திங்கள், 28 ஏப்ரல், 2014

பேனாக்களும் நானும்


பேனாக்கள் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. பழங்காலத்தில் தமிழ் நாட்டில் பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள் என்று கேட்டிருக்கிறோம். நான் அப்படி எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பார்த்திருக்கிறேனே தவிர அப்படி எழுதுபவர்களைப் பார்த்ததில்லை. இந்தப் பழக்கம் தமிழ் நாட்டில் மட்டும்தான் இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்குதான் பனை மரங்கள் உண்டு. மற்ற தேசங்களில் எப்படி எழுதினார்க்ள என்பதற்கு ஒரு ஆராய்ச்சிதான் செய்யவேண்டும். அந்த ஆசை எனக்கு இப்போது இல்லை.


நான் ஒரு முறை காரைக்குடிக்குப் போயிருந்தபோது அங்கு செட்டிநாட்டு பழம் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்குப் போயிருந்தேன். பல கலைநயம் பொருந்திய பழங்காலத்து பொருட்கள் அங்கு இருந்தன. அவை செட்டிநாட்டு நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் பொருட்கள். அதில் ஒரு எழுத்தாணியையும் பார்த்தேன். நான் அதற்கு முன் எழுத்தாணியைப் பார்த்தது இல்லை. அது ஒரு பக்கம் கத்தியும் மற்றொரு பக்கம் ஒரு கூரான ஊசியும் கொண்டு ஒரு பேனாக் கத்தியைப் போல் இருந்தது. இது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டதற்கு அவர் இதுதான் எழுத்தாணி என்று சொன்னார்.


உடனே அதன் விலையைக் கேட்டு அதை வாங்கிக்கொண்டேன். நான் ஒரு கம்பனாக மாறிவிட்டதாக ஒரு கற்பனை தோன்றியது. பழங்காலத்து நாகரிகத்தை பேணிக்காக்கும் ஒரு பெருமிதம் மனதில் உண்டானது. இப்போதும் அதை என் வீட்டு ஷோகேசில் வைத்திருக்கிறேன். பல முறை அதை என் சகதர்மிணி தூக்கிப் போடப் பார்த்தும் என் கவனத்தினால் அது காப்பாற்றப்பட்டு இன்று வரை தமிழனின் நாகரிகச் சின்னமாக, நானும் ஒரு தமிழன் என்று பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது.

தொடரும்...

வியாழன், 17 ஏப்ரல், 2014

சுற்றுலா போகலாம் வாங்க


இங்கு கொடுத்திருக்கும் லிங்க் பல மாதங்களுக்கு முன் திரு GMB அவர்கள் எனக்கு அனுப்பினது. இதில் குறிப்பிட்டுள்ள ஊர்களின் பெயரை கர்சரால் சொடுக்கினால் ஒரு லிங்க் தோன்றும். அந்த லிங்க்கை சொடுக்கினால் அந்த ஊர்களுக்கு செலவில்லாமல் போய் வரலாம். இல்லை, நான் அந்த மாதிரி ஓசியில் டூர் செல்ல மாட்டேன் என்று நினைப்பவர்கள் தாங்கள் விரும்பும் தொகையை எனக்கோ அல்லது  திரு GMB அவர்களுக்கோ அனுப்பலாம்.



Spectacular Panoramas and 3D Tours.

Enjoy Panoramic Views
...click on any one place and enjoy.. .... what a wonderful way to tour the world from your computer chair!
UN Plaza Hotel, New York, USA   •   Oahu, Hawaii, USA   •   Las Vegas, Nevada, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •   Golden Gate Bridge, USA   •   Statue of Liberty, New York, USA   •   Manhattan, New York, USA   •   Hollywood, California, USA   •   San Juan and Colorado rivers, USA   •   Goosenecks, Utah, USA   •   Mono Lake, California, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •  Chicago, Illinois, USA   •  Los Angeles, California, USA   •   Kiev, Ukraine   •   Ay-Petri, Ukraine   •  Dubai, UAE   •   Dubai, Islands, UAE   •   Palm Jumeirah, Dubai, UAE   •  Bangkok, Thailand   •   Sankt-Moritz, Switzerland   •   Cape Good Hope, South Africa   •   Cape-Town, South Africa   •   Moscow, MSU, Russia   •  Moscow, Kremlin, Bolotnaya Square , Russia   •   Moscow, Russia   •  Moscow Kremlin, Russia   •   55.748765;37.540841, Russia   •   Moscow City, Russia   •   Kremlin, Moscow, Russia   •   Moscow City, Russia   •  Trinity Lavra of Sait Sergius, Russia   •   Saint-Petersburg, Russia  •   New Jerusalem Monastery, Russia   •   Saint Petersburg, Russia   •  Novodevichy Convent. Moscow, Russia   •   Ramenki,Moscow, Russia   •  MKAD, Moscow, Russia   •   Moscow, Russia   •  Moscow, Russia   •  Krokus Expo Center, Moscow, Russia   •   Moscow Region, Russia   •  Moeraki Boulders, New Zealand   •   Fiordland, New Zealand   •   Nepal, Nepal   •   Maldives, Maldives   •  Kuala-Lumpur, Malaysia   •   Grimsvotn, Iceland   •   Amsterdam, Holland   •   Neuschwanstein Castle, Germany   •  Egyptian Pyramids, Egypt   •   Hong Kong, China   •   The Iguassu Falls, Brazil   •  Twelve Apostles Marine National Park, Australia   •   Sydney, Australia   •   Buenos Aires, Argentina   •   .


திங்கள், 14 ஏப்ரல், 2014

புத்தாண்டில் இன்பமாக வாழ்வோம்.


எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பிறந்தாலே கூடவே புத்தாண்டு சபதங்களும் வந்து விடும். சபதங்களை காப்பாற்றுகிறோமோ இல்லையோ, அவை நம் மனதின் ஆசைகளை வெளிப்படுத்தும் எண்ணங்களாகும். கடந்த கால வாழ்க்கையில் நாம் தவறென்று கருதுபவைகளை மாற்ற விரும்பும் நம் ஆழ்மனதின் வெளிப்பாடே ஆகும்.

நாம் மாறவேண்டும் என்று நினைப்பதே நாம் முன்னேறுவதற்கான முதல் படி. இந்த முயற்சிகளில் நாம் இன்பமாக வாழவேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். நான் என் அனுபவத்தால் உணர்ந்த ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

கடனில்லா வாழ்வே மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடிப்படைத்தேவை. பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே ஆனந்தம். தான் சம்பாதிக்கும் வருமானத்திற்குள் வாழ்வதே புத்திசாலித்தனம்.

எல்லோரும் புத்தாண்டில் கடனற்ற இன்ப வாழ்வு வாழ ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

வியாழன், 10 ஏப்ரல், 2014

இது என்ன மாயவேலை?

நான் திருச்சியில் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை சந்திக்கச் சென்றது உங்களுக்குத் தெரியும். அப்போது அவர் கேமராவில் நாங்கள் இருவரும் சேர்ந்திருப்பதை படம் எடுத்தார். படம் கீழே காண்க.


இந்தப் படத்தில் திடீரென்று ஒரு மூன்றாவது நபர் நுழைந்திருக்கிறாரே, அவர் யார் என்று என்னைக் கேட்டார். படம் பார்க்க.


படம் அவருடைய கேமராவினால் எடுக்கப்பட்டது. என்னால் இது எப்படி நடந்தது என்று சொல்ல முடியவில்லை. யாராவது பாஸ்வேர்டு தெரிந்தவர்கள் இப்படி செய்திருக்கலாம் அல்லது ஏதாவது கம்ப்யூட்டர் வைரஸ் செய்த வேலையாயிருக்கலாம். நண்பர்களே, உங்களில் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

திங்கள், 7 ஏப்ரல், 2014

திருச்சியில் ஒரு இளைஞர்


இந்தப் பதிவு மிகவும் தாமதாகப் பதிவிடுகிறேன். காரணம் சோம்பல் மற்றும் உடல் சோர்வு.

திருச்சி பதிவர் வை.கோபாலகிருஷ்ணனைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். தற்போது இவருடைய சிறுகதைகளுக்கு ஒரு விமர்சனப் போட்டி நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

பல நாட்களாகவே இவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். குறிப்பாக இவர் வீட்டு ஜன்னலைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசைதான் அதிகம். இந்த ஜன்னலைப் பற்றி இவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். போன வாரம் திருச்சி போகவேண்டிய அவசியம் ஒன்று ஏற்பட்டது. அங்கு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பேரன் படிப்பை முடித்து விட்டான்.

இப்போது வாழ்க்கையில் பல புது கலாச்சாரங்கள் தோன்றியிருக்கின்றன. அவைகளில் கல்லூரிகளில் படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடத்துவதும் ஒன்று. ஆனால் இது உண்மையில் பட்டமளிப்பு விழா அல்ல. பட்டமளிப்பு விழா பல்கலைக் கழகம்தான் நடத்த முடியும். ஆனால் அது போன்ற ஒரு மாயை விழாவை இறுதி வைபவமாக கல்லூரிகள் நடத்துகின்றன. அதைப் பார்க்க மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் வருகிறார்கள்.

நானும் என் மனைவியும் இந்த விழாவிற்காக திருச்சி செல்வதென்று முடிவு எடுத்தோம். அப்போது எனக்கு எப்படியாவது "வைகோ" வை (அரசியல்வாதி வைகோ அல்ல) சந்தித்து விடுவது என்று முடிவு செய்தேன். பல விதமான பிரயாணத்திட்டங்கள் தீட்டினதில் விழா அன்று காலை காரில் சென்று விட்டு மறு நாள் திரும்புவது என்று முடிவாயிற்று.


ஆண்டார் தெரு ஆரம்பம்

இந்த திட்டத்தின் பிரகாரம் திருச்சியில் எனக்கு மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஒரு இடைவெளி கிடைத்தது. சரி, இந்த இடைவெளியில் வைகோவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை எனக்கு எப்போது வந்தாலும் சௌகரியமே என்று கூறினார்.


வைகோ வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் மதுரா ஹோட்டல்

காரில் செல்வதற்கு டிரைவர் இல்லை. நானே ஓட்டிக்கொண்டு போக  பயமாக இருந்தது. திருச்சி எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊராக இருந்தாலும் நான் திருச்சியைப் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். புது ரோடுகள், மேம்பாலங்கள் என்று திருச்சி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறது. ஆகவே டவுன் பஸ்சில் போய் வந்து விடுவது என்று முடிவு செய்தேன்.

இங்கு நான் ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டேன். அது கதிரவனின் கருணை. மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கோடை காலங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் அது இருபது வருடங்களுக்கு முன். இப்போது எனக்கு இருபது வயது கூடியிருக்கிறது என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. நான் பார்க்காத திருச்சி வெய்யிலா என்ற மமதையுடன் கிளம்பி விட்டேன்.

நான் செய்த சமீப காலத் தவறு இதுதான். வெயில் தாக்கத்தில் நா வரண்டு போகிறது. நடை தள்ளாடுகிறது. எங்கே மயங்கி விழுந்து விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. பஸ்சில் போய் மெயின் கார்டு கேட்டில் இறங்கி வைகோ வீட்டிற்கு ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்த அனுபவம். வழியில் ஒருவன் கரும்புச் சாறு விற்றுக்கொண்டிருந்தான். ஒரு கிளாஸ் ஜூஸ் வாங்கி பக்கத்தில் ஒரு கடை வாசலில் உட்கார்ந்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது.


வைகோ வசிக்கும் காம்ப்ளெக்சின் முன்புறத்தோற்றம்

பின்பு நடையைக் கட்டினேன். வைகோ வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு வந்தது. இந்த இடங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பரிச்சயமானவைதான். ஆகவே வைகோ வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
நான் அவர் வசிக்கும் காம்ளெக்ஸ் வாசலில் நுழையும்போதே "வாங்கோ வாங்கோ" என்று ஒரு அசரீரி கேட்டது. குரல் வரும் திசை நோக்கி மேலே பார்த்தேன். வைகோ தனது இரண்டாவது தளத்தில் இருந்து என்னைப் பார்த்து விட்டு வரவேற்பு கொடுத்திருக்கிறார்.

லிப்டில் ஏறி இரண்டாவது தளத்திற்குப் போனேன். லிப்டு கதவிற்கே வந்து என்னை வரவேற்று தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். அவரது துணைவியாரும் வீட்டு வாசலிலேயே என்னை வரவற்றார்கள். வீட்டுக்குள் என்னை அவருடைய பெட்ரூம் கம் ஆபீஸ் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏசி வைத்திருக்கிறார். வெய்யிலில் வந்ததற்கு ஏசி சுகமாக இருந்தது.


வைகோ தம்பதியினர்

குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். திருச்சியில் இப்போது கடும் தண்ணீர் பஞ்சம் போலிருக்கிறது. திருச்சி வரும் வழியில் காவிரியைப் பார்த்த போது அதில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆயிரக் கண்க்கான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லுகிறார்கள். அதனால் திருமதி வைகோ எனக்கு மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அம்மா எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நிறுத்தினார்கள்.


இரு "பிரபல" பதிவர்கள்

கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றதற்கு மிகவும் தயங்கி ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். பிறகு பரஸ்பரம் குடும்ப க்ஷேமங்கள் குறித்து விசாரித்தோம். ஒரு ஐந்து நிமிடம் பேசுவதற்குள் ஆறு தடவை சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்க்ள. இருபது வருடத்திற்கு முன்பாக இருந்தால் அவை அனைத்தையும் கபளீகரம் செய்திருப்பேன். இப்போது முடியவில்லை.

நான் அவரைத் தொடர்பு கொண்டபோதே எனக்கு அய்யர் விட்டு டிகிரி காப்பி வேண்டும் என்று சொல்லியிருந்தேன். திருமதி வைகோ நான் கேட்டுக்கொண்டபடி, கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து கொடுத்தார்கள். பழைய கால முறைப்படி டவரா டம்ளரில் காப்பி வந்தது. டம்ளரைப் பார்த்து நான் பயந்தே போனேன். உண்மையிலேயே டம்ளர் ஆதி காலத்துதான். கால் லிட்டர் கொள்ளளவு கொண்டது. நான் திருமதி வைகோ அவர்களிடம் கெஞ்சி அதல் பாதியை எடுத்துக் கொள்ளச் செய்தேன். உண்மையிலேயே டிகிரி காப்பிதான்.


வைகோ வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் மலைக்கோட்டை

வைகோ அவருடைய பதிவுகளில் குறிப்பிட்டபடி அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை துல்லியமாகத் தெரிகிறது. ஸ்வாமி ஊர்வலங்கள் வந்தால் வீட்டை விட்டு நகராமலேயே ஸ்வாமியைத் தரிசித்துக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவருடன் அளவளாவிக்கொண்டு  விடை பெற்றேன். அந்த ஒரு மணி நேரமும் அவர்கள் காட்டிய அன்பையும் விருந்தோம்பலையும் என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது.

நான் அவர்களிடமிருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டு நான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன். இந்த சந்திப்பு நான் மறக்க முடியாத சந்திப்பு. நாங்கள் பிரிந்து இரண்டு மணி நேரத்திலேயே இந்த சந்திப்பைப் பற்றி பதிவு போட்டு விட்டார். லிங்க் இதோ.

http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html

என்னால் அப்படிப்போட முடியவில்லை. அவருடைய சுறுசுறுப்பிற்கும் உழைப்பிற்கும் முன்னால் நான் ஒரு வாழைப்பழச்சோம்பேறி. அதனால்தான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் இது ஒரு தாமதமான பதிவு என்று குறிப்பிட்டேன்.

வைகோ தம்பதியினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஒரு அவசர (அவசிய) பதிவு

                                             
என் பதிவைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

என்னுடைய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் 500 GB  கொண்டது. இதில் C,D,E ஆகிய பிரிவுகள் இருக்கின்றன.

நான் பாட்டுகள், மகாபாரத விடியோக்கள், கதைகள், வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி போன்ற கட்டுரைகள், சமையல் குறிப்புகள், பிரயாணக் கட்டுரைகள் என்று பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். இந்த வயதிற்குப் பின் (80) என்ன முன்னேற்றம் காணப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இளம் வயதில் இந்தக் கட்டுரைகளைப் படித்திருந்தால் நாம் எவ்வளவு முன்னேறியிருப்போம் என்று ஒரு பகல் கனவு காண்பதற்காகத்தான் இவைகளை சேகரிக்கிறேன்.

சமையல் குறிப்புகள் எதற்காக சேமிக்கிறேன் என்றால் இவைகளை என் மனைவி பார்த்து ஒரு நாளாவது அது போல் செய்து கொடுக்க மாட்டார்களா என்ற நப்பாசைதான் காரணம். இரண்டாவது காரணம் இந்தக் குறிப்புகளை யூட்யூப்பில் சொல்லும் சமையல் நிபுணிகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

ஹார்டு டிஸ்கின் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. என்ன செய்யலாம் என்று வயதானபின் மிகவும் செயல் குறைந்து போன என் மூளையை கசக்கி யோசித்ததில் ஒரு வெளியிலிருந்து செயல்படும் ஹார்டு டிஸ்க் வாங்கிக்கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. இதற்குக் காரணம் இன்டர்நெட்டில் பல இடங்களில் வந்த கட்டுரைகளைப் படித்ததின் விளைவு..

என் ஆஸ்தான கம்ப்யூட்டர் டாக்டரும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டார். ஒரு வேகத்தில் நேற்று கம்ப்யூட்டர் கடைக்குப் போய் Seagate 1 TB அளவுள்ள ஒரு எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். ஒரு அனாமத்து கணக்கில் வந்த ஐயாயிரம் ரூபாய் பாக்கெட்டில் துள்ளிக்கொண்டு இருந்ததும் மற்றொரு காரணம். இதன் விலை 5300 ரூபாய் ஆயிற்று.

ஆக மொத்தம் இன்னொரு வெள்ளை யானையை வாங்கியாயிற்று. இரவு முழுவதும் இந்த யானையை எப்படி பராமரிப்பு செய்வது என்ற கவலையில் தூக்கத்தைத் தொலைத்தேன். (முதலிலேயே தூக்கம் வருவதில்லை என்பது வேறு விஷயம்.)

இந்த விஷயத்தில் நம் பதிவுலக நண்பர்கள் உதவுவார்கள் என்கிற என் ஆழ்ந்த நம்பிக்கையின் பேரில் இந்த விஷயத்தை இங்கு பதிவிடுகிறேன். உங்களுக்குத் தெரிந்த யோசனைகளை பின்னூட்டத்தில் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

திங்கள், 31 மார்ச், 2014

நாய் பெற்ற தங்கப் பழம்


தங்கப் பழம் ஒரு விலை மிகுந்த பொருள்தான். ஆனால் ஒரு நாய்க்கு அது கிடைப்பதால் அதற்கு என்ன பயன்? அதுபோல் நான் பலவற்றைச் சேமித்து வந்தேன். பைகளைச் சேர்த்த கதையை சென்ற பதிவுகளில் பார்த்தோம். இப்போது அது போக சேகரித்த மற்றவை என்னவென்று பார்ப்போம்.

சிறு வயதில் மகாத்மா காந்தியின் சுய சரிதையைப் படித்திருக்கிறேன். சத்திய சோதனை என்பது அதன் பெயர். அது போக அவரைப்பற்றிய பல துணுக்கு செய்திகளையும் படித்திருக்கிறேன். அதில் என் மனதில் தைத்த ஒரு செய்தி - அவர் எந்தப் பொருளையும் வீண் பண்ணமாட்டார் என்பதே.

உடுத்தும் வேஷ்டி கிழிந்து விட்டால் அதை கிழித்து துண்டாக உபயோகப்படுத்துவார். அதுவும் கிழிந்தால் அதை இன்னும் சிறிய துண்டுகளாக்கி கைக் குட்டையாகப் பயன்படுத்துவார்.

அதே மாதிரி, எழுதும் காகித விஷயத்திலும் அவர் எந்தவொரு துண்டுக் காகிதத்தையும் வீணாக்க மாட்டார். தபால்கள் வரும் உறைகளையும் கூட கிழித்து அதன் உள் பக்கத்தை எழுதுவதற்கு உபயோகப்படுத்துவார்.

நான் மகாத்மா காந்தியின் சீடன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய கொள்கைகளை கடைப்பிடிப்பவன் அல்ல. இருந்தாலும் இந்த காகிதம், துணி விஷயங்கள் என்னை உடும்புப்பிடி போல் பிடித்துக்கொண்டன.

ஒரு பக்கம் காலியாக இருக்கும் காகிதங்கள், நன்றாக இருக்கும் கவர்கள், பழைய நோட்டுகளில் எழுதாமல் இருக்கும் காகிதங்கள், பழைய டைரியில் காலியாக இருக்கும் காகிதங்கள், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீசுகள், சாமான் வாங்கிய பில்கள், இப்படி எந்தக் காகிதத்தைப் பார்த்தாலும் அவைகளை சேகரித்து, ஒரே அளவாக வெட்டி, அதை நூலால் தைத்து பின்னால் உபயோகப்படும் என்று வைத்துக் கொள்வேன்.

இப்படியே சில கம்பெனிகள் ரெடி மேடாக சிறிய, நடுத்தர சைசில் நோட்டுப் புத்தகங்கள் போட்டு தங்கள் கஸ்டமர்களுக்கு கொடுப்பார்கள். அத்தகைய நோட்டுகள் கிடைத்தால் விடுவதில்லை. முடிந்தால் இரண்டு அல்லது மூன்று வாங்கி விடுவது வழக்கம். இவைகளையும் சேமித்து வைத்துக் கொள்வேன்.

எங்காவது வெளியூர் போனால் அங்கு பிளாட்பாரக் கடைகளில் இந்த மாதிரி சிறிய பாக்கொட் நோட்டுகள், குறிப்பெடுக்கும் நோட்டுகள் விற்பதைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு கால்கள் நகருவதில்லை. இரண்டு மூன்று ஐட்டங்கள் வாங்கினால்தான் மனம் அமைதிப்படும். இவ்வாறு சேமித்த நோட்டுகள் ஏராளம்.

ஆபீஸ் விஷயமாக பல மீட்டிங்குகள் நடக்கும். அந்த மீட்டிங்குகளில் எழுதுவதற்காக நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பார்கள். இவைகளை விடுவதில்லை.(கூடவே ஒரு பால் பாய்ன்ட் பேனாவும் கொடுப்பார்கள் - பேனாக்கள் கதை தனிக்கதை, அடுத்த பதிவில் கூறுகிறேன்)

வெளி நாடுகள் போகும்போது அங்கு ஆபீசில் கிடைக்கும் நோட்டுகளை ஒன்றுக்கு நான்காக லவட்டிக் கொண்டு வருவேன்.

புது வருட ஆரம்பத்தில் கம்பெனிகள் டைரி கொடுப்பது உங்களுக்குத் தெரியும். இப்படி நமக்கு யாராவது டைரி கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கியிருந்த காலம் போய், வருடத்திற்கு குறைந்தது அரை டஜன் டைரிகள் வரும் பொற்காலம் துவங்கியது. டைரிகள் எல்லாம் கோல்டு கில்ட் போட்டவைகள். பொதுவாக டைரிகளை பத்து நாளைக்கு மேல் எழுதுபவர்கள் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

நான் சாதாரண மனிதன். வந்த டைரிகளில் சாதாரணமாக இருக்கும் ஒன்றில் வெகு வேகமாக டைரிக் குறிப்புகள் எழுதுவேன். பத்து நாள் இது நடக்கும். அத்தோடு நின்று விடும். மற்ற டைரிகளை பத்திரமாக அலமாரியில் வைத்துக்கொள்வேன். ஏன் அப்படி டைரிகளை சேகரித்தேன் என்று இன்று யோசித்தால் ஒரு விடையும் கிடைக்க மாட்டேன் என்கிறது. எது கிடைத்தாலும் சேகரித்து வைத்துக் கொள்ளும் பைத்தியக்காரன் போல்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.

இப்படி சேர்த்த டைரிகள், நோட்டுப் புத்தகங்களை நான் ஒழுங்காக எந்த வேலைக்கும் பயன்படுத்திய ஞாபகமே இல்லை. பின்னால் உபயோகப்படும், அதனால் இப்போது வேண்டும். அவ்வளவுதான்.

இப்படிச்சேர்த்த நோட்டுப் புத்தகங்கள் இரண்டு மூன்று பெட்டிகள் ஆகி விட்டன. இப்போது அலமாரி, மற்றும் அட்டாலிகளை (Loft) சுத்தம் செய்யும்போது திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது. இவைகளை இனிமேல் என்ன செய்யப்போகிறோம்? என் சிற்றறிவிற்கு எட்டியவரையில் எந்த உபயோகமும் தெரியவில்லை. அப்புறம் எதற்கு இந்தக் கண்றாவிகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பட்டது.

இதில் என்ன கஷ்டம் வந்தது என்றால் இவைகளை என்ன செய்வது என்பதுதான். சிலவற்றை எதிரில் உள்ள மளிகைக் கடையில் கொண்டு போய் அவர்கள் பில் போட உதவுமென்று கொடுத்தேன். கொஞ்சம் நன்றாக இருப்பவைகளை அக்கம் பக்கம் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கொடுத்தேன். இப்படியாக எப்படியோ கஷ்டப்பட்டு எல்லா நோட்டுப் புத்தகங்களையும் தானம் கொடுத்து முடித்தேன்.

டைரிகள் மட்டும் இன்னும் என் புத்தக அலமாரியில் இருக்கின்றன. அவைகளை கொடுத்துவிட்டால் அப்புறம் அலமாரி காலியாக இருக்கும். ஒரு முனைவர் பட்டம் வாங்கின ஆராய்ச்சியாளரின் அலமாரி காலியாக இருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? இவருடைய மேல் மாடியும் காலிதான் போலிருக்கிறது என்று நினைக்க மாட்டார்களா? வக்கீல் வீட்டு அலமாரியில் சட்டப் புத்தகங்கள் இல்லாவிட்டால் அந்த வக்கீலுக்கு கேஸ்கள் வருமா? ஆகவே டைரிகள் இன்னும் இருக்கின்றன.

நோட்டுப் புத்தகங்களை தானம் கொடுத்து முடித்தவுடன் ஏதோ தலைமேல் இருந்த பெரிய சுமை இறங்கினது போல் உணர்ந்தேன். அடுத்த பதிவில் நான் துணிகள் வாங்கி சேகரித்த கதை (உண்மைக் கதைதான்) சொல்கிறேன்.

திங்கள், 24 மார்ச், 2014

என் பள்ளி அனுபவம்


என் பதிவைப் படித்து வரும் நண்பர்களுக்கு என் நினைவில் நீங்காமல் நிற்கும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த சம்பவம்தான் நான் போன பதிவில் கூறிய பைகள் சேமிப்புக்கான ஆரம்பம்.

எங்கள் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர வகை. அதாவது மூன்று வேளையும் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். அதற்கு மேல் எந்த ஆடம்பரமும் கிடைக்காது. அந்த உணவும் எனக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. "என்ன தினமும் இதேதானா" என்று கேட்டால் வரும் ஸ்டேண்டர்ட் பதில் - "பிடித்தால் சாப்பிடு, பிடிக்கவில்லையானால் எழுந்து போ".

அப்போது நான் செகண்ட் பாரம் அதாவது ஏழாவது கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கு ஒரு கித்தான் பையில்தான் புஸ்தகம், நோட்டுகள் ஆகியவற்றைப் போட்டுக்கொண்டு போகவேண்டும். எங்கள் வீட்டில் அந்த ஒரு பைதான் இருந்தது. நான் மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் அதை பையைத்தான் காய்கறி வாங்க என் அம்மா எடுத்துக் கொண்டு போவார்கள்.

மறுநாள் நான் பள்ளிக்கு எடுத்துப் பொக அந்தப் பையை எடுத்தால் அதற்குள் வெங்காயச் சருகு, கருவேப்பிலை இலைகள், சில சமயம் சிறு கத்தரிக்காய் இப்படி பலது இருக்கும். பொதுவாக நான் அவைகளை அப்புறப்படுத்தி விட்டு பள்ளிக்கு கொண்டு போவேன். சில சமயம் அவசரத்தில் மறந்து போய் அந்தப் பையை அப்படியே கொண்டு போய் விட்டால் சக மாணவர்கள் இந்த காய்கறி மிச்சங்களைப் பார்த்து என்னைக் கலாட்டா செய்வார்கள்.

இதனால் மனம் வெறுத்து விட்டது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் போய் முறையிட்டேன். அந்தக் காலத்தில் பையன்கள் அப்பாக்களிடம் நேருக்கு நேர் நின்று பேசும் வழக்கம் இல்லை.

நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையை அம்மா காய்கறி வாங்க எடுத்துக்கொண்டு போய் அழுக்காக்கி விடுகிறார்கள். அதனால் அந்தப் பையை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போக வெட்கமாய் இருக்கிறது. அதனால் எனக்கென்று தனியாக ஒரு பை வாங்கித்தரவேண்டும் என்று சொன்னேன்.

என் அப்பா என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு சொன்ன பதில்தான் என் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.

அவர் சொன்ன பதில்;

"இப்படி ஆள்ஆள் விதமாக பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் பள்ளிக்கூடம் போ, இல்லாவிட்டால் நின்றுகொள்".

அவ்வளவுதான், மேட்டர் முடிந்தது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. மரியாதையாக அந்தப் பையையே வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போனேன். பெயிலாகாமல் படித்தேன். வேலைக்குப் போனேன். சம்பாதித்தேன். பைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி சேமித்தேன். இன்று அவைகள் சுமையாகி விட்டபடியால் வேண்டியவர்களுக்கெல்லாம் தானமளிக்கிறேன்.

வியாழன், 20 மார்ச், 2014

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


ஆரம்பப் பள்ளிப் பாடத்தில் படித்த இந்த வாசகம் "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற வாசகம் என்னுடைய உள் மனதில் ஆழமாகத் தைத்திருந்தது. இதன் கூடவே இன்னொரு வாசகமும் தைத்திருந்தது. அது "எந்தப் பொருளையும் வீணாக்காதே" என்பதாகும்.

இந்த இரண்டு வாசகங்களும் உண்மையில் பொன்மொழிகளாகக் கருதப்பட வேண்டிய தகுதி உடையவை. ஆனால் பொன்மொழிகள் ஏட்டில் பொன்னெழுத்துகளால் பொறித்து சட்டம் போட்டு வைக்கத்தான் லாயக்கே தவிர வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காக அல்ல என்ற உண்மையை நீங்கள் கற்றிருப்பீர்கள்.

என் வாழ்வில் இந்த பொன்கொழிகளைக் கடைப்பிடித்ததின் விளைவுகளை சொல்கிறேன். வருடத்தில் இரண்டு முறை எங்கள் வீட்டைத் திருப்பிப் போட்டு சுத்தம் செய்வதை என் சகதர்மிணி வழக்கமாகக் கொண்டுள்ளாள். தமிழ் வருடப் பிறப்பிற்கும் ஆயுத பூஜைக்கும் இரண்டு தடவை. பொதுவாக இந்த நாட்களில் நான் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஒரு வாரம் வெளியூர் போய்விடுவது வழக்கம்.

இந்த முறை அப்படி செய்ய உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. பொறியில் சிக்கிய எலி போல் மாட்டிக்கொண்டேன். இங்க பாருங்க, உங்க கப் போர்டை எல்லாம் சுத்தம் செய்வது உங்கள் பொறுப்பு, கொஞ்சம் கொஞ்சமாகச் செய்தால் போதும் என்று உத்திரவு போட்டு விட்டாள். சுப்ரீம் கோர்ட்டு உத்திரவை அலட்சியம் செய்ய நானென்ன மத்திய அரசு மந்திரியா என்ன, ஆகவே ஒழுங்காக சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

முதல் நாள் ஒரு கப்போர்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அதில் பல காலமாக வாங்கின சாமான்கள் பேக் செய்து கொடுத்த பிளாஸ்டிக் பைகள் கட்டு கட்டாக இருந்தன. பின்னால் எதற்காகவாவது வேண்டியிருக்கும் என்று சேமிக்கப்பட்டவை அவை. கல்யாண வீட்டில் கொடுக்கப்படும் தாம்பூலப் பைகளும் இதில் அடக்கம். கரப்பான் பூச்சிகள் அங்கு பல தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் போலத் தோன்றியது.

இது எல்லாம் வேண்டுமா என்று பார்யாளைக் கேட்டேன். எனக்கு வேண்டாம் உங்களுக்கு வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று முடிவை என்னிடம் விட்டு விட்டாள்.

நான் எப்போதோ படித்த இன்னொரு பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது. "எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்." இதுவும் மனதில் தைத்த ஒரு வாசகம்.

இந்த அளவுகோலில் பார்த்தால் இந்தப் பைகளை பல வருடங்களாக உபயோகப் படுத்தவில்லை. ஆகவே இவை நம் வாழ்விற்குத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். அவைகளை எல்லாம் தூக்கி வெளியே போட்டேன். கரப்பான் பூச்சிகள் மிகவும் ஆட்சேபணை தெரிவித்தன. எல்லாவற்றிற்கும் "ஹிட்" ஸ்ப்ரே கொடுத்தேன். எல்லாம் தங்கள் ஆட்சேபணையை வாபஸ் வாங்கிக்கொண்டன.

தொடரும்...

செவ்வாய், 11 மார்ச், 2014

என் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு வந்த சோதனை


போன வாரத்திலிருந்தே என் கம்ப்யூட்டருடைய மானிட்டர் உயிரை விடுவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்க ஆரம்பித்தது. மானிட்டர் லைட் விட்டு விட்டு எரிந்தது. பிறகு ஒரேயடியாக அணைந்து விட்டது.

எனக்குத் தெரிந்த கை வைத்தியம் ஒன்றே ஒன்றுதான். அது கேபிள்களை கழட்டி மாட்டுவதுதான். அதை செய்தேன். மானிட்டரும் சாதுவாக வேலை செய்தது. இப்படி இரண்டு நாள் செய்தது. மூன்றாம் நாள் திரும்பவும் மக்கர் செய்தது.

கூகுளில் தேடினேன். சிபியுவில் குப்பைகள் இருந்தாலும் இப்படி செய்யும் என்று போட்டிருந்தது. சிபியூ புதிதாக வாங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று. சரி, அதையும் செய்து பார்த்து விடலாமென்று ஒரு மாலைப்பொழுதில் சிபியுவை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

சிபியுவை சுத்தம் செய்வது ஒரு பெரிய இந்திர ஜால வேலை என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் அதில் செருகியிருக்கும் ஒரு டஜன் கேபிள்களை பிடுங்க வேண்டும். பிடுங்குவது சுலபம். மாட்டும்போதுதான் அதில் உள்ள வம்பு புரியும். எந்த கேபிளை எங்கு மாட்டுவது என்பதில் குழப்பம் ஏற்படும்.

முன் அனுபவம் காரணமாக கேபிள்களை கழட்டும்போதே அவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும்  லேபிள் எழுதி அது அதில் சொருகி வைத்து விட்டேன்.
பிறகு வேகுவம் கிளீனரை எடுத்து வைத்துக் கொண்டேன். சிபியுவில் உள்ள சைடு கதவைத் திறந்தேன். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. இரண்டே ஸ்க்ரூதான். திறந்தால் உள்ளே ஏகப்பட்ட தூசு, குப்பைகள் மண்டிக்கிடந்தன.

நல்ல காலம் இந்த வேலையை வீட்டு வாசலில் வைத்து செய்தேன். வீட்டிற்குள் இந்த வேலையைச் செய்திருந்தால் வீட்டு அம்மாள் சிபியுவை அப்படியே தூக்கி எறிந்திருப்பார்கள். முதலில் ஒரு பழைய துணியைக் கொண்டு முடிந்த வரை துடைத்தேன். பிறகு வேகுவம் கிளீனரில் புளோயரை ஆன் செய்து புளோயர் நாசிலை சிபியுவின் உள்ளே எல்லா இடங்களிலும் காண்பித்தேன்.

உள்ளேயிருந்து அவ்வளவு தூசிகள் வெளியேறின. வீட்டுக்குள் வைத்திருக்கும் கம்ப்யூட்டருக்குள் இவ்வளவு தூசிகள் எப்படி புகுந்தன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே. அவைகளை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு மறுபடியும் புளோயரால் கிளீன் செய்தேன். இப்படி நாலைந்து முறை செய்த பின் உள்ளேயிருந்து தூசிகள் வருவது நின்று விட்டது.

பிறகு உள்ளேயிருக்கும் விசிறிகளைக் கவனித்தேன். அதில் இறக்கைகளுக்குப் பின்னால் தூசிகள் அடை அடையாய் ஒட்டிக்கொண்டு இருந்தன. அவைகளை எல்லாம் நைசாக ஒரு குச்சியின் மூலம் அகற்றி வெளியே எடுத்தேன். பிறகு அந்த விசிறிகளுக்கு புளோயர் மூலம் காற்று அடித்தேன். மேலும் தூசிகள் வெளியே வந்தன.

இந்த விசிறிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் சிபியுவில் காற்றோட்டம் சரியாக ஏற்பட்டு டெம்பரேச்சர் கன்ட்ரோலில் இருக்கும். இல்லையென்றால் டெம்பரேச்சர் அதிகமானால் சிபியு ஸ்ட்ரைக் செய்து விடும். இப்படி சிபியுவை வருடம் ஒரு முறையாவது சுத்தம் செய்வது அவசியம்.

இப்படி சிபியூவை சுத்தம் செய்த பிறகு எல்லா கேபிள்களையும் சிபியுவில் மாட்டினேன். ஒரு கேபிளும் அநாமத்தாக கிடக்கவில்லை என்று சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டேன். பிறகு சிபியுவிற்கு கரண்ட் கனெக்ஷன் கொடுத்தேன். பழைய குருடி கதவைத்திறடி என்ற கதையாக மறுபடியும் மானிடர் வம்பு செய்தது.

ஓஹோ, இது கொஞ்சம் சீரியசான விவகாரம் போல இருக்கிறது என்று அப்போதுதான் ஞானோதயம் ஏற்பட்டது. இனி ஸ்பெஷலிஸ்ட்டைக் கூப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தேன்.

எனக்கு என்று ஒரு ஆஸ்தான வித்வான் இருக்கிறார். அவரைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன். நான் வந்து பார்க்கிறேன் என்று சொன்னார். இரண்டு மணி நேரத்தில் வந்து பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். வந்தது வம்பென்று நினைத்துக் கொண்டு என்னவென்று கேட்டேன். அவர் ஒன்றுமில்லை, இதை இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் (வொர்க் ஷாப்பில்) சேர்த்து ஒரு ஆபரேஷன் செய்தால் சரியாய்ப்போகும் என்றார்.

சரி, அப்படியே செய்யுங்கள் என்றேன். அவர் மானிட்டரை எடுத்துச்சென்று விட்டார். எனக்கு ஒரு கை ஒடிந்தது போல் ஆயிற்று. விடிந்ததும் கம்ப்யூட்டர் முகத்தில் விழித்தே பழக்கமாகிப் போனதால் இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறைதான்.

எப்படியோ மூன்று நாட்களுக்குப் பிறகு மானிட்டர் நேற்று மாலை வந்து சேர்ந்தது. கம்ப்யூட்டர் மெக்கானிக் எல்லாவற்றையும் இணைத்து பவர் ஆன் செய்தார். கம்ப்யூட்டர் பழையபடி வேலை செய்ய ஆரம்பித்தது. போயிருந்த என் உயிர் திரும்ப வந்தது.

திங்கள், 10 மார்ச், 2014

An accident

I am sorry to report that my monitor developed a serious ailment and had to be hospitalised. Hence I could not write my post today. This post is written from my mobile and hence in English.



 

ஞாயிறு, 2 மார்ச், 2014

பேங்க் விவகாரங்கள் - கடைசி பகுதி


ஏன் தலைப்பில் விவகாரங்கள் என்று போட்டேன் என்றால், பேங்க் கணக்குகளில் ஏதாவது குளறுபடி வந்து விட்டது என்றால் அதைத் தீர்ப்பதற்குள் உங்கள் தாவு தீர்ந்து விடும். எப்போது குளறுபடி வரும்? அது உங்கள் தலையெழுத்தைப் பொருத்தது.  ஆகவே இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு கணக்கைத் தொடருங்கள்.

எனக்கு ஒரு முறை என்னுடைய பிபிஎப் கணக்கில் வட்டியைத் தவறுதலாக கணக்கிட்டு விட்டார்கள். சில ஆயிரங்கள் விட்டுப்போயின. சும்மா இருக்க முடியுமா? போய்க்கேட்டேன். எழுதிக்கொடுங்கள் என்றார்கள். எழுதிக்கொடுத்தேன். பாஸ் புக் நகல் எடுத்துக் கொடுங்கள் என்றார்கள். எடுத்துக் கொடுத்தேன். சில நாட்கள் ஆகும், பொறுத்திருங்கள் என்றார்கள்.

ஒரு மாதம் கழித்துப் போய் கேட்டேன். அப்படியா, எழுதிக்கொடுங்கள் என்றார்கள். முன்பே எழுதிக்கொடுத்தேனே என்றேன். அது அந்த மேனேஜர் மாற்றலாகிப் போய்விட்டார், அதனால் பழைய விண்ணப்பங்களும் அவருடன் போய் விட்டன. நீங்கள் ஒன்று செய்யுங்கள். இப்போது புதிதாக ஒரு விண்ணப்பம் கொடுத்து விடுங்களேன் என்றார்கள். புதிதாக ஒரு விண்ணப்பம் எழுதி பாஸ் புக் காப்பியுடன் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றார்கள்.

இரண்டு வாரம் கழித்து போனேன். திரும்பவும் விண்ணப்பம் கொடுத்தீர்களா என்றார்கள். என்னடா இது, திரும்பவும் முதலிலிருந்தா என்று யோசித்தேன். விண்ணப்பம் எழுதி பத்து காப்பி சீராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டேன். கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு காப்பியாக கொடுத்து வந்தேன். ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி விட்டது. மூன்று மேனேஜர்கள் மாறி விட்டார்கள்.

புதிதாக வந்த மேனேஜருக்கு என்ன தோன்றியதோ, ஒரு நாள் இன்று மாலை 4 மணிக்கு வாருங்கள் சார் என்றார். மாலை 4 மணிக்குப் போனேன். கம்ப்யூட்டரில் என்னமோ பண்ணி பத்து நிமிடத்தில் கணக்கை நேர் செய்து விட்டார். மிகவும் நன்றி என்று சொல்லி விட்டு என் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பொறுமை, விடாமுயற்சி, சாதுர்யம் என்பவை எல்லாம் தேவை என்பதே. இரண்டு பேங்கில் கணக்கு வைத்திருந்தீர்களானால் இவையெல்லாம் உங்களுக்கு கை வந்து விடும். வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 

திங்கள், 24 பிப்ரவரி, 2014

உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி? - பாகம் 5


உங்கள் கணக்கிலிருந்துதான் நீங்கள் பணம் எடுக்க வேண்டும்.  அடுத்தவர் கணக்கிலிருந்து நீங்கள் பணம் எடுக்கக் கூடாது. அது தப்பு. சாமி கண்ணைக் குத்திடும்.

பேங்கில் நீங்கள் தொடங்கியிருக்கும் சேமிப்புக் கணக்கு ஒரு வசதிதானே தவிர அது பணங்காய்ச்சி மரமல்ல. கையில் பணம் அதிகமாக இருந்தால் வீண் செலவு செய்வோம். அதை ஓரளவு கட்டுப்படுத்த சேமிப்புக் கணக்குகள் உதவும். ஆனால் சேமிக்கவேண்டும் என்ற அடிப்படை உந்துதல் இல்லாவிட்டால் சேமிப்புக் கணக்கினால் பயன் ஏதுமில்லை.

ஒருவனுடைய மாத வருமானத்தில் குறைந்தது பத்து சதம் சேமிக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் பணம் தேவைப்படும்போது கை கொடுக்கும். இப்போது பல தொழிற்சாலைகள், அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிக் கணக்கிலேயே செலுத்துகின்றனர். இது அவர்களின் சேமிப்பு வழக்கத்தை ஊக்கப்படுத்த உதவும். ஆனால் பெரும்பாலானோர் இந்த வசதியை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்.

இப்படி சேர்த்த அல்லது சேர்க்கப்பட்ட ஊதியத் தொகை அல்லது சேமிப்புத் தொகையை எப்படி எடுப்பது? பேங்கில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இது பற்றி நன்கு அறிந்திருப்பது அவசியம்.

1. சாதாரண முறை:

பேங்கில் போடப்படும் தங்கள் சம்பளத்தை பேங்கில் இருந்து எடுப்பதை மட்டும் செய்யும் நபர்களுக்கு இந்த முறைதான் உகந்தது. அதற்கு பேங்கில் கிடைக்கும் "வித்டிராயல் ஸ்லிப்" எனப்படும் பணம் எடுக்கும் படிவத்தை உபயோகப்படுத்த வேண்டும். இது மிகவும் எளிமையான படிவம். ஆனால் இதை பூர்த்தி செய்யக்கூடத் தெரியாதவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்றே சில பேங்குகளில் ஒரு ஊழியரை நியமித்திருப்பார்கள். அவர்களிடம் இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்து அல்லது கைநாட்டு வைத்து கவுன்டரில் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்தப்படிவத்துடன் பேங்க் பாஸ்புக்கையும் அவசியம் கொடுக்கவேண்டும். பாஸ்புக்கில் ஒட்டப்பட்டுள்ள புகைப் படத்துடன் உங்கள் உருவத்தை ஒப்பிட்டுப் பார்த்து பிறகே பணம் கொடுப்பார்க்ள.

இந்தப் படிவத்தின் மூலம் பணம் எடுக்க யார் கணக்கு வைத்திருக்கிறார்களோ அவர்களேதான் பேங்கிற்கு நேரில் செல்லவேண்டும். அடுத்தவர் இந்த படிவத்தின் மூலம் பணம் எடுக்க முடியாது. ஒரு விதி விலக்கு. பேங்கில் பணி புரிபவர்கள் யாராவது நேர்மையற்றவர்களாக இருந்து விட்டால், சில சமயம் நீண்ட காலமாக பணப் பரிவர்த்தனை நடக்காத கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவது உண்டு. ஆனால் இது மிகவும் அபூர்வம். ஆனாலும் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை நீண்ட காலம் பரிவர்த்தனை இல்லாமல் வைப்பது கூடாது. அப்படி வைத்திருந்தால் பல பேங்குகள் அபராதம் கூட விதிக்கிறார்கள்.

2. செக் மூலம் பணம் எடுப்பது.

பேங்கில் கணக்கு ஆரம்பிக்கும்போதே செக் புக் வேண்டுமென்றால் கொடுப்பார்கள். ஆனால் இத்தகைய கணக்குகளில் குறைந்த இருப்புத் தொகை கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அதுவும் தவிர ஒரு 10 செக் கொண்ட ஒரு செக் புத்தகத்திற்கு ஏறக்குறைய 30 ரூபாய் பிடித்துக்கொள்வார்கள்.

அந்தக் காலத்தில் அதாவது நான் இளைஞனாக இருந்தபோது ஒரு வெள்ளைக் காகிதத்தில் "இந்தக் காகிதத்தைக் கொண்டு வரும் நபருக்கு பத்தாயிரம் ரூபாய் என்னுடைய கணக்கில் இருந்து கொடுக்கவும் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தனுப்பினால் பணம் கொடுத்து விடுவார்கள். அது மக்கள் நாணயமாகவும் அரசு நேர்மையாகவும் இருந்து மாதம் மும்மாரி பெய்த காலம்.

இப்போது செக்குகள் மிகவும் முன்னேற்றமடைந்து "சிடிஎஸ்" செக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து பேங்க் செக்குகளும் ஒரே மாதிரி சைஸ், மற்றும் விவரங்கள் அடங்கியதாக இருக்க வேண்டும். இந்த வகை செக்குகளில் எந்த விதமான அடித்தல்களும் திருத்தல்களும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் செக் பாஸ் ஆகாது. உங்களுக்கு 100 ரூபார் தண்டம். நீங்கள் செக் கொடுத்தவருக்கும் 100 ரூபாய் தண்டம். தவிர செக்கின் விலை 3 ரூபாயும் தண்டம்.

செக்குகள் மூலம் நீங்கள் அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கலாம். செக் எழுதுவது என்பது ஒரு கலை. இதை நன்றாக கற்றுக்கொண்டுதான் செக்கை உபயோகிக்க ஆரம்பிக்கவேண்டும். செக் கணக்கு உள்ளவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய சில ஜாக்கிரதைக் குறிப்புகள்.

1. செக் புஸ்தகத்தில் உங்கள் மாதிரிக் கையெழுத்தைப் போட்டு வைக்கவேண்டாம்.

2. செக் புஸ்தகம் எப்போதும் உங்கள் வசம் பூட்டுப்போட்ட பெட்டிகளில் வைத்திருக்கவேண்டும்.

3. நிரப்பப் படாத செக்குகளை எக்காரணம் கொண்டும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. (பொண்டாட்டியாயிருந்தாலும் சரி வைப்பாட்டியாயிருந்தாலும் சரி)

4. வெற்றுச் செக்கில் கையெழுத்து மட்டும் போட்டு வைக்கக் கூடாது.

5. முன்பின் தெரியாதவர்கள் பணம் கொடுத்து உங்கள் செக்கைக் கேட்டால் கொடுக்கக் கூடாது.

6. உங்கள் கணக்கு எண். கணக்கில் உள்ள இருப்புத் தொகை இவைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்.

இப்படியெல்லாம் இருந்தீர்களானால் உங்கள் பணத்தை நீங்கள் அனுபவிக்கலாம். இல்லாவிடில் யாரோ அனுபவிப்பார்கள். பட்டினத்தார் பாடலை நினைவு கொள்ளவும்.

பாடு பட்டுத் தேடி பணத்தை புதைத்து வைக்கும் பாவிகாள் கூடு விட்டிங்கு உயிர்தான் போனபின் யாரே அனுபவிப்பார் அந்தப் பணம்.