திங்கள், 8 ஜூன், 2015

மனம் மயங்குதல் அல்லது கலங்குதல்

                                      Image result for confusion images
சுமைதாங்கி எனும் சினிமாவில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து பிபிஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் நிறையப் பேருக்கு நினைவிருக்கலாம்.

மயக்கமா கலக்கமா  மனதிலே குழப்பமா   வாழ்க்கையில் நடுக்கமா


                         

கண்ணதாசன் மிகுந்த பொருட்செறிவோடு எழுதிய பாடல் இது.

மயக்கம் என்பது இல்லாததை இருப்பதாக அல்லது இருக்கும் ஒன்றை வேறொன்றாக காணும் மனநிலை. இந்த நிலையில் இருக்கும் ஒருவன் எந்த ஆக்கபூர்வமான செயலையும் செய்யும் சக்தி அற்றவனாகிறான். மாயை என்னும் சொல்லிலிருந்து வந்தது மயக்கம்.

கலக்கம் என்பது மனம் தெளிவான நிலையை இழந்து நிற்கும் நிலை. இந்த நிலையில் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் ஆற்றலை ஒருவன் இழந்து விடுகிறான்.

இந்த இரண்டு நிலைகளும்,  ஒருவன் எதிர்பாராத அல்லது மிகப்பெரிய வாழ்க்கைப் பிரச்சினைகள் ஏற்படும்போது அடையும் நிலைகளாகும். இது சாதாரணமாக பெரும்பலானோருக்கு ஏற்படும் அனுபவமே. இதிலிருந்து வெளிவந்து அந்த பிரச்சினையின் தீர்வுக்காக செயல் புரிபவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

இந்த மயங்குதல் மற்றும் கலங்குதல் நிலையைக் கடப்பது எப்படி என்பது வாழ்க்கையின் ஒரு பெரும் சவாலாகும். மன திடம் உள்ளவர்களுக்கு இது சுலபம். மற்றவர்களுக்கு இது கடினம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான சில தீர்வுகள் இருக்கின்றன. அவரவர்களுக்குப் பிடித்தமானவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

முழுவதுமாக ஆண்டவன் பேரில் இந்தச் சுமையை இறக்கி வைத்து விடுவது. இது கடவுள் பக்தி உள்ளவர்களால் மட்டுமே முடியக்கூடியது. ஆண்டவன் நேரில் வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பானா என்ற கேள்விக்குப் பதில் இதுதான். ஆண்டவன் நேரில் வராவிட்டாலும் பிரச்சினை தீர்வதற்கு உண்டான ஏதாவது ஒரு வழியைக் காண்பிப்பான்.

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது உதவிக்கு வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம். அல்லது இரண்டொரு நாளில் உங்களுக்கே ஒரு வழி தோன்றலாம். எப்படியோ பிரச்சினை தீர்ந்து விடும். சிறிது நாட்கள் கழித்து நீங்களே நினைப்பீர்கள். "இந்தப் பிரச்சினைக்குப் போயா நாம் இவ்வளவு வருந்தினோம்" என்று.

அடுத்து உங்களுக்கு வேண்டிய பெரியவர்கள் யாராவதிடம் ஆலோசனை கேட்கலாம். இதை ஒரு தன்மானப் பிரச்சினையாகக் கருத வேண்டியதில்லை. அடுத்தவரிடம் யோசனை கேட்பதா என்று நினைக்கக் கூடாது. உடல் தலம் குன்றினால் டாக்டரிடம் போகிறோம். மனதில் கலக்கம் இருந்தால் அடுத்தவரிடம் யோசனை கேட்பதில் என்ன தவறு? அவர்கள் இந்தப் பிரச்சினையை பாரபட்சமில்லாமல் அணுகி ஒரு தீர்வு கண்டுபிடிக்கக் கூடும்.

இந்த நிலையில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். இந்தப் பிரச்சினையில் உங்களால் ஏன் உடனடியாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அந்தப் பிரச்சினை நீங்கள் சம்பந்தப்பட்டது. அதனால் நீங்கள் அதனுடன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு இணைந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் பாரபட்சமில்லாமல் அந்தப் பிரச்சினையை அணுக முடியவில்லை.

இங்குதான் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட தாமரை இலைத் தண்ணீர் உதாரணம் பொருத்தமாக இருக்கும். அடுத்து நான் எழுதிய "தள்ளிப் போடுதல்" உத்தியும் இந்த மாதிரி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். இரண்டு நாளைக்கு ஒன்றும் செய்யாமல் இருந்தால் மூன்றாம் நாள் உங்களுக்கே ஏதாவது ஒரு நல்ல யோசனை தோன்றும்.

ஒரு முனிவர் ஒரு ராஜாவிற்குச் சொன்ன புத்திமதியை இங்கு நினைவு கூர்கிறேன். "இதுவும் கடந்து போகும்". இதுதான் அவர் சொன்ன புத்திமதி. எந்தப் பிரச்சினை ஆனாலும் காலம் அதை மாற்றி விடும் என்பதே அதன் கருத்து.

நடைமுறைக்கு பெரிதும் உதவும் எளிமையான இன்னும் ஒரு வழியைச்  சொல்கிறேன் கேளுங்கள். "சாமியின் மன அலைகள்" என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதைத் தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க அந்த தளத்தில் வழி சொல்லப்பட்டிருக்கும்.

எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.

சனி, 6 ஜூன், 2015

தள்ளிப்போடுதல்

                                           Image result for thinking man image
தள்ளிப் போடுதல் - ஆங்கிலத்தில் சொன்னால் தமிழர்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். அதாவது Procrastination. ஒரு வேலையை உடனே செய்து முடிக்காமல் அப்புறம் செய்யலாம் என்று ஒத்திப்போடுவது. இது எல்லோருக்கும் பொதுவான இயல்பு. அதனால்தான் அனைத்து மேலாண்மைப் படிப்புகளிலும் இந்தக் குணத்தை மாற்றுவதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இன்று செய்யவேண்டியதை நாளைக்கு என்று ஒத்திப்போடாதே என்பதுதான் இந்த மேலாண்மை நிபுணர்களின் தாரக மந்திரம். இது மகாத் தவறு. மேலே படியுங்கள்.

ஆனால் இது அரசுத் துறைகளுக்குப் பொருந்தாது. இன்றைக்கு இருக்கும் வேலைகளை இன்றே முடித்து விட்டால் நாளைக்கு என்ன செய்வது என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிடும். தவிர ஒவ்வொரு அரசு ஊழியனும் நினைப்பது என்னவென்றால், இன்றைக்கு உண்டான வேலைகளை எல்லாம் இன்றே முடித்து விட்டால், நாளைக்கு இதைவிடக் கடினமாக வேலைகளை நம் மீது சுமத்துவார்கள். அப்படியே கொடுக்கும் வேலைகளை எல்லாம் அன்றன்றே முடித்துக் கொண்டிருந்தால் நாளாவட்டத்தில் நம்மை இந்த ஆபீசின் சுமைதாங்கியாக்கி விடுவார்கள். அப்புறம் நாம்தான் இந்த ஆபீசின் முதன்மை இளிச்சவாயனாகி விடுவோம், என்று சிந்தனைகள் ஓடும். இதுதான் அரசு ஆபீஸ்களில் வேலைகள் தாமதமாக நடப்பதற்கு முக்கிய காரணம்.

இவர்கள் கடைப்பிடிப்பது நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிப் போன மேலாண்மைத் தத்துவத்தையே.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை - குறள் (672)

இந்தக் குறளுக்கு பதவுரை, பொருளுரை எல்லாம் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

இந்த தள்ளிப் போடும் குணத்தினால் பல நன்மைகள் உண்டு என்பது பலர் அறியாத ஒன்று. பல சமயங்களில் அந்த வேலைக்கே அவசியமில்லாமல் போகும். உதாரணத்திற்கு, ஒருவரைப் பார்க்க தூரத்து ஊருக்குப் போகவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேலையைத் தள்ளிப் போட்டால் நீங்கள் பார்க்கவேண்டியவரே உங்களைத் தேடி வரலாம். அலைச்சலும் பணமும் மிச்சம்.

அரசு அலுவலகங்களில் நீங்கள் தள்ளிப் போடுபவராக இருந்தால் இவனிடம் எந்த வேலை கொடுத்தாலும் தள்ளிப் போடுவான். ஆகவே இவனிடம் இந்த வேலையைக் கொடுக்கவேண்டாம் என்று பல வேலைகள் அடுத்தவர்களுக்குப் போய்விடும். ஆனால் நீங்கள் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பிரமோஷன் பாதிக்காதபடி மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும்.  இதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள என்னிடம் தனியாக ட்யூஷன் எடுத்துக் கொள்ளலாம். பதிவர்களுக்கு கட்டண சலுகை உண்டு.

வீட்டில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் உடனே டாக்டரிடம் போய் விடக்கூடாது. இரண்டு நாள் தள்ளிப்போட்டால் அந்த சீக்கு தானாகவே சரியாகி விடக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படியும் சரியாகவில்லை என்றால் மட்டும் டாக்டரிடம் போனால் போதும். அப்போதுதான் டாக்டருக்கும் சீக்கின் தன்மை நன்றாகப் புரிந்து ஒழுங்கான வைத்தியம் செய்வார். சீக்கின் முதல் அறிகுறிகள் தெரிந்தவுடனேயே டாக்டரிடம் ஓடியிருந்தால் டாக்டரால் என்ன சீக்கு என்று சரியாகக் கண்டு பிடிக்க முடியாமல் பொதுவாக ஏதோ மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி விடுவார். நமக்கு அனாவசியச் செலவு.

நமது தேச ரயில்கள் ஏன் எப்போதும் லேட்டாகவே ஓடுகின்றன என்பதின் ரகசியம் என்ன தெரியுமா? மக்களின் இந்தத் தள்ளிப்போடும் குணத்தினால்தான். ரயில்கள் அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்திற்கே புறப்பட்டு விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். நம் மாதிரி மக்களின் கதி என்ன ஆவது? ரயில் எப்படியும் அரை மணி நேரம் தாமதமாகத்தான் புறப்படும் என்று நாம் அரை மணி நேரம் கழித்து ஸ்டேஷனுக்கு வந்தால் ரயில் புறப்பட்டுப் போயிருந்தால் நம் கதி என்னாவது?

நம்மை விடுங்கள். ரயில்வே துறைக்கு எவ்வளவு நஷ்டம்? இதே மாதிரி பிளேன்கள், பஸ்கள் எல்லாம் சரியான நேரத்திற்கு புறப்பட்டு விட்டால் இந்தத் துறைகளுக்கெல்லாம் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று யோசியுங்கள்? அதனால்தான் "இண்டியன் பங்க்சுவாலிடி" என்று ஒரு புது வார்த்தையையே இங்கிலீஷ்காரன் உருவாக்கினான்.

இந்த தள்ளிப்போடும் குணத்தினால் உங்கள் பொருளாதார நிலமை முன்னேறும். எப்படியென்றால், உங்கள் மனைவி ஒரு புதுப்புடவை கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே வாங்கிக்கொடுத்து விட்டீர்களானால் அடுத்த புடவைக்கான கோரிக்கை சீக்கிரமே வந்து விடும். முதல் புடவைக்கே நீங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டு இருந்தீர்களானால் அடுத்த புடவைக்கான கோரிக்கையைத் தவிர்க்கலாம். ஆனால் வீட்டிலிருக்கும்போதே தலைக்கு ஹெல்மெட் போடுவது அவசியம். பூரிக்கட்டைக்கு தப்பிக்கவேண்டுமல்லவா?

அதே மாதிரி பிறந்த வீட்டுக்குப் போக மனைவி போடும் திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் என்ன நடக்கும் என்று சம்சாரிகளுக்கு நன்கு தெரியும். உங்கள் கையிருப்பு முழுவதும் காலியாகி, அடுத்த சில மாதங்களுக்கான் சேமிப்பும் காலியாகும். இந்த மாதிரி திட்டங்களுக்கு சாமர்த்தியமாக, ஆபீசில் இன்ஸ்பெக்ஷ்ன், ஆடிட், இந்த மாதிரி ஏதாவது சால்ஜாப்பு சொல்லி தள்ளுப்போடுங்கள். இதற்கும் என்னிடம் ட்யூஷன் கிளாஸ் உண்டு. சம்சாரிகளுக்கு கட்டணம் இல்லை.

ஆக மொத்தம் தள்ளிப்போடுதலில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டீர்கள் அல்லவா? நான் சொன்னவைகளை நன்கு மனதில் பதித்து புத்தியாய் பிழைத்துக் கொள்ளுங்கள்.



வியாழன், 4 ஜூன், 2015

தாமரை இலைத் தண்ணீர்

                                     Image result for lotus leaf
வாழ்வில் என்றும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்று சில நாட்களுக்கு முன் பார்த்தோம். சுகதுக்கங்களை சமமாகப் பாவிக்கவேண்டும் என்று அதில் சொல்லியிருந்தேன். அப்போதுதான் மனது அமைதியாக இருக்கும். அதுதான் ஆனந்தம் என்று சொல்லியிருந்தேன்.

அது எப்படி சுக துக்கங்களால் பாதிக்காமல் இருக்க முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். நல்ல கேள்விதான். பதில் சொல்வது கொஞ்சம் சிரமம்தான்.

ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன். ஒருவனுடைய அருமை மனைவி இறந்து விட்டாள். அவள் புருஷன் "ஐயோ, நான் என் ஆசை மனைவியைப் பிரிந்து எப்படி வாழ்வேன், நானும் அவளுடனேயே இறந்து போகிறேன்" என்று பிரலாபிக்கிறான். உறவினர்கள் எப்படியோ அவனைச் சமாதானம் செய்து மனைவியின் ஈமக்கடன்களைச் செய்ய வைக்கிறார்கள்.

ஒரு வருடம் சென்றது. அவன் ஒரு அழைப்பிதழோடு உறவினர்களைப் பார்க்கப் போகிறான். என்ன அழைப்பிதழ் என்று நினைக்கிறீர்கள்? அவனுடைய இரண்டாம் கல்யாணத்திற்கான  அழைப்பிதழ்தான் அது. அழைப்பிதழைப் பெற்ற உறவினர்கள் நினைக்கிறார்கள் "இதுதான் உலகம்" என்று. இது எப்படி நடந்தது.

காலம் செய்யும் மாயம் இது. எப்படிப்பட்ட துக்கத்தையும் நாளாவட்டத்தில் மனிதன் மறக்கிறான். இந்த இயல்பு இயற்கை மனிதனுக்குக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். அப்படி மறக்கும் இயல்பு இல்லாவிட்டால் மனிதன் நொறுங்கிப் போய்விடுவான். துக்கத்திலேயே மூழ்கிக்கிடந்தால் அவன் வாழ்வு என்ன ஆகும்?

இந்த இயற்கை நியதி எல்லோரும் அறிந்ததே. எப்படி சில காலம் சென்ற பிறகு அந்த துக்கத்தை மறக்கிறானோ, அது போல அந்த துக்கம் நிகழ்கிறபோதும் ஒரு சாட்சியாக நின்று அதைப் பார்க்க முடியுமா? இது ஒரு பெரிய ஆன்மீகப் புதிர். இதைத் தான் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்வது என்கிறார்கள். தண்ணீர் தாமரை இலையில்தான் இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒட்டவில்லை.

ஒவ்வொருவரும் வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் அதன் நிகழ்வுகளில் அதீத ஒட்டுதல் இருக்கக் கூடாது. இந்த பண்பு இளம் வயதில் வருவது கடினம். ஆனால் வயது ஆன பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் பட்ட சுக துக்கங்கள் காரணமாக, வாழ்க்கையில் எதுவும் நிலையில்லாதது என்று உணர்கிறார்கள். அப்போது வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் அவர்களுக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இந்த நிலையை அடைந்த ஒருவன் சுகதுக்கங்களை ஒன்றாகவே ஏற்றுக்கொள்வான்.

செவ்வாய், 2 ஜூன், 2015

தீண்டாமையை வளர்ப்பது யார்?

                                 Image result for dalit colony
இந்தப் பொருளில் எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பதைப் போன்றது. கருத்துகளையும் வார்த்தைகளையும் பல முறை யோசித்து எழுத வேண்டும். இல்லாவிட்டால் கத்தி கழுத்தின் மேல் விழும். இதற்கு முன்னால் பல முறை என் கழுத்தின் மேல் கத்தி விழுந்திருக்கிறது. சாதாரணக் காயத்துடன் போய்விட்டது. அந்தக் காயங்கள் ஆறிவிட்டபடியால் இப்போது மீண்டும் கழுத்தை நீட்டுகிறேன். எத்தனை பட்டாலும் இந்த ஆளுக்கு புத்தி வர மாட்டேங்குதே என்று ஆதங்கப் படுபவர்களுக்கு ஒரு இனிமையான செய்தி. இந்த டாபிக்கில் இதுதான் என் கடைசிப் பதிவு. இனிமேல் இந்த டாபிக்கில் எழுத மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

சமீபத்தில் சென்னை ஐஐடியில் ஏற்பட்டுள்ள ஒரு நிகழ்வைப் பற்றி ஏறக்குறைய அனைத்து முன்னணிப் பதிவர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு விட்டார்கள். இந்த நிலையில் முன்னணி முதல் வரிசைப் பதிவரான நான் (சுயப் பிரதாபத்தை பொறுத்தருளவும்) என் கருத்துகளை இங்கு பதிவு செய்யாவிடில் எதிர்காலம் என்னை மன்னிக்காது. அது காரணம் பற்றியே இந்தப் பதிவு போடுகிறேன்.

தீண்டாமையைத் தோற்றுவித்தவர்கள் யார்? அதை மறையாமல் வளர்த்துக் கொண்டிருப்பவர் யார்? இவைகள் முக்கியமான கேள்விகள். இங்கு நான் என் அனுபவங்களின் மூலமாகத் தெரிந்து கொண்டவைகளை மட்டுமே பதிகிறேன். அவை என் சொந்தக் கருத்துகள். இந்தக் கருத்துகள் மேலும் சிந்தனையைத் தூண்டினால் மகிழ்ச்சி. என்னை இகழ்தலும் ஒரு வகை சிந்தனைத் தூண்டுதல் என்றே கருதுகிறேன்.

தீண்டாமை எப்படித் தோன்றியது என்று ஆதார பூர்வமாகத் தகவல்கள் இல்லை. ஆனால் இந்தியாவில் இந்த பாகுபாடு பல நூற்றாண்டுகளாக இருக்கிறது என்று தெரிகிறது. இந்த மாதிரி சாதி பாகுபாடுகளைப்பற்றிக் கூறும்போது பிராமணர்களைச் சுட்டிக்காட்டுவதுதான் வழக்கம். அவர்கள்தான் மனுதர்ம சாஸ்திரப்படி நான்கு வர்ணங்களை வகைப்படுத்தினார்கள் என்றும் இதற்கு அப்பால் பஞ்சமர்கள் என்று ஒரு சாராரை வகைப் படுத்தினார்கள் என்றும் கூறுகிறார்கள்.

பிராமணர்கள் நான்காவது வகுப்பாகிய சூத்திரர்களையும் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை, ஏறக்குறைய பஞ்சமர்கள் மாதிரித்தான் வைத்திருந்தார்கள் என்பது பலருக்கு மறந்து போய் இருக்கலாம். ஈ.வே.ரா. என்னும் பெரியார் பிராமணீயத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கவில்லை என்றால் இன்றும் அதே நிலைமை தொடர்ந்திருக்கும். (என் பிராமண நண்பர்கள், நான் இந்த மாதிரி சில கருத்துகளைக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவேண்டும்). இந்தப் பதிவு சில பொது சமூகப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதற்கான பதிவு. இதில் தனிப்பட்ட உறவுகள் பாதிக்கப்படக்கூடாது.

பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று யார் எப்பொழுது வகைப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காலங்காலமாக அவர்களை இவ்வாறு மற்ற வர்ணத்தவர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். சாஸ்திரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால் பிராமணர்கள் பிரம்மாவின் தலையிலிருந்து உற்பத்தியானார்கள். க்ஷத்திரியர்கள் பிரம்மாவின் மார்பிலிருந்தும் வைசியர்கள் பிரம்மாவின் தொடையிலிருந்தும் சூத்திரர்கள் பிரம்மாவின் பாதத்திலிருந்தும் உற்பத்தியானார்கள்  என்று கூறப்படுகிறது.

இன்று  மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள் இதை மாற்றிச் சொல்லுகிறார்கள். வர்ணாசிரமப் பாகுபாடுகள் அவரவர்கள் செய்யும் தொழிலை வைத்துத்தான் ஏற்படுத்தப் பட்டது. வேதம் ஓதுகிறவர்கள் பிராமணன் என்று அழைக்கப்பட்டான். யுத்தம் செய்கிறவன் க்ஷத்திரியன் எனப்பட்டான். வியாபாரம் செய்கிறவன் வைசியன் எனப்பட்டான். விவசாயம், மற்ற உற்பத்தித் தொழில்களைச் செய்தவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் இந்த மனுதர்ம சாஸ்திரப்படி பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் ஐந்தாவது வர்ணத்தவர் எப்படி உற்பத்தியானார்கள், அவர்களின் தொழில் என்ன, என்று சொல்லப்படவில்லை.

பிறப்பினால் யாருடைய வர்ணமும் நிர்ணயிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த நிலைமை மாறி, ஒருவனுடைய வர்ணம் அவனுடைய பிறப்பினால் நிர்ணயிக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு யார் காரணம் என்று சொல்ல முடியாது என்கிறார்கள்.

இன்று இந்த ஐந்து வர்ணங்கிடையே பல சாதிகள் உருவாகி உள்ளன. அவை எவ்வாறு உருவாகின என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த வர்ண, சாதி வேறுபாடுகள் இந்து மதத்தினரிடையே மிக ஆழமாக வேறூன்றி இருக்கிறது. அது போக, பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று மற்ற நான்கு வர்ணத்தாரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சூத்திரர்களும் ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாகத்தான் பிராமணர்களால் நடத்தப்பட்டார்கள் என்பதை சூத்திரர்கள் மறந்து விட்டு அவர்களும் பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொல்வதுதான்.

ஆக மொத்தம் தீண்டாமையை உண்டு பண்ணி அதை வளர்ப்பது இந்த நான்கு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் மனம் மாறி தீண்டாமையை ஒழிப்பார்கள் என்பது வெறும் கனவேயாகும். தீண்டாதவர்களின் பிரச்சினையைப் பற்றி எழுதலாம் என்றுதான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். ஆனால் என் சிந்தனை என்னை வேறு ஒரு பாதையில் இழுத்துச் சென்று விட்டது. இன்றைய ஐஐடியின் பிரச்சினை தீண்டாமையின் ஒரு அங்கமே என்று கூறி என் பதிவை முடிக்கிறேன்.

ஞாயிறு, 31 மே, 2015

அந்தக் காலத்து சினிமாத் தியேட்டர்கள்.

                                                      Image result for விஸ்வாமித்திரர் மேனகை

முன்னொரு காலத்தில் சினிமா மட்டுமே மக்களின் முழுமையான பொழுது போக்கும் வழியாக இருத்தது. வேறு பொழுது போக்கும் வழிகள் கிளப்பில் சீட்டாடுவது அல்லது கிளப்பில் ஏதாவது விளையாட்டுகள் விளையாடுவது, வீட்டிலுள்ள பெண்கள் தாயக்கட்டம், அல்லது பல்லாங்குழி விளையாடுவது உண்டு.

ஆனாலும் சினிமா பார்ப்பது மட்டுமே அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. இந்தப் பொழுது போக்குகளின் முக்கிய அம்சம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாகப் பேசிப் பழகிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் மனப்போக்கு என்னவென்று கூடப் பழகுபவர்களுக்குத் தெரியும்.

இன்று தங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்று தந்தைக்குத் தெரியாது. அவன் என்னமோ கம்ப்யூட்டரில் விளையாடுகிறான் என்ற அளவிற்குத்தான் தெரியும். இது காலத்தின் கட்டாயம். குடும்பத்துடன் ஒரு சினிமா பார்த்துவிட்டு ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு வரும் அனுபவம் குடும்ப அங்கத்தினர்களிடையே ஒரு புரிதலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.

அந்தக்காலத்தில் சினிமா தியேட்டர்கள் புதிதாக கட்டும்போது அந்த ஊரில் இருக்கும் தியேட்டர்களைவிட நூதனமாக இருக்கவேண்டும் என்று பல உத்திகளைக் கையாண்டார்கள். கோயமுத்தூரில் திரைப்படத்துறையில் முன்னோடியாக விளங்கிய பிரபல சினிமா புள்ளி திரு. சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார். நகரத்தின் மையத்தில் வெரைட்டி ஹால் என்று ஒரு தியேட்டர் கட்டி வெற்றிகரமாக நடத்தினார். இந்த தியேட்டர்தான் அந்தக்காலத்தில் தென்னிந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் தியேட்டர் என்று சொல்லப்படுகிறது. இங்கு முதலில் ஊமைப் படங்கள்தான் திரையிடப் பட்டிருக்கின்றன. அந்த தியேட்டர் இருந்த ரோடுக்கே வெரைட்டி ஹால் ரோடு என்று பெயர் நிலைத்து விட்டது.

அவர்  ஆர்.எஸ். புரம் பகுதியில் புதிதாக வின்சென்ட் லைட்ஹவுஸ் என்ற பெயரில் 1945-46 ல் ஒரு தியேட்டர் கட்டினார். அதில் பல கலை நுட்ப அலங்காரங்களைப் பயன் படுத்தியிருந்தார். சுவர்களில் பல ஓவியங்கள் வரையப் பட்டிருந்தன. விஸ்வாமித்திரர் மேனகையுடன் சல்லாபித்து பிறந்த குழந்தையை நிராகரிக்கும் காட்சி தத்ரூபமாக திரைக்கு ஒரு பக்கம் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. அலங்கின் பின் சுவற்றில் சாகுந்தலத்திலிருந்து பல காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தன.

இதில் முதல் படமாக நாகையா நடித்த "தியாகையா" என்ற தெலுங்கு படம் திரையிடப்பட்டது. அப்போது எனக்கு 12 வயது. அடுத்த படமாக மிஸ்ஸியம்மா திரையிடப்பட்டது. அதை நான் என் அத்தையுடன் பார்த்தேன். தியேட்டரின் அமைப்பும் அலங்காரங்களும் பிரமிப்பூட்டுவதாக இருந்தன. படமும் மிகவும் உணர்ச்சி வசமான காட்சிகள் நிறைந்த படம். "வாராயோ வெண்ணிலாவே" என்ற பாட்டு இன்றும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாத ஒரு பாட்டு.

அந்தக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சினிமா பார்த்த பிறகு ஏற்படும் ஒரு மன நிறைவு இன்று வெளியாகும் பெரும்பாலான படங்களில் கிடைப்பதில்லை என்பது ஒரு சோகமே.                        



அப்போது கோயமுத்தூரில் 9 தியேட்டர்கள்தான் இருந்தன. அவைகள் ஒவ்வொன்றிலும் வழக்கமாக சில பேனர் படங்கள் மட்டுமே திரையிடப்படும். ஜெமினி படங்கள் ராயல் தியேட்டரிலும் ஏவிஎம் படங்கள் கர்னாடிக் தியேட்டரிலும் வழக்கமாக வெளியாகும். அந்தக் காலத்து சினிமா வியாபாரம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் ஒவ்வொரு பேனர் படங்களுக்கும் வழக்கமாக ஒரே விநியோகஸ்தர்தான் இருப்பார். புரோடியூசர், டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர்காரர், இந்த மூன்று பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது.

வியாபாரத்தில் எந்த சிக்கலும் வந்த மாதிரி எனக்கு நினைவில்லை. அந்தக் காலத்தில் படம் வெளியாகும் தினத்தன்று எல்லா முக்கிய செய்தித் தாள்களிலும் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரம் வெளியாகும். அதுபோக நகரத்தின் முக்கிய பகுதிகளில் விளம்ப பேனர்கள் வைப்பார்கள். இது தவிர முக்கிய வியாபார ஸ்தலங்களில் மூன்றடிக்கு இரண்டடி சைசில் தட்டி பேனர்கள் வைப்பார்கள். இதற்காக அந்த கடைக்காரர்களுக்கு ஒரு ஷோ சினிமா பார்க்க ஒரு பாஸ் கொடுப்பார்கள். அதற்கு "தட்டிப் பாஸ்" என்றே பெயர்.

இது தவிர நான்கைந்து சிறுவர்களை வைத்து ஒரு தள்ளு வண்டி, முக்கோண வடிவில் இருக்கும், அதில் சினிமா போஸ்டர்களை ஒட்டி கோஷம் போட்டுக்கொண்டு முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள். அவர் போடும் கோஷமே அலாதியானது. ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் கோரஸாக அதற்குப் பதில் சொல்லுவார்கள்.

என் நினைவில் இருக்கும் கோஷங்களைக் கூறுகிறேன்.

கேள்வி: கோபாலா
பதில்: ஏன் சார்?

கே: எங்கே போற?
ப:  சினிமாவுக்குப் போறேன்.

கே: என்ன சினிமா?
ப:    மிஸ்ஸியம்மா சினிமா

கே:   எந்த தியேட்டர்ல?
ப:  வின்சென்ட் லேட்ஹவுஸ் தியேட்டர்ல

கே: யாரு நடிக்கிறாங்க
ப:  ஜெமினி கணேசனும் சாவித்திரியும்.

இப்படியாக கோஷம் போட்டுக்கொண்டே அந்த சிறுவர்கள் வீதி வீதியாகப் போவார்கள்.

அப்போது டிக்கட்டுகள் நான்கு வகையாக இருக்கும். தரை, பெஞ்சு, சேர், பாலகனி. அவ்வளவுதான். வின்சென்ட் லைட் ஹவுசில் பாக்ஸ் என்று ஒரு அமைப்பு உருவாக்கியிருந்தார்கள். நான்கு பேர் உட்கார்ந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இது மாதிரி அப்போது எங்கும் இல்லை. ஊர் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

பிற்காலத்தில் ஊர் ஊருக்கு இந்த மாதிரி புது தினுசுகளில் தியேட்டர்கள் வர ஆரம்பித்தன. மதுரை தங்கம் தியேட்டர் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. தூத்துக்குடியில் சார்லஸ் தியேட்டரும் அது போலவே பிரபலமானது.

இப்படியாக தியேட்டர்களும் சினிமாக்களும் வளர்ந்து இன்றைக்கு சினிமாத் தொழில் படு கேவலமாக ஆகி வருவதைப் பார்த்தால்  காலத்தின் தாக்கம் புரிகிறது.

வெள்ளி, 29 மே, 2015

போட்டி உலகில் ஓடியே ஆகவேண்டும்.

                                    
வியாபாரத்திலும் தொழில்துறையிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அடிக்கடி சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் - நீ ஆரம்பத்தில் போட்டிகளைச் சமாளித்து முன்னேற ஓடியிருப்பாய். ஓரளவு முன்னேறிய பிறகு, போதும் இந்த ஓட்டம், இனி கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்று நினைப்பாய். அங்குதான் நீ தவறிழைக்கிறாய்.

இந்தத் துறைகளில் மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஓரளவு முன்னேறிய பிறகு நீ அடைந்த இடத்திலேயே இருப்பதற்கே ஓடித்தான் ஆகவேண்டும். நீ ஓய்வெடுத்தால் உன் போட்டியாளர்கள் வேகமாக ஓடி உன்னை விட முன்னேறி விடுவார்கள். நீ பின்னுக்குத் தள்ளப்படுவாய்.

இந்த உபதேசம் தொழில் துறை, வியாபாரத்துறைக்காரர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்குமே பொருந்தும். அவ்வாறு ஓட முடியாதவர்கள் போட்டியில் பின்தங்கித் தோற்றுப் போவார்கள். இதை நாம் பலவகைகளில் அன்றாடம் பார்க்கிறோம். ஆரம்பத்தில் வெகு ஆடம்பரமாக ஆரம்பித்த நிறுவனங்கள் நாளாக நாளாக அதன் பளபளப்பு குன்றி விடுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

இதை நான் இப்போது இங்கு ஏன் சொல்லுகின்றேன் என்றால் நானும் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். எதைச் சொல்லுகிறேன் என்று புரியும் என்று நம்புகிறேன். தமிழ்மணம் ரேங்க் ஒன்றை அடையவேண்டும் என்று நினைக்கிறேன். அது எங்கே என் கண்ணுக்கே தெரியவில்லை (படத்தைப் பார்க்கவும்). முதல் ரேங்க்கை கட்டாயம் அடைந்துதான் ஆகவேண்டும் என்ற கொள்கை ஒன்றுமில்லை. முடியுமா என்று பார்ப்போம் என்பதுதான் என் எண்ணம்.

இப்போது ஐந்தாவது ரேங்கில் என் தளம் இருக்கிறது. இதற்காக ஓடினது அதிகம். மூளையைக் கசக்கிப் பதிவுகள் போட்டதில் இப்போது மூளை இருக்குமிடமே தெரியாமல் போய்விட்டது. மண் சுவரில் மோதினால் ஏதாவது கொஞ்சம் உடையும். ஆனால் கருங்கல் சுவற்றில் மோதினால் என்ன நடக்கும்? மண்டைதான் உடையும். என்னுடைய தளத்திற்கு மேலே இருப்பவர்களெல்லாம் கருங்கல் சுவர்கள்.

இது வரை எனக்கு ஆதரவு கொடுத்த பதிவர்களுக்கு மிக்க நன்றி.

புதன், 27 மே, 2015

அம்மா என்றழைக்காத உயிரில்லையே...

                                    Image result for ராமர் பட்டாபிஷேகம்
ராம ராஜ்யம் தொடங்கிவிட்டது. பாலும் தேனும் ரோட்டில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடப்போகிறது. மாதம் மும்மாரி பெய்யும். ஆடும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தும். எல்லோருக்கும் மலிவு விலையில் உணவு கிடைக்கும். யாரும் இனி கஸ்டப்பட வேண்டியதில்லை.

அம்மா, அம்மா, அம்மா என்றே ஜபம் செய்து கொண்டு டாஸ்மாக்கில் கிடந்தால் போதும். அனைத்தும் வந்து சேரும்.

இந்தப் பாட்டை மட்டும் கேட்கத்தவறாதீர்கள்.





இந்தப் பதிவை குதர்க்கமாகப் பார்ப்பவர்கள் அம்மாவின் சாபத்திற்கு ஆளாவார்கள்  என்று எச்சரிக்கிறேன்.

திங்கள், 25 மே, 2015

ஆனந்தம் என்றால் என்ன?

                                        Image result for குண்டலினி சக்தி
இவ்வுலகில் இன்பத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அதே போல் துன்பத்தை வெறுக்காதவர்களும் யாரும் இல்லை. வாழ்க்கையின் குறிக்கோள் இந்த இரண்டு மட்டுமே என்று ஆகிப்போனது. சம்ஸ்கிருதத்தில் இதையே "சுகப்பிராப்தி, துக்க நாஸ்தி" என்று சுருக்கமாகச்
சொல்லுகிறார்கள்.

படிப்பதற்கும் கேட்பதற்கும் இது எவ்வளவு எளிமையாகத் தோன்றுகிறது. ஆனால் நடைமுறையில் எல்லோராலும் இந்த நோக்கத்தை அடைய முடிகிறதா? இல்லையே? ஏன்?

இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடித்தான் எல்லோரும் அலைகிறோம். எனக்கு மட்டும் இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருந்தால் நான் இன்று உலகத்திற்கே ராஜாவாக இருப்பேன். ஆனால் என்னுடைய நல்ல காலமோ கெட்ட காலமோ, அந்த விடை தெரியவில்லை. வீட்டிற்கு ராஜாவாகவே முடியவில்லை. உலகத்திற்கு ராஜாவாகிறாராம் என்று வீட்டுக்காரி வேறு முனகுகிறாள்.

இருக்கட்டும். விடை எங்கே கிடைக்கும் என்றாவது யோசிப்போம்.

ஆன்மீகவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் "நீ உன்னை அறிந்தால் சுக-துக்கம் இரண்டையும் ஒன்றாக உணர்வாய்" என்கிறார்கள். அதாவது நீ என்பது ஆத்மா. ஆத்மா வேறு. அநாத்மா (அதாவது உன் உடல்) வேறு, அதனால் உன் உடலுக்கு ஏற்படும் சுக துக்கங்களுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை,

இதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு ஜன்மம் போறாது. முதலில் ஆத்மா என்றால் என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும். பிறகு ஆத்மா வேறு அநாத்மா வேறு என்பதை உணரவேண்டும். பிறகு சுகதுக்கங்கள் நம்முடையவை (அதாவது ஆத்மாவினுடையவை) அல்ல. அவை அநாத்மாவினுடையவை என்று புரியவேண்டும்.

தலைவலி வந்து விட்டால் அது யாருக்கோ வந்திருக்கிறது, நமக்கென்ன என்று இருக்கவேண்டும். ஆத்மாவை உன் உடலிலிருந்து ஐந்தடி உயரத்தில் இருப்பதாக பாவனை செய்துகொள். அப்போது நீ உன் உடலை தனியாக ஒரு இடத்தில் இருந்து பார்க்கிறாய். அப்போது உன் உடலுக்கு ஏற்படும் எந்த உணர்வும் உன்னைப் பாதிக்காது அல்லவா?

இப்படி யாரும் இதுவரை செய்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் இதைக் காலம் காலமாய் நிஜ சாமியார்களும் போலி சாமியார்களும் சொல்லிச் சொல்லியே காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்யக்கூடிய சக்தி உங்களில் யாருக்காவது இருந்து நீங்கள் (அதாவது உங்கள் ஆத்மா) உடலிலிருந்து ஐந்தடி மேலே போனால் அவ்வளவுதான், மின் மயானத்திற்கு உங்கள் அநாத்மாவைக் கொண்டு போய் தகனம் செய்து விடுவார்கள்.

ஆகவே இந்த உபாயம் நமக்கு உதவாது. வேறு ஏதாவது உபாயங்க்ள இருந்தால் இதைப் படிக்கும் அன்பர்கள் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அதுவரை சுகம் வரும்போது ஆனந்தத்தையும் துன்பம் வரும்போது துக்கத்தையும் அனுஷ்டிக்கவும்.

சனி, 23 மே, 2015

உடல், மனசு, அறிவு

நான் யார், நீ யார், இப்படி மக்கள் திலகம் ஒரு படத்தில் பாடினார்.



நம் ஆன்மீக வாதிகளும் இதை வைத்தே பிழைப்பை ஓட்டுகிறார்கள்.



உடல் வேறு, மனசு வேறு, புத்தி வேறு என்று யாராவது சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள். உடல் இருந்தால்தான் மனசு இருக்கும். மனசில்தான் புத்தி இருக்கிறது. மூன்றும் ஒன்றேதான். வீணாகக் குழப்பிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்.

வியாழன், 21 மே, 2015

ஐயோ பணம் போச்சே?

                                       Image result for atm machine

நமது பேங்குகள் நமக்குச் செய்து தந்திருக்கிற பல வசதிகளுக்கு நாம் அவர்களுக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறோம். நாம் போடும் பணத்தை பத்திரமாக வைத்திருந்து நாம் கேட்கும்போது வட்டி சேர்த்துக்கொடுப்பது சாதாரண சேவையா என்ன?

ஆனால் இதைவிட சூப்பர் சேவை ஒன்று அவர்கள் செய்து வருவது பல பேருக்குத் தெரியாமலிருப்பது பெரிய துரதிர்ஷ்டம். பத்து வருடத்திற்கு முன்பு இந்த சேவை எனக்குத் தெரிந்திருந்தால் நான் இப்போது ஸ்விஸ் பேங்கில் கணக்கு துவங்கி இருப்பேன். எனக்கு அதிர்ஷ்டமில்லை.

ஏடிஎம் மிஷின்களைப் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அதில் நமது ஏடிஎம் அட்டையை சொருகினால் அந்த மிஷின் நம்முடைய பேங்கிற்குப் போய் (அந்த பேங்க் டிம்பக்டூவில் இருந்தாலும் சரி) நம் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்து நாம் கேட்கும் தொகை இருந்தால் அந்தப் பணத்தை நமக்குக் கொடுக்கிறது. இது எப்பேர்ப்பட்ட குறளி வித்தை என்று நமக்குத் தோன்றுகிறது.

அப்போ, பேங்கில் இருக்கும் அதிகாரிகளுக்கு அந்த ஏடிஎம் மிஷினில் ஒரு சமயத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சுலபமாகக் கண்டுபிடிக்கலாம் அல்லவா? அப்படியானால் மாதத்திற்கு ஒரு முறை அந்த மிஷினில் எவ்வளவு பணம் வைத்தார்கள், எவ்வளவு பணம் வாடிக்கையாளர்களால் எடுக்கப்பட்டது, இப்போது மீதி எவ்வளவு பணம் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஒரு விரல் சுட்டில் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

அப்படி இருக்கும்போது இன்றைய செய்தித் தாட்களில் ஏடிஎம் மிஷினில் வைத்த பணம் காணாமல் போயிற்று என்று ஒரு செய்தி பிரசுரமாயிற்று. இந்த மிஷின்களில் பணம் வைக்க ஒரு தனியார் நிறுவனத்தை இந்த பேங்குகள் நியமித்திருக்கின்றன. அதில் மேற்பார்வையாளராக வேலை செய்யும் ஒருவரே அதிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை எடுத்திருக்கிறார். இது நான்கு வருடங்களாக நடந்து வருகிறதென்று செய்தித்தாள்களில் போட்டிருக்கிறது.

அப்படியானால் நான்கு வருடங்களாக இந்த ஏடிஎம் மிஷின்களின் கணக்கு வழக்குகளை பேங்கில் இருந்து யாரும் சரி பார்க்கவில்லை என்று தெரிகிறது. இந்த விஷயம் தெரியாமல் போய்விட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தெரிந்திருந்தால் நானும் இந்த பணம் வைக்கும் தனியார் கம்பெனியில் சேர்ந்து, எப்படியாவது சூபர்வைசராகி, ஏடிஎம் மிஷின்களிலிருந்து பணம் எடுத்து ஸ்விஸ் பேங்க்கில் கணக்கு ஆரம்பித்திருப்பேன்.

எனக்கு அதிர்ஷ்டமில்லை. 

ஞாயிறு, 17 மே, 2015

ஏழைகளின் ஊட்டி

           
                      Image result for ஊட்டி சுற்றுலா இடங்கள்

அந்தக் காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் சொன்னது: "கோயமுத்தூர் ஏழைகளின் உதகமண்டலம்". இது அன்று உண்மையாக இருந்தது. நான் ஹைஸ்கூலில் படித்த காலத்தில் கோடை விடுமுறையின் போது பகல் முழுவதும் நண்பர்களுடன் வெளியில்தான் சுற்றிக்கொண்டு இருப்போம்.

அப்போதெல்லாம் வானம் மேகமூட்டமாகவே இருக்கும். வெயிலின் தாக்கமே தெரியாது. அவ்வப்போது கோடை மழை பெய்யும். காடை மழை என்றால் அன்று பகல் முழுவதும் கொஞ்சம் வெயில் கடுமையாக இருக்கும். மாலை நான்கு அல்லது நான்கரை மணி வாக்கில் வானத்தில் மேகங்கள் கருகும்மென்று சேர்ந்து விடும். சடசடவென்று பலத்த மழை வரும். ஒரு அரை மணி நேரம் பெய்யும். பிறகு சடாரென்று நின்று விடும். வானம் வெளுத்து நிர்மலமாகி விடும்.

ஒவ்வொரு சமயம் ஆலங்கட்டி மழையும் பெய்யும். சமீப காலத்தில் ஆலங்கட்டி மழையையே நான் பார்க்கவில்லை. என் பேரன்களுக்கெல்லாம் ஆலங்கட்டி மழை என்றால் எப்படியிருக்கும் என்றே தெரியாது.

அப்போது ஒரு தென்றல் வீசும் பாருங்கள். குளுகுளுவென்று, அப்படியே சொர்க்க லோகம் போல் இருக்கும். வீதிகளில் மழைத் தண்ணீர் ஆறு போல ஓடும். அதில் காகிதக் கப்பல்கள் விடுவோம். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் எல்லாம் சுத்தமாக வடிந்து விடும். மழை நீர்க்கால்வாய்கள் அப்படிப் பராமரிக்கப்பட்டு இருந்தன.

எப்போது கோயமுத்தூர் கோவை என்றாகி, உதகமண்டலம் உதகை என்றாகியதோ அப்போதிலிருந்து கோடை மழை பெய்வது நின்று விட்டது. கோடை காலத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக ஆரம்பித்தது. மழை குறைந்து விட்டது.

ஆனால் இந்த வருடம் அதிசயமாக கோவையில் கடந்த 20 நாட்களாக தினமும் மழை வருகிறது. அந்தக்காலத்துக் கோடை மழை மாதிரி இல்லை. மான்சூன் மழை மாதிரி சிணுங்கிக்கொண்டே இருக்கிறது. சில சமயம் பலமாகப் பெய்கிறது. ஆனால் பெரும்பாலும் தூறல்தான். எப்படியோ கோவை இப்போது குளுகுளுவென்று ஊட்டி மாதிரி இருக்கிறது. வெள்ளைக்கார்ன் வார்த்தை பலிக்கிறது.

மழை பலமாகப் பெய்தால் கோவையில் பல ரோடுகளில் ஆறுகள் ஓடுகின்றன. மழை நீர்க்கால்வாய்கள் அவ்வளவு நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. என்ன செய்வது?

பகலிலேயே குளிருகிறது. சட்டை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இரவில் போர்வை போர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது கத்திரி வெயில் காலம். மற்ற ஊர்களில் வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால் கோவையில் நாங்கள் ஊட்டியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உட்டியில் இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. ரோடுகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பாதைகள் பல மணி நேரம் அடைக்கப்படுகின்றன.

ஊட்டியில் மழை பெய்தால் மனிதன் அங்கே இருக்கமுடியாது. அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லாம் யார் என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் எல்லாம் காட்டு வாசிகள். அவர்களுக்கு வெயிலும் ஒன்றுதான் மழையும் ஒன்றுதான். அவர்கள் ஒரு போர்வையை மடித்து தலைக்குப் போட்டுக்கொண்டு அவர்களின் வழக்கமான வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பாரகள். நாம் போனால் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு ரூமிலேயே அடைந்து கிடக்கவேண்டியதுதான்.

ஆகவே இந்த வருடம் ஊட்டிக்கு புரொக்ராம் போட்டிருந்தவர்கள் எல்லோரும் கோவைக்கு வந்து விடவும். உங்கள் சௌகரியத்திற்காக ஊட்டியையே கோவைக்கு வரவழைத்திருக்கிறோம். 

வெள்ளி, 15 மே, 2015

கட்டுப்பாட்டை இழந்து...

                                   Image result for road accidents in india
"ஒரு நான்கு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருக்கும் புளிய மரத்தில் மோதி அந்த வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் மரணமடைந்தார்கள்" என்று வைத்துக்கொள்வோம். எனக்கு இப்படி வைத்துக்கொள்வதில் விருப்பமில்லைதான். ஆனாலும் செய்தித்தாள்களில் இந்த மாதிரி செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதைப் படிக்காமலும் இருக்க முடியவில்லை. அந்த வாகனத்தில் நான் பயணிக்காததால் எனக்கு ஒன்றும் நஷ்டமுமில்லை.

ஆனாலும் நானும் ஒரு நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பதால் இந்த செய்தியைப் பற்றிய கற்பனை என் மனதில் ஓடத்தான் செய்கிறது. இந்த செய்தியைப் பிரசுரிக்கும் செய்தித்தாள்கள் வழக்கமாக உபயோகிக்கும் சொற்றொடர் என்னவென்றால் "அந்த வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து etc.etc." என்பதாகும்.

உடனே என் மனது நினைப்பது என்னவென்றால், சில வீடுகளில் வயதுப் பையன்கள் பெற்றவர்கள் பேச்சைக் கேட்காமல் கட்டுப்பாட்டை இழந்து கெட்டுப்போகும் நிகழ்ச்சிகள்தான். இந்த மாதிரி பையன்கள் ஆறறிவு கொண்டவர்கள். உலகில் நல்லது கெட்டது எது என்பதைப் பகுத்தறியக்கூடியவர்கள். சகவாச தோஷத்தினாலோ அல்லது அவர்களின் மூளையில் எங்காவது ஒரு ஸ்குரூ கழண்டு போனதாலோ இவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வராமல் தறி கெட்டுப்போகிறார்கள் என்று நினைப்பேன்.

செய்தித்தாள்களில் இவ்வாறு "வாகனங்கள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" என்ற செய்தி வரும்போதெல்லாம் எனக்கு இந்தப் பையன்களின் நினைவுதான் வரும். ஓஹோ, அந்த வாகனத்திற்கு மனது ஒன்று இருந்திருக்கிறது போலும், அது திடீரென்று இனிமேல் ஓட்டுனர் சொல்கிறதைக் கேட்கக்கூடாது என்று முடிவு செய்து ஓடிப்போய் புளிய
மரத்தில் மோதியது போலும் என்று என் கற்பனை ஓடும்.  

இப்படி ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் மனது இருந்து அவைகள் எல்லாம் தங்கள் தங்கள் மனது போல் ஓட ஆரம்பித்தால் எப்படியிருக்கும் என்றும் என் கற்பனை விரிவதுண்டு.

பிறகு ஆழமாக யோசித்த பிறகு என்ன நடந்திருக்கும் என்று ஒருவாறு யூகிக்க முடியும். இப்போது சந்தைக்கு வரும் வாகனங்களில் பல SUV என்று சொல்லப்படும் வாகனங்களாகும்.   An SUV, or sport utility vehicle, is an automotive that is defined by its capabilities. It is rugged; it combines passenger-carrying with cargo-hauling capability in a two-box design with an enclosed cargo/passenger compartment, as opposed to an open cargo compartment like a pickup truck.

இவை அதிக சக்தி கொண்ட இன்ஜின்களுடன் நூதன கட்டுப்பாட்டு சாதனங்களுடன் வருகின்றன. இவைகள் நன்றாகப் போடப்பட்டிருக்கும் ரோடுகளில் 150-160 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. இந்த வேகத்தில் ஒரு வாகனத்தை ஓட்டுபவர் மிக மிகத் திறமைசாலியாக இருக்கவேண்டும். ரோட்டிலும் வாகனப் போக்குவரத்தோ வேறு குறுக்கீடுகளோ இருக்கக்கூடாது.

ஆனால் நம் ஊரில் நேராகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி எந்த விதமான சைகைகளும் செய்யாமல் வலது பக்கம் திரும்புவான். ஆடு மாடுகள், நாய், பூனை ஆகிய நான்கு கால் பிராணிகளும் மற்றும் இரண்டு கால் பிராணிகளும் ரோடின் குறுக்கே திடீரென்று பாய்வார்கள். இப்படிப்பட்ட ரோடுகளில் 150 கிமீ வேகத்தில் செல்லாம் வாகனத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நல்ல அனுபவமுள்ள ஓட்டுனர்கள் ரோடில் எதிர்பாரமல் குறுக்கீடுகள் வரலாம், அப்படி வந்தால் என்ன செய்யவேண்டும், நாம் ஓட்டும் வாகனத்தை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்  என்று எப்பொழுதும் ஒரு ஜாக்கிரதை உணர்வுடன் வாகனம் ஓட்டுவார்கள். அப்படி அனுபவம் இல்லாத ஓட்டுனர்கள் இந்த மாதிரி சக்தி வாய்ந்த வாகனங்களை ஓட்டும்போது அவர்கள் தன்னிலை மறந்து விடுகிறார்கள்.

ஓட்டுனர்கள் ஒரு வாகனத்தில் அமர்ந்து ஓட்டும்போது அந்த வாகனத்தின் சக்தியில் ஒரு பங்கு அவர்களுக்குள் பாய்ந்து விடுகிறது. சாதாரண ஆற் கூட தன்னை ஒரு சூப்பர்மேன் ஆக உணறுகிறான். ஆக்சிலரேட்டரை அழுத்தினால் அந்த வாகனம் சீறிப்பாயும்போது அவனுக்குள் ஒரு போதை ஏற்படுகிறது. இன்னும் கொஞ்சம் வேகமாகப் போகலாமே என்று தன்னை அறியாமல் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. 

இந்த  SUV வாகனங்கள் அதிக சக்தி கொண்டவைகளாதலால் இவனுடைய உத்வேகத்திற்கு அது ஈடு கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் அது போகும் வேகத்தில் அந்த வாகனத்தைக் கட்டுப்படுத்த இவனால் முடிவதில்லை. வாகனம் புறிய மரத்தில் மோதுகிறது. அல்லது முன்னே மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனத்தின் மேல் மோதுகிறது, அல்லது ரோட்டின் நடுவில் இருக்கும் தடுப்புச்சுவற்றைத் தாண்டிக்குதித்து அந்தப் பக்கம் எதிரே வரும் வாகனங்களுடன் மோதுகிறது.

இந்த சூழ்நிலைகளில் எல்லாம் தவறு வாகன ஓட்டியிடம்தான். ஆனால் செய்தித்தாள்கள் சொல்வது "வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" என்றுதான். கல் தடுக்கு விட்டது என்று சொல்வது போல்தான். கல்லா உன் காலைத்தேடிவந்து தடுக்கியது? நீ கல்லைக் கவனிக்காமல் போய் அதன் மேல் இடித்து விட்டு கல்லைக் குறை சொல்வது போல்தான்.

ஆனால் உலக வழக்கம் இதுதான். தன் தப்பை மறைக்க அடுத்தவன் பேரில் பழியைப் போடுவது காலம் காலமாத நடந்து வருவதுதான். ஆனால் விபத்து நடந்து முடிந்து உயிர் போன பிறகு யார் பேரில் பழியைப்போட்டு ஆகப்போவதென்ன? போன உயிர் போனதுதானே?

புதன், 13 மே, 2015

கடவுளைக் கண்டேன்.

                              Image result for ரூபாய் நோட்டுகள்

என்னால் எந்த விஷயத்தையும் விரிவாக எழுத முடிவதில்லை. இளம் வயதிலிருந்தே அப்படி பழகிவிட்டது. இப்போது, இந்த வயதுக்கு மேல் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

கடவுள் இல்லை என்று மறுப்போரும் கடவுளை இது வரையில் நான் கண்டதேயில்லை என்போருக்கும் ஒரு நற்செய்தியாக இரண்டு நாள் முன்பாக கடவுள் காட்சியளித்தார்.அதைக் கண்டவர்கள் புண்ணியாத்மாக்கள். காணாதவர்கள் பாபிகள்.

நான் கண்டேன். தத்ரூபமாகக் கண்டேன். எனக்கு கடவுள் பணரூபத்தில் காட்சி அருளினார். இனி என் பூஜை அலமாரியில் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைத்துக் கும்பிடப்போகிறேன்.