வியாழன், 19 மார்ச், 2015

கோதுமை வடை- கோவை ஸ்பெஷல்

  Image result for உப்புக் கச்சாயம்
இது சரியான படம் இல்லை. ஆனா கோதுமை வடை ஏறக்குறைய இந்த மாதிதான் இருக்கும்.


இது எங்க ஊரு ஸ்பெஷல் ஐட்டமுங்க. இதை எங்கூர்ல கோதுமை கச்சாயம்னு சொல்லுவாங்க. நாந்தான் நாம இப்ப வடை சீசன்ல இருக்கறதால இதுக்கு கோதுமை வடைன்னு பேர் வச்சேனுங்க.

இதை ரெண்டு தினுசாப் பண்ணுவாங்க. ஒண்ணு, உப்பு, காரம் போட்டு பண்றதுங்க. அதுக்கு உப்புக் கச்சாயம்னு பேருங்க. இன்னொண்ணு வெல்லம், ஏலக்காய் எல்லாம் போட்டு பண்றது. அதுக்கு இனிப்புக் கச்சாயம்னு பேரு. ஒவ்வொண்ணாச் சுட்டு,  நாலு நாலாச் சாப்பிடலாங்க.

கோயமுத்தூர் ஜில்லாவில அந்தக் காலத்தில கோதுமை விவசாயம் பண்ணுவாங்க. இதுக்கு சம்பா கோதுமைன்னு பேரு. மானாவாரியா எறங்காட்டுல (கரிசல் காட்டுக்கு எங்க ஊர்ல எறங்காடுன்னு சொல்வோம்) செய்யற விவசாயம். குளிர் காலத்தில வெளையற பயிருங்க. தானியம் நீளநீளமா நல்ல கோதுமை நெறத்தில இருக்குமுங்க.

இதை ரவை பண்ணி உப்புமா செய்து சாப்பிட்டா, ஹூம், அது அந்தக்காலம். இப்ப எங்கேங்க அந்த மாதிரி ரவை கெடைக்குது. அந்த உப்புமா செய்யறதப் பத்தி ஒரு பதிவில தனியா சொல்றேனுங்க. மத்த ஜில்லாக்காரங்களுக்கு ரவைன்னா, வெள்ளையா இருக்கு பாருங்க, சூஜி, அதுதான் ரவை அப்படீம்பாக. இந்த பிரவுன் ரவையை ரொம்ப பேர் பார்த்தே இருக்க மாட்டாங்க.

அத விடுங்க. இப்ப நம்ம கோதுமை வடைக்கு வருவோம். இந்த மாதிரி கோதுமை இப்ப கெடைக்கறது ரொம்பக் கஷ்டமுங்க. பஞ்சாப் கோதுமைன்னு பலசரக்குக் கடைகள்ல கேட்டா தருவாங்க. கொஞ்சம் வெல ஜாஸ்தியா இருக்குமுங்க. நல்லா வடை சாப்பிடணும்னா வெலயப் பாத்தா ஆகுமுங்களா.

இந்த வடை சுடுவதற்கு கட்டாயம் ஆட்டுக்கல் அதாங்க ஆட்டாங்கல் அதாங்க உங்க ஊர்ல சொல்லுவீங்களே கல்லுரல், அது கண்டிப்பா வேணுமுங்க. மிக்சி, கிரைண்டர் இதெல்லாம் உதவாதுங்க. அப்புறம் ஆட்டறதுக்கு வலுவா நெண்டு பேர் வேணுமுங்க. ஏன்னா, கோதுமை ஆட்ட ஆட்ட கோந்து மாதிரி பசையா ஆகிடுமுங்க.

நீங்க சின்னவங்களா இருக்கறப்போ இந்தக் கோதுமையை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு மென்றிருக்கீர்களா? கொஞ்ச நேரம் மென்றவுடன் ஒரு ரப்பர் மாதிரி ஆகிவிடும். எங்களுக்கெல்லாம் அந்தக் காலத்து chewing gum இதுதான். இந்தக் கோதுமையை ஆட்டும்போது இந்த மாதிரி ஒரு ரப்பர் பதத்திற்கு வருமுங்க. அப்படி வர்றதுக்கு கை வலுவா இருக்கற ரெண்டு பேர் ஆட்டோணுமுங்க.

இந்தக் கோதுமை ஒரு இரண்டு லிட்டர் எடுத்து மதியமே தண்ணியில ஊறப் போட்டுடுங்க. சாயங்காலம் 4 மணிக்கு எந்திரிச்சு, ஒரு லிட்டர் கோதுமையை எடுத்து ஆட்டாங்கல்லில் போட்டு ஆட்ட ஆரம்பிங்க. கொஞ்சம் ஆட்டினதும் அளவாக உப்பு, உரிச்ச சின்ன வெங்காயம் கொஞ்சம், ஒரு பத்து பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, எல்லாம் சேத்தி நல்லா ஆட்டுங்க. கோதுமை கொஞ்ச நேரத்தில் அல்வா பதத்திற்கு வந்துவிடும்.

அப்போது மாவை கல்லுரலில் இருந்து எடுத்து சமையலறைக்குக் கொண்டுபோய் கொஞ்சம் கொஞ்சமாக வடை அளவிற்கு எடுத்து விரல்களால் தட்டையாகப் பண்ணி காயந்த எண்ணையில் போட்டு சுட்டு எடுக்கவும். சொந்தமாக தயார் செய்த தேங்காய் எண்ணையில் சுட்டால் வடை தேவாம்ருதம் போல் இருக்கும். இந்த வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் தூங்கி எழுந்து கைகால் மொகம் களுவீட்டு ஹாலில் தயாராக ஈசி சேரில் உட்கார்ந்திருக்கவும்.

வடைகள் தயாரானவுடன் ஒரு தட்டில் நாலைந்து வடைகள் வைத்து உங்களுக்கு வரும். இதற்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. பல் மட்டும் கொஞ்சம் வலுவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். இந்த வடையை உளுந்து வடை மாதிரி லேசாக நெனைக்காதீங்க. பாதி வடையைக் கடித்து வாயில் போட்டு நன்றாக மெல்லவேண்டும். அப்போதுதான் அதன் ருசி நாவிற்குத் தெரியும்.

                     

                                               இனிப்புக் கச்சாயம்

பல் வலிக்க ஆரம்பித்தவுடன் வடை சாப்பிடுவதை நிறுத்தி விடலாம். கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கொண்டு பல்களுக்கு ஓய்வு கொடுங்கள். இதற்குள் ஊறவைத்ததில் மீதி இருக்கும் கோதுமையை வெல்லம், ஏலக்காய் போட்டு ஆட்டி, இனிப்பு வடை சுட ஆரம்பித்திருப்பார்கள். இப்போது பற்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்திருக்கும். பிறகு என்ன, இனிப்பு வடைகளைச் சாப்பிடவேண்டியதுதான். சாப்பிடும் முறை பழைய மாதிரிதான். பாதி வடையைக் கடித்து நன்றாக மென்று கூழாக்கி ருசித்து விழுங்க வேண்டியதுதான்.

இந்த வடைகளை இரண்டு நாட்கள் வரைக்கும் வைத்திருந்து சாப்பிடலாம். மறுநாள் சாப்பிடும்போது ருசி இன்னும் அதிகமாக இருக்குமுங்க. இதுதாங்க கொங்கு பூமியில புது மாப்பிள்ளைக்கு செஞ்சு போடற பலகாரமுங்க. செஞ்சு சாப்பிட்டுப் பாத்திட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க.   

செவ்வாய், 17 மார்ச், 2015

வாழைக்காய் வடை

                                            
உளுந்து வடை தெரியும், மசால் வடை தெரியும், இது என்னங்க வாழைக்காய் வடை, வாழைக்காய் மாதிரி வடையா என்று குழப்பிக் கொள்ளவேண்டாம். இங்கு கொடுத்துள்ள குறிப்புகளைப் படித்து அதே மாதிரி செய்து சாப்பிடவும். (அம்மா செய்ய ஐயா சாப்பிடுவார். ஆளுக்கு ஒரு வேலை) அப்புறம் எனக்கு "சமையல் சக்கரவர்த்தி" என்னும் பட்டமே கொடுத்து விடுவீர்கள்.

போனவாரம் என் சம்பந்தி தோட்டத்திற்குப் போயிருந்தோம். அவர் அப்போதுதான் ஒரு முற்றின வழைத்தார் வெட்டி வைத்திருந்தார், மொந்தன் வாழைத்தார். மொந்தன் வாழைக்காய்கள் கறி செய்வதற்குத்தான் பயன்படும். பழுக்காது. நாங்கள் திரும்பி வரும்போது ஒரு சீப்பு (வாழைக்காய் சீப்புங்க, தலை சீவற சீப்புன்னு நெனக்காதீங்க) கொடுத்தனுப்பினார்.

அதை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தோம். அடுத்த நாள் அவைகளில் லேசாக மஞ்சள் நிறம் தட்டியது. அவை நல்ல முத்தின காய்களாக இருந்த தால் பழுக்க ஆரம்பிக்கிறது என்று புரிந்தது. அத்தனை காய்களையும் உடனே கறி செய்து சாப்பிட முடியாது. தவிர வாழைக்காய் கறி கொஞ்சம் திகட்டிப்போய் விட்டது.

என் தங்கைக்கு யாரோ எப்போதோ சொல்லியிருந்த குறிப்பு நினைவிற்கு வந்தது. வாழைக்காய் வடை சுடலாமா என்று ஒரு மந்திராலோசனை செய்து அந்த யோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று நான் பகல் தூக்கத்தை முடித்துவிட்டு எழுந்திருக்கும்போதே கமகமவென்று மசால் வாசனை மூக்கைத் துளைத்தது.

அவசர அவசரமாக முகத்தைக் கழுவி விட்டு வந்தால் ஒரு தட்டில் வடை மாதிரி நாலைந்து சமாச்சாரம் இருந்தது. ஒன்றைப் பிய்த்து வாயில் வைத்தேன். அப்படியே கரைந்து வயிற்றுக்குள் போய்விட்டது. இது என்னடா என்று அடுத்ததைப் பிய்க்காமல் வாயில் போட்டேன். கொஞ்ச நேரம் வாயில் இருந்தது. அப்போதுதான் அதன் ருசி நாக்கிற்கு உரைத்தது.

இது வரை நான் அப்படிப்பட்ட ஒரு வடை ருசியை அனுபவித்ததில்லை. கொஞ்சம் மொறுமொறுப்பு. கொஞ்சம் இனிப்பு சுவை. லேசான காரம். ஒரு பக்கத்தில் மசால் வாசனை. வடையில் வழக்கமாக க் காணப்படும் எண்ணையே இல்லை. இந்த ருசியை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

இதுதான் வாழைக்காய் வடை என்றார்கள். நான் முதலில் கொடுத்த வடைகளைச் சாப்பிட்டவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை. .............................
இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கேட்டேன். அவ்வளவுதான் சுட்டவடைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பதில் வந்தது.

எத்தனை வடை சாப்பிட்டேன் என்று நினைவிற்கு வரவில்லை. அப்படியான ஒரு சுவை. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த மனப்பான்மையில் அந்த வடை சுடுவதின் ரகசியங்களைக் கேட்டறிந்து உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்ல முற்றின வாழைக்காய்கள் ஒரு பத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளை அப்படியே இட்லிப்பானையில் வைத்து வேகவையுங்கள். நன்றாக வேகவேண்டும். ஆனால் குழைந்து போகக்கூடாது. அவைகளை ஆறின பிறகு எடுத்து தோல்களை உறித்து விடவும். தோல்கள் வேண்டாம். அவைகளைக் கடாசிவிடவும்.

இதன் கூட ஒரு டம்ளர் பொட்டுக்கடலை, அரைமூடி தேங்காய் துருவின தேங்காய்த் துருவல், ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு துண்டு லவங்கப்பட்டை, இரண்டு தேக்கரண்டி மிளகாய்த்தூள், அளவான உப்பு, கொஞ்சம் கருவேப்பிலை, சொஞ்சம் கொத்தமல்லித் தழை இவைகளைச் சேர்த்து கல்லுரலில் போட்டு நைசாக வரும் வரை ஆட்டிக் கொள்ளவும். ஆட்டும்போது தேவையான தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். ஆட்டின மாவு வடை சுடும் பக்குவத்திற்கு ஆட்ட வேண்டும்.

அவ்வளவுதான். இந்த மாவை சிறு சிறு வடைகளாக எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

இந்த வேலைகளை எல்லாம் வீட்டுக்கார அம்மா செய்யும்போது நீங்கள் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கவும். ஒவ்வொரு அடைசலாக சுட்டவுடன் தட்டில் உங்களுக்கு வரும். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடவும். ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.

இதுதாங்க வாழைக்காய் வடை சுடும் சாப்பிடும் பக்குவம். எப்படி ஆண்களும் பெண்களும் வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதை இந்தப் பதிவில் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளேன் என்பதை ரசிக்கவும்.

சனி, 14 மார்ச், 2015

சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்.

                                                 Image result for fox and grapes story

நரியும் திராக்ஷைக் குலைகளும் கதையைக் கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்தக் கதை ஒரு எதிர் மறைத் தத்துவத்தை எடுத்துக் காட்டத்தான் பெரும்பாலும் சொல்லப் படுகிறது.

ஏதோ நரி சொல்லத்தகாத வார்தைகளைச் சொல்லிவிட்ட மாதிரியான தொனி இந்தக் கதையில் வலியுறுத்தப்படுகிறது. இந்த மாதிரி சொல்பவர்கள் எல்லாம் கேலிக்குரியவர்கள் என்றுதான் நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அருமையான வாழ்க்கைத்த் தத்துவம் இந்தக் கதையில் அடங்கியிருக்கிறது. இதை உணராமல் நாம் எல்லோரும் அந்த பாவப்பட்ட நரியை ஏளனமாகப் பார்த்து வந்திருக்கிறோம்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஒருவன் நன்றாகப் படித்து நல்ல பட்டங்கள் எல்லாம் வாங்கியிருக்கிறான். அவன் பல வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறான். நேர்முகத் தேர்விற்கு பலரால் அழைக்கப்படுகிறான். அவனுக்கு ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்கான உத்திரவு கிடைக்கிறது. ஆனால் அவன் எதிர்பார்த்ததோ வேறு ஒரு கம்பெனியின் உத்திரவை.

இப்போது அவன் என்ன செய்யவேண்டும்? அவன் எதிர்பார்த்த கம்பெனியில் இருந்து உத்திரவு வரவில்லையே, என் வாழ்வு வீணாகிப் போனதே என்று புலம்பிக்கொண்டு இருந்தால் என்ன ஆகும்? அவன் வாழ்வு வீணாகித்தான் போகும்.

சரி, கிடைத்த வேலையில் சேர்வோம், அந்த வேலை என்ன பெரிய சர்க்கரைக் கட்டியா? என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு கிடைத்த வேலையில் சேர்வதுதானே புத்திசாலித்தனம்?

நரி அதைத்தானே செய்தது? அந்த திராக்ஷைப் பழம் எட்டவில்லை. அதற்காக அங்கேயே உட்கார்ந்து கொண்டு புலம்பினால் அந்தப் பழம் கிடைக்குமா என்ன? ஆகவே அது புத்திசாலித்தனமாக கிடைக்காத பழம் புளித்த பழம், நாம் இன்னொரு தோட்டத்தில் முயன்றால் நல்ல இனிப்பான பழம் கிடைக்கக் கூடும் என்று அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டது.

இது புத்திசாலித்தனமா? இல்லை அங்கேயே நின்று கொண்டு கிடைக்காத பழத்தைப் பார்த்து ஏக்கப்பட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமா? மக்களே, யோசியுங்கள். வாழ்க்கையில் நம்மால் எது முடியுமோ அதைச் செய்யுங்கள். நம்மால் முடியாதவற்றை எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்காதீர்கள்.

வியாழன், 12 மார்ச், 2015

உலகமே ஒரு நாடக மேடை

மோடி வருகையை முன்னிட்டு 82 மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்கிறது - இன்றைய செய்தி

ஆஹா, என்ன ஒரு கருணை என்று வாய் பிளக்காதீர்கள். இது ஒரு பட்டவர்த்தனமான அரசியல் நாடகம்.

நான் வேலையில் இருந்த போது இப்படிப்பட்ட ஒரு நாடகத்தைப் பார்த்தேன். அப்போதுதான் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் உருவான புதிது. அதன் முதல் துணைவேந்தர் ஒரு சாமர்த்தியசாலி. காரியங்களை நடத்துவதில் கைதேர்ந்தவர்.

அவர் ஒரு முறை 25 நாட்களுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். திரும்பி வரும் நாளன்று அவர் கோவைக்கு 8 மணிக்கு விமானம் மூலம் திரும்பி வருவார் என்பது பயணத்திட்டம். பொதுவாக யாராக இருந்தாலும் 25 நாட்கள் வெளியூர் சென்று விட்டு ஊருக்கு வந்தால் தன் வீட்டுக்குத்தான் செல்வார்கள்.

ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை. கோவைக்குப் பக்கத்தில் பவானிசாகர் என்னுமிடத்தில் ஒரு விவசாயப் பண்ணை இருக்கிறது. அவர் திரும்பிவரும் அன்று அங்கு ஒரு விவசாயிகள் தின விழா ஏற்பாட் செய்யச்சொல்லி விட்டு வெளியூர் பயணம் மேற்கொண்டார். திரும்பி வந்த அன்று விமான நிலையத்தால் இறங்கியவுடன் காரில் பவானிசாகர் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு மாலையில்தான் கோவை வீட்டிற்கு வந்தார்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். துணைவேந்தருக்கு என்ன ஒரு கடமை உணர்வு? இவ்வளவு நாள் கழித்து திரும்பியதும் வீட்டிற்குக் கூடப் போகாமல் உடனே ஒரு விழாவில் கலந்து கொள்ளுகிறாரே? என்ன ஒரு கடமை உணர்வு? என்ன ஒரு திறமை? என்ன ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு? என்ன, ஆச்சரியம்?  என்று எல்லோரும் வாயைப் பிளந்தார்கள். நானும் கூடத்தான்.

பலநாட்கள் கழித்துத் தான் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது.  இது ஒரு அப்பட்டமான நாடகம். ஒரு நாள் முன்பாகவே பெங்களூர் வந்து இறங்கி அங்கு ஒரு விடுதியில் தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது. அங்கு தனக்கு வேண்டிய ஒருவரை ரகசியமாக வரவழைத்து விழா ஏற்பாடுகளெல்லாம் சரியாக இருக்கிறதா என்று  சரி பார்த்துக் கொள்ளவேண்டியது. மறுநாள் விமானத்தில் பெங்களூரிலிருந்து கோவை வந்து விழாவிற்கு செல்லவேண்டியது.

ஜனங்கள் அவர் அப்போதுதான் நேரடியாக வெளிநாட்டிலிருந்து வந்து இறங்குகிறார் என்று நம்பிக் கொள்வார்கள். எப்படி ஒரு நாடகம்?

ஒரு விஞ்ஞானிக்கே இப்படி ஒரு நாடகம் போட்டுத் தன் மதிப்பை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றினால் ஒரு அரசியல்வாதிக்கு என்னென்ன தோன்றும்? மடத் தமிழன்கள் எல்லாம் இலங்கை அரசுக்குத் தமிழர்களின் பேரில் என்ன ஒரு அக்கறை என்று ஆச்சரியப்படமாட்டார்களா?

புதன், 11 மார்ச், 2015

இ.பி.கோ. செக்ஷன்கள் தெரியுமா?

                                    Image result for வரதட்சிணைக் கொடுமை
இ.பி.கோ. 406 செக்ஷன் அப்படீன்னா என்னன்னு தெரியுமா? தெரியாதவரைக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இதுதான் கணவன்களைப் பழிவாங்க மனைவிகள் பிரயோகிக்கும் ஆயுதம். என்னை, என் புருஷன் வரதட்சினைக் கொடுமை செய்கிறான் என்று போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பெண், புகார் கொடுத்தால் போதும். உங்களை இந்த இ.பி.கோ. 406 செக்ஷன் படி குற்றம் சாட்டி கம்பி எண்ண விட்டு விடுவார்கள்.

அதே மாதிரி வருமான வரிக்காரர்களும் பல செக்ஷன்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது செக்ஷன் 245 ம் 143 ம் ஆகும். அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கேளவிப்பட்டிருப்பீர்கள். இந்த வருமான வரிக்காரர்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். நின்றுதான் கொல்வார்கள்.

செக்ஷன் 245 என்பது கொலை செய்வதற்கான முன் அறிவிப்பு. செக்ஷன் 143 உங்களைக் கொலை செய்யப் போகிறோம் என்று சொல்லும் இறுதி அறிவிப்பு. வருமான வரிக்காரர்களுக்கும் ஆடிட்டர்களுக்கும் ஒரு எழுதாத உடன்படிக்கை இருக்கிறது. எப்படி நீதி மன்றத்தில் எதுவாக இருந்தாலும் ஒரு வக்கீல் மூலமாகத்தான் நீங்கள் உங்கள் வாதத்தைச் சொல்ல முடியுமோ அதே மாதிரி வருமான வரி இலாக்காவிலும் நீங்கள் எதைச் சொல்ல வேண்டுமென்றாலும் ஒரு ஆடிட்டர் மூலமாகத்தான் சொல்ல முடியும்.

உங்களுக்கு எத்தனை சட்டம் தெரிந்திருந்தாலும் சரி, நீங்கள் நேரில் போய் உங்கள் சமாச்சாரத்தைச் சொன்னால், நீங்கள் எதற்கு சார் அலைகிறீர்கள், ஒரு ஆடிட்டர் கிட்ட இதை விட்டுடுங்கோ, அவர் கவனிச்சுப்பார், என்பார்கள்.

நான் சமீபத்தில் இந்த 245 =143 செக்ஷன் விவகாரத்தில் சிக்கிக்கொண்டேன். எல்லாம் என்னுடைய கொழுப்பினால்தான். எப்படியோ எனக்கு கொலைக்கான உத்திரவு வந்து விட்டது. இது மூன்று வருடத்திற்கு முன்பு நான் சமர்ப்பித்த வருமானவரி கணக்கு சம்பந்தப்பட்டது.

வருமான வரி கட்டுவதில் ஒரு நுட்பம் பலரும் அறியாதிருக்கலாம். உங்கள் வருட வரி 10000 ரூபாய்க்கு அதிகமாக வரும் போலிருந்தால் அதை தவணை முறையில், செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மாதங்களில் கட்டவேண்டும். அப்படிக் கட்டாவிட்டால் அதற்கு அபராத வட்டி கட்டவேண்டும்.

மாதாமாதம் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த வரி மாதாமாதம் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது. என்னை மாதிரி ஓய்வு பெற்றவர்கள் தாங்களாகவேதான் இந்த வரியைக் கட்டவேண்டும். நான் 10000 க்கு அதிகமான வரியை ஒரே தவணையில் கட்டினதால் அதற்கு அபராத வட்டி போட்டு 143 நோட்டீஸ் வந்து விட்டது. தொலைகிறது, கட்டி விடலாம் என்று கட்டி விட்டேன்.

அப்புறம் என்ன செய்யவேண்டும் என்றால் அதுதான் ஒரு குழப்பமான சமாச்சாரமாக இருக்கிறது. கூகுளில் தேடினால் ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். சரி, சாமியிடமே போயிடுவோம் என்று வருமானவரி ஆபீசுக்கே போனபோதுதான் இந்தக் கூட்டணி விவகாரம் தெரிந்தது.

நானும் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தன் அல்லவா? அவ்வளவு சீக்கிரம் சர்க்கார் தர்பாரை விட்டு விடுவேனா என்ன? சர்க்கார் நடைமுறையில் ஒரு சூட்சுமம் என்னவென்றால் வாய் வார்த்தையாக என்ன பேசினாலும் பிந்நாளில் அது செல்லுபடியாகாது. நான் அப்படிச் சொல்லவேயில்லை என்று சாதித்து விடுவார்கள்.

ஆனால் எந்த சமாச்சாரமானாலும் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்து விட்டால் அது தன் பாட்டுக்கு தன் வேலையைச் செய்யும். ஆனால் அந்தக் காகிதம் கொடுத்ததற்கு நீங்கள் அத்தாட்சி வாங்கியிருக்கவேண்டும். இந்த நடைமுறையை நான் நன்கு அறிவேன்.

அதனால் நான் ஒரு கடிதம் எழுதி, நீங்கள் கேட்ட நிலுவையைக் கட்டிவிட்டேன், அதனால் என்னுடைய கொலைத் தண்டனையை ரத்து செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதி, அதனுடன் நான் பணம் கட்டின அத்தாட்சியுடன் வருமானவரி ஆபீசில் கொடுத்து விட்டேன்.

ஆனாலும் வருமானவரி ஆபீசைச் சும்மா குறை சொல்லக்கூடாது. என்னுடைய கடிதத்தை வாங்கிக்கொண்டதாக ஒப்புதல் கொடுத்து விட்டார்கள். ஆனாலும் என்னுடைய கொலை நோட்டீஸ் சமாச்சாரம் இத்துடன் முடியுமா அல்லது ஒரு ஆடிட்டருக்கு கப்பம் கட்டித்தான் ஆக  வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

திங்கள், 9 மார்ச், 2015

இட்லி சாப்பிடுவது எப்படி?

                                      Image result for இட்லி

தமிழ் நாட்டின் அடையாளச் சின்னம் இட்லிதான். இட்லியைக் கண்டுபிடித்தவன்(ள்) நிச்சயம் அதிமேதாவியாக இருக்கவேண்டும். இன்று அவன்(ள்) இருந்திருந்தால் நிச்சயம் புதுக் கண்டு பிடிப்புகளுக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கும்.

இட்லியில் இன்று பலவகைகள் வந்து விட்டன. ஆனாலும் வழக்கமான வட்ட வடிவிலான மல்லிகைப்பூ இட்லியை வெல்லும் அளவிற்கு எந்த இட்லியையும் யாரும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

இட்டிலி அல்லது இட்லியைச் சாப்பிடுவது எப்படி என்று சொல்வதற்கு முன் இட்லி எப்படிச் சுடவேண்டும் என்று பார்ப்போம். இட்லி நன்றாக இருந்தால்தான் அதைச் சாப்பிட்ட பின் முழுத் திருப்தி கிடைக்கும்.

இட்லி மாவு தயாரிப்பது பற்றியும் இட்லி சுடுவது பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் நமக்குன்னு ஒரு ஸ்பெஷல் பக்குவம் ஒண்ணு இருக்கில்ல. அதைப் பற்றி இங்கு சொல்கிறேன்.

இப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு ரெடிமேட் இட்லி மாவுக் கடைகள் வந்து விட்டன. அதை சில குடும்பத் தலைவிகள் வாங்கி உபயோகப் படுத்துகிறார்கள். அது இட்லி மாதிரியான போலி சரக்கு. அதைச் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு நான் இந்தப் பதிவில் சொல்லும் முறையில் தயார் செய்த இட்லி பிடிக்காது.

இட்லி தயாரிக்க நல்ல புழுங்கரிசி தேவை. அரிசியெல்லாம் அரிசி ஆகாது. இட்லிக்கென்று சில ரகங்கள் இருக்கின்றன. அந்த ரக அரிசிதான் நல்ல இட்லி தயாரிக்க உதவும். வெள்ளைக் கார் என்று ஒரு ரகம் இருக்கிறது. அதுதான் இட்லிக்குச் சிறந்தது.

பின்பு நல்ல உளுந்துப் பருப்பு வேண்டும். வடைக்கு ஆட்டின மாதிரியான பருப்பு இல்லை. அதை விட நல்ல பருப்பு வேண்டும். உளுந்துப் பருப்பு நான்கு வகைகளில் கிடைக்கும்.

1. முழு கருப்பு - உளுந்து. இது நமக்காகாது.

2. முழு வெள்ளை உழுந்து -  இது முழு கருப்பு உளுந்தின் தோலை நீக்கியது. இதுவும் நமக்கு பிரயோஜனமில்லை.

3. உடைத்த வெள்ளை உளுந்தப் பருப்பு -  நமது இல்லத்தரசிகள் இதைத்தான் இட்லி செய்ய பெரும்பாலும் விரும்புவார்கள். ஆனால் இதைப் பயன்படுத்தி சுடும் இட்லி நம் தரத்திற்கு வராது. பிரயோஜனமில்லை.

4. உடைத்த கருப்பு உளுந்துப் பருப்பு - இதுதான் இட்லி செய்ய உத்தமம். ஆனால் இதை ஊறப்போட்டு, இதன் தோலை நீக்குவது ஒரு பெரும் வேலை. அதனால்தான் நம் இல்லத்தரசிகள் இதை விரும்புவது இல்லை. ஆனால் இதை உபயோகித்தால்தான் நல்ல, நாம் விரும்பும் தரமுள்ள இட்லி கிடைக்கும். நோகாம நோம்பி கும்பிட முடியுமா?

இட்லி மாவு தயார் செய்யும் முறை:

ஒரு லிட்டர் இட்லி அரிசி எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அந்த அரிசி நன்கு மூழ்கி, அதற்கு மேலே மூன்று விரற்கடை அளவு தண்ணீர் இருக்குமாறு தண்ணீர் ஊற்றவும். இந்த தண்ணீரில்தான் இருக்குது சூட்சுமம். எந்த தண்ணீரையும் ஊற்றக்கூடாது. சில கிணற்று நீர் உப்பாக இருக்கும். அந்த தண்ணீர் கூடாது. நல்ல தெளிந்த ஆற்றுத் தண்ணீர் அல்லது சிறுவாணித் தண்ணீர் ஊற்றுவதுதான் உத்தமம்.

ஒரு லிட்டர் அரிசிக்கு கால் லிட்டர், கூடக் கொஞ்சம் ஒரு உள்ளங்கையளவு, உடைத்த கருப்பு உளுந்துப்பருப்பு எடுத்துக் கொண்டு அதையும் ஒரு பாத்திரத்தில் போதுமான தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். அரிசியும் உளுந்தும் குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவேண்டும். காலையில் டிபன் சாப்பிட்டவுடன் இந்த வேலையைச் செய்தால் மாலையில் காப்பி குடித்து விட்டு இவைகளை ஆட்ட சௌகரியமாக இருக்கும்.

சில நவநாகரிக மங்கையர்கள், எப்படியும் அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாகத்தானே கலக்கி வைக்கப் போகிறோம்? ஆகவே அரிசியையும் உளுந்தையும் ஒன்றாகவே ஊறவைத்து விடலாமே என்று கருதி, இவைகளை ஒன்றாகவே ஊறவைத்து ஒன்றாகவே ஆட்டுவார்கள். இவர்கள் கருப்பு உளுந்துப் பருப்பிற்குப் பதிலாக வெள்ளை உளுந்துப் பருப்பைப் பயன்படுத்துவார்கள்.

இந்த முறை நமக்கு ஒத்து வராது. இது முழு சோம்பேறித்தனத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட முறை. இந்த முறையில் தயாரிக்கப்படும் இட்லியில் நாம் எதிர்பார்க்கும் தரம் வராது.

தமிழ்நாட்டு ஓட்டல்கள், மற்றும் ஆந்திரா, கர்னாடகா, மகாராஷ்ட்ரா ஓட்டல்களில் இன்னொரு முறை கடைப்பிடிக்கிறார்கள். அரிசியை அரவை இயந்திரத்தில் அதாவது மெஷினில் கொடுத்து மாவாக்கி வைத்துக் கொள்வார்கள். உளுந்தை மட்டும் கிரைண்டரில் ஆட்டி அதற்குள் இந்த அரிசி மாவைத் திட்டமாகப் போட்டு புளிக்க வைத்து இட்லி சுடுவார்கள். இவ்வகை இட்லிகள் பிய்க்கும்போதே  உதிரி உதிரியாக உதிர்ந்து விடும். அங்கு ஓட்டல்களில் இட்லி சாப்பிட்டவர்கள் இதை அனுபவித்திருப்பார்கள்.

இதற்காகவே மளிகைக் கடைகளில் அரிசி மாவு விற்கப் படுகிறது. பெரும்பாலான வீடுகளிலும் இந்த மாவையே உபயோகப் படுத்துகிறார்கள். இது இட்லி அல்ல. ஆகவே இதை விட்டு விடுவோம்.

இப்படி காலையில் ஊறவைத்த உளுந்தையும் அரிசியையும் மாலையில் ஆட்ட வேண்டும். ஒரிஜினல் இட்லி வேண்டுமென்றால் இவைகளை கல்லுரலில்தான் ஆட்டவேண்டும். முதலில் உளுந்தை நன்கு பொட்டுகளெல்லாம் போகுமாறு களைந்து மறுபடியும் நல்ல தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு அந்த உளுந்தை ஆட்டுரலில் போட்டு நன்றாக நைசாக ஆகும் வரை ஆட்டவேண்டும். அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவேண்டும்.

ஆட்ட ஆட்டத் தான் உளுந்து மாவு உபரியாக வரும். அப்போதுதான் நாம் எதிர் பார்க்கும் மல்லிகைப்பூ இட்லி கிடைக்கும். உளுந்து மாவு நன்றாக நைசாக ஆட்டிய பின் அதை எடுத்து ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். இப்போது ஊறவைத்த அரிசியையும் தண்ணீர் வடித்து விட்டு இன்னும் இருமுறை நல்ல தண்ணீர் விட்டுக் கழுவி விட்டு ஆட்டுக்கல்லில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு ஆட்டவும்.

அரிசியை கொஞ்சம் கரகரப்பான பக்குவத்திற்கு ஆட்டினால் போதுமானது. இதை ஆட்டி முடித்த தும் இதை எடுத்து உளுந்து மாவிற்குள் போடவும். முழுதும் போட்டு முடித்தவுடன் தேவையான அளவு உப்பு போடவும். கல்லுப்புதான் போடவேண்டும்  டேபிள் சால்ட் உதவாது. இப்போது இந்த மாவை நன்கு கையால் கலக்கி, மூடி போட்டுப் பிறகு ஒரு ஓரமாக யாரும் அதைத் தொந்திரவு செய்யாத இடத்தில் வைக்கவும்.

சமையலில் கைப் பக்குவம் பற்றிக் கேளவிப்பட்டிருப்பீர்கள். சமையலுக்கு வேண்டிய அத்தனை சாமான்களும் செய்முறையும் ஒன்றாக இருந்தால் கூட ஒவ்வொருவர் சமையல் ஒவ்வொரு பக்குவத்தில் இருக்கும். சிலது நன்றாக இருக்கும் சிலது வாயில் வைக்க விளங்காது. இந்தக் கைப்பக்குவம் இட்லி தயார் செய்யும்போது நன்றாக வெளிப்படும். சிலர் மாவு ஆட்டி வைத்தால் புளிக்காது. சிலர் ஆட்டினால் அதிகம் புளித்து விடும். சில கைகளுக்குத்தான் இட்லிமாவு சரியான அளவில் புளித்து இட்லி நன்றாக வரும்.  அதனால்தான் மாவைக் கையால்தான் கலக்கவேண்டும்.

இதைச் செய்து முடிக்க எப்படியும் பொழுது சாய்ந்து விடும்.  இந்த மாவு எடுத்து வைக்கும் பாத்திரம் கொஞ்சம் பெரிதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இல்லாவிட்டால் மாவு புளிக்கும்போது பொங்கி வெளியில் வழிந்து விடும். அதுவும் வெய்யில் அதிகமான காலத்தில் இது சீக்கிரமாக நடக்கும். அப்படி மாவு வெளியில் வந்து விட்டால் பிறகு அதில் சுடும் இட்லி அவ்வளவு நன்றாக இருக்காது. ஆகவே மாவுப் பாத்திரத்தை வீட்டின் குளிர்ச்சியான பகுதியில் வைக்கவும்.

காலையில் மாவுப் பாத்திரத்தைத் திறந்தால் இட்லி நன்கு புளித்து பொங்கியிருக்கும். இப்போது அந்த மாவை கரண்டியால் நன்கு கலக்கினால் இட்லி மாவு தயார்.

இட்லி சுடுவது எப்படி?

இதுதான் எங்களுக்குத் தெரியுமே என்று ஒரு சினிமாவில் வந்த மாதிரி சொல்லப்படாது. இட்லி மாவை ஆவியில் வேகவைத்தால் இட்லி தயார்தான். ஆனால் அதற்குத்தான் எத்தனை வகையான சாதனங்கள்?

என் பாட்டி எனக்கு மண் பானையில் இட்லி சுட்டுத் தருவார்கள். இட்லின்னா அதுதான் இட்லி. பஞ்சு மாதிரி மெதுவாக இருக்கும். அதன் மேல் நல்ல நெய் ஊற்றி, அப்போதுதான் கல்லுரலில் அரைத்த தேங்காய்ச் சட்னி தொட்டு சாப்பிட்டால்.........ஆஹா, அதுவே சொர்க்கம். அதுதான் இட்லி சாப்பிட்டதற்கு அடையாளம்.

                                          Image result for மண் இட்லிப் பானை

மண் இட்லிப்பானையின் அமைப்பை எனக்குத் தெரிந்தவரையில் கூறுகிறேன். ஒரு சுமாரான அளவில் வாயகன்ற ஒரு மண் பானை. அதை மூடுவதற்கான சரியான அளவில் ஒரு மூடுசட்டி. இந்தப்  பானையின் வாயை ஒரு துணியால் கட்டவேண்டும். அது குழிந்து இருக்கும். அதில் இரண்டு கரண்டி இட்லி மாவு ஊற்றவேண்டும். பிறகு அந்த பானையின் வாய் மேல் மூங்கில் தப்பையில் கூட்டல் வடிவில் கட்டப்பட்ட ஒரு சாதனத்தை வைத்து அதன் மேல் ஒரு துணி விரிக்கவேண்டும். இப்போது அந்த துணியில் நான்கு பாகங்கள் இருக்கும். ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு கரண்டி இட்லி மாவு ஊற்றி, மேல் மூடியை வைத்து மூடவேண்டும். பிறகு இந்த இட்லிப் பானையை விறகு அடுப்பில் வைத்து அடுப்பை எரிக்கவேண்டும்.

அந்தக் காலத்தில் விறகு அடுப்புத்தான் உண்டு. வேறு அடுப்புகள் கிடையாது. பத்துப் பதினைந்து நிமிடங்களில் இட்லி வெந்து விடும். பானை மூடியைத் திறந்து இட்லிகளை எடுக்க வேண்டியதுதான். ஒரு பெரிய இட்லியும் நாலு சிறிய இட்லியும் கிடைக்கும். பார்க்கவும் சாப்பிடவும் அது போல் இட்லி கிடைக்காது.

பிற்காலத்தில் இந்த அமைப்பில் பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் ஆகிய உலோகங்களில் இட்லிப் பானைகள் செய்ய ஆரம்பித்து உபயோகத்திற்கு வந்து விட்டன. ஆனாலும் இட்லிப் பானை என்கிற பெயர் மட்டும் அப்படியே நிலைத்து இருக்கிறது. இந்தப் பாத்திரங்களிலும் துணி போட்டு அதன் மீது இட்லி சுடுவதுதான் வழக்கமாக இருந்தது. அந்த இட்லிகளும் ஓரளவு பழைய மண்பானை இட்லியின் சுவையுடன் இருந்தன.

ஆனால் இக்காலத்து நாகரிக யுவதிகள் அந்தத் துணிகளைக் கண்டு வெறுப்புற்றார்கள். காரணம் அவைகளை சுத்தம் செய்து பராமரிப்பது கொஞ்சம் கடினமான வேலை. ஆகவே துணி இல்லாமலேயே இட்லி சுடும் பழக்கம் வந்து விட்டது. அதுவும் பிரஷர் குக்கரில் வைக்கும் இட்லித் தட்டுகள் வந்த பிறகு இந்த ஆடையில்லா இட்லி வழக்கமாகி விட்டது. அந்தத் தட்டுகளில் லேசாக எண்ணை தடவி அதன் மேல் இட்லி மாவை ஊற்றி குக்கருக்குள் வைத்து கேஸ் அடுப்பில் வைத்தால் வெகு சீக்கிரம் இட்லிகள் தயாராகி விடுகின்றன. ஆனால் இவை ருசியில் இரண்டாம் தரம்தான்.

கல்யாண வீடுகளில் நூற்றுக் கணக்கான இட்லிகளை சில நிமிடங்களில் சுடுவதற்குத் தோதாக ஸ்டீம் இட்லி குக்கர்கள் வந்து விட்டன. பத்து நிமிடத்தில் சில நூறு இட்லிகளைத் தயார் செய்து விடலாம். ஆனாலும் கல்யாணப் பந்தியில் நமக்குக் கிடைப்பதோ ஆறின இட்லிதான். ஏன் சூடான இட்லிகளைப் பரிமாறுவதில்லை என்பது கல்யாண சமையல்காரர்களுக்கே வெளிச்சம்.

இட்லி சாப்பிடுவது எப்படி?
                                         
                                       Image result for மண் இட்லிப் பானை
இட்லியைத் தனியாகச் சாப்பிடுவதில்லை. குழந்தைகளுக்கு இட்லிமேல் சிறிது நெய் ஊற்றி லேசாக உப்பு போட்டு சாப்பிடக் கொடுப்பார்கள்.வளர்ந்த குழந்தைகளான நாம் இட்லி சாப்பிட பல வழிகள் கண்டு பிடித்து வைத்திருக்கிறோம். தேங்காய்ச் சட்னிதான் எல்லாவற்றிற்கும் டாப். இதில் பலவகைகள் இருக்கின்றன. ஆனாலும் பல காலமாக இருந்து வரும் பொட்டுக் கடலைபோட்டுச் செய்யும் தேங்காய் சட்னிதான் பிரபலம். இதை நல்ல கல்லுரலில் கையால் ஆட்டினால்தான் அதன் முழுச் சுவையும் தெரிய வரும். மிக்சியில் அரைக்கும் சட்னியில் ஒரிஜினல் சுவை இருக்காது.

சூடான இட்லியின் மேல் நல்ல புத்துருக்கு நெய் அல்லது மரச்செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணை, இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றிக்கொண்டு, தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிடுவதுதான் இட்லி சாப்பிடும் ஒரே முறை. மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

                                      Image result for இட்லி சாம்பார்

அடுத்ததாக இரண்டாம் தர முறை ஒன்று இருக்கிறது. சின்ன வெங்காயம், துவரம் பருப்பு போட்டு அரைத்து விட்டுச் செய்யும் சாம்பாரும் ஒரு நல்ல உத்திதான். ஆனால் இதற்குச் சில வரையறைகள் இருக்கின்றன.

ஒரு குடும்பத்திற்கு வேண்டிய சாம்பார் ஒரு சின்ன அண்டா நிறைய செய்து கொள்ளவேண்டும். அதில் நான் முன்பு ஒரு பதிவில் கூறியபடி ஒரு 50 உளுந்து வடைகள் சுட்டு, வெந்நீரில் போட்டு எடுத்து இந்த அண்டா சாம்பாருக்குள் போட்டு விடவேண்டும். சாம்பார் மிகவும் கெட்டியாக வைக்கவேண்டாம். ரசத்தைவிடக் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் போதும்.

இரண்டு இட்லிகளை ஒரு குழியான தட்டில் எடுத்துக்கொள்ளவேண்டும். இட்லி நன்றாக மூழ்கும் அளவு சாம்பார் ஊற்றவேண்டும். சாம்பார் அந்த அளவிற்கு லேசாக இருக்கவேண்டும். கூடவே ஒரு வடையையும் எடுத்துப் போட்டுக்கொள்ளவேண்டும். இட்லிகளையும் வடையையும் ஒரு ஸ்பூன் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாம்பாருடன் சேர்த்து சாப்பிடவேண்டும். நடுவில் சாம்பார் குறைந்து விடும். அப்போது மேலும் சம்பார் ஊற்றிக்கொள்ளவேண்டும்.

இப்படியாக ஒரு அரை டஜன் இட்லிக்கு (கூட மூன்று வடை) ஒரு அரை வாளி சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். இப்படிச் சாப்பிட்ட பிறகு நமது ஸ்பெஷல் மருந்து (யூனிஎன்ஜைம்) நான்கு சாப்பிட்டு இரண்டு டம்ளர் வெந்நீர் குடித்து விட்டு ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதான். இந்த ஸ்பெஷல் இட்லி-வடை-சாம்பார் சாப்பிடுவதை ஞாயிற்றுக் கிழமைகளில் வைத்துக் கொள்வது விசேஷம். ஏனென்றால் காலையில் இட்லி சாப்பிட்ட பிறகு தேவையான ஓய்வு யாருடைய தொந்திரவும் இல்லாமல் எடுக்க வசதியாயிருக்கும். அன்று வெளியூர் போவதாகத் தெரிந்தவர்களுடன் சொல்லி விடுவது உத்தமம்.

என்ன, இந்த முறையில் இட்லியின் சுவை குறைந்து சாம்பாரின் சுவைதான் தூக்கலாக இருக்கும். வேறு வழியில்லை. ஒரு இன்பத்தைத் தியாகம் செய்தால்தான் அடுத்த இன்பத்தை அடைய முடியும்.

கலிகாலமானதால் இப்போது இட்லிக்குத் தொட்டுக்கொள்ள பலவகையான சட்னிகள், கொத்சுகள், பொடிகள் வந்து விட்டன. ஆனால் ஒரிஜினல் இட்லிப் பிரியர்கள் யாரும் அவைகளைக் கண்ணால் கூடப் பார்க்கமாட்டார்கள். அதே மாதிரி இட்லி மீந்து போனால் அவைகளைப் பொடித்து வெங்காயம் கடுகு தாளித்து உப்புமா பண்ணலாம். எங்க ஊரில் அன்னபூர்ணாவில் செய்வது போல் கத்தியால் வெட்டி மஞ்சள் பூசி தாளித்து ஒரு ஸ்பெஷல் ஐட்டமாகப் பண்ணலாம்.

கடைசியில் ஒன்றும் பண்ண முடியாவிட்டால் கடலை மாவுடன் சேர்த்துப் பிசைந்து பக்கோடா செய்யலாம். அடுத்த நாள் ஆட்டும் இட்லி மாவுடன் சேர்த்து விடலாம். இப்படி என்னென்னமோ செய்யலாம். வெளி நாடுகளிலும் இந்த இட்லியானது பல நாமதேயங்களுடன் தயார் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. என்ன இருந்தாலும் நம்ம ஊர் இட்லி சட்னிக்கு இணையானது எதுவும் இல்லை.

                                  Image result for மண் இட்லிப் பானை

சனி, 7 மார்ச், 2015

விபத்துக்குள்ளான புதுக் கார்

                         
                         
சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு விபத்துச் செய்தி படித்தேன். மதுரைப் பக்கத்தில் ஒரு ஊரிலிருந்து ஒரு குடும்பத்தினர் தாங்கள் வாங்கியுள்ள புதுக்காரில் திருச்செந்தூர் போயிருக்கிறார்கள். போகும் வழியிலேயே காரின் ஒரு டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளாகி, அதில் சென்றவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள்.

நானும் சமீபத்தில் ஒரு புதுக் கார் வாங்கியிருப்பதால் இந்த விபத்து புதுக்காரில் எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். புதுக்காரில் டயர்கள் புதிதாகத்தானே இருக்கும். அதிலும் அந்தக் காரில் இன்னும் நெம்பர் பிளேட் கூடப் பொருத்தவில்லை. இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது என் மூளையில் ஒரு பொறி தட்டியது.

முன்பெல்லாம் கார் வாங்கும்போது பெட்ரோல் டேங்கில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாகத்தான் பெட்ரோல் போடுவார்கள்.  RTO ஆபீசுக்குப் போய்வரும் அளவே பெட்ரொல் போடுவார்கள். நாம் காரை டெலிவரி எடுக்கும்போது, பக்த்தில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று பலமுறை சொல்லி அனுப்புவார்கள். ஏனென்றால் அவ்வளவுதான் பெட்ரோல் காரில் இருக்கும்.

இப்போது பரவாயில்லை. ஒரு ஐந்து லிட்டர் பெட்ரோல் போட்டுத் தருகிறார்கள். நம் காசுதான். ஏதோ பரவாயில்லை. கோவிலுக்குப் போய்விட்டு வீடு வரைக்கும் பயமில்லாமல் போய்க் கொள்ளலாம். நானும் அப்படியே விட்டுக்குச் சென்று விட்டு அடுத்த நாள் நான் பெட்ரோல் போடும் வழக்கமான பங்கிற்குச் சென்று பெட்ரோல் போட்டேன்.

நான் வழக்கமாக பெட்ரோல் போட்டவுடன் காரின் டயர்களில் காற்றின் அழுத்தத்தையும் சோதிப்பது வழக்கம். அப்படிச் சோதித்தபோது நான் பார்த்தது என்னவென்றால், காரின் டயர்களில் காற்றின் அழுத்தம் 60 பவுண்டுக்குப் பக்கமாக இருந்தது. வழக்கமாக டயர்களில் காற்றின் அழுத்தம் 30 பவுண்டுகள் வைப்பதுதான் வழக்கம். பெரிய கார்களுக்குக் கூட 35 பவுண்டுகளுக்கு மேல் வைக்க மாட்டார்கள்.

நான் என் காரின் டயர்களுக்கு 30 பவுண்ட் அழுத்தம் வைத்து விட்டுக் கிளம்பினேன். ஏன் கம்பெனிக்காரர்கள் இவ்வளவு அதிகமான காற்று அழுத்தம் வைத்திருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே வந்தபோது ஒரு கருத்து தோன்றியது. கார் தயாரிக்கும் இடத்தில் கார் முழுவதுமாகத் தயார் பண்ணி முடித்து கார் விநியோகம் செய்யும் வியாபாரக் கம்பெனிகளுக்குப் போக ஓரிரு மாதங்கள் ஆகலாம். அங்கும் இந்தக் கார் வியாபாரமாகி உபயோகிப்பவர் கைக்குப் போக இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம்.

இந்த காலக்கெடுவில் கார் சும்மாதான் இருக்கும். ஆனால் கார் டயர்களில் காற்று இல்லாமல் இருந்தால் காரின் கனம் டயரின் மேல் தாக்கி டயர்கள் சேதமடையும் வாய்ப்புகள் உண்டு. அதனால் கொஞ்சம் அதிகமாக காற்று அழுத்தம் வைத்து விட்டால் இந்த மாதிரி சேதம் தவிர்க்கப்படும். அதனால் இப்படி அதிக காற்று அழுத்தத்துடன் புதுக் கார்கள் அனுப்ப ப்படுகின்றன என்று யூகித்தேன்.

புதுக் கார்கள் வாங்குபவர்கள் எப்படியும் காற்று அழுத்தத்தை  சரி பார்ப்பார்கள் என்பது கார் உற்பத்தியாளர்களின் கணிப்பு. ஆனால் இந்த விபத்துக்குள்ளான காரை வாங்கினவர்கள் இந்த வேலை செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். கார் ஓடும்போது ரோடுகளில் உராய்வதால் டயர்கள் வெப்பமடைந்து டயர்களில் இருக்கும் காற்றின் அழுத்தம் அதிகமாகும். சாதாரண அழுத்தம் இருக்கும்போது இப்படி வெப்பத்தினால் அழுத்தம் அதிகமானாலும் டயர்  தாங்கிக்கொள்ளும். ஆனால் முதலிலேயே அதிக அழுத்தம் கொண்ட டயர்களில் இப்படி கார் ஓடும்போது மிக அதிகமான அழுத்தம்  உருவாகும்.

அது தவிர இந்தக் காரை வேகமாகவும் ஓட்டியிருக்கலாம். அப்போது டயர்கள் மிக சீக்கிரமாக அதிக வெப்பநிலை அடையும். இந்த அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட அதிக காற்று அழுத்தத்தை அந்த டயர்கள் தாங்கவில்லை. இதனால் அந்த டயர் வெடித்து விட்டது. வேகமாகப் போகும் காரில் ஒரு டயர், அதுவும் முன்பக்க டயர் வெடித்தால் விளைவு என்னவாக இருக்கும் என்று கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும்.

இப்படித்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதை உடனடியாக உறுதி செய்ய வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்தக் காரில் பயணம் செய்த எல்லோரும் யமபட்டணத்தில் இருக்கிறார்கள். நான் அங்கு போகும்போது விசாரித்து விபரம் அறிந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

அது வரை புதுக் கார் வாங்குபவர்கள் டயர்களின் காற்று அழுத்தத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வியாழன், 5 மார்ச், 2015

உ.வடை சாப்பிடுவது எப்படி?


                                            Image result for உளுந்து வடை

வடையைப் பற்றி எழுதச்சொல்லி ஒரு அன்பர் கேட்டிருந்தார். வடை என்றால் முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது, வடை என்றால் அது உளுந்து வடைதான். மற்றதெல்லாம் வடை அல்ல. உளுந்து வடை செய்ய உளுந்து வேண்டும். இதுதான் தெரியுமே என்று சொல்லக் கூடாது. ரேஷன் கடை உளுந்தைப் போட்டு வடை செய்து விட்டு வடை நல்லா இல்லைன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.

நல்ல புது உளுந்து வாங்கி தண்ணீரில் ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும். ஒரு டம்ளர் உளுந்துக்கு கால் டம்ளர் அரிசி வீதம் சேர்த்து ஊறவைக்கவேண்டும். அரை மணி நேரம் ஊறினால் போதும். கல்லுரலில் போட்டு ஆட்டி நைசாக ஆவதற்கு கொஞ்சம் முன்பாகவே எடுத்து விடவேண்டும்.

மாவு ஆட்டின பிறகு உடனே வடை சுட்டு விடவேண்டும். நேரம் ஆக ஆக வடை எண்ணையை அதிகம் குடிக்க ஆரம்பித்து விடும். அப்புறம் வடையைப் பிழிந்தால் எண்ணை சொட்டும். ஆனால் ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணை கொஞ்சமாவது இருந்தால்தான் வடை ருசியாக இருக்கும். சுத்தமான மரச்செக்கில் ஆட்டின கடலை எண்ணைதான் வடை சுடத் தகுந்தது. எந்த வித சுத்திகரிப்பு செய்த எண்ணைகளையும் உபயோகப்படுத்தவேண்டாம்.

வடைக்கு ஆட்டும் முன்பே இரண்டு வேலைகள் செய்து விடுங்கள். அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார் தயார் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.அது ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இருக்கட்டும். இன்னொரு வாயமன்ற பாத்திரத்தில் நல்ல புளிக்காத கெட்டித்தயிர் எடுத்து அளவாகத் தண்ணீர் விட்டுக் கலக்கி, கடுகு உ,பருப்பு, ப.மிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி, அளவாக உப்புப் போட்டுக் கலக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.

கேஸ் ஸ்டவ்வில்தான் வடை சுடுவீர்கள் என்று நம்புகிறேன். அதில் இருக்கும் இன்னொரு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பங்கு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். வடை சுட்டு எறக்கும்போது இந்த கொதி நீர் தயாராக இருக்கவேண்டும். அதை கீழே இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். வடை, முதல் அடைசல் எடுத்தவுடன் அவைகளை அப்படியே இந்த கொதி நீரில் போடவும், ஒரு நிமிடம் கழித்து அந்த வடைகளை எடுத்து தண்ணீர் நன்றாக வடிந்தவுடன் சாம்பார் வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

அடுத்த அடைசல் வடை எடுத்தவுடன் இதே மாதிரி கொதி நீரில் போட்டு எடுத்து, தாளித்து வைத்திருக்கும் தயிர் பாத்திரத்திற்குள் போடவும். இப்படியே ஒரு மூன்று அடைசல் வடைகளை ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும் போட்டு விடுங்கள். அடுப்பு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, சாம்பார் வடைகள் இருக்கும் பாத்திரத்தை மட்டும் இன்னொரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதனுள் வைத்துக் கொஞ்ச நேரம் கழித்து எடுத்து விடுங்கள். அப்போதுதான் சாம்பார் சூடாக இருக்கும்.

தயிர் வடை இருக்கும் பாத்திரத்தை அவ்வாறு சூடுபடுத்தி விடாதீர்கள். அப்புறம் தயிர் பிருத்துப் போகும்.

இப்போது எல்லாம் ரெடி. ஒரு தட்டு எடுத்துக்கொண்டு அதில் இரண்டு சாம்பார் வடை வைத்துக் கொள்ளுங்கள். அது மூழ்கும் வரை சாம்பார் ஊற்றிக்கொள்ளவும். ஒரு ஸ்பூனால் வடையைப் பிய்த்து சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிடவும்.
                                              Image result for சாம்பார் வடை

ஒரு முறை சாம்பார் வடை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து இரண்டு தயிர் வடை இதே மாதிரி சாப்பிடவும். இப்படியே மாற்றி மாற்றி சாம்பார் வடை-தயிர் வடை என்று சாப்பிடவும். சொஞ்ச நேரத்தில் வடைகள் தீர்ந்து விடும். அப்போது சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
                                                   Image result for தயிர் வடை

ஒரு அரை மணி நேரம் கழித்து நான்கு "யூனிஎன்ஜைம்" மாத்திரைகள் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கவும்.
                                            Image result for unienzyme tablet
இதுதாங்க வடை சாப்பிடும் முறை. இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

"கந்தா, காரவடை, காசுக்கு ரெண்டு வடை"  என்று யாராவது பின்னூட்டம் போட்டால் எனக்குக் கோபம் வந்து சாபம் கொடுத்து விடுவேன். ஜாக்கிரதை.