the painting...' Being a poor man, it was all he could afford.


'We have $10, who will bid $20?'

'Give it to him for $10. Let's see the masters.'


The crowd was becoming angry. They didn't want the picture of the son.

They wanted the more worthy investments for their collections.

The auctioneer pounded the gavel.. 'Going once, twice, SOLD for $10!'


A man sitting on the second row shouted, 'Now let's get on with the collection!'


The auctioneer laid down his gavel. 'I'm sorry, the auction is over.'


'What about the paintings?'


'I am sorry. When I was called to conduct this auction, I was told of a secret stipulation in the will... I was not allowed to reveal that stipulation until this time. Only the painting of the son would be auctioned. Whoever bought that painting would inherit the entire estate, including the paintings.

The man who took the son gets everything!'


Money is not EVERYTHING.

This may surprise few but is a fact.




வியாழன், 3 ஜனவரி, 2013

பதிவில் வரியின் இடைவெளியை அதிகப்படுத்த



இது ஒரு மீள் பதிவு. பிளாக்கர் டெம்ப்ளேட்டுகள் மாறியிருப்பதால் அவைகளுக்கு ஏற்ப குறிப்புகளை மாற்றியிருக்கிறேன்.


இந்த இரண்டு பதிவுகளையும் பாருங்கள்.(Screen shots)

ஒன்று:

இரண்டு:

இரண்டாவது பதிவு படிப்பதற்கு சௌகரியம். உங்கள் பதிவை இப்படி மாற்றவேண்டுமா? மேலே படியுங்கள்.


முதலில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு அமெச்சூர். கம்ப்யூட்டரின் எல்லா தொழில் நுட்பங்களும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் குருட்டாம்போக்கில் சில நுட்பங்களைக் கற்றிருக்கிறேன். அவைகளில் ஒன்று பதிவில் வரிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தல். நான் எழுதியிருப்பவைகளை அப்படியே செய்தால் விரும்பிய விளைவுகள் ஏற்படும்.  பல முறை படித்துவிட்டு அப்படியே செய்யவும்.
  
1.   முதலில் பதிவின் டேஷ்போர்டுக்குப் போகவும்.
2.   அங்கு பென்சில் மார்க்குக்கு வலது பக்கத்தில் சதுரமாக கருப்பாக ஒரு பட்டன் இருக்கும். அதன் மேல் கர்சரை வைத்தால் Go to post list என்று  தோன்றும். அதை அழுத்தவும்.
3.   இப்போது தோன்றும் ஸ்கிரீனில் இடது பக்கம் Template என்று இருப்பதை அழுத்தவும்.
4.   இப்போது தெரியும் ஸ்கிரீனில் வலது பக்கம் Back up/Restore Template என்கிற இடம் தெரியும். அந்த இடத்தை நன்றாக, முழுவதும் சுற்றிப் பார்த்து என்னென்ன இருக்கிறது என்று நன்றாகப் பார்த்துக்கொள்ளவும்.
5.   இப்போது Back up/Restore Template என்று இருப்பதை அழுத்தவும்.
6.   இப்போது Template  ›  Backup / Restore  என்று ஒரு விண்டோ வரும்.
7.   அதில் Download full template என்று ஒரு பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
8. இப்போது Save as………. என்று ஒரு ஸ்க்ரீன் வரும். அதில் Save ஐ செலக்ட் செய்யவும்.
9.   இப்போது உங்கள் டெம்ப்ளேட் பத்திரமாக உங்கள் Download folder இல் ஸ்டோர் ஆகியிருக்கும். இது எதற்கென்றால் நீங்கள் நான் சொன்னபடி செய்யாமல் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்திருந்தீர்களென்றால் வம்பு வந்துவிடும் அப்போது அந்த வம்பிலிருந்து மீண்டு வர இது உதவியாயிருக்கும்.
10. இப்போது Template  ›  Backup / Restore  விண்டோவை close செய்யவும்.
11.   அடுத்து Edit Template ஐ அழுத்தவும்.
12. இப்போது Template  ›  Edit HTML ன்று ஒரு ஸ்கிரீன் வரும். அதற்கு கீழ் Expand Widget Templates என்று ஒரு கட்டம் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
13. இப்போது தெரியும் ஒரு சதுரக் கட்டத்தினுள் என்னென்னவோ எழுதியிருக்கும். அதைப்பார்த்து பயப்படாதீர்கள். அந்தக் கட்டத்திற்குள் கர்சரை வைத்து ஒரு லெப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் ஒரு கோடாக உள்ளே கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.
14.  அப்படிக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தால் இது வரை நீங்கள் செய்தது சரியென்று அர்த்தம். இப்போது Ctrl  என்று ஒரு கீ உங்கள் கீபோர்டில் இடது கோடியில் கீழே இருக்கும். அதை அழுத்திக்கொண்டு கூடவே F கீயையும் அழுத்தவும். அழுத்திவிட்டு கையை கீ போர்டிலிருந்து எடுத்து விடவும்.
15. இப்பொது ஸ்கிரீனில் வலது மேல் கோடியில் ஒரு நீள்சதுரக் கட்டம் தெரியும். அந்தக் கட்டத்தில் line-height  என்று டைப் அடிக்கவும். இப்போது இந்த எழுத்துக்கள் டெம்ப்ளேட்டில் ஹைலைட் ஆகித் தெரியும்.

முக்கிய குறிப்பு; இது வரையில் நீங்கள் செய்ததெல்லாம் உங்கள் பிளாக்கை ஒன்றும் செய்துவிடாது. இப்போது உங்களுக்குப் பயமாக இருந்தால் உங்கள் ஸ்கிரீனின் வலது கோடி டாப்பில் ஒரு சிகப்பு x இருக்கிறதல்லவா, அதை கிளிக் செய்துவிட்டு ஓடி வந்து விடலாம். பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் கூகுளாண்டவர் துணை நிற்பார்.

16. இப்போது தெரிபவை:
       .post-body {
        Font-size 110%
        Line-height 1.2;

17. இதில் லைன் ஹைட் 1.2 என்று இருப்பதை 1.8 என்று மாற்றுங்கள். எப்படியென்றால், கர்சரை 2 க்கு முன்னால் வைத்து 2 ஐ டெலீட் செய்துவிட்டு 8 என்று டைப் செய்யுங்கள். அவ்வளவுதான். வேறு எந்த கீயையும் உபயோகப்படுத்தவேண்டாம்.
18.  இப்போது டெம்ப்ளேட் சதுரத்தை விட்டு வெளியில் வாருங்கள். கட்டத்துக்கு அடியில் SAVE TEMPLATE என்று இருப்பதை அழுத்தவும். கண்களை மூடிக்கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
19. இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். Your changes have been saved. View Blog என்று இருக்கும்.  View Blog ஐ அழுத்தவும். ஆஹா, உங்கள் பிளாக் இப்பொழுது அதிக இடைவெளியுடன் ஜ்வலிக்கும்.
20. இடைவெளியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமானால் திரும்பவும் இதே மாதிரி செய்து லைன் ஸ்பேசிங்க்கை 2.0 க்கு மாற்றலாம். இதே மாதிரி எழுத்துகளின் சைஸையும் 120, 130 % என்று உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம்.

    இவைகளை எல்லாம் வெற்றிகரமாக செய்த பின், உடனே என்னுடைய இந்த பிளாக்குக்கு வந்து நன்றி தெரிவிக்கவும். இல்லாவிட்டால் குருவின் சாபத்திற்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

புதன், 2 ஜனவரி, 2013

நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி


இது ஒரு சீரியஸ் பதிவு. இந்தப் பதிவைப் படித்துவிட்டு யாரும் சிரிக்கக்கூடாது. அப்படி சிரிப்பவர்கள் அடுத்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப் படுத்தப்படுவார்கள்

எல்லா நாடுகளிலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சிக்கூடங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அங்கே நடைபெரும் ஆராய்ச்சிகளுக்காக பெரிய வியாபார நிறுவனங்கள் அதிகமான நன்கொடை கொடுப்பார்கள்.

அந்த நன்கொடையைக் கொண்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து புதிது புதிதாக ஏதாவது கண்டு பிடிப்பார்கள். இத்தகைய கண்டுபிடிப்புகள்தான் மனித வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.

அப்படி ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஒரு பெரும் தொகையை தன்னுடைய ஆராய்ச்சிக்காகப் பெற்று அந்த ஆராய்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அதாவது மனிதனுக்கு வியாதியே வராமல் தடுப்தற்காக ஒரு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி.

பலநாட்கள் கஷ்டப்பட்டு அந்த மருந்தைக் கண்டுபிடித்தார். அந்த மருந்து எப்படி செயல்படுகிறது என்று பார்க்கவேண்டுமல்லவா? அதற்காக நூறு எலிகளைப் பிடித்து கூண்டில் அடைத்து அவைகளுக்கு இந்த மருந்தை தினமும் கொடுத்து வந்தார்.

ஒரு வாரத்தில் அந்த எலிகள் எல்லாம் இறந்து விட்டன. சாதாரண விஞ்ஞானியாக இருந்தால் தன்னுடைய ஆராய்ச்சி தோற்றுவிட்டதே என்று மனதொடிந்து போயிருப்பார். ஆனால் இந்த விஞ்ஞானியோ மிகவும் புத்திசாலி (என்னை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்).

என்ன செய்தார் தெரியுமா? மளமளவென்று காகிதத்தை எடுத்து " 100 சதம் வெற்றி" என்று தலைப்பை எழுதினார். அதன் கீழ் மிகவும் விரிவாக பத்து பக்கங்களுக்கு தான் அந்த மருந்தைக் கண்டுபிடித்த விதம், எலிகளுக்கு அதைக் கொடுத்தது எப்படி, அவை எவ்வாறு இறந்தன, இறந்த எலிகளை என்ன செய்தார் என்ற விவரங்களை விலாவாரியாக எழுதி, அந்த அறிக்கையை பணம் கொடுத்த நிறுவனத்திற்கும் அந்த ஆராய்ச்சி நிறுவனத் தலைவருக்கும் அனுப்பிவிட்டார்.

இத்தகைய ரிப்போர்ட்டுகளை ஆராய்ச்சி நிறுவனத்தில் யாரும் படிக்கமாட்டார்கள். தலைவர், கோப்பில் வைக்கவும் என்று எழுதிக் கையெழுத்து போட்டு ரிக்கார்டு ரூமுக்கு அனுப்பிவிடுவார். அங்கு அதை கரப்பான் பூச்சிகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

இந்த ஆராய்ச்சிக்காக பணம் கொடுத்த நிறுவனத்தில் அவர்கள் செலவழித்த பணத்திற்கு இதுதான் அத்தாட்சி. அங்கு இந்த மாதிரி ரிப்போர்ட்டுகளைப் படித்து, ஏதாவது குறிப்புடன் ஆடிட் செக்ஷனுக்கு அனுப்புவார்கள். அவர்களும் இந்த ரிப்போர்ட்டுகளை முழுவதுமாகப் படிக்க மாட்டார்கள்.

அங்கு இதைப் பார்க்கும் ஆடிட்டர் "100 சதம் வெற்றி" என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் ஆஹா, நல்ல ஆராய்ச்சி என்று குறிப்பெழுதி, இந்த விஞ்ஞானிக்கு மேலும் ஆராய்ச்சிக்காக பணம் கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்வார்.

அந்த விஞ்ஞானியும் மேலும் இந்த மாதிரியான பல ஆராய்ச்சிகள் செய்து பேரும், புகழும், செல்வமும் அடைவார்.