ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

பதிவுகளில் ஒரு தொழில் நுட்பம்

                                                 

ஒரு தூக்குத் தண்டனை பெற்ற கைதியைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அவன் மறுநாள் தூக்கிலிடப் படுவான். அவனுடைய கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்கள். அவன் ஒரு தொழில் நுட்பப் புத்தகத்தின் பெயரைச்சொல்லி அந்தப் புத்தகம் வேண்டுமென்று கேட்பான்.

அந்தச் சிறைக்காவலர்கள் நாளைக்கு நீ இறக்கப்போகிறாய், இன்று அந்தப் புத்தகத்தைப் படித்து உனக்கு ஆகப் போவது என்ன என்று கேட்பார்கள். அதற்கு அவன் பதில் சொன்னான். "நான் இறக்கும்போது இன்னும் ஒரு தொழில் நுட்பத்தைக் கற்றேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்படும் அல்லவா, அது போதும் எனக்கு" என்று பதில் சொன்னதாக அந்தக் கதையில் வரும்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒரு புது கருத்தைத் தெரிந்து கொள்ள வயதோ அல்லது முதுமையோ ஓரு தடை அல்ல என்பதுதான்.

அப்படி நான் இன்று ஒரு தொழில் நுட்பம் கற்றுக்கொண்டேன். அதாவது கூகுள் பதிவுகளில் ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால் அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள settings ஐ மாற்றவேண்டும். இதில் உள்ள ஒரு நுணுக்கம் என்னவென்றால் அந்த மாற்றங்கள் ஏற்கெனவே நீங்கள் பிரசுரித்த பதிவுகளில் ஏற்படுவதில்லை. அடுத்து நீங்கள் புதிதாகப் பிரசுரிக்கும் பதிவுகளில்தான் அந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.

இந்த நுணுக்கத்தை நான் நேற்று கற்றுக்கொண்டேன். கூடவே இன்னும் ஒன்று கற்றுக்கொண்டேன். அதாவது பதிவுலகில் ஏதாவது ஒரு பிரச்சினை என்று அறிவித்தால் கைகொடுக்க நண்பர்கள் பலர் உண்டு என்கிற விவரமும் நேற்று கற்றுக்கொண்டேன்.

ஆகவே யாரும் நமக்கு வயதாகிவிட்டது, இனி இந்த உலகில் நமக்கு என்ன இருக்கிறது என்று சலிப்படைய வேண்டியதில்லை. கடைசி மூச்சு உள்ள வரைக்கும் கற்றுக்கொள்ள பல்லாயிரம் செய்திகள் இவ்வுலகில் இருக்கின்றன. கண்ணையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டால் போதும். அவ்வளவுதான்.

அவசர உதவிக்கு கைகொடுத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே மாதிரி நான் நேற்று பழனிக்குப் போயிருந்தேன். அதென்ன பழனி.கந்தசாமி பழனியில்தானே இருக்கிறார், ஏதோ புதிதாகப் பழனிக்குப் போனதாகச் சொல்லுகிறார் என்ற குழப்பம் வேண்டாம். என் பெயரில் நான் சேர்த்துக்கொண்ட பழனி என்பது என் தந்தையின் பெயரான பழனியப்பன் என்பதின் சுருக்கமே.

அங்கு நான் ஒரு மடத்தனம் செய்தேன். இதில் என்ன புதுமை? வழக்கமாகச் செய்வதுதானே என்று கேட்காதீர்கள். இது ஒரு புதுமையான மடத்தனம். அதலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடத்தை அடுத்த பதிவில் பார்க்கலாமா? 

சனி, 7 பிப்ரவரி, 2015

ஒரு அவசர உதவி

என் தளத்தில் ஏதோ ஒரு வேகத்தில் பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டேன். ஆனால் நண்பர்கள் வேண்டுகோளுக்காக அதைத் திறக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் உபயோகித்து விட்டேன். ஆனால் பின்னூட்டப் பெட்டியைத் திறக்க முடியவில்லை. டெம்ப்பிளேட்டை மாற்றிப் பார்த்து விட்டேன். பலனில்லை.

யாராவது உதவிக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு; இந்த வேடிக்கையைப் பாருங்க. உதவி வேணும்னு நான் பதிவு போட்டவுடனே கூகுள்காரன் பயந்து போயி பின்னூட்டப்பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்துட்டான். நண்பர் ஸ்ரீராம் அவர்களும் ஏதோ மந்திரம் போட்டிருக்கார். முதலில் அவருக்கு நன்றி. அப்புறம் கூகுளுக்கும் நன்றி.

புதன், 4 பிப்ரவரி, 2015

பதிவுகளின் வகைகள்

பதிவுகள் எழுதுவது ஒரு கலை. அதை நல்ல முறையில் வெளியிடுவது அதை விடப் பெரிய கலை. இந்தப் பதிவில் மூன்று தளங்களின் திரை அச்சுப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.

1.  கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள்.



இதில் ஏற்படும் கண்வலியைப் பற்றி இதைப் படிப்பவர்களுக்குத் தெரியும். 

2. அடுத்தது, கொஞ்சம் பராவாயில்லை.



இதில் வரிகளுக்கு இடையே போதிய இடைவெளி இல்லை.

3. நம்ம தளம். எப்படி ஜொலிக்குது பாருங்கள்.



தளங்களை அமைத்துக் கொள்வது அவரவர்கள் விருப்பம்.

சாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன?

                                      

நாளுக்கு நாள் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சாலைகளை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டிருந்தாலும், அவை அதிகரிக்கும் வாகனங்களுக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. வாகன ஓட்டிகள் இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்?

சூழ்நிலைக்கு ஏற்ப வாகனங்களை நிதானமாகவும் பொறுப்பாகவும் ஓட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு எய்கிறார்களா என்று பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூறு சத வாகன ஓட்டிகள் அவ்வாறு செய்வதில்லை. அதனால் என்ன ஏற்படுகிறது என்றால் தினமும் செய்தித்தாள்களில் விபத்து பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இவ்வாறு ஏற்படும் விபத்துகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதைப் படிக்கும் மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

ஒரு வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் ஏறி உட்கார்ந்தவுடன், அந்த வாகனத்தின் பலம் முழுவதும் தனக்கு வந்து விட்டதாக ஒவ்வொருவனும் நினைக்கிறான். சாலையில் செல்லும் மற்றவர்களை தூசிக்கு சமானமாக நினைக்கிறான். தான் தவறே செய்யமாட்டோம் என்று முழு மனதுடன் நம்புகிறான். இந்த மன நிலையே விபத்துக்களின் காரணம்.

நான் ஒரு நாள் முழுவதும் சலிப்பில்லாமல் வாகனம் ஓட்டுவேன். எனக்கு சோர்வு வராது. தூக்கம் வராது. பசி வராது. எப்போதும் வாகனத்தின் மீதே கவனம் வைத்திருப்பேன்.  நான் இதுவரை எந்த விபத்திலும் சிக்கியதில்லை. இப்போதும் அவ்வாறே இந்த வாகனத்தை ஓட்டுவேன். இப்படித்தான் ஒவ்வொரு வாகன ஓட்டியும் தற்பெருமை பேசுவான். ஆனாலும் அப்படிப்பட்ட வாகன ஓட்டிகள்தான் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்.

விபத்து ஏற்பட முக்கிய காரணங்கள் சிலவற்றை இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

முதல் காரணம் - ஓய்வு இல்லாமல் வாகனம் ஓட்டுவது. மனித உடம்பிற்கு சில வரையறைகள் இருக்கின்றன. எப்படிப்பட்ட மனிதனானாலும் அவனுக்கும் சில வரையறைகள் உண்டு. தூக்கமில்லாமல் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கூட இருக்கலாம். ஆனால் அவனால் முழு கவனத்துடன் வேலை செய்ய இயலாது. விழித்திருப்பது போல்தான் தோன்றும். ஆனால் அவன் மூளை அவ்வப்போது அவனை அறியாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்.

இவ்வாறான நிலையில் இருக்கும் ஒருவன் வாகனம் ஓட்டும்போது பல தவறுகள் செய்வான். நின்றிருக்கும் வாகனத்தை அவனால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அதன் மீது தான் ஓட்டும் வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்துவான். அல்லது கட்டுப்பாடான வேகத்தில் செல்லாமல் அதிக வேகத்தில் சென்று, ஒரு நிலையில் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாலைத் தடுப்பில் மோதுவான் அல்லது சாலை ஓர மரத்தில் மோதுவான்.

இந்த மாதிரி விபத்துகளுக்கு ஓட்டுனர் மட்டும் காரணமல்ல. அந்த வாகனத்தில் பயணிப்பவர்களும் காரணமே. அவ்வாறு சரியான ஓய்வு எடுக்காத ஓட்டுனரை வாகனம் ஓட்டப் பணிப்பது தவறென்று அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் பெரும்பாலானோர் இந்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் தவறு செய்து அதற்கான விலையாகத் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள்.

அடுத்த தவறு -  வாகனம் ஓட்டுவதில் தாங்கள் மிகவும் வல்லவர்கள் என்ற ஆணவம் காரணமாக சாலை விதிகளைப் புறக்கணித்து வாகனத்தை ஓட்டுவார்கள். இந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு மூன்று மணி நேரத்தில் வாகனத்தை ஓட்டுவேன் என்று பெருமை பேசுவார்கள். இவர்கள் எதிரே வரும் வாகனங்களைக் கவனிக்காமல் மற்ற வாகனங்களை முந்துவார்கள். சாலை நிலையைக் கண்டுகொள்ளாமல் அதி வேகத்தில் செல்வார்கள். இவர்கள் கட்டாயம் விபத்துகளை ஏற்படுத்துவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு பொறுமை குறைந்து கொண்டே வருகிறது. எதிலும் அவசரம். எங்கும் அவசரம். இவ்வாறு பொறுமை இல்லாமல் இருந்து யமபுரம் போவதற்கும் அவசரப்பட்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதுதான் பரிதாபம். 

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தமிழ் ஈழம்.

நான் சில காலத்துக்கு முன் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பதிவு ஒன்று போட்டு வாங்கிக்கட்டிக் கொண்ட கதை அநேகமாக எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். அப்போது நான் என்ன நினைத்துக்கொண்டிருந்தேன் என்றால் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் என்பவர்கள் பிரிட்டிஷ்காரன் இந்தியாவிலிருந்து இலங்கைத் தேயிலைத்தோட்டங்களுக்கு வேலைக்காக கூப்பிட்டுக்கொண்டு போனவர்கள்  என்பதுதான்.

அந்த எண்ணம் தவறு என்றும் இலங்கைத் தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருபவர்கள் என்றும் பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அப்படித் தெரிந்து கொண்டதின் பின்னர் சில சந்தேகங்கள் என் மனதில் உண்டாயின.

முதல் சந்தேகம் - அப்படி பல காலம் வாழ்ந்தவர்கள் ஏன் சிங்களவர்களுக்குத் தாழ்ந்து போனார்கள் என்பதுதான்?

இரண்டாவது சந்தேகம் - அப்படி ஆயிரம் ஆண்டு கால பரம்பரையான இஙல்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் அப்படி என்ன இனத்தொடர்பு?

மூன்றாவது சந்தேகம் - தமிழீழம் தமிழீழம் என்று பேசிக்கொண்டிருந்தார்களே, அது கிடைத்து விட்டதா?

நான் பின்னூட்டப் பெட்டியை மூடி விட்டதால் எனக்கு நேரடியாக இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்காது என்பதை அறிவேன். எவ்வளவோ சந்தேகங்களுக்கு விடை தெரியாகல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதில் இவையெம் சேர்ந்து கொள்ளட்டுமே. என்ன குடி முழுகிப் போய் விடப் போகிறது? 

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015




தமிழரின் பெருமை தெரியவேண்டும் என்றால்.தமிழகத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும்  ...மேலும் வாசிக்க


இந்தத் தளத்தில் நுழைந்தவுடன் கீழ்க்கண்ட படம் தோன்றுகிறது. என்ன செய்தாலும் மறைய மாட்டேன் என்கிறது. தளத்தின் ஆசிரியர் கவனிக்கவும். 







வெள்ளி, 30 ஜனவரி, 2015

தமிழ் மொழி அழியுமா?

                                
இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/ கலை அரசி என்பவர் எழுதியிருக்கும் கருத்தைக் கவனியுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று நாம் பேசும் தமிழ் எப்படியிருக்கிறது? 

“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸு வைச்சிட்டேன்.  ஆட்டோக்காரன் டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான்,  சன்னுக்கு  எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான்.  அப்புறம் ஹஸ்பண்ட் பைக்ல கூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு. 

அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தா ஸ்டாட்டிங் டிரபிள்.   ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோ பிடிச்சேன்.  ரெண்டு சிக்னல்வெயிட் பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக்.  ஒன் அவர் லேட்டாயிடுச்சி..  அதுக்கப்புறம் தேர்டு புளோர் இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணி செட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி.  லைஃபே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”     


பார்த்தீர்களா?  இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்!  நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இது உண்மையல்ல என்று எந்தத் தமிழனாவது தன் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா?

இது ஏன் என்று ஆராய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். தமிழ் மொழி அழிந்து போன பிறகு அங்கு தமிழ் இனம் என்பது ஏது?

நான் சில நாட்களுக்கு முன் "பெண்கள் கடைப்பிடிக்கவேண்டிய அறிவுரைகள்" (http://swamysmusings.blogspot.in/2015/01/blog-post_3.html) என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதன் பின்னூட்டத்தில் ஒரு இடத்தில் ஒரு இனத்தின் கலாச்சாரம் அழிந்து போனால் அந்த இனமே அழிந்து விடும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு இனத்தின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பண்பு அவர்கள் பேசும் மொழியாகும். அது அழிந்து போன பிறகு அங்கு தமிழ் இனம் ஏது?

நான் குறிப்பிட்ட பெண்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களை விமரிசித்து மூன்று முன்னணிப் பதிவர்கள் என்னை கேவலமாக விமரிசித்தார்கள். 

அந்த மூன்று முன்னணிப் பதிவர்கள் இந்த மொழிச் சீர்கேட்டுக்கு என்ன தீர்வு சொல்லுவார்கள்?

வியாழன், 29 ஜனவரி, 2015

கதிர்வீச்சும் மனிதர்களும்

                                                    
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்காக்காரன் அணுகுண்டு போட்டான். அதனுடைய கதிர்வீச்சுகளின் தாக்கம் இன்றும் அங்கு இருக்கிறது. அதனால் அந்த இடம் மனிதர்கள் வாழ லாயக்கில்லை.

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை நம்பிக் கொண்டிருக்கும் செய்தி இதுவே. அதாவது கதிர் வீச்சு என்றாலே மனிதர்களுக்கு ஆபத்து என்றுதான் நம்புகிறோம். இது ஓரளவிற்குத்தான் உண்மை. அவர்கள் கதிர் வீச்சு என்றால் என்ன? அது என்ன செய்யும் என்கிற விஞ்ஞான உண்மைகளை அறியாதவர்கள் ஆவார்கள்.

இயற்கையில் எல்லாப் பொருள்களும் கதிர்வீச்சை வெளிப்படுத்துகின்றன. இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் கதிர் வீச்சை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. மனிதனும் அவ்வாறே கதிர் வீச்சினை வெளிப்படுத்துகிறான். இதில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் அந்த கதிர்வீச்சின் திறன் அதாவது சக்தி எவ்வளவு இருக்கிறது என்ற தகவல்தான்.

சக்தியைப் பொறுத்து கதிர்வீச்சில் மூன்று வகைகள் இருக்கின்றன. ஆல்பா, பீட்டா, காமா என்பவை அந்த மூன்று வகை. இதில் ஆல்பா வகை கதிர் வீச்சுக்கள் நம்மை ஒன்றும் செய்யாது. நமது மேல் தோலே அவைகளைத் தடுத்து விடும். பீட்டா வகை கதிர் வீச்சு நம் உடலுக்குள் செல்லும் ஆனால் பெரும் தீங்கு விளைவிக்காது. எக்ஸ்ரே கதிர் வீச்சுகள் இவ்வகைப் பட்டவை.

காமா வகை கதிர் வீச்சுகள்தான் ஆபத்தானவை. இவை நம் உடலுக்குள் சென்றால் அங்கு பல நாட்கள் தங்கியிருந்து பல தீங்குகளை ஏற்படுத்தும். இந்த காமா வகை கதிர்வீச்சுகளினால் தீங்குகளைத் தவிர சில நன்மைகளும் உண்டு. புற்று நோய் வைத்தியத்தில் இந்த காமா வகை கதிர் வீச்சுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டுகளில் இருந்து இந்த காமா வகை கதிர் வீச்சுகளே அதிகம் வெளிப்பட்டன. தவிர அந்த கதிர் வீச்சகளின் அளவும் மிக அதிகமாக இருந்தது. இதுவே அன்றைய நாசத்திற்குக் காரணம்.

கதிர் வீச்சுகளைக் கண்டு மனிதன் அஞ்சுவதற்கு முக்கிய காரணம் இவைகளினால் ஏற்படும் தீங்குகள் மட்டுமல்ல. இந்தக் கதிர் வீச்சுகள் மண்ணுக்குத் தெரியாது என்பதுதான் பயத்திற்கு முக்கிய காரணம். தெரியாத தேவதையை விடத் தெரிந்த சைத்தானே மேல் என்று சொல்வதற்குக் காரணம் இதுதான்.

தெரிந்தவைகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வது சுலபம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரியை எவ்வாறு எதிர் கொள்வது? இதுவே நாம் கதிர்வீச்சைக் கண்டு அஞ்சுவதற்குக் காரணம்.

கதிர் வீச்சுகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ஒரே வழி, அப்படிப்பட்ட கதிர் வீச்சுகள் இருக்கும் இடங்களுக்குப் போகாமல் இருப்பதுதான். அப்படிப்பட்ட இடங்களில் தகுந்த எச்சரிக்கை அறிவிப்புகள் இருக்கும். அதை பொருட்படுத்தாமல் நடந்து கொண்டால் அது அவரவர்கள் தலைவிதி.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

நான் விடுதலை ஆகிறேன்.

                                       

பதிவுலகம் என்பது ஒரு மாயா உலகம் என்பதை நான் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறேன். இந்த பதிவுலகில் நடக்கும் எதுவும் நம் நிஜ உலக வாழ்வை பாதிக்கப் போவதில்லை. பதிவுலக சந்திப்புகள் நடக்கும். அங்கு பதிவர்கள் சந்தித்து அளவளாவுவார்கள். சில பல தொடர்புகளும் சிநேகங்களும் தொடரும். இதைத் தவிர பெரிய மாற்றங்கள் நம் வாழ்வில் ஏற்படப்போவதில்லை.

நான் பதிவுலகம் புகுந்ததே என் மூளையைத் துருப்பிடிக்காமல் வைத்துக் கொள்வதற்காகவே. என் பதிவுகளை பலர் படிக்கிறார்கள் என்பது மனதிற்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தாலும் அது என் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக உணர்கிறேன். பாராட்டுகளும் எதிர்ப்புகளும் எப்படியும் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை என்னால் மறுக்க முடியவில்லை.

முக்கியமாக இந்த தாக்கம் என்னுடைய கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கின்றது. நான் நினைப்பதை முழுவதுமாக வெளிப்படுத்த இயலவில்லை. எதிர்ப்புகளை எண்ணி அஞ்சுகிறீர்களா என்று கேட்கலாம். எதிர்ப்புகள்தான் ஒருவனுக்கு டானிக். நான் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை. பாராட்டுகளைக் கண்டுதான் அஞ்சுகிறேன்.

பாராட்டுகளை நான் வாங்கும் கடன்களாகக் கருதுகிறேன். கடன் பட்டார் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பன் கூறியது போல் அவ்வப்போது எனக்கு கலக்கம் வருகிறது. இந்தப் பாராட்டுகள் என் மேல் ஒரு சுமையை ஏற்றி வைக்கின்றன. அதை இறக்கிவைக்க நான் பதில் பாராட்டுகள் செய்யவேண்டி வருகிறது. அது என்னால் முடியவில்லை.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

என்ற வள்ளுவர் வாக்கின்படி நான் என் நிஜ வாழ்வில் பல பொறுப்புகளிலிருந்து விலகி நிற்கிறேன். அத்தியாவசியக் கடமைகள் தவிர வேறு கடமைகளை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் என் வாழ்வை எளிமையாக வைத்திருக்கிறேன். பதிவுலகிலும் அதே எளிமையைக் கொண்டு வர விரும்புகிறேன்.

அதனால் இன்றுடன் என் பதிவில் இருக்கும் பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டேன். இதுகாறும் என் பதிவுகளில் பாராட்டியும் எதிர்கருத்துகளைக் கூறியும் என்னை உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செயல் மூலம் நான் என் கருத்துக்களை இன்னும் சுதந்திரமாக வெளியிட முடியும் என்று நம்புகிறேன்.

நன்றி, வணக்கம்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சுயநலம் vs பொது நலம்

                              

"சுயநலம்" "Selfish" என்றாலே ஏதோ செய்யத்தகாத குற்றம் செய்ததாக கருதும் உலகத்தில் இன்று நாம் வாழ்கிறோம். சுயநலம் கொண்டவன் என்று ஒருவனைக் குறை கூறுவது மிகவும் சாதாரணமாக நடக்கிறது. ஆனால் இது போலித்தனத்தின் (Hypocrisy) உச்சகட்ட சிந்தனையாகும்.

சுயநலம் என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும். தன்னைக் காப்பாற்றிக்கொண்டால்தான் அடுத்தவர்களைக் காப்பாற்றத் தேவையான சக்தி பிறக்கும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் நான் பொது நலவாதி,  பிறரைக் காப்பாற்றுவதே என் பிறவி நோக்கம் என்று இருந்தால் நீங்கள் மறைந்து போவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.

ஒரு குடும்பத்தில் ஒருவன் மூத்த மகனாகப் பிறக்கிறான். அவனுக்குக் கீழே நான்கு உடன் பிறப்புகள். அனைவரையும் கடைத்தேற்ற வேண்டிய பொறுப்பு மூத்த மகனுக்கு உண்டு. ஆனால் அவன் தன்னுடைய நலத்தைக் கருதாமல் உடன் பிறப்புகளை மட்டும் கடைத்தேற்றி விட்டு வயதான காலத்தில் தனி மரமாக நின்று கொண்டு இருந்தால் அவன் மீது கூடப் பிறந்தவர்களோ உறவினர்களோ அனுதாபம் காட்ட மாட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ளாவிட்டால் அவன் இந்த உலகில் வாழத் தகுதி அற்றவன்.

சிலர் பொது நல சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தான் சம்பாதிப்பதை எல்லாம் பிறருக்குச் சேவை செய்தே காலம் கழிப்பார்கள். தன் குடும்பம் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்க்ள எல்லோரும் இந்நாளைய அரசியல்வாதிகளைப் பார்த்து நடந்து கொள்ளவேண்டும்.

ஆகவே சுயநலம் என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல. தனக்கு மிஞ்சித்தான் தானதருமம் என்று சொல்லியதை நினைவில் கொள்ளவேண்டும். மகாபாரதத்தில் வரும் கர்ணனைப் போல் பகழ் பெறவேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.


வெள்ளி, 23 ஜனவரி, 2015

கலாச்சாரம்


கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு என்று பல சொற்களால் குறிக்கப்படும் குணம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இது மக்களின் பழக்க வழக்கங்களைக் குறிப்பிடுவது ஆகும். பெரும்பாலும் இது நம்பிக்கை சார்ந்ததே ஆகும். நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள், நாமும் கடைப்பிடிப்போம் என்ற வகையில் வருவதே இந்த கலாச்சாரப் பண்புகள்.

ஒரு தனி மனிதனின் பண்புகள் அவன் வாழும் சமூகக் கலாச்சாரத்தை ஒட்டி அமைவது இயற்கை. அந்தக் கலாச்சாரத்தின் அங்கங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கவேண்டியது அந்த சமூகத்தில் உள்ள அனுபவமிக்கவர்களின் கடமையாகும்.

ஆனால் இன்றைய விஞ்ஞான அறிவு அபரிமிதமாக வளர்ந்துள்ள நிலையில் இத்தகைய கலாச்சார அடையாளங்கள் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள்.  மக்கள் மனம் மாற்றமடையும்போது கலாச்சாரங்கள் மற்றமடையத்தான் செய்யும்.

இத்தகைய மாற்றங்களைக் கண்டு சிலர் புலம்புவார்கள். அவர்களை பழமைவாதிகள் என்று உலகம் புறக்கணித்து விட்டு தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கும்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"
என்ற கொள்கையினை பழங்காலத்திலேயே தமிழன் உண்டாக்கியிருக்கிறான். ஆகவே மாற்றங்கள் நடைபெற்றே தீரும். அவைகள் நன்மை தருமாயின் நன்றே. இல்லாவிடில் சமூகம் சீரழியும்.

வியாழன், 22 ஜனவரி, 2015

வீடு வாங்குவது எப்படி? ஒரு புலம்பல்.


                                       

கார் வாங்குவதைப் பற்றி எழுதப்போக ஒருவர் வீடு வாங்குவதைப்பற்றி எழுதச்சொன்னார். நானும் பெரிய கித்தாப்பாக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் இதைப் பற்றி யோசிக்கும்போதுதான் வீடு வாங்குவது என்பது இன்றைய கால நிலவரத்தில் எவ்வளவு கடினமான விஷயம் என்பது உறைத்தது.

இன்றைய பொருளாதார நிலையில் ஒருவன் எவ்வளவு சம்பாதித்தால் ஜீவிக்க முடியும் என்பதற்கு ஒரு நிலையான பதில் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். நடுத்தர வர்க்கம் என்று சொல்லக் கூடியவர்கள் படும்பாடுதான் சொல்லில் அடங்காதது.

ஒரு பெரு நகரத்தில் இன்று வீட்டு வாடகை ஆகாசத்தில் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளிச் செலவோ நினைத்துப் பார்க்க முடியாதபடி உயர்ந்து இருக்கிறது. உணவுப் பொருட்கள், கேஸ், காய்கறிகள் இவைகளைத் தவிர்க்க முடியாது. பண்டிகைகள், ஊர்ப்பிரயாணம், கல்யாணம் மற்றும் மற்ற விசேஷங்கள், வைத்தியம் இப்படி தவிர்க்கமுடியாத செலவுகளினால் மாதச் சம்பளக்காரர்கள் படும் சிரமங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

இப்படி இருக்கையில் எதிர் காலத்திற்காக எப்படிச் சேமிப்பது, வீடு வாங்குவது எப்படி, குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வது எப்படி என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த சோதனைகளையெல்லாம் எப்படித் தாண்டி வந்தேன் என்று நினைத்தால் ஒரு குழப்பம்தான் மிஞ்சுகிறது.

இந்த நிலையில் வீடு வாங்க என்ன யோசனை சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய வயதுதான் என்று நினைக்கவேண்டி இருக்கிறது. என்னால் இன்றுள்ள பொருளாதார நிலையை, அதில் வரும் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என் அனுபவம் இன்றைய காலகட்டத்தில் எதற்கும் உதவாது என்று புரிவதற்குத்தான் உதவும் என்று புரிகிறது.

நான் வளர்ந்த, வாழ்ந்த காலம் அப்படி. ஒரு மூட்டை (100 கிலோ) அரிசி 10 ரூபாய் என்று விற்றதைப் பார்த்தவன் நான். மார்க்கெட்டுக்கு ஐந்து ரூபாயைக் கொண்டு போனால் ஐந்து பேர் கொண்ட என் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வருவேன். என் கல்யாணத்திற்கு (1964) ல் மொத்தமாக 2000 ரூபாய் செலவு செய்தேன். நேற்று ஓட்டலுக்குப் போய் வந்த என் பேரன் ஆறு பேர் சாப்பிட்டதற்கு 2000 ரூபாய் பில் ஆகியது என்கிறான்.

இன்று ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு என்ன செலவு ஆகிறதென்பது எனக்குத் தெரியவில்லை. நான் பிறந்து வளர்ந்தது ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தின் அடி மட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தில்தான்.
ஆடம்பரம் என்றால் என்னவென்று தெரியாமலேயே வளர்ந்தவன் நான்.

அப்படி வளர்ந்த என்னாலேயே இன்றைய பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று உள்ள பொருளாதார நிதர்சனங்களை உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆகையால் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனால் ஒரு வீடு எப்படி வாங்க முடியும் என்பதற்கு வழி காட்ட எனக்குத் தெரியவில்லை.  நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

புதன், 21 ஜனவரி, 2015

மகாபாரதமும் மாதொரு பாகனும்



"நிர்வாணபுரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்" என்று ஒரு பழமொழி உண்டு. நான் முதலிலேயே அரைப் பைத்தியம்.  முழுப்பைத்தியம் ஆகாமலிருக்கத்தான் இந்தப் பதிவு.

மாதொரு பாகனைப் பற்றி ஏறக்குறைய பெரும்பாலானோர் தங்கள் தங்கள் கருத்துக்களை பதிவேற்றி விட்டார்கள். நேற்று ராத்திரி, (எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்) தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது, இதைப்பற்றிய நினைவு வந்தது. ஊரே தீப்பற்றி எரிகிறது,  நாமும் நம் பங்கிற்கு ஏதாவது கொஞ்சம் செய்ய வேண்டாமா என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

இராமாயணம், மகாபாரதம் இரண்டும் நம் நாட்டில் இந்துக்களால் போற்றிக் கொண்டாடப்படும் மாபெரும் இதிகாசங்கள். அவற்றைப்பற்றி ஏதாவது மோசமாகப் பேசினால் நான் உயிருடன் எரிக்கப்படுவேன் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். ஆகவே அவற்றைப் பற்றித் தவறாக ஒன்றும் பேசமாட்டேன்.

அதில் வரும் சில நிகழ்வுகளை மட்டும் அப்படியே மேலோட்டமாக சுட்டிக்காட்ட மட்டும் விரும்புகிறேன். இந்த நிகழ்வுகள் ஏற்கெனவே தொலைக் காட்சியில் ஒளி பரப்பப்பட்டவைதான். நான் ஒன்றும் புதிதாக இட்டுக்கட்டவில்லை.

சந்தனு மகாராஜாதான் மகாபாரதத்தில் வரும் முதல் ராஜா. இவருக்கு இரண்டாவது பெண்டாட்டி சத்தியவதி என்ற மீனவ ராஜகுமாரி. சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்பவை அவர்கள் பெயர், இதில் சித்திராங்கதன் கல்யாணம் செய்யாமலேயே ஒரு சண்டையில் இறந்து போகிறான்.அடுத்தவன் விசித்திரவீரியன். இவனுக்கு அம்பிகை, அம்பாலிகை என்று இரண்டு காசி நாட்டின் இளவரசிகளை மணமுடிக்கிறார்கள்.

விசித்திரவீரியன் குழந்தைப்பேறு இல்லாமல் இறந்து போகிறான். சத்தியவதி தர்ம சங்கடத்தில் மூழ்கிறாள். ராஜ்யத்திற்கு வாரிசு இல்லை. வாரிசு இல்லாத ராஜயத்தை எதிரிகள் பிடித்துக்கொள்வார்கள். என்ன செய்வது என்று யோசித்து ஒரு உபாயம் செய்கிறாள். அதன் விளைவாக இரண்டு வாரிசுகள் உண்டாகின்றன. திருதராஷ்டிரன், பாண்டு ஆகிய இருவரும்தான் அந்த வாரிசுகள்.

அந்த உபாயம் என்னவென்பதை  டிவி தொடர் மூலம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். அதை நான் இங்கு விவரித்து தேசப் பிரஷ்டம் ஆக விரும்பவில்லை. அதனால் அதைத் தவிர்க்கிறேன். அதே மாதிரி பாண்டவர்கள் ஐவரும் பிறந்த வழியும் அனைவரும் அறிந்ததே.

இந்தக் கதை நடந்தது திரேதா யுகத்தில். இப்போது நடக்கும் கலியுகத்திலும் இந்த மாதிரி வம்ச விருத்திக்காக சில உபாயங்களைக் கடைப்பிடித்ததாக பெருமாள் முருகன் என்பவர் மாதொரு பாகன் என்கிற தன் நாவலில் குறிப்பிட்டிருக்கிறாராம். நான் இந்த நாவலைப் படித்ததில்லை. திரேதாயுகத்தில் நடந்ததை கலியுகத்திலும் நடந்ததாகச் சொல்லலாமோ?  வம்பில் சிக்கிக்கொண்டார்.

பெருமாள் முருகனுடைய அப்பா ஒரு தீர்க்கதரிசி. தன் மகன் எதிர் காலத்தில் சைவ-வைஷ்ணவப் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக இரண்டு கடவுள் பெயர்களையும் சேர்த்து பெருமாள் முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார். யாரானாலும் தங்கள் பெயருக்கு "ஹானி" வருகிறமாதிரி நடந்து கொள்ளக்கூடாது. இவர் தன் பெயருக் கேட்ப நடந்து கொள்ளவில்லை.

இப்போது மர-இடுக்கில் வாலை விட்டுவிட்டு ஆப்பை பிடுங்கின குரங்கின் நிலையில் இருக்கிறார். இதனால் நான் சொல்லும் நீதி என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்கள் பெயருக்கேட்ப நடந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டில் ஆப்பைப் பிடுங்கின குரங்கின் கதிதான் வாய்க்கும்.

நான் என் பெயருக்கேட்ப நடந்து கொள்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். இல்லையென்று சொன்னால் வருத்தப்படமாட்டேன்.

பின்குறிப்பு - குரங்கு வாலை விட்டுட்டு ஆப்பைப் பிடுங்கின படம் கிடைக்கவில்லை. அதனால் இந்தப் படத்துடன் திருப்திப் பட்டுக்கொள்ளவும்.