திங்கள், 28 அக்டோபர், 2013

பெற்றோரின் பொறுப்புகளும் கடமைகளும்.


இன்றைய அவசர உலகில் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல பொறுப்புள்ள மனிதர்களாக்குவது எப்படி என்று சிந்திக்கக்கூட நேரம் இருப்பதில்லை. எப்படியோ குழந்தைகள் பிறந்தார்கள், எப்படியோ வளர்கிறார்கள் என்ற அளவில்தான் சிந்தனைகள் இருக்கின்றனவே தவிர, அவர்களை பொறுப்பான மனிதனாக உருவாக்கும் பொறுப்பு தமக்கு இருக்கிறது என்று பெரும்பாலான பெற்றோர்கள் உணருவதில்லை. அப்படி உணர்ந்தாலும் அந்த நோக்கத்தை எப்படி அடைவது என்ற ஞானம் இருப்பதில்லை.

ஒவ்வொரு குழந்தையின் குணங்கள் கரு உற்பத்தியாகும்போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.  அந்த குணங்கள், அந்தக் குழந்தைகள் வளரும் பருவத்தில் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டு, ஒருவனுடைய திறன் வெளிப்படுகிறது. பெற்றோர்கள் இந்த சூழ்நிலையை அந்த குழந்தை நன்கு வளர்ந்து அவனுடைய திறமைகள் வெளிப்படுமாறு அமைத்துக் கொடுக்கவேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும்.

குழந்தை வளர்ப்பை யாரும் முன்கூட்டியே அறிந்து கொண்டு வருவதில்லை. இந்த அறிவு அனுபவத்தால் மட்டுமே வருவது. அதனால் இந்த அனுபவத்தைப் பெற ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் இருக்கவேண்டும். வேலைப்ளுவைக் காரணம் காட்டி இந்த பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.

குழந்தை பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறக்கலாம். அதை நல்ல டாக்டரிடம் காண்பிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலில் குறையிருக்கலாம் அல்லது மூளையில் குறையிருக்கலாம். இதை முதலிலேயே தெரிந்து கொண்டால் அந்தக் குழந்தையை வளர்க்கும்போது தேவையான சிகிச்சைகளைச் செய்ய வசதியாயிருக்கும்.

குழந்தைகள் பள்ளிப் பருவத்திற்கு முன்னால் வூட்டில் பெற்றோர்களின் கண்காணிப்பில் வளருகின்றன. பள்ளிக்குச் சென்ற பிறகு அவர்களைப் பாதிப்பவர்கள் ஆசிரியர்களும் உடன் பயிலும் மாணவர்களும்தான். அவர்கள் வளர வளர சக மாணவர்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வரும். இதைத்தான் ஆங்கிலத்தில் Peer Pressure என்கிறார்கள். இது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

இந்த சூழ்நிலை பாதிப்பை சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களை சரியான வழியில் நடத்துவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. பெற்றோர்களின் முதல் கடமை, தங்கள் பொறுப்புகளை உணருவதுதான். வழிமுறைகளை சிறிது முயற்சித்தால் கற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களை நன்கு கண்காணித்து அந்தந்த வயதில் தெரிந்து கொள்ளவேண்டியவைகளை பக்குவமாகச் சொல்லிப் புரியவைக்கவேண்டும்.
தவிர பெற்றோர்களும் தங்கள் வாழ்க்கையில் தங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு வேண்டிய சௌகரியங்களை தேவைக்கு அதிகமாகவே கொடுத்து விட்டு அவர்கள் தானாக வளர்ந்து நல்ல குடிமகன்களாக வளர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது பேதமை.

திங்கள், 21 அக்டோபர், 2013

தமிழ்மணம் ரேங்க்கும் நானும்.


பள்ளியில் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் கல்வித்தரத்தை ரேங்க் மூலமாகக் கணிக்கிறார்கள் அல்லவா? ஒருவன் ஒன்றாவது ரேங்க் வாங்கியிருந்தால் அவன் அந்த வகுப்பில் முதல் மாணவன் என்று சொல்கிறோம். அவனே ஒரு பாடத்தில் ஒரு மார்க் வாங்கியிருந்தால் என்ன சொல்வோம்? அவன் படிப்பில் மிகவும் பின் தங்கியவன் என்று தயங்காமல் சொல்வோம்.

இந்த எண் "1" என்பது என்ன பாவம் பண்ணியது? ஒரு சமயம் அதைப்போற்றுகிறோம், இன்னொரு சமயம் அதைத் தூற்றுகிறோம். இது எனக்குச் சரியாகப் படவில்லை. எப்போதும் நாம் ஒரே மாதிரியான கொள்கையை வைத்திருக்கவேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். அதாவது எதுவாக இருந்தலும் எண்ணிக்கை கூடினால் அது நல்ல விஷயம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது என் கொள்கை.

ஒருவனிடம் இப்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன. அடுத்த வருடம் அவனிடம் 200 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தால் என்ன சொல்வோம்? அவன் வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்று சொல்வோம் அல்லவா?

யாருக்காவது இந்த கொள்கையில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள். அடுத்த பதிவர் மகாநாட்டில் இதை ஒரு பட்டிமன்றமாக நடத்தி விடுவோம்.

நிற்க, இந்த டாபிக் எதனால் விவாதத்திற்கு வந்ததென்றால்,  தமிழ்மணம் திரட்டியில் என்னுடைய பதிவின் ரேங்க் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. ஒரு வருடத்திற்கு முன் 13 ஆக இருந்தது இன்று 35 ஐ எட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த அபரிமித வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என் சுகஜீவன வாழ்க்கை முறையே.

மிகவும் அத்தியாவசியமான காரியங்களை, அதாவது அந்தக் காரியத்தைச் செய்யாவிட்டால் உயிர் போய்விடும் அல்லது பார்யாள் பூரிக்கட்டையைக் கையிலெடுப்பாள் என்றால்தான் அந்தக் காரியத்தைச் செய்வேன். மற்ற நேரங்களில் இன்ன இன்ன காரியங்கள் செய்யவேண்டும் என்று பேப்பரில் லிஸ்ட் போட்டு டேபிளின் மேல் வைத்திருப்பேன்.

ஏதாவது ஒரு நாள் திடீரென்று வேகம் வரும். அப்போது அந்த லிஸ்டிலுள்ள வேலைகளை முடித்து விடுவேன். என்னுடைய இந்தக் கொள்கையின் பிரகாரம் ஒரு காலத்தில் பதிவுகள் நிறைய போட்டேன். அப்போது தமிழ்மணம் ரேங்க் 13 வரை சென்றது. இப்போது நான் என்னுடைய இயற்கைக் குணத்திற்கு வந்து விட்டபடியால் பதிவுகள் போடுவது வாரத்திற்கு ஒன்று என்றாகி விட்டது.

இப்போது தமிழ்மணம் ரேங்க் 34 ஆக இருக்கிறது. இது இன்னும் கூடுதல் ஆகலாம். ஆனால் இந்த ரேங்கினால் என்ன பயன் என்று யோசித்தால் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் என் சுகஜீவன வாழ்க்கைச் சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதில் சங்கடம் ஒன்றுமில்லை.

கடைசியாக ஒரு வார்த்தை. இந்த சுகஜீவனம் என்றால் என்ன என்று சொல்லவேண்டுமல்லவா. எங்கள் ஊரில் கடன் வாங்கும்போது ஒரு பிராமிசரி பத்திரம் எழுதுவார்கள். அதில் கடன் வாங்குபவர் பெயர், அவருடைய தகப்பனார் பெயர், செய்யும் வேலை, குடியிருக்கும் விலாசம் எல்லாம் எழுதுவார்கள். ஒரு வேலையும் இல்லாமல் இருப்பவர்களுக்கு "சுகஜீவனம்" என்று எழுதுவார்கள். அதற்கு அர்த்தம் கொச்சைத்தமிழில் "தண்டச்சோற்று தடிராமன்" என்பதாகும். ஆங்கிலத்தில் RKD = Rice Killing Department என்றும் சொல்வார்கள்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

புலி வருகிறது, புலி வருகிறது ஆஹா புலி வந்தே விட்டது.


புலி வருது, புலி வருது என்ற மாட்டுக்காரப் பையன் கதை எல்லோருக்கும் தெரியும். அதேபோல் மைக்ரோசாஃப்ட்-காரன் "விண்டோஸ் 8.1" வருது வருது என்று மூன்று மாசமா கூவிக்கொண்டு இருந்த இந்த புது ஆபரேட்டிங்க் சிஸ்டம் இன்று வந்தே வந்து விட்டது.

மைக்ரோசாஃப்டின் அத்யந்த விசுவாசி என்கிற முறையில் அந்த விண்டோஸ் 8.1 மென்பொருளை இன்று டவுன்லோடு செய்து என் கணினியில் நிறுவி விட்டேன். இன்னும் அதை முழுமையாக ஆராய்ச்சி செய்யவில்லை.

இந்த மென்பொருளை டவுன்லோடு செய்யவேண்டுமானால் நீங்கள் உங்கள் கணினியில் அதிகார பூர்வமான விண்டோஸ் 8 Pro ஆபரேட்டிங்க் சிஸ்டத்தை நிறுவியிருக்க வேண்டும். உங்களுக்கு இந்த விண்டோஸ் 8.1 Pro அப்கிரேடு விண்டோஸ் ஸ்டோர் மூலமாக இலவசமாகக் கிடைக்கும்.

தவிர நீங்கள் ஒரு நல்ல பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருக்கவேண்டும். அதில் இலவச டவுன்லோடு சௌகரியம் இருந்தால் உத்தமம். இல்லாவிட்டால் இந்த மென்பொருளை, (ஏறக்குறைய 4 GB உள்ளது) டவுன்லோடு செய்ய ஏகப்பட்ட பணம் ஆகிவிடும். தவிர இந்த மென்பொருள் முழுவதும் டவுன்லோடு ஆகி இன்ஸ்டால் ஆவதற்கு ஏறக்குறைய நான்கரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

இந்த தகவல்கள் சிலருக்காவது உபயோகப்படும் என்று நம்புகிறேன். மற்றவர்கள் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்த கதையைத் திரும்பவும் நினைவுக்கு கொண்டு வரவும்.

திங்கள், 14 அக்டோபர், 2013

வயசான காலத்தில் வந்த சோதனை.


சோதனை என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. நடைமுறை வாழ்க்கையில் சோதனை என்றால் கஷ்டம் என்று பொருள். இளம் வயதில் வரும் சில எதிர்பாராத நிகழ்வுகளை சோதனை என்று சொல்வதில்லை. அவைகளை அன்றாட நிகழ்வுகள் என்ற வகையில் சேர்த்து விடுவோம். அப்படிப்பட்ட நிகழ்வுகள் பல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் வந்து போகும். அத்தகைய நிகழ்வுகளைச் சமாளிக்க பெரிய முயற்சிகள் ஒன்றும் தேவையிருக்காது.

இத்தகைய நிகழ்வுகள் எந்த வயசிலும் வரலாம், வரும். ஆனால் இளம் வயதில் அவைகளை தூசிபோல் தட்டி விட்டு விட்டு நம் வேலையைப் பார்ப்போம். ஆனால் அதே நிகழ்வுகள் வயதான காலத்தில் வரும்போது அது சோதனையாக மாறுகிறது. அதை சமாளிக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்று. நேற்று என் ஒன்றுவிட்ட தம்பியின் நேர்  சகலை தன் பெண்ணுடைய கல்யாணத்திற்கு அழைப்பு கொடுத்துவிட்டார். இதுதான் சோதனையின் ஆரம்பம். இதில் ரூம் போட்டு யோசிக்கவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன.

முதல் பிரச்சினை, கல்யாணத்திற்குப் போவதா, வேண்டாமா என்பது. மணப்பெண்ணின் பெற்றோரை என் தம்பி வீட்டு விசேஷங்களில் பார்த்ததைத் தவிர, அவர்கள் வீட்டிற்கு நான் போனதில்லை, என் வீட்டிற்கு அவர்கள் வந்ததில்லை. இந்தக் கணக்குப் பிரகாரம் நான் இந்தக் கல்யாணத்திற்குப் போக வேண்டியதில்லை.

ஆனால் என் ஒன்று விட்ட தம்பியும் தம்பி மனைவியும் கூட வந்து அழைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். ஆகவே என் தம்பிக்காக இந்த கல்யாணத்திற்குப் போகவேண்டும். போகாவிட்டால் தம்பிக்கு மன வருத்தம் ஏற்படும். அது என் வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஆகவே கல்யாணத்திற்குப் போவது என்று முடிவு செய்தோம். (அதாவது நானும் என் வாழ்க்கைத்துணையும் - இப்பவெல்லாம் எதையும் தனியாக முடிவு செய்வது கிடையாது. ஏனென்றால் அப்படி தனியாக எடுத்த முடிவுகள் எல்லாம் அப்பீலில் தோற்றுப்போய் விடுகின்றன)

அடுத்த பிரச்சினை ஒருவர் மட்டும் போனால் போதுமா அல்லது இருவரும் (தம்பதி சமேதராக) போகவேண்டுமா என்பது. எங்க ஊர் வழக்கப் பிரகாரம் கல்யாணப் பெண் அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர் இருவரும் தம்பதி சமேதராக வந்து கூப்பிட்டால் நாங்கள் இருவரும் தம்பதி சமேதராகப் போகவேண்டும். ஆம்பிளை மட்டும் வந்து கூப்பிட்டிருந்தால் ஆம்பிளை மட்டும் போகவேண்டும். பொம்பிளை மட்டும் வந்து கூப்பிட்டிருந்தால் பொம்பிளை மட்டும் போகவேண்டும். பத்திரிக்கை தபாலில் வந்திருந்தால் தபாலில் வாழ்த்து அனுப்பினால் போதுமானது.

இதுதான் நான் கடைப்பிடிக்கும் கொள்கை. இந்தக் கல்யாணத்திற்கு மணப்பெண்ணின் தாயார் மட்டும்தான் அழைப்பிற்கு வந்திருந்தாள். இதன் பிரகாரம் என் மனைவி மட்டும் கல்யாணத்திற்குப் போனால் போதும். ஆனால் கூடவே என் தம்பியும் தம்பி மனைவியும் வந்து கூப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த சூழ் நிலையில் இருவரும் போவதுதான் மரியாதை. ஆகவே இருவரும் போவது என்று முடிவு செய்தோம்.

அடுத்ததாக மாலை ரிசப்ஷனுக்குப் போவதா அல்லது காலை முகூர்த்தத்திற்குப் போவதா என்பது. கல்யாண மண்டபம் கொஞ்சம் தூரத்தில் உள்ளது. மாலை ரிசப்ஷனுக்குப் போனால் திரும்பும்போது இருட்டிவிடும் இருட்டில் கார் ஓட்டுவது சிரமம். சரி காலையில் முகூர்த்தத்திற்குப் போகலாம் என்றால், எல்லா முக்கிய உறவினர்களும் மாலையே வந்து விட்டுப் போய்விடுவார்கள். அவர்களைப் பார்க்க முடியாது. கல்யாணத்திற்குப் போவதே இதற்குத்தானே. உறவினர்களைப் பார்த்து நாட்டு நடப்பு (கசமுசாக்கள்) தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் அல்லவா.

அதனால் கஷ்டமாக இருந்தாலும் ரிசப்ஷனுக்கே போய்விடலாம் என்று முடிவு எடுத்தோம். ஏன் ஒரு டிரைவர் வைத்துக் கொள்ளக்கூடாதா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்தக் காலத்தில் 500 ரூபாய்க்கு குறைந்து ஒரு டிரைவரும் வரமாட்டேன் என்கிறான், இந்தா இருக்கும் (20 கி.மீ) மண்டபத்திற்கு போய் வர 500 ரூபாயா. பணம் என்ன மரத்திலா காய்க்கிறது, எல்லாம் நீங்கள் ஓட்டினால் போதும், மெதுவா போய்ட்டு மெதுவா வந்தாப் போதும், அவனுக்கு எதற்கு 500 ரூபாய், இது என் ஊட்டுக்காரம்மா வாதம்,

சரி. முய் வைக்கவேண்டுமா, வேண்டாமா? அடுத்த பிரச்சினை. அவர்கள் நம் வீட்டு விசேஷங்கள் எதுக்கும் ஒரு முய்யும் வைக்கவில்லை. ஆகவே நாமும் சும்மா போய்வந்தால் போதும். இது ஊட்டுக்காரம்மாவின் பைனல் ஆர்டர் நோ அப்பீல்.

சரி, அங்க போய் பந்தியில் சாப்பிடலாமா இல்லை பஃபே யில் சாப்பிடலாமா? இப்பொழுதெல்லாம் பஃபேயில்தான் கூட்டம் அதிகம். தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். நாலு பேரிடம் கிசுகிசு சேகரிக்கலாம். இப்படி பஃபேயில் பல சௌகரியங்கள் உள்ளன. ஆகவே பஃபேயில் சாப்பிடலாம் என்று உத்திரவாகியது.

எத்தனை மணிக்குத் திரும்பலாம்? இது ஒரு கடைசிப் பிரச்சினை. எனக்கு இரவு 9 மணிக்குத் தூங்க வேண்டும். அம்மாவிற்கு பேச ஆள் கிடைத்து விட்டால் நேரம் காலம் கிடையாது. இந்த இரண்டையும் எப்படி சரிக்கட்டுவது? அம்மா கட்சிதான் ஜெயிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படியாக வயதான காலத்தில் ஒரு கல்யாணத்திற்குப் போய்வருவது என்பது ஒரு இமாலயப் பிரச்சினையாக இருக்கிறது. அநேகமாக வயதானவர்கள் அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  

திங்கள், 7 அக்டோபர், 2013

மண் வாசனை


ஐயா எனக்கு ஒரு திருவிளையாடல் சந்தேகம். மழை பெய்து மண்வாசனை வருகிறதே அது மண்ணாலா அல்லது மண்ணில் வாழும் பாக்டிரியாக்களாலா? இது பற்றி ஒரு பதிவு இடுங்களேன்.


இப்படி ஒரு நண்பர் கேட்டிருந்தார். கேளுங்கள்-கொடுக்கப்படும், தட்டுங்கள்-திறக்கப்படும் என்பது நமது கொள்கையல்லவா? அதன்படி நான் செ`ல்படுகிறேன். 


What causes the characteristic smell of soil?

by Distinguished Research Professor R. Meganathan

Smell of Soil GraphicSmell of soil is due to the smell of two small molecules produced by small organisms. These small molecules are known as geosmin and 2-methylisoborneol (MIB). These compounds are mostly produced by bacteria belonging to the genus Streptomyces. In this connection it is worth remembering that the majority of antibiotics we use are produced by streptomycetes. A Petri dish with colonies of Streptomyces and the structures of the two compounds are shown in the Figure at right. The smell of these compounds can cause reduced quality of drinking water. Geosmin and MIB also have been found to reduce the quality of fish in freshwater aquacultures as the odours penetrate and accumulate in the fish, thereby lowering the commercial value.
Human’s can smell concentrations as low as 10 parts per trillion of Geosmin and MIB in water. The characteristic odor of soil was first investigated by Berthelot in 1891 (1). In 1965 the structure of the responsible compound geosmin was determined by Gerber (2). It was not until 1981 that the pathways for the biosynthesis of these compounds determined. Prof. Bentley and I determined on the basis of isotopic labeling experiments that geosmin is a degraded sesquiterpene and MIB is a methylated monoterpene (3). According to Prof. David E Cane of Brown University “Although there have been more than 800 papers dealing with the production, detection and remediation of geosmin and other volatile metabolites in water supplies, aquaculture products and wine, there were no further reports on the mechanism of microbial geosmin biosynthesis until five years ago” (4) when the work was repeated (5).
Streptomyces in Petri DishRecently, with availability of the genome sequence of Streptomyces coelicolor Cane and associates have done extensive research on the enzymology and the reaction mechanisms of the geosmin and MIB biosynthetic pathways (4, 6).
As pointed above, the human’s olfactory system can detect extremely low concentrations of these compounds. It is interesting to note that the same compounds contribute to the well being and survival of the Camel.
The wild Bactrian camels (two humped camel; Camelus bactrianus) are reputed to be able to find water up to 50 miles away. In the desert, Streptomyces gives off the signature smell and that scent is carried on a breeze, and it can be picked up by the camel's well-tuned nostrils. In fact, it could be a matter of life or death for the camel. What does the Streptomyces get out of its scent? According to Professor Keith Chater, the smell could be a way of luring animals into carrying its spores. "You could imagine that the camels would disperse the spores as they take a drink, either they would eat or drink the spores, or they would get stuck on them and then get dispersed wherever the camel moves to" (7)

ந்தக் குறிப்பைப் பிரசுரித்த மேகநாதன் என்பவர் என்னுடைய உயர்நிலை வகுப்பாசிரியரின் புதல்வர். எங்கள் விவசாயக் கல்லூரியில் படித்தவர்.  இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

அவர் மேலே சொல்லியதின் கருத்துரை. மனிதனுக்கு மூக்கு மிகவும் ஒரு நுண்ணிய அவயவம். மிக லேசான வாசனையைக்கூட உணறும் சக்தி வாய்ந்தது.

மண்ணில் பல வகையான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவை இல்லாவிட்டால் அந்த மண்ணில் எந்த செடி கொடிகளும் வளராது. இந்த நுண்ணுயிர்களில் "ஏக்டினோமைசீட்ஸ்" (Actinomycetes) என்ற வகை நுண்ணுயிர்கள்தாம் மண்ணின் இந்த வாசனைக்குக் காரணமானவை. மழைத்துளிகள் மண்ணில் முதலில் விழும்போது மண்ணில் இருக்கும் வெப்பத்தினால் அந்த  மழைத்துளிகள் ஆவியாகின்றன. இந்த "ஏக்டினோமைசீட்ஸ்" உண்டாக்கியிருக்கும் சில வேதியல் பொருட்கள் அந்த மழைத்துளிகளின் ஆவியோடு சேர்ந்து தாங்களும் ஆவியாகின்றன.

இந்த ஆவிதான் மழை ஆரம்பிக்கும்போது மண்ணிலிருந்து மண் வாசனை வருவதற்கு காரணம்.

இந்த மண் வாசனையை, நாம் வழக்கில் உபயோகிக்கும் "மண் வாசனை" யுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. இந்த மண் வாசனை என்பது ஒவ்வொருவருக்கும் தான் பிறந்த ஊரின் மேல் இருக்கும் பாசத்தைக் குறிப்பிடுவதாகும். இந்தப் பாசம் மிகவும் வலுவானது. ஒவ்வொருவரும் தான் பிறந்த ஊரிலேயே தன் அந்திமக் காலமும் அமைய வேண்டும் என்று விரும்புவார்கள்.

தவிர எப்படிப்பட்ட குற்றவாளியும் ஒரு குற்றம் செய்த பின் தலைமறைவானாலும் தன் சொந்த ஊருக்கு என்றாவது திரும்பி வருவான் என்ற தத்துவம்தான் காவல் துறை பல குற்றவாளிகளைப் பிடிக்க உதவுகிறது.

ஆகவே இந்த "மண் வாசனை" மிகவும் பலமானது. எல்லோருடைய ரத்தத்திலும் ஊறிப்போனது.

திங்கள், 30 செப்டம்பர், 2013

நட்பு யாருக்குள் தொடரும் ?


மகாபாரதக் கதைகளில் முக்கியமானது துரோணருக்கும் துருபதனுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையும் அதனால் ஏற்பட்ட மோதல்களும். ஆனால் இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய இருக்கிறது.

அக்னி வேச்யர் என்ற குருவிடம் துரோணரும் பாஞ்சால இளவரசன் துருபதனும் கல்வி கற்றார்கள். அப்போது இருவருக்குமிடையில் மிகுந்த நட்பு இருந்தது. துருபதன் அப்போது துரோணரிடம் சொன்னான், "நான் அரசனான பின்பு உனக்கு பாதி ராஜ்யம் வேண்டுமென்றாலும் கொடுப்பேன்" என்றான்.

கால ஓட்டத்தில் இருவரும் வெவ்வேறு நிலைக்கு மாறினார்கள். துருபதன் பாஞ்சால நாட்டின் ராஜாவானான். துரோணருக்கு வாழ சரியான வழி இல்லாமற்போனது. தன் குழந்தைக்குப் பால் வாங்கிக்கொடுக்கக் கூட சக்தியில்லாமல் போனது. அப்போது துருபதன் ஞாபகம் வந்து, அவனிடம் ஒரு பசு மாடு வாங்கி வரலாம் என்று துரோணர் அவன் நாட்டுக்குப் போனார்.

வாயிற்காப்போன் யாரென்று கேட்டதற்கு நான் துருபதனின் நண்பன், அவனைக்காண வந்திருக்கிறேன் என்றார். வாயிற்காப்போன் இதை மன்னனிடம் அப்படியே போய்ச்சொன்னான். திருபதன் துரோணரை சபைக்கு வரச்செய்து அவரை அவமதித்தான். நீ ஒரு பிச்சை எடுத்து பிழைக்கும் ஒரு ஏழைப்பார்ப்பான். நானோ இந்நாட்டு மன்னன். நீ என்னை உன் நண்பன் என்று சொல்லிக்கொள்ள என்ன அருகதை இருக்கிறது. எப்பொழுதோ சிறு வயதில் நீ என் நண்பனாக இருந்திருக்கலாம். ஆனால் கால ஓட்டத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. பழைய உறவுகள் மறைந்து போகின்றன.

தவிர, நட்பு என்பது சரி சமமானவர்களுக்கிடையேதான் ஏற்படும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் நட்பு ஏற்பட முடியாது. வீரனுக்கும் கோழைக்கும் நட்பு இருக்க முடியாது. இதையெல்லாம் யோசிக்காமல் நீ என்னை நண்பனென்று கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது. இவ்வாறு துரோணரை துருபதன் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டான்.

பிற்காலத்தில் துரோணர் அர்ஜுனன் மூலமாக துருபதனை பழிவாங்கியது அனைவரும் அறிவர். இந்தக் கதையின் நீதி இன்றும் நடைமுறையில் பொருந்துகிறது என்பது ஒரு உண்மை. சிறு வயதில் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள் பின்னாளில் அந்தஸ்து வேறுபாட்டினால் அந்த நட்பைத் தொடர முடிவதில்லை. உறவுகளுக்குள்ளும் அதே நிலைதான். வாழ்க்கையில் உயர்ந்த வசதிகள் பெறும் உறவினர்கள் தங்கள் ஏழை உறவினர்களைப் புறக்கணிப்பதைப் பார்க்கிறோம்.

நட்பு, உறவு ஆகியவைகளை விட, திருமணங்களில் இந்த சமநிலை அந்தஸ்து மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. சம்பந்திகள் சம நிலை அந்தஸ்து இல்லாவிட்டால் அந்த திருமணங்கள் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. காதல் திருமணங்கள் தோல்வியுறுவதற்கு முக்கிய காரணம் இந்த அந்தஸ்து வேறுபாடுதான்.

இந்தக் காலத்து தெய்வீகக் காதலர்களும் அவர்களைப் போற்றுபவர்களும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும்.

புதன், 25 செப்டம்பர், 2013

ம்யூச்சுவல் பண்ட் என்றால் என்ன?


இது ஒரு உயர்ந்த நோக்கம் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட ஒரு நிதி திட்டம். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் இது இன்று ஒரு நாற்றம் பிடித்துப்போன அழுகிய திட்டம்.

முதல் முதல் ஆரம்பிக்கப்பட்ட ம்யூச்சுவல் பண்ட் திட்டம் யூடிஐ என்று அழைக்கப்பட்டது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் மனிதர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தது. (இன்று அது கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்குப் போய்விட்டது வேறு விஷயம்.) மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை நல்ல வருமானம் தரக்கூடிய கம்பெனிகளில் ஷேர்களாக முதலீடு செய்தார்கள். வந்த வருமானத்தில் நிர்வாக சொலவுகள் போக மீதியை முதலீடு செய்த பொது மக்களுக்கு பிரித்துக் கொடுத்தார்கள்.

நிர்வாகச் செலவுகள் மொத்த முதலீட்டில் 1 அல்லது 2 சதவிகித த்திற்கு மேல் போகக்கூடாது என்ற வரைமுறை இருந்தது. வெகு காலத்திற்கு இது ஒன்றுதான் ம்யூச்சுவல் பண்ட் வகையில் இருந்தது. பிறகு அரசாங்கத்தை நடத்தும் மக்கள் பிரதிநிதிகள் மனச்சாட்சி என்ற வேண்டாத ஒன்றை தூக்கிப்போட்டு விட்டார்கள்.

"மீதே மாதி, மாதே மாதி" தெலுங்கில் சொல்லப்படும் ஒரு சொல்வடை. அதாவது நமக்குள் பேதமில்லை என்று காட்டுவதற்காக சொல்லப்படுவது. கூர்ந்து கவனித்தால்தான் அதன் பொருள் சரியாக விளங்கும். "என்னுடையது என்னுடையதே, உன்னுடையதும் என்னுடையதே".

இரண்டு பேர் சேர்ந்தாங்களாம். அதில் ஒருவன் புத்திசாலி. அவன் அடுத்தவனைப் பார்த்து சொல்கிறான். இப்போது நாம் இருவரும் சும்மாதானே இருக்கிறோம். நீ வீட்டுக்குப்போய் கொஞ்சம் அவல் கொண்டு வா, நான் வீட்டிற்குப்போய் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலக்குவோம். இருவரும் அதை ஊதி ஊதி தின்போம் என்றானாம். இவன் கொண்டு வருவதோ வெறும் காசுக்காகாத உமி. ஏதோ இவனும் தன் பங்குக்கு ஒன்றை கொண்டு வருகிறானாம். கதை எப்படி பார்த்தீர்களா?

இதை நான் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தியிருக்கிறேன். நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலக்குவோம். நீ ஊதி ஊதிக் கொடு, நான் சாப்பிடுகிறேன். மேம்போக்காகப் பார்த்தால் ஆளுக்கு ஒரு பொருள் கொண்டு வருகிறார்கள், ஆளுக்கு ஒரு வேலை செய்கிறார்கள். ஆனால் ஆதாயம் யாருக்கு என்று பார்த்தீர்களா?

மனச்சாட்சியைக் கடாசி விட்ட அரசாங்க அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களை எப்படி எப்படி மொட்டை அடிக்கலாம் என்று பார்த்தார்கள். அப்போதுதான் இந்த ம்யூச்சுவல் பண்ட் திட்டம் தோன்றியது. மக்கள் தங்கள் சேமிப்பை அப்போது பேங்குகளில் பிக்சட் டெபாசிட்டாக வைத்திருந்தார்கள். வரும் வட்டியில் திருப்தி அடைந்தார்கள்.

அவர்களுக்கு ஆசை காட்டினார்கள். ம்யூச்சுவல் பண்ட்டில் பணம் போட்டால் அது குட்டிக்கு மேல் குட்டி போடும். பேங்க் டெபாசிட் வட்டியை விட இரண்டு மூன்று மடங்கு வருமானம் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் நடந்தது என்ன? முதலுக்கே மோசம் வந்து விட்டது. ம்யூச்சுவல் பண்ட்டில் பணம் போட்டவர்கள் எல்லாம் தலையில் துண்டைப்போட்டுக் கொண்டார்கள்.

ஏன் இவ்வாறு நேர்ந்தது? நான் பொருளாதார நிபுணன் அல்ல என்று முதலிலேயே சொல்லி இருக்கிறேன். ஆனால் பொது அறிவு இருக்கிறது. இத்தகைய ம்யூச்சுவல் பண்ட்களில் நிர்வாகச்செலவு 2 சதத்திற்கு மேல் போகக் கூடாது என்ற ரூலை முதலில் தூக்கி எறிந்தார்கள். பொது மக்கள் முதலீடு செய்யும் பணத்தை நல்ல கம்பெனிகளில் ஷேர் வாங்க வேண்டுமல்லவா? அதற்காக பெரிய பொருளாதார நிபுணர்களை லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வேலைக் கமர்த்தினார்கள். (எல்லோரும் ஆளும் வர்க்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் மாமன் மச்சான் உறவுகள்)

இவர்களும் மனச்சாட்சியை துடைத்து விட்டு வந்தவர்கள்தான். புதிதாக ஆரம்பிக்கும் கம்பெனிகள், ஆரம்பித்து திவாலாகும் நிலையில் இருக்கும் கம்பெனிகள் இவைகளைத் தேடிப்பிடித்து முதலீடு செய்தார்கள். அந்தக் கம்பெனிகளும் மிகுந்த நன்றியைக் காட்டினார்கள். அப்புறம் என்ன, ம்யூச்சுவல் பண்ட் வருமானமா ஈட்டும்? வருடா வருடம் நஷ்டம்தான். மக்களுக்கு அவர்கள் போட்ட பணத்தில் பாதி கூட கொடுக்க முடியவில்லை. ம்யூச்சுவல் பண்ட்டை திவால் பண்ணினார்கள்.

ஈமு கோழி, தேக்கு மரம் போன்ற திட்டங்களுக்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை. என்ன அவைகள் தனி நபர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. ம்யூச்சுவல் பண்ட்கள் பெரிய அரசாங்க நிறுவனங்களினால் ஆரம்பிக்கப்பட்டவை. தனி நபர்களை சட்டத்தினால் கைது பண்ணி விட்டார்கள். அரசாங்க நிறுவனங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இருவரும் செய்தது மக்களை ஏமாற்றியதுதான்.

இதில் எனக்குப்புரியாத ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இன்றும் புதிது புதிதாக ம்யூச்சுவல் பண்ட்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. மக்களும் பணத்தைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மொட்டை அடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

நானும் ஒரு ம்யூச்சுவல் பண்ட் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். பதிவர்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். 

திங்கள், 23 செப்டம்பர், 2013

மைதா மாவும் மனிதர்களும்.


இந்தப்புரோட்டாவைப் பாருங்கள். உடனே சாப்பிடவேண்டும் என்று தோன்றவில்லையா? இதைப்போய் சிலர் வெறுக்கிறார்களே என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

மைதா தயாரிக்கப்படும் விதம் பற்றி விக்கிபீடியா சொல்வது.

Maida is a finely milled and refined and bleached (using chemical bleach) wheat flour, closely resembling cake flour, and used extensively in making Indian fast food, Indian bakery products such as pastries and bread,[1] varieties of sweets and sometimes in making traditional Indian breads such as paratha and naan.[2] It is made from the endosperm (the starchy white part) of the grain, while the fibrous bran is removed in the mill.
Originally yellowish, maida is popular in a white color, bleached with benzoyl peroxide. The use of benzoyl peroxide in food is banned in China[3] and in theEuropean Union[3] (including the UK[4]).
Maida contains alloxan[citation needed], the source of which may be direct use as softener or the by-product of the bleaching agent chlorine dioxide. Maida is often softened using alloxan[citation needed] which is known to destroy beta cells in the pancreas of rodents and other species, causing diabetes mellitus. The agent, chlorine dioxide, used to bleach flour is reported to produce diabetes-causing contaminant alloxan when reacting with the proteins contained in flour. Studies show that alloxan, the chemical that makes white flour look "clean" and "beautiful," destroys the beta cells of the pancreas[citation needed] in rodents. Some studies have shown that alloxan is not toxic to the human beta-cell, even in very high doses, probably because of differing glucose uptake mechanisms in humans and rodents.[5][6]

ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

ஒரு ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் சங்கீத வித்வான். இன்னொருவர் தத்துவ ஞானி. மூன்றாமவர் வைத்தியர்.

இந்த மூவரும் ஒரு சமயம் க்ஷேத்தராடனம் சென்றார்கள். ஒரு ஊரில் சென்று ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அந்தக் காலத்தில் ஓட்டல்கள் இல்லை. அவரவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளவேண்டும். இதற்காக அவர்கள் சத்திரத்து மணியகாரனிடம் சமையல் சாமான்களை வாங்கி சமைக்க ஆரம்பித்தார்கள்.

பக்கத்திலேயே அரிசி கிடைத்தது. சங்கீத வித்வானை சாப்பாடு வடிக்கச் சொல்லி விட்டு மற்ற இருவரும் காய்கறிகளும் நெய்யும் வாங்கச் சென்றார்கள். தத்துவ ஞானி நெய் வாங்கச் சென்றார். மருத்துவர் காய்கறிகள் வாங்கச் சென்றார்.

தத்துவ ஞானி நெய் வாங்கினார் கடைக்காரன் அந்த நெய்யை ஒரு தொன்னையில் ஊற்றிக் கொடுத்தான். வாங்கிக்கொண்டு வரும் வழியில் தத்துவ ஞானி சிந்தித்தார். இப்போது நம் கையில் இரண்டு வஸ்துக்கள் இருக்கின்றன. எது எதற்கு ஆதாரம்? இதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று சிந்தித்தார்.

இப்போது தொன்னையில் நெய் இருக்கிறது. ஆகவே தொன்னை நெய்க்கு ஆதாரம். ஏன் நெய் தொன்னைக்கு ஆதாரமாய் இருக்கக் கூடாது? கண்டு பிடித்து விடுவோம் என்று தொன்னையை தலைகீழாகப் பிடித்தார். நெய் முழுவதும் தரையில் சிந்தி விட்டது. ஆஹா, தொன்னைதான் நெய்க்கு ஆதாரம். இந்த தத்துவத்தைக் கண்டு பிடித்த சந்தோஷத்துடன் சத்திரத்திற்குத் திரும்பினார்.

காய்கறிகள் வாங்கப் போன மருத்துவர், காய்களைப் பார்த்தார். கத்தரிக்காய் -
பித்தம், வாழைக்காய் - வாயு, வெங்காயம் - சூடு. கருணைக்கிழங்கு - மந்தம், இப்படி ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு குறை சொல்லிக்கொண்டு ஒரு காயையும் வாங்காமல் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தார்.

சாதம் வடிப்பதற்காக விட்டுப் போன பாகவதரோ, அடுப்பு பற்ற வைத்து பானையை வைத்து அதில் அரிசியைப் போட்டார். தேவையான தண்ணீரை ஊற்றி அடுப்பை நன்றாக எரிய விட்டார். உலை சூடாகி தளதளவென்று கொதுக்க ஆரம்பித்தது. அந்த சத்தம் நல்ல தாள சத்தமாய் இருந்தது. அந்த தாளத்திற்கேற்ப பாகவதர் பாட ஆரம்பித்தார். கச்சேரி நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. அப்போது சாதம் நன்கு வெந்து விட்டபடியால் கொதி அடங்கி விட்டது. தாளச் சத்தம் நின்று போய்விட்டபடியால் பாகவதரால் தொடர்ந்து பாட முடியவில்லை.

அவருக்கு கோபம் வந்து விட்டது. சோற்றுப் பானையை ஒரு உதை விட்டார். பானை கீழே விழுந்து உடைந்து போய் சோறு எல்லாம் வீணாகிப்போய் விட்டது. பிறகு என்ன செய்வது? மூவரும் அன்று பட்டினி கிடந்தனர்.

இந்தக் கதையை எதற்காகச் சொன்னேன் என்றால், இப்படி ஒவ்வொரு பொருளிலும் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருந்தால் அப்புறம் ஒன்றையும் சாப்பிட முடியாது என்பதை வலியுறுத்தத்தான்.

மைதா மாவில் செய்யப் படும் புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இப்போது சொல்லுகிறார்கள். புரோட்டா, இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்பட்ட பதார்த்தம் அல்ல. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக புழக்கத்தில் இருந்து வரும் ஒரு உணவுப் பண்டம். நமக்கு முந்தி இரண்டு தலைமுறையினர் இந்த புரோட்டாவை சாப்பிட்டு ஜீரணம் பண்ணி வாழ்ந்து செத்துப் போனார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போதும் டாக்டர்கள் இருந்தார்கள்.

சரி, புரோட்டாவை விட்டு விடுவோம். புரோட்டா தவிர மைதா மாவில் வேறு என்னென்ன தின்பண்டங்கள் செய்கிறார்கள் என்று பார்ப்போமா. அனைத்து பிஸ்கோத்துகள், கேக்குகள், முதலான அனைத்து பேக்கரி ஐட்டங்களுக்கும் மூலப் பொருள் மைதாவே. மைதா மாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கணக்கிலடங்கா. அனைத்து ஓட்டல்களிலும் தயாரிக்கப்படும் பூரி, சப்பாத்திகளில் பாதிக்கு மேல் மைதா கலக்கப்படுகிறது. "நான்", "ருமானி" ரொட்டி இவைகளுக்கு மூலப்பொருள் மைதா மட்டுமே.

மைதா மாவிற்கு எதிராக சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, வளர்ந்த நாடுகளில் இதை புறக்கணித்து விட்டார்களாம். அதனால் நாமும் இதை புறக்கணிக்க வேண்டுமாம். வளர்ந்த நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு முறைகளை நாமும் கடைப் பிடிக்கவேண்டுமென்றால் இந்தியாவில் சாப்பிடுவதற்கு லாயக்கான உணவு வகைகள் எதுவுமே மிஞ்சாது.

மைதா மாவு கோதுமை மாவை வெளுப்பாக்கி செய்யப்படும் ஒரு மாவு. இந்த வெளுப்பாக்குதலுக்கு "பென்சாயில் பெர்ஆக்சைடு" என்னும் போருளை உபயோகிக்கிறார்கள். அதானால் அந்த ரசாயனம் விஷம் என்று சொல்கிறார்கள். ரிபைஃன்டு ஆயில், சர்க்கரை, இரண்டும் இவ்வாறு ரசாயனங்கள் மூலம்தான் வெளுப்பாக்கப்படுகின்றன. இந்த இரண்டும்தான் சமையலறையின் உயிர்நாடி. இவைகளை என்ன செய்யப்போகிறோம்?

நம் கசாப்புக்கடைகளைப் பார்த்தால் வெள்ளைக்காரன் ஆயுசுக்கும் மட்டனை விட்டு விடுவான். நம் ஓட்டல் கிச்சனைப் பார்த்தால் என்றால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அவன் ஊருக்கே ஓடி விடுவான். கல்யாண வீட்டில் உணவு தயாரிப்பதைப் பார்த்தால் நமக்கே வாந்தி வந்து விடும்.

கைக்குத்தலரிசிதான் உடலுக்கு நல்லது. எத்தனை பேர் இதைச் சாப்பிடுகிறோம்? டபிள் பாலிஷ் செய்த அரிசிதான் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அந்த அரிசி சாப்பாடுதான் மல்லிகைப்பூ மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கிறது. அதைத்தானே சாப்பினுகிறோம்.

இத்தனை சீர்கேடுகள் இருந்தும் இந்தியன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்கு இந்த உணவு கிடைப்பதே பெரும் அதிர்ஷ்டமாக இருக்கிறது. தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற உணவைத்தான் சாப்பிடுவேன் என்று இருந்தால் இந்திய ஜனத்தொகை ஒரே வருடத்தில் சுதந்திரம் வாங்கியபோது இருந்த அளவிற்கு வந்து விடும்.

சரி ஐயா, அப்படி மைதாவில் என்ன விஷத்தை கலக்கிறார்கள் என்று பார்த்தால், மாவை வெள்ளையாக்குவதற்கு பென்சாயில் பெர்ஆக்சைடு என்ற பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது செற்கையாகத் தயார் செய்யப்பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அங்ககப் பொருளே. எல்லா அங்ககப் பொருட்களும் குறுகிய காலத்திலேயே வேதியல் மாற்றம் அடைந்து மறைந்து விடும். மைதா மாவு கடைக்கு விற்பனைக்கு வரும்போது இந்த வேதியல் பொருளின் அளவு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்குத்தான் இருக்கும். இந்த விஷயத்தை அரசாங்கம் கட்டாயம் கவனித்துக்கொண்டிருக்கும்.

ஏன் இப்போது இந்த மைதா மாவு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது என்றால், கேரளாவில்தான் முதலில் இந்தப் பிரச்சினை துவங்கியிருக்கிறது. கேரளாவைப் பொருத்த வரையில் தினம் ஒரு போராட்டம் நடத்தாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. மைதா மாவை ஒழிப்போம் என்று காலையில் ஊர்வலம் போய்விட்டு மத்தியானம் டீக்கடைக்குப் போய் ரெண்டு புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்குப் போவார்கள். ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்கள் அவர்கள்.

இந்த மாதிரி சமாச்சாரங்கள் இப்போது ஒரு பேஃஷனாகப் போய்விட்டது. மேனகா காந்தி என்று ஒரு அம்மாள் நாய்களுக்காக கோர்ட்டுக்குப் போய் தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பு வாங்கியிருக்கிறாள். நாய்க்கடி பட்டு ஆஸ்பத்திரிக்குப் போவது சாதாரண ஜனங்கள்தான்.

அந்தக் காலத்தில் பால்தான் சரிவிகித உணவு, எல்லோரும் பால் குடியுங்கள் என்று எல்லா டாக்டர்களும் பரிந்துரைத்தார்கள். இப்போது பால் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்களாம். நான் இன்றும் படுக்கப்போகும்போது ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டுத்தான் படுக்கிறேன்.

ஆகவே உணவுக் கலப்படத்தைப் பற்றிய சிந்தனையாளர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தயவு செய்து இந்தக் கருமாந்திரம் பிடித்த ஊரில் குடியிருக்காதீர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குப் போய்விடுங்கள். நாங்கள் நிம்மதியாக புரோட்டா, சால்னா சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து கொள்கிறோம். புரோட்டா இந்தியன் உள்ளளவும் இருக்கும். புரோட்டா வாழ்க.

வியாழன், 19 செப்டம்பர், 2013

ரூபாயின் மதிப்பு ஏன் குறைகிறது?


நான் பொருளாதார நிபுணன் இல்லை. இருந்தாலும் ஓரளவிற்கு பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலத்தில் மிகவும் குறைந்துள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஏன், எதனால் என்பது பலருக்குத் தெரியாது.

ஒரு குடும்பம் செழிப்பாக இருக்கிறது என்று எதை வைத்து சொல்கிறோம்? அந்தக் குடும்பத்தில் எல்லோரும் உழைக்கிறார்கள். வருமானம் ஈட்டுகிறார்கள். சிக்கனமாகச் செலவு செய்து மிச்சம் பிடிக்கிறார்கள். பகட்டுக்காக எதுவும் செய்வதில்லை. மீதியாகும் பணத்தை நல்ல முதலீடுகளில் போடுகிறார்கள். கடன் எதுவுமில்லை.

இன்னொரு குடும்பம். பரம்பரைப் பணக்காரர்கள். ஆனால் இப்போது அவர்கள் சொத்துகள் பலவாறாகச் சிதறிக்கிடக்கின்றன. அவைகளிலிருந்து வருமானம் மிகக் குறைவாகவே வருகிறது. குடும்பத்தில் யாரும் வேலைக்குப் போவதில்லை. இன்னொருவரிடம் வேலைக்குப் போய் கை நீட்டி சம்பளம் வாங்குவது கேவலம் என்ற எண்ணம் கொண்டவர்கள். பரம்பரை பகட்டை விடமுடியவில்லை. கடன் வாங்கி செலவு செய்கிறார்கள்.

இதில் எந்தக் குடும்பம் உயர்ந்த குடும்பம்? நான் சொல்லவேண்டியதில்லை.

நாடுகளும் இப்படித்தான். நாட்டில் இருக்கும் எல்லோரும் உழைக்கவேண்டும். உற்பத்தி பெருகவேண்டும். அப்படி பெருகிய உற்பத்தியை வெளிநாடுகளில் சந்தைப் படுத்த வேண்டும். அந்நிய செலாவணி சேரவேண்டும். உள் நாட்டில் கட்டமைப்புகள் வலுவாக இருக்கவேண்டும். தனி மனிதன் மற்றும் பெரிய ஸ்தாபனங்கள் தங்களுடைய பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும். செல்வம் வீண் போகக் கூடாது. அதை எப்பொழுதும் பயனுள்ள வழிகளிலேயே பயன்படுத்த வேண்டும்.

கடன் வாங்கு முன் அதை திருப்பிக் கட்டமுடியுமா என்று யோசித்து கடன் வாங்கவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் உபயோகிக்கும் பொருளின் மதிப்பை உணர்ந்து உபயோகிக்கவேண்டும்.

இது எப்படி சாத்தியமாகும்? அந்தந்த நாட்டின் அரசுக் கொள்கைகளே இந்த நடைமுறையை சாத்தியமாக்கும். நம் நாட்டின் அரசாங்க கொள்கைகள் எதை சாதிக்கின்றன? இலவசங்கள் மூலம் சோம்பேறிகளை வளர்க்கிறது. லஞ்சத்தின் மூலம் செல்வம் வீணாகப் போக அனுமதிக்கிறது. கடன் வாங்கி ஆடம்பரம் செய்கிறோம். நாடு முன்னேறுவதற்கான எந்த திட்டத்தையும் ஒழுங்காக நிர்வகிப்பதில்லை.

நாடு சறுக்கிக்கொண்டு இருக்கிறது என்று உலக நாடுகளுக்கெல்லாம் தெரிகிறது. அப்புறம் நம் நாட்டிற்கு உலக சந்தையில் என்ன மரியாதை இருக்கும்? ரூபாயின் மதிப்பு குறையாமல் என்ன செய்யும்?

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இரு பிரயாணிகள்.


ஒரு ஆங்கிலக் கதையைத் தழுவியது.

ஒரு நாள் நன்கு படித்தவன் ஒருவன் ரயிலில் பிரயாணம் செய்தான். அவன் கூடவே ஒரு விவசாயியும் பிரயாணம் செய்தான். விவசாயியைப் பார்த்தாலே படிக்காத, உலக அனுபவம் இல்லாதவன் என்று பார்ப்பவர்களுக்குத் தோற்றமளித்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் படித்தவன் விவசாயியைப் பார்த்து நேரம் போகவில்லையே, ஏதாவது விளையாட்டு விளையாடலாமே என்றான். விவசாயியும் சரி என்று ஒப்புக்கொண்டு, என்ன விளையாட்டு விளையாடலாம் என்று கேட்டான்.

அதற்கு படித்தவன், நான் ஒரு கேள்வி கேட்பேன், அதற்கு நீ சரியான விடை சொன்னால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுப்பேன், சரியான விடை சொல்லாவிட்டால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான். அதே போல் நீ கேட்கும் கேளவிக்கு நான் சரியான பதிலை சொன்னால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும். பதில் சொல்ல முடியாவிட்டால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுக்கிறேன், என்றான்.

விவசாயியும் கொஞ்சம் யோசித்துவிட்டு, நல்ல விளையாட்டாகத்தான் தெரிகிறது. ஆனால் நீங்கள் நன்கு படித்தவர், நல்ல உலக அனுபவம் பெற்றவர், ஆகையால் உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கும். நானோ ஒரு ஏழை விவசாயி, உலக அனுபவம் பெறாதவன். ஆகையால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன். நீங்கள் நான் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் நூறு ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான்.

படித்தவன், இந்த முட்டாள் அப்படி என்ன கேள்வி கேட்டுவிடப்போகிறான் என்று எண்ணிக்கொண்டு விளையாட்டிற்கு ஒப்புக்கொண்டான். படித்தவன் படிக்காதவனைப் பார்த்து நீயே முதலில் கேள்வி கேள் என்றான்.

படிக்காதவன் "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?" என்று தன் கேள்வியைக்கேட்டான்.

படித்தவன் பல நிமிடங்கள் யோசித்தும் அவனால் பதில் கண்டு பிடிக்க முடியவில்லை. நூறு ரூபாயை எடுத்து படிக்காதவனிடம் கொடுத்து விட்டு, அவன் தன்னுடைய கேள்வியைக் கேட்டான்.  "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?"

படிக்காதவன் ஐம்பது ரூபாயை எடுத்து படித்தவனிடம் கொடுத்து விட்டு எனக்கும் விடை தெரியவில்லை என்று சொன்னான்.

படித்தவர்கள் ஏன் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வருவதில்லை என்று புரிகிறதல்லவா.

வியாழன், 12 செப்டம்பர், 2013

கலி முற்றுகிறது.

Delhi records 1,121 rape cases in eight months, (till August, 2013)highest in 13 years
(Read more at: http://ibnlive.in.com/news/delhi-records-1121-rape-cases-in-8-months-highest-in-13-years/421286-3-244.html?utm_source=ref_article)

கடந்த 2012ம் வருடம் நடந்த கற்பழிப்பு நிகழ்வில் இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது மக்களுக்கு நினைவிருக்கும். டில்லியில் மிகவும் உக்கிரமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சமூகத்தில் பெரும் புரட்சி நடக்கப்போகிறது என்று என்னைப்போன்ற கிழடுகள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இன்று அந்த டிசம்பர் கொடுமைக்கு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்போகிறது. அந்த தினத்தில் வெளியான செய்தியைப் பாருங்கள்.

இன்றைய இணையத்தில் வெளியான செய்தியின் தலைப்பைத்தான் இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன். அத்தகைய புரட்சிகரமான ஆர்ப்பாட்டங்கள் நடந்த டில்லியில்தான் இத்தகைய தொடர் கொடுமைகள் நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன.

கலி முற்றுகிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

புதன், 11 செப்டம்பர், 2013

சினிமா தயாரிப்பு மோகம்.


சினிமா உலகத்தில் பணம் கொள்ளை கொள்ளையா கொட்டி வச்சிருக்குது. வேண்டியதெல்லாம் நல்ல சாக்குகள்தான். உள்ளே போனால் சாக்கு நிறைய பணத்தைக் கட்டி கொண்டுவரலாம்.

இந்த எண்ணம் பலருடைய மனங்களில் வேரூன்றி இருக்கிறது. அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் ஒரு நல்ல டெய்லர். மிக நன்றாகத் தைப்பார். பணம் கொழித்தது. யாருடைய தூண்டுதலினாலோ சென்னைக்கு சினிமா எடுக்கப்போனார். கைக் காசு முழுவதும் போய் கடனாளியாகத் திரும்பி வந்தார். அந்த சோகத்திலேயே உயிரையும் விட்டார்.

பல சினிமா நடிகர்கள் தாங்கள் நடித்து சம்பாதித்த பணத்தை சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து ஓட்டாண்டியாய் மாறி, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் உயிர் விட்ட கதைகள் மக்களுக்குத் தெரியும்.

இதையெல்லாம் பார்த்த பிறகும் நாகர்கோவிலில் இருந்து நாகராஜன் என்று ஒருவர் கோழி கூவுது என்ற படத்தை கடன் வாங்கி எடுத்து விட்டு படம் சரியான வசூல் கொடுக்காததால் தற்கொலை செய்யலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறாராம்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் சினிமா எடுக்கப்போவதற்கு முன்பு செய்யாத யோசனை இப்பொது எதற்கு என்பதுதான்.

சனி, 7 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு அனுபவங்கள்

கடந்த செப்டம்பர் 1 ந்தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு, மகாநாடு, திருவிழா நடந்தது அனைத்து பதிவர்களும் அறிந்ததே. இந்த நிகழ்வினால் என்ன பயன் விளைந்தது என்று பலருக்கு ஐயப்பாடு இருக்கிறது.

பதிவர் சந்திப்பினால் பின் வரும் பயன்கள் ஏற்படும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது வழக்கம்.

1. புதிய பதிவுலக நண்பர்கள் கிடைப்பார்கள்.

2. பழைய நண்பர்களைச் சந்தித்து அளவளாவலாம்.

3. புது பதிவுலக உத்திகளை அறிமுகப்படுத்துவார்கள்.

4. நல்ல தியான யோக அனுபவம் கிட்டும்.

5. மதியம் ஒரு விருந்து கிடைக்கும்.

6. ஒரு நான்கைந்து பதிவுகளுக்கான மேட்டர் தேத்தலாம்.

இந்த நோக்கங்கள் எல்லாம் நிறைவேறின. ஆனால் எல்லா பதிவர்களுக்கும் எல்லா நோக்கங்களும் நிறைவேறியிருக்காது.

என்னைப் பொருத்த வரை சில புதிய பதிவர்களை சந்திக்க முடிந்தது. பல பழைய பதிவர்களை சந்திக்க முடிந்தது.

சந்தித்த புதிய பதிவர்கள்:

ரஞ்சனி நாராயணன்.

வெளங்காதவன்

உமாமகேஸ்வரி

மாதங்கி மாலி.

சுப்புத் தாத்தா

கேபிள் சங்கர்

சேட்டைக்காரன்

முருகானந்தம் (கைலாய யாத்திரை)

ஆரூர் மூனா செந்தில்

சந்தித்த பழைய பதிவர்கள்.

புலவர் ராமானுஜம்

வெங்கட் நாகராஜ்

ஜாக்கி சேகர்

சதீஷ் சங்கவி (எங்க ஊரு)

திண்டுக்கல் தனபாலன்

ஜோதிஜி

தருமி

இந்த லிஸ்ட்டில் பல பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவேண்டும்.

இந்த அறிமுகங்களில் எனக்கு ஒரு பெரிய சங்கடம் உண்டு. மனித மூளையில் இரு பகுதிகள் உண்டு என்பதும் அதில் ஒரு பகுதியில்தான் இந்த மனித முகங்களையும் பெயர்களையும் சேமித்து வைக்கும் ஆற்றல் உண்டு என்றும் படித்திருக்கிறேன். என்னுடைய மூளையில் இந்தப் பகுதி ரொம்ப வீக். ஒருவரைப் பார்த்து அரை மணிநேரம் பேசிவிட்டு வீட்டுக்குப் போனதும் அவர் பெயர் என்னவென்று ஒரு மணி நேரம் யோசித்தாலும் நினைவிற்கு வராது.

இது புதிதாகப் பார்த்தவரைப் பற்றிய அனுபவம். வரவர நெடுநாள் பழகியவரின் பெயர் கூட உடனே நினைவிற்கு வருவதில்லை. இது வயதானதின் கோளாறு. இதில் கூடுதல் வம்பு என்னவென்றால், பதிவர்கள் ஒவ்வொருவரும் (சிலரைத்தவிர) எல்லோரும் ஒவ்வொரு புனை பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்களின் தளங்களின் பெயர்கள். பிறகு அவர்களின் நிஜப் பெயர்கள். அவர்களின் ஊர், தொழில். அவர்களின் முகங்கள். இத்தனை சமாசாரங்களையும் சந்தித்து ஓரிரு நிமிடங்களில் மனதில் பதிய வைத்து, பின்பு நினைவு கூர்வது என்ன பெரிய பிரம்ம வித்தை.

சைனாக்கார்ர்கள், ஜப்பான்காரர்கள் இவர்களைப் பார்க்கும்போது எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் எனக்குத் தெரிகிறார்கள். உங்களில் பலரும் இந்த அனுபவம் பெற்றிருப்பீர்கள். அந்த ஊரில் ஒருவருக்கொருவர் எப்படி அடையாளம் கண்டு பிடிப்பார்கள் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமே. இப்போது என்ன ஆகிவிட்டதென்றால், இன்றைய இளைஞர்களும் அதேபோல் ஒன்றுபோல் தெரிகிறார்கள். ஒரேமாதிரி தாடி, ஒரே மாதிரி ஜீன்ஸ் பேன்ட்டும் டி ஷர்ட்டும்.

இவர்களை வித்தியாசப் படுத்தி அடையாளம் கண்டு கொள்ள என்னால் முடிவதில்லை. அதிலும் ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கானவர்களைப் பார்க்கும்போது எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. இதுவும் வயசானதினால்தான் என்று நினைக்கிறேன்.

ஆகவே இப்படித்தான் என்னுடைய பதிவர்கள் சந்திப்பு நடந்தது.

பதிவுலகத்தில் புது உத்திகளை ஏதாவது அறிமுகப் படுத்துவார்களா என்று பார்த்தேன். யாரும் அதில் ஆர்வம் காட்டின மாதிரி தெரியவில்லை.

தியானயோக வகுப்புகள் எல்லாம் முன்தினம் இரவே முடிந்து விட்டதாகக் கூறி விட்டார்கள். எனக்கு மிகுந்த ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அடுத்த பதிவர் சந்திப்புக்கு இரண்டு நாள் முன்னதாகவே போய்விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனக்கு மிகவும் ரசிக்க முடிந்தது மதிய விருந்துதான். அப்படியொரு பிரியாணியை நான் இதுவரை சாப்பிட்டதில்லை. இருப்பதிலேயே உயர்ந்த ரக பாசுமதி அரிசியில் மிகவும் பக்குவமாக செய்யப்பட்டிருந்த பிரியாணி. வயிற்றுக்கு எந்த உபத்திரமும் செய்யவில்லை. விழாக்குழுவினருக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.

அநேகமாக எல்லாப் பதிவர்களும் தலா நான்கு பதிவுகளாவது போட்டோ விட்டார்கள். பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளாதவர்களும் பதிவர் சந்திப்பைப் பற்றி பதிவு போட்டுவிட்டார்கள். இன்னும் போடுவார்கள். ஆகவே பதிவுலகின் நோக்கமே பதிவு போடுவதுதானே. அந்த நோக்கம் மிக இனிதாக நிறைவேறியது என்பது ஒரு போற்றத்தக்க விஷயம்.

அடுத்த பதிவர் சந்திப்புக்காக காத்திருப்போம்.