வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நெதர்லாந்தில் என் அனுபவம்.


நான் ஒரு முறை ஸ்வீடன் சென்றிருந்தேன். நெதர்லாந்தில் "வேகனிங்கன்" என்கிற ஊரில் சர்வதேச மண் ஆராய்ச்சி நிலையம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஸ்வீடனில் உள்ள என் ஒருங்கிணைப்பாளரிடம் சொன்னதற்கு அவர் "அதற்கென்ன, ஏற்பாடு செய்துவிடலாம்" என்றார்.

இரண்டு நாளில் பதில் வந்து விட்டது. மொத்தம் நான்கு நாட்கள் நெதர்லாந்தில் இருப்பதாக புரொக்ராம். இரண்டு நாள் வேகனிங்கனிலும் இரண்டு நாள் ஆம்ஸ்டர்டாமிலும் புரொக்ராம். எப்படி போகவேண்டும், எங்கு தங்கவேண்டும் என்கிற விவரங்களெல்லாம் துல்லியமாக குறிப்பிட்டு ஒரு ஃபேக்ஸ் வந்தது.

நினைவுக்கு வந்த வரை அதை ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்.

After alighting from flight at Schipol Airport, walk to the aerodrome Railway Station. Take ticket to Amersfort. Change train at Central. Get down at Amersfort, take Bus No.21 and come to Wageningen. From Bus Station, you can see International Student Centre where a room is reserved for you. Come to Soil Centre next day at 9 AM.

மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அந்த செய்தி இருந்தது. நான்கே வரிகள்தான். அதில் சொன்ன மாதிரியே ஏர்போர்ட்டில் இறங்கி ரயில் ஸடேஷன் போனேன். லக்கேஜை டிராலியில் வைத்துக்கொண்டு நடந்தே போய்விடலாம். அப்படி ரயில் ஸ்டேஷன் ஏர்போர்டை ஒட்டியே இருக்கிறது.

அந்த செய்தியில் சொன்ன மாதிரியே நான் போக வேண்டிய இடத்திற்குச் சென்று என் காரியத்தைக் கவனித்தேன்.

இதை எதற்காக இப்போது நினைவு கூர்ந்தேன் என்றால் வழி சொல்வது எப்படி சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இரண்டாவது அங்குள்ள வழிகாட்டும் போர்டுகளும் தெளிவாக இருக்கின்றன. ஏரோப்ளேனில் இருந்து இறங்கியதிலிருந்து நான் தங்குமிடம் செல்லும் வரை யாரையும் வழி கேட்க வேண்டுய தேவையே ஏற்படவில்லை.



ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

சென்னை பதிவர் சந்திப்பு - ஒரு வேண்டுகோள்.

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நான் 1-9-2013 காலை ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்து சேர்கிறேன். என்னைப் போல் அன்று காலையில் பல பதிவர்கள் வரும் வாய்ப்பு இருக்கலாம்.

நான் ஒரு விஐபி யாக இருந்திருந்தால் என்னைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு தங்குமிடத்தில் தங்க வைத்து காலைக்கடன்களை முடித்த பின் டிபன் சாப்பிடவைத்து, சந்திப்பு நடக்குமிடத்திற்கு கூட்டிப்போய் விடுவதற்கு ஆட்கள் வருவார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது.

இன்று நான் அதைப்பற்றி கனவு கூடக் காண முடியாது. தேவையுமில்லை. ஆனாலும் பணத்தைக் கணக்குப் பார்க்காமல் சில ஆயிரங்கள் செலவு செய்தால் அந்த சௌகரியம் இன்றும் கிடைக்கும். அப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய சூழ்நிலையில் நான் வளராததினால் இன்றும் அப்படி செலவு செய்ய மனம் வருவதில்லை. தவிர அப்படி செலவு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் இல்லை.

ஆகையினால் எனக்கு வேண்டியது இரண்டே இரண்டு செய்திகள்தான். இந்தச் செய்திகள் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

1. சென்னை ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் முன்பு, அதாவது இருபது முப்பது வருடங்களுக்கு முன், குளிப்பதற்கு வெந்நீருடன் பாத்ரூம் கிடைக்கும் என்று வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள ஓட்டல்களில் போர்டுகள் தொங்கும். அன்று பத்து ரூபாய் வாங்குவார்கள். இன்று ஐம்பது அல்லது நூறு ரூபாய் கேட்பார்கள். அப்படிப்பட்ட வசதி இன்றும் இருக்கிறதா?

2. சென்னை சென்ட்ரலிலிருந்து வடபழனி வருவதற்கு டவுன் பஸ் நெம்பர் என்ன? (17ம் நெ. பஸ் என்று பழைய ஞாபகம்.)

சென்னைப் பதிவர்கள் யாராவது இந்த இரண்டு செய்திகளையும் கொடுத்தால் உதவியாயிருக்கும்.

நாங்கள் இங்கே ரூம் போட்டிருக்கிறோம், அங்கு வந்து விடவும் என்கிற மாதிரி விவரங்கள் வேண்டாம். நான் யாருக்கும் (என்னை உட்பட) சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இந்த விவரங்கள் இல்லாவிட்டாலும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் இருக்கிறது. காலை 9 மணிக்கு டாண் என்று சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுவேன்.

இந்த விவரங்கள் என் தைரியத்தை இன்னும் கொஞ்சம் கூட்டும்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

புலம்பல் எங்களது பிறப்புரிமை.


வீட்டில் வயதானவர்கள் இருந்தால் நீங்கள் இதை அனுபவித்திருப்பீர்கள். "அந்தக் காலத்தில ரூபாய்க்கு மூன்று படி அரிசி வித்தப்போ" என்று ஆரம்பித்தால் நான்-ஸ்டாப்பாக மூன்று மணி நேரம் அந்த பிரசங்கம் ஓடும்.

வயதானவர்கள் மட்டும்தான் புலம்புகிறார்கள். இளம் வயதில் புலம்புவர்கள் மிகவும் அரிது. ஏன் இப்படி வயதானவர்கள் மட்டும் புலம்புகிறார்கள் என்று (எனக்கும் வயதாகிவிட்டதால்) ஒரு ஆராய்ச்சி செய்தேன். அதில் கண்டு பிடித்த உண்மைகளை உங்களுக்குச் சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும்போல் இருக்கிறது. அதனால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமெல்லாம் என்ற தத்துவப்படி உங்களையும் வாதிக்கிறேன்.

இளம் வயதுக்காரர்கள் ஏதாவது ஒரு வேலையில் இருப்பார்கள். தவிர குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கும். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு வேறு எதிலும் சிந்தனை இருக்காது.

வயதாகி ரிடையர் ஆகி வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மனது வேலை செய்து கொண்டேயிருக்கும். அப்போது பேசுவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். மனதின் எண்ணங்களை செயல்படுத்தும் தென்பும் போயிருக்கும். வாய் மட்டும் வேலை செய்யும். அப்போது நிகழ்வதுதான் இந்தப் புலம்பல்.

மனதின் எண்ண ஓட்டங்களை வாய் வழியாக வெளியில் வருகின்றன. மற்றவர்கள் இதைக்கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, இந்தப் புலம்பல் நடந்துகொண்டே இருக்கும்.

இரண்டாவது, அவர்கள் சொல்வதைக் கேட்க யாரும் முன் வருவதில்லை. எனக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது. ஒரு பயலும் என்னிடம் யோசனை கேட்க மாட்டேன் என்கிறானே என்பதுதான் பெரும்பாலானவர்களின் புலம்பலாக இருக்கும். காலம் மாறி விட்டது. அவர்களின் பழைய கால அனுபவம் இந்த அவசர யுகத்திற்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர மறுப்பதுதான் இந்தப் புலம்பலுக்கு காரணம்.

இன்று மூன்று வயதுக் குழந்தை இன்டர்நெட்டில் விளையாடுகிறது. செல் போன் பேசுகிறது. விமானத்தில் பயணிக்கிறது. இந்த கிழங்கள் எல்லாம் தங்கள் இளம் வயதில் விமானம் பறப்பதை வாயில் ஈ புகுவது தெரியாமல் வேடிக்கை பார்த்த கேஸ்கள். பேரன் விமானத்தில் போனதைப் பற்றிப் பேசினால், ஆஹா, நாங்கள் பார்க்காத விமானமா, ராமன் காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்ததாக்கும் என்று ஆரம்பிப்பார்கள். பேரன் அப்போதே ஓடிப்போய் விட்டிருப்பான். ஆனாலும் இவர்கள் அவன் முன்னால் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு தங்கள் பிரலாபத்தை இரண்டு மணி நேரம் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தக் கேஸ்களை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் காலத்தில் கிராமபோன் மெஷினில் ரெக்கார்டைப் போட்ட மாதிரி, நான் ஸ்டாப்பாக இவர்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். காதில் விழாத மாதிரி எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

டாக்சியென்றால் எனக்குப் பயம் ?


உலகம் முழுவதும் உள்ள டாக்சிக்காரர்களின் (ஆட்டோக்காரர்களும் இதில் சேர்த்திதான்) பொதுவான ஒரு குணம் என்னவென்றால் நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு எவ்வளவு சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்றித்தான் போவார்கள். உங்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்பது அவர்களுக்கு கைவந்த கலை. நீங்கள் எப்பேர்ப்பட்ட ஜகஜாலக் கொம்பனானாலும் உங்கள் கண்ணில் மிளகாய்ப்பொடி போட அவர்களுக்குத் தெரியும்.

இதை இரண்டொரு தடவை நேரடியாக அனுபவித்ததின் பலன்தான் எனக்கு டாக்சிக்காரர்களின் பேரில் ஏற்பட்ட பயம். அவர்களுடைய அனுபவத்தின் காரணமாக ஊருக்குப் புதியவர்களை உடனே இனம் கண்டு கொள்வார்கள். நாம் போக வேண்டிய இடம் பக்கத்தில் இருந்தால் "அங்க எல்லாம் நம்ம வண்டி வராது சார்" என்பார்கள்.

ஒரு டாக்சிக்காரனிடம் பேரம் பேசி படியாவிட்டால், அடுத்து இருக்கும் எல்லா டாக்சிக்காரன்களும் முதல் டாக்சிக்காரன் எவ்வளவு கேட்டான் என்பார்கள். நாம் உண்மையைத்தானே சொல்வோம். இளிச்சவாயனுக்கு அதுதானே அடையாளம். அந்த இரண்டாவது டாக்சிக்காரன் முதல் டாக்சிக்காரன் கேட்டதை விட அதிகம் கேட்பான். என்னப்பா, முதல் டாக்சிக்காரனை விட அதிகம் கேட்கிறாயே என்றால், அப்போ அந்த டாக்சியிலேயே போங்கள் என்று சொல்வான்.

இது டாக்சிக்காரர்களிடையே எழுதப்படாத ஒப்பந்தம். ஒரு டாக்சிக்காரனிடம் நீங்கள் பேசி விட்டால் அடுத்த டாக்சிக்காரன் ஒருவனும் உங்களுக்கு வரமாட்டான். சில இடங்களில் இந்த டாக்சிக்காரன்கள் புரோக்கர் வைத்திருப்பார்கள். அவர்கள் நம்மிடம் நைசாகப் பேசி ஒரு ஓட்டை டாக்சிக்குக் கூட்டிப்போவான். இவர்களிடம் சிக்கினால் மீளமுடியாது.

எப்படியோ ஒரு டாக்சியில் பேசி ஏறி விட்டீர்களானால் அவன் தன் இஷ்டத்திற்குத்தான் சுற்றிக்கொண்டு போவான். நீங்கள் ஓரிரு தடவை அங்கு சென்ற பழக்கத்தினால் இந்த வழியில் போகலாமே என்றால் சார், அந்த ரோட்டை மெட்ரோவிற்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள் சார் என்பான். எப்படியோ நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு வந்த பிறகு மீட்டரைப் பார்த்தால் வழக்கமாக ஆவதைப் போன்று இரண்டு மடங்கு ஆகியிருக்கும். பேசாமல் கோடுத்தீர்களானால் தப்பித்தீர்கள். இல்லாவிட்டால் சென்னை பாஷையில் அர்ச்சனை வாங்கவேண்டி இருக்கும்.

கோயமுத்தூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கையாளும் விதமே தனி. ரயில்வே ஸ்டேஷனில் எப்படியோ பேரம் படிந்து ஏறிவிடுவார்கள். அவர்கள் கையில் அவர்கள் போகவேண்டிய இடத்தின் விலாசம் தெளிவாக இருக்கும். ஆனால் இந்த ஆட்டோ டிரைவர் முக்கால்வாசி தூரம் வந்த பிறகு அவன் அந்த ஊருக்கே புதிசு மாதிரி டிராமா போடுவான். போகவேண்டிய இடத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தாண்டிப்போய் ரோட்டில் போகும் யாராவது இடம் விசாரிப்பான். அந்த இடம் மிகவும் பிரபலமான இடமாயிருக்கும். ஆனால் அவன் ஒன்றும் தெரியாதமாதிரி கமுக்கமாக இருப்பான்.

இப்படி அவர்களை தெற்கும் வடக்குமாக அலைக் கழித்து கடைசியில் அவர்களைக் கொண்டு போய் சேரவேண்டுய விலாசத்தில் சேர்த்துவான். வந்தவர்களும் ஆஹா, டிரைவர் எவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டார் என்று உருகிப்போய் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுவார்கள்.

நான் எந்த ஊருக்குப் போவதாயிருந்தாலும் அந்த ஊரிலுள்ள டவுன் பஸ் ரூட்களை நன்கு விசாரித்து அறிந்து கொள்வேன். மும்பாய், டில்லி, கல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களில் ஏர் போர்ட்டிலிருந்து டவுன் வரைக்கும் வர பஸ் ரூட்கள் நன்கு தெரியும். இது வரை அங்கெல்லாம் நான் டாக்சி வைத்ததே கிடையாது. பஸ்சில்தான் போவேன். டவுனுக்குள் வந்த பிறகு போகவேண்டிய இடத்திற்கு ஆட்டோ வைத்துக் கொள்வேன்.

உலக முழுவதும் உள்ள டாக்சிக்காரர்கள் ஒரே மாதிரி இருப்பதுதான் எட்டாவது உலக அதிசயம்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

இந்தியாவின் எதிர்காலம்


அவர்கள் -உண்மைகள் பதிவின் ஆசிரியர் "இந்தியாவின் எதிர்காலம்" என்பதைப் பற்றி என் கருத்துகளைக் கேட்டார்.
http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html

என்னுடைய அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவன் என்கிற நிலையில் நான் இந்திய நாட்டின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டு வருகிறேன்.

இந்தியா சுதந்திரம் வாங்கியபோது இருந்த ஜனத்தொகை 33 கோடி. இன்று இருப்பது 120 கோடி. ஜனத்தொகை குறைவாக இருந்த காலத்தில் உணவுப் பஞ்சம் அவ்வப்போது இருந்து கொண்டிருந்தது. கடைசியாக வந்த உணவுப் பஞ்சம் 1943 ம் வருடம் என்று நினைக்கிறேன். அதற்குப்பிறகு ஜனத்தொகை பலமடங்கு பெருகியிருந்த போதிலும் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை.

இது விவசாயத்துறையில் ஏற்பட்ட மகத்தான புரட்சி. அதே போல் தொழில் துறையிலும் மகத்தான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டில் இருந்த கார்கள் இரண்டேதான், பியட் மற்றும் அம்பாசிடர் மட்டும்தான். இன்று எத்தனை வகை கார்கள், மற்ற கனரக வாகனங்கள், சிறு சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என்று அந்த துறையிலேயே இருப்பவர்களுக்கு கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

ஆடை உலகிலே நாட்டில் பெரும் புரட்சியே நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். பருத்தியிலிருந்து நூல் நூற்பதிலிருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாவது வரை, நடந்துள்ள மாற்றங்கள் மிகவும் வியக்கத்தக்கதாகும்.

இவ்வாறே கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலைகள் ஆகியவைகளும் பன்மடங்கு முன்னேற்றமடைந்துள்ளன. தொலை தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அபரிமிதமானதாகும்.

தனி மனிதனின் பொருளாதார வசதிகள் பன் மடங்கு பெருகியிருக்கின்றன. நல்ல வீடு, நல்ல துணிகள், வாகன வசதி என்று ஒவ்வொருவரும் முன்னேறியிருக்கிறார்கள். ஜனத்தொகை இன்று பலமடங்கு பெருகியிருந்த போதிலும் அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆள் தேவை என்ற அறிவிப்புப் பலகை தென்படுகிறது.

இந்த மாற்றங்களெல்லாம் நாடு முன்னேறுவதைக் குறித்தாலும் சில எதிர்மறை சக்திகள் இந்தியா வல்லரசாகும் வாய்ப்பைத் தடுக்கின்றன.

அதில் முதலிடம் வகிப்பது இந்நாட்டின் அரசியல். இதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்வதால் ஒரு பயனும் இல்லை.

அடுத்தது ஊழல். இதற்கு முன்னோடிகள் யாரென்று தனியாகச் சொல்லவேண்டிதில்லை.

கடைசியாக மக்களின் ஒழுக்கம். இது சீர்கெட்டு வருவதை அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்திய மக்களுக்கு என்று எந்த வித ஒழுக்க அடையாளங்களையும் என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.

இந்த மூன்று குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் இந்தியா என்றோ வல்லரசு வரிசையில் சேர்ந்திருக்கும். இந்தக் குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பிரபல பதிவர் ஆக ஏழு வழிகள்.

நீங்கள் புதிதாகப் பதிவு எழுத வந்திருக்கிறீர்களா? பதிவுலகில் நீங்கள் பிரபல பதிவர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? மேலே படியுங்கள்.

நீங்கள் பிரபல பதிவர் ஆவதற்கு எனக்குத் தெரிந்த சில வழிகள் கொடுத்திருக்கிறேன். வடிவேலு சொன்ன மாதிரி "நானும் ரவுடிதான்" என்கிற மாதிரி பதிவுலகில் பிரகாசிக்க இவை உதவும். ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் உண்டு. பதிவுலகில் பிரபலம் ஆகி என்ன செய்யப் போகிறேன் என்று கேட்பவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதால் பயனில்லை.

1. பதிவு எப்படியிருந்தாலும் அதன் தலைப்பு        அட்டகாசமாக இருக்கவேண்டும்.
பதிவைப் படிக்க வருபவர்கள் பதிவின் தலைப்பைப் பார்த்துத்தான் வருகிறார்கள். தலைப்பு அவர்களுக்குப் பிடித்திருக்கவேண்டும். அவர்களை சுண்டி இழுக்கவேண்டும். தெருவில் போகும் ஒரு பெண்ணிடம் ஒருவன் நகையை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். "பெண்ணிடம் நகை திருட்டு" என்று தலைப்பு வைத்தால் எத்தனை பேர் உங்கள் பதிவைப் படிக்க வருவார்கள்?

"தெருவில் இளம் பெண்ணிடம் அத்து மீறல்" என்று தலைப்பு வையுங்கள். அப்புறம் பாருங்கள். ஹிட்ஸ் அள்ளிக்கொண்டு போகும்.


2. பதிவு எழுதும் டாபிக் மிகவும் முக்கியம். 

தலித் மற்றும் வன்னியர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இதில் முன்னுரிமை பெறுகின்றன. இந்த விஷயம் சாகாவரம் பெற்ற விஷயம். தமிழன் இருக்கும் வரை இது உயிருடன் இருக்கும். அவர்களை சாதி வெறியர்கள் என்று குற்றம் சாட்டி எழுதவேண்டும். ஒரு பதிவில் வன்னியர்களைத் திட்ட வேண்டும். அடித்த பதிவில் தலித்துகளைத் திட்டவேண்டும்.

3. அடுத்து தமிழீழம்.

இதுவும் ஒரு சாகாவரம் பெற்ற சப்ஜெக்ட். ஏனென்றால் தமிழீழம் எப்போதும் வரப்போவதில்லை. இதை மட்டும் சொன்னாலே போதும். பின்னூட்டங்களில் உங்களை திட்டு திட்டென்று திட்டுவார்கள். அவைகளைப் படிக்காதீர்கள். சும்மா பப்ளிஷ் பண்ணிவிட்டு வேறு வேலையைப் பாருங்கள்.

மாத த்திற்கு ஒரு முறை இந்தப் பதிவுகள் வெளிவரவேண்டும்.

4. அரசியல் தலைவர்கள், சினிமா நடிகைகள், பதிவர்கள் இவர்களின் தனிப்பட்ட கசாமுசா விஷயங்கள்.

மனிதனுக்கு எப்பொழுதும் அடுத்தவர்களுடைய அந்தரங்கங்களைத் தெரிந்து கொள்வது என்பது இரத்தத்தில் ஊறியுள்ள ஒரு குணம். ஒரு சினிமா நடிகை ஒரு நடிகனுடன் ஐந்து நிமிடம் பேசி விட்டால் போதும். அதற்கு கண், காது, மூக்கு எல்லோம் வைத்து ஒரு கதை கட்டி விடுவார்கள். இத்தகைய செய்திகளுக்குத்தான் இன்று மார்க்கெட் இருக்கிறது.

வாரப் பத்திரிக்கைகள் அனைத்தும் இத்தகைய செய்திகளை வைத்துத்தான் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன.

"ஜில்ஜில் ரமாமணி இன்று ...?' அப்படீன்னு ஒரு தலைப்பு வைத்துப்பாருங்கள்! உங்கள் பதிவின் ஹிட்ஸ் எங்கேயோ போய்விடும். மேட்டர், ஜில்ஜில் ரமாமணி இன்று சாப்பிட்டாள் அப்படீன்னு இருந்தாப்போதும்.

5. அரசியல் ஆரூடங்கள்

அரசியலில் பதிவுகள் போட அன்றாடம் எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கும். அன்றைய தினத்தந்தியைப் பாருங்கள். முதல் பக்கத்தில் என்ன செய்தி வந்திருக்கிறதோ அதை அப்படியே பதியுங்கள். கடைசியில் ஒரு பாரா உங்கள் கருத்துகளை சொல்லி பதிவை முடித்து விடுங்கள். உங்கள் கருத்து கொஞ்சம் ஏறுமாறாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.


6. பெண்களை மட்டம் தட்டும் பதிவுகள். 

காதலாவது கத்தரிக்காயாவது அப்படீன்னு இன்றைய காதலை ஒரு பிடி பிடியுங்கள். சரமாரியாக பின்னூட்டங்கள் வரும். அடுத்த பதிவில் காதலைப் போன்று புனிதமானது உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்று ஒரு பதிவு போடுங்கள்.

7. அடுத்து மாணவர்களைப் பற்றி

மாணவர்கள் ஏதாவது போராட்டம் நடத்தினால் அதைப்பற்றி உடனே பதிவு போட்டு விடுங்கள். இந்தக்காலத்து மாணவர்களுக்கு பொறுப்பே கிடையாது என்று எழுதினால் போதும். உங்களை அனைவரும் (மாணவர்களைத்தவிர மற்றவர்கள்- உங்கள் பதிவை எந்த மாணவனும் படிக்கப்போவதில்லை.) பிலுபிலு வென்று பிடித்து உலுக்குவார்கள்.

கடைசியாக முக்கிய குறிப்பு

 உங்கள் தோல் தடிப்பாக, எருமைத்தோல் மாதிரி இருக்கவேண்டும். பின்னூட்டங்களில் உங்களை வாய்க்கு வந்த படியும் வாயில் வராதபடியும் அர்ச்சனை செய்வார்கள். அத்தனையையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.

இன்னும் பல வழிகள் இருக்கலாம். இந்த யுத்திகளெல்லாம் என்னால் நேரடியாக சோதித்து அறிந்த அரிய உண்மைகள். ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் தருகிறேன். அதனால் அவைகளை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். மற்ற வழிகளை பிற பதிவுகளுக்குப்போய் அறிந்து கொள்ளவும்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ரூபாய் நோட்டுகள் குட்டி போடும் அதிசயம்


தெனாலிராமன் கதைகளில் பாத்திரங்கள் குட்டி போட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்த கதையை மிஞ்சிய ஒன்று இந்திய ரிசர்வ் பேங்கில் நடந்திருக்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆப் இண்டியா பேப்பரில் வந்த செய்தி. ரிசர்வ் பேங்க் கஜானாவில் பிரஸ்சில் அச்சடித்த ரூபாய் நோட்டுகளை விட அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி ரூபாய் நோட்டுகள் கஜானாவில் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெறுவதை வேறு எந்த நாட்டிலாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

திங்கள், 29 ஜூலை, 2013

உலகில் பேரின்பம் தருவது எது ?


பல கால ஆராய்ச்சியின் சாரத்தை இப்போது நான் உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விதிப்பயனால் தீர்மானிக்கப்படும்.

உலகில் பேரின்பம் மற்றும் சிற்றின்பம் என்று இரண்டு வகை இருப்பதை எல்லோரும் அறிவீர்கள். சிறிது நேரமே இருந்து பின் மறைந்து போவதை சிற்றின்பம் என்று சொல்வது மரபு. ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம். சாப்பிடும்போது இன்பமாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இன்பம் மறைந்து விடுகிறது.

இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் பெரும்பாலான இன்பங்கள் இவ்வகையைச் சேர்ந்ததுதான். அதனால்தான் பெரியவர்கள் பேரின்பத்தை நாடு என்று சொல்லி வைத்துப் போனார்கள். ஆனால் பேரின்பம் என்றால் என்ன, அதை அடைவது எப்படி என்கிற வழிவகைகளை அவர்கள் சொல்லவில்லை.

ஆண்டவனை உணர்வதுதான் பேரின்பத்திற்கு வழி என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த வழியில் போய் பேரின்பத்தை நுகர்ந்தவர்களை யாரையும் காணோம்.

இவ்வுலக மாந்தர் உய்யும்பொருட்டு பலகாலம் சிந்தித்து பேரின்பம் அடையும் மார்க்கத்தை இங்கே கொடுத்திருக்கிறேன். இந்தப் பொருளை நினைக்க நினைக்க இன்பம் தரும். பார்த்தால் இன்பம் பலமடங்கு பெருகும். தொட்டாலோ பேரின்பம் பயக்கும்.

இந்த இன்பம் எப்போதும் தெவிட்டாது. இந்தப் பொருளை எவ்வளவு அடைந்தாலும் மேலும் மேலும் வேண்டும் என்றே தோன்றும்.

அது என்னவென்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா?

இதோ பாருங்கள்.

பணம் ஒரு பேய், பணத்தாசை கூடாது, பணத்திற்கு அடிமையாகாதீர்கள் என்றெல்லாம் கூறுபவர்களை நம்பாதீர்கள். ஒன்று அவர்களிடம் பணம் இல்லை அல்லது ஏற்கெனவே ஏகப்பட்ட பணத்தைச் சேர்த்துவிட்டார்கள். நம்ம கார்பரேட் சாமியார்களைப் பாருங்கள். அவர்களிடம் ரிசர்வ் பேங்க் கஜானாவே இருக்கிறது. ஆனால் அவர்கள் போதிப்பது என்னவென்றால் பணத்தாசை கூடாது என்று.

ஆகவே பதிவர்களே, விவேகத்துடன் பணத்தை சேமியுங்கள்.

சனி, 27 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை - பாகம் 2

அந்தக் காலத்தில் மூன்றே மூன்று புரொக்ராம்கள்தான் பிரபலம். வேர்டு. ஸப்ரெட்ஷீட், டேட்டாபேஸ். மூன்றுக்கும் மூன்று பிளாப்பிகள்.

நான் முதலில் போரிட ஆரம்பித்தது வேர்டுடன். அந்த மேன்யிவலைப் புரிந்து கொள்ளவே பல நாட்கள் ஆயின. நான் அந்தக்காலத்தில் டைட்ரட்டிங்க் படிக்கவில்லை. ஏனென்றால் அது என் குடும்ப பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. மாதம் மூன்று ரூபாய் கட்டணம் என்னால் கொடுக்க முடியவில்லை.

அதனால் இந்த கீபோர்டை ஒவ்வொரு எழுத்தும் எங்கே இருக்கிறது என்று தேடுக்கண்டு பிடித்து ஒரு வரி டைப் அடிப்பதற்கு அரை மணி நேரம் ஆயிற்று. இப்படியாக ஏறக்குறைய ஒரு மூன்று மாதத்தில் வேர்டின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டேன்.

பின்பு ஒரு முறை அமெரிக்கா சென்றிருந்தபோது என்னுடைய உபயோகத்திற்கென்று ஒரு கம்ப்யூட்டர் தனியாகக் கொடுத்தார்கள். அதற்குள் கம்ப்யூட்டர்கள் வளர்ச்சியடைந்து விட்டன. ஹார்டு டிஸ்க் வந்துவிட்டது. புரொக்ராம் மேன்யுவல்கள் தடிதடியாக தலையாணி சைசில் வந்து விட்டன.

அங்கு உட்கார்ந்து ஸ்ப்ரெட் ஷீட் எப்படி உபயோகிப்பது என்று பழகினேன். பின்பு ஒரு முறை ஸ்வீடன் போயிருந்தபோது அவர்கள் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றி புதிதாக வாங்கியிருந்தார்கள். பழைய கம்ப்யூட்டர் ஒன்று கொண்டு போகிறார்களா என்று கேட்டார்கள்.

நம் தமிழ்பண்புதான் தெரியுமே. ஒருவன் சாப்பிடும்போது தெருவில் கடனுக்கு யானை  விற்றுக்கொண்டு போனார்களாம். இவன் வாய் நிறைய சோறு. பேச முடியவில்லை. சைகையிலேயே "எனக்கு ஐந்து" என்று சொன்னானாம். கடனில் கொடுப்பதையே அப்படி ஆசைப் பட்ட தமிழன் சும்மா கொடுத்தால் விடுவானா?

ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தேன், தப்பு, தப்பு, கொண்டு வரப்பார்த்தேன். ஸ்வீடன் ஏர்போர்ட்டில் இதன் சைஸைப் பார்த்ததும் ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான். அதை அங்கேயே லவுன்ஞ்சில் அதைக் கொடுத்தவர்கள் விலாசத்தை அந்தப் பார்சலின் மேல் எழுதி வைத்து விட்டு வந்து விட்டேன்.

அந்தப் பார்சல் அதைக் கொடுத்தவர்களிடம் சேர்ந்து விட்டது என்று பின்னால் கேள்விப் பட்டேன்.

கம்ப்யூட்டர்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் நடந்து இன்று விலை மலிவாகவும், பலமடங்கு திறனுள்ளவையாகவும் மாறி விட்டன. இன்று புதிதாக வாங்கும் கம்ப்யூட்டர் அடுத்தவாரம் பழைய மாடல் ஆகி விடுகிறது.

பிறகு நான் ரிடையர் ஆன பின்பு என் பெண் தான் உபயோகித்து கழித்த ஒரு கம்ப்யூட்டரை எனக்கு தானம் கொடுத்தாள். தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாதல்லவா? அதை தட்டிக் கொட்டி இன்றைய நிலைக்கு கொண்டு வந்து உங்களையெல்லாம் வாதித்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சாஃப்டுவேர் எல்லாம் தலைகீழாக அத்துபடி. இந்தக் கம்ப்யூட்டரினால்தான் என் மூளை துருப்பிடிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறது. 

வியாழன், 25 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை - தொடர் பதிவு -பாகம் 1


ஆஹா, அடிச்சது ஒரு லாட்டரி பிரைஸ். நம்மையும் (ஒரு பார்மாலிட்டிக்காக தன்மைப் பன்மை உபயோகித்திருக்கிறேன். தன்மைப் பன்மை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் உடனடியாம ஒரு தமிழ் வாத்தியாரைப் பார்த்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.)  ஒரு பதிவரா மதிச்சு ஸ்ரீராம் ஒரு தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டிருக்கார். விடுவோமா வந்த வாய்ப்பை. எல்லோரும் எழுந்து ஓடத் தயாராக இருங்கோ!

1987 ம் வருடம். விவசாயப் பல்கலைக் கழகத்தில் நான் ஒரு ஆராய்ச்சி யூனிட் டைரக்டராகப் பொறுப்பேற்றேன். யூனிவர்சிடி வைஸ்-சேன்சலருக்கு அடுத்த கீழ் பதவி. (பேரு பெத்த பேருதான்.) என்ரூமில் ஒரு கம்ப்யூட்டர் வைத்திருந்தது. எனக்கு முன் இருந்தவர் வாங்கிப்போட்டிருந்தார். ஏறக்குறைய ஒரு வாஷிங்க் மெஷின் சைசில் இருந்தது.

அப்போதுதான் PC  என்று சொல்லப்படும் Personal Computer கள் மார்க்கெட்டில் வர ஆரம்பித்த காலம். அதற்கு முன் மெய்ன் பிரேம் கம்ப்யூட்டர்கள் என்று சொல்லப்படும் வெள்ளை யானைகள்தான் கோலோச்சிக்கொண்டு இருந்தன. எல்லாம் யானை சைசில் இருக்கும். விலையும் யானை விலைதான். எங்கள் யூனிவர்சிடியில் ஒரு வெள்ளை யானை 20 லட்சம் ரூபாயில் வாங்கி, ஏகப்பட்ட பாதுகாப்புகளுடன் ஒரு 10 அடி அகலம் 20 அடி நீளமான ரூமுக்கு AC பொறுத்து அதற்குள் வைத்திருந்தார்கள்.

அந்த அறைக்குள் போவதென்றால் கோவிலுக்குள் போவது போல் செருப்பையெல்லாம் கழட்டி வாசலில் வைத்து விட்டுப் போகவேண்டும். அந்தக் கம்ப்யூட்டரை இயக்க ஒரு அசிஸ்டென்ட்டுக்கு ஒரு மாதம் அந்தக் கம்ப்யூட்டர் கம்பெனியே டிரெய்னிங்க் கொடுத்திருந்தது. அந்த ஆளுக்கு ஏகப்பட்ட மரியாதை. தலையில் லேசாக கொம்பு முளைத்திருக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள். என் கண்ணுக்குத் தெரியவில்லை.

அதுவரை கம்ப்யூட்டரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேனே தவிர கம்ப்யூட்டரை தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. ஆகவே என் ரூமில் இருந்த கம்ப்யூட்டரை ஆசை தீர தொட்டு, தடவி எல்லாம் பார்த்தேன். பக்கத்தில் அந்தக் கம்ப்யூட்டரை உபயோகப் படுத்துவது பற்றிய மேன்யுவல் எல்லாம் இருந்தன. அந்த கம்ப்யூட்டரில் ஹார்டு டிஸ்க் கிடையாது.  A மற்றும் B டிரைவ் என இரண்டு ஸ்லாட்டுகள்தான் இருந்தன.  அப்போது 6 அங்குல விட்டத்தில் பிளாப்பி டிஸ்க் என்று ஒன்று இருக்கும். அதில்தான் கம்ப்யூட்டர் புரொக்ராம்கள் இருக்கும். அதை A டிரைவில் போட்டால் கம்ப்யூட்டர் இயங்கும். B டிரைவில் நாம் தேவைப்பட்ட பைல்களை சேமிக்க ஒரு பிளாங்க் பிளாப்பி டிஸ்க்கைப் போட்டு வேலை செய்யவேண்டும்.

இந்த விவரங்களெல்லாம் பல மாதங்கள் கழித்துத்தான் நான் அறிந்து கொண்டேன். முதலில் எனக்கு ஒன்றும் தெரியாது.

நான் ஒரு பெர்ர்ர்ரிரிரிய அதிகாரியானதால் எனக்குத் தெரியாது என்று எதைப் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் நான் அந்தப் பதவிக்கு லாயக்கில்லை என்று அர்த்தம். இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்தவனாதலால் யாரிடமும் இந்தக் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துவது என்று கேட்க முடியாது. மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழ் பணிபுரிபவர்கள். என்னைவிட ரேங்க் குறைவானவர்கள். அவர்களிடம் போய் இந்தக் கம்ப்யூட்டரை எப்படி இயக்குவது என்று கேட்டால் அது பெருத்த அவமானம். அதற்குப் பதிலாக தூக்குப் போட்டு செத்து விடலாம்.

ஆகவே நானே அந்த  மேன்யுவல்களை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஆபீஸ் நேரத்தில் இதை செய்ய முடியாது. ஏனென்றால் பார்ப்பவர்கள் எனக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கேவலமாக நினைப்பார்கள். எனவே மாலை 5 மணிக்கு மேல் எல்லோரும் ஆபீசை விட்டுப் போனபிறகு இந்த மேன்யுவல்கள்ப் படிப்பேன்.

பாகம் 2 ல் தொடரும்.

திங்கள், 22 ஜூலை, 2013

வழி சொல்லத் தெரியுமா ?


நேற்று நான் கடைக்கு ஒரு பொருள் வாங்கப் போகும்போது ஒரு பெண் என்னிடம் வந்து " ஐயா, இங்கு காயின் பாக்ஸ் போன் எங்காவது இருக்கிறதா" என்று கேட்டாள். நான் அவள் "காயின்" அதுதான் ஒரு ரூபாய் காசு இல்லாமல் கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு என் பர்சை எடுத்தேன்.

அதற்கு அவள் "ஐயா, என்னிடம் காசு இருக்கிறது, காயின் பாக்ஸ் போன் பக்கத்தில் இருக்கிறதா?" என்று கேட்டாள். கொஞ்ச தூரத்தால் ஒரு போன் இருந்ததைக் காட்டினேன். அவள் தயங்கினாள். சரி போனில் என்ன பேசவேண்டும் என்று கேட்டேன். அதற்ஃகு அவள் நான் இங்கு என் சித்தி வீட்டிற்கு வந்தேன். வழி தெரியவில்லை, அதனால் அவர்களுக்கு போன் செய்து வழி கேட்கவேண்டும் என்றாள். நான் என் செல்போனை எடுத்து அவள் சொன்ன எண்ணுக்கு போன் செய்து அவளிடம் கொடுத்தேன்.

ஒரு நிமிடம் பேசினாள். அவர்களை என்னிடம் பேசச் சொல், நான் விவரம் கேட்டு உனக்குச் சொல்கிறேன் என்று சொல்வதற்குள் போன் கட் ஆகிவிட்டது. சரி என்ன சொன்னார்கள் என்றேன். கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோரிலிருந்து நேராக வரவும் என்று சொன்னார்கள் என்றாள்.

இதைப் போன்ற மொட்டையான வழியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? நேராக வரவும் என்றால் எந்த ரோட்டில் என்று சொல்லவேண்டாமோ? அந்தப் பெண் என் பின்னாலேயே வர ஆரம்பித்தது. நான் திரும்பவும் அந்த நெம்பரைக் கூப்பிட்டு "அம்மா, உங்க வீடு எங்கேயிருக்குறது என்று அழுத்தமாகக் கேட்டேன்.

அப்போது அந்த அம்மா அவர்கள் இருக்கும் வீட்டைச் சொன்னார்கள். அது என் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு. அந்தப் பெண்ணிற்கு வழி சொல்லி அனுப்பி வைத்தேன்.

நான் சமீபத்தில் எங்கள் ஏரியாவிலேயே ஒரு அபார்ட்மென்ட்டுக்குப் போக வேண்டி இருந்தது. அந்த அபார்ட்மென்ட் பெயரில் மூன்று இடங்களில் அபார்ட்மென்ட் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் பெயரில் சிறிய வித்தியாசமே. அரை மணி நேரம் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் வழி கேட்டேன். அந்த ஆள் அவ்வளவு படித்தவராகத் தென்படவில்லை. இருந்தாலும் வழி சரியாக சொன்னார்.

சார் இங்கிருந்து இந்த ரோட்டில் நேராக சென்றால் ஒரு ஸ்கூல் வரும் அங்கு வலது பக்கம் திரும்பி போய் மூன்றாவது ரோட்டில் இடது பக்கம் திரும்புங்கள். அங்கிருந்து  மூன்றாவது கட்டில் வலது பக்கமாக திரும்பி நேராகப் போனால் நீங்கள் தேடும் அபார்ட்மென்ட் வந்து விடும் என்றார். அதேபோல் சென்று அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் போகவேண்டிய அபார்ட்மென்ட்டுக்கு போய்ச் சேர்ந்தேன்.

 ஆகவே வழி சொல்லும்போது, அவர்களுக்குப் புரியும்படியாக தெளிவாக வழி சொல்லவேண்டும். தெளிவில்லாமல் சொல்லப்படும் வழிகளினால் எவ்வளவு சிரமங்கள் ஏற்படுகின்றன.

நான் ஸ்வீடன் போயிருந்தபோது அங்கிருந்து நேதர்லாந்தில் உள்ள சர்வதேச மண் ஆராய்ச்சி நிலையம் பார்க்க விரும்பினேன். அதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு வருவதற்கான வழியை ஒரு பேக்ஸ் மூலம் நான்கே நான்கு வரியில் தெரியப்படுத்தியிருந்தார்கள். சுருக்கமாகவும் தெளிவாகவும் எந்த குழப்பமுமில்லாமல் அந்த செய்தி இருந்தது. அதைப் பற்றி அடுத்த பதிவில்.

திங்கள், 15 ஜூலை, 2013

டிவிடி சிடி உருவாக்க

கணினி தொழில் நுட்ப பதிவுகளில் சமீபத்தில் ஒரு பதிவில் டிவிடி தயாரிப்பது பற்றிய ஒரு மென்பொருளைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். சாதாரணமாக இப்படி தொழில் நுட்ப பதிவுகளில் சிபாரிசு செய்யப்படும் மென்பொருட்கள் சோதனைக்காக 15 நாள் அல்லது 30 நாள் இனாமாக வேலை செய்யும் பிறகு முடங்கிப்போய்விடும். இந்த நுட்பத்தை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்.

Free Download என்று குறிப்பிட்டிருப்பார்கள். டவுன்லோடுதான் இலவசமே தவிர மென்பொருள் இலவசமல்ல. இதுதான் வார்த்தை ஜாலம். தவிர நமக்குத் தெரியாமல் ஏதாவது ஸ்பைவேர் மென்பொருளையும் கூடவே இனாமாக கொடுத்து விடுவார்கள். அது சிறிது சிறிதாக நம் கம்ப்யூட்டரை முடக்கும்.

நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் மென்பொருள் நான் சில மாதங்களாக உபயோமித்து வரும் மென்பொருளாகும். என் கம்ப்யூட்டருக்கு இது வரையில் எதுவும் நேரவில்லை.

எனக்குப் பொழுது போக்கு சாதனம் இந்தக் கம்ப்யூட்டர்தான். அதில் பலவிதமான மென்பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பேன்.

அப்படி நோண்டிக்கொண்டிருக்கும்போது ஒரு எண்ணம் தோன்றியது. நாம்தான் நிறைய பாடல்கள், டான்ஸ்கள்,  யூட்யூபில் இருந்து தரவிறக்கி வைத்திருக்கிறோமே, அவைகளை டிவிடி யாக மாற்றினால் என்ன என்று தோன்றியது.

ஏனென்றால் கம்ப்யூட்டரில் நாம் சாதாரணமாக ரெக்கார்ட் செய்யும் சிடிக்கள் டிவிடி பிளேயரில் வேலை செய்யாது. அவைகளில் டிவிடி பார்மேட்டில் இருந்தால்தான் வேலை செய்யும்.

நாம் யூட்யூபில் இருந்து தரவிறக்கம் செய்யும் விடியோக்கள் பல பார்மேட்டில் இருக்கும். பழக்கப்பட்டவர்களுக்கு இது தெரியும். MP 3,  MP 4 என்கிற பார்மேட்டுகள்தான் மிகவும் பிரபலமானவை. MP 3 ஒலி மட்டும் உள்ளது. இந்த பார்மேட்டில் இருக்கும் பாடல்கள்தான் டேப் ரிகார்டர்களில் பாடும்.

MP 4 பார்மேட்டில் இருப்பது இப்போது புதிதாக வந்து கொண்டிருக்கும் டிவிடி பிளேயர்களிலும் எல்லா கம்ப்யூட்டர்களிலும் வேலை செய்யும். ஆனால் பழைய டிவிடி பிளேயர்களில் வேலை செய்யாது.

மற்ற எல்லா பார்மேட்டுகளும் கம்ப்யூட்டரில் மட்டுமே வேலை செய்யும். வேறு எந்த உபகரணத்திலும் வேலை செய்யாது.

ஆகவே உங்களுக்குப் பிடித்தமான விடியோக்களை உங்கள் டிவிடி யில் பார்க்க விரும்பினால், அந்த விடியோக்களை டிவிடி பார்மேட்டுக்கு மாற்றி சிடியில் பதியவேண்டும்.

இந்த வேலைக்கு பல மென்பொருள்கள் உள்ளன. நீங்கள் வியாபார ரீதியில் டிவிடி தயாரிக்கவேண்டுமென்றால் அதற்கான பயிற்சியும் விலைகொடுத்து வாங்கிய நல்ல மென்பொருளும் நல்ல பவர்புல் கம்ப்யூட்டரும் தரமான டிவிடி  ரிகார்டரும் தேவைப்படும். இதற்கு அதிக பொருள் செலவாகும். நம்மைப் போன்ற சாதாரண கம்ப்யூட்டர் பயனாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும் ஒரு மென்பொருளே போதும்.

அப்படிப்பட்ட ஒரு மென்பொருளைப்பற்றிய விவரங்கள் கீழே கொடுத்திருக்கிறேன். இது முற்றிலும் இலவசம். நான் உபயோகித்து பலன் அடைந்திருக்கிறேன். டிவிடி பொழுது போக்குக்காக தயாரிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. ஆனால் அதிகமான நுட்பங்கள் கிடையாது.
----------------------------------------------------------------------------------------------------------
 சுட்டி:           http://www.dvdstyler.org/en/

DVDStyler is a cross-platform free DVD authoring application that makes possible for video enthusiasts to create professional-looking DVDs. It is Free software distributed under the GNU General Public License (GPL).


About

DVDStyler is a cross-platform free DVD authoring application for the creation of professional-looking DVDs. It allows not only burning of video files on DVD that can be played practically on any standalone DVD player, but also creation of individually designed DVD menus. It is Open Source Software and is completely free.

Features

Screenshot
Tip: DVDStyler is PC software, not self-hosted web software, soa web hosting plan is not required.
  • create and burn DVD video with interactive menus
  • design your own DVD menu or select one from the list of ready to use menu templates v1.8.0
  • create photo slideshow
  • add multiple subtitle and audio tracks
  • support of AVI, MOV, MP4, MPEG, OGG, WMV and other file formats
  • support of MPEG-2, MPEG-4, DivX, Xvid, MP2, MP3, AC-3 and other audio and video formats
  • support of multi-core processor
  • use MPEG and VOB files without reencoding, see FAQ
  • put files with different audio/video format on one DVD (support of titleset)
  • user-friendly interface with support of drag & drop
  • flexible menu creation on the basis of scalable vector graphic
  • import of image file for background
  • place buttons, text, images and other graphic objects anywhere on the menu screen
  • change the font/color and other parameters of buttons and graphic objects
  • scale any button or graphic object
  • copy any menu object or whole menu
  • customize navigation using DVD scripting

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 8 ஜூலை, 2013

மனித இயல்பும் அன்றாட நிகழ்வுகளும்


லண்டனில் ஒரு நிகழ்வு. ஒரு பொழுதுபோக்கு கிளப்பில் ஒரு நாள் ஒருவர் கீழே விழுந்துவிட்டார். அந்தக் கிளப் பெரிய பெரிய கனவான்கள் உறுப்பினராக உள்ள ஒரு கிளப். கீழே விழுந்தவர் அப்போதுதான் அந்தக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். யாரையும் அறிமுகமில்லை. மற்ற கிளப் மெம்பர்கள் எல்லோரும் அவர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த பிறகும் உதவிக்குச் செல்லவில்லை. பின்னால் ஏன் நீங்கள் அவருக்கு உதவவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறையை துல்லியமாக காட்டுகிறது.

"அவரை இதுவரை யாரும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லையே, நாங்கள் எப்படி அறிமுகமில்லாத அவருக்கு உதவமுடியும்? "

இந்தியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். வந்தாரை வாழவைப்பவர்கள். இப்படியெல்லாம் பெயர் பெற்றவர்கள். அதிலும் தமிழர்களைப்போல் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று பெருமையும் பேசிக்கொள்கிறோம். ஆனால் அடுத்தவருக்கு உதவி செய்தல் என்று வரும்போது, பலரும் பின்வாங்குவதை அன்றாடம் நடைமுறையில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இதை ரோடுகளில் விபத்து நடக்கும்போது கண்கூடாகப் பார்க்கலாம். ஒருவர் கீழே விழுந்து கிடக்கிறார். இரத்தக் காயம் ஒன்றுமில்லை. பக்கத்தில் ஒரு இருசக்கர வாகனம் கிடக்கிறது. இதைப் பார்க்கும் எத்தனை பேர் நின்று அவருக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? நூற்றுக்கு ஒருவர் தேறக்கூடும். காரணம் என்னவென்று சிந்தித்தால், அப்படி உதவச் செல்லும்போது ஏதாவது வம்பு, வழக்கு வந்து விடுமோ என்ற பயம்தான் காரணம்.

சாதாரண விபத்துக்கே இப்படி என்றால், பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தால், என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த இடத்தில் மனித நேயம் அடிபட்டுப் போகிறது. ஆனால் இந்த மனோபாவம் சரிதானா? நாம் ஒரு உதவியை மனித நேய அடிப்படையில் செய்யத் தயங்கினால் நம் மனச்சாட்சி உறுத்தாதா?

முடிந்தவரையில் விபத்துகளின்போது ஒருவருக்கு உதவுவது சிறந்தது. ஆனால் இன்றுள்ள அவசர கதி வாழ்க்கையில் ஒருவர் இதற்காக தன் நேரத்தை ஒதுக்க முடியுமா என்பது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்வியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி கருத்து கூறுங்கள்.