திங்கள், 1 ஏப்ரல், 2013

கோந்து தயாரிப்பது எப்படி?


தற்காலத்திய சிறுவர்களிடம் கோந்து தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள், கோந்தா, அப்படீன்னா என்னங்க, என்று கேட்பார்கள். அது வந்து Gum  அப்படீன்னு நீங்க உபயோகிக்கிறீங்களே அதுதான் என்றால், மொதல்லயே ஒழுங்கா Gum  னு கேட்டிருந்தா சொல்லியிருப்போம்ல என்று பதில் வரும்.

நான் சின்னப் பையனா இருக்கறப்ப கோந்து வேணும்னா வேப்ப மரத்தைத் தேடிப்போவோம்.  அதில் ஏற்பட்டுள்ள சிறு காயங்களிலிருந்து வேப்பம் பிசின் வழிந்து காய்ந்து இருக்கும். அதை எடுத்து வந்து தொட்டாங்குச்சியில் (அதாங்க தேங்காய் தொட்டி அல்லது சிரட்டை) போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தால் மூன்று நாளில் கோந்து தயார்.

அந்தக் தொட்டாங்குச்சி சாய்ந்து விடாமல் பக்கத்தில் சிறு கற்களினால் அணைப்பு கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தொட்டாங்குச்சி சாய்ந்து கோந்து சிந்திப்போகும். இந்தக் கோந்தை எடுக்க ஒரு பென்சில் தடிமனான குச்சியை அதில் போட்டு வைக்கவேண்டும்.

இப்படித்தான் அந்தக்காலத்தில் நாங்கள் கோந்து தயாரித்து உபயோகப்படுத்தி வந்தோம். அந்தக் காலத்தில் கோந்தின் முக்கியமான உபயோகம் என்னவென்றால் பட்டம் விடுவதற்கான நூலுக்கு மாஞ்சா போடுவதுதான். நூலுக்கு மாஞ்சா போடுவது என்பது ஒரு கலை. அதைப்பற்றி பிறகு தனியாக ஒரு பதிவு போடுகிறேன். மாஞ்சா நூல் ஒரு கொலைக் கருவியாக தற்காலத்தில் மாறிவிட்டது காலத்தின் கோலம்.

தற்காலத்தில் கோந்து பல விதங்களில் வந்து விட்டன. செயற்கை கோந்துகள் ஏறக்குறைய இயற்கை கோந்துகளை மறக்கடிக்க வைத்துவிட்டன. ஆனாலும் என்னைப் போன்றவர்கள் இன்னும் அந்தக் காலத்து பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

இப்போது நகர வாழ்க்கையில் வேப்ப மரங்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நாட்டு மருந்துக் கடைகளில் இப்பொழுதும் கோந்து கிடைக்கிறது. 100 கிராம் 15 ரூபாய். அதை வாங்கிக்கொண்டு வந்து பழைய மருந்து பாட்டிலில் ஊறவைத்துப் பயன்படுத்திக்கொண்டு வந்தேன். இப்போது ஒரு பழைய காலி கேம்லின் கோந்து பாட்டில் என் பேரனின் தயவால் கிடைத்தது. அதை உபயோகப் படுத்துகிறேன். கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கோந்துகள் இதை விட விலை குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கோந்தை உபயோகப்படுத்தும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி, ரெடிமேட் கோந்துகளினால் கிடைப்பதில்லை.

பழைய ஆட்களைத் திருத்துவது மகாக் கடினம்.

சனி, 30 மார்ச், 2013

12. தேவலோகத்திற்கு சுற்றுலா






இந்தியாவில் தனிமனித வாழ்க்கை சுபிட்சமாக மாறத்தொடங்கியது. எங்கும் எதிலும் முன்னேற்றம் தென்பட்டன. அமெரிக்கா, இந்தியாவைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தது. அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவுடன் சுமுக உறவை நீட்டித்தன. இந்தியாவின் அனைத்து எல்லைகளிலும் வெளிநாட்டிலிருந்து யாரும் ஊடுறுவ முடியாதபடி வேலிகள் அமைக்கப்பட்டன.

பாகிஸ்தான் தன் உளவு வேலைகளையும் சதித்திட்டங்களையும் நிறுத்திக்கொண்டு விட்டது. காஷ்மீரில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வர ஆரம்பித்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக இணக்கம் காட்டினார்கள். தீவிர வாதம் அடியோடு மறைந்து விட்டது.

வடகிழக்கு மாகாணங்களில் சைனா தன் தலையீட்டை நிறுத்தி விட்டது. அந்த மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

ராஜபக்க்ஷே வாலைச்சுருட்டிக்கொண்டு, இலங்கையில் வசிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுத்துவிட்டார். வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்த அனைத்து இலங்கை அகதிகளும் தாய்நாடு திரும்பிவிட்டார்கள். பிரபாகனுக்கு ஆங்காங்கே நினைவுச்சின்னங்கள் வைக்கப்பட்டு வை.கோ. வைக்கொண்டு திறந்து வைக்கப்பட்டன. பிரபாகரன் நினைவாக ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது.

பொதுவைக் கூப்பிட்டு, இனி நம் சொந்த வேலைகளைக் கவனிக்கலாமா என்றேன். அவர்கள் என்னவென்று தெரியாமல் விழித்தார்கள்.

நான் சொன்னேன், பொது, நம் நாட்டில் ஏகப்பட்ட பேர் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் எப்பேர்ப்பட்ட முட்டாள்தனமான திட்டம் சொன்னாலும் பணத்தைக் கொட்டிக்கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

என்னுடைய திட்டம் இதுதான். நமது தூதரகத்திலிருந்து இந்தியர்களுக்கு தேவலோகத்திற்கு செல்ல இரண்டு விதமான விசா கொடுக்கப்படும்.

ஒன்று: டூரிஸ்ட் விசா. மூன்று பகல், இரண்டு இரவு அவர்களைத் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நாம் போட்டிருக்கும் நகர்களைக் காட்டுவோம். அங்கு தங்க, சுற்றிப் பார்க்க எல்லா வசதிகளும் செய்து தரப்படும். விசா சார்ஜ் ஒரு கோடி ரூபாய். இதில் 50 சதம் வரியாக இந்திய அரசுக்கு கொடுத்துவிடுவோம்.

இந்த டூர் நமது தேவ்லோக் ஏர்லைன்ஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை கோயமுத்தூர் ஏர் போர்ட்டிலிருந்து புறப்படும். திங்கட்கிழமை செல்பவர்கள் புதன்கிழமை திரும்புவார்கள். வியாழக்கிழமை புறப்படுபவர்கள் சனிக்கிழமை திரும்புவார்கள். இதற்கான விமானக் கட்டணம் மற்றும் ஊர் சுற்றிப் பார்க்கும் செலவுகள், உணவு, தங்கும் வசதிகள் எல்லாவற்றிற்கும் மொத்தமாக பத்து கோடி ரூபாய். இதற்கு உள்ளூர் வரிகள் தனி.

ஒரு ட்ரிப்புக்கு 200 பேர் வீதம் வாரத்திற்கு 400 பேர் மட்டுமே செல்ல முடியும். டிக்கெட்டுகள் அந்த அளவிற்குத்தான் கொடுப்போம். அதிகப் பேர் வந்தால் அவர்களுக்கு அட்வான்ஸ் புக்கிங்க் செய்யப்படும். டூர் கட்டணத்தை வாங்க கோவையில் தேவலோக பேங்கின் கிளை ஒன்றை ஆரம்பிப்போம். இதற்காக ஒரு 50 ஏக்கர் நிலம் வாங்கி, மயனை விட்டு ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டி விடலாம்.                                                      

இரண்டாவது இமிக்ரேஷன் விசா: இது ஒருவருடைய ஆயுள் காலத்திற்குப் பின்தான் அமுலுக்கு வரும். ஒருவர் தன் ஆயுள்காலம் முடிந்தவுடன் யமலோகம் போய் தனக்குண்டான பாவபுண்ணிய பலன்களை அனுபவித்த பின், இந்த விசா அமுலுக்கு வரும். அவர்களுக்கான குடியிருப்பு ரெடியாக இருக்கும். அங்கு அவர்களை அழைத்துச் சென்று, குடியமர்த்தப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவலோக கிரீன் கார்டு கொடுக்கப்படும்.

இந்த குடியிருப்புக்கான விலை மற்றும் விசா சார்ஜ் மொத்தம் 100 கோடி ரூபாய். பணம் முழுவதையும் ரொக்கமாக இந்திய ரூபாயிலோ அல்லது அமெரிக்க டாலராகவோ அல்லது ஐரோப்பிய யூரோவாகவோ கட்டலாம். வேறு எந்தக் கரன்சியும் வாங்கப் படமாட்டாது. செக்குகள், பாங்க் டிராப்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

இந்தப் பணத்தை ரொக்கமாக நமது தூதரகத்திலுள்ள தேவலோகப் பேங்கில் கட்டவேண்டும். பணம் கட்டும்போது ஒரு ஒப்பந்தம் போடப்படும். அந்த ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள்.

1. எக்காரணம் கொண்டும் விசா கட்டணம் திருப்பித்தரமாட்டாது.

2. இந்த விசா வாங்கிய செய்தியை யாரிடமும் சொல்லக் கூடாது.

3. இந்த சமாசாரத்தில் எக்காரணம் கொண்டும் காவல் துறைக்கு புகார் கொடுக்கக் கூடாது.

4. அப்படி யாராவது புகார் கொடுக்கலாம் என்று நினைத்தவுடனேயே அவர்கள் யமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

5. தினம் பத்து பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும். அதிகம் பேர் விண்ணப்பித்தால் அவர்கள் வெய்ட்டிங்க் லிஸ்டில் வைக்கப்படுவார்கள்.

6.  75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விசாவிற்கு தகுதியானவர்கள்.

இந்த ஒப்பந்தத்தில்  ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி விடுங்கள். ஒப்பந்தத்தின் காப்பி அவர் யமலோகம் சென்றவுடன் கொடுக்கப்படும். இங்கு அதன் காப்பி இருக்கக் கூடாது.


இமிக்ரேஷன் விசாவில் 50 சதம் இந்திய அரசுக்கு வரியாக செலுத்தி விடுவோம். மீதியுள்ள விசா கட்டணத்தில் நம் ஊதியம் போக மிச்சமிருக்கும் பணத்தை அன்றன்று  தேவலோக பிராஞ்சிற்கு அனுப்பி விடவேண்டும்.

இந்த இமிக்ரேஷன் விசா கட்டணத்தில் 10 சதம் நம்முடைய உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக்கொள்வோம். அதாவது ஒரு விசாவிற்கு 10 கோடி. அதில் எனக்கு 50 சதம். உங்களுக்கு, ஆளுக்கு 25 சதம். அவரவர்கள் பங்கை அன்றன்றே எடுத்துக் கொண்டு விடவேண்டும். நாம் தூதரக அதிகாரிகளானதால் நமக்கு வருமான வரி கிடையாது. இந்தப் பணத்தை இங்கேயுள்ள தேவலோகப் பேங்கில் அவரவர்கள் அக்கவுன்ட்களில் போட்டு வைப்போம்.

முதலில் டூரிஸ்ட் விசா மட்டுமே கொடுங்கள். இமிக்ரேஷன் விசா பற்றிய விஷயம் தேவலோகத்தில் டூர் வருபவர்களுக்கு மட்டும் வாய் வார்த்தையாக பரவட்டும்.

மறுநாள் இந்திய தினசரிகள் அனைத்திலும் இந்த டூரிஸ்ட் விசா பற்றிய விளம்பரம் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரமாக வெளி வந்தது.

விளம்பரம் வெளிவந்து சிறிது நேரத்திலேயே ஜனங்கள் தூதரகத்திற்கு வர ஆரம்பித்தார்கள். தங்களுக்கு டூரிஸ்ட் விசா வேண்டும் என்றார்கள். வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக ஒரு பந்தல் போட்டு எல்லோரையும் உட்காரவைத்தோம். அவர்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள், பானங்கள், டி.வி. அனைத்து வசதிகளும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டன.

யமனிடமிருந்து தேவையான ஆட்களை வரவழைத்து ஜரூராக விசாக்கள் கொடுக்கப்பட்டன. முதல் நாளே 5000 பேருக்கு டூரிஸட் விசா கொடுத்தோம்.

கோவையில் பேங்கும் விமான சர்வீசின் ஆபீசும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரியிடம் தேவலோகப் போக்குவரத்துக்கான அனுமதிகள் வாங்கப் பட்டுவிட்டன. தேவலோகப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

முதல் வெள்ளோட்டப் பயணத்தில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், கட்சித்தலைவர். முக்கிய அதிகாரிகள் மற்றும் தமிழ் மணத்தில் முதல் 20 ரேங்க் வைத்திருக்கும் பதிவர்கள் இவர்களை ஏற்றிக்கொண்டு போனோம்.

அங்கு அவர்களுக்கு ராஜோபசாரம் நடந்தது. இதுவரை பூலோகத்தில் யாரும் சாப்பிட்டிராத உணவு வகைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்குவதற்கு கொடுக்கப்பட்ட அறைகள் அரேபிய சுல்தான்கள் தங்கும் அறைகள் போலிருந்தன. அந்த விடுதிகளில் இல்லாத சௌகரியங்களே இல்லை.

அவர்கள் தேவலோகத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்களைப்போல் அவர்கள் தங்கள் ஆயுளில் பார்த்ததில்லை என்னும்படியாக இருந்தன. ஒவ்வொரு பஸ்சிலும் முப்பது பேர்கள்தான். வழிகாட்டுவதற்கு ஒவ்வொரு பஸ்சிற்கும் ஒரு தேவலோக அப்சரஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருந்தோம். அவ்வப்போது குடிப்பதற்கும் கொறிப்பதற்கும், வறுத்த முந்திரி, பாதாம்பருப்பு, ஆல்மண்ட், நல்ல திராக்ஷை ரசம், ஆப்பிள் ஜூஸ், மேங்கோ ஜூஸ், இப்படி  ஏதாவது கொடுத்துக்கொண்டிருந்தோம்.

இரவானதும் அவர்கள் தங்கும் விடுதிகளில் பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவைகளில் முக்கியமானவை ரம்பை-ஊர்வசி நாட்டியம்தான். இரவு விருந்தில் நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொன்றையும் ருசி பார்ப்பதற்குள்ளேயே பசி தீர்ந்து விட்டது. பல விதமான தீர்த்தங்கள் கொடுக்கப்பட்டன.


இவைகளை எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன்  90 சதம் பேர்கள் (பதிவர்களில் 100 சதம்) அங்கேயே படுத்து விட்டார்கள். காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களை எல்லாம் யம கிங்கரர்கள் தூக்கிக்கொண்டுபோய் அவரவர்கள் அறையில் படுக்க வைத்தார்கள்.

அவர்கள் புறப்படும் நாள் வந்தது. ஒருவருக்கும் புறப்படவே மனது இல்லை. இங்கேயே இருந்து விடுகிறோமே என்றார்கள். அப்போது அவர்களுக்கு "இமிக்ரேஷன் விசா" வைப்பற்றி நாரதர் ஒரு வகுப்பு எடுத்தார். அன்வரும் ஒரே குரலில் நாங்கள் திரும்பிப் போனதும் முதல் வேலையாக இந்த விசாவை வாங்குவோம் என்று பதிவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஏகமனதாகச்சொன்னார்கள்.

 இப்படியாக அனைவரையும் பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தோம்.

வெள்ளி, 29 மார்ச், 2013

நான் ஜெயிலுக்குப் போனேன்.


நான் ஏதோ கொலைக்குற்றம், வழிப்பறி அல்லது பாலியற்குற்றம் புரிந்து விட்டு ஜெயிலுக்குப் போனதாக கற்பனை செய்யவேண்டாம். அதற்குத் தேவையான உடல், மன தைரியம் எனக்கில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பையன் ஒரு சிறு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசரணைக் கைதியாக சிறைக்கு அனுப்ப்பபட்டான். ஜாமீன் வாங்குவதில் பல சிக்கல்கள். போலீஸ், கோர்ட்டு, சிறைச்சாலை, வக்கீல்கள் இவர்கள் பக்கம் போகாமல் இருந்தால் நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் பெரும்பாலானோருக்கு இது தெரியாது.

ஆனால் நரகத்தைப் பார்த்தால்தான் சொர்க்கம் என்றால் என்ன என்று புரியும்.  இந்த நான்கு இடங்களையும் பார்த்தால் நரகம் என்றால் என்ன என்பது தெளிவாகப் புரியும்.

அந்தப் பையனின் பெற்றோர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லலாமென்று அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர்கள் வெளியில் புறப்படுவதற்கான ஆயத்தத்தில் இருந்தார்கள். வெளியில் புறப்படுகிறமாதிரி இருக்கிறதே என்றேன். ஆமாங்க, பையனைப் பார்த்து விட்டு வரலாமென்று புறப்படுகிறோம் என்றார்கள். அந்தப்பையனை நன்றாகத் தெரியுமாதலால் நானும் வரட்டுமா என்றேன். அவர்கள் வாங்களேன் என்று சொன்னார்கள். நாங்கள் மூவரும் அவர்கள் காரில் சென்றோம்.

கார் முதலில் ஒரு பழக்கடைக்கு சென்றது. இங்கு எதற்கு செல்கிறார்கள் என்று யோசிக்கும்போது, பையனுக்கு கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பதற்காக இங்கே வந்தோம் என்றார்கள். அப்படியா என்று நினைத்துக்கொண்டேன். எனக்கும் ஒரு பழஜூஸ் வந்தது. அவர்கள் ஏதேதோ வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

பிறகு எல்லோரும் சிறைச்சாலைக்குப் போனோம். அங்கு முதல் கேட்டில் ஒரு விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்தோம். அதை ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்து எங்கள் மூவருடமும் கைரேகை வாங்கினார்கள். ஒருவன் என்ன படித்திருந்தாலும் அவர்களைப் பொருத்தவரையில் அவன் கைநாட்டுதான்.

அங்கே இருக்கும் இன்னொரு ரூமில் நாம் வாங்கிக்கொண்டு போயிருக்கும் தின்பண்டங்களைப் பரிசோதித்து, சிலவற்றை ஏற்றுக்கொள்ளாமல், மீதி இருப்பவற்றை ஒரு ஜெயில் பையில் போட்டு, அதற்கு ஒரு நெம்பர் கொடுத்து, நம்மிடம் ஒரு டோகன் கொடுக்கிறார்கள்.

பிறகு அங்கே இருக்கும் இன்னொரு ரூமில் நம்மிடம் ஏதாவது வெடிகுண்டு இருக்கிறதா என்று தடவித்தடவி பரிசோதிக்கிறார்கள். அவர்கள் சந்தேகம் தீர்ந்தவுடன் நம்மைப் போக அனுமதிக்கிறார்கள். பணம் 50 ரூபாய் மட்டுமே கொண்டு செல்லலாம். இந்தப் பணத்தை நாம் பார்க்கப் போகிறவர்களுக்கு கொடுத்துவிட்டு வரலாம். இதற்கென்று ஒருவர் இருக்கிறார். அவர் அந்தப் பணத்தை இந்தப் பக்கம் இருந்து வாங்கி அந்தப் பக்கம் கொடுப்பதற்கு சிரம பரிகாரமாக 20 ரூபாய் எடுத்துக்கொள்வார்.

அங்கிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் இன்னொருவர் மேஜை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் போய் நம் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அவர் இன்னொரு ரிஜிஸ்டரில் எழுதி நம்மிடம் இன்னொரு முறை கைநாட்டு வாங்குவார்.

எந்த இடத்திலும் ஜனங்கள் உட்காருவதற்கு பெஞ்ச் அல்லது வேறு இருக்கைகளோ இல்லை. ஒரு வேப்பமரமும் ஒரு புளியமரமும் இருக்கின்றன. அதன் நிழலில் மண் தரையில் உட்கார்ந்து கொண்டு நம் விதியை நொந்தபடி இருக்கவேண்டியதுதான்.

அந்த விண்ணப்பங்களை எல்லாம் அவர் உள்ளே இருக்கும் காவலருக்கு அனுப்புகிறார். அவர் நாம் பார்க்கப்போகும் நபர் அந்த இன்டர்வியூ ஹாலுக்கு வந்து விட்டாரா என்று செக்கப் செய்வார். இதற்கு எப்படியும் அரை அல்லது ஒரு மணி நேரம் ஆகின்றது. நாம் பார்க்கப்போகும் நபர் ரெடியானவுடன் நம்மைக் கூப்பிடுகிறார்கள்.

இன்னொரு முறை வெடிகுண்டு சோதனை நடைபெறுகின்றது. பிறகு ஒரு நடைபாதை வழியே போனால் இன்டர்வியூ ஹால் வருகிறது. மீன்கடை இரைச்சல் என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி இரைச்சல் அந்த ஹாலில் இருக்கிறது.


ஏனென்றால், அந்த ஹாலில் இரண்டு இரும்புத் தடுப்புகள் போட்டிருக்கிறார்கள். இரண்டுக்கும் இடையே நான்கு அடி இடைவெளி. விசாரணைக் கைதிகள் ஒரு பக்கம். பார்க்கப்போகிறவர்கள் இந்தப் பக்கம். நாங்கள் போகும்போது கைதிகள் பக்கம் ஒரு நூறு பேரும் பார்வையாளர்கள் பக்கம் ஒரு இருநூறு பேர்களும் இருந்தார்கள். அவர்கள ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த இரைச்சலில் ஒருவர் பேசுவதும் அடுத்தவர்களுக்கு சரியாக காதில் விழுவதில்லை. ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் குரலை உயர்த்திப் பேசுகிறார்கள். மொத்தத்தில் சந்தைக்கடைதான். என்னால் எதுவும் பேட முடியவில்லை. நான் பார்க்கப்போன பையனைப் பார்த்து கையசைத்ததோடு சரி. ஒரு ஓரமாக நின்றுகொண்டு வேடுக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை. புருஷனைப் பார்க்க வந்திருக்கும் கைக் குழந்தைக்காரி. மகனைப் பார்க்க வந்திருக்கும் நடக்கமுடியாத பாட்டி. அரசியல்வாதியைப் பார்க்க வந்திருக்கும் கட்சிக்காரர்கள். இப்படி பலதரப்பட்ட மக்கள். எல்லோர் முகங்களிலும் சோகம். ஒருவர் முகத்திலாவது மலர்ச்சி என்பது மருந்துக்குக் கூட இல்லை.

வாழ்கையின் மறு பக்கத்தை இங்கே பார்த்தேன். மனது மிகவும் கனமாகிப்போனது. இவர்களுக்கெல்லாம் எப்போது விசரணை நடந்து முடிந்து எந்த விதமான தண்டனை கிடைக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. அப்படி தண்டனை பெற்றவர்கள் தண்டனைக் காலம் முடிந்து சிறையை விட்டு வெளியில் வரும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?உலகம் அவர்களுக்கு எந்த விதமான வரவேற்பு கொடுக்கும்? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

வியாழன், 28 மார்ச், 2013

கள்ளக்காதலை எதிர்கொள்வது எப்படி?

நாட்டில் அவலங்கள் அதிகப்பட்டு வருகின்றன. நம் மனதிற்கு அவை பிடிக்கவில்லை என்பதற்காக அவைகளை புறக்கண்ப்பதால் அவை மறைந்து விடப்போவதில்லை. அவைகளை நாம் எவ்வகையிலாவது சந்திக்க நேரிடும்.

கள்ளக்காதல் என்பது ஒரு முக்கூட்டுப் பிரச்சினை. கணவன், மனைவி, கள்ளக்காதலன் அல்லது காதலி. இது இன்று அல்லது நேற்று முளைத்த பிரச்சினை இல்லை. காலங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. இதை சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்ளுகிறான் என்று பார்ப்போம்.

ஆண் என்றால் இதை மூன்று வழிகளில் கையாளுகிறான்.

1. கள்ளக்காதலனைப் போட்டுத்தள்ளுவது.

இதுதான் வழக்கமாக நடக்கும் ஒன்று. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இதை ஒரு குற்றமாகவே கருத மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் இது ஒரு கொலைக்குற்றமாக கருதப்படுகிறது. இந்தக் குற்றம் புரிபவன் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை பெறுவான். ஜெயிலில் களி சாப்பிடும்போதுதான் அவனுக்கு யோசனை வரும்.

நாம் ஏன் இப்படி செய்தோம் என்று யோசிப்பான். குற்றம் செய்தது அவன் பெண்டாட்டி. இதற்கு நான் தண்டனை அனுபவிக்கிறேனே, அவள் வெளி உலகில் சுதந்திரமாக வாழ்கிறாளே என்று எண்ணி வருந்துவான்.

2. கள்ளக்காதலனையும் பெண்டாட்டியையும் போட்டுத் தள்ளுவது.

மிகவும் உணர்ச்சி வசப்படும் ஆண் செய்யும் காரியம் இதுதான். குற்றம் புரிந்தது இருவர் என்பதால் ஒருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல என்பது இவர்கள் எண்ணம். ஆனால் விளைவு என்னமோ ஒன்றுதான். இரட்டைக் கொலைக்காக இவன் தண்டனை பெறுவான்.

ஜெயில் தண்டனை என்பது சாதாரணமானதல்ல. ஒருவன் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் முடிந்து தண்டனை பெற்று அதை அனுபவித்து முடித்து வெளியில் வரும்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது.

3. இருவரையும் போட்டுத் தள்ளிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வது.

இதுதான் உச்சகட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இதில் உள்ள ஒரே சௌகரியம் என்னவென்றால் கதை உடனடியாக முடிந்து விடுகின்றது. போலீஸ்காரர்களுக்கும் நீதிபதிகளுக்கும் வேலை குறைவு. பிரேதப் பரிசோதனை முடித்து அடக்கம் செய்தால் கேஸ் முடிந்துவிடும்.

இந்த மூன்று வழிகளிலும் உள்ள ஒரே வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதே.

புதன், 27 மார்ச், 2013

11. விவசாய மகாநாட்டின் தீர்மானங்கள்


ஐந்தாம் நாள் எல்லோரும் காலை பத்து மணிக்கு மகாநாட்டுப் பந்தலில் கூடினோம். ஏறக்குறைய அனைத்து முதல் மந்திரிகளும் தங்கள் தங்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். அந்தந்த மாநில விவசாய அதிகாரிகளும் விவசாயிகளும் மட்டுமே பந்தலில் இருந்தார்கள். ஓரிரு விவசாய மந்திரிகள் கண்ணில் பட்டார்கள்.

நான் பிரதம மந்திரியைப் பார்த்து நம் நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மேல் நமது முதலமைச்சர்களுக்கு உண்டான அக்கறையைப் பார்த்தீர்களா என்றேன். அவர் தலையில் அடித்துக் கொண்டு நீங்கள் ஒரு முறை இவர்களைப் பார்த்ததுமே இப்படி அலுத்துக் கொள்கிறீர்களே, நான் அன்றாடம் இவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கிறேனே, என்னுடைய நிலையை யோசித்துப் பாருங்கள் என்றார். ஆமாங்க, உங்கள் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்கு உரியதுதான் என்றேன்.

 மகாநாட்டு அலுவல்கள் தொடங்கின. பிரதம மந்திரி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்து சொன்னதாவது. இப்போது நாம் இங்கு ஓரு விவசாயப் புரட்சி செய்யப் போகிறோம். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்சாக நின்று விடப்போவதில்லை. அவைகள் உடனடியாக அமுலுக்கு வரப்போகின்றன. அதில் சந்தேகம் வேண்டாம். இப்போது தீர்மானங்களை நிதி மந்திரி முன்மொழிவார்.

நிதி மந்திரி எழுந்து தீர்மானங்களை ஒவ்வொன்றாக முன் மொழிந்தார்.

1. நம் தேவலோகத் தூதுவர் வருண பகவானிடம் போட்டுள்ள ஒப்பந்தப்படி இனிமேல் இந்தியாவில் மாதம் மும்மாரி பெய்யும். அனைத்து ந்திகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் வற்றாமல் ஓடும். எந்த ஆற்றிலும் நகரக் கழிவு நீரோ அல்லது தொழிற்சாலைக் கழிவு நீரோ கலக்காது. அவற்றிற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.

2. விவசாயம் தொழில்துறையாக அறிவிக்கப்படுகிறது. தொழில் துறை நிறுவனங்கள் செயல்படும் விதத்திலேயே இனிமேல் விவசாயமும் செயல்படும். அதில் முக்கியமான செயல்பாடு, உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்தல். உற்பத்திச் செலவுகளுக்கு மேல் 20 சதம் அதிகம் வைத்து விலை நிர்ணயிக்கப்படும். இந்தியா முழுவதும் விளை பொருட்களின் விலை ஒரே மாதிரி இருக்கும். வியாபாரிகள் கொள்முதல் விலைக்கு மேல் 20 சதம் மட்டுமே லாபம் வைக்கலாம்.

3. விவசாய விளை பொருட்களை சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வராவிட்டால் அந்தப் பொருட்களை அரசே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளும். அதிக விளைச்சல் வரும்போது விலை இல்லையே என்று எந்த விவசாயியும் கவலைப்படவேண்டியதில்லை.

4. விவசாயம் இனி நவீன தொழில் நுட்பங்களுடன் நடைபெறும்.வேலைகளை சுலபமாக்கும் நவீன கருவிகள் உபயோகிக்கப்படும். விவசாய வேலைகள் இனிமேல் நன்கு பயிற்சி பெற்ற தொழில் நிபுணர்களால் செய்யப்படும். அவர்களை பயன்படுத்த அந்தந்த கிராமங்களில் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

5. இயற்கை வழி விவசாயமே இனி கடைப்பிடிக்கப்படும். நச்சு கலந்த பூச்சிக்கொல்லிகள் உபயோகப் படுத்தப்படமாட்டாது. மண்வளம் பாதுகாக்கப்படும். காடுகளை எக்காரணம் கொண்டும் யாரும் அழிக்க முடியாது. அவைகளின் பரப்பளவு அதிகரிக்கப்படும். விவசாய நிலங்களை இனி வேறு எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.

6. வருடம் முப்போகம் விளைவதில், ஒரு போகம் பசுந்தாள் உரப் பயிர்களுக்காக ஒதுக்கப்படும். இதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.

7.இயற்கை உரங்களை அரசே தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கும்.
குறிப்பாக மனிதக் கழிவுகள் வீணாகாமல் உரம் தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும்.

8. மக்ளுக்கு வேண்டிய தரமான, கலப்படமில்லாத உணவுப்பொருட்கள் ஆங்காங்கே நிறுவப்படும் அரசு அங்காடிகள் மூலமாக விற்கப்படும்.

9. முக்கியமான மற்றொரு தீர்மானம். விவசாயிகளின் கடன்கள், அவர்கள் எங்கு வாங்கியிருந்தாலும் சரி, அவைகள் மொத்தமாக ரத்து செய்யப்படுகின்றன.  இனிமேல் அவர்களுக்கு விவசாய வேலைகளுக்குத் தேவையான நிதி வட்டியில்லாக் கடனாகக் கொடுக்கப்படும்.

மத்திய விவசாய மந்திரி இந்தத் தீர்மானங்களை வழி மொழிந்தார்.

இந்தத் தீர்மானங்களைக் கேட்ட மகாநாட்டுக்கு வந்திருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்த சத்தம் கேட்டு வானத்திலிருந்து மும்மூர்த்திகளும் வந்து விட்டார்கள். நல்ல விஷயங்கள்தான் நடக்கிறது என்று அறிந்து கொண்டு ஊர் திரும்பினார்கள்.

இப்படியாக மாநாட்டுத் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின.

கடைசியில் பேசிய பிரதம மந்திரி கூறியதாவது.

அனைத்து விவசாய மந்திரிகளும் விவசாய அதிகாரிகளும் இந்த தீர்மானங்களை அமுல் படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பார்கள். இந்த நடைமுறைகளில் வரும் பிரச்சினைகளை சமாளிக்க விவசாய நிபுணர்கள் கொண்ட அனைத்திந்திய கமிட்டி ஒன்று 24 மணி நேரமும் செயல்படும்.

இவ்வாறு விவசாய மகாநாடு முடிவுக்கு வந்தது.

மகாநாடு முடிந்தவுடன் சில பத்திரிகை நிருபர்கள் சில சந்தேகங்களை கேட்டார்கள். விவசாயப்பொருட்களுக்கு இவ்வாறு விலை வைத்தால் அந்தப் பொருட்களை மக்களை வாங்குவார்களா என்று கேட்டார்கள். அதற்கு நிதி மந்திரி சொன்னார். இப்போதுள்ள லகுவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையில் இருப்பதால் மக்களின் தனிப்பட்ட பொருளாதாரம் வெகுவாக முன்னேறியுள்ளது.

விவசாயம் தவிர அனைத்துத் துறைகளிலும் பொருட்களின் விலை, வேலையாட்களின் கூலி ஆகியவை பன்மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால் விவசாயத்துறையில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. ஏனென்றால் இன்றைய சந்தை நிலவரப்படி விவசாயி ஆட்களுக்கு கூலி கொடுக்க முடிவதில்லை. ஏன்? அவன் விளைவிக்கும் பொருளுக்கு சந்தையில் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. இப்படியே இருந்தால் விவசாயம் அழிந்து போய்விடும்.

ஏன் விவசாயம் மட்டும் இப்படி இருக்கவேண்டும்? கணினித்துறையில் ஒருவன் 50000 ரூபாய் சாதாரணமாக சம்பளம் வாங்குகிறான். தொழில் துறையில் மேலாளராக இருப்பவனுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். கட்டிடத்துறையில் சாதாரண மேசனுக்கு 600 - 700 என்று சம்பளம். அவன் நான் ஏன் வாரம் முழுவதும் வேலைக்குப் போகவேண்டும்? இரண்டு நாள் போனால் என்னுடைய ஒரு வாரத்தேவைக்கான பணம் கிடைத்துவிடுகிறது என்கிறான்.

விவசாயிதான் ஊருக்கு இளைத்தவனா? அவன் எப்பொழுதும் கிழிந்த வேட்டியுடன்தான் இருக்கவேண்டுமா? அவன்தானே எல்லோருக்கும் உணவு உற்பத்தி செய்து கொடுக்கிறான்? அவன் உற்பத்தியை நிறுத்தி விட்டால் மக்கள் எதைச் சாப்பிடுவார்கள்?

மற்ற தொழில்களில் உற்பத்தி செய்ய்ப்படும் பொருட்களின் விலையை மட்டும் அவ்வப்பொழுது அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு செல்போனின் விலை 40000 ரூபாய் என்கிறார்கள். பெட்ரோல் விலை வாரத்திற்கு ஒரு முறை ஏறுகிறது. எங்காவது வாகன நெருக்கடி குறைந்துள்ளதா?

இதற்கெல்லாம் செலவு செய்யத் தயங்காத மக்கள் தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்களுக்கு, கட்டுப்படியாகும் விலை கொடுக்க ஏன் தயங்கவேண்டும். ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் என்றால் 50000 ரூபாய் சம்பளம் வாங்குபவர் கொடுப்பதற்கென்ன? மார்க்கெட்டில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் முருங்கைக் காயை விவசாயியிடமிருந்து வியாபாரிகள் என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

முந்தின நாள் இரவு குடித்த பானங்களின் வயிற்றெரிச்சல் தீர தினமும் காலையில் ஒரு இளனி 20 ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறார்களே, அதில் அதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு எவ்வளவு சேருகிறது என்று தெரியுமா? வெறும் ஐந்து ரூபாய மட்டுமே.

தக்காளி சீசனில் அமோகமாக விளைந்துவிட்டால் அதைப் பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் செலவிற்கு கூட வியாபாரிகள் விலை கொடுப்பதில்லை என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

விவசாயியும் ஒரு மனிதன்தானே? இந்திய நாட்டின் குடிமகன்தானே? ஒரு கட்டிடத்தொழிலாளி வாங்கும் கூலியாவது அவனுக்குக் கிடைக்கவேண்டாமா? அவனும் மானமாக வாழ வழி வேண்டாமா? தற்கொலை செய்து கொள்ளத்தான் அவன் பிறந்தானா?

மக்களே யோசியுங்கள்.


இப்படியாகவே தொழில் துறை, கல்வித்துறை ஆகியவற்றிற்கும் அடுத்தடுத்து மகாநாடுகள் நடத்தப்பட்டன. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் பதிவுலக மக்களின் ஆர்வக்குறைவே.

ஆகவே பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்போகிறேன்.

எதிர் பாருங்கள் - தேவலோக சுற்றுலா

திங்கள், 25 மார்ச், 2013

10. மறுமலர்ச்சிகள் - விவசாயம்

அடுத்த வாரம் மீட்டிங் கூட்டினபோது பிரதம மந்திரியின் முகம் வாட்டமடைந்திருந்தது. ஏன் இப்படி டல்லாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். மக்கள் எல்லோரும் என்னைக் குறை கூறுகிறார்கள் என்றார். பெரும்பான்மை மக்களுக்கு நன்மை செய்யும்போது சிறுபான்மையினர் வருத்தப்படுவது இயற்கைதானே, நீங்கள் இதற்கெல்லாம் வருந்தலாமா, எது வந்தாலும் நான் இருக்கிறேன், உங்களை ஒரு பயலும் ஒன்றும் செய்ய முடியாது, சிறிது நாட்கள் கழித்து எல்லாம் சரியாகிவிடும் என்று அவருக்கு ஆறுதல் சொன்னேன்.

நிதி மந்திரியிடம் நாம் இப்போது மூன்று விஷயங்களை ஆலோசித்து தீர்மானங்கள் எடுக்கவேண்டும். அவை விவசாயம், கல்வி, தொழில் ஆகியவை. இந்த மூன்றிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசாக முடியும் என்றேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.


முதலில் விவசாயத்தைப் பார்ப்போம். இதில் முக்கியமான சங்கடம் என்னவென்றால், விவசாயத்திற்கு வேண்டிய நீர்வளம் இல்லை. இரண்டாவது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மூன்றாவது விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. இது தவிர வேறு பிரச்சினைகள் உண்டா என்றேன். நிதி மந்திரி, சில சமயங்களில் அதிகமாக விளையும் பொருட்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போகிறது என்றார்.

இவை எல்லாவற்றிற்கும் நாமே தீர்வு கண்டுபிடிப்பதை விட விவசாய நிபுணர்கள், விவசாயிகள், அந்தந்த மாநில விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய மந்திரி ஆகியவர்கள் இருந்தால் நலமாக இருக்குமே என்றேன். பிரதம மந்திரி அதுதான் சரியாக இருக்கும் என்றார். அப்டியானால் டில்லி போனதும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள். அந்தந்த மாநிலங்களில் இருக்கும் பிரச்சினைகளையும் அவற்றிற்கு என்ன தீர்வு இருக்கிறது என்றும் அவர்கள் மீட்டிங் போட்டு தீர்மானிக்கட்டும். அடுத்த வாரம் இங்கு நமது தூதரகத்தில் அதில் முக்கியமானவர்களை எல்லாம் வரச்சொல்லி முடிவு எடுப்போம் என்றேன்.

அவர்கள் அதற்கு சரி, இது நல்ல யோசனை என்றார்கள். நான் அப்படியே கல்வி, தொழில் இது சம்பந்தமாகவும் மீட்டிங்குகள் போட்டு அதைப்பற்றி கான்பரன்ஸ் போடவும் ரெடியக இருக்கச்சொல்லுங்கள். விவசாய கான்பெரன்ஸ் முடிந்ததும், அடுத்தடுத்து இந்த இரண்டு கான்பெரன்ஸ்சுகளையும் வைத்துக்கொள்ளலாம் என்றேன்.

அவர்கள் சரி என்றார்கள். அவர்களைப் போகச் சொல்லிவிட்டு, நான் ஓய்வு எடுக்கப்போனேன்.

மறுவாரம் விவசாய மகாநாடு தேவலோக தூதரகத்தில் தொடங்கியது. அனைத்து மத்திய மந்திரிகள், மாநில முதலமைச்சர்கள், விவசாய மந்திரிகள், விவசாயத்துறை முக்கிய அதிகாரிகள், விவசாயிகள்,  விவசாயப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், விவசாய விஞ்ஞானிகள், நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், அதிகாரிகள், கால்நடைத்துறை மந்திரிகள், அதிகாரிகள், இப்படியாக ஏறக்குறைய பத்தாயிரம் பேர் வந்து விட்டார்கள்.

இத்தனை பேரை வைத்துக்கொண்டு என்ன உருப்படியான முடிவுகள் எடுக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது. சரி பார்ப்போம் என்று மகாநாட்டைத் துவங்கினோம். பொது வரவேற்புரை வாசித்தார். நான் மகாநாட்டின் நோக்கத்தைக்குறித்து பேசினேன்.

அப்போது நான் சொன்னேன். இந்த மகாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் இந்தியா விவசாய நாடென்று சொல்லப்பட்ட பொதும் விவசாயத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. விவசாயம் செய்து ஒரு விவசாயி தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறான். இப்படியே போனால் இந்தியவில் விவசாயமே அழிந்து போய்விடும்போல் இருக்கிறது.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவுகள் எடுப்பதற்காகவே இந்த மகாநாட்டைக் கூட்டினோம். நீங்கள் எல்லோரும் இதைப் பற்றி உங்கள் மாநிலத்தில் பேசி சில முடிவுகளுடன் வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் அவர்கள் மாநிலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி எடுத்துரைப்பார்கள். ஒவ்வோருவரும் 15 நிமிடங்களில் அவர்கள் சொல்லவேண்டியதை சொல்லி முடித்தால் நல்லது.

பிறகு பிரதம மந்திரியின் தலைமையில் மகாநாடு தொடங்கியது. மாநில முதலமைச்சர்கள் பேசினார்கள். ஒவ்வொருவரும் 1 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரம் வரை பேசினார்கள். 15 நிமிடம் கழித்து பிரதம மந்திரி மணி அடித்துப் பார்த்தார். ஒரொவரும் அந்த நேரத்திற்குள் பேச்சை முடிக்கவில்லை. முன் அனுபவம் காரணமாக அவர் இரண்டாவது தடவை மணி அடிக்கவில்லை.

காலை 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரையில் ஏழு முதல் மந்திரிகள் மட்டுமே பேசி முடித்தார்கள். நான் பிரதம மந்திரியிடம் சொன்னேன். அனைத்து மாநில முதலமைச்சர்கள் பேசி முடிக்கும் வரை மகாநாடு தொடரட்டும் என்றேன். அவரும் சரியென்றார். இப்படியாக மகாநாடு நான்கு நாட்கள் நடந்து அனைத்து முதல் மந்திரிகளும் பேசி முடித்தார்கள். அவர்கள் பேசியது முழுவதும் அரசியல்தானே ஒழிய விவசாயத்தைப் பற்றி ஒன்றும் இல்லை.

இதைப் பார்த்த நான் அன்று இரவு நான்கைந்து விவசாய நிபுணர்களையும் பத்து விவசாயிகளையும் தனியாக அழைத்துப்போய், இந்த முதல் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நீங்கள் தனியாக உட்கார்ந்து என்ன தீர்மானங்கள் போடலாம் என்று விவாதித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அவைகளை மகாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றி விடுவோம் என்றேன். அவர்களும் சரியென்று அவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ரூமுக்குப் போய்விட்டார்கள்.

ஐந்தாம் நாள் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நாள். என்னென்ன தீர்மானங்கள் நிறைவேறின என்று அடுத்த பதிவில் பார்க்கவும்.


சனி, 23 மார்ச், 2013

9. சில புரட்சித் திட்டங்கள்

(இந்தப் பதிவைப் படித்து யாரும் பீதியடையவேண்டாம். எல்லாம் என் கனவில் நடந்தவை)


அடுத்த வாரம் அதே நாள் சரியாகப் பத்து மணிக்கு மூவரும் வந்தனர். நிதி அமைச்சர் நான் செய்த நிதி உதவிக்கு நன்றி தெரிவித்தார். நான் சொன்னேன், "என் தாய் நாட்டிற்கு இது கூடச் செய்யாவிட்டால் நான் என்ன மனிதன்? இதற்கெல்லாம் நன்றி எதற்கு" என்று சொன்னேன். நிதி அமைச்சர், "இருந்தாலும் இவ்வளவு பெரிய உதவி செய்ய ரொம்பப் பெரிய மனது வேண்டும்" என்றார்.

அது இருக்கட்டும், மேற்கொண்டு இந்தியாவை முன்னேற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றேன். நிதி அமைச்சர் சொன்னார், நாம் எவ்வளவு நல்ல திட்டங்களைப் போட்டாலும் அவைகள் மக்களைப் போய் சேருவதில்லை. போகும் வழியில் பல ஓட்டைகள். அவைகளை எப்படியாவது அடைக்கவேண்டும் என்றார்.

நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் ஒரு ஐடியா சொல்லுகிறேன். இந்திய நாட்டை இப்போது முன்னேற விடாமல் தடுப்பது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று லஞ்சம், இரண்டு கருப்புப் பணம். இந்த இரண்டையும் ஒழித்தால் நாடு வேகமாக முன்னேறும் என்றேன். மூவரும் இதை ஒத்துக்கொண்டு, "இந்த இரண்டையும் ஒழிக்க நீங்கள் என்ன திட்டம் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்கள்.

அப்படியானால் நான் சொல்வதைச் செய்யுங்கள். நமது நாட்டில் கருப்புப் பணம் புழங்குவதற்கு முதல் காரணம் வரிகள்தான். அதிலும் குறிப்பாக வருமான வரிதான் கருப்புப் பணத்தை உண்டாக்குகிறது. ஆனால் உலகெங்கிலும் வருமான வரிகள்தான் அரசை நடத்துவதற்கான பணத்தைக் கொடுக்கிறது. நாம் என்ன செய்யவேண்டுமென்றால், வரி ஏய்ப்பைத் தடுக்கவேண்டும்.

அதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். என்னிடம் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் இருக்கிறது. அது என்னுடைய கன்ட்ரோல் ரூமில் இருக்கும். அதில் இந்திய நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருடைய வரவு செலவு கணக்குகளும் தெரியும். எல்லோருக்கும் அடையாள எண்கள் கொடுக்கப்பட்டு விட்டதல்லவா? அதை வைத்து அந்த கம்ப்யூட்டர் அதுவாகவே ஒவ்வொருவருடைய வருமான வரியையும் கணக்குப் போட்டு அவர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும். வருட முடிவில் அவர்களுக்கு ஸ்டேட்மென்ட் போய்விடும்.

அது தவிர லஞ்சமாக வாங்கும் பணத்தை கணக்கில் காட்ட முடிவதில்லை. ஏனெனில் இப்பொழுது லஞ்சம் சட்ட விரோதமாக இருக்கிறது. இதனாலும் கருப்பு பணம் அதிகமாகிறது. நீங்கள் என்ன செய்யுங்கள், லஞ்சத்தை சட்டபூர்வமானது என்று அறிவித்து விடுங்கள்.

"ஐயையோ, அப்புறம் கவர்ன்மென்டை எப்படி நடத்த முடியும்? ஊழலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்" என்று மூன்று பேரும் ஒரே குரலில் அரற்றினார்கள். கவலைப் படாதீர்கள், அதற்கு வழி வைத்திருக்கிறேன். இனிமேல் லஞ்ச வரி என்று புதிதாக ஒரு வரி போட்டுவிடுங்கள். லஞ்சம் வாங்குவதைப் போல் ஐந்து மடங்கு வரி கட்டினால் போதும் என்று சட்டம் போட்டு விடுங்கள், என்றேன்.

நிதி மந்திரி திருதிருவென்று விழித்தார். பிரதம மந்திரிதான் முதலில் சுதாரித்தார்.  இது நல்ல திட்டமாக இருக்கிறது. ஆனால் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரி வசூலை எங்கள் ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றேன். எப்படி என்றார்?

இதற்காக தனியாக ஒரு கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்துவோம். அதில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மாதிரி இன்னொன்று நிறுவப்படும். அதில் இந்தியாவில் யார் எங்கு லஞ்சம் வாங்கினாலும் ஸ்கிரீனில் தெரிந்துவிடும். அந்த நபர் பணம் எங்கு வைத்திருந்தாலும் அந்த லஞ்சப்பணத்தைப் போல் ஐந்து மடங்கு எங்கள் பேங்கிற்கு வந்து விடும். அதை அப்படியே அவ்வப்போது அரசு கஜானாவில் போட்டு விடுகிறோம் என்றேன். அவர்களுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. குதித்து கூத்தாடினார்கள்.

ஏற்கெனவே இந்த முறையை உபயோகித்து ஸ்விஸ் பேங்கில் இந்தியர்கள் வைத்திருந்த கறுப்புப் பணம் முழுவதையும் எடுத்துவிட்டோம். நேற்று உங்களுக்குக் கொடுத்தது முழுவதும் அந்தப் பணம்தான். இன்னும் கூட மிச்சம் இருக்கிறது. எப்போது தேவைப்பட்டாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றேன்.

அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இன்னும் பல திட்டங்கள் இருக்கின்றன. இப்போது நான் சொல்லும் திட்டங்களை கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்போது அயல்நாட்டு உள்நாட்டுக் கடன்களை எல்லாம் தீர்த்து விட்டபடியால் இனி மேல் நாம் யாருக்கும் தலை வணங்க வேண்டியதில்லை. வெளிநாட்டு மூலதனம் இனி நம் நாட்டுக்குள் எவ்வகையிலும் நுழையக்கூடாது. எந்த விதப் பொருட்களும் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது. நம் தொழில்களுக்கு வேண்டிய கச்சாப் பொருட்களை மட்டும்தான் இறக்குமதி பண்ணலாம். இங்கு இருக்கும் அயல்நாட்டுக் கம்பெனிகளை எல்லாம் (குறிப்பாக கோக்கோ கோலா, பெப்சி, KFC, McDonald) மூட்டை முடிச்சுடன் அவரவர்கள் ஊருக்கு திருப்பியனுப்புங்கள்.

பெரிய பெரிய கம்பெனிகள், பணக்காரர்கள் எல்லாம் பேங்குகளில் கோடிக்கணக்காக கடன் வாங்கிக்கொண்டு, பல ஏமாற்று வேலைகள் செய்து அந்தக் கடன்களை கட்டுவது இல்லை என்று கேள்விப்பட்டேன், அது உண்மையா? என்று கேட்டேன். நிதி மந்திரி, அது உண்மைதான், என்றார். அந்த கடன்கள் எவ்வளவு இருக்கும் என்றேன். அந்தக் கடன்கள் எல்லாம் வசூலானால் ஒரு ஐந்து வருட இந்திய பட்ஜெட்டுக்குப் போதும் என்றார். அப்படியா, இன்று இரவு அந்தக் கடன்கள் மொத்தமாக வசூலாகி ரிசர்வ் பேங்கில் சேர்க்கப்படும், என்றேன். அது மாதிரியே அன்று இரவு செய்தேன்.

தவிர இந்தியா முழுவதிலும் இலவசம் என்பது எங்கும் எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது. வேலையில்லாமல் ஒருவரும் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கக் கூடாது. தகுதிக்கு மீறி சொத்து வைத்திருப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு விடுங்கள். அவர்கள் பினாமி பெயரில் வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுங்கள். இதற்காக நான் இங்கு ஒரு கன்ட்ரோல் ரூம் வைத்திருக்கிறேன். அதில் எல்லா விவரங்களும் பதிவு ஆகியிருக்கின்றன. நீங்கள் ஏதாவது தில்லு முல்லு செய்தால் அப்புறம் விளைவுகள் மோசமாக இருக்கும். ஜாக்கிரதை.

மாநிலத்திற்கு மூன்று டி.வி.ஸ்டேஷன்கள் தவிர மற்ற எல்லா டி.வி.ஸடேஷன்களையும் மூடிவிடுங்கள். இவைகளில் விளம்பரத்திற்காக பல கம்பெனிகள் செலவு செய்து விட்டு. அந்தச் செலவை மக்கள் மீது திணிக்கிறார்கள். இப்படி மூடப்பட்ட டி.வி.க்காரர்களின் சொத்துக்களை-  யெல்லாம் அரசு எடுத்துக் கொள்ளட்டும். நடந்து கொண்டிருக்கிற டி.வி.க்கம்பெனிகளின் அளவுக்கு மீறின சொத்துக்களையும் பறிமுதல் செய்யுங்கள்.

தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தங்களை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள்,  அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. மோட்டார் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தனியார்மயமாகிறது. பெட்ரோல, டீசல் விலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு மாறக்கூடாது. ஆட்டோக்கள், டாக்சிகள் மீட்டர் கட்டணத்திற்கு மேல் வாங்கினால் அப்போதே யமகிங்கரர்களால் தண்டிக்கப்படுவார்கள்.

இந்தியா முழுவதும், குறிப்பாக மும்பய்யில் உள்ள அனைத்து தாதாக்களும் கட்டைப் பஞ்சாயத்துதாரர்களும், புரோக்கர்களும் இப்போதிலிருந்து யமகிங்கரர்களால் நீக்கப்படுவார்கள். பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் இந்த விநாடியிலிருந்து மூடப்படுகிறது. அனைத்துக் கம்பெனிகளின் அனைத்து ஷேர்களும் கேன்சல் செய்யப்படுகின்றன.

இந்தியா முழுவதும் மதுவிலக்கு உடனடியாக அமுலுக்கு வருகிறது. அதற்கு உபயோகமான எத்தனாலை எவ்வளவு சதம் பெட்ரோலில் கலக்க முடியுமோ அத்தனை சதம் கலந்து விற்பனையாகட்டும். குடிமகன்கள், தனியாக கவுன்சிலிங்க் மூலம் நல்ல குடிமகன்களாக மாற்றப்படுவார்கள்.

ரயில்கள் நேரத்திற்கு ஓடவேண்டும். எல்லா இலவச பாஸ்களும் இந்த நிமிடம் முதல் ரத்து செய்யப்படுகின்றன. எந்த ரயிலிலும் டிக்கட் வாங்காமல் ஒருவரும் பயணம் செய்யக்கூடாது. அப்படி பயணம் செய்பவர்களையும் அவர்களை அனுமதிக்கும் டிடிஆர் களையும் உடனடியாக தண்டிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். டிடிஆர் களுடன் சண்டைக்குப் போகும் பயணிகள் அப்போதைக்கப்போது என்னுடைய யமகிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

விமானப் போக்குவரத்தில் யாருக்கும் இலவசப் பாஸ்கள் கூடாது. யாருக்கும் தனி விமானங்கள் கிடையாது. விமான ஊழியர்களின் சம்பளம் தவிர அனைத்து இதர சலுகைகளும் ரத்து செய்யப்படுகின்றன. அரசு சம்பந்தப்பட்ட யாரும் வெளிநாடு செல்லவேண்டாம். உள்நாட்டிலும் அவசியமில்லாமல் பயணம் செய்யக்கூடாது.

இங்கிருந்து போனவுடன் வெடிகுண்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு அறிக்கை விடுங்கள். இந்தியாவில் எந்த இடத்துல் யார் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டாலும் அந்த குண்டுகள் அங்கேயே வெடித்து அந்த குண்டுகள் தயார் செய்பவர்கள் மட்டும் இறந்து போவார்கள். இந்த டிபார்ட்மென்டை நான் நேரடியாக கன்ட்ரோல் செய்து கொள்கிறேன்.

தவிர கொலை, கொள்ளை, வழிப்பறி, ஏமாற்றுகள், பாலியல் பலாத்காரங்கள் யாவும் இந்த விநாடியிலிருந்து தடை செய்யப்படுகின்றன. அப்படி இந்தக் குற்றங்களில் யார் ஈடுபட நினைத்தாலும் அந்த விநாடியே அவர்கள் யம- கிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

அரசு வேலைகள் அனைத்தும் ஜரூராக நடக்கவேண்டும் எதிலும் சுணக்கம் இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும் சுற்ற்றிக்கை அனுப்பிவிடுங்கள். அப்புறம் இன்னொரு விஷயம். அரசு அதிகாரிகள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்திருக்கும் அனைத்து சொத்துக்களும் இன்றிரவு அரசு கஜானாவிற்கு வந்து விடும்.

டில்லி, கொல்கத்தா, மும்பாய், சென்னை ஆகிய நகரங்களில் இன்று இரவு, 50 கி.மீ. தூரத்தில் சேடலைட் நகரங்கள் உருவாகிவிடும். மயனைக் கூப்பிட்டு இதைச் செய்யுமாறு சொன்னேன். அவன் தலையை ஆட்டிவிட்டுச் சென்று விட்டான். அனைத்து அரசு அலுவலகங்களும் அங்கு சென்று விடவேண்டும். நகர மையத்தில் எந்த விதமான டிராபிக் இடையூறுகளும் இருக்கக் கூடாது.

எல்லா மெட்ரோ நகரங்களிலும் மெட்ரோ ரயில் உடனடியாக அமைக்கப்பட்டு உபயோகத்திற்கு வருகிறது. இன்றிரவு மயன் அந்த வேலையை முடித்துவிடுவான்.

இந்தியாவில் உள்ள கார்பரேட் சாமியார்களின் அனைத்துச் சொத்துகளும் இன்றிரவு பறிமுதல் செய்யப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும். அவர்களின் ஆசிரமங்கள் கல்லூரிகளாக செயல்படும். அந்த சாமியார்கள் எல்லோருக்கும் இமய மலையில் ஒரு ரிசார்ட் உருவாக்கப்பட்டு அங்கு எல்லா வசதிகளுடனும் வசிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் பணிவிடை செய்யத் தேவையான தேவலோக அப்ஸரஸ் மங்கையர்கள் ஏற்பாடு செய்யப்படுவார்கள்.

அதேபோல் அனைத்து கோவில் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். கோவில்களை நடத்த தேவையான பணம் தனி பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும்.

இந்த மாறுதல்களுக்குத் தேவையான அனைத்து நடைமுறை உத்திரவுகளையும் இன்றிரவே பிறப்பித்து இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று பிரதம மந்திரியிடம் சொன்னேன். அவர் சரி என்றார்.

அப்புறம் ஒரு விஷயம் என்றேன், என்ன? என்று கேட்டார்கள்.

என்னைக் கேட்காமல் எந்த புது திட்டத்தையோ பாலிசி மேட்டரையோ அமல்படுத்தக்கூடாது. என்னுடைய திட்டங்களையெல்லாம் மறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் எந்த மாற்றமும் கூடாது என்றேன். அடுத்த வாரம் சந்திப்போம். சரியென்று ஒப்புக்கொண்டு டில்லி கிளம்பினார்கள்.

வியாழன், 21 மார்ச், 2013

8. இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு.

(இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே)

மறுநாள் சரியாக 10 மணிக்கு பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் வந்தார்கள். அவர்களை வரவேற்று கான்பரன்ஸ் ரூமுக்குப் போனோம்.


நிதி அமைச்சர் எங்களைக் கூப்பிட்ட விஷயம் என்ன? என்றார்.

நான் இருவரையும் பார்த்துச் சொன்னேன். தற்போது நமது நாட்டு நடப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. வெளிநாட்டுக்காரர்கள் நம்மைக் கேவலமாக மதிப்பீடு செய்கிறார்கள். இதையெல்லாம் மாற்றி நம் நாட்டை உலகின் ஒன்றாம் நெம்பர் நாடு என்று மாற்றவேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்றேன்.

எங்களுக்கும் அது விருப்பமே. ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவது என்றுதான் தெரியாமல் விழிக்கிறோம் என்றார்கள். நான் சொன்னேன், என்னிடம் இப்போது ஏராளமான செல்வம் மற்றும் சகல வல்லமைகளும் இருக்கின்றன. நீங்கள் சரி என்று சொன்னால் என் திட்டங்களை விவரிக்கிறேன், என்றேன். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு,  பிறகு சொன்னார்கள். எங்களுக்கு விருப்பமே, ஆனால் பாருங்கள், இதில் எங்கள் கட்சித் தலைவரும் சம்பந்தப் பட்டிருக்கிறார். அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் எந்த முடிவும் எடுக்கமுடியாதே, என்றார்கள்.

அப்படியானால் அவரையும் கூப்பிட்டுக்கொள்வோம் என்றேன். அவர்கள் செல்போனில் பேசினார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அவரும் வந்தார். அவரை மிக மரியாதையாக வரவேற்று அமரச்செய்தாம். அவருக்கும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் எனக்கும் சில நீண்ட காலத் திட்டங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் நிறைவேற்றுவதானால் எனக்கு உங்கள் திட்டத்தில் ஆட்சேபணை இல்லை என்றார்கள்.

அதற்கென்ன, அப்படியே செய்து விட்டால் போகிறது என்று சொல்லிவிட்டு என் முதல் கேள்வியைக் கேட்டேன். இப்போது நமது இந்திய அரசுக்கு கடன் எவ்வளவு இருக்கிறது என்றேன். நிதி அமைச்சர் உள்நாட்டிலா, வெளி நாட்டிலா என்றார். இரண்டையும் சொல்லுங்களேன் என்றேன்.

உள் நாட்டுக்கடன் பத்தாயிரத்தெட்டு லட்சம் கோடி ரூபாய்கள், வெளிநாட்டுக் கடன் இருபத்தி இரண்டாயிரத்து மூன்று லட்சம் கோடி டாலர்கள் என்றார். இது போக வட்டி தனி என்றும் சொன்னார். இந்தத் தொகையைக் கேட்டு நான் கொஞ்சம் அசந்து விட்டேன்.

சரி, நிதி அமைச்சரே, இந்தத் தொகையை மொத்தமாக நான் தேவலோக பேங்கிடமிருந்து ஒரே தவணையில் தானமாகக் கொடுக்கச் சொல்கிறேன். இந்தக் கடன்களையெல்லாம் பட்டுவாடா செய்து முடிக்க எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டேன். ஒரு வாரத்தில் முடித்து விடுவோம் என்றார்.

குபேரனைக்கூப்பிட்டு, இவர் கேட்கும் பணத்தைக் கொண்டுபோய் டில்லியில் இவருடைய ஆபீசில் கொடுத்து விட்டு வாருங்கள் என்றேன் அவன் சரியென்று போய்விட்டான். இத பாருங்க நிதி அமைச்சரே, இதில் எந்த சொதப்பலும் இருக்கக்கூடாது. அடுத்த வாரம் இதே நாள் நாம் எல்லோரும் இங்கே கூடுவோம். அப்போது எந்தக் கடனும் நிலுவை இருக்கக் கூடாது, பார்த்து செய்யுங்கள், என்றேன். அவர்கள் மூவரும் சரியென்று தலை ஆட்டிவிட்டுப் புறப்பட்டார்கள்.

புறப்படும்போது அவர்கள் மூவருக்கும் ஒவ்வொரு சூட்கேஸ் பரிசளித்தேன். இதில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நீங்கள் இந்த மீட்டிங்க்கில் கலந்து கொண்டதற்கான தினசரி அலவன்ஸ் என்றேன். சரி என்று வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.

ஆடற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடற மாட்டை பாடி கறக்கவேண்டும், அல்லவா?

செவ்வாய், 19 மார்ச், 2013

7. தூதரகம் திறப்பு.


மறுநாள் எழுந்தவுடன் மயனைக் கூப்பிட்டு, நீங்கள் செக்குவுடன் உடனே பூலோகத்திற்குப் போய் நமக்கு கொடுத்துள்ள நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் "தேவேந்திர நகர்" என்ற நகரத்தை சகல வசதிகளுடன் நிர்மாணியுங்கள். ஒரு பத்தாயிரம் பேர் தங்குவதற்கான வசதிகளும், ஹெலிகாப்டர் தளம் மற்றும் தூதரக ஆபீஸ்களும், நல்ல பாதுகாப்பான மதில் சுவர்களும், மற்றும் அந்த ஊருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.

அப்படியே நமது தேவ்லோக் பேங்கிற்கும் அந்த தூதரகத்துக்குள்ளேயே ஒரு கிளை கட்டுங்கள். அதில் எல்லாவித சௌகரியங்களும் இருக்கட்டும்.

நாளை காலை பத்து மணிக்கு இந்த தூதரக திறப்பு விழா நடக்கட்டும். இந்திரனும் இந்திய ஜனாதிபதியும் இந்த தூதரகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார்கள். இங்கிருந்து நாம் எல்லோரும் செல்வோம். இந்தியாவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேரை அழைக்கலாம்.

இந்தியாவில் இந்த மாதிரி விழாக்களை நடத்த "Event Manager" கள் இருப்பார்கள். அவர்களில் ஒரு நல்ல நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள். விழா மிகப் பிரமாதமாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிடுங்கள். விழா முடிந்தவுடன் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் ஆடம்பரமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லி விடுங்கள். நீங்கள் போகலாம் என்று சொன்னேன். அவர்களும் புறப்பட்டுப் போனார்கள்.

இந்திரன் இந்த விழாவிற்காக பூலோகத்திற்குப் போய்வர புருனே சுல்தான் வைத்திருக்குற மாதிரி ஒரு பிளேன் உடனடியாக வாங்குங்கள், அதன் விடியோ இதோ இருக்கிறது. அதனுள் 100 பேர் அமரும்படியான ஒரு நடன அரங்கம் அவசியம் இருக்கட்டும். இந்திரனால் நாட்டியம் பார்க்காமல் கொஞ்சநேரம் இருந்தால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அதனால் ஜாக்கிரதை.



தூதரகத் திறப்பு விழா அழைப்பிதழ் இந்தியாவின் அனைத்து பாரலிமென்ட் உறுப்பினர்கள். வெளிநாட்டுத் தூதுவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள்,
அனைத்து தமிழ் பதிவர்கள், ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும், மத்திய அரசு அனைத்து செயலர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், அனைத்து மத்திய மாநில மந்திரிகளுக்கும் உடனடியாக கொடுத்து விடுங்கள்.

அப்படியே அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, மறுநாள் காலை திறப்பு விழாவிற்கு அனைத்துப் பிரமுகர்களும் வந்து விட்டார்கள். தூதரக வாசலில் அனைவருக்கும் சோமபானம் கொடுத்து வரவேற்கப்பட்டார்கள். வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை இந்திய ஜனாதிபதி அவர்கள் விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோலால் வெட்டி தூதரகத்தைத் திறந்து வைத்தார். ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் அந்த கத்தரிக்கோலை பவ்யமாக வாங்கி தன் பைக்குள் வைத்துக்கொண்டார். இதை பிற்பாடு ஜனாதிபதி வாங்கிக் கொள்வார். இது பல காலமாக அனுஷ்டிக்கப்படும் சம்பிரதாயம்.

பிறகு எல்லோரும் விழாப் பந்தலுக்குள் நுழைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் தனியாக அழைத்துக்கொண்டு போய் அலங்கார மேடையில் அமரச் செய்தார்கள். கடவுள் வாழ்த்துக்குப் பின்னர், நான் வரவேற்புரை வழங்கினேன். அப்போது நான் சொன்னதாவது.

இந்த நாள் இதுவரை பூலோகத்திலேயே யாரும் பார்த்திராத பொன்னாள். இந்த தேவலோகத் தூதரகத்தை புண்ணிய பூமியான இந்தியாவில்தான் முதலில் அமைக்கவேண்டும் என்று மும்மூர்த்திகளும் விரும்பினார்கள். அதனால்தான் இங்கு அமைத்தோம்.

இன்று முதல் இந்தப் புண்ணிய பூமியில் பல அதிசயங்கள் நடைபெறப் போகின்றன. உலகிலேயே பெரிய வல்லரசாக இந்தியா பரிணமிக்கப் போகிறது. அதன் பலனை இந்திய மக்கள் அனைவரும் அனுபவிப்பார்கள்.

தேனும் பாலும் இனி இந்திய ஆறுகளில் ஓடும். வறுமை என்பதே எங்கும் இருக்காது. ஒரு பெண் சகல ஆபரணாதிகளுடன் டில்லி தெருவில் இரவு பனிரெண்டு மணிக்கு தனியாக, பயமில்லாமல் நடமாடலாம். இந்தியா சொர்க்கபூமியாக மாறப்போகிறது. மகாத்மா காந்தி சொன்ன ராம  ராஜ்யம் வரப்போகிறது. எல்லோரும் அதற்குத் தயாராகுங்கள்.

இந்த விழாவிற்கு வந்துள்ள அனவரையும் இரு கரம் கூப்பி வருக, வருக என்று வரவேற்கிறேன்.

கைதட்டல் வானைப் பிளந்தது. பிறகு ஜனாதிபதி இரண்டு மணிநேரம் பேசினார். வேத காலத்தில் இந்தியாவிற்கும் தேவலோகத்திற்கும் இருந்த தொடர்பிலிருந்து ஆரம்பித்து, இருபத்தியோராம் ஆண்டுக்கு வருவதற்குள் எல்லோருக்கும் பசி வந்து விட்டது. நன்றி நவிலலை சுருக்கமாக கூறிவிட்டு கூட்டத்தை அவசரமாக முடித்து விட்டு எல்லோரும் சாப்பிடப் போனோம்.

சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்த பின் தேவலோக நடன மங்கையர் நால்வரின் நடனம் தொடங்கியது. எல்லோரும் வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் அந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


நடனம் முடிந்து இரவு உணவு அருந்தியபின் எல்லோரும் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுப் போனார்கள். இதற்கு முன்பாகவே நான் இந்திய பிரதம மந்திரியையும் நிதி அமைச்சரையும் பார்த்து மறுநாள் காலை பத்து மணிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் வைத்திருக்கிறேன். நீங்கள் இருவரும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

தேவேந்திரன் ஊருக்குப் போய்விட்டான். நாங்கள் மூவரும் (நான், பொது, செக்கு) உறங்கச்சென்றோம்.

திங்கள், 18 மார்ச், 2013

ஒரு எச்சரிக்கை

கீழ் கண்ட செய்தி எனக்கு ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். மும்பய் போகிறவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.

Dear All,

Airport Operation Control Centre of Mumbai International Airport Pvt Ltd has issued a security alert in the below mentioned mail. Please inform your network of friends.

  SECURITY ALERT :( Mumbai)

Information reaching Police formation indicates that: There is a syndicate of criminals selling beautiful key holders at Petrol Stations.  They sometimes parade themselves as sales promoters giving out free key holders. Please do not buy or accept these key holders no matter how beautiful they look.
The key holders have inbuilt tracking device chip which allows them to track you to your home or wherever your car is parked . The key holders are very beautiful to resist. Accepting same may endanger your life.

All are therefore requested to pass this message  to colleagues, family members and loved ones.  Be on guard.

Alert everyone in your family , friends , relatives.

Thanks & Regards
AIRPORT OPERATIONS CONTROL CENTRE

சனி, 16 மார்ச், 2013

திசை திருப்பப்படும் மாணவர்கள்

இந்தப் பதிவைப் படிப்பவர்கள், பின்னூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களையும் படிக்கவும். அவை பதிவை விட மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றன.


1965 ம் வருடம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. ஏறக்குறைய தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரிகளிலிருந்தும் திரளான மாணவர்கள் பங்கேற்ற போராட்டம் அது. பின்னணியாக இருந்து இந்தப் போராட்டத்தை வழி நடத்தியவர்கள் அரசியல்வாதிகள்.

அன்றைய முதல் அமைச்சர் நிலைமையைத் தவறாக கையாண்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்களில் ஓரிரண்டு பேரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் மாணவர்களல்ல. மாணவர்களின் பெயரில் சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்தார்கள்.

எது எப்படியோ, இந்தப் போராட்டத்தினாலும் அடுத்து ஓரிரண்டு ஆண்டுகளில் தொடர்ந்த இன்னொரு போராட்டத்தினாலும், அடுத்து வந்த தேர்தலில், அந்த முதலமைச்சரின் கட்சி படுதோல்வி அடைந்தது. அதுவரை தேர்தலையே சந்தித்திராத கட்சி ஆட்சிக்கு வந்தது. இது வரலாறு.

இந்த வரலாற்றின் மூலம் அரசியல் கட்சிகள் கற்றுக்கொண்டது என்னவென்றால் மாணவர்களை வைத்து நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே. மாணவர்களுக்கு இது புரியாது. அவர்கள் தூண்டுதலுக்கு அடிமையாவார்கள். மாணவர்களுக்குள் சரியான ஒருவனைப் பிடித்து அவனுக்கு பல ஆசைகளைக் காட்டி, அவன் மூலமாக போராட்டத்தை நடத்துவது என்பது அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை.

இலங்கைத் தமிழர் பிரச்சினை 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இதை எப்படி தீர்ப்பது என்று ஒருவருக்கும் தெளிவான கருத்து இல்லை. ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில் அமெரிக்கா ஏன் தீர்மானம் கொண்டு வருகிறது என்பதை மாணவர்களும் மக்களும் புரிந்து கொள்ளவேண்டும். அதை இந்தியா ஆதரிப்பதினால் ஈழத்தமிழர் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றும் யோசிக்கவேண்டும்.

அதை விட்டு விட்டு வேறு ஏதோ அரசியல் காரணங்களுக்காக இந்த மாணவர் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறார்கள். மாணவ சமுதாயத்தை இந்த மாயையிலிருந்து யார் காப்பாற்றுவார்களோ, தெரியவில்லை.

ஒரு முன்னாள் ஆசிரியன்.
__________________________________________________________________________

17-3-2013 பின் சேர்க்கை:


மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.


____________________________________________________________________________________________________


இதையும் படியுங்கள் அன்பர்களே:

http://vivasaayi.blogspot.in/2013/03/blog-post_18.html

திருடன், திருடன்

இன்று காலையிலிருந்து பல தளங்களைத் திறக்கும்போது இந்தப் படம் வந்து மிரட்டுகிறது.


நான் உபயோகிப்பது விண்டோஸ் 8 . இந்த செய்தி ஏன் வருகிறது என்று யாராவது சொல்லமுடியுமா?

வெள்ளி, 15 மார்ச், 2013

என்னைத் தோலுரித்த கதை


நான் போன நூற்றாண்டில் பிறந்தவன். ஆனாலும் அந்த நூற்றாண்டின் மவுசே தனி. சிறு வயதில் நான் இரண்டாம் உலக மகா யுத்தத்தை நேரில் பார்த்திருக்கிறேன்.

நாடு சுதந்திரம் வாங்கியதை தூக்கத்திலேயே பார்த்தவன் நான். ராத்திரி 12 மணிக்கு புத்தியுள்ளவன் எவனாவது விழித்திருப்பானா?

மகாத்மா காந்தியை கோட்சே சுட்டதை நேரில் பார்த்தவர்களை நேரில் பார்த்திருக்கிறேன்.

அப்படியே பல சம்பவங்கள். அதை விடுங்கள். இந்த சமயங்களில் எல்லாம் என்னுடன் ஒத்துழைத்த என் தோல் இருபத்தியோராம் ஆண்டு பிறந்து பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு என்னுடன் வம்பு பண்ணுகிறது.

இரண்டு வருடம் முன்பு ஒரு வேலையாக (?) காரைக்கால் போயிருந்தேன். அனுபவஸ்தர்கள் என்ன வேலையென்று கேட்க மாட்டார்கள். அனுபவம் இல்லாதவர்களுக்கு அந்த வேலை என்னவென்று சொன்னால் புரியாது. ஆகவே அதை விட்டு விடுவோம்.

நான் அங்குள்ள விவசாயக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். சுற்றிலும் செடி கொடிகளுடன் கூடிய இயற்கைச் சூழ்நிலை. அங்கிருந்த கல்லூரியின் தலைவர் என்னுடைய பழைய மாணவர். அங்கு இருப்பவர்கள் எல்லோருக்கும் என்னை ஸ்பெஷலாக கவனித்துக் கொள்ளச் சொல்லி உத்திரவு போட்டுவிட்டார். எல்லோரும் நன்கு கவனித்துக்கொண்டார்கள். அங்கு குடியிருக்கும் ஒரு லட்சத்தி இருபதனாயிரத்து ஒரு கொசுக்கள் உட்பட.

இந்தக் கொசுக்கள் என்னைக் கவனித்துக் கொண்டதை நான் சரியாகக் கவனிக்கவில்லை. ஊருக்கு வந்து மறு நாள் குளிக்கும்போது உடல் முழுவதும் ஆங்காங்கே சிகப்பு சிகப்பாக ஆகியிருந்தது. என்னமோ ஏதோ என்று பயந்துபோய் டாக்டரிடம் போனேன். அவர் உடம்பைப் பார்த்துவிட்டு, எங்காவது வெளியூர் போயிருந்தீர்களா என்று கேட்டார். நான், ஆமாம், காரைக்கால் போயிருந்தேன் என்றேன்.

அந்த ஊர் கொசுக்கள் பிரபலமானவை. நீங்கள் பிரபலஸ்தர் ஆனதால் உங்களை ஸ்பெஷலாக கவனித்திருக்கின்றன. இந்த அலெர்ஜி ஆயின்ட்மென்டைப் போடுங்கள் சரியாகி விடும் என்றார். அப்படியே போட்டதில் ஒரு வாரத்தில் சரியாகிவிட்டது.

கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் அதே மாதிரி தடிப்புகள் வந்தன. இந்த முறை நான் வெளியூர் எங்கும் போகவில்லை. காரைக்கால் கொசுக்களுக்கு நாங்கள் இளைத்தவர்களா என்று கோயமுத்தூர் கொசுக்களுக்கு ரோஷம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். மறுபடியும் அதே மருந்தைத் தடவ தடிப்புகள் மறைந்தன.

இப்படியே நானும் இந்தக் கொசுக்களும் இரண்டு வருடம் கண்ணாமூச்சி விளையாடினோம். ஒரு மாதத்திற்கு முன் இந்த தடிப்புகளைப் பார்த்த என் மனைவி, என்னங்க, இது ஏதோ கொஞ்சம் சீரயஸான விஷயம் மாதிரி இருக்கிறது. ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் காட்டுங்களேன் என்றாள் நான் வழக்கம்போல் இது என்ன கொசு சமாச்சாரம், இதுக்கெல்லாம் ஸ்பெஷலிஸ்ட் எதுக்கு என்று இன்டர்நெட்டில் கொசுக்கடிக்கு என்ன வைத்தியம் என்று பார்த்தேன்.

அதில் சொல்லியிருந்த மருந்தை வாங்கி ஒரு மாதம் உபயோகித்தேன். அது நல்ல பலனைக் கொடுத்தது. எப்படியென்றால் தடிப்பு ஆங்காங்கே இருந்தது மாறி, நிறைய இடங்களில் வந்து விட்டது. அந்த இடங்களில் அரிப்பும் ஆரம்பித்துவிட்டது. இனி மேல் வேறு வழியில்லை என்ற நிலை வந்து விட்டது.

என் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போனோம். அந்த டாக்டர் என் பெண்ணுக்குத் தெரிந்த டாக்டர். என் உடம்பில் தடிப்பு உள்ள இடங்களை சுரண்டிப் பார்த்து விட்டு, இது கொசுக்கடி இல்லை என்றார். அப்பாடி என்று நான் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள், இது ஒரு தோல் வியாதி, இதற்குப் பெயர் "சோரியாசிஸ்" என்று சொன்னார்.

இந்தப் பெயரை நான் முன்பு கேட்டிருக்கிறேன். எய்ட்ஸ் மாதிரி ஒரு வியாதி என்று என் கணிப்பு. ஐயோ, என் நிலை இப்படி ஆகவேண்டுமா என்று என் கற்பனைக் குதிரையில் ஏறி யமலோகம் வரை போய்விட்டேன்.

அப்போது அந்த டாக்டர், இது ஒரு சாதாரண தோல் வியாதிதான், ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்றார்கள். அப்போதுதான் என் யமலோகம் போன உயிர் திரும்பி வந்தது.  தன்னுடைய பிரிஸ்கிரிப்ஷன் பேடை எடுத்து, (அது புல்ஸ்கேப் சைசில் இருந்தது) அது நிறைய மருந்துகள் எழுதிக்கொடுத்தார்கள். தினமும் அந்த தடிப்பு இருக்கும் இடங்களில் தோலை உரித்துவிட்டு, அதாவது நன்றாக கிளீன் செய்துவிட்டு அந்த இடங்களில், எழுதியுள்ள ஆயின்ட்மென்ட்டுகளை தடவி வருமாறு சொன்னார்கள்.

நான் டாக்டரிடம் போகும்போதே, என் சொத்துக்ளை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கிக்கொண்டு போனது வசதியாகப் போனது. அந்தப் பணத்தில் மருந்துகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்போது தினமும் என் தோலை உரித்துக் கொண்டிருக்கிறேன். உரித்துவிட்டு உப்பு தடவுவதற்குப் பதிலாக ஆயின்ட்மென்ட்டுகளைத் தடவிக்கொண்டு இருக்கிறேன்.