திங்கள், 26 மே, 2014

இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க !


கண்காட்சிகளைப் பார்த்திருப்பிர்கள். ஒரு இடத்தில் நாலு நண்பர்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தால் உடனே அங்கு ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அங்கு என்னவோ நடக்கிறது, அதில் நாமும் சேர்ந்து கொள்ளலாமே என்ற மனப்பான்மை மனிதர்களுக்கு இயற்கையாகவே வேறூன்றி இருக்கிறது.

இலவசம் அல்லது சும்மா கிடைக்கிறது என்றால் அதற்காக உயிரைப் பயணம் வைத்து அதைப் பெற்றுக்கொள்ள அடித்துக் கொள்வார்கள். இத்தகைய நிகழ்வுகள் நம் தங்கத் தமிழ்நாட்டில் பலமுறை அரங்கேறியுள்ளன.

உங்கள் பணம் 100 நாளில் இரட்டிப்பாகும் அல்லது மூன்று மடங்காகும் என்றால் முன்பின் யோசிக்காமல் பணத்தைக் கொண்டுபோய் கொட்டுபவர்களில் தமிழர்களை மிஞ்ச யாரும் இல்லை. நகைச்சீட்டு, புடவைச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு என்று அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல சீட்டுகள் நடக்கும். எல்லாம் ஏமாற்று வேலைகள்தான்.

இந்த வகையில் தற்போது தோன்றியிருப்பது "இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்" என்ற கோஷம். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பல பதிவுகள் இதை ஊக்கப்படுத்துகின்றன. இணையத்தில் பதினைந்து நிமிடங்கள் செவழித்தால் போதும். மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று தடாலடியாக எழுதுகிறார்கள்.

நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் என்பது ஒருவன் தன் உழைப்பைக்கொட்டி சம்பாதிக்க வேண்டும். அதுதான் உண்மையான சம்பாத்தியம். கானல்நீரைக்கண்டு ஏமாந்து போகாதீர்கள்.