திங்கள், 7 ஏப்ரல், 2014

திருச்சியில் ஒரு இளைஞர்


இந்தப் பதிவு மிகவும் தாமதாகப் பதிவிடுகிறேன். காரணம் சோம்பல் மற்றும் உடல் சோர்வு.

திருச்சி பதிவர் வை.கோபாலகிருஷ்ணனைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். தற்போது இவருடைய சிறுகதைகளுக்கு ஒரு விமர்சனப் போட்டி நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

பல நாட்களாகவே இவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். குறிப்பாக இவர் வீட்டு ஜன்னலைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசைதான் அதிகம். இந்த ஜன்னலைப் பற்றி இவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். போன வாரம் திருச்சி போகவேண்டிய அவசியம் ஒன்று ஏற்பட்டது. அங்கு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பேரன் படிப்பை முடித்து விட்டான்.

இப்போது வாழ்க்கையில் பல புது கலாச்சாரங்கள் தோன்றியிருக்கின்றன. அவைகளில் கல்லூரிகளில் படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடத்துவதும் ஒன்று. ஆனால் இது உண்மையில் பட்டமளிப்பு விழா அல்ல. பட்டமளிப்பு விழா பல்கலைக் கழகம்தான் நடத்த முடியும். ஆனால் அது போன்ற ஒரு மாயை விழாவை இறுதி வைபவமாக கல்லூரிகள் நடத்துகின்றன. அதைப் பார்க்க மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் வருகிறார்கள்.

நானும் என் மனைவியும் இந்த விழாவிற்காக திருச்சி செல்வதென்று முடிவு எடுத்தோம். அப்போது எனக்கு எப்படியாவது "வைகோ" வை (அரசியல்வாதி வைகோ அல்ல) சந்தித்து விடுவது என்று முடிவு செய்தேன். பல விதமான பிரயாணத்திட்டங்கள் தீட்டினதில் விழா அன்று காலை காரில் சென்று விட்டு மறு நாள் திரும்புவது என்று முடிவாயிற்று.


ஆண்டார் தெரு ஆரம்பம்

இந்த திட்டத்தின் பிரகாரம் திருச்சியில் எனக்கு மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஒரு இடைவெளி கிடைத்தது. சரி, இந்த இடைவெளியில் வைகோவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை எனக்கு எப்போது வந்தாலும் சௌகரியமே என்று கூறினார்.


வைகோ வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் மதுரா ஹோட்டல்

காரில் செல்வதற்கு டிரைவர் இல்லை. நானே ஓட்டிக்கொண்டு போக  பயமாக இருந்தது. திருச்சி எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊராக இருந்தாலும் நான் திருச்சியைப் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். புது ரோடுகள், மேம்பாலங்கள் என்று திருச்சி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறது. ஆகவே டவுன் பஸ்சில் போய் வந்து விடுவது என்று முடிவு செய்தேன்.

இங்கு நான் ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டேன். அது கதிரவனின் கருணை. மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கோடை காலங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் அது இருபது வருடங்களுக்கு முன். இப்போது எனக்கு இருபது வயது கூடியிருக்கிறது என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. நான் பார்க்காத திருச்சி வெய்யிலா என்ற மமதையுடன் கிளம்பி விட்டேன்.

நான் செய்த சமீப காலத் தவறு இதுதான். வெயில் தாக்கத்தில் நா வரண்டு போகிறது. நடை தள்ளாடுகிறது. எங்கே மயங்கி விழுந்து விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. பஸ்சில் போய் மெயின் கார்டு கேட்டில் இறங்கி வைகோ வீட்டிற்கு ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்த அனுபவம். வழியில் ஒருவன் கரும்புச் சாறு விற்றுக்கொண்டிருந்தான். ஒரு கிளாஸ் ஜூஸ் வாங்கி பக்கத்தில் ஒரு கடை வாசலில் உட்கார்ந்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது.


வைகோ வசிக்கும் காம்ப்ளெக்சின் முன்புறத்தோற்றம்

பின்பு நடையைக் கட்டினேன். வைகோ வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு வந்தது. இந்த இடங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பரிச்சயமானவைதான். ஆகவே வைகோ வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
நான் அவர் வசிக்கும் காம்ளெக்ஸ் வாசலில் நுழையும்போதே "வாங்கோ வாங்கோ" என்று ஒரு அசரீரி கேட்டது. குரல் வரும் திசை நோக்கி மேலே பார்த்தேன். வைகோ தனது இரண்டாவது தளத்தில் இருந்து என்னைப் பார்த்து விட்டு வரவேற்பு கொடுத்திருக்கிறார்.

லிப்டில் ஏறி இரண்டாவது தளத்திற்குப் போனேன். லிப்டு கதவிற்கே வந்து என்னை வரவேற்று தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். அவரது துணைவியாரும் வீட்டு வாசலிலேயே என்னை வரவற்றார்கள். வீட்டுக்குள் என்னை அவருடைய பெட்ரூம் கம் ஆபீஸ் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏசி வைத்திருக்கிறார். வெய்யிலில் வந்ததற்கு ஏசி சுகமாக இருந்தது.


வைகோ தம்பதியினர்

குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். திருச்சியில் இப்போது கடும் தண்ணீர் பஞ்சம் போலிருக்கிறது. திருச்சி வரும் வழியில் காவிரியைப் பார்த்த போது அதில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆயிரக் கண்க்கான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லுகிறார்கள். அதனால் திருமதி வைகோ எனக்கு மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அம்மா எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நிறுத்தினார்கள்.


இரு "பிரபல" பதிவர்கள்

கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றதற்கு மிகவும் தயங்கி ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். பிறகு பரஸ்பரம் குடும்ப க்ஷேமங்கள் குறித்து விசாரித்தோம். ஒரு ஐந்து நிமிடம் பேசுவதற்குள் ஆறு தடவை சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்க்ள. இருபது வருடத்திற்கு முன்பாக இருந்தால் அவை அனைத்தையும் கபளீகரம் செய்திருப்பேன். இப்போது முடியவில்லை.

நான் அவரைத் தொடர்பு கொண்டபோதே எனக்கு அய்யர் விட்டு டிகிரி காப்பி வேண்டும் என்று சொல்லியிருந்தேன். திருமதி வைகோ நான் கேட்டுக்கொண்டபடி, கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து கொடுத்தார்கள். பழைய கால முறைப்படி டவரா டம்ளரில் காப்பி வந்தது. டம்ளரைப் பார்த்து நான் பயந்தே போனேன். உண்மையிலேயே டம்ளர் ஆதி காலத்துதான். கால் லிட்டர் கொள்ளளவு கொண்டது. நான் திருமதி வைகோ அவர்களிடம் கெஞ்சி அதல் பாதியை எடுத்துக் கொள்ளச் செய்தேன். உண்மையிலேயே டிகிரி காப்பிதான்.


வைகோ வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் மலைக்கோட்டை

வைகோ அவருடைய பதிவுகளில் குறிப்பிட்டபடி அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை துல்லியமாகத் தெரிகிறது. ஸ்வாமி ஊர்வலங்கள் வந்தால் வீட்டை விட்டு நகராமலேயே ஸ்வாமியைத் தரிசித்துக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவருடன் அளவளாவிக்கொண்டு  விடை பெற்றேன். அந்த ஒரு மணி நேரமும் அவர்கள் காட்டிய அன்பையும் விருந்தோம்பலையும் என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது.

நான் அவர்களிடமிருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டு நான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன். இந்த சந்திப்பு நான் மறக்க முடியாத சந்திப்பு. நாங்கள் பிரிந்து இரண்டு மணி நேரத்திலேயே இந்த சந்திப்பைப் பற்றி பதிவு போட்டு விட்டார். லிங்க் இதோ.

http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html

என்னால் அப்படிப்போட முடியவில்லை. அவருடைய சுறுசுறுப்பிற்கும் உழைப்பிற்கும் முன்னால் நான் ஒரு வாழைப்பழச்சோம்பேறி. அதனால்தான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் இது ஒரு தாமதமான பதிவு என்று குறிப்பிட்டேன்.

வைகோ தம்பதியினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஒரு அவசர (அவசிய) பதிவு

                                             
என் பதிவைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

என்னுடைய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் 500 GB  கொண்டது. இதில் C,D,E ஆகிய பிரிவுகள் இருக்கின்றன.

நான் பாட்டுகள், மகாபாரத விடியோக்கள், கதைகள், வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி போன்ற கட்டுரைகள், சமையல் குறிப்புகள், பிரயாணக் கட்டுரைகள் என்று பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். இந்த வயதிற்குப் பின் (80) என்ன முன்னேற்றம் காணப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இளம் வயதில் இந்தக் கட்டுரைகளைப் படித்திருந்தால் நாம் எவ்வளவு முன்னேறியிருப்போம் என்று ஒரு பகல் கனவு காண்பதற்காகத்தான் இவைகளை சேகரிக்கிறேன்.

சமையல் குறிப்புகள் எதற்காக சேமிக்கிறேன் என்றால் இவைகளை என் மனைவி பார்த்து ஒரு நாளாவது அது போல் செய்து கொடுக்க மாட்டார்களா என்ற நப்பாசைதான் காரணம். இரண்டாவது காரணம் இந்தக் குறிப்புகளை யூட்யூப்பில் சொல்லும் சமையல் நிபுணிகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

ஹார்டு டிஸ்கின் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. என்ன செய்யலாம் என்று வயதானபின் மிகவும் செயல் குறைந்து போன என் மூளையை கசக்கி யோசித்ததில் ஒரு வெளியிலிருந்து செயல்படும் ஹார்டு டிஸ்க் வாங்கிக்கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. இதற்குக் காரணம் இன்டர்நெட்டில் பல இடங்களில் வந்த கட்டுரைகளைப் படித்ததின் விளைவு..

என் ஆஸ்தான கம்ப்யூட்டர் டாக்டரும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டார். ஒரு வேகத்தில் நேற்று கம்ப்யூட்டர் கடைக்குப் போய் Seagate 1 TB அளவுள்ள ஒரு எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். ஒரு அனாமத்து கணக்கில் வந்த ஐயாயிரம் ரூபாய் பாக்கெட்டில் துள்ளிக்கொண்டு இருந்ததும் மற்றொரு காரணம். இதன் விலை 5300 ரூபாய் ஆயிற்று.

ஆக மொத்தம் இன்னொரு வெள்ளை யானையை வாங்கியாயிற்று. இரவு முழுவதும் இந்த யானையை எப்படி பராமரிப்பு செய்வது என்ற கவலையில் தூக்கத்தைத் தொலைத்தேன். (முதலிலேயே தூக்கம் வருவதில்லை என்பது வேறு விஷயம்.)

இந்த விஷயத்தில் நம் பதிவுலக நண்பர்கள் உதவுவார்கள் என்கிற என் ஆழ்ந்த நம்பிக்கையின் பேரில் இந்த விஷயத்தை இங்கு பதிவிடுகிறேன். உங்களுக்குத் தெரிந்த யோசனைகளை பின்னூட்டத்தில் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

திங்கள், 31 மார்ச், 2014

நாய் பெற்ற தங்கப் பழம்


தங்கப் பழம் ஒரு விலை மிகுந்த பொருள்தான். ஆனால் ஒரு நாய்க்கு அது கிடைப்பதால் அதற்கு என்ன பயன்? அதுபோல் நான் பலவற்றைச் சேமித்து வந்தேன். பைகளைச் சேர்த்த கதையை சென்ற பதிவுகளில் பார்த்தோம். இப்போது அது போக சேகரித்த மற்றவை என்னவென்று பார்ப்போம்.

சிறு வயதில் மகாத்மா காந்தியின் சுய சரிதையைப் படித்திருக்கிறேன். சத்திய சோதனை என்பது அதன் பெயர். அது போக அவரைப்பற்றிய பல துணுக்கு செய்திகளையும் படித்திருக்கிறேன். அதில் என் மனதில் தைத்த ஒரு செய்தி - அவர் எந்தப் பொருளையும் வீண் பண்ணமாட்டார் என்பதே.

உடுத்தும் வேஷ்டி கிழிந்து விட்டால் அதை கிழித்து துண்டாக உபயோகப்படுத்துவார். அதுவும் கிழிந்தால் அதை இன்னும் சிறிய துண்டுகளாக்கி கைக் குட்டையாகப் பயன்படுத்துவார்.

அதே மாதிரி, எழுதும் காகித விஷயத்திலும் அவர் எந்தவொரு துண்டுக் காகிதத்தையும் வீணாக்க மாட்டார். தபால்கள் வரும் உறைகளையும் கூட கிழித்து அதன் உள் பக்கத்தை எழுதுவதற்கு உபயோகப்படுத்துவார்.

நான் மகாத்மா காந்தியின் சீடன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய கொள்கைகளை கடைப்பிடிப்பவன் அல்ல. இருந்தாலும் இந்த காகிதம், துணி விஷயங்கள் என்னை உடும்புப்பிடி போல் பிடித்துக்கொண்டன.

ஒரு பக்கம் காலியாக இருக்கும் காகிதங்கள், நன்றாக இருக்கும் கவர்கள், பழைய நோட்டுகளில் எழுதாமல் இருக்கும் காகிதங்கள், பழைய டைரியில் காலியாக இருக்கும் காகிதங்கள், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீசுகள், சாமான் வாங்கிய பில்கள், இப்படி எந்தக் காகிதத்தைப் பார்த்தாலும் அவைகளை சேகரித்து, ஒரே அளவாக வெட்டி, அதை நூலால் தைத்து பின்னால் உபயோகப்படும் என்று வைத்துக் கொள்வேன்.

இப்படியே சில கம்பெனிகள் ரெடி மேடாக சிறிய, நடுத்தர சைசில் நோட்டுப் புத்தகங்கள் போட்டு தங்கள் கஸ்டமர்களுக்கு கொடுப்பார்கள். அத்தகைய நோட்டுகள் கிடைத்தால் விடுவதில்லை. முடிந்தால் இரண்டு அல்லது மூன்று வாங்கி விடுவது வழக்கம். இவைகளையும் சேமித்து வைத்துக் கொள்வேன்.

எங்காவது வெளியூர் போனால் அங்கு பிளாட்பாரக் கடைகளில் இந்த மாதிரி சிறிய பாக்கொட் நோட்டுகள், குறிப்பெடுக்கும் நோட்டுகள் விற்பதைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு கால்கள் நகருவதில்லை. இரண்டு மூன்று ஐட்டங்கள் வாங்கினால்தான் மனம் அமைதிப்படும். இவ்வாறு சேமித்த நோட்டுகள் ஏராளம்.

ஆபீஸ் விஷயமாக பல மீட்டிங்குகள் நடக்கும். அந்த மீட்டிங்குகளில் எழுதுவதற்காக நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பார்கள். இவைகளை விடுவதில்லை.(கூடவே ஒரு பால் பாய்ன்ட் பேனாவும் கொடுப்பார்கள் - பேனாக்கள் கதை தனிக்கதை, அடுத்த பதிவில் கூறுகிறேன்)

வெளி நாடுகள் போகும்போது அங்கு ஆபீசில் கிடைக்கும் நோட்டுகளை ஒன்றுக்கு நான்காக லவட்டிக் கொண்டு வருவேன்.

புது வருட ஆரம்பத்தில் கம்பெனிகள் டைரி கொடுப்பது உங்களுக்குத் தெரியும். இப்படி நமக்கு யாராவது டைரி கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கியிருந்த காலம் போய், வருடத்திற்கு குறைந்தது அரை டஜன் டைரிகள் வரும் பொற்காலம் துவங்கியது. டைரிகள் எல்லாம் கோல்டு கில்ட் போட்டவைகள். பொதுவாக டைரிகளை பத்து நாளைக்கு மேல் எழுதுபவர்கள் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

நான் சாதாரண மனிதன். வந்த டைரிகளில் சாதாரணமாக இருக்கும் ஒன்றில் வெகு வேகமாக டைரிக் குறிப்புகள் எழுதுவேன். பத்து நாள் இது நடக்கும். அத்தோடு நின்று விடும். மற்ற டைரிகளை பத்திரமாக அலமாரியில் வைத்துக்கொள்வேன். ஏன் அப்படி டைரிகளை சேகரித்தேன் என்று இன்று யோசித்தால் ஒரு விடையும் கிடைக்க மாட்டேன் என்கிறது. எது கிடைத்தாலும் சேகரித்து வைத்துக் கொள்ளும் பைத்தியக்காரன் போல்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.

இப்படி சேர்த்த டைரிகள், நோட்டுப் புத்தகங்களை நான் ஒழுங்காக எந்த வேலைக்கும் பயன்படுத்திய ஞாபகமே இல்லை. பின்னால் உபயோகப்படும், அதனால் இப்போது வேண்டும். அவ்வளவுதான்.

இப்படிச்சேர்த்த நோட்டுப் புத்தகங்கள் இரண்டு மூன்று பெட்டிகள் ஆகி விட்டன. இப்போது அலமாரி, மற்றும் அட்டாலிகளை (Loft) சுத்தம் செய்யும்போது திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது. இவைகளை இனிமேல் என்ன செய்யப்போகிறோம்? என் சிற்றறிவிற்கு எட்டியவரையில் எந்த உபயோகமும் தெரியவில்லை. அப்புறம் எதற்கு இந்தக் கண்றாவிகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பட்டது.

இதில் என்ன கஷ்டம் வந்தது என்றால் இவைகளை என்ன செய்வது என்பதுதான். சிலவற்றை எதிரில் உள்ள மளிகைக் கடையில் கொண்டு போய் அவர்கள் பில் போட உதவுமென்று கொடுத்தேன். கொஞ்சம் நன்றாக இருப்பவைகளை அக்கம் பக்கம் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கொடுத்தேன். இப்படியாக எப்படியோ கஷ்டப்பட்டு எல்லா நோட்டுப் புத்தகங்களையும் தானம் கொடுத்து முடித்தேன்.

டைரிகள் மட்டும் இன்னும் என் புத்தக அலமாரியில் இருக்கின்றன. அவைகளை கொடுத்துவிட்டால் அப்புறம் அலமாரி காலியாக இருக்கும். ஒரு முனைவர் பட்டம் வாங்கின ஆராய்ச்சியாளரின் அலமாரி காலியாக இருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? இவருடைய மேல் மாடியும் காலிதான் போலிருக்கிறது என்று நினைக்க மாட்டார்களா? வக்கீல் வீட்டு அலமாரியில் சட்டப் புத்தகங்கள் இல்லாவிட்டால் அந்த வக்கீலுக்கு கேஸ்கள் வருமா? ஆகவே டைரிகள் இன்னும் இருக்கின்றன.

நோட்டுப் புத்தகங்களை தானம் கொடுத்து முடித்தவுடன் ஏதோ தலைமேல் இருந்த பெரிய சுமை இறங்கினது போல் உணர்ந்தேன். அடுத்த பதிவில் நான் துணிகள் வாங்கி சேகரித்த கதை (உண்மைக் கதைதான்) சொல்கிறேன்.

திங்கள், 24 மார்ச், 2014

என் பள்ளி அனுபவம்


என் பதிவைப் படித்து வரும் நண்பர்களுக்கு என் நினைவில் நீங்காமல் நிற்கும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த சம்பவம்தான் நான் போன பதிவில் கூறிய பைகள் சேமிப்புக்கான ஆரம்பம்.

எங்கள் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர வகை. அதாவது மூன்று வேளையும் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். அதற்கு மேல் எந்த ஆடம்பரமும் கிடைக்காது. அந்த உணவும் எனக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. "என்ன தினமும் இதேதானா" என்று கேட்டால் வரும் ஸ்டேண்டர்ட் பதில் - "பிடித்தால் சாப்பிடு, பிடிக்கவில்லையானால் எழுந்து போ".

அப்போது நான் செகண்ட் பாரம் அதாவது ஏழாவது கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கு ஒரு கித்தான் பையில்தான் புஸ்தகம், நோட்டுகள் ஆகியவற்றைப் போட்டுக்கொண்டு போகவேண்டும். எங்கள் வீட்டில் அந்த ஒரு பைதான் இருந்தது. நான் மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் அதை பையைத்தான் காய்கறி வாங்க என் அம்மா எடுத்துக் கொண்டு போவார்கள்.

மறுநாள் நான் பள்ளிக்கு எடுத்துப் பொக அந்தப் பையை எடுத்தால் அதற்குள் வெங்காயச் சருகு, கருவேப்பிலை இலைகள், சில சமயம் சிறு கத்தரிக்காய் இப்படி பலது இருக்கும். பொதுவாக நான் அவைகளை அப்புறப்படுத்தி விட்டு பள்ளிக்கு கொண்டு போவேன். சில சமயம் அவசரத்தில் மறந்து போய் அந்தப் பையை அப்படியே கொண்டு போய் விட்டால் சக மாணவர்கள் இந்த காய்கறி மிச்சங்களைப் பார்த்து என்னைக் கலாட்டா செய்வார்கள்.

இதனால் மனம் வெறுத்து விட்டது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் போய் முறையிட்டேன். அந்தக் காலத்தில் பையன்கள் அப்பாக்களிடம் நேருக்கு நேர் நின்று பேசும் வழக்கம் இல்லை.

நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையை அம்மா காய்கறி வாங்க எடுத்துக்கொண்டு போய் அழுக்காக்கி விடுகிறார்கள். அதனால் அந்தப் பையை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போக வெட்கமாய் இருக்கிறது. அதனால் எனக்கென்று தனியாக ஒரு பை வாங்கித்தரவேண்டும் என்று சொன்னேன்.

என் அப்பா என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு சொன்ன பதில்தான் என் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.

அவர் சொன்ன பதில்;

"இப்படி ஆள்ஆள் விதமாக பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் பள்ளிக்கூடம் போ, இல்லாவிட்டால் நின்றுகொள்".

அவ்வளவுதான், மேட்டர் முடிந்தது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. மரியாதையாக அந்தப் பையையே வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போனேன். பெயிலாகாமல் படித்தேன். வேலைக்குப் போனேன். சம்பாதித்தேன். பைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி சேமித்தேன். இன்று அவைகள் சுமையாகி விட்டபடியால் வேண்டியவர்களுக்கெல்லாம் தானமளிக்கிறேன்.

வியாழன், 20 மார்ச், 2014

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


ஆரம்பப் பள்ளிப் பாடத்தில் படித்த இந்த வாசகம் "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற வாசகம் என்னுடைய உள் மனதில் ஆழமாகத் தைத்திருந்தது. இதன் கூடவே இன்னொரு வாசகமும் தைத்திருந்தது. அது "எந்தப் பொருளையும் வீணாக்காதே" என்பதாகும்.

இந்த இரண்டு வாசகங்களும் உண்மையில் பொன்மொழிகளாகக் கருதப்பட வேண்டிய தகுதி உடையவை. ஆனால் பொன்மொழிகள் ஏட்டில் பொன்னெழுத்துகளால் பொறித்து சட்டம் போட்டு வைக்கத்தான் லாயக்கே தவிர வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காக அல்ல என்ற உண்மையை நீங்கள் கற்றிருப்பீர்கள்.

என் வாழ்வில் இந்த பொன்கொழிகளைக் கடைப்பிடித்ததின் விளைவுகளை சொல்கிறேன். வருடத்தில் இரண்டு முறை எங்கள் வீட்டைத் திருப்பிப் போட்டு சுத்தம் செய்வதை என் சகதர்மிணி வழக்கமாகக் கொண்டுள்ளாள். தமிழ் வருடப் பிறப்பிற்கும் ஆயுத பூஜைக்கும் இரண்டு தடவை. பொதுவாக இந்த நாட்களில் நான் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஒரு வாரம் வெளியூர் போய்விடுவது வழக்கம்.

இந்த முறை அப்படி செய்ய உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. பொறியில் சிக்கிய எலி போல் மாட்டிக்கொண்டேன். இங்க பாருங்க, உங்க கப் போர்டை எல்லாம் சுத்தம் செய்வது உங்கள் பொறுப்பு, கொஞ்சம் கொஞ்சமாகச் செய்தால் போதும் என்று உத்திரவு போட்டு விட்டாள். சுப்ரீம் கோர்ட்டு உத்திரவை அலட்சியம் செய்ய நானென்ன மத்திய அரசு மந்திரியா என்ன, ஆகவே ஒழுங்காக சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

முதல் நாள் ஒரு கப்போர்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அதில் பல காலமாக வாங்கின சாமான்கள் பேக் செய்து கொடுத்த பிளாஸ்டிக் பைகள் கட்டு கட்டாக இருந்தன. பின்னால் எதற்காகவாவது வேண்டியிருக்கும் என்று சேமிக்கப்பட்டவை அவை. கல்யாண வீட்டில் கொடுக்கப்படும் தாம்பூலப் பைகளும் இதில் அடக்கம். கரப்பான் பூச்சிகள் அங்கு பல தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் போலத் தோன்றியது.

இது எல்லாம் வேண்டுமா என்று பார்யாளைக் கேட்டேன். எனக்கு வேண்டாம் உங்களுக்கு வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று முடிவை என்னிடம் விட்டு விட்டாள்.

நான் எப்போதோ படித்த இன்னொரு பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது. "எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்." இதுவும் மனதில் தைத்த ஒரு வாசகம்.

இந்த அளவுகோலில் பார்த்தால் இந்தப் பைகளை பல வருடங்களாக உபயோகப் படுத்தவில்லை. ஆகவே இவை நம் வாழ்விற்குத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். அவைகளை எல்லாம் தூக்கி வெளியே போட்டேன். கரப்பான் பூச்சிகள் மிகவும் ஆட்சேபணை தெரிவித்தன. எல்லாவற்றிற்கும் "ஹிட்" ஸ்ப்ரே கொடுத்தேன். எல்லாம் தங்கள் ஆட்சேபணையை வாபஸ் வாங்கிக்கொண்டன.

தொடரும்...

செவ்வாய், 11 மார்ச், 2014

என் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு வந்த சோதனை


போன வாரத்திலிருந்தே என் கம்ப்யூட்டருடைய மானிட்டர் உயிரை விடுவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்க ஆரம்பித்தது. மானிட்டர் லைட் விட்டு விட்டு எரிந்தது. பிறகு ஒரேயடியாக அணைந்து விட்டது.

எனக்குத் தெரிந்த கை வைத்தியம் ஒன்றே ஒன்றுதான். அது கேபிள்களை கழட்டி மாட்டுவதுதான். அதை செய்தேன். மானிட்டரும் சாதுவாக வேலை செய்தது. இப்படி இரண்டு நாள் செய்தது. மூன்றாம் நாள் திரும்பவும் மக்கர் செய்தது.

கூகுளில் தேடினேன். சிபியுவில் குப்பைகள் இருந்தாலும் இப்படி செய்யும் என்று போட்டிருந்தது. சிபியூ புதிதாக வாங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று. சரி, அதையும் செய்து பார்த்து விடலாமென்று ஒரு மாலைப்பொழுதில் சிபியுவை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

சிபியுவை சுத்தம் செய்வது ஒரு பெரிய இந்திர ஜால வேலை என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் அதில் செருகியிருக்கும் ஒரு டஜன் கேபிள்களை பிடுங்க வேண்டும். பிடுங்குவது சுலபம். மாட்டும்போதுதான் அதில் உள்ள வம்பு புரியும். எந்த கேபிளை எங்கு மாட்டுவது என்பதில் குழப்பம் ஏற்படும்.

முன் அனுபவம் காரணமாக கேபிள்களை கழட்டும்போதே அவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும்  லேபிள் எழுதி அது அதில் சொருகி வைத்து விட்டேன்.
பிறகு வேகுவம் கிளீனரை எடுத்து வைத்துக் கொண்டேன். சிபியுவில் உள்ள சைடு கதவைத் திறந்தேன். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. இரண்டே ஸ்க்ரூதான். திறந்தால் உள்ளே ஏகப்பட்ட தூசு, குப்பைகள் மண்டிக்கிடந்தன.

நல்ல காலம் இந்த வேலையை வீட்டு வாசலில் வைத்து செய்தேன். வீட்டிற்குள் இந்த வேலையைச் செய்திருந்தால் வீட்டு அம்மாள் சிபியுவை அப்படியே தூக்கி எறிந்திருப்பார்கள். முதலில் ஒரு பழைய துணியைக் கொண்டு முடிந்த வரை துடைத்தேன். பிறகு வேகுவம் கிளீனரில் புளோயரை ஆன் செய்து புளோயர் நாசிலை சிபியுவின் உள்ளே எல்லா இடங்களிலும் காண்பித்தேன்.

உள்ளேயிருந்து அவ்வளவு தூசிகள் வெளியேறின. வீட்டுக்குள் வைத்திருக்கும் கம்ப்யூட்டருக்குள் இவ்வளவு தூசிகள் எப்படி புகுந்தன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே. அவைகளை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு மறுபடியும் புளோயரால் கிளீன் செய்தேன். இப்படி நாலைந்து முறை செய்த பின் உள்ளேயிருந்து தூசிகள் வருவது நின்று விட்டது.

பிறகு உள்ளேயிருக்கும் விசிறிகளைக் கவனித்தேன். அதில் இறக்கைகளுக்குப் பின்னால் தூசிகள் அடை அடையாய் ஒட்டிக்கொண்டு இருந்தன. அவைகளை எல்லாம் நைசாக ஒரு குச்சியின் மூலம் அகற்றி வெளியே எடுத்தேன். பிறகு அந்த விசிறிகளுக்கு புளோயர் மூலம் காற்று அடித்தேன். மேலும் தூசிகள் வெளியே வந்தன.

இந்த விசிறிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் சிபியுவில் காற்றோட்டம் சரியாக ஏற்பட்டு டெம்பரேச்சர் கன்ட்ரோலில் இருக்கும். இல்லையென்றால் டெம்பரேச்சர் அதிகமானால் சிபியு ஸ்ட்ரைக் செய்து விடும். இப்படி சிபியுவை வருடம் ஒரு முறையாவது சுத்தம் செய்வது அவசியம்.

இப்படி சிபியூவை சுத்தம் செய்த பிறகு எல்லா கேபிள்களையும் சிபியுவில் மாட்டினேன். ஒரு கேபிளும் அநாமத்தாக கிடக்கவில்லை என்று சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டேன். பிறகு சிபியுவிற்கு கரண்ட் கனெக்ஷன் கொடுத்தேன். பழைய குருடி கதவைத்திறடி என்ற கதையாக மறுபடியும் மானிடர் வம்பு செய்தது.

ஓஹோ, இது கொஞ்சம் சீரியசான விவகாரம் போல இருக்கிறது என்று அப்போதுதான் ஞானோதயம் ஏற்பட்டது. இனி ஸ்பெஷலிஸ்ட்டைக் கூப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தேன்.

எனக்கு என்று ஒரு ஆஸ்தான வித்வான் இருக்கிறார். அவரைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன். நான் வந்து பார்க்கிறேன் என்று சொன்னார். இரண்டு மணி நேரத்தில் வந்து பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். வந்தது வம்பென்று நினைத்துக் கொண்டு என்னவென்று கேட்டேன். அவர் ஒன்றுமில்லை, இதை இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் (வொர்க் ஷாப்பில்) சேர்த்து ஒரு ஆபரேஷன் செய்தால் சரியாய்ப்போகும் என்றார்.

சரி, அப்படியே செய்யுங்கள் என்றேன். அவர் மானிட்டரை எடுத்துச்சென்று விட்டார். எனக்கு ஒரு கை ஒடிந்தது போல் ஆயிற்று. விடிந்ததும் கம்ப்யூட்டர் முகத்தில் விழித்தே பழக்கமாகிப் போனதால் இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறைதான்.

எப்படியோ மூன்று நாட்களுக்குப் பிறகு மானிட்டர் நேற்று மாலை வந்து சேர்ந்தது. கம்ப்யூட்டர் மெக்கானிக் எல்லாவற்றையும் இணைத்து பவர் ஆன் செய்தார். கம்ப்யூட்டர் பழையபடி வேலை செய்ய ஆரம்பித்தது. போயிருந்த என் உயிர் திரும்ப வந்தது.

திங்கள், 10 மார்ச், 2014

An accident

I am sorry to report that my monitor developed a serious ailment and had to be hospitalised. Hence I could not write my post today. This post is written from my mobile and hence in English.



 

ஞாயிறு, 2 மார்ச், 2014

பேங்க் விவகாரங்கள் - கடைசி பகுதி


ஏன் தலைப்பில் விவகாரங்கள் என்று போட்டேன் என்றால், பேங்க் கணக்குகளில் ஏதாவது குளறுபடி வந்து விட்டது என்றால் அதைத் தீர்ப்பதற்குள் உங்கள் தாவு தீர்ந்து விடும். எப்போது குளறுபடி வரும்? அது உங்கள் தலையெழுத்தைப் பொருத்தது.  ஆகவே இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு கணக்கைத் தொடருங்கள்.

எனக்கு ஒரு முறை என்னுடைய பிபிஎப் கணக்கில் வட்டியைத் தவறுதலாக கணக்கிட்டு விட்டார்கள். சில ஆயிரங்கள் விட்டுப்போயின. சும்மா இருக்க முடியுமா? போய்க்கேட்டேன். எழுதிக்கொடுங்கள் என்றார்கள். எழுதிக்கொடுத்தேன். பாஸ் புக் நகல் எடுத்துக் கொடுங்கள் என்றார்கள். எடுத்துக் கொடுத்தேன். சில நாட்கள் ஆகும், பொறுத்திருங்கள் என்றார்கள்.

ஒரு மாதம் கழித்துப் போய் கேட்டேன். அப்படியா, எழுதிக்கொடுங்கள் என்றார்கள். முன்பே எழுதிக்கொடுத்தேனே என்றேன். அது அந்த மேனேஜர் மாற்றலாகிப் போய்விட்டார், அதனால் பழைய விண்ணப்பங்களும் அவருடன் போய் விட்டன. நீங்கள் ஒன்று செய்யுங்கள். இப்போது புதிதாக ஒரு விண்ணப்பம் கொடுத்து விடுங்களேன் என்றார்கள். புதிதாக ஒரு விண்ணப்பம் எழுதி பாஸ் புக் காப்பியுடன் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றார்கள்.

இரண்டு வாரம் கழித்து போனேன். திரும்பவும் விண்ணப்பம் கொடுத்தீர்களா என்றார்கள். என்னடா இது, திரும்பவும் முதலிலிருந்தா என்று யோசித்தேன். விண்ணப்பம் எழுதி பத்து காப்பி சீராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டேன். கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு காப்பியாக கொடுத்து வந்தேன். ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி விட்டது. மூன்று மேனேஜர்கள் மாறி விட்டார்கள்.

புதிதாக வந்த மேனேஜருக்கு என்ன தோன்றியதோ, ஒரு நாள் இன்று மாலை 4 மணிக்கு வாருங்கள் சார் என்றார். மாலை 4 மணிக்குப் போனேன். கம்ப்யூட்டரில் என்னமோ பண்ணி பத்து நிமிடத்தில் கணக்கை நேர் செய்து விட்டார். மிகவும் நன்றி என்று சொல்லி விட்டு என் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பொறுமை, விடாமுயற்சி, சாதுர்யம் என்பவை எல்லாம் தேவை என்பதே. இரண்டு பேங்கில் கணக்கு வைத்திருந்தீர்களானால் இவையெல்லாம் உங்களுக்கு கை வந்து விடும். வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 

திங்கள், 24 பிப்ரவரி, 2014

உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி? - பாகம் 5


உங்கள் கணக்கிலிருந்துதான் நீங்கள் பணம் எடுக்க வேண்டும்.  அடுத்தவர் கணக்கிலிருந்து நீங்கள் பணம் எடுக்கக் கூடாது. அது தப்பு. சாமி கண்ணைக் குத்திடும்.

பேங்கில் நீங்கள் தொடங்கியிருக்கும் சேமிப்புக் கணக்கு ஒரு வசதிதானே தவிர அது பணங்காய்ச்சி மரமல்ல. கையில் பணம் அதிகமாக இருந்தால் வீண் செலவு செய்வோம். அதை ஓரளவு கட்டுப்படுத்த சேமிப்புக் கணக்குகள் உதவும். ஆனால் சேமிக்கவேண்டும் என்ற அடிப்படை உந்துதல் இல்லாவிட்டால் சேமிப்புக் கணக்கினால் பயன் ஏதுமில்லை.

ஒருவனுடைய மாத வருமானத்தில் குறைந்தது பத்து சதம் சேமிக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் பணம் தேவைப்படும்போது கை கொடுக்கும். இப்போது பல தொழிற்சாலைகள், அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிக் கணக்கிலேயே செலுத்துகின்றனர். இது அவர்களின் சேமிப்பு வழக்கத்தை ஊக்கப்படுத்த உதவும். ஆனால் பெரும்பாலானோர் இந்த வசதியை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்.

இப்படி சேர்த்த அல்லது சேர்க்கப்பட்ட ஊதியத் தொகை அல்லது சேமிப்புத் தொகையை எப்படி எடுப்பது? பேங்கில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இது பற்றி நன்கு அறிந்திருப்பது அவசியம்.

1. சாதாரண முறை:

பேங்கில் போடப்படும் தங்கள் சம்பளத்தை பேங்கில் இருந்து எடுப்பதை மட்டும் செய்யும் நபர்களுக்கு இந்த முறைதான் உகந்தது. அதற்கு பேங்கில் கிடைக்கும் "வித்டிராயல் ஸ்லிப்" எனப்படும் பணம் எடுக்கும் படிவத்தை உபயோகப்படுத்த வேண்டும். இது மிகவும் எளிமையான படிவம். ஆனால் இதை பூர்த்தி செய்யக்கூடத் தெரியாதவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்றே சில பேங்குகளில் ஒரு ஊழியரை நியமித்திருப்பார்கள். அவர்களிடம் இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்து அல்லது கைநாட்டு வைத்து கவுன்டரில் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்தப்படிவத்துடன் பேங்க் பாஸ்புக்கையும் அவசியம் கொடுக்கவேண்டும். பாஸ்புக்கில் ஒட்டப்பட்டுள்ள புகைப் படத்துடன் உங்கள் உருவத்தை ஒப்பிட்டுப் பார்த்து பிறகே பணம் கொடுப்பார்க்ள.

இந்தப் படிவத்தின் மூலம் பணம் எடுக்க யார் கணக்கு வைத்திருக்கிறார்களோ அவர்களேதான் பேங்கிற்கு நேரில் செல்லவேண்டும். அடுத்தவர் இந்த படிவத்தின் மூலம் பணம் எடுக்க முடியாது. ஒரு விதி விலக்கு. பேங்கில் பணி புரிபவர்கள் யாராவது நேர்மையற்றவர்களாக இருந்து விட்டால், சில சமயம் நீண்ட காலமாக பணப் பரிவர்த்தனை நடக்காத கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவது உண்டு. ஆனால் இது மிகவும் அபூர்வம். ஆனாலும் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை நீண்ட காலம் பரிவர்த்தனை இல்லாமல் வைப்பது கூடாது. அப்படி வைத்திருந்தால் பல பேங்குகள் அபராதம் கூட விதிக்கிறார்கள்.

2. செக் மூலம் பணம் எடுப்பது.

பேங்கில் கணக்கு ஆரம்பிக்கும்போதே செக் புக் வேண்டுமென்றால் கொடுப்பார்கள். ஆனால் இத்தகைய கணக்குகளில் குறைந்த இருப்புத் தொகை கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அதுவும் தவிர ஒரு 10 செக் கொண்ட ஒரு செக் புத்தகத்திற்கு ஏறக்குறைய 30 ரூபாய் பிடித்துக்கொள்வார்கள்.

அந்தக் காலத்தில் அதாவது நான் இளைஞனாக இருந்தபோது ஒரு வெள்ளைக் காகிதத்தில் "இந்தக் காகிதத்தைக் கொண்டு வரும் நபருக்கு பத்தாயிரம் ரூபாய் என்னுடைய கணக்கில் இருந்து கொடுக்கவும் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தனுப்பினால் பணம் கொடுத்து விடுவார்கள். அது மக்கள் நாணயமாகவும் அரசு நேர்மையாகவும் இருந்து மாதம் மும்மாரி பெய்த காலம்.

இப்போது செக்குகள் மிகவும் முன்னேற்றமடைந்து "சிடிஎஸ்" செக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து பேங்க் செக்குகளும் ஒரே மாதிரி சைஸ், மற்றும் விவரங்கள் அடங்கியதாக இருக்க வேண்டும். இந்த வகை செக்குகளில் எந்த விதமான அடித்தல்களும் திருத்தல்களும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் செக் பாஸ் ஆகாது. உங்களுக்கு 100 ரூபார் தண்டம். நீங்கள் செக் கொடுத்தவருக்கும் 100 ரூபாய் தண்டம். தவிர செக்கின் விலை 3 ரூபாயும் தண்டம்.

செக்குகள் மூலம் நீங்கள் அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கலாம். செக் எழுதுவது என்பது ஒரு கலை. இதை நன்றாக கற்றுக்கொண்டுதான் செக்கை உபயோகிக்க ஆரம்பிக்கவேண்டும். செக் கணக்கு உள்ளவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய சில ஜாக்கிரதைக் குறிப்புகள்.

1. செக் புஸ்தகத்தில் உங்கள் மாதிரிக் கையெழுத்தைப் போட்டு வைக்கவேண்டாம்.

2. செக் புஸ்தகம் எப்போதும் உங்கள் வசம் பூட்டுப்போட்ட பெட்டிகளில் வைத்திருக்கவேண்டும்.

3. நிரப்பப் படாத செக்குகளை எக்காரணம் கொண்டும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. (பொண்டாட்டியாயிருந்தாலும் சரி வைப்பாட்டியாயிருந்தாலும் சரி)

4. வெற்றுச் செக்கில் கையெழுத்து மட்டும் போட்டு வைக்கக் கூடாது.

5. முன்பின் தெரியாதவர்கள் பணம் கொடுத்து உங்கள் செக்கைக் கேட்டால் கொடுக்கக் கூடாது.

6. உங்கள் கணக்கு எண். கணக்கில் உள்ள இருப்புத் தொகை இவைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்.

இப்படியெல்லாம் இருந்தீர்களானால் உங்கள் பணத்தை நீங்கள் அனுபவிக்கலாம். இல்லாவிடில் யாரோ அனுபவிப்பார்கள். பட்டினத்தார் பாடலை நினைவு கொள்ளவும்.

பாடு பட்டுத் தேடி பணத்தை புதைத்து வைக்கும் பாவிகாள் கூடு விட்டிங்கு உயிர்தான் போனபின் யாரே அனுபவிப்பார் அந்தப் பணம்.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பேங்கில் பணம் போடும் இதர (நேர்) வழிகள் - பாகம் 4


இது வரை ரொக்கமாக அல்லது செக்/டிராப்ட் மூலமாக உங்கள் கணக்கில் பணம் செலுத்துவது எப்படி என்று பார்த்தோம். இதுதான் பழைய காலத்திலிருந்து வரும் பாரம்பரிய முறை. சிக்கலில்லாதது. நேரடி முறை. நம் கண்ணுக்கு முன்னால் நடப்பது. இதற்கு அதிகார பூர்வமான அத்தாட்சிகள் வைத்துக்கொள்ளலாம். பத்து வருடங்கள் கழித்து கூட ஏதாவது சந்தேகம் வந்தால் இந்த அத்தாட்சிகள் மூலமாக அவைகளை சரி பார்க்கலாம்.

ஆனால் தற்போது கலி முற்றிக்கொண்டு வருகிறது. அதற்கேற்றார்ப்போல பல கலியுக சமாச்சாரங்களும் பேங்கில் புகுந்துள்ளன. அவைகளில் முக்கியமானது இன்டர்நெட் பேங்கிங்க் என்ற மாயப்பிசாசு. "பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு" என்ற பட்டினத்தார் பாடலை அறிந்திருப்பீர்கள். அறிந்திராதவர்களுக்காக லிங்க் கொடுத்திருக்கிறேன்.

"இன்டர்நெட்" அல்லது வெறும் "நெட்" அல்லது தூய தமிழில் "இணையம்" என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டர் உத்தியை  அனைவரும் அறிவீர்கள். ஏறக்குறைய பேங்க் நடவடிக்கைகள் அனைத்தும் இதன் மூலமாகத்தான் தற்போது நடக்கின்றன. எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்து விடும். இது எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லாம்..

குறிப்பாக பேங்க் திருடர்களுக்கு. முன் போல் கடப்பாரை, மம்முட்டி (கேரள சினிமா நடிகர் அல்ல) + கூட்டாளிகளுடன்/அல்லது துப்பாக்கி, கத்தி சகிதம் பேங்க்கிற்குப் போய் கொள்ளையடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பும்தான். அவர்கள் வீட்டிலிருந்தவாறே, படுக்கையில் படுத்துக் கொண்டே சௌகரியமாகத் திருடலாம்.

இந்த வம்பெல்லாம் நமக்கு வேண்டாம். இணையத்தின் மூலமாக நாம் செய்யக்கூடிய சட்த்திற்குட்பட்ட காரியங்களைப் பார்ப்போம்.

இன்டர்நெட் பேங்கிங்க் வசதி வாங்குவதற்கு முன் ஒருவர் நன்றாக யோசித்து முடிவு செய்யவேண்டும். வீட்டில் ஒரு நல்ல கம்ப்யூட்டர் வேண்டும். நெட் வசதி வேண்டும். (பிராட் பேண்ட் ஆக இருந்தால் நல்லது) இந்த சாதனங்களை நன்கு பயன்படுத்தும் அனுபவம் வேண்டும். இவை இல்லாமல் நெட் பேங்கிங்க் வசதி பெறுவது வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம்.

ஒருவர் தன்னுடைய பேங்க் கணக்கில் இன்டர்நெட்  பேங்கிங்க் வசதி வேண்டுமென்றால் பேங்கிற்கு அதற்குரிய படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும். அப்படி விண்ண்ப்பித்த பிறகு ஒரு பத்து இருபது நாளில் உங்களுக்கு ஒரு தபால் அல்லது கூரியர் தபால் வரும். அதில் உங்களது உபயோகிப்பாளர் பெயரும் கடவுச்சொல்லும் இருக்கும். அதாவது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு இருக்கும்.

இவை இரண்டும் மிக முக்கியமானவை. அவைகளை யாரிடமும் சொல்லாமல் இருக்கவேண்டும். தவிர அந்த பாஸ்வேர்டை முதல் முறை இன்டர்நெட் உபயோகிக்கும்போது மாற்றிவிடவேண்டும்.

அடுத்தது நீங்கள் அந்த பேங்கின் இன்டர்நெட் பேங்கிங்க் தளத்திற்கு சொல்லவேண்டும். அங்கு சென்று உங்களுக்கு பேங்க் கொடுத்துள்ள யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைக்கொண்டு அந்த தளத்திற்கு உள்ளே செல்லவேண்டும். உள்ளே சென்றதும் முதல் வேலையாக உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இந்த இரண்டும் ஓரளவிற்கு பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். மற்றவர்கள் எளிதில் யூகிக்கும்படியாக, உங்கள் பெயர் அல்லது உங்கள் குழந்தைகள் பெயர் இவைகளை உபயோகப்படுத்தாமல் இருப்பது நலம். இந்த யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை எங்கும் எழுதி வைக்காதீர்கள் என்று பேங்க்கில் சொல்லுவார்கள். அதற்கு காரணம் வேறு. அதை பிற்பாடு சொல்கிறேன். இப்போதைக்கு நான் சொல்வதை கேளுங்கள். அந்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை ஒரு தனி நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அந்த தளத்திலிருந்து லாக்அவுட் செய்யுங்கள். பிரவுசரை குளோஸ் செய்துவிட்டு திரும்பவும் ஓபன் செய்யுங்கள். பேங்க்கின் தளத்திற்கு சென்று இன்டர்நேட் பேங்க்கிங்க் தளத்திற்கு செல்லவும். யூசர்நேம் பாஸ்வேர்டு உபயோகித்து தளத்தினுள் செல்லவும். இப்போது தளத்தினுள் சென்று விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு சாதனையாளர் என்று மார் தட்டிக்கொள்ளலாம். இப்போது நீங்கள் உங்கள் கணக்கின் விபரங்கள் அனைத்தும் பார்க்கலாம்.

ஒரு முக்கியமான விஷயம். பொது இடங்களில் உள்ள பிரவுசிங்க் சென்டர்களில் அல்லது உங்கள் அலுவலக கம்ப்யூட்டரில் அல்லது உங்கள் நண்பர்கள் கம்ப்யூட்டர்களில் இந்த இன்டர்நெட் பேங்கிங்க் வேலைகளை செய்யவேண்டாம். ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் நீங்கள் வம்பில் சிக்கிக்கொள்வீர்கள்.

அடுத்தது. எப்போதும் இன்டர்நெட் பேங்கிங்க் வேலைகள் முடிந்தவுடன் மறக்காமல் லாக்அவுட் செய்து விட்டே பிரவுசரை மூடவேண்டும். வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள் தயவு செய்து அவர்களுக்கு இந்த இன்டர்நெட் பேங்கிங்க் முறைகளை கற்றுக்கொடுக்காதீர்கள். அவர்கள் சம்பாதிக்கும்போது கற்றுக்கொள்ளட்டும்.

இந்த இன்டர்நெட் பேங்க்கிங்க் வசதி பெற்றபின் நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய சமாசாரம் என்னவென்றால் உங்கள் உயிரே போவதானாலும் இந்த பாஸ்வேர்டை யாரிடமும் சொல்லக்கூடாது. நீங்கள் பாஸ்வேர்டு எழுதிவைத்துள்ள நோட்டுப்புத்தகம் யார் கையிலும் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காகத்தான் பேங்க் ஆட்கள் இந்த யூசர்நேம், பாஸ்வேர்டை எங்கும் எழுதி வைக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்.

இப்படி எழுதி வைக்காமல் பாஸ்வேர்டை நீங்கள் மறந்து விட்டால் பாஸ்வேர்டை மாற்றியமைக்க நீங்கள் பேங்க்கின் உதவியை நாடவேண்டி வரும். அதற்கு அவர்கள் ஒரு கட்டணம் வசூலிப்பார்கள். பேங்கின் வருமானத்தைப் பெருக்க இது இன்னுமோர் வழி. ஏன் பேங்க்குக்காரர்கள் யூசர்நேம், பாஸ்வேர்டை எழுதி வைக்கவேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று புரிந்ததல்லவா.(திரு நடனசபாபதி கண்டனம் தெரிவிக்க மாட்டார் என்று நம்புகிறேன்)

மொபைல் பேங்க்கிங்க் பற்றியும் இப்போதே சொல்லிவிடுகிறேன். இதுவும் இன்டர்நெட் பேங்க்கிங் மாதிரியேதான். என்ன, இதற்கு மொபைல் போன் வேண்டும். அதுதான் இப்போது மொபைல் போன் எல்லோரும் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி  வைத்திருக்கிறார்களே.

இதில் இரண்டு வகை உண்டு. உங்கள் மொபைல் போன் நெம்பரை பேங்கில் ரிஜிஸ்டர் செய்து விட்டால் உங்கள் கணக்கில் நடக்கும் அனைத்து பரிமாற்றங்களும் எஸ்எம்எஸ் மூலமாக உங்கள் மொபைல் போனுக்கு வந்து விடும். இது ஒரு நல்ல சௌகரியம். இது சாதாரண மொபைல் போன் வைத்திருக்கும் ஏழைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட உதவி.

இன்னொரு வகை - நீங்கள் ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் மொபைல் பேங்க்கிங்க் வசதிக்கு விண்ணப்பிக்கலாம். இன்டர் நெட் போன்றே யூசர்நேம், பாஸ்வேர்டு தருவார்கள். உங்கள் மொபைலில் உங்கள் பேங்கிகிற்கான App ஐ மொபைல் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து, அந்த App மூலம் இந்த யூசர்நேம், பாஸ்வேர்டு உபயோகித்து உங்கள் கணக்கில் நுழையலாம். இந்த வசதி மூலம் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்பலாம், மொபைல் ரீசார்ஜ் செய்யலாம், DTH  க்கு டாப்-அப் செய்யலாம், ரயில், சினிமா டிக்கட்டுகள் வாங்கலாம், இன்னும் என்னென்னமோ  .....லாம்.

ஒன்றை மட்டும் நன்றாக கவனம் வைத்துக்கொள்ளுங்கள். இன்டர்நெட் சமாச்சாரம் முழுவதும் சர்க்கஸில் கம்பி மேல் நடக்கிறார்களே அதே மாதிரிதான். கரணம் தப்பினால் மரணம்தான். நாளைக்கு உங்கள் பணத்தை யாராவது லவட்டிக்கொண்டு போன பிறகு பழனி. கந்தசாமியைக் குறை கூறிப் பயனேதுமில்லை.

இப்படி இன்டெர்நெட் கணக்கும் மொபைல் பேங்கிங் கணக்கும் வைத்திருப்பவர்கள் அவர்கள் கணக்கில் இருந்து உங்கள் கணக்கிற்கு பணம் போடலாம். அதேபோல் ஏடிஎம் கார்டு உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இருந்தால் ஒருவர் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்கிற்கு பணபரிவர்த்தனை செய்யலாம்.

இதுவரை உங்கள் கணக்கில் பணம் எந்தெந்த வகைகளில் போடலாம் என்று பார்த்தோம். அப்படி போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

சனி, 15 பிப்ரவரி, 2014

Actual Practical experience.

இது ஒரு இடைச்செருகல். இந்தக் கதை எனக்கு மெயிலில் வந்தது. உங்களுக்கும் வந்திருக்கலாம். ஆனால் கதையின் நீதி நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவும். பேங்க் பதிவு வழக்கம்போல் திங்கட்கிழமை வெளியாகும்.


Once a group of 50 people was attending a seminar.

Suddenly the speaker stopped and started giving each one a balloon. Each one was asked to write his/her name on it using a marker pen. Then all the balloons were collected and put in another room.
Now these delegates were let in that room and asked to find the balloon which had their name written, within 5 minutes. Everyone was frantically searching for their name, colliding with each other, pushing around others and there was utter chaos.

At the end of 5 minutes no one could find their own balloon.
Now each one was asked to randomly collect a balloon and give it to the the person whose name was written on it.

Within minutes everyone had their own balloon.

The speaker began--- Exactly this is happening in our lives. Everyone is frantically looking for happiness all around, not knowing where it is. 

Our happiness lies in the happiness of other people. Give them their happiness, you will get your own happiness.

And this is the purpose of human life. 

திங்கள், 10 பிப்ரவரி, 2014

பேங்க் கணக்குகள் - பாகம் 3


பேங்குகளில் உங்கள் கணக்கில் பணம் கட்டுவது எப்படி என்று போன பதிவில் பார்த்தோம். அதில் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட மறந்து விட்டேன். அதாவது பேங்கில் கட்டுவதற்கு உங்களிடம் பணம் இருக்கவேண்டும்.

பணம் இல்லாமலும் பேங்குகளில் பணம் கட்டுவதற்கும் வழி முறைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு நீங்கள் முதலில் ஒரு எம்.பி. ஆகவேண்டும். அப்போது பேங்கில் உங்கள் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம். பணம் இல்லாமலும் உங்கள் கணக்கில் பணம் போடலாம். (திரு.நடனசபாபதி கவனிக்கவும்)

ஆகவே வரும் பார்லிமென்ட் தேர்தலில் நின்று எப்படியாவது ஒரு எம்.பி. ஆகிவிடுங்கள். அப்புறம் நீங்கள் முடி சூடா மன்னனேதான்.

நிற்க, இப்போது உங்கள் கணக்கில் பணம் போடுவது பற்றி தொடர்வோம். உங்களுக்கு வர வேண்டிய பணம் சில சமயம் காசோலை மூலமாகவும் வரலாம். அதுதாங்க செக் மூலமாகவும் வரலாம். செக்கில் இரண்டு வகை உண்டு. கிராஸ் செய்தது அல்லது கிராஸ் செய்யாதது.

கிராஸ் செய்யாத செக்குகளை அதன் பின்புறம் உங்கள் கையெழுத்து மற்றும் போன் நெம்பர் எழுதி, அது எந்த பேங்க் செக்கோ அந்த பேங்கில் போய் கொடுத்தால் உங்களை நன்கு விசாரித்து விட்டு பணம் கொடுப்பார்கள். கொஞ்ச நஞ்சம் சந்தேகம் வந்தாலும் பணம் கொடுக்கமாட்டார்கள். இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. கணக்கு வைத்திருப்பவர்களின் நலன் கருதி இதில் ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஏதாவது தவறு நேர்ந்து விடக்கூடாதல்லவா.

கிராஸ் செய்வதில் இரண்டு வகை உண்டு.

1. சாதாரண கிராஸ் - இந்த வகை செக்குகளை ஏதாவது ஒரு அக்கவுன்ட்டில் (உங்களுடையதாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை) போட்டு பணம் பண்ணிக்கொள்ளலாம்.


2. "அக்கவுன்ட் பேயீ" கிராஸ் - இவ்வகை செக்குகளை செக் யார் பெயரில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவருடைய அக்கவுன்ட்டில்தான் செலுத்த முடியும்.


செக்குகளை அக்கவுன்ட்டில் போடுவதற்கும் செலான் பூர்த்தி செய்யவேண்டும். ரொக்கப் பணம் கட்டுவதற்கு உபயோகிக்கும் அதே செலான்தான். விவரங்களை தவறு இல்லாமல் பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கணக்கு எண் மாறிவிட்டால் பணம் வேறு ஒருவர் கணக்கிற்கு போய்விடும். அப்புறம் அதை மீட்பது சிரமம்.

செலான் படிவத்தைப் பூர்த்தி செய்து அதன் கௌன்டர்பாயிலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த படிவத்துடன் உங்கள் செக்கை ஒரு குண்டூசி மூலம் இணைத்து பேங்கில் உள்ள ஒரு பெட்டியில் போடவேண்டும். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் - செக் மேலேயும் செலான் படிவம் கீழேயும் இருக்கவேண்டும். குண்டூசியால் மட்டுமே இணைக்கவேண்டும். ஸ்டேப்ளர் பின்னால் இணைக்கக் கூடாது.

இப்படி செக்கை பேங்கில் போடுவதற்கு cheque presentation  என்று சொல்வார்கள்.
செக்கைப் போட்டு மூன்றாவது நாள் உங்கள் கணக்கில் பணம் சேர்ந்து விடும். அப்படி சேர்ந்து விட்டதா என்று சரி பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் சில சமயம் உங்களுக்கு செக் கொடுத்தவர் கணக்கில் போதிய பணம் இல்லாவிட்டால் செக் திரும்பிவிடும். அப்படி செக் திரும்பி விட்டால் உங்களுக்கு அபராதம் போடுவார்கள். ஒவ்வொரு பேங்கிலும் ஒவ்வொரு தொகை அபராதமாகப் போடுவார்கள். இது 300 ரூபாய் வரை போகலாம்.

இந்த மாதிரி கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுப்பது என்பது வியாபாரத்தில் ஒரு முக்கியமான அம்சம். வியாபாரிகளினால் சர்வ சாதாரணமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு நடைமுறை. பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்போது எந்த மனச்சாட்சி உறுத்தலும் இல்லாமல் செக் கொடுத்து விடுவார்கள். கொஞ்ச நஞ்சம் மனச்சாட்சி பாக்கி உள்ளவர்கள், செக்கை வாங்கின ஆள் போன ஐந்தாவது நிமிடத்தில் அந்த கம்பெனிக்கு போன் பண்ணி, இப்போது உங்கள் ஆளிடம் ஒரு செக் கொடுத்திருக்கிறேன், அதை நான் சொன்ன பிறகு பேங்கில் போடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

மனச்சாட்சியை சுத்தமாக துடைத்து வைத்திருப்பவர்கள் இதையும் சொல்ல மாட்டார்கள். அந்த செக் பேங்கிற்குப் போய் பணம் இல்லாமல் திரும்பி விட்ட பிறகு, அந்தப் பார்ட்டி கூப்பிட்டு கேட்டால் இவர்கள் ஏதாவதொரு நொண்டி சமாதானம் சொல்லுவார்கள். நீங்கள் அந்தச் செக்கை திரும்பவும் போடுங்கள், பணம் வந்து விடும் என்பார்கள். இப்படியே இந்த விளையாட்டு தொடரும்.

தன் கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுப்பது இன்றைய சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். அப்படி செக் கொடுத்தவரை ஜெயில் வரைக்கும் கொண்டு போக சட்டத்தில் வழி இருக்கிறது. ஆனால் அது எல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்கும் சமாச்சாரம். சாதாரண மனிதனுக்கு உதவாது. ஆகவே உங்களுக்கு யாராவது செக் கொடுத்தால் அந்த நபர் நம்பிக்கைக்கு உகந்தவரா என்று ஆராய்ந்து அந்த செக்கை வாங்கவும்.

பேங்க் டிராப்ட் என்று ஒரு முறை இருக்கிறது. இது 99.9 சதம் நம்பிக்கையானது. இது ஒருவர் பேங்கில் பணம் கட்டி இன்னொருவர் பெயருக்கு வாங்குவது. பேங்க் டிராப்ட் ஏறக்குறைய செக் மாதிரிதான். ஆனால் இதற்கு பேங்க் கேரண்டி உண்டு. பணம் கண்டிப்பாய் வந்து விடும் என்று நம்பலாம்.

ஏன் 0.1 சதவிகிதம் தொங்கல் வைத்திருக்கிறேன் என்றால் பேங்க் டிராப்டிலும் பம்மாத்து வேலை செய்யக்கூடிய கில்லாடிகள் இருக்கிறார்கள். 1000 ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் வாங்கி அதை கோடி ரூபாய்க்கு மாற்றக்கூடிய ஜகஜ்ஜால மந்திரவாதிகள் நம்ம ஊரில் உண்டு. ஆனால் இப்போது இன்டர்நெட் வசதிகள் முன்னேறிவிட்டபடியால் இத்தகைய புரட்டர்களுக்கு கஷ்ட காலமாய் இருக்கிறது.

இந்த பேங்க் டிராப்ட் பொதுவாக வெளியூர்களுக்கு அனுப்பும்போதுதான் தேவைப்படும். உள்ளூரிலேயே செல்லுபடியாக வேண்டியதாயிருந்தால் அதற்கு பேங்கர்ஸ் செக் என்று ஒன்று நடைமுறையில் இருக்கிறது. இரண்டும் ஏறக்குறைய ஒன்றேதான். இரண்டுக்கும் பேங்க் கமிஷன் வாங்குவார்கள்.

பேங்க் முறை மிகவும் சௌகரியமானதுதான். ஆனால் அது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி போன்றது. ஏமாந்தால் உங்களையும் வெட்டிவிடும்.

உங்கள் கணக்கில் பணம் போட இன்னும் சில வழி முறைகள் இருக்கின்றன. அடுத்த பதிவில் பார்ப்போம்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பேங்க் கணக்குகள் - பாகம் 2


ஆகக்கூடி பேங்க்கில் கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள். ஆகவே நீங்கள் அந்த பேங்க்கின் மிகுந்த மரியாதைக்குரிய கஸ்டமர். நீங்கள் போகும்போதெல்லாம் அந்த பேங்க்கின் மேனேஜர் எழுந்து வந்து உங்களை வரவேற்பார் என்ற கற்பனையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள. "கஸ்டமர் டே" என்று ஒரு நாள் இருக்கிறது. அன்று மட்டும் உங்களுக்கு மிட்டாய் கொடுத்து வரவேற்பார்கள். மற்ற நாட்களில் நீங்களே ராஜா, நீங்களே சேவகன்.

பேங்கில் முதல் முதலாக நுழையும்போது கொஞ்சம் பிரமிப்பாக இருக்கும். எதற்கு எங்கே போகவேண்டும் என்ற விவரம் புரியாது. கொஞ்ச நாளில் சரியாகிவிடும்.

முதல் வேலையான உங்கள் கணக்கில் பணம் கட்டுதல் எப்படி என்று பார்ப்போம்:. பணம் கட்டினால்தான் பின்னால் தேவைப்படும்போது எடுக்க முடியும். பணம் கட்டாமலேயேயும் பணம் எடுக்கலாம். அது ஒரு தனிக்கலை. அதை பின்னால் சொல்கிறேன்.

உங்கள் கணக்கில் பணம் கட்ட ஒரு "பணம் செலுத்துப் படிவம்" (செலான் = chalan) உபயோகப்படுத்த வேண்டும். இதை சரியாக பூர்த்தி செய்வதே ஒரு கலை. இந்தப் படிவம் ஏறக்குறைய எல்லா பேங்குகளிலும் கொசகொசவென்றே இருக்கும். வேண்டுமென்றே இப்படி வைத்திருக்கிறார்களோ என்று எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு.

எழுத்துக்கள் மங்கலாகவும் மிகச்சிறியதாகவும் இருக்கும். இந்த மாதிரி அச்சடிப்பதற்கென்றே தனி அச்சகங்கள் இருக்கும் என்பது என் சந்தேகம். ஓரிரு முறை உபயோகப் படுத்தின பிறகு தெளிவு பிறக்கும். கணக்கு ஆரம்பிக்கும்போதே சில படிவங்களை வாங்கிக்கொண்டு போய் வீட்டில் நேரம் இருக்கும்போது பயிற்சி எடுத்துக்கொண்டீர்களானால் சுலபமாக இருக்கும்.

இதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பகுதி பெரிதாகவும் இன்னொரு பகுதி சிறியதாகவும் இருக்கும். சிறிய பகுதி உங்களுக்குக் கொடுப்பதற்காக. இதை கவுன்டர்பாயில் - counterfoil  என்பார்கள்.

இந்தப் படிவங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும். சில சமயம் நமது தேசீய மொழியான இந்தியிலும் இருக்கும். எங்க ஊர் மாதிரி கேரளாவிற்குப் பக்கத்தில் உள்ள ஊரானால் மலையாளத்திலும் இருக்கும். கேரளப் பெண்கள் அழகானவர்கள் என்று பாரதியார் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். எனக்கு நேரடி அனுபவம் இல்லை. ஆனால் மலையாள எழுத்துக்கள் ஜிலேபி மாதிரி இருக்கும்.

ஆனால் நான் ஒரு போதும் தமிழில் அச்சடிக்கப்பட்ட படிவங்களைப் பார்த்த தில்லை. ஆனால் நாம் இதில் தமிழிலும் எழுதலாம். ஒப்புக்கொள்வார்கள். இந்தப் படிவத்தை வீட்டிலேயே பூர்த்தி செய்து எடுத்து வருவது நல்லது. இதில் எழுத வேண்டிய முக்கியமான விவரங்கள்.

1. தேதி

2.உங்கள் கணக்கின் எண் - இது மிகவும் முக்கியம். தவறாக எழுதிவிட்டால் உங்கள் பணம் கோவிந்தாதான்.

3. உங்கள் பெயர் - இதில் தவறு நேரும் வாய்ப்பு குறைவு.

4. எவ்வளவு பணம் கட்டப்போகிறீர்கள் என்ற விவரம். எண்ணிலும் எழுத்தாலும்.

5. நீங்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் (அது எப்படியிருக்கும்?) கட்டினால் உங்கள் பேன் கார்டு (தலையிலிருக்கும் பேன் அல்ல - PAN கார்டு) எண்ணைக் குறிப்பிடவேண்டும்.

6. நீங்கள் கட்டும் பணத்தின் விவரங்கள். அதாவது பத்து ரூபாயில் எவ்வளவு, நூறு ரூபாயில் எவ்வளவு, ஐந்நூறில் எவ்வளவு, இப்படியான விவரங்கள். ஒவ்வொன்றிலும் எவ்வளவு எண்ணிக்கை, அதன் மொத்த மதிப்பு எவ்வளவு என்பதை எல்லாம் விலாவாரியாக குறிக்கவேண்டும். அதற்கென்றே ஒரு தனி இடம் கட்டம் போட்டு அச்சடித்திருப்பார்கள். கடைசியில் மொத்த தொகை எவ்வளவு என்று குறிப்பிடவேண்டும்.

8. பேங்கிற்கு பணம் கட்டப் போகும்போது ரூபாய் நோட்டுகளை ஒழுங்காக அடுக்கிக் கொண்டு போகவேண்டும். ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியாக ரப்பர் பேண்ட் போட்டு ஒரு ஒழுங்கில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கணக்கர் உங்களைத் திட்டுவார். இந்த திட்டு ஒவ்வொரு ஊருக்கும் வேறுபடும். "சாவு கிராக்கி" என்பது எல்லா ஊருக்கும் பொது.

7. உங்கள் கையெழுத்து.

8. உங்கள் போன் நெம்பர்.

9. சில படிவங்களில் பேங்க் கிளையின் பெயரை காலியாக விட்டிருப்பார்கள். அதில் அந்தக்கிளையின் பெயரை எழுதுவது உத்தமம்.

இதையெல்லாம் பால் பாயின்ட் பேனாவாலோ அல்லது இங்க் பேனாவினாலோ எழுத வேண்டும். பென்சிலால் எழுதக்கூடாது. கருப்பு அல்லது நீலக் கலர் பேனாதான் உபயோகப் படுத்தவேண்டும்.  சிகப்புதான் எனக்குப் பிடித்த கலர் என்று அதிலெல்லாம் எழுதக்கூடாது. அந்த மாதிரி கலர்களில் எழுதுவதற்கு பேங்க் அதிகாரிகள் மட்டுமே காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

இதையெல்லாம் சரியாக செய்து பேங்கிற்குப் போனால் அங்கு கூட்டம் அலைமோதும். அதைக் கட்டுப்படுத்த இப்போது டோகன் சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த டோகனை எடுத்துக்கொண்டு காத்திருக்கவேண்டும். இந்த டோகனைக் கொடுப்பதற்கென்றே ஒரு மிஷின் இருக்கிறது. அதை வழக்கமாக யாருக்கும் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்திருப்பார்கள். இதை நீங்கள் விசாரித்து அறிந்து கொள்ளவேண்டும்.

டோகன் எடுத்துக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டீர்களானால் உங்கள் முறை வந்துவிடும். உங்கள் முறை வந்து விட்டதா என்று காண்பிப்பதற்கு ஒரு எலெக்ட்ரானிக் அறிவிப்புப் பலகை இருக்கும். அதில் டோகன் நெம்பர், கவுன்டர் நெம்பர் காண்பிக்கும். அந்தக் கவுன்டருக்குப் போய் உங்கள் டோகன், செலுத்துப் படிவம், பணம் எல்லாவற்றையும் கொடுத்தீர்களானால் அவைகளை வாங்கி சரி பார்த்து செலானில் சீல் குத்தி ஒரு கிறுக்கல் கையெழுத்துப் போட்டு கவுன்டர்ஃபாயிலை உங்களுக்கு கொடுப்பார்கள்.

அவ்வளவுதான். ஆஹா, நீங்கள் ஒரு வெற்றி வீரர்!

மற்ற வேலைகளை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

திங்கள், 27 ஜனவரி, 2014

பேங்க் கணக்குகள்- உபயோகிப்பாளரின் பார்வையில் - பாகம் 1


paul jayakanthan - பேங்க் கணக்கு வைத்திருக்கிறீர்களா?": என்ற இடுகையில்  விட்டுச்சென்ற பின்னூட்டம்"

பயணுள்ள தகவல் நன்றி மேலும் வங்கி பற்றிய செய்திகளை பதியலாம்
உ.ம் IFC CODE,MICR,NEFT,RTGS,SWIFT,CTS, இவற்றின் விரிவாக்கம்,விளக்கமும் தந்தால் அனைவருக்கும் பயன்படும்.

இப்படி ஒரு பின்னூட்டம் என்னுடைய ஒரு பதிவிற்கு வந்திருந்தது. இதைப்பற்றி சிந்தித்தபோது பலருக்கு பேங்குகளின் அடிப்படை விவரங்களே தெரியாமல் இருக்கிறது என்ற உண்மை மனதில் பட்டது. இதைப் பற்றி ஒரு பேங்க் உபயோகிப்பாளன் என்ற முறையில் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

நான் பேங்க் ஆபீசரல்ல. ஆனாலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பேங்க் கணக்குகள் வைத்திருக்கிறேன். தற்போது கம்ப்யூட்டரும் வைத்திருப்பதால் இன்டர்நெட் பேங்கிங்க், மொபைல் பேங்கிங்க் விஷயங்களும் அறிந்து வைத்திருக்கிறேன். ஆகவே ஒரு உபயோகிப்பாளன் என்ற முறையில்தான் இந்த பதிவை எழுதுகிறேன். பேங்கிங்கில் கரை கண்டவர்கள் இருப்பார்கள். அவர்க்ள பின்னூட்டத்தில் கருத்துகளைத் தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாயிருக்கும். 

பேங்க் சமாசாரங்கள் முழுவதையும் ஒரு பதிவில் அடக்க முடியாது. ஆகையால் இது ஒரு தொடர் பதிவாக அமையும். 

பாகம்-1 முன்னுரை;

பேங்குகள் இன்று வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றன. ஆனாலும் வாழ்க்கையின் அடித்தட்டு மக்களுக்கு பேங்கின் தேவை அவ்வளவு அவசயமில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர்களும் பேங்க் சேவைகளை உபயாகப்படுத்தவேண்டிய அவசியம் வரும். 

இன்றைய கால கட்டத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை பேங்க் மூலமாகவே கொடுக்கிறார்கள். காரணம் இன்றைய சூழ்நிலையில் பேங்கிலிருந்து அதிகமான பணத்தை எடுத்து வருவது ஒரு ஆபத்தான செயலாக ஆகிவிட்டது. அதேபோல் அதிக பணத்தை வசூல் செய்து பேங்கில் கட்டுவதும் ஆபத்தாக மாறி வருகிறது.

தனிமனித வாழ்விலும் அதிகமான ரொக்கப் பணத்தை கையாள்வது ஆபத்தான சமாசாரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஆதனால் பேங்கின் சேவைகளை எல்லா தரப்பினரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஒரு சாதாரண மனிதன் பேங்க் கணக்கு தொடங்கி அதைப் பயன்படுத்துவதைப் பற்றி கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசயமாகிறது.

பேங்க் கணக்கின் தேவை: 

1. உங்கள் வருமானத்தில் நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்கள்.

2. நீங்கள் வேலை செய்யும் ஸ்தாபனம் உங்கள் சம்பளத்தை பேங்க் கணக்கில் போடப்போகிறார்கள்.

3. உங்களுக்கு ஏதாவது செக்குகள் வருகின்றன. அல்லது நீங்கள் செக் மூலமாக அடிக்கடி ஏதாவது பணம் கொடுக்கவேண்டுயிருக்கிறது.

4. அடிக்கடி வெளியூர் செல்வதால் ஏடிஎம் கார்டு தேவைப்படுகிறது.

5. பேங்கில் ஏதோ கடன் வாங்க உத்தேசித்துள்ளீர்கள்.

இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் பேங்கில் கணக்கு துவங்க ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்யவேண்டியது என்ன?

பேங்க் கணக்கு துவங்க தேவையானவை.

1. உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பேங்கைத் தேர்ந்தெடுங்கள். அது ஒரு ஷெட்யூல்டு பேங்க்காக இருக்கவேண்டும்.

2. உங்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இரண்டு வேண்டும். ரேஷன் கார்டு இருக்கவேண்டும். அதில் உங்கள் பெயர் என்ன இருக்கிறதோ அந்தப் பெயரில்தான் கணக்கு ஆரம்பிக்க முடியும்.

3. பேங்க் கணக்கு ஆரம்பிக்க குறைந்தது 1000 ரூபாய் வேண்டும். இந்தப் பணத்தை உங்களுடையது என்ற எண்ணத்தை உடனே மறந்து விடவேண்டும். ஏனெனில் இந்த குறைந்த பட்ச பணம் உங்கள் கணக்கில் எப்போதும் இருக்கவேண்டும்.

4. ஓரளவிற்கு படிவங்களை பூர்த்தி செய்யும் திறமை இருக்கவேண்டும். ஒவ்வொரு தடவையும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது.

5. அந்த பேங்கில் ஏற்கெனவே கணக்கு வைத்திருக்கும் ஒருவரை நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அவர் உங்களை பேங்கில் அறிமுகம் செய்து வைக்க தயாராய் இருக்கவேண்டும். இது மிகவும் அவசியம்.

6. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இரண்டு வேண்டும்.

இவை எல்லாவற்றையும் கொண்டு போனால், பேங்க் அதிகாரிக்கு உங்களைப் பிடித்துப்போனால் நீங்கள் கணக்கு ஆரம்பிக்கலாம். பொதுவாக நீங்கள் ஆரம்பிக்கும் கணக்கைத் தொடர்ந்து வைத்திருப்பீர்களா, உங்கள் நிதி நிலை என்ன, என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் உங்களுக்கு கணக்கு ஆரம்பிப்பார்கள். எப்படியும் இரண்டு மூன்று தடவை உங்களை இழுத்தடிப்பார்கள். தொடர்ந்து முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.

எப்படியோ, யாருடைய கையையோ, காலையோ பிடித்து கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். கணக்கு ஆரம்பிக்கும்போதே உங்களுக்கு என்னென்ன தேவை என்று சோல்லிவிட வேண்டும்.

அத்தியாவசியத்தேவைகள்.

1. பாஸ்புக்:  இது கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களே கோடுத்து விடுவார்கள். இதில்தான் உங்கள் கணக்கின் வரவு செலவுகளைக் குறிப்பார்கள். அடிக்கடி பேங்கில் வரவு செலவு செய்பவராயிருந்தால் அவைகளை இந்த பாஸ்புக்கில் அவ்வப்போது பதிவு செய்து கொள்ளவேண்டும்.  

உங்கள் கணக்கில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச அளவு பணம் எவ்வளவு என்று ஒவ்வொரு பேங்கிலும் ஒரு அளவு வைத்திருப்பார்கள். அதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அந்த அளவிற்கு குறைந்தால் அபராதக் கட்டணம் போடுவார்கள்.

2. செக்புக்: நீங்கள் அடிக்கடி யாருக்காவது செக் மூலமாக பணம் கொடுக்கவேண்டிய அவசியம் இருந்தால் செக் புக் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அப்படி வாங்கிக்கொண்டால் உங்கள் கணக்கில் ஒரு குறைந்த பட்சம் பணம் வைத்திருக்கவேண்டும். அந்த தொகை குறைந்தால் அபராதம் உண்டு.

3. ஏடிஎம் கார்டு: இது ஒரு சௌகரியமான வசதி. அவசரத் தேவைகளுக்கு இப்போது மூலைக்கு மூலை முளைத்திருக்கும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதை உபயோகப்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டும். தவிர நேரங்கெட்ட நேரங்களில் அநாமத்தான இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

இப்போது நீங்கள் பேங்க் கஸ்டமர் ஆகி விட்டீர்கள். அடுத்தது பேங்க்கில் பணம் போடுவதும் எடுப்பதும்தான். அவைகளை எப்படி செய்வது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கொசுறு:

முதலில் குறிப்பிட்ட சில "சுருக்கி" களின் விரிவாக்கம். இவைகளின் உபயோகத்தைப் பற்றி பின்னால் கூறுகிறேன்.

 IFSC CODE: Indian Financial System Code.

MICR: Magnetic Ink Character Recognition

NEFT: National Electronics Fund Transfer

RTGS: Real Time Gross Settlement

SWIFT: Society for Worldwide Interbank Financial Telecommunication

CTS:     Core Treasury System

திங்கள், 20 ஜனவரி, 2014

குற்றங்களும் அவை பதிவாகும் அளவுகளும்.

சுப்ரீம் கோர்ட்

பெயரில்லாஞாயிறு, 20 அக்டோபர், 2013 4:14:00 PM IST
உங்கள் அடுத்த பதிவுக்கு ஒரு தகவல்.
ஒரு வலைபதிவில் படித்தேன்
இது ஏன் என்று எழுதுங்களேன்


2012 இந்தியாவின் குற்ற வீதப் பட்டியல் படி, கேரள மாநிலத்திலேயே அதிக குற்றங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு லட்சம் பேருக்கு சுமார் 455.8 சம்பவங்கள் படி இங்கு குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

நாகலாந்து மிகக்குறைவான குற்றச்சாட்டுக்கள் பதிவான மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரள தலைநகர் கொச்சியில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் சுமார் 879.9 குற்றச்சம்பவங்கள் படி பதியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஒரு இலட்சம் பேருக்கும் 294.8 குற்றங்கள் படி பதியப்பட்டுள்ளன. இந்தியாவில் கல்வியறிவைப் பொருத்தவரை எப்போதும் முதல் நிலையில் இருக்கும் கேரளா அதிக குற்றங்கள் பதியப்பட்ட மாநிலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் குரு

இது ஒரு முக்கியமான செய்திதான். கேரளாக்காரர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்த மனப்பான்மை புரியாது. நான் கேரளாவிற்கு வெகு சமீபத்தில் இருப்பதால் நான் ஓரளவு இவர்களின் சுபாவத்தை அறிந்திருக்கிறேன்.

பெரும்பாலும் அங்குள்ள மக்கள் வேலை வெட்டி ஒன்றுக்கும் போகாமல் திண்ணைகளில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். சரியான சண்டைக்கோழிகள். எவனாவது ஒருவன் அடுத்தவனைப் பற்றி ஏதாவது சொல்லி விட்டால் போதும். உடனே இவன் " அதெங்ஙன அவன் இங்ஙன பறைஞ்ஞது. ஞான் சுப்ரீம் கோர்ட்டு வரை போயி அவனை ரெண்டில ஒண்ணு ஆக்கும்' அப்படீன்னு சொல்லிட்டு நேரா வக்கீல் வீட்டுக்குப் போய் விடுவான்.

நான் கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்பது உங்களில் அநேகருக்குத் தெரிந்திருக்கும். நான் வேலை பார்த்த காலத்தில் எங்களுக்கு உத்தியோக உயர்வு கொடுக்க சில நடைமுறைகள் உண்டு. உத்தியோகத்தின் தரத்தைப் பொறுத்து ஒரு செலக்ஷன் கமிட்டி போடுவார்கள். அந்தக் கமிட்டி அந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்களை எல்லாம் நேர்முகத் தேர்விற்கு அழைத்து பேட்டி காண்பார்கள். அதன் முடிவில் ஒரு தரப் பட்டியல் தயாரித்து அதை துணை வேந்தரிடம் கொடுப்பார்கள். அவர் அதில் உள்ளவர்களுக்கு வரிசைப் பிரகாரம் பதவி உயர்வு உத்திரவு போடுவார்.

இதுதான் நடைமுறை. இதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு முறைதான் இருவர் இந்த தேர்வை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார்கள். தோற்றுப் போனார்கள். கேரளாவிலும் இதே போல் ஒரு விவசாயப் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு எனக்குத் தெரிந்த பலர் பணி புரிந்தார்கள்.

அங்கும் பதவி உயர்விற்கு இதே நடைமுறைதான். ஆனால் ஒரு வித்தியாசம். தேர்வுக் கமிட்டியின் முடிவை சம்பந்தப்பட்டவர்கள் லேசில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தேர்வுக் கமிட்டியின் முடிவுகள் ரகசியமாக இருக்கவேண்டியவை. ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த கமிட்டியின் முடிவை எப்படியோ மோப்பம் பிடித்து விடுவார்கள். அதில் எப்படியும் ஓரிருவர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

அவர்கள் அடுத்த நாள் காலையில் முதல் வேலையாக உயர் நீதி மன்றத்திற்குப் போய் இந்த தேர்விற்கு இடைக்காலத் தடை வாங்கி விடுவார்கள். அவ்வளவுதான். இந்த தடையை நீக்க ஆறுமாதம் ஒரு வருடம் போல் ஆகிவிடும். தடையை நாளைக்கு நீக்கப்போகிறார்கள் என்ற செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படியோ கசிந்து விடும். அவர்கள் முன்னேற்பாடாக டில்லியில் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள்.

இங்கு உயர்நீதி மன்றத்தில் இடைக்காலத்தடை நீக்கப்பட்டது என்று நீதிபதி ஆர்டர் போட்டவுடன் டில்லிக்குத் தந்தி கோடுத்து விடுவார்கள். அங்குள்ள வக்கில் உச்ச நீதி மன்றத்தில் இந்த உத்திரவிற்கு இடைக்காலத் தடை வாங்கி விடுவார். அப்புறம் இன்னும் ஒரு ஆறு மாதமோ ஒரு வருடமோ ஓடிவிடும். இப்டியாக அந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு உத்தியாக உயர்வும் உச்ச நீதி மன்றம் போய்த்தான் முடிவு ஆகும்.

பொது வாழ்க்கையிலும் இப்படித்தான். எந்தவொரு சமாச்சாரமானாலும் கோர்ட்டிற்குப் போய்விடுவார்கள். இது கேரள மண்ணின் கலாசாரம். அதனால்தான் அங்கு அதிகமான வழக்குகள் பதிவாகின்றன.

திங்கள், 13 ஜனவரி, 2014

எலும்பு முறிவு வைத்தியம்.

டிஸ்கி; இந்தப் பதிவை டாக்டர்கள் குறிப்பாக எலும்பு வைத்திய டாக்டர்கள் படிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஒரு சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும். இந்தப் பதிவைப் படித்து விட்டு யாருக்காவது ஏதாவது ஆட்சேபணை இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். தரக்குறைவான பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.



சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் யாருக்காவது எலும்பு முறிந்து போனால் ஆங்காங்கே இருக்கும் நாட்டு வைத்தியரிடம் போவார்கள். அவர்கள் எலும்பு முறிந்த இடத்தை கையால் தொட்டுப் பார்த்தே அந்த முறிவு எப்படிப்பட்டது என்று கண்டுபிடித்து அதற்குத் தக்கவாறு மூங்கில் தப்பைகளை வைத்து துணியினால் இறுகக் கட்டி அதன் மீது அவர்கள் கொடுக்கும் அவர்களுடைய ஸ்பெஷல் எண்ணை ஒன்றை அடிக்கடி ஊற்றச்சொல்வார்கள்.

வாரத்திற்கு ஒரு முறை நோயாளியை வந்து போகச் சொல்லுவார்கள். கட்டுப்போட்ட இடம் மிகவும் வீங்கியிருந்தால் கட்டை அவிழ்த்து விட்டு மறுகட்டு போடுவார்கள். எப்படிப்பட்ட எலும்பு முறிவாக இருந்தாலும் இந்த வைத்தியத்தில் எலும்பு கூடிவிடும். பெரிய காயங்கள் இருந்தால்தான் கொஞ்சம் சிரமம். முதலில் காயம் ஆறவேண்டும். பிறகுதான் எலும்பைக் கவனிக்க முடியும். அதற்குள் எலும்பு எசகு பிசகாக ஒட்டிவிடும் வாய்ப்பு உண்டு. அப்போது அந்த எலும்பு ஓரளவு சரியாகச் சேர்ந்திருந்தால் அப்படியே விட்டு விடுவார்கள். இல்லையென்றால் அப்படி சேர்ந்த எலும்பை மறுபடியும் உடைத்து, பிறகு அதை நேராக வைத்து கட்டுப்போடுவார்கள்.

எல்லாம் நாட்டு வைத்தியம்தான். கோவையில் தெலுங்குபாளையம் உடையார் வைத்தியசாலை மிகப்பிரசித்தம். இங்கு சரியாகாத உடைந்த எலும்பு எங்கு போனாலும் சரியாகாது என்று சொல்வார்கள். இப்படி ஊர் ஊருக்கு ஒரு வைத்தியசாலை இருக்கும். சென்னைவாசிகள் புத்தூர் வைத்தியத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்திருப்பார்கள்.

இந்த வைத்தியம் மிகவும் எளிமையானது. ஏழைகளுக்கும் கட்டுப்படியாகக் கூடியது. என்ன, வீட்டில்  மற்றும் துணிமணிகளில் எண்ணை நாற்றம் போக ஓரிரு வருடங்கள் ஆகலாம். அவ்வளவுதான். இந்த மாதிரி வைத்தியங்கள்
வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்ததற்கு காரணம் எலும்புகளின் தன்மைதான்.

மனித உடம்பு மற்றும் சகல உயிருள்ள ஜீவராசிகளின் தனித்தன்மை என்னவென்றால் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ள முடிவது. எந்த வியாதியாய் இருந்தாலும் சும்மா விட்டு விட்டால் தானாகவே சரியாய் விடும். என்ன, கொஞ்ச நாள் பிடிக்கும். ஆனால் மனிதனுக்கு மட்டும் ஆத்திரம். நோய் சீக்கிரம் குணமாக வேண்டும். இதற்காகத்தான் வைத்தியர்கள் பிறந்தார்கள்.

பல விதமான வைத்திய முறைகள் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றி வளர்ந்தன. இதில் நம் நாட்டு ஆயுர்வேத முறை சிறந்து விளங்கியது. உணவே மருந்து என்ற முறையில் வளர்ந்தது. பண்டைக்காலத்தில் நாவிதர்கள்தான் மருத்துவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் அப்படித்தான் நாவிதர்கள்தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இந்த முறைகளே பிற்காலத்தில் மாறி பல வித வைத்திய முறைகள் உருவாக வழி வகுத்தது.

எலும்பு வைத்தியத்திற்கு வருவோம். நாட்டு வைத்தியர்கள் குறைந்த செலவில் வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள். பிறகு இங்கிலீஷ் வைத்தியம் வந்தது. எக்ஸ்-ரே மிஷின் கண்டு பிடித்தார்கள். இந்த மிஷின்கள் எலும்புகளை துல்லியமாய் படம் எடுத்தன. எலும்பு உடைந்ததை சரியாக கண்டு பிடிக்க முடிந்தது. இதனால் எலும்பு வைத்தியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. தெலுங்குபாளையம் வைத்தியர் கூட எக்ஸ்-ரே மிஷின் வாங்கி வைத்தார்.

நாட்டு வைத்தியத்திற்கும் இங்கிலீஷ் வைத்தியத்திற்கும் ஒரே வித்தியாசம், இல்கிலீஷ் வைத்தியத்தில் மாவுக்கட்டு போட்டார்கள். எண்ணை வாசம் இல்லை. ஆகவே மக்கள் இந்த முறையை அதிகம் விரும்பலானார்கள். இப்படி எலும்பு வைத்தியம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மற்ற இங்கிலீஷ் வைத்தியத்துறைகளில் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு டாக்டர்கள் புகழ் பெற்றார்கள். குறிப்பாக அறுவை சிகிச்சைகளில் நூதன உத்திகள் கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்களால் பின்பற்றப்பட்டன. அவர்களின் கல்லாவும் நிறைந்தது.

பாவம், எலும்பு வைத்தியர்கள்! வெறும் மாவுக்கட்டு மட்டும் போட்டுவிட்டு என்ன பில் போட முடியும்? ஏதோ ஓரிரு ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே பில் போட முடிந்தது. இந்த காலத்தில் மேலை நாடுகளில் சிக்கலான எலும்பு முறிவுகளுக்கு ஆபரேஷன் செய்து எலும்புகளுக்கு சப்போர்ட்டாக துருப்பிடிக்காத இரும்புத்துண்டுகளை வைத்து ஸ்குரூ ஆணி வைத்து முறுக்கி வைத்தியம் செய்தார்கள். இப்படி செய்யும்போது  நோயாளிக்கும் டாக்டர்களுக்கும் சேர்த்து நல்ல பலன் கிடைத்தது.

இங்கிலீஷ் வைத்தியத்தில் கத்தி வைத்தால்தான் மதிப்பு. வெறும் மருந்து மட்டும் கொடுக்கும் டாக்டர்களுக்கு மதிப்பு கொஞ்சம் குறைச்சல்தான். ஆகவே எலும்பு வைத்தியத்துறையிலும் கத்தியையும் புத்தியையும் உபயோகிக்கும் பல நூதன உத்திகளை கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ளார்கள். இவை நோயாளியை சீக்கிரம் குணப்படுத்தவும் அவனுடைய பர்சை சீக்கிரம் இளைக்க வைக்கவும் உதவின.

இன்று எலும்பு வைத்தியத்திற்கென்றே ஸ்பெஷலிஸ்ட்டுகளும் ஸ்பெஷல் ஆஸ்பத்திரிகளும் உருவாகி மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றன.
ஏறக்குறைய இருதய ஆபரேஷன் அளவிற்கு எலும்பு வைத்தியமும் முக்கியத்துவம் அடைந்துள்ளது எல்லோருக்கும் (குறிப்பாக எலும்பு வைத்திய டாக்டர்களுக்கும்) மகிழ்ச்சியளிக்கிறது.

வியாழன், 9 ஜனவரி, 2014

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்!


நேற்று எனக்கு மெயிலில் கீழ்க்கண்ட கடிதம் வந்தது. இதுமாதிரியான கடிதங்கள் காலங்காலமாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் இந்த மாதிரி கடிதங்களில் ஏமாந்தும் போகிறார்கள்.

எதற்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கைக்காக இந்த கடிதத்தை பதிவிடுகிறேன். உங்கள் அனுபவத்தையும் பின்னூட்டத்தில் பகிர்ந்தால் வாசகர்களுக்கு உபயோகமாயிருக்கும்.
=================================================================
From: kavita mazumdarshaws
Reserve Bank of India
Auditing and Accounting.

Dear Friend.
This is an important and confidential letter to you, as God may have it, Am kavita mazumdarshaws, I work in the Reserve Bank of India account department for years now, in September 2007, a foreigner (Mr.Chowalert Jitjamnong) who wanted to invest in a Real Estate, Agriculture business in India, I was his account co-coordinator that will direct & manage a fund 5,05,08,609.00 CRORE   (Five Crore Five Lakh eight thousand Six Hundred and Nine rupees only)  to property developer's or any of his partner account if reached a deal but Indian law was against foreigners investing directly in India as of that time. He was on tourist holidays with his family ,Also wished to use the time to invest in India but he died on the process in Thailand with his family without signing any legal documents on a next of Kin.
I write to solicit for support and assistance from you to carry out this deal in my bank that will benefit us, Also to help you to be self employed by establishing you own desired business. See the link below as directed by RBI over a year now which led to my decision to contact you for this urgent deal without any risk or problem in future, it is 100% risk free, you can see the link below for updates


Lying in his inactive account is the sum of RS5,05,08,609.00 CRORE   (Five Crore Five Lakh eight thousand Six Hundred and Nine rupees only)) belonging to a dead foreign customer (Mr.Chowalert Jitjamnong) who was a Oil&Gas consultant, he happened to be deceased during a vacation trip with his wife (Mrs .Siriphut Jitjamnong) and the only child (Chawit Jitjamnong) on board One-Two-Go Orient-Thai Airlines flight OG269 Phuket Airport plane crash of Monday, 17th September 2007 from Bangkok to Phuket.
Info of this crash was on the news which I have tried to notify his relatives but to no avail as he lives a secret life without telling anybody about the money, see link below for more details


Unfortunately, he has no family member in India or Over-sea who are aware of the existence of the funds, at this juncture, I have decided to do business with you by soliciting your assistance in applying as his partner to the bank then the money will be released to you, as I do not want the money to go into the bank treasury as an unclaimed bill, because the banking laws and guidelines stipulates that if such money(S) remains unclaimed for a period of six years(6yrs),the money will be moved into the bank treasury as an unclaimed bill  .

My request and interest for a deal is occasioned by the fact that the customer was a foreigner and he secretly deposited the money without telling anybody, more importantly I will be responsible for approving application  as part of my duty and recommendations but I will not let anybody know about the secret deal between us. 50% of the money will be my share and 40% will be your share for your role, partner and assistance to actualise this deal, while 10% will be for payment of expenses made during and after the deal/transfer into your account thereafter you will assist me invest part of my share once the money entered your account for disbursement according to the percentage indicated above.

To commence the immediate transfer of the fund to your account as agreed, I will arrange an application to the bank making you the beneficiary of the money  and upload your data as an Investor partner to the deceased to make it legal, and then we will follow up all formalities for the transaction. Send me application requirements
Full Name............................................
Address................................................
Telephone Number.............................
Fax Number.........................................
Email Address.....................................
Sex.........................................................
Date of Birth..........................................
Occupation............................................
Id PROOF-----------------------------------
To enable me fix it up in the deceased customer file immediately. It is 100% risk free because it will be secret and nobody will find out.Upon receipt of your reply, I will send to you, the text of application you are to send to the bank, and further clarify you in other issues as to effect this business
Waiting to hear from you urgently. Kindly reply to my mail only: kavita.mam@cpu.in.th

Best Regards
kavita mazumdarshaws
E-Mail:  kavita.mam@cpu.in.th

==================================================================

நான் ஒரு பதிலும் போடவில்லை. 

திங்கள், 6 ஜனவரி, 2014

தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது எப்படி?


இஸ்ரேல் நாடு இருக்குமிடம் அறிவீர்கள். அங்கிருந்து தென்கிழக்கில் 5 மணி நேரப் பயணத்தில் பம்பாய் (மும்பை என்று சொல்லவேண்டுமோ?) வந்துவிடும். ஆனால் அரபு நாடுகளின் மீது பறக்கவேண்டும்.

இஸ்ரேல்காரங்களுக்கும் அரேபியர்களுக்கும் ஜன்மாந்திரப் பந்தம். ஒரே இனமாக இருந்து பிறகு பிரிந்தவர்கள்தானே. அரேபியர்கள் தங்கள் நாடுகள் மீது இஸ்ரேலிலிருந்து புறப்படும் எந்த விமானம் பறந்தாலும் அதை சுட்டுத்தள்ளுவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதேபோல் அரபு நாடுகளிலிருந்து புறப்படும் எந்த விமானமும் இஸ்ரேல் மீது பறந்தால் அது சுட்டுத்தள்ளப்படும். இது இஸ்ரேல், அரபு நாடுகள் மற்றும்  எல்லா இதர நாடுகளும் பரஸ்பரம் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தம். நல்ல நட்பின் அடையாளம் கண்காணாமல் இருப்பதே.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் அவ்வளவு நட்பு. ஆகவே இஸ்ரேலிலிருந்து பம்பாய் வரவேண்டுமானால் வடமேற்கே 7 மணி நேரம் பயணித்து ஐரோப்பாவில் ஏதாவது ஒரு ஊருக்குப் போகவேண்டும். அங்கிருந்து கிழக்கு-தென்கிழக்காக ஒரு 9 மணி நேரம் பயணித்து பம்பாய் வரவேண்டும். கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்.


தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது என்பது இதுதான். என்னுடைய டூரை இப்படித்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நான் இஸ்ரேலை விட்டுப் புறப்படும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு என் சாமான்களையெல்லாம் மூட்டை கட்டினேன். காலை 9 மணிக்கு டாக்சி வருவதாக ஏற்பாடு. நான் என் லக்கேஜ்களை ஓட்டல் லாபியில் கொண்டு வந்து வைத்துவிட்டு காத்திருந்தேன்.

டாக்சி சரியான நேரத்திற்கு வந்தது. அரை மணி நேரத்தில் ஏர்போர்ட் வந்து சேர்ந்தேன். லக்கேஜகளை ஒரு டிராலியில் ஏற்றிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே ஏகப்பட்ட போலீஸ் பெண் போலீஸ்கள்தான் அதிகம். அதில் ஒருத்தி என்னப் பிடித்துக்கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டாள். அவள் கேட்ட முக்கியமான கேள்விகளும் என் பதில்களும் கீழே.

1. கேள்வி:  இஸ்ரேலுக்கு எதற்காக வந்தீர்கள்?

    பதில்:       நான் ஒரு விவசாய விஞ்ஞானி. இங்குள்ள சொட்டு நீர்ப்                                              பாசனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வந்தேன்.

2. கே:  இங்கு எத்தனை நாள் இருந்தீர்கள்?

    ப:     மூன்று நாள்

3.  கே:  இந்த லக்கேஜ்களை எல்லாம் யார் பேக் செய்தார்கள்?

       ப:  நான்தான் பேக் செய்தேன்.

4.   கே: பேக் செய்த பின் எங்காவது போனீர்களா?

        ப:  எங்கும் போகவில்லை.

5.   கே:  இந்த பேக்கேஜுகள் உங்கள் பார்வையிலேயே இருந்ததா?

        ப:  ஆமாம்.

6.    கே. யாராவது உங்களிடம் ஏதாவது பாக்கெட் கொடுத்தார்களா?

        ப:  இல்லை.


"சரி, இங்கேயே இருங்கள்"  என்று சொல்லிவிட்டு, கொஞ்ச தூரத்தில் இருந்த இன்னொரு போலீஸகாரியைக் கூப்பிட்டு அவர்கள் பாஷையில் என்னமோ சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

இந்த இரண்டாவது போலீஸ்காரியும் முதல் போலீஸ்காரி கேட்ட அத்தனை கேள்விகளையும் அதே வரிசையில் கேட்டாள். நானும் அதே பதில்களை அதே வரிசையில் சொன்னேன்.

சரி. நீங்கள் செக்இன் செய்யப் போகலாம் என்று விடை கொடுத்தாள். போன உயிர் திரும்ப வந்த மாதிரி இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அந்த ஊரில் வைரம் பட்டை தீட்டி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். சட்ட பூர்வமாக ஏற்றுமதி செய்தால் நிறைய வரி கட்டவேண்டும். அதனால் இந்த மாதிரி டூர் வரும் ஆட்களிடம் சிறிய பாக்கெட்டுகளில் வைரக்கற்களை கொடுத்தனுப்பினால் வரியை ஏய்க்கலாம்.

நான் ஓட்டலில் இருக்கும்போது ஒரு ஆள் என்னைப் பற்றி விசாரித்தான். நான் ஒரு அரசு ஊழியன் என்று தெரிந்த தும் போய்விட்டான். அவன் இந்த விஷயத்திற்கு நான் தோதுப்படுவேனா என்றுதான் நோட்டம் பார்த்திருக்கவேண்டும்.

எப்படியோ சிக்கல் இல்லாமல் நான் பிளேன் ஏறி யூரிச் என்னும் ஊருக்கு 7 மணி நேரம் பிரயாணம் செய்து வந்து சேர்ந்தேன். பம்பாய் செல்லும் விமானத்திற்காக அரை நாள் காத்திருந்து  பிறகு அதில் ஏறி 9 மணி நேரம் பிரயாணம் செய்து பம்பாய் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து லோகல் விமானம் பிடித்து இரண்டு மணி நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தேன். ஏறக்குறைய இஸ்ரேலிலிருந்து ஊருக்கு வர ஒன்றரை நாள் ஆகியது.

வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு ரசம் சாதம் சாப்பிட்டு விட்டு இரண்டு நாள் தூங்கினேன். இப்படியாக என்னுடைய இஸ்ரேல் டூர் முடிந்தது.