செவ்வாய், 8 ஜூலை, 2014

சோதனைக்கு மேல் சோதனை, போதுமடா சாமி


நான் மாதம் 50 GB அளவிற்கு இன்டெர்நெட்டை உபயோகித்ததை கண்டுபிடித்து பிஎஸ்என்எல்- லுக்கு யாரோ வத்தி வைத்ததில் அவன் என்னுடைய இரவு நேர இலவச டவுன்லோடைப் பிடுங்கிக்கொண்டான். நானும் ஒருவாறு சமாதானமடைந்து, வேறு ஒரு கழுதையைக் கட்டின விவகாரத்தை போன பதிவில் பார்த்தோம்.

அந்த கோள் சொன்ன மகராசன் அத்தோடு நிறுத்தினானா, கூகுள்காரனிடம் போய் இப்படி ஒரு ஆள் யூட்யூப்பிலிருந்து மாசம் 50 GB இலவசமா டவுன்லோடு செஞ்சிட்டிருக்கானே, உங்கள் கம்பெனிக்கு எப்படி காசு வரும் என்று போட்டுக்கொடுத்து விட்டான் போல் இருக்கிறது. கூகுள்காரனுக்கு சொல்லவா வேண்டும்? யூட்யூபிற்கும் வைத்தான் ஆப்பு. இரண்டு நாட்களாக யூட்யூப் விடியோக்களை டவுன்லோடு செய்ய முடிவதில்லை.

Youtube Downloader  என்று ஒரு புரொக்ராம் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதை வைத்து யூட்யூபில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான விடியோக்களில் எதை வேண்டுமானாலும் டவுன்லோடு பண்ணி நம் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துக்கொண்டு, நமக்கு சௌகரியமானபொழுது பார்த்து ரசிக்கலாம். இதை உபயோகப்படுத்தித்தான் நான் இசை, சினிமா, ஆன்மீகம், சுற்றுலா, சமையல் சம்பந்தப்பட்ட பல விடியோக்களை டவுன்லோடு செய்து வந்தேன். இப்போது இந்த புரொக்ராம் யூட்யூப் விடியோக்களை டவுன்லோடு செய்ய மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறது.

இந்த யூட்யூப் கம்பெனி வேறு ஒருவர் கையில் இருந்தவரைக்கும் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. இப்போது இந்த யூட்யூப் கம்பெனியையும் கூகுள்காரன் வாங்கி விட்டான் என்று சொல்கிறார்கள். வாங்கினவன் பழைய மாதிரி கம்பெனியை நடத்தவேண்டியதுதானே? என்னைப்போன்ற இளிச்சவாயன்கள் தலையில் கை வைப்பானேன்? அவன்தான் (அவன் நாசமாய்த்தான் போவான்) இப்போது எந்த டவுட்லோடரையும் உபயோகித்து யூட்யூப் விடியோக்களை டவுன்லோடு செய்ய விடாமல் பண்ணி விட்டான்.

என்ன அக்கிரமம் பாருங்கள்? இந்த யூட்யூப்பில் இருக்கும் விடியோக்கள் பெரும்பாலானவை நம்மைப் போன்ற சாதாரண ஜனங்கள் எடுத்து யூட்யூபில் சேர்த்தவை. இந்த கூகுள்காரன் பெரிய திமிங்கலம். நம்மைப் போன்ற சாதாரண பொதுஜனம் இந்த திமிங்கலத்தோடு மோத முடியுமா?

உலகத்தில் கலி முத்தித்தான் போச்சு. நல்லவங்களுக்கு காலமில்லை. தனி மனித சுதந்திரம் எப்படியெல்லாம் பறி போகிறது, பாருங்கள்.

திங்கள், 7 ஜூலை, 2014

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட்டும் நானும்


நான் ஐந்து வருடங்களாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட் உபயோகித்து வருகிறேன். பிளான் பெயர்   BSNL FN COMBO 500.
இந்த பிளான் எனக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது. எப்படியென்றால் இந்த பிளானில் காலை 2 மணி முதல் 8 மணி வரை இன்டர்நெட் உபயோகத்திற்கு கட்டணம் இல்லை. காலை 8 மணி முதல் மறுநாள் காலை 2 மணி வரையிலான உபயோகத்திற்கு 1.5 GB இலவசமும் அதற்கு மேல் உபயோகித்தால் ஒரு MB க்கு 20 பைசா என்றும் கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். இன்டர்நெட் நல்ல வேகமும் கூட ( 2 MBPS).

என்னைப்போல் ஜாமக்கோடங்கிகளுக்கு இது மிகவும் உபயோகமாக இருந்தது. காலை 3 மணிக்கு எழுந்திருந்து 8 மணிக்குள் இன்டர்நெட் வேலைகளையெல்லாம் முடித்து விடுவேன். பகல் நேரத்தில் இன்டர்நெட் மிகவும் அத்தியாவசியமாக இருந்தால் ஒழிய உபயோகிப்பதில்லை. பகல் நேர உபயோகத்தை இலவச லிமிட்டை தாண்டாமல் உபயோகித்து வந்தேன்.

இரவு நேர இலவச உபயோகத்தில் மாதத்திற்கு ஏறக்குறைய 50-60 GB உபயோகித்து விடுவேன். இது மிகவும் சலீசான பிளானாக இருந்தது. இதைப் பொறுக்காத யாரோ ஒரு பிஎஸ்என்எல் ல் வேலை பார்க்கும் பொறாமைப் பிண்டம், மேலிடத்திற்குப் போட்டுக்கொடுத்து விட்டார்கள் போல இருக்கிறது. பிஎஸ்என்எல் ஏற்கனவே எதிலெல்லாம் ரேட்டை உயர்த்தலாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு காத்திருந்தார்கள். காரணம் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் ஓடுகிறதாம். மந்திரிகள் போன் பில்லை வசூல் செய்வதே இல்லை. அப்புறம் என்ன லாபம் வரும்?


வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்து விட்டது. சும்மா இருப்பார்களா? இரவு இலவசத்திற்கு வேட்டு வைத்து விட்டார்கள். அதற்குப் பதிலாக சலுகை கட்டணம் வழங்கப் போகிறார்களாம். எவ்வளவு தெரியுமா?
ஒரு  MB க்கு வெறும் 15 பைசாதானாம். அப்போ ஒரு  GB க்கு எவ்வளவு ஆகிறது என்று பார்த்தால் வெறும் 150 ரூபாய்தான். என்னுடைய மாத உபயோகமான 50  GB க்கு சும்மா 7500 ரூபாய் கொடுத்தால் போதும்.

ஒரு பிளாக்கருக்கு வந்த சோதனையைப் பாருங்கள். இந்த ரேட்டில் நான் என் தலையை அடகு வைத்தால் கூட டெலிபோன் பில் கட்டமுடியாது. என் தலையை எவன் அடகு வாங்குவான் என்பது வேறு விஷயம்.

உடனே வேறு மாற்று ஏற்பாடு செய்தாகவேண்டுமே. பிஎஸ்என்எல் ஆபீசுக்கு ஓடினேன். இந்த மாதிரி கஸ்டமருக்கு சொல்லாமல் பிளானை மாற்றுவது நியாயமா என்று கேட்டேன். அங்கிருந்தவர்கள் அப்படியா, ஏதோ நைட் பிளானை மாற்றுவதாக ஒரு பேச்சு அடிபட்டது, மாற்றி விட்டார்களா என்று என்னையே திருப்பிக் கேட்டார்கள். இது எப்படி இருக்கு பாருங்க.

உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று அடுத்த கேள்வி. நான் தினமும் காலையில் கம்ப்யூட்டரை ஆன் பண்ணினதும் இன்டர்நெட் உபயோகக் கணக்கை பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன். இதனால் கணக்கில் ஏதோ தவறு மாதிரி தெரிந்ததும் உஷாராகி விட்டேன். இப்போது இந்தப் பிரச்சினைக்கு என்ன பண்ணலாம் என்று கேட்டேன்.

நீங்கள் இன்டர்நெட் பிளானை மாற்றி விடுங்கள், அது ஒன்றுதான் வழி என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டு புளியமரம் ஏறமாட்டேன் என்றால் எப்படி? இருக்கிற பிளானில் என் பர்சுக்கு ஏற்றமாதிரி எனக்கு கண்ணில் பட்ட ஒரு பிளானுக்கு மாற்றித் தரும்படி கேட்டேன். ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுத்து விட்டுப் போங்கள். நாளைக்கு மாற்றி விடுகிறோம் என்றார்கள். அப்படியே எழுதிக்கொடுத்து விட்டு வந்தேன்.

சொன்னபடி அடுத்த நாள் மாற்றி விட்டார்கள். எஸ்எம்எஸ் என் செல் போனுக்கு வந்தது. நான் மிக உற்சாகமாகி கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இனடர்நெட்டை ஓபன் செய்தேன். தலையில் கல் விழுந்தது போல் உணர்ந்தேன். காரணம் இன்டர்நெட் ஆமை வேகத்தில் நகர்கிறது. போன் பண்ணிக் கேட்டால், நாங்கள்தான் அப்போதே சொன்னோமே, வேகம் குறைவாக இருக்கும் என்று, நீங்கள் சரியென்று மண்டையை ஆட்டினீர்களே என்று என் தலை மீது இன்னொரு கல்லைப் போட்டார்கள்.

அவர்கள் கொடுத்திருந்த லிஸ்ட்டில் பார்த்தால் வேகம் அதிகமுள்ள பிளான்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் விலை போட்டிருக்கிறது. என்ன ஒரே ஆறுதல் என்றால் நான் வாங்கிய பிளான் அன்லிமிடெட் டவுன்லோடு உள்ள பிளான். நேற்று ஒரு டவுன்லோடை டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். முன்பு ஒரு மணி நேரத்தில் முடிந்த டவுன்லோடு இப்போது ஒரு இரவில் முடிந்து விட்டது.

நான் வாங்கிய பிளான். 650 C Home ULD. மாதம் 650 ரூபாய். வரிகள் தனி.

கழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள் !

ஞாயிறு, 29 ஜூன், 2014

தமிழன் என்று ஓர் இனம்.


தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. ஆஹா, எப்படிப்பட்ட வார்த்தைகள். இவ்வார்த்தைகளைக் கேட்கும்போதே புல்லரிக்கிறது, மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன, தலை தானாக உயர்கிறது.

தமிழினத்தைப் போல் தன்மானமுள்ள இனம் இவ்வுலகில் கிடையாது. ஒரே சிக்கல் என்னவென்றால், அதை அவன் அடிக்கடி மறந்து விடுவான். தற்காலக் கலாச்சாரக் காவலர்களான திராவிட அரசியல்வாதிகள் அவனுக்கு இதை அடிக்கடி நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

இலங்கையில் பிரபாகரன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தபோது "ஆஹா, எங்கள் சகோதரர்களை இலங்கை அரசு படுகொலை செய்து கொண்டிருக்கிறது, இதை ஏன் இந்திய அரசு கண்டும் காணாதது போல் இருக்கிறது? இதை வன்மையாக எதிர்க்கிறோம்" என்று தமிழனின் தன்மான உணர்வை தூசு தட்டி எழுப்பி ஒரு சில தீக்குளிப்பு வரை கொண்டு சென்றது யார்?

இந்த அரசியல் வாதிகள் இல்லாவிட்டால் தமிழனுக்கு, தான் ஒரு பாரம்பரியம் மிக்க, தன்மானத்திற்குப் பெயர் போன இனம் என்பது மறந்து போயிருக்கும். ஈழத் தமிழர் பிரச்சின் ஒரு வழியாக ஓய்ந்த பிறகு அவர்களுக்கு மெல்லுவதற்கு ஒன்றும் இல்லாமல் போயிற்று.

நல்ல காலம், மோடி வந்தார். அவர் ஏதோ இந்தி பற்றி அறிக்கை விட்டிருக்கிறார். உடனே நம் அரசியல்வாதிகள் " பழைய குருடி, கதவைத்திறடி" என்றபடி இந்தி எதிர்ப்புக் கோஷங்களை கூவுகிறார்கள். தமிழா, மோடி உன் தமிழை அழித்து விட முடிவு செய்து விட்டார், நீ வீறு கொண்டு எழு என்று உசுப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது ஏதாவது ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கட்சி உயிரோடு இருப்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? அதற்கு ஏதாவது நொண்டிச் சாக்கு வேண்டும். அவ்வளவுதான். இப்போது மோடி சிக்கிக்கொண்டார். அவர் இன்று சென்னை வரும்போது இரண்டொரு கட்சிகள் கருப்புக்கொடி காட்டினாலும் காட்டுவார்கள். அவர்களை  கைது என்ற பெயரில் உடனே ஒரு கல்யாண மண்டபத்திற்கு கூட்டிக்கொண்டு போய் நல்ல பிரியாணி போட்டு மாலையில் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.

முன்னூறு வருடங்களுக்கு முன் இங்கிலீஷ்காரன் நம்மூருக்கு வியாபாரத்திற்கென்று வந்து நம்மை ஆள ஆரம்பித்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்போது இங்கிலீஷ் தெரிந்தால் அவனிடம் சேவகம் செய்யவும் கொஞ்சம் காசு பார்க்கவும் முடியும் என்பதினால் நம் ஆட்கள், குறிப்பாக தமிழர்கள் இங்கிலீஷ் படித்து காசு பண்ணினார்கள்.

அவன் நம் நாட்டைவிட்டுப் போய் 70 ஆண்டுகள் ஆன பின்பும் நாம் இங்கிலீசை விடவில்லை. ஏன் என்றால் இங்கிலீஷ் இன்றைக்கும் காசு கொடுக்கிறது. இல்லையென்றால் எப்படி அமெரிக்கா செல்ல முடியும்? இந்திக்கு அவ்வளவு மவுசு இல்லை. இருந்தாலும் பலர் வடநாட்டுக்கு உத்தியோகம் பார்க்கப்போவதால் இந்தி படிக்கிறார்கள். (இந்தியை கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்கள் உட்பட).

தமிழனின் தன்மானம் எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், தன் பிள்ளைகளுக்கு வேத வியாஸ், தினேஷ், பிரபு விகாஷ் என்று பெயர் வைப்பதில் இருக்கிறது. தமிழ் இனம் அழிகிறதா, எப்படி அழியும்? அழிய விட்டு விடுவோமா? அமெரிக்காவில் ஊர்ஊருக்கு எவ்வளவு தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழ் கலாச்சாரத்தை பேணிக் காக்கிறோம், ஒவ்வொரு கலாசார நிகழ்ச்சி முடிந்தவுடன் பீஸ்ஸா சாப்பிட்டு கோக் குடித்து எவ்வளவு பாடு படுகிறோம். தமிழ் கலாச்சாரத்தை அழிய விடுவோமா?

தமிழனே, எப்போதும் தன்மானத்தைக் காக்க புரட்சி செய்யத் தயாராக இரு. வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்.

திங்கள், 23 ஜூன், 2014

ரயில் கட்டணம் அதிகரிப்பு - மக்கள் கவலை!


சமீபத்தில் மோடி அரசு ரயில் கட்டணங்களை அதிகரித்துள்ளது. இது மிகவும் நியாயமான ஒரு நடவடிக்கை. ரயில்வே நிர்வாகம் தினமும் 30 கோடி ரூபாய் அளவில் நஷ்டத்தை சந்திக்கிறதாம். எந்த ஒரு ஸ்தாபனத்தையும் இப்படி நஷ்டத்தில் நடத்த முடியாது. ஆகவே மோடி கட்டணங்களை அதிகரித்ததில் எந்த வித தவறும் கிடையாது.

ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் மாநில ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இட்லி ஒரு ரூபாய்க்கு கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு பணம் எங்கிருந்தாவது வர வேண்டுமல்லவா? இப்படி மத்திய அரசு செய்வதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தால் அப்புறத் மத்திய சர்க்கார் எப்படி நடக்கும்?

சரி, அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஒரு சம்பிரதாயமான கடமை. மருமகள் கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம் என்பது போல், மத்திய சர்க்கார் என்ன செய்தாலும் அதை எதிர்த்து ஒரு அறிக்கை விடுவது மாநில சர்க்காரின் பிறப்புரிமை. தினமும் தூங்கி எழுவது போல் இது ஒரு "நித்தியானுஷ்டானம்". ("நித்தியானுஷ்டானம்" அப்படீன்னா என்னன்னு கேட்கப்படாது. எனக்குத் தெரியாததைக் கேட்டால் நான் என்ன பண்ண முடியும்?)

இது புரிகிறது. ஆனால் இந்த பொது ஜனம் என்று சொல்லப்படுகின்ற ஜந்து எதற்காக ஊளையிடுகிறது என்று புரியவில்லை? தென்னாட்டில்தான் இந்த ஓலம். வடநாட்டில் இப்படி யாரும் ரயில் கட்டண உயர்விற்காக ஓலமிடுவதாய் தெரியவில்லை. அதனால்தான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்கிறார்கள்.

வட மாநில மக்கள் ஏன் ரயில் கட்டண உயர்வைப்பற்றி ஓலமிடவில்லை என்பது வட மாநிலங்களுக்குப் போய் வந்தவர்களுக்குத் தெரியும். டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை. (சில அரசியல் வாதிகள் உட்பட.) நம் அரசின் ரயில், நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நாம் எதற்கு டிக்கட் வாங்க வேண்டும்? இது அவர்கள் கொள்கை.

வாழ்க மத்திய அரசு.

திங்கள், 16 ஜூன், 2014

நான் 100/100 வாங்குவது எப்போது?


வாழ்க்கையில் 100 என்ற எண்ணுக்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பு உண்டு.

மாணவனுக்கு அனைத்து பரீட்சைகளிலும் 100 க்கு 100 வாங்கவேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். இந்தக் காலத்தில் அது சாத்தியமாகவும் இருக்கிறது. நான் படித்த காலத்தில் 60 மார்க் போடவே ஆசிரியர்கள் மிகவும் தயங்குவார்கள்.

எல்லோரும் 100 வயது வரை வாழ விரும்புகிறார்கள். சமீபத்தில் நான் கேட்ட ஒரு டாக்டரின் பிரசங்கத்தில் அவர் ஒவ்வொரு மனிதனும் 100 ஆண்டுகள் வாழுமாறுதான் பிறப்பிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதன்தான் தன் வேண்டாத பழக்கங்களினால் தன் ஆயுளைக் குறைத்துக்கொள்கிறான் என்று கூறினார்.

100 சதம் உத்திரவாதம் என்று பலவற்றிற்கு வியாபாரிகள் கூசாமல் கூறுகிறார்கள். இதை நம்பி பலர் அந்தப் பொருளை வாங்குகிறார்கள். வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

ஆக மொத்தத்தில் ஒரு காரியம் 100 சதம் முடிந்து விட்டது என்றால் அந்தக் காரியம் வெற்றி என்று பொருள். பதிவுலகில் நானும் அப்படி ஒரு வெற்றி பெற ஆசைப்படுகிறேன்.

அது இதுதான். நான் இந்த இடத்தைப் பிடிக்கவேண்டும்.


நான் இப்போது இருப்பது இந்த இடத்தில்.


நான் இந்த இடத்திற்கு வருவதற்கு உதவிய அனைத்து வாசக நேயர்களுக்கும் நன்றி. என்னுடைய உழைப்பும் இதில் பெரித கலந்திருக்கிறது. இருந்தாலும் வாசகர்களின் பங்களிப்பே அதிகம்.

இவ்வளவு நாள் ஒத்துழைப்பு நல்கியது போலவே வருங்காலத்திலும் கொடுத்தால் நான் என்னுடைய குறிக்கோளை விரைவில் எட்ட ஏதுவாக இருக்கும். பிறகு நான் என் குறிக்கோளை எட்டிய திருப்தியில் ஓய்வு பெறுவேன்.

உங்கள் ஒத்துழைப்பை வெகுவாக எதிர் பார்க்கிறேன்.

திங்கள், 9 ஜூன், 2014

பூதம் காத்த புதையல்


ஆசைகளில் தீராத ஆசை பணத்தின் மேல் உள்ள ஆசைதான். இந்த ஆசை எல்லாவற்றையும் முற்றும் துறந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்நாள் மாடர்ன் சாமியார்களையும் விடவில்லை. அப்படியிருக்க நான் எம்மாத்திரம்?

நான் ஒரு சராசரி மனிதன். ஏதோ கொஞ்சம் ஆன்மீகத்தில் பரிச்சயம் உண்டு. ஆசையே மனிதனின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று பல குருமார்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவர்களும் பிரசங்கம் முடிந்தவுடன் சீடர்களை தட்டுடன் வசூலுக்கு அனுப்புவதையும் பார்த்திருக்கிறேன்.

சில சமயம் நானும் சன்னியாசம் வாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் துறந்து விட்டு இமயமலைக்குப் போய்விட்டால் என்ன என்று யோசித்ததுண்டு. ஆனால் இன்னும் தைரியம் வரவில்லை. இப்போது கிடைக்கும் சௌகரியங்களெல்லாம் அங்கு வெறும் கையுடன் போனால் கிடைக்குமா என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

எங்கு சென்றாலும் பணம் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை என்பதை கண்கூடாகப் பார்த்திருப்பதால் இப்போது அனுபவிக்கும் சுகங்களை விட்டு விட்டு புதிதாக வேறொரு இடத்திற்குப் போவானேன் என்ற சிந்தனையும் மூளையின் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

என் இளம்பிராயத்தில் என்னிடம் பணம் எப்போதும் இருந்ததில்லை. யாராவது சொந்தக்காரர்கள் வந்து போகும்போது காலணா அரையணா கொடுப்பார்கள். அதை வாங்கும்போதே அம்மாவிடம் அர்ச்சனை வாங்கவும் தயாராகிக் கொள்ளவேண்டும். ஏண்டா அவர்களிடம் காசு வாங்கினே என்று ஆரம்பித்து சில சமயம் அடிகளும் கூடக் கிடைக்கும். எப்படியோ, என்ன நடந்தாலும் அந்தக் காசு லாபம்தானே. சில சுகங்களுக்காக சில தியாகங்கள் செய்துதான் ஆகவேண்டும்.

கொஞ்சம் பெரிய பையன் ஆன பிறகு நான் கமிஷன் ஏஜண்ட் ஆனேன். அதாவது கடைகளுக்கு ஏதாவது பொருட்கள் வாங்க அனுப்பினால் அதில் கொஞ்சம் காசு கமிஷனாக எடுத்துக் கொள்வது. இதில் ஒரு நியாயத்தைக் கடைப்பிடித்தேன். காலணா அல்லது அரையணாவிற்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு மேல் எடுத்துக்கொண்டால் அது தெரிந்துபோய் அப்பாவிடம் புகார் சென்று விடும். அப்புறம் நடப்பதை எல்லாம் எழுதினால் இந்தப் பதிவு கிரைம் நாவலாகிவிடும். வேண்டாம்.

நான் தொழிலதிபராக உருவெடுத்ததை முன்பு ஏதோ ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். புக் பைண்டிங்க் செய்திருக்கிறேன். காப்பிக்கொட்டை வறுத்திருக்கிறேன். இதிலெல்லாம் ஏதோ கொஞ்சம் சில்லறை நடமாட்டம் இருந்தது. கல்லூரி படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கு ஆர்டர் வந்து விட்டது. ஆரம்ப சம்பளத்தை சொல்ல வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு சரித்திரம் என்றால் உண்மையை அறிவிக்க வேண்டுமல்லவா.

மாத சம்பளம் நூறு ரூபாய். பஞ்சப்படி இருபத்திநான்கு ரூபாய். (1956 ம் வருடம்). இப்படியாக இருந்து படிப்படியாக உயர்ந்து நான் ஓய்வு பெறும்போது (1994)  பெற்ற சம்பளம் ஆறாயிரம் ரூபாய். அதில் பாதி மூவாயிரம் ரூபாய் பென்ஷன் கொடுத்தார்கள். இருபது வருடம் கழித்து பென்ஷன் அதைப்போல் பல மடங்கு வாங்குகிறேன். இதனால்தான் அன்றே பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். காலணா உத்தியோகம் என்றாலும் கவர்மென்டு உத்தியோகம் வேண்டும் என்று.

இப்படியான வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், கையில் காசில்லாதவன் வாழ்வில் நடைப்பிணமே. ஆகவே என்னால் முடிந்த அளவு சேமிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச கொஞ்சமாக சேமித்தது இப்போது கணிசமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் இன்னும் சேர்க்கவேண்டும் என்ற ஆசையைத் தவிர்க்க முடியவில்லை.

சேமித்த பணத்தை எதற்காவது செலவு செய்யலாம் என்றால் மனம் அதற்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. இந்த சேமிப்பினால் எனக்கு ஏதும் பயன் இல்லை என்றாலும் அது ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. ஏதாவது இன்னல் வந்தால் யார் கையையும் எதிர் பார்க்காமல் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தை அளிக்கிறது.

அதற்காகவே பூதம் காப்பது போல் இந்தப் பணத்தைக் காத்துக்கொண்டு இருக்கிறேன். வேறு வழிகள் யாருக்காவது தெரிந்திருந்தால் தெரிவிக்கவும்.

திங்கள், 26 மே, 2014

இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க !


கண்காட்சிகளைப் பார்த்திருப்பிர்கள். ஒரு இடத்தில் நாலு நண்பர்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தால் உடனே அங்கு ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அங்கு என்னவோ நடக்கிறது, அதில் நாமும் சேர்ந்து கொள்ளலாமே என்ற மனப்பான்மை மனிதர்களுக்கு இயற்கையாகவே வேறூன்றி இருக்கிறது.

இலவசம் அல்லது சும்மா கிடைக்கிறது என்றால் அதற்காக உயிரைப் பயணம் வைத்து அதைப் பெற்றுக்கொள்ள அடித்துக் கொள்வார்கள். இத்தகைய நிகழ்வுகள் நம் தங்கத் தமிழ்நாட்டில் பலமுறை அரங்கேறியுள்ளன.

உங்கள் பணம் 100 நாளில் இரட்டிப்பாகும் அல்லது மூன்று மடங்காகும் என்றால் முன்பின் யோசிக்காமல் பணத்தைக் கொண்டுபோய் கொட்டுபவர்களில் தமிழர்களை மிஞ்ச யாரும் இல்லை. நகைச்சீட்டு, புடவைச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு என்று அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல சீட்டுகள் நடக்கும். எல்லாம் ஏமாற்று வேலைகள்தான்.

இந்த வகையில் தற்போது தோன்றியிருப்பது "இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்" என்ற கோஷம். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பல பதிவுகள் இதை ஊக்கப்படுத்துகின்றன. இணையத்தில் பதினைந்து நிமிடங்கள் செவழித்தால் போதும். மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று தடாலடியாக எழுதுகிறார்கள்.

நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் என்பது ஒருவன் தன் உழைப்பைக்கொட்டி சம்பாதிக்க வேண்டும். அதுதான் உண்மையான சம்பாத்தியம். கானல்நீரைக்கண்டு ஏமாந்து போகாதீர்கள்.

திங்கள், 19 மே, 2014

எனது பெங்களூரு விஜயம்

திரு GMB யைப் பார்க்க நான் செய்த முஸ்தீபுகளை போன பதிவில் எழுதியிருந்தேன். நான் புறப்படுவதற்கு முன் தினம் அவர் அனுப்பிய செய்தியில் என்னை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். நான் மிகவும் மகிழ்வுற்றேன். ஏனெனில் இப்போது பெங்களூரு பூதாகாரமாக வளர்ந்துள்ளது என்று கேள்விப்பட்டிருந்தேன். நண்பர் வீட்டிற்கு எப்படி போய்ச்சேரப் போகிறோம் என்ற கவலை மனதினுள் அரித்துக் கொண்டிருந்தது. அவர் அனுப்பிய செய்தியினால் அந்தக் கவலை மறைந்தது.

ஆனால் வேறு கவலைகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. "தெனாலி" படத்தில் கமலஹாசன் சொல்லுவாரே அந்த மாதிரி கவலைகள்.

நான் போகும் ரயில் இரவு 1 மணிக்கு. நான் நேரத்தோடு ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். இல்லாவிட்டால் பஸ் கிடைக்காது. அப்படி நேரத்தோடு ஸ்டேஷன் போய்விட்டால், ரயில் வரும்போது தூங்கிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை.

அப்படி ரயில் வரும்போது நான் விழித்திருந்து என் கம்பார்ட்மென்டில் ஏறின பிறகு என்னுடைய பெர்த் காலியாக இருக்குமா? அதில் யாராவது படுத்துக் கொண்டிருந்தால் அவருடன் வாக்குவாதம் செய்யவேண்டி வருமோ என்ற கவலை.

அப்படி நடக்காமல் பெர்த் கிடைத்த பிறகு ரயில் விபத்தில்லாமல் பெங்களூரு போய்ச்சேருமா என்ற கவலை.

டிடிஆர் உடனே வந்து டிக்கெட்டைச் செக் செய்யவில்லையானால் அவருக்காக விழித்துக்கொண்டிருக்கவேண்டுமே என்ற கவலை.

நடுவில் எங்காவது ரயில் கொள்ளைக்காரர்கள் வந்து என் உடமைகளைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை. என்ன உடமைகள்? இரண்டு செட் பழைய டிரஸ்கள். பணத்தை ஜட்டியில் இருக்கும் பாக்கெட்டில் பாலிதீன் கவரில் போட்டு பத்திரமாக வைத்து ஒரு சேப்டி பின் குத்திவிட்டு புறப்படுவதுதான் என் மாமூல் வழக்கம். ஆகவே பணத்தைப் பற்றி அதிகம் கவலை இல்லை.

பாத்ரூம் போனால் திரும்பி வருவதற்குள் என் பேக்கை யாராவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை.

நடுவில் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து மேல் லோகம் போய் விட்டால் என் உடலை யார், எப்படி என் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்ற கவலை.

செல்போன் சார்ஜ் தீர்ந்து போனால் என்ன செய்வது என்ற கவலை.

பெங்களூர் ஸ்டேஷனுக்கு திரு GMB  வராமல் போனால் என்ன செய்வது என்ற கவலை.

இப்படிப் பலவிதமான கவலைகளுடன் ஸ்டேஷனில் தூக்கம் வராமல் உட்கார்ந்து கொண்டிருந்தபோது நான் செல்லவேண்டிய ரயில் வந்து சேர்ந்தது. என்னுடைய பெர்த் காலியாக இருந்தது. என் பேக்கையே தலையணையாக வைத்துக்கொண்டு படுத்தேன் ஏனென்றால் தூங்கும்போது பேக்கை யாரும் களவாடக் கூடாதல்லவா?

முன்பு டிடிஆர் என்று ஒரு கருப்புக்கோட்டு போட்ட ஆசாமி வந்து பயணிகளை வாதித்துக்கொண்டு இருப்பார். ஒழுங்காக டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தாலும் அவர் வந்து நம் டிக்கெட்டை செக் பண்ணிவிட்டுப் போகும் வரையிலும் ஒரு இனம் தெரியாத பயம் மனதிற்குள் இருக்கும். அதாவது ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ரயில்வே டிபார்ட்மென்டை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் அந்த அதிகாரிகளின் மனதில் வேறூன்றி இருக்கும். அது போலத்தான் நடந்துகொள்வார்கள்.

இப்போதெல்லாம் ரயில்வே டிபார்ட்மென்டுக்கு தங்கள் பயணிகள் மேல் அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது போல் இருக்கிறது. நான் சென்ற ரயிலில் ஒரு டிடிஆரையும் காணவில்லை. திரும்பி வரும்போதும் அப்படியே. என்ன ஒரு நம்பிக்கை. மக்களும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் பயணித்துக்கொண்டு இருந்தார்கள்.

ரயில் வந்தவுடன் நான் என் கேரேஜை கண்டு பிடித்து ஏறி என் சீட்டைத் தேடினேன். என் சீட் லோயர் பெர்த். மாமூலாக யாராவது அதில் படுத்துக்கொண்டு இருப்பார்கள். எழுப்பி இது என்னுடைய பெர்த் என்று சொன்னால், என்னுடையது அப்பர் பெர்த், அதில் படுத்துக்கொள்ளுங்களேன் என்று புத்திமதி கூறுவார்கள். நம்முடைய உரிமையை நிலை நாட்ட ஒரு வாக்குவாதம் நிகழ்த்த வேண்டும்.

இந்த மாதிரி வாக்குவாதம் செய்து அதில் ஜெயித்து நம் பெர்த்தை நாம் அடைந்தோமானால் வாதத்தில் வெற்றி பெற்ற எண்ணம் மட்டுமே மிஞ்சும். தூக்கம் போய்விடும். அந்த மாதிரி எதுவும் நடக்காமல் என் பெர்த் காலியாக இருந்தது. எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். பெர்த்தில் என்னுடைய பேக்கை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தேன். ஏனெனில் பேக்கை நான் தூங்கும்போது யாரும் திருடிக்கொண்டு போய்விடக்கூடாதல்லவா?

பிறகு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பெங்களூர் போய்ச் சேர்ந்தேன். ரயிலை விட்டு இறங்கினால் பிளாட்பாரத்தில் ஒரே திருவிழாக்கூட்டம். நண்பரை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறோம் என்ற புதுக்கவலை என்னை பிடித்துக்கொண்டது. என் நல்ல காலம் ஒரு நிமிஷத்தில் திரு.GMB  என் அருகில் வந்து என் கையைப் பிடித்துக்கொண்டார். இருவருமாக ஸ்டேஷனுக்கு வெளியில் வந்தோம். ஆட்டோ புக் செய்யும் இடத்திற்குச் சென்று ஒரு ஆட்டோ பிடித்து அவர் வீட்டிற்கு போய் சேர்ந்தோம்.

அங்கு சென்றதிலிருந்து மாலை அவர் வீட்டை விட்டு புறப்படும் வரை நடந்தவைகளை திரு.GMB அவர்கள் தன்னுடைய பதிவில் விவரமாக எழ்தியிருக்கிறார் அதை மறுபடியும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அதில் நான் ஒரு கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தம்பதியினர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு என்னை உபசரித்து தங்கள் அன்பு வெள்ளத்தில் என்னை திக்குமுக்காடச் செய்து விட்டனர். இந்த அன்புக்கு நான் எப்படி எந்த ஜன்மத்தில் கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.


திருGMB தம்பதியினர்

பிற்பகலில் திரு GMB தம்பதியினர் என்னை தும்கூர் ரோட்டில் 15 கி. மீ. தூரத்திலுள்ள பகவத் கீதா மந்திருக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். பகவத் கீதை ஸ்லோகங்கள் முழுவதையும் நான்கு பாஷைகளில் அங்கு கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். நடுவில் விஷ்ணுவின் விஸ்வரூப சிலை ஒன்றும் இருக்கிறது. கீழ் தளத்தில் காயத்ரி தேவியின் சந்நிதி இருக்கிறது. கண்ணன் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த காட்சியை தத்ரூபமாக வடித்திருக்கிறார்கள். நான் அங்கு எடுத்த சில போட்டோக்கள்.







திரு GMB எனக்கு அன்பளிப்பாக கொடுத்த ஓவியம். இது அவரே கைப்பட வரைந்தது. 65 வயதில் தஞ்சாவூர் பெயின்டிங்க் போட தானாகவே பழகி பல படங்கள் வரைந்துள்ளார்.(அதிகாலையில் போட்டோ எடுத்த போது தூக்கக் கலக்கத்தில் காமிராவின் கைப்பிடியும் போட்டோவில் சேர்ந்துவிட்டது.)


திரு GMB அவர்கள் எழுதி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.

16 சிறு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மணிமேகலைப்பிரசுரம் பிரசுரித்துள்ளது. நடைமுறை ழ்க்கையில் நாம் சந்திக்கும், சந்தித்தபின் அவைகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் போகும் நிகழ்வுகளை அருமையாக சிறுகதை வடிவில் தொகுத்திருக்கிறார். படித்த பின் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.

இந்த இரண்டு அன்பளிப்புகளும் ஆத்மார்த்தமாக கொடுக்கப்பட்டவை. அவைகளை பெரும் பொக்கிஷமாக கருதி பாதுகாப்பேன். என் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

மாலையில் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்படும்போது திருமதி GMB  தன் கையால் செய்த இனிப்புகள் கொண்ட ஒரு டப்பாவை என்னிடம் கொடுத்தார்கள். கோவை வந்தவுடன் அதைத் திறந்து பார்த்தேன். அருமையான பொரிவிளங்காய் உருண்டைகள். பாதிக்கு மேல் நானே சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தன. சர்க்கரை, நெய்யுடன் அன்பும் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பல்லவா அவை.

ஒரு இனிய நண்பருடன் ஒரு நாள் கழித்த நினைவுகள் என்றும் என் மனதில் பசுமையாகத் தங்கியிருக்கும்.

சனி, 17 மே, 2014

நானும் GMB யும்.


திரு GMB  யின் பிளாக்கை அறியாதவர்கள் பதிவுலகை அறியாதவர்கள் என்றே கூறலாம். தன்னுடைய எழுத்துக்களினாலும் எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊரிலுள்ள பதிவர்களைச் சந்திப்பதிலும் அவர் தனித்து நிற்கிறார். அவர் பதிவுலகத்தில் கால் பதித்த நாட்களிலிருந்து அவர் பதிவுகளை ரசித்து வந்திருக்கிறேன். மத்திய அரசு நிறுவனமான BHEL ல் வேலை பார்த்து ஓய்வு பெற்று பெங்களூரில் வசித்து வருகிறார்.

ஒரு முறை அவர் கோவைக்கு வந்திருந்தபோது என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். நான் இதிலென்ன கஷ்டம் தாராளமாக வாருங்கள் என்று பதில் போட்டிருந்தேன். அவர் என் வீட்டை கண்டுபிடித்து தம்பதி சமேதராக வந்தே விட்டார். நேரம் போறாமையினால் சிறிது நேரமே இருந்து விட்டுப் புறப்பட்டார். இது நடந்து ஏறக்குறைய மூன்று வருடம் இருக்கும்.

போன வருடம் நானும் என் நண்பர் ஒருவரும் பெங்களூர் போகவேண்டி இருந்தது. நான் இவரை சந்திக்க ஆவல் கொண்டு அவருடைய வீட்டு விலாசம், டெலிபோன் நெம்பர் எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் பெங்களூரில் நாங்கள் எங்களை வரவேற்ற நண்பரின் அன்புப் பிடியில் சிக்கி விட்டபடியால் இவருடைய வீட்டிற்கு செல்ல இயலாமல் போனது. போன் செய்து என் இயலாமையைக் குறிப்பிட்டு சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டிருந்தேன்.  அவரும் பெரிய மனதுடன் மன்னித்தேன் என்றார்.

ஆனால் இந்த நிகழ்வு அவருடைய மனதிலிருந்து மறையவில்லை என்று பிற்பாடுதான் தெரிய வந்தது. அது எப்படியென்றால், சென்ற மாதம் நான் திருச்சிக்கு என் பேரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்குப் போயிருந்தேன். அப்போது ஒரு இடைவெளி கிடைத்ததைப் பயன்படுத்தி
திரு.வைகோ. அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன். அவரை அறியாதவர்களும் யாரும் இருக்கமாட்டார்கள்.

{ஒரு முக்கிய குறிப்பு: பிரபல பதிவர்கள் ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த மாதிரி (என்னையும் சேர்த்து?!) பிரபல பதிவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதைப்பற்றி பதிவுகள் போடவேண்டும்.}

நிற்க, நான் வைகோவை சந்தித்தது பற்றி ஒரு பதிவில் எழுதியிருந்தேன். அதைப் படித்த திரு GMB. என் மீது ஒரு அஸ்திரம் ஏவிவிட்டார். அது என் நடு மனத்தில் ஆழமாகப் பாய்ந்து விட்டது. "பெங்களூர் வந்திருந்தும் என்னைப் பார்க்காது போய்விட்டீர்களே" என்ற அஸ்திரம்தான் அது.

இனி என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போதுதான் எங்கோ படித்திருந்த ஒரு பொன்மொழி நினைவிற்கு வந்தது. பாக்கி வைக்காமல் தீர்க்கவேண்டிய சமாசாரங்கள் மூன்று உண்டு. 1. மனிதனின் கடமைகள். 2. தான் வாங்கிய கடன். 3. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு. இவைகளைத் தீர்க்காவிட்டால்
அவை மீண்டும் வளர்ந்து ஒருவனை கஷ்டத்திற்குள்ளாக்கும். ஆகவே GMB யை சந்திக்கவேண்டிய கடமை இருக்கிறது. அதை தீர்க்கவேண்டும். அதுவும் எனக்கு வயதாகிக்கொண்டு இருப்பதால் அதை தள்ளிப்போட முடியாது என்று முடிவு செய்து, உடனடியாக பெங்களூருக்கு போகவர ரயில் டிக்கட் புக் செய்து விட்டு இவருக்கு செய்தி அனுப்பினேன்.

உங்கள் வீட்டு விலாசமும் வரும் வழியையும் தெரிவியுங்கள் என்று பல முறை மெயில் அனுப்பியும் மனுஷன் பதிலே போடவில்லை. சரி என்ன ஆனாலும் ஆகட்டும், பிளான் பிரகாரம் பெங்களூர் போவோம் என்று முடிவு செய்திருந்தேன். நான் புறப்படும் தினத்திற்கு முதல் நாள் இவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் என்ன சொல்லியிருந்தார் என்றால்............

மீதி அடுத்த பதிவில்.

திங்கள், 12 மே, 2014

கட்டைப் பேனாக்கள்

நாம் எழுத்தாணி உபயோகப்படுத்திக்கொண்டிருந்தபோது ஐரோப்பாவில் இறகுப் பேனாவை பயன்படுத்தினார்கள். பேப்பர் கண்டுபிடிக்காதபோது அவர்கள் மரப்பட்டைகளை உபயோகப்படுத்தினார்கள்.
இதிலிருந்து மாறி வந்தது தான் கட்டைப் பேனாக்கள். இவை 1960 ம் வருடத்திற்கு முன் மிகவும் பிரபலமாக இருந்தன.


இவைகளை தொட்டு எழுதும் பேனாக்கள் என்றும் கூறுவார்கள். சர்க்கார் ஆபீசுகளில் ஒவ்வொரு மேஜையிலும் தவறாது இடம் பெற்றிருக்கும்.
இந்தப் பேனாவை உபயோகித்து எழுதுவதற்கு நல்ல திறமையும் அனுபவமும் வேண்டும். அப்டிப்பட்ட அனுபவஸ்தர்கள் எழுதினால் எழுத்துக்கள் ஒரே சீராக இருக்கும். இல்லையென்றால் வரி ஆரம்பிக்கும்போது இங்க் அதிகமாகவும் வரி முடியும்போது எழுத்து மங்கலாகவும் இருக்கும்.

நான் இந்தப் பேனாக்களை உபயோகப்படுத்தியிருக்கிறேன். இதற்கு உபயோகிக்க இங்க் வில்லைகள் அந்தக்காலத்தில் பெட்டிக்கடைகளில் கிடைக்கும். ஒரு வில்லை காலணா (ஒன்றரை நயா பைசா) என்று ஞாபகம். காலணா என்பது நான் சிறுவனாக இருந்தபோது ஒரு கணிசமான தொகை. அதை வைத்துக்கொண்டு ஒரு இலந்தை வடகம் வாங்கலாம். ஒரு தேங்காய் பர்பி வாங்கலாம். அன்று ஒரு சிறுவன் கையில் காலணா இருந்தால் அவன் அன்று பள்ளியில் ஒரு பெரிய ஹீரோ.

இந்தப் பேனாக்கள் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்டவை. ஒரு முனையில் நிப் சொருக ஒரு அமைப்பு இருக்கும். அந்த நிப்பை சொருகி பின் மைக்கூட்டில் மையைத் தொட்டு எழுதவேண்டும். இதன் பின்னால் கண்டு பிடிக்கப்பட்டதுதான் பவுன்டன் பேனா என்று சொல்லப்படுபவை. இதில் இரண்டு வகை உண்டு. கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றும் வகை. இன்னொன்று தானே இங்க் நிரப்பிக்கொள்ளும் வகை.

பேனாவின் கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றுவது ஒரு பெரும் யுத்தம். இங்க்கை கீழே சிந்தாமல் இங்க் ஊற்றிய சிறுவர்கள் அநேகமாக இல்லை. அப்படி செய்து " அம்மாவிடம் "கடங்காரா" பட்டம் வாங்காதவர்கள் இல்லை. இத்தகைய பேனாக்கள் கூட அன்று மேலை நாட்டிலிருந்துதான் இறக்குமதியாகிக்கொண்டிருந்தன.  பிளேக் பேர்டு, ஸ்வேன், பார்க்கர், பைலட், ஷெஃபீல்டு ஆகியவை அன்று பிபலமானவை.

இந்தியா சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் பேனா தயாரிப்பு இங்கு தொடங்கியது. இங்குகளும் தயாரிக்கப்பட்டன. "கேம்லின்" தயாரிப்புகள்தான் இன்று மார்க்கெட்டில் நிரம்பிக்கிடக்கின்றன. நடுவில் சைனாவிலிருந்து "ஹீரோ" பேனாக்கள் திருட்டுத்தனமாக வர ஆரம்பித்தன. சும்மா சொல்லக்கூடாது. அந்தப் பேனாக்கள் உண்மையிலேயே நன்றாக இருந்தன. இன்றும் நன்றாக இருக்கிறது.


அந்தக் காலத்தில் "ஹீரோ" பேனா வைத்திருப்பதுதான் பேஷனாக இருந்தது.இப்போது அதன் மவுசு பெரிதும் குறைந்து விட்டது. விதம் விதமான ஹீரோ பேனாக்கள் வாங்கி சேமித்து வைத்திருந்தேன். அதை எல்லாம் இப்போது பேரன்களுக்கு கொடுத்து விட்டேன்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பால்பாய்ன்ட் பேனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. அவை வந்த புதிதில் அவைகளின் தரம் இன்று இருப்பதைப்போல் இருக்கவில்லை, எந்தப் புதிய கண்டு பிடிப்பு வந்தாலும் அதை எதிர்ப்பவர்கள் நம் நாட்டில் உண்டுதானே. குறிப்பாக பேங்க் ஆசாமிகள்.

செக்குகளில் பால் பாய்ன்ட் பேனாவால் கையெழுத்துப் போட்டால் செல்லாது என்றார்கள். அதற்கு அவர்க்ள கொடுத்த வியாக்யானம்தான் வேடிக்கை. பால்பாய்ன்ட் பேனாவால் எழுதும்போது கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும். அப்படி அழுத்தி செக் புக்கில் எழுதினால் கீழே இருக்கும் செக்கிலும் அந்தக் கையெழுத்தின் அடையாளம் விழுந்து விடும். அதை வைத்து யாராவது வேற்று ஆட்கள் அந்தக் கையெழுத்தை ஒரிஜினல் மாதிரி போட்டு பணத்தைக் களவாண்டு விடுவார்கள், அதனால் பால்பாய்ன்ட் பேனா உபயோகப்படுத்தக்கூடாது என்றார்கள்.

அப்படி சொன்னவர்கள் இன்று எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. பேங்குகளில் இங்க் பேனாவை மருந்துக்குக்கூட காண முடிவதில்லை. எல்லோரும் பால் பாய்ன்ட் பேனாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இன்று பால்பாய்ன்ட பேனாக்களில் எத்தனை வகை இருக்கறது என்று யாராலும் சொல்ல முடியாதென்று நினைக்கிறேன். ஒரு சமயம் பள்ளிச் சிறுவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்குத்தான் லேட்டஸ்ட் சமாச்சாரங்கள் தெரியும். கடைகளில் போய் இங்க் பேனா வேண்டும் என்றால் மேலும் கீழும் பார்க்கிறார்கள்.

இப்போது கம்ப்யூட்டர் வந்து விட்டது. பேப்பரில் எழுதுவது என்பதே ஏறக்குறைய மறந்து போக ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பேனாக்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் இன்னும் ஹீரோ பேனாவும் கேம்லின் இங்க்கும் வைத்திருக்கிறேன். அவைகளை அவ்வப்போது உபயோகப்படுத்தவும் செய்கிறேன்.

சனி, 3 மே, 2014

ஒரு வில்லங்கமான சந்தேகம்.

பாரம்பரியமாக சொல்லப்படுகின்ற அல்லது நடைமுறையில் இருப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது பொதுவான பெரியோர்களின் கருத்து. ஏனெனில் அவைகளில் பல உட்பொருள்கள் மறைந்திருக்கலாம். அதை நாம் அறியாமல் இருக்கலாம். ஆகவே அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது தோன்றுகின்றன. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றிய மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். (நம்ம அரச மரத்தைத்தான் போதி மரம் என்று புத்தர்கள் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?)

இந்த மாதிரி சந்தேகங்கள் வருவது பாவ லிஸ்டில் சேருமா  என்று நான் அறியேன். சித்திரகுப்தனை ஒரு நாள் பார்த்து இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். பார்வதி கல்யாணப்படம். பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க பரமசிவன் தானம் வாங்கிக்கொள்கிறார்.


இந்த படம் எனக்கு சமீபத்தில் வந்திருந்த ஒரு கல்யாண அழைப்பிதழில் இருந்தது. செல்போன் கேமராவினால் எடுக்கப்பட்டது. படம் அவ்வளவு துல்லியமாக வரவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு வந்த கல்யாணப் பத்திரிக்கைகளிலும் இருக்கலாம்.

இந்த தானம் கொடுப்பதைப்பற்றி ( தாரை வார்ப்பது என்றாலும் தானம் கொடுப்பது என்றாலும் ஒன்றுதான்) எனக்குத் தெரிந்த ஐதீகம் என்னவென்றால், தானம் கொடுப்பவர் கை உயர்ந்து இருக்கவேண்டும். அடுத்த படியில் அதாவது அதற்குக் கீழே தானம் கொடுக்கப்படும் பொருள் இருக்கவேண்டும். அதற்குக் கீழே தானம் வாங்குபவரின் கை இருக்கவேண்டும். சரிதானே.

இப்போது படத்திற்கு வாருங்கள். பெருமாளின் கை மேலே இருக்கிறது. அவர் கெண்டியிலிருந்து நீர் வார்க்கிறார். தானம் கொடுக்கும்போது இந்த மாதிரி நீர் வார்ப்பது அவசியம்.

மகாபாரதத்தில் குருக்ஷேத்திர யுத்தத்தில் இந்திரன் பிராமண வேடத்தில் கர்ணனை அணுகி அவனுடைய புண்ணியங்களை தானமாக கொடுக்கும்படி கேட்கிறான். அப்போது அங்கு தண்ணீர் இல்லாததால் தன் உடம்பிலிருந்து வழியும் ரத்தத்தையே வார்த்து தானம் கொடுத்ததாக கதை படித்திருப்பீர்கள்.

இப்படி பெருமாள் நீர் வார்க்கும்போது மேலே பார்வதியின் கையும் அதன் கீழே ஈஸ்வரனின் கையும் இருப்பதுதானே முறை. ஆனால் இந்த மாதிரி பல படங்களில் ஈஸ்வரன் கை மேலேயும் பார்வதியின் கை கீழேயும் இருப்பது மாதிரி காட்டப்படுகிறது. இது சரியல்ல என்பது என்னுடைய கருத்து. 

இந்தப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த நுணுக்கத்தைப் பார்த்துப் பார்த்து எனக்கு இந்தப் படங்களின் மேல் இருக்கும் மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. என் கருத்து சரிதானா என்று வாசகர்கள் சொல்லுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திங்கள், 28 ஏப்ரல், 2014

பேனாக்களும் நானும்


பேனாக்கள் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. பழங்காலத்தில் தமிழ் நாட்டில் பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள் என்று கேட்டிருக்கிறோம். நான் அப்படி எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பார்த்திருக்கிறேனே தவிர அப்படி எழுதுபவர்களைப் பார்த்ததில்லை. இந்தப் பழக்கம் தமிழ் நாட்டில் மட்டும்தான் இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்குதான் பனை மரங்கள் உண்டு. மற்ற தேசங்களில் எப்படி எழுதினார்க்ள என்பதற்கு ஒரு ஆராய்ச்சிதான் செய்யவேண்டும். அந்த ஆசை எனக்கு இப்போது இல்லை.


நான் ஒரு முறை காரைக்குடிக்குப் போயிருந்தபோது அங்கு செட்டிநாட்டு பழம் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்குப் போயிருந்தேன். பல கலைநயம் பொருந்திய பழங்காலத்து பொருட்கள் அங்கு இருந்தன. அவை செட்டிநாட்டு நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் பொருட்கள். அதில் ஒரு எழுத்தாணியையும் பார்த்தேன். நான் அதற்கு முன் எழுத்தாணியைப் பார்த்தது இல்லை. அது ஒரு பக்கம் கத்தியும் மற்றொரு பக்கம் ஒரு கூரான ஊசியும் கொண்டு ஒரு பேனாக் கத்தியைப் போல் இருந்தது. இது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டதற்கு அவர் இதுதான் எழுத்தாணி என்று சொன்னார்.


உடனே அதன் விலையைக் கேட்டு அதை வாங்கிக்கொண்டேன். நான் ஒரு கம்பனாக மாறிவிட்டதாக ஒரு கற்பனை தோன்றியது. பழங்காலத்து நாகரிகத்தை பேணிக்காக்கும் ஒரு பெருமிதம் மனதில் உண்டானது. இப்போதும் அதை என் வீட்டு ஷோகேசில் வைத்திருக்கிறேன். பல முறை அதை என் சகதர்மிணி தூக்கிப் போடப் பார்த்தும் என் கவனத்தினால் அது காப்பாற்றப்பட்டு இன்று வரை தமிழனின் நாகரிகச் சின்னமாக, நானும் ஒரு தமிழன் என்று பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது.

தொடரும்...

வியாழன், 17 ஏப்ரல், 2014

சுற்றுலா போகலாம் வாங்க


இங்கு கொடுத்திருக்கும் லிங்க் பல மாதங்களுக்கு முன் திரு GMB அவர்கள் எனக்கு அனுப்பினது. இதில் குறிப்பிட்டுள்ள ஊர்களின் பெயரை கர்சரால் சொடுக்கினால் ஒரு லிங்க் தோன்றும். அந்த லிங்க்கை சொடுக்கினால் அந்த ஊர்களுக்கு செலவில்லாமல் போய் வரலாம். இல்லை, நான் அந்த மாதிரி ஓசியில் டூர் செல்ல மாட்டேன் என்று நினைப்பவர்கள் தாங்கள் விரும்பும் தொகையை எனக்கோ அல்லது  திரு GMB அவர்களுக்கோ அனுப்பலாம்.



Spectacular Panoramas and 3D Tours.

Enjoy Panoramic Views
...click on any one place and enjoy.. .... what a wonderful way to tour the world from your computer chair!
UN Plaza Hotel, New York, USA   •   Oahu, Hawaii, USA   •   Las Vegas, Nevada, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •   Golden Gate Bridge, USA   •   Statue of Liberty, New York, USA   •   Manhattan, New York, USA   •   Hollywood, California, USA   •   San Juan and Colorado rivers, USA   •   Goosenecks, Utah, USA   •   Mono Lake, California, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •  Chicago, Illinois, USA   •  Los Angeles, California, USA   •   Kiev, Ukraine   •   Ay-Petri, Ukraine   •  Dubai, UAE   •   Dubai, Islands, UAE   •   Palm Jumeirah, Dubai, UAE   •  Bangkok, Thailand   •   Sankt-Moritz, Switzerland   •   Cape Good Hope, South Africa   •   Cape-Town, South Africa   •   Moscow, MSU, Russia   •  Moscow, Kremlin, Bolotnaya Square , Russia   •   Moscow, Russia   •  Moscow Kremlin, Russia   •   55.748765;37.540841, Russia   •   Moscow City, Russia   •   Kremlin, Moscow, Russia   •   Moscow City, Russia   •  Trinity Lavra of Sait Sergius, Russia   •   Saint-Petersburg, Russia  •   New Jerusalem Monastery, Russia   •   Saint Petersburg, Russia   •  Novodevichy Convent. Moscow, Russia   •   Ramenki,Moscow, Russia   •  MKAD, Moscow, Russia   •   Moscow, Russia   •  Moscow, Russia   •  Krokus Expo Center, Moscow, Russia   •   Moscow Region, Russia   •  Moeraki Boulders, New Zealand   •   Fiordland, New Zealand   •   Nepal, Nepal   •   Maldives, Maldives   •  Kuala-Lumpur, Malaysia   •   Grimsvotn, Iceland   •   Amsterdam, Holland   •   Neuschwanstein Castle, Germany   •  Egyptian Pyramids, Egypt   •   Hong Kong, China   •   The Iguassu Falls, Brazil   •  Twelve Apostles Marine National Park, Australia   •   Sydney, Australia   •   Buenos Aires, Argentina   •   .