புதன், 14 ஜனவரி, 2015

VGK 15 அ ழை ப் பு

VGK 15   ழை ப் பு
 இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.
இந்தக் கதைக்கு என் விமர்சனம்.
எந்த விசேஷம் என்றாலும் விருந்தினர்கள் அவசியம். அதுவும் கல்யாணத்திற்கு எவ்வளவு விருந்தினர் வருகிறார்களோ அவ்வளவிற்கு கல்யாணக்காரரின் மவுசு கூடும். இதற்காகவே எவ்வளவு கூட்டம் கூட்ட முடியுமோ அவ்வளவு கூட்டம் கூட்டுவதற்கு கல்யாணக்காரர் ஆசைப்படுகிறார்.
இதற்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று விவஸ்தை இல்லாமல் அழைப்பிதழைக் கொடுப்பதுதான் வழி. இவ்வாறு அழைப்பிதழ் கொடுக்கும்போது ஏற்படும் அனுபவங்களை பல விதமானவைகளாக இருக்கும். அதை இந்தக் கதையில் நன்கு படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
எப்படி பார்த்துப் பார்த்து அழைப்பிதழ் கொடுத்தாலும் ஏதாவது ஒன்றில் கோட்டை விடுவது வழக்கமே. இந்தக் கல்யாணத்தில் தாய் மாமனுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. இது ஒரு பெரிய தவறுதான். பொதுவாக இந்த மாதிரி தபாலில் அழைப்பிதழ் வந்தால் கல்யாணத்திற்கு வரமாட்டார்கள். ஆனால் இந்த மாமன் வந்து விட்டார். சண்டை போடுவதற்கென்றே வந்திருக்கிறார்.
கல்யாணக்காரரின் ஆப்த நண்பர் மாமாவின் காலில் விழுந்து சமாதானம் செய்து விடுகிறார் என்பதுதான் கதையின் உச்ச கட்ட திருப்பம். காரியம் ஆகவேண்டுமென்றால் கழுதையின் காலில் கூட விழலாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துப் போயிருக்கிறார்கள்.

எப்படியோ கல்யாணம் சுபமாக நடந்தேறியது. நமக்கும் ஒரு கல்யாண (கதை) விருந்து கிடைத்தது.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

பூலோகத்திலேயே சொர்க்கத்தைப் பார்க்கலாம்

                                   

கஞ்சா என்றால் என்ன ? இது சாப்பிடும் பொருளா? அல்லது குடிக்கும் திரவமா ? அல்லது புகைக்கும் வஸ்துவா ? எதுவென்று அறியாமல் அஞ்ஞானத்தில் உழலும் மானிடரைக் கடைத்தேற்றி மெய்ஞ்ஞானம் போதிப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

ராமன் என்று பெயர் கொண்டவனை அழைக்க வேண்டுமானால் "ராமா" என்று கூப்பிடுவோம் அல்லவா. அந்த மாதிரி ஒரு கஞ்சனை அழைக்கவேண்டுமானால் "கஞ்சா" என்று கூப்பிடுவார்களாக்கும் என்றுதான் இதுநாள் வரை நம்பிக்கொண்டிருந்தேன். என் நம்பிக்கையில் இப்போது மண்ணை வாரிக்கொட்டி விட்டார்கள்.

கஞ்சா என்பது ஒரு சர்வதேச பொருளாதார, கலாச்சார, அரசியல் விவகாரமாமே. பல கோடிகள் புரளும் விஷயமாமே. என் இளம் வயதிலேயே தெரிந்திருந்தால் நான் இப்போது கோடிகளில் புரண்டு கொண்டிருப்பேன்.(அல்லது ஏதாவது ஜெயிலில் களி சாப்பிட்டு நன்றாக புஷ்டியாக இருந்திருப்பேன்). விதி வலியது இல்லையா? விதி அப்படி என்னை அதிர்ஷ்டக்காரனாக்கவில்லை.

Better late than never அப்படீன்னு இங்கிலீஸ்ல ஒரு பழமொழி இருக்கு. அதனால வயசானா பரவாயில்ல, இது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணினேன். கூகுளாண்டவரைத் தேடிப்போய் வேண்டினால் அவர் சொல்கிறார் - "மகனே, உன்னுடைய வயதில் இது வேண்டாம், விட்டுடு" - அப்படீங்கறார். நாம விட்டுடுவோமா? அதெல்லாம் முடியாது, எனக்குத் தெரிந்தே ஆகணும் அப்படீன்னு இரண்டு காலிலேயும் நின்றேன். ஒத்தைக் காலிலே நிக்கற வயசா எனக்கு.

அவர் சொன்னது எல்லாம் முழுவதும் எனக்கு மனசிலாகல. எனக்குப் புரிஞ்ச மட்டில் சொல்றேன். கேட்டுக்கோங்க.

கஞ்சா என்பது ஒரு செடியிலிருந்து வருவது. அந்தச் செடியின் பெயர்: Cannabis sativa. எங்கியோ கேட்ட பேரா இருக்குதே என்று மூளையைக் கசக்கியதில் காலேஜ்ல படிக்கறப்போ பாட்டனி வாத்தியார் இதைச்சொல்லிக்கொடுத்த ஞாபகம் வந்தது. "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்று சௌகார் ஜானகி பாட்டு பின்புலத்தில் கேட்டது.

உத்தரப் பிரதேசத்தில் டூர் போகும்போது ரயில்வே லைன் ஓரத்தில் இந்தச் செடி ஏகத்திற்கு முளைத்துக் கிடக்கும். படம் பாருங்கள்.



இந்தச் செடி இந்தியாவில் பல காலமாக இருந்து வருகிறது. இதை நம் ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். நம்மூர் சாமியார்கள் சொர்க்கத்தைக் காணுவதற்காகவும் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது எப்படி என்று பார்ப்போம். நமக்கு வேண்டியது அதுதானே.

இந்தச்செடியில் Tetrahydrocannabinol என்கிற ஒரு வேதியியல் பொருள் இருக்கிறது. இது பல மருத்துவக் குணங்கள் கொண்டது.





இந்த மருத்துவ குணங்களுக்காக இதை அந்தக் காலத்தில் பல நோய்களைக் குணப்படுத்த உபயோகித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது இரண்டாவது வரியில் இருக்கிறது. அதாவது கனவு காணுவது. (dreams) இந்தக் குணம் மனிதனை இயல்பு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது.அதாவது பூலோகத்திலிருந்து ஆகாயத்திற்கு அதாவது சொர்க்கலோகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இது ஒரு பரவச நிலையாகும். தன்னைச்சுற்றி அப்சரஸ்கள் நடனமாடுவது போல் இருக்கும். ஒரு முறை இந்தப் பரவச நிலையை அனுபவித்தவர்கள் மீண்டும் மீண்டும் அந்த நிலைக்குப் போவதற்கு ஆசைப் படுவது இயற்கையே அல்லவா?

இதுதானுங்க "கஞ்சா". இதற்கு மார்க்கெட்டில் பல பெயர்கள் உண்டு. ஹஷீஷ், பாட், மரிஜுவானா, இப்படி பல பெயர்கள். 

இப்படி பூலோகத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தைக் காணும் இந்த மருந்திற்கு பல நாட்டு அரசு படுபாவிகள் தடை விதித்திருக்கிறார்கள். நம் நாட்டிலும்தான். ஆனால் எந்தப்பொருளுக்கும் தடை விதித்தால் அதற்கு மதிப்பு கூடி விடும் அல்லவா? அப்படி கஞ்சாவிற்கும் மதிப்பு அதிகம். நன்றாக சுத்தப்படுத்தப்பட்ட கஞ்சா ஒரு வெள்ளைப் பவுடராக இருக்கும். இது ஒரு கிலோ கோடிக்கணக்கில் விலை மதிப்புப் பெற்றது.

தெருவிற்குத் தெரு டாஸ்மாக் விற்பனை நிலையங்களை அனுமதிக்கும் அரசு ஏன் இதற்கு கடை விரிக்கக் கூடாது என்று தெரியவில்லை. ஆனால் இந்த கஞ்சா கிடைக்காத இடம் இல்லை. பள்ளிக்கூட வாசலில் இருக்கும் பெட்டிக்டைகளில் கூட இது கிடைப்பதாக வதந்தி.

முன்னேற்றமடைந்துள்ள அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் இதை சட்டபூர்வமானதாகச் செய்திருக்கிறார்கள். அந்த இடத்தைப் பற்றிய விவரம் வேண்டுவோர் இங்கே செல்லவும். ஆகவே வசதி படைத்த பதிவர்கள் பூலோக ஸ்வர்க்கத்தைக் காணத் தயாராகுங்கள்.

திங்கள், 12 ஜனவரி, 2015

எலும்பு முறிவு வைத்தியம்

                                            
மனித உடம்பு பெரும்பாலும் தனக்கு வரும் உபாதைகளைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றது ஆகும். அது அவ்வாறு தன்னைத்தானே சரி செய்து கொள்ளும்போது அதற்கு நாம் இடைஞ்சல் செய்யாமல் இருந்தால் போதும்.

அதே போல் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களை அதற்கு துணை செய்தால் மட்டும் போதும், அவை தானாகவே சரியாய் விடும். ஆனால் அவ்வாறு சரியாக கொஞ்சம் நாட்கள் ஆகும். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும்.

இந்த நுணுக்கத்தை நம் நாட்டின் பரம்பரை வைத்தியர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். குறிப்பாக நம் நாட்டின் நாவிதர்கள்தான் அந்தக் காலத்தில் வைத்தியர்களாகவும் இருந்தார்கள். மேல் நாட்டிலும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

பிற்காலத்தில் ஆங்கில மருத்துவம் (அலோபதி மருத்துவ முறை) பிரபலமாக ஆரம்பித்த பிறகுதான் எலும்பு முறிவு வைத்தியம் என்று ஒரு பிரிவு அந்த வைத்திய முறையில் உண்டாகியது. இதிலும் அந்தக் காலத்தில் நாட்டு மருத்துவர்கள் கடைப்பிடித்த முறைகளைத்தான் நவீனமான வழியில் பயன்படுத்தினார்கள். தற்காலத்தில்தான் ஆபரேஷன், பிளேட் வைத்தல் ஆகியவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

முறிந்த எலும்பை சரியான முறையில் வைத்து அதை அசையாதவாறு கட்டி வைத்திருந்தால் அது இயற்கையாகவே கூடி விடும். அந்த மாதிரி எலும்பைச் சரி செய்யும்போது ஏற்படும் வலியைத் தாங்கிக்கொள்ள ஆங்கில வைத்தியத்தில் மயக்க மருந்து கொடுப்பார்கள். நாட்டு வைத்திய முறையில் சாராயம் குடித்து விட்டு வரச்சொல்வார்கள்.

ஆனால் இந்த இரண்டு முறைகளிலும் தேவைப்படும் பணம் இருக்கிறதே, அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு ஒப்பாகும்.

நாட்டு வைத்தியம் செய்து கொள்ள சில நூறு ரூபாய்கள் போதும். ஆனால் ஆங்கில முறைப்படி வைத்தியம் செய்ய பல ஆயிரம் ரூபாய்கள் தேவைப்படும்.

அப்படிப்பட்ட ஒரு நாட்டு வைத்தியசாலை கோவை மாவட்டத்தில் சத்தியமங்கலத்திலிருந்து கோபி போகும் வழியில் சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் இருக்கிறது.


அங்கு ஒரு பெண்மணி தன் பாதத்தில் ஏற்பட்டுள்ள சுளுக்குக்கு வைத்தியம் செய்து கொள்கிறார்.



இங்குள்ள வைத்தியர்கள் பெரும்பாலும் நாவிதப் பரம்பரையைச் சேர்ந்தவர்களே. எப்படிப்பட்ட சிக்கலான எலும்பு முறிவானாலும் அதை சரி செய்து விடுவார்கள். இங்கு வந்து குணமாகாமல் திரும்பினவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம்.

இவர்கள் உபயோகிக்கும் ஸ்பெஷல் எண்ணையை வேண்டுபவர்களுக்கு விலைக்கும் தருகிறார்கள். இது கைகால்களில் ஏற்படும் வலி, எலும்புகளில் லேசாக அடிபட்டு ஏற்படும் வலி ஆகியவைகளுக்கு கைகண்ட மருந்தாகும். 150 மில்லி கொண்ட பாட்டில் விலை வெறும் 70 ரூபாய் மட்டுமே. என் அனுபவத்தில் அயோடெக்ஸ் போன்றே குணம் தருகின்றது. 

நான் இந்த வைத்தியர்களுக்கு ஏஜன்ட்டோ என்று சந்தேகப்படவேண்டாம். என் சொந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மையைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.

சனி, 10 ஜனவரி, 2015

O Controversy, is thy name Palani.Kandaswamy?

                                   
                                 

ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததிற்கு வருந்துகிறேன். ஆனால் என் தற்கால நிலையை வர்ணிப்பதற்கு தமிழில் பொருத்தமான வார்த்தைகள் எனக்கு உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆறின கஞ்சி பழங் கஞ்சி. மேட்டரும் காப்பியும் சூடாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். அதனால்தான் இந்தப் பதிவு.

இன்றைக்கு நான்தான் தமிழ் பதிவுலகில் பிரபல பதிவர், இதில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருக்குமாயின் அவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். மாற்றுக் கருத்துகள் எதுவாகினும் அவைகள் மட்டுறுத்தப்படாது என்று உறுதி அளிக்கிறேன்.

"குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை" என்ற பதிவை எழுதினாலும் எழுதினேன். மக்கள் பிலுபிலுவென்று என்னைப் பிடுங்கித் தின்கிறார்கள். ஒரு பதிவைப் பற்றி பல பதிவர்கள் தங்கள் தளங்களில் அலசுவது புதிதல்ல.

ஆனால் அத்தகைய பதிவுகள் சமீப காலமாக பதிவுலகில் எழுதப்படவில்லை. அதனால் தமிழ் பதிவுலகமே சோர்ந்து இருந்தது. என்னுடைய பதிவு அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறது. இதனால் சோம்பிக்கிடந்த பதிவுலகம் ஓரளவிற்கு விறுவிறுப்பாகியுள்ளது. இதற்குக் காரணமான எனக்கு விருது வழங்கும் வள்ளல்கள் தங்கள் விருதுகளை தாராள மனதுடன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது அலசப்படும் பிரச்சினை என்னவென்று எனக்குப் புரிந்ததென்றால் பதிவுகளில் சொல்லப்படும் கருத்துகள் அவரவர்கள் சொந்தக் கருத்தாக இருக்கவேண்டும். அதற்கு பலதரப்பட்டவர்களிடமிருந்தும் பலதரமான பின்னூட்டங்கள் வரும். அந்தப் பின்னூட்ங்களின் முக்கிய நோக்கம் அந்தப் பதிவரின் வாயில் வார்த்தைகளைத் திணித்து, அவர் அதை துப்பினால் அதிலிருந்து மீண்டும் வாதத்தைத் தொடர்வது.

அதாவது ஆங்கிலத்தில் "Putting words into one's mouth" என்று சொல்வார்கள். அதற்கு நான் இடம் கொடுக்காவிட்டால் வேறு விதமாகத் தாக்குதல் தொடரும்.

எப்படி இருந்தாலும் இன்றைக்கு காரசாரமான விவாதப் பொருள் "பழனி.கந்தசாமி" யே.

கல்யாண வீடாக இருந்தால் தான் மாப்பிள்ளையாக இருக்கவேண்டும். எளவு வீடாக இருந்தால் தான் பிணமாக இருக்கவேண்டும்.

இந்தப்  பழமொழி எல்லோரும் அறிந்ததே. ஆனால் அதற்கு நானே உதாரணமாவேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை. ஆனால் இது நடந்திருக்கிறது.

நடந்த விஷயங்கள் நடந்து முடிந்தவை. அவை நல்லவைகளாகவே இருக்கட்டும்.

(தற்பெருமை தப்புத்தான். ஆனாலும் சில விதிவிலக்குகள் உண்டு என்று தமிழ் இலக்கண நூலான நன்னூலிலேயே சொல்லியிருக்கிறது. அதையொட்டியே இந்தப் பதிவு)

வெள்ளி, 9 ஜனவரி, 2015

இரட்டை வாழ்க்கை

                            
என் "மூடத்தனமான பதிவுகள்" என்ற பதிவிற்கு வருண்
அவர்களின் பின்னூட்டத்தில் இருந்து ஒரு பகுதி.

வருண்வெள்ளி, 9 ஜனவரி, 2015 ’அன்று’ 3:26:00 முற்பகல் IST

Please dont get mad at me too! It is very hard to understand your separate "scientific" and "cultural" views for anyone like me! It may be my ignorance but I have to tell you my ignorance here so that you can understand lots of "ignorant people" around here. Not just Karthik ammA or, dharumi sir.. There are many more..

இந்தக் குறிப்பிற்கு பின்னூட்டத்திலேயே பதில் எழுதினால் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால் ஒரு தனிப்பதிவாகப் போடுகிறேன்.

நாம் ஒவ்வொருவரும் இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம் என்பது என் கருத்து. அப்படியில்லாமல் உள்ளும் புறமும் ஒரே மாதிரியாக இருப்பது என்பது ஞானிகளுக்கே முடியக்கூடியது.

சில உதாரணங்களுடன் சொல்கிறேன்.

நாம் பலருடன் பழகுகிறோம். சிலரைப் பிடிக்கிறது. சிலரைப் பிடிக்கவில்லை. பிடிக்காதவர்களுடனும் பழகும்போது நமக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்பதைக் காட்டிக்கொள்ளாமல்தான் பழகுகிறோம். 

நம் உறவினர்கள் ஏதாவது ஒரு பிரச்சினையில் நம் யோசனையைக் கேட்கும்போது அவர்கள் மனதிற்குப் பிடித்ததைத்தான் சொல்கிறோமே தவிர நம் உண்மையான கருத்தைச் சொல்வதில்லை.

நம் முன்னோர்கள் திவசத்தன்று நாம் கொடுக்கும் உணவை காகமாக வந்து ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் நான் தவறாது திவசம் கொடுத்துக்கொண்டு வருகிறேன். முன்னோர்களை நினைக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று எடுத்துக்கொள்கிறேன்.

இது தவிர நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் குடும்பத்தினருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் என் செயல்களினால் மனவருத்தம் அடைந்தால் பிறகு நான் ஒரு நல்ல குடும்பத்தலைவன் அல்ல. குடும்பத்தை விட்டு துறவறம் கொள்ளவேண்டும். அங்கு போனாலும் என் மனதிற்குத் தொன்றியவாறு இருக்க முடியாது. துறவிகளுக்கு என்று இருக்கும் கோட்பாடுகளைத் தழுவியே நான் வாழவேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் நாம் இரட்டை வாழ்க்கைதான் வாழ்கிறோம். இதைத்தான் நான் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

Scientific view என்று நான் குறிப்பிடுவது, எனது படிப்பு, அதன் விளைவான சிந்தனைகள், அதனால் உருவான என் மனதில் இருக்கும் சில கருத்துகள் இவைகள்தான். பதிவுலகில்தான் நான் ஒரு Ph.D.  என்பதைத் தெரிவித்திருக்கிறேன். என் உறவினர்களுக்கு இந்தப் படிப்பைப் பற்றி இருபது முப்பது வருடங்களுக்கு முன் எதுவும் தெரியாது. நானும் என் படிப்பைப் பற்றியோ உத்தியோகத்தைப் பற்றியோ யாரிடமும் பேசியதில்லை. 

என் உறவினர்களின் நிலைக்குத் தகுந்த மாதிரிதான் நடந்து கொண்டுள்ளேன்.
தடைமுறை வாழ்க்கையில் இந்த வழி அவசியமானது.

Cultural view என்று நான் சொல்ல விழைவது. எனக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் நம்பிக்கை இல்லை. ஆனால் என் மனைவி தினமும் ஒரு மணி நேரம் சாமி கும்பிடுகிறாள். அவளுடைய திருப்திக்காக நானும் சாமி கும்பிடுகிறேன். இது ஒரு குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் ஒரு செயல்.

நானும் என் மனைவியும் எப்படி வாழ்கிறோம் என்பதை என் வாரிசுகள் கவனிக்கிறார்கள். அதிலுள்ள நன்மை தீமைகளை அவர்கள் சிந்திக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன். தவறான பழக்க வழக்கங்களை நான் கடைப்பிடித்தால் அவர்களின் வாழ்வும் சிதறிப்போக வாய்ப்பு இருக்கிறது. அதனால் நான் குடும்பக் கலாச்சாரத்தை அனுசரித்துப் போகவேண்டிய கடமை இருக்கிறது.

என் குடும்பத்தினரின் வாழ்க்கை வேறு, என் வாழ்க்கை வேறு, நான் என் மனது சொல்கிற மாதிரிதான் வாழ்வேன் என்று நடைமுறை வாழ்க்கையில் சொல்ல முடியாது.

பதிவுலகம் ஒரு மாயா உலகம். இதில் நடப்பவை எதுவும் என் உலக வாழ்க்கையைப் பாதிக்கப்போவதில்லை. இங்கு நான் என் மனம்போல் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் இருக்க முடிகிறதா? இல்லையே.

வியாழன், 8 ஜனவரி, 2015

மூடத்தனமான பதிவுகள்

சமீபத்தில் நான்  "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுதியது பதிவுலக நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

பதிவுலகில் சில எழுதாத கோட்பாடுகள் உண்டு. இது அந்தந்தப் பதிவர்கள் தாங்களாகவே கடைப்பிடிக்கவேண்டியவை. நான் கடைப்பிடிக்கும் சில கோட்பாடுகள்.

1. பதிவில் எழுதும் கருத்துகள் அந்தந்தப் பதிவரின் சொந்தக் கருத்தானாலும், இரவல் கருத்தானாலும், அந்தக் கருத்துகளுக்கு அவர் பொறுப்பாளி ஆகிறார். அதற்கு எதிராக யாராவது பின்னூட்டம் போட்டால் அதற்கு பதிலளிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு அவருக்கு உண்டு.

2. பதிவில் எழுதப்பட்ட அனைத்தும் பொதுச் சொத்தாகிறது. ஏனென்றால் இது ஒரு பொது வெளி. ஒருவர் தனக்குத் தோன்றியதை எல்லாம் எழுதிவிட்டு, இது என் சொந்தக் கருத்துகள். இதைப் பற்றி விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லக்கூடாது.

2. அது மாதிரியே அந்தப் பதிவில் பின்னூட்டம் எழுதுபவர்களும் அவர்கள் கூறும் கருத்துகளுக்குப் பொறுப்பாளி ஆகிறார்கள். 

நான் எழுதிய "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்ற பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்.

எவ்வளவு மூடத்தனமான குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல் இருக்கக் கூடாது சரி, அப்படியானால் கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.
--
இந்தப் பின்னூட்டம் எனக்கு கோபத்தை வரவழைத்தது. (கோபம் வருவது குற்றம் அல்ல என்று நான் நினைக்கிறேன்.) அதனால் அந்தப் பின்னூட்டத்திற்கு நான் கொடுத்த பதில்.

  1. //தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.//

    அது தெரியாத மூடனாக இருப்பதால்தானே இப்படிப்பட்ட பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

    அறிவியல் ரீதியான விஷயங்களைத் தருவதற்குத்தான் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களே?
    நீக்கு
  2. இந்தப் பதிலில் நான் யாரையும் குறை கூறவில்லை. இதைப் பார்த்து விட்டு திரு. தருமி அவர்கள் எழுதிய பின்னூட்டமும் அதற்கு நான் எழுதிய பதிலும்.
  3. மன்னிக்கவும் திரு கந்தசாமி. எனக்கும் மேலே பொன்னியின் செல்வன் கருத்து தான் இப்பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. அதனால் தான் உ’உள்குத்தோடு’ ஒரு பின்னூட்டம் முதலில் இட்டேன்.
    இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால், பின்னூட்டம் இட்ட பலரும் இப்பதிவில் உள்ளவைகளைப் பொன்வாசகங்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்களே என்பது தான்!
    உங்களுக்கும் இதைப் பற்றிக் கூறியதும் கோபம் வந்து விட்டது. உங்கள் படிப்பு, அறிவு, வயது வைத்துப் பார்க்கும் போது நீங்கள் எப்படிங்க அறிவியல் தெரியாத ....க இருக்க முடியும்!!??
    நீக்கு
  4. நண்பரே, அறிவியல் என்பதுவும் ஒரு மக்கள் இனத்தின் கலாச்சாரமும் வேறு வேறு என்று நான் கருதுகிறேன். ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் என்பதில் நமக்குள் வேறுபாடுகள் இல்லை என்று நான் நம்புகிறேன். கலாச்சாரம் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அந்தந்த இனங்களின் பழக்க வழக்கங்கள்தான். அவை அறிவியலுடன் ஒத்துப்போகவேண்டும் என்று எதிர் பார்ப்பதுதான் மூடத்தனம். அந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும். இதுதான் நான் உலக வரலாற்றிலிருந்து அறிந்து கொண்ட பாடம்.

    நான் அறிவியல் பூர்வமாக கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை உணர்கிறேன். ஆனாலும் தினமும் குளித்தவுடன் கடவுள் படத்திற்கு முன் நின்று விபூதி பூசிக்கொள்கிறேன். இது இரட்டை வாழ்வு அல்லது ஆஷாடபூதித்தனம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் வாழ்க்கையை இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு, வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அறிவியல் விளக்கம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். மனித மூளைக்கு அப்பாலும் ஏதோ ஒன்று இருக்கிறது, அது நம் வாழ்வோடு பிணைந்து இருக்கிறது என்றும் நம்புகிறேன்.

    கணவனை இழந்தவர்கள் தாங்கள் விதவைகள் என்று காட்டிக்கொள்ள விரும்பினால் காட்டிக்கொள்ளலாம். அது அவரவர்கள் விருப்பம்.

    தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை அறிவு இல்லாதவர்க்ள என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? என் கருத்துக்களை ஒத்துக் கொள்பவர்களுக்கு அறிவு இல்லை என்று அர்த்தமல்ல. அவர்களும் இனக் கலாச்சாரத்தைப் பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள் என்றுதான் அர்த்தம்.

    "...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? அல்லது அதற்கு வேறு ஏதாவது பொருளுடன் கிறிப்பிட்டீர்களா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒருவனை இன்னொருவன் அறிவில்லாதவன் என்று கூற அவனுக்கு உரிமை இல்லை. அப்படிக் கூறினால் கூறப்பட்டவனுக்கு கோபம் கொள்ள அதிகாரம் உள்ளது.
    நீக்கு
  5. திருத்தம் "கிறிப்பிட்டீர்களா" இதை "குறிப்பிட்டீர்களா" என்று திருத்தி வாசிக்கவும்.
    நீக்கு
  6. //"...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? //

    நீங்களே சொன்னீர்களே .. தெரியாத மூடனாக இருப்பதால்தானே .. அதைத் தான் நான் சொன்னேன். ஆனால் நீங்கள் //.."...க" என்பதை மசக்கவுண்டன் ..// என்றீர்களே... அது என்னங்க? ஏதோ சாதிப் பெயர் சொல்லி திட்ற மாதிரி இருக்கே... அப்படி எதுவும் மோசமாவா சொல்லியிருக்கப் போறீங்க..? இருக்காது .. இல்ல?
    நீக்கு
  7. //ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் //

    ஆஹா! இது ரொம்ப நல்லா இருக்கே... பால்ய விதவைக்குத் தலை மழித்து மூலையில் உட்காரவைக்க வேண்டும். ஆம்பள பயலுக அப்படி ஆனா அடுத்ததைக் கட்டிக்கலாம். இதுவும் நம்ப கலாச்சாரம். பொம்பிளை விரதம் இருக்கணும்னா புருஷங்கிட்ட அனுமதி வாங்கணும். ஆம்பள தண்ணியடிக்க அதெல்லாம் தேவையில்லை. இதுவும் நமது கலாச்சாரம்...இப்படியே ‘நம்ப’ கலாச்சாரத்திற்குப்பெரிய பட்டியலே சொல்லலாம். ஆனா நீங்க சொல்றீங்க ...//இந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும்// அப்டின்றீங்க.... இது சரியான்னு கேட்டா கோபம் வரக்கூடாது; பதில் தான் தரணும்மய்யா.

    நீங்க ஏறக்குறைய காந்தி மாதிரியே பேசுறீங்க. அவர் சொன்னது இந்த மேற்கோள் :”சாதிகளை ஒழித்து, மேற்கத்திய சமுதாயக் கருத்துகளை நாம் மேற்கொண்டால் பிறப்பின் அடிப்படையினால் ஒவ்வொரு சாதியினரும் பரம்பரையாகத் தொடரும் வேலை அமைப்பினை விட்டொழிக்க வேண்டும். ஆனால் இதுவே சாதிகளின் அடிப்படை. பரம்பரையாக வரும் இவ்வழக்கம் அழிக்க முடியாத நிலையான ஒன்றாகும். இதனை மாற்றுவதால் எல்லாமே முரண்பட்டுப் போகும்”.
    நீக்கு

  8. திரு.தருமி ஒரு மூத்த பதிவர். எனக்கு நன்கு அறிமுகமானவர். 
  9. அவர் எழுதிய 
  10. நீங்கள் எப்படிங்க அறிவியல் தெரியாத ....க இருக்க முடியும்!!?? 
  11. என்கிற வாக்கியத்திற்கு எனக்கு இன்னும் பொருள் தெரியவில்லை.

  12. இரண்டாவதாக அவர் செய்யும் வாதத்தில் குறிப்பிட்டவை. நான் எழுதாதவற்றை எல்லாம் சொல்லி என்னை கொம்பு சீவி விடுகிறார்.

  13. உதாரணம்.
  14. 1. பால்ய விதவைக்குத் தலை மழித்து மூலையில் உட்காரவைக்க வேண்டும். ஆம்பள பயலுக அப்படி ஆனா அடுத்ததைக் கட்டிக்கலாம்
  15. 2. ஆம்பள தண்ணியடிக்க அதெல்லாம் தேவையில்லை.
  16. இந்த வார்த்தைகளை நான் என் பதிவில் எங்கும் சொல்லவில்லை. இப்படி சொல்லாத வார்த்தைகளை ஒருவர் வாயில் போட்டு பிடுங்குவதுதான் கொம்பு சீவும் உத்தி.
  17. இந்த கொம்பு சீவும் உத்தி காலம் காலமாக வருவதுதான். அந்த வலையில் பலரும் விழுந்து தங்கள் நடுநிலையை இழந்து வேண்டாத வார்த்தைகளை சொல்லிவிடுவார்கள். கொம்பு சீவுபவர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்.
  18. அதன் பிறகு விவாதம் திசை மாறி, முதலில் எதற்காக விவாதம் ஆரம்பிக்கப்பட்டதோ அதை விட்டு வெகு தூரம் போய்விடும்.
  19. முக்கிய குறிப்பு:
  20. இந்த வாதங்களை நான் ஒரு தனிப்பதிவாகப் போடுவதன் காரணம், இந்தப் பதிவுலகில் உள்ள ஒரு குறைபாடுதான். பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அதை எழுதியவர்கள், எழுதிய பிறகு அழித்து விடமுடியும். நான் அப்படி எழுதவேயில்லை என்று பின்னாளில் சொல்லவும் முடியும். அதனால் இந்த வாதங்களை யாரும் அழிக்காமல் என் நினைவில் வைத்துக் கொள்வதற்காகவும், மற்ற பதிவர்கள் பதுவுலகில் என்னென்ன நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளவும்தான்.

புதன், 7 ஜனவரி, 2015

VGK 14. நீ ..... முன்னாலே போனா .....நா ..... பின்னாலே வாரேன் !


                                       

வைகோ அவர்களின் கதைக்கு நான் எழுதிய விமர்சனம்.

VGK 14. நீ ..... முன்னாலே போனா .....நா ..... பின்னாலே வாரேன் !
(இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.)

அருமையான கதை. இது மட்டுமே இந்தக் கதைக்குப் போதுமான விமர்சனம். ஆனால் நடுவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்பதற்காக கொஞ்சம் விரிவான விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன்.

மனிதனின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் அரிது. நாம் ஒன்றை நினைத்து செய்தால் மற்றவர்களுக்கு அது பிடிக்காது. அதுவும் மனமொத்த தம்பதியினருக்குள் பலவித புரிதல்கள் இருக்கும். அது மற்றவர்களுக்கு புரியாது.

இந்தக் கதை அப்படிப்பட்ட உணர்ச்சிப் போராட்டத்தின் சரித்திரம். தன் மனைவியை மிகவும் நேசித்த ஒருவர் அந்த மனிவியின் இறுதிக்காலத்தில் அவளுடைய ஆசைகளை நிறைவேற்றுகிறார். அவளுக்கு மிகவும் விருப்பமான இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொடுக்கிறார். ஏன் என்றால் அவளுடைய வாழ்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதை அவர் உணர்கிறார்.

ஆனால் மற்றவர்களின் பார்வையில் இது ஒரு கொலை போலத்தான் படும். இந்த உணர்ச்சிப் போராட்டத்தை நுணுக்கமாக கதாசிரியர் விளக்கியிருக்கிறார். இந்த நுணுக்கத்தை அனுபவிக்கவே வாசருக்கு ஒரு தனி மனோபாவம் வேண்டும். அப்படிப்பட்ட மனோபாவம் இல்லாதவர்கள் இந்தக் கதையில் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியாது.

மனைவி இழந்த சோகம் கணவனையும் இறுதி யாத்திரைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. பாகவத சப்தாகம் கேட்டு முடித்தவுடன் இந்த முடிவு ஏற்படுவதாக காண்பித்திருப்பது கதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

அரட்டை ராமசாமி கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கிறார். ஏறக்குறைய அவர்தான் கதையை நகர்த்திச் செல்கிறார் என்றே கூறலாம். ஆசிரியர் இந்தக் கதையை பின்னியிருக்கும் விதம் ஆழ் மனதைத் தொடுகிறது.

திங்கள், 5 ஜனவரி, 2015

ஆண்களுக்கான சில அறிவுரைகள்.

                                             

பொதுவாக ஆண்கள் யாரும் அடுத்தவர்கள் அறிவுரையைக் கேட்கமாட்டார்கள். இருந்தாலும் ஏன் இந்தப் பதிவை எழுதுகிறேன் என்றால் பெண்களுக்கான அறிவுரைகள் சொன்னீர்களே, எங்களுக்கென்று ஒன்றும் இல்லையா என்று சில ஆண்கள் கேட்டதால்தான். இந்தப் பதிவைப் பெண்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.

1. ஆண்கள் என்றால் ஏதாவது ஒரு உத்தியோகம் செய்து வருமானம் ஈட்டவேண்டும். அது மாதச் சம்பளமாகவோ அல்லது வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ இருக்கலாம்.

2. வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் "ஒன் ஸ்டெப் பேக்". உங்களுக்கான அறிவுரை கடைசியில் இருக்கிறது.

3. சம்பளக்காரர்கள் சம்பளம் வாங்கியவுடன் அப்படியே முழுவதையும் மனைவி கையில் கொடுத்து விட்டு அவ்வப்போது தேவைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.

4. வீட்டில் அனைத்து முடிவுகளையும் ஆண்கள்தான் எடுக்கவேண்டும். ஆனால் முதலில் இல்லாளிடம் அனுமதி வாங்கிக்கொள்ளவேண்டும்.

5. எந்தக் காரியமும் வெற்றியடைந்தால் புகழை மனைவிக்குச் சமர்ப்பணம் செய்யவேண்டும். தோல்வியடைந்தால் பழியை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

6. ஆண்களுக்குப் பொருத்தமான உடைகளைத் தேர்வு செய்ய பெண்களே பொருத்தமானவர்கள். ஆகவே உங்கள் உடைகளை அவர்கள் வாங்குவார்கள். அதைக் குறை சொல்லாமல் போட்டுக்கொள்வது உங்கள் கடமை.

7. வெளியில் செல்லும்போது நீங்கள்தான் குடும்பத்தலைவர் என்று காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் எந்த முடிவுகளையும் நீங்களாக எடுக்கக் கூடாது.

8. நண்பர்கள் வந்தால் காப்பி கொண்டு வரச் சொல்லக்கூடாது. அப்படி அவருக்குக் காப்பி கொடுக்கவேண்டுமானால் வெளியில் கூட்டிக்கொண்டு போய் நல்ல காப்பிக்கடையில் காப்பி வாங்கிக் கொடுக்கவும். அப்படியே நீங்களும் ஒரு நல்ல காப்பி குடித்துக் கொள்ளலாம்  இதற்காக அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

9. மனைவி சமைக்கும் சாப்பாட்டில் எந்தக் குறையும் சொல்லக்கூடாது. உப்பு இல்லாவிட்டால் அப்படியே சாப்பிட வேண்டுமே ஒழிய உப்பு இல்லை என்று சொல்லக் கூடாது..

10. கடைசியாக வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உண்டான ஆலோசனை. உங்கள் வியாபாரம் அல்லது தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கிறதா? அப்படியானால் மேற்கண்ட எந்த யோசனைகளையும் கடைப்பிடிக்காதீர்கள்.

11. தொழிலோ அல்லது வியாபாரமோ சரியாக இல்லையா? மனைவியிடம் யோசனை கேட்டு அதன்படியே செய்யுங்கள். ஆறு மாதத்தில் தொழில் அல்லது வியாபாரம் முடிவுக்கு வந்து விடும். பிறகு மாதச்சம்பளத்தில் சேர்ந்து இங்கு சொன்ன அனைத்து அறிவுரைகளையும் கடைப்பிடிக்கவும்.

இன்னும் நிறைய யோசனைகள் கைவசம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இவ்வளவுக்குத்தான் பர்மிஷன் கிடைத்தது.

                                       

சனி, 3 ஜனவரி, 2015

குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை

                                              

இப்பதிவில் கூறும் குறிப்புகளை ஏற்கெனவே எல்லோரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால் நல்ல விஷயங்களைத் திரும்பவும் கேட்பதில் தவறில்லை. இந்தக் குறிப்புகள் ஒரு கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட கையேட்டில் இருந்து தொகுக்கப்பட்டது.

1. நெற்றியில் பொட்டில்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது.

2. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.

3. பெண்கள் முழுப் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, மணையினாலோ, கத்தியினாலோ முழுப் பூசணிக்காயை வெட்டலாகாது.

4. கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கலாகாது. தேங்காய் உடைக்கும்போது ஏற்படும் நுண்ணலை அதிர்வுகள் கர்ப்பதைதப் பாதிக்கும்.

5. தம்பதியரைச் சேரவிடாமல் கலைப்பது மஹாபாவம். (அப்படிப்பட்ட டிவி சீரியல்களைப் பார்ப்பது அதனினும் மஹாபாவம்.) அப்படி கலைத்துப் பிரித்து வைத்தால் 21 தலைமுறை பாலவிதவைகள் ஆவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. (சீரியல் பார்ப்பவர்களுக்கு தண்டனையில் கொஞ்சம் தள்ளுபடி உண்டு என்று அதே சாஸ்திரங்க்ள சொல்லுகின்றன).

6. இரவில் வீட்டைப் பெருக்கலாகாது.அப்படிப் பெருக்கினாலும் குப்பையைத் தெருவில் கொட்டக்கூடாது. பகலில் குப்பையை வீட்டில் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி குப்பையை வீட்டில் மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாட்களில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.

7. அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலுக்கு சாணம் அல்லது தண்ணீர்  தெளித்து கோலம் போடவேண்டும். இதை வீட்டு எஜமானியே செய்தால் மகாலட்சுமி மிக மகிழ்ச்சியுடன் நம் வீட்டிற்கு வருவாள்.

8. உணவிற்கு இலை போடுமுன் இலைக்கு கீழே பசும்சாணம் அல்லது வெறும் ஜலத்தால் நாலுமூலை சதுரமாக சுத்தம் செய்யவேண்டும்.

9. கையால் அன்னத்தையோ காய்களிகளையோ பரிமாறக்கூடாது. கரண்டியால் அமுதுகளைப் பரிமாறினால் தீமை வராது.

10. ஓர் இலைக்குப் பரிமாறிய மிச்சத்தை அடுத்த இலைக்குப் பரிமாறக்கூடாது.

11. தன் கணவன் அனுமதி பெற்றுத்தான் தானதர்மம், விரதம் ஆகியவைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

12. எந்தப் பொருளையும் இல்லையென்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்று கூறவேண்டும்.

13. எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது. அழுத வீட்டில் செல்வம் நிலைக்காது.

14. துன்பம் நேரும்போது வாய் விட்டு அசுப வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.

15.நம் இல்லத்திற்கு சுமங்கலிகள் வந்தால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, உபசரித்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூ கொடுத்து உபசரிக்கவேண்டும்.

16. குடும்பப் பெண்கள் எப்பொழுதும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கக்  கூடாது.


இவையெல்லாம் ஆணாதிக்கவாதிகள் சொல்லிவைத்துப் போனவை என்று நினைக்கும் பெண்கள் இவைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

வியாழன், 1 ஜனவரி, 2015

புது வருட வாழ்த்துக்கள்.

                         


                            

அனைத்து பதிவுலக நண்பர்களும் (நண்பிகளுக்கும் சேர்த்துத்தான்) புது வருடத்தில் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.