புதன், 7 அக்டோபர், 2015

நெல்லை பதிவர் சந்திப்பு

இது ஒரு மீள்பதிவு


நெல்லை பதிவர்கள் சந்திப்பு

திரு.சங்கரலிங்கத்திற்கு ஒரு ஜே!

நெல்லைப் பதிவர் சந்திப்புக்குப் போய் வந்தேன். திரு சங்கரலிங்கம் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார். திருமதி சித்ரா சாலமன் உறுதுணையாய் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து இந்த சந்திப்புக்காகவே வந்திருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பு தனியாக வெளியிடப்படும். இந்தப் பதிவு ஒரு ஆஜர் சொல்வதற்காக மட்டுமே.


என்னுடைய பயண ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.

திரு சங்கரலிங்கம் பதிவர்களை வரவேற்கிறார்.


பலாச்சுளை சங்கர் அவர் கருத்துகளைக் கூறுகிறார்.
(நெல்லையிலிருந்து புறப்படும்போது பலாச்சுளை வாங்கிச் சாப்பிட்டேனா, அந்த ஞாபகத்தில் பலாபட்டறைக்குப் பதிலாக பலாச்சுளை என்று பதிவிட்டுவிட்டேன். திரு. சங்கர் மன்னிக்வேண்டும்.)



இந்த பதிவர் சந்திப்பின் முழு விவரங்கள் அறிய திரு சங்கரலிங்கம் அவர்களின் தளத்தைப் பார்க்கவும்.

பதிவர் சந்திப்புகள் - ஈரோடு - 2011

ஈரோட்டில் பதிவர் சந்திப்பு 2009. 2010, 2011 ஆகிய மூன்று வருடங்கள் மிக சிறப்பாக நடைபெற்றன. முதல் சந்திப்பிற்கு நான் போகவில்லை. அடுத்த இரண்டு சந்திப்புகளுக்கும் நான் சென்று வந்தேன்.

இதற்கு முன்பு சென்னைப் பதிவர்கள் மாதம் ஒரு முறை கடற்கரையில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்று "டோண்டு ராகவன்" பதிவுகளிலிருந்து கேள்விப்பட்டிருக்கிறேன்.

2012 ம் ஆண்டு புலவர் திரு ராமானுஜம் ஐயா அவர்களின் முயற்சியில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. இதுதான் முதல் பதிவர் சந்திப்பு என்று பலர் தவறாக எண்ணுக்கொண்டிருக்கிறார்கள். ஈரோட்டில் 2009 ம் ஆண்டே பதிவர் சந்திப்பு ஆரம்பித்து விட்டது.

திருநெல்வேலியில் உணவு ஆபீசர் முயற்சியில் ஒரு பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. நான் கலந்து கொண்டேன். இதைப் பற்றிய என் பதிவை நாளை மீள்பதிவாகப் போடுகிறேன்.

2013ம் ஆண்டு சென்னையில் இரண்டாவத் தடவையாக பதிவர் சந்திப்பு நடந்தது. நான் கலந்து கொண்டேன்.

போன வருடம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு நான் செய்த ரயில் டிக்கட் ரிசர்வேஷன் குளறுபடியால் போகவில்லை.

இந்த வருடம் புதுக்கோட்டைக்குப் போக எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன்.

இப்போது நான் கலந்து கொண்ட ஈரோடு பதிவர்கள் சந்திப்பைப்பற்றிய என்னுடைய பதிவை இங்கு மீள் பதிவாகப் போடுகிறேன்.

ஈரோடு பதிவர் சங்கமம் 2011

பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். (மாலை 4.30). இருநூறு பேருக்கு மேல் பதிவர்கள் மற்றும் இணைய ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். இணையத்தில் சீரிய முறையில் பணியாற்றிய பதினைந்து பதிவர்களை பரிசு கொடுத்து மேடையில் அமர்த்தி அவர்களுடைய சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான தலைமையுரை ஆற்றினார்கள்.

நான் எடுத்த சில புகைப்படங்கள்.
(படங்களை கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்.)

கூட்டம் நடந்த ஹால்-






விருந்தினரின் ஒரு பகுதி-வலது ஓரத்தில் சிகப்பு ஜிப்பாவுடன் இருப்பவர்தான் பிரபல பதிவர் "தருமி" அவர்கள்.



வரவேற்புரை-




ஈரோடு கதிர் (விழா நாயகன்) சிறப்பு பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்-


சிறப்பு பதிவர்கள் மேடையில்


தலைமையுரை - ஸ்டாலின் குணசேகரன்


செயலாளர் பாலாஜி நன்றி கூறுகிறார்


இனி நம்ம ஐட்டங்கள்.

காலை டிபன் - நான் சாப்பிட்ட இட்லிகளும் பூரிகளும்.




சீனா அய்யாவும் ஜாக்கி சேகரும்


மதிய உணவு-

சைவம்


நம்மோடது


தமிழ்நாட்டின் மூத்த பதிவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.(நடுவில் இருப்பவர்) போனால் வராது.


அனைவருக்கும் வணக்கம். விவரங்கள் அதிகம் வேண்டுமென்பவர்கள் கதிர் பதிவு போடும் வரை பொறுத்திருக்கவும்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

ஈரோடு பதிவர் சங்கமம் 2010

இது ஒரு மீள்பதிவு. புதுக்கோட்டைக்காரர்களை இப்படியெல்லாம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தும் பதிவல்ல.


இது ஈரோட்டில் நடந்த இரண்டாவது பதிவர் சங்கமம். முதல் சங்கமத்திற்கு நான் போகவில்லை. காரணம் அப்போதுதான் நான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்த புதிது.

ஈரோடு பதிவர் சங்கமம் - 2010



ஈரோடு பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு வந்தேன். விழாவைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் = விழா வெற்றி, மாபெரும் வெற்றி, வரலாறு காணாத வெற்றி, பதிவுலக சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. அவ்வளவுதானுங்க.

விரிவாக எழுதுவதற்கு முன்பாக எனக்குப்பிடித்ததைப்பற்றி முதலில் எழுதுகிறேன்.

செவிக்குணவு இல்லாத போழ்தில் சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.

செவிக்குணவு இன்னும் ஜீரணமாகவில்லை. ஆகவே அதை அப்புறம் பார்ப்போம்.

வயிற்றுணவைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். பாருங்க. எழுத்தெல்லாம் எதுக்குங்க?

காலை சிற்றுண்டி களம் ?


முட்டைல என்னென்னமோ பார்த்திருப்பீங்க. முட்டை பூரிய பார்த்திருக்கீங்களா?


மதிய உணவு. இடமிருந்து வலமாக மூன்றாவது இருப்பதுதான் உலகிலேயே தலை சிறந்த பதிவர் ( நான்தானுங்க அது, ஹிஹீஹி..)


நாமக்கல்லில் ஒரு கோழிப்பண்ணையே காலி !

ஆனாப் பாருங்க, மீட்டிங் முடியறதுக்குள்ள அத்தனையும் ஜீரணமாகிட்டுதுங்க. புறப்படறப்ப கொஞ்சம் ஊட்டுக்கு கட்டிட்டிப் போலாம்னு பாத்தா சமையலறைல எல்லாத்தையும் கழுவிக் கமுத்துட்டுப் போயிட்டாங்க. நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான். ஆனா பாருங்க, அடுத்த வருஷம் உஷாரா மொதல்லயே பார்சல் பண்ணீடுவமில்ல !

திங்கள், 5 அக்டோபர், 2015

ஞானாலயா நூல் நிலையம், புதுக்கோட்டை

                                                    Image result for ஞானாலயா நூல் நிலையம், புதுக்கோட்டை

ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன்னுடைய தனி முயற்சியினால் ஒரு நூல் நிலையம் உண்டு பண்ணி பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் அருந்தொண்டு ஆற்றி வருவது பதிவர்கள் அனைவரும் அறிந்ததே.

வருகிற 11-10-2015 அன்று புதுக்கோட்டையில் நடக்கும் பதிவர் சந்திப்பிற்கு வரும் பதிவர்கள் தங்களிடம் உள்ள, அவர்களுக்கு இனிமேல் தேவைப்படாத புத்தகங்களைக் கொண்டு வந்தால் பெற்றுக்கொள்வார்களா எனத்தெரிந்தால், பதிவர்கள் தங்களிடம் அதிகப்படியாக இருக்கும் புத்தகங்களை கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இது சம்பந்தமாக திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை யாராவது தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

எந்த மாதிரியான புத்தகங்களைப் பெற்றுக் கொள்வார்கள்? பதிவர் சந்திப்பு நிகழும் மன்றத்திற்கு யாரையாவது நியமித்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா?  இந்த விவரங்களும் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

சனி, 3 அக்டோபர், 2015

விழாக்களும் தவறுகளும்





நேற்று (2-10-2015) கிருஷ்ணகிரியில் நான் இணைந்திருக்கும் ஓய்வு பெற்ற விவசாய வல்லுனர்கள் சங்கத்தின் ஆண்டு மகாநாடு நடந்தது. என்னையும் சேர்த்து சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் சங்க உறுப்பினர்கள் மகாநாட்டு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் நன்றாகத் திட்டமிட்டு செயல் புரிந்தனர்.

ஆனாலும் விழா நடக்கும்போது நான் கண்ட சில குறைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன். இந்த தவறுகள் நமது பதிவர் மகாநாட்டிலும் ஏற்படலாம். இவைகளைத் தவிர்க்காவிட்டால் விழாவின் பெருமை கெடும் என்று கருதுகிறேன்.

வருகைப் பதிவு செய்த கல்லூரி மாணவிகள்
1.  ஒலி பெருக்கி ஏற்பாடுகள்

மகாநாடு ஒரு கல்யாண அரங்கில் நடைபெற்றது. அந்த அரங்கில் 1000 பேர் இருக்க முடியும். எங்கள் சங்க உறுப்பினர்கள் 350 பேர்கள் வந்திருந்தார்கள். ஏறக்குறைய அரங்கின் முக்கால் பங்கு நிறைந்திருந்தது. ஒலி பெருக்கி ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் அதன் தரம் மிகவும் மோசமாக இருந்தது. மேடையில் பேசுபவர்களின் பேச்சு ஒருவருக்கும் தெளிவாகக் கேட்கவில்லை.

ஒலி பெருக்கிகள் நல்ல தரம் வாய்ந்தவைகளாக இல்லாவிட்டால் விழாவில் கலந்து கொள்பவர்கள் விழா நிகழ்வுகளை சரியாக அனுபவிக்க இயலாமல் போகும்.

                                 

2. மூத்த உறுப்பினர்களைக் கௌரவித்தல்.

இதற்காக மிகவும் பொருட் செலவில் ஒவ்வொருவரின் பெயர் பொரித்த நினைவுப் பொருள் தயார் செய்து அவைகளை மேடையில் அலங்காரமாக வைத்திருந்தார்கள். அவைகளைக் கொடுப்பதற்காக  அந்த பெயர்களைப் படிக்கும்போது அவர்களில் பலர் கூட்டத்திற்கு வரவில்லை என்று தெரிந்தது. வந்திருந்தவர்களும் அரங்கின் பல இடங்களில் உட்கார்ந்திருந்தபடியால் இந்த நிகழ்ச்சியில் குழப்பமும் காலதாமதமும் கணிசமாக ஏற்பட்டது.

பரிசுப்பொருட்களையும் சரியாக அடையாளம் கண்டு காலதாமதமில்லாமல் எடுத்துக்கொடுக்க சுறுசுறுப்பானவர்களாகவும் சமயோசித புத்தி கொண்டவர்களுமான சிலரை மேடையில் இருக்க வைக்கவேண்டும்.


பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி
                                   
பரிசுகள் வாங்குபவர்களை முதலிலேயே கணக்கு எடுத்து அவர்களின் பெயர்களை மட்டும் படித்தால் நல்லது. தவிர அந்த பரிசு வாங்குபவர்களை அடையாளம் கண்டு முதலிலேயே மேடைக்குப் பக்கத்தில் அமர வைத்தால் வரிசையாக அவர்கள் வந்து பரிசு வாங்கிக்கொண்டு போக ஏதுவாக இருக்கும். இதை சரியாக திட்டமிடாவிட்டால் குழப்பமும் நேர விரயமும் மிஞ்சும். பரிசு பெற்ற, விழாவிற்கு வராத பதிவர்களின் பெயர்களை கடைசியில் ஒன்றாக வாசித்து விடலாம்.

3. கூட்டத்தினர் அமைதியாக இருக்கவேண்டியதின் அவசியம்.

எந்த ஒரு விழாவானாலும் சில, பல பிரபலங்களைக் கூப்பிட்டு மேடை ஏற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போதுதான் விழாவிற்கு ஒரு களை கட்டும். அப்படிக் கூப்பிட்டு மேடையில் இருக்கும் பிரபலங்களுக்கு நாம் செய்யும் மரியாதை அவர்கள் பேசும்போது அமைதியாக இருந்து அவர்கள் பேசும் பேச்சைக்கேட்பதே.

எங்கள் விழாவிற்கு வந்திருந்த பலர் தங்கள் நண்பர்களை பல நாட்கள், ஏன் பல வருடங்கள் கழித்து சந்திக்கின்றார்கள். அவர்களுடன் அளவளாவ வேண்டுமென்ற ஆவல் கட்டாயம் இருக்கும். ஆனால் அப்படி அளவளாவ விழா அரங்கு தகுந்த இடமல்ல. கூட்டத்தில் சிறுசிறு குழுக்களாக பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தால் மேடையில் பேசும் பேச்சாளருக்கு எப்படியிருக்கும்?

பதிவர்கள் சந்திப்பு அரசியல் கூட்டம் அல்ல. அரசியல் கூட்டங்களில் என்ன சலசலப்பு இருந்தாலும் பேச்சாளர்கள் அதைக் கண்டுகோள்ளாமல் பேசிக்கொண்டே போவார்கள். ஆனால் ஒரு படித்தவர்கள், பண்பாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் இப்படி சளசளவென்று பேசிக்கொண்டிருந்தால், பேசுபவருக்கு எப்படியிருக்கும்? அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?

நான் கலந்து கொண்ட எங்கள் சங்க மகாநாட்டில் விழா நிகழ்ச்சிகளின்போது ஒரே சந்தை இரைச்சல். மேடையில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்று தெரியாத அளவிற்கு சத்தம். பலமுறை மைக்கில் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது. ஆனால் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள். வயதானால் ஒருவன் மீண்டும் குழந்தையாகிறான் என்று கேட்டிருக்கிறோம். அதை நேற்று நான் கண்ணாரக் கண்டேன். அனவரும் குழந்தைகளை போல் இரைச்சல் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நான் பதிவர்கள் மகாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு விடுக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், விழா நிகழ்ச்சிகளின்போது முழு அமைதி காக்கவேண்டும். பல பெரிய அதிகாரிகளையும் பேச்சாளர்களையும் அழைத்து மேடையில் அமர்த்தி விட்டு அவர்கள் பேசும்போது அரங்கில் இரைச்சலாக இருந்தால் பதிவர்களின் பேரில் அவர்களுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்?

அது தவிர விழாக் குழுவினர் இந்த சமயத்தில் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்பதையும் சிறிது கற்பனை செய்து பாருங்கள். நாம் கலந்து கொள்ளப்போவது திருமண விழா அல்ல. சக பதிவர்களைப் பார்த்ததும் மெய் மறந்து அவர்களுடன் அளவளாவ வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அந்த ஆவலை சாப்பிடும்போதோ அல்லது தேநீர் அருந்தும்போதோ நிறைவேற்றிக்கொள்ளலாம்.

அல்லது முதல் நாளே புதுக்கோட்டைக்கு வருபவர்கள் 10 ம் தேதி மாலை விழா அரங்கிற்கு வந்து விட்டால் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டு அளவளாவ சௌகரியமாக இருக்கும்.

4. தேனீர் கொடுத்தல்.

விழா நடக்கும்போது எக்காரணம் கொண்டும் தேனீர் விநியோகிக்கக் கூடாது. இது எப்படியும் சலசலப்பைத் தோற்றுவித்து விழாவின் போக்கை கெடுக்கும். இந்த தேனீர் விநியோகம் அதற்கென்று தனிப்பட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் கொடுப்பதுதான் உசிதம்.

5. பதிவர்களின் கடமை.

இந்த விழா பதிவர்களாகிய நாம் நடத்தும் விழா. திரு. முத்து நிலவன் தனிப்பட்டு நடத்தும் சொந்த விழா அல்ல. அவர் முன்னின்று விழா ஏற்பாடுகளை நமக்காகச் செய்கின்றார். இந்த விழாவில் பதிவர்களின் பெருமை அடங்கியிருக்கிறது. பதிவர்களாகிய நாம் மற்றவர்களைவிட மேம்பட்ட அறிவாளிகள் என்ற இறுமாப்புடன் வலம் வருகிறோம். அப்படி நினைக்கும் நாம் நடந்து கொள்ளும் பாங்கு அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமல்லவா? இதை பதிவர் மகாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

புதன், 30 செப்டம்பர், 2015

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு திருவிழா – சில குறிப்புகள்.

                    Image result for விழாக்கள்
எனக்குத் தெரிந்த சில குறிப்புகளை இங்கே, விழா அமைப்பாளர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

       1.  வரவேற்பும் தங்குவதற்கு ஏற்பாடும்:

இது பற்றி தீவிரமாக சிந்திக்கப்பட்டு விழாக் குழுவினர் வழிமுறைகளை வகுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வெளியூரிலிருந்து வருபவர்கள் யார் யாருக்கு தனி அறை வேண்டும் என்பதைக் கேட்டறிந்து அந்த மாதிரி அறைகள் ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன் என்ன மாதிரி அறைகள் கிடைக்கும் என்று தெரிவிப்பது அவசியம். தவிர, புதுக்கோட்டை வந்து சேர்ந்ததும் தொடர்பு கொள்ளவேண்டிய விழா குழுவினரின் பெயரும் கைபேசி எண்ணும் கொடுத்தல் பயனுள்ளதாக இருக்கும்.

   2.   பதிவர்களின் கைப்பைகளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு.

வெளியூர் பதிவர்கள் கொண்டு வரும் பைகளை விழா மண்டபத்தில் யாராவது வாங்கி ஒரு இடத்தில் வைத்திருந்து அவர்கள் போகும்போது திருப்பிக் கொடுக்கலாம். இல்லாவிடில் அவர்கள் அந்தப் பைகளை தங்களுடனேயே தூக்கிக்கொண்டு விழா முடிவு வரை அலையவேண்டும்.

3. உணவு ஏற்பாடுகள்.

தலை வாழை இலை போட்டு பதினெட்டு வகை பலகாரங்கள் பரிமாறுவது என்பது தமிழர் பண்பாடாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி கூட்டங்களில் அந்த மாதிரி பரிமாறுவது கஷ்டமான காரியம். இப்பொழுது பஃபே முறை சகஜமாகி விட்டது. அவரவர்களுக்குத் பிடித்தமானவற்றை தேவையான அளவு வாங்கிச் சாப்பிடுவது எளிது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரே இடத்தில் உணவு வகைகளை வைத்து விட்டு எல்லோரையும் வரிசையில் போய் வாங்கவேண்டுமாறு ஏற்பாடு செய்தால் வரிசை நீண்டு நிற்க வேண்டிய நேரம் அதிகமாகும்.

இரண்டு அல்லது மூன்று இடங்களில் உணவுகளை வைத்து விட்டால் கூட்டம் பிரிந்து நெரிசலைத் தவிர்க்கலாம். இதற்கு கூடுதல் பாத்திரங்கள் தேவைப்படும். உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். காரணம் இந்த ஏற்பாட்டில் கூடுதல் பாத்திரம் மற்றும் ஆள் செலவு பிடிக்கும்.அவரை முதலிலேயே இந்த நிபந்தனைகளுக்கு தயார் செய்வது அவசியம்.

தவிர ஒப்பந்ததாரர் மூலம் உணவு ஏற்பாடு செய்திருந்தால் அவர் சொல்லியிருந்த நபர்களை விட 25 சதம் குறைவாகத்தான் உணவு கொண்டு வருவார். கடைசியில் சாப்பிடுபவர்களுக்கு உணவு இருக்காது. தவிர ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவே உணவு கொடுப்பார். இந்த நுணுக்கங்களை கவனித்து சரி செய்யவேண்டும்.
ஆங்காங்கே நாற்காலிகள் போடப்பட்டிருந்தால் உட்கார்ந்து சாப்பிட வசதியாக இருக்கும். தவிர பதிவர்கள் சிறு சிறு குழுக்களாக உணவு உண்டு கொண்டே பேசி மகிழவும் ஏதுவாக இருக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பஃபே முறைக்கு ஏற்ற மாதிரி உணவுகள் இருக்கவேண்டும். சாதம் தனியாகவும் சாம்பார், ரசம், தயிர் தனியாகவும் இருந்தால் அவைகளைப் பிசைந்து சாப்பிட முடியாது. ஆகவே கலந்த சாதங்களாக இருந்தால் நல்லது. கூடுமானவரை சாப்பிடுவதற்கு எளிதான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். “டிரைஉணவு வகைகள் தவிர்க்கப்படவேண்டியவை.

    4.   வரவுப்பதிகை:

இதை நண்பர் திரு ரமணி அவர்கள் கூறியபடி மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் ஏற்பாடு செய்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    5.   நேரம் பகிர்வு

எந்த விழாவாக இருந்தாலும் முக்கியமான நிகழ்ச்சிகளை மதிய உணவிற்கு முன்னால் வைத்தால்தான் சோபிக்கும். உணவு இடைவேளை 2 மணிக்கு வைத்தாலும் நல்லதுதான். அதற்குப் பிறகு நடக்கும் எந்த நிகழ்ச்சியையும் மக்கள் ஆழமாக கவனிக்க மாட்டார்கள். இந்த உண்மையை விழா அமைப்பாளர்கள் மனதில் கொள்ளவேண்டும். குறிப்பாக பதிவர் அறிமுகங்கள் உணவு இடைவேளைக்கு அப்புறம் இருந்தால் பதிவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கூட கவலைப்பட வேண்டியதில்லை.


நிகழ்ச்சி நிரல் தயாரிப்பாளர்கள் இந்தக் குறிப்புகளை ஏற்கெனவே அறிந்து, கடைப்பிடித்திருக்கலாம். அப்படியென்றால் சந்தோஷம். இல்லையென்றால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலலாம்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

மாலைகளும் மரியாதையும்.

                                                  Image result for Flower Decorated Indian Deities
கடவுள் விக்கிரகங்களுக்கு மாலைகளால் அலங்காரம் பண்ணுவது காலம் காலமாய் வந்த பழக்கம். ஒவ்வொரு அர்ச்சகருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு. சிலர் செய்த அலங்காரத்தினால் அந்த விக்கிரகத்திற்கே அழகி கூடும். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றும். அநுத மாதிரி அலங்காரம் செய்யக்கூடியவர்கள் வெகு சிலரே.

எப்படி அலங்காரம் செய்திருந்தாலும் அது ஒரு நாள் மட்டுமே. அடுத்த நாள் அதை நீக்கித்தான் ஆகவேண்டும். அப்படி நீக்கப்பட்ட அலங்காரப் பூக்களை கோயில்களில் என்ன செய்கிறார்கள் என்று நான் பார்த்ததில்லை. அனேகமாக குப்பைகளோடுதான் சேர்த்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

கடவுள் விக்கிரகங்களுக்குப் போட்ட மாலை புனிதமானது என்று கருதுகிறோம். அதில் கடவுளின் அருள் இறங்கியிருக்கிறது என்றும் நம்புகிறோம். அதனால்தான் அர்ச்சகர் பெரிய பிரமுகர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுக்கு இந்த சாமியின் மேல் உள்ள மாலைகளில் ஒன்றை எடுத்து அவர் கழுத்தில் போடுவார்கள்.

மாலை யாரோ வழிபாட்டுக்காகக் கொடுத்தது. அடுத்த நாள் எப்படியும் குப்பைக்குத்தான் போகப்போகிறது. அதை இன்று ஒரு மனிதனுக்குப் போட்டால் தனக்கு ஏதோ ஒரு வகையில் ஆதாயம் கிடைக்கும் என்றுதான்  அந்த அர்ச்சகர் அந்த மாலையை அவருக்குப் போடுகிறார். இது வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

அந்த முக்கிய பிரமுகர் அந்த மாலை கழுத்தில் போட்ட பிறகு என்ன செய்கிறார் என்றால் அதைக் கழட்டி தன் உதவியாளரிடம் கொடுக்கிறார். அவர் அதை அந்த பிரமுகர் வந்திருக்கும் காருக்கு அணிவிக்கிறார். அடுத்த நாள் அந்த காரைத்துடைக்கும் ஆள் அதை எடுத்து குப்பையில் வீசுவார். எப்படியும் அந்த மாலை குப்பைக்குத்தான் போகப்போகிறது.

இந்த நிகழ்வில் உள்ள தாத்பரியம் ஒன்றே. அந்தப் பிரமுகர் கொஞ்சநேரம் தனக்கு ஏதோ பெரிய கௌரவம் வந்து விட்டதாக நினைக்கிளார்.  இது ஒரு பெரிய மாயை. நானும் சில சமயம் கோவில்களுக்குப் போகும்போது அந்த அர்ச்சகர் சாமியின் மேல் இருக்கும் மாலைகளில் ஒன்றைக் கழட்டி எனக்கு கொடுக்க முற்படுவார். நான் அதை மறுத்து விடுவேன்.

காரணம் அந்த மாலையை என் கழுத்தில் போடுவதால் அர்ச்கருக்கு கூட பத்து ரூபாய் காணிக்கை கிடைக்கும் என்பதைத்தவிர, எனக்கு கடவுளின் அருள் ஸ்பெஷலாக க் கிடைத்து விட்டது என்று நான் கருதுவதில்லை. தவிர முக்கியமான பிரச்சினை என்னவென்றால் என் கழுத்தில் போடப்பட்ட அந்த மாலையை அப்புறம் என்ன செய்வது என்பது பெரிய பிரச்சினை.

அதில் கடவுளின் அருள் ஒட்டிக்கொண்டிருப்பதால் அது புனிதமான ஒன்று ஆகி விடுகிறது. அப்படிக் கருதும்போது அதை குப்பையில் போட்டால் கடவுளுக்கு கோபம் வந்து அந்த அருளை திருப்பி எடுத்துக்கொண்டால் என்ன செய்வது என்ற பயம் வருகிறது. அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. என் அருளை நீ இவ்வாறு அவமதிக்கிறாயா என்று ஏதாவது தண்டனை கொடுத்தாலும் கொடுக்கலாம். இந்த வம்புகளெல்லாம் வேண்டாமென்று நான் இந்த மாலை மரியாதைகளைத் தவிர்த்து விடுவேன்.

இப்போது எங்கள் ஊரில் ஒரு புது கலாச்சாரம் சில கோவில்களில் பரவி வருகிறது. ஏதாவது விசேஷ தினங்கள் என்றால் அந்த சாமி விக்கிரகத்திற்கு ரூபாய் நோட்டுகளில் மாலை கட்டி சாத்துகிறார்கள். இந்த மாலைகளையும் பூ மாலைகளைப் போல் அடுத்த நாள் குப்பையில் போடுவார்களா என்பது தெரியவில்லை. அநேகமாக அப்படிச் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இதே போல் மனிதர்களைக் கௌரவிக்க மேடைகளில் மாலை போடுகிறார்கள். சில சமயங்களில் மாலைகள் போறாவிட்டால் ஒருவருக்குப் போட்டதையே இன்னொருவருக்கும் போடுவது உண்டு. இந்த மாலைகளின் ஆயுள் சில மணித்துளிகளே. அவை எவ்வளவு விலை உயர்ந்த மாலைகளாயிருந்தாலும் இதை கதிதான். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அந்த மாலைகளை உடனடியாகக் குப்பைக்குப் போய்விடும். சில சமயம் அவைகளுக்கு அந்தப் பெரிய மனிதர்களின் காரை அலங்கரிக்கும் பேறு கிடைக்கலாம்.

சில சமயம் பூ மாலைகளுக்குப் பதிலாக சந்தன் மாலை அல்லது வேறு செயற்கை மாலைகளை அணிவிக்கிறார்கள். இவை பூ மாலை போல் வாடாது. அதனால் அதை வீட்டிற்கு கொண்டு போய் வைத்துக்கொள்ளலாமே என்ற ஆசை பலருக்கும் வருவதுண்டு. அப்படி வீட்டிற்கு கொண்டு போகப்படும் மாலைகளை என்ன எய்வது, எத்தனை நாள் வைத்துக்கொள்வமு என்பது பிரச்சினைகளே.

எனக்கும் என் மனைவிக்கும்  சமீபத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த மாதிரி சந்தன மாலைகளை போட்டு விட்டார்கள். அவைகளின் விலை அநேகமாக ஜோடி 500 ரூபாய்க்குக் குறையாமலிருக்கும். அவைகளை வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு ஜன்னலில் மாட்டியிருக்கிறோம். நான் அல்ல, என் மனைவி மாட்டி வைத்திருக்கிறாள். எத்தனை நாளைக்கு அதை வைத்திருப்பாள் என்று தெரியவில்லை. எப்படியும் ஒரு நாள் அது குப்பைக்குப் போகவேண்டியதுதான்.


இந்த சந்தன மாலைகள் எவ்வளவு விலை உயர்ந்த தாக இருந்தாலும் அதை இன்னொரு தடவை உபயோகிக்க முடியமா? ஒருவருக்குப் போட்ட மாலையை இன்னொருவருக்கு போடக்கூடாது என்பது சம்பிரதாயம்.

இந்த மாலையை என்ன செய்யலாம் என்று உங்கள் கருத்துகளைக்கூறலாம்.

இதே போல் திருமண மாலைகைள ஆற்றிலோ குளத்திலோ அல்லது வேறு நீர் நிலைகளிலோதான் போடவேண்டும் என்று ஐதிகம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். பிள்ளையார்கள்க் கரைத்தே நீர் நிலைகளை எல்லாம் மாசடைந்து கிடக்கின்றன. அதன்கூட இதுவும் சேர வேண்டுமா?

இந்த சிந்தனைகள் ஏன் உதித்தன என்றால், எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைப் பார்க்கப்போக வேண்டியிருக்கிறது. அவர் எனக்கு சந்தன மாலை வாங்கி வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதை வாங்கி பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து இப்போது தொங்கும் இரண்டு மாலைகளுக்குத் துணையாக அதையும் தொங்க விடலாமா அல்லது அவருக்கு நாசூக்காகச் சொல்லி இந்த விபரீத முடிவை ரத்து செய்யச்சொல்ல லாமா என்று தீவிர ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன்.

சனி, 26 செப்டம்பர், 2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

                                   Image result for போஸ்

இந்தப் பெயர் இந்தியா சுதந்திரம் வாங்கிய காலத்தில் ஒவ்வொரு இந்தியனாலும் பெருமை பொங்கப் பேசப்பட்ட ஒரு பெயர். போஸ் இந்திய சுதந்திரத்தை வாங்க ஒரு போராட்ட முறையைக் கடைப்பிடித்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இரண்டாம் உலக யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதும், பிரிட்டிஷ்காரர்கள் இந்தயாவிற்கு சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

அப்போது இருந்த இந்தியத் தலைவர்களில் மூத்தவர்கள் காந்தியும் நேருவும் ஆவார்கள். ஆனால் இந்த இருவருக்கும் போஸ் ஒரு பெரும் தலைவராக இந்தியாவிற்குள் வருவதை விரும்பவில்லை. அப்படி வந்திருந்தால் நேருவிற்கும் போஸுக்கும் யார் பெரியவர் என்பதில் ஒரு சிக்கல் உருவாகியிருக்கும்.

போஸ் இறந்து விட்டார் என்ற தகவல் வெளியானதும் இவர்கள் இருவரும் பெருத்த ஆறுதல் அடைந்திருப்பார்கள். போஸ் இறக்கவில்லை என்று பாமர மக்கள், குறிப்பாக பெங்காளிகள் நம்பினார்கள். இது வழக்கமாக பெரும் தலைவர்கள் மறையும்போது ஏற்படும் உணர்வுதான்.

அவர் இறந்து ஏறக்குறைய 80 வருடங்கள் கழித்து இப்பொழுது எதற்கு இந்தப் பிரச்சினையை தூசி தட்டி உயிர் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. நேரு, காந்தி இவர்களையே நாம் மறந்து வெகு காலம் ஆகிறது. இந்திய அரசியலில் அதிகம் அறியப்படாத போஸை இப்பொழுது யாருக்கோ ஆதாயமிருப்பதால் உயிர்ப்பித்திருக்கிறார்கள். 

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படும் நீர் வளங்கள்.

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப்போட்டிக்கான கட்டுரை.

ஆசிரியர்: பழனி. கந்தசாமி

இயற்கை வளங்கள் நமக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட செல்வங்கள். இதை நாம் உபயோகித்துக் கொள்ளலாமே தவிர அதை அழிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. நாம் பெற்ற அனைத்து இயற்கை செல்வங்களையும் நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு அப்படியே கொடுப்பதற்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆனால் பெரும்பாலான சமயங்களில் நாம் அவ்வாறு செய்யத் தவறி விடுகிறோம். இது ஒரு பெரும் குற்றம். இப்படி இயற்கை வளங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கத் தவறுவதால் எதிர்காலத்தில் மனித இனமே அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

நமது நாடு விவசாய நாடு. விவசாயத்திற்கு ஆதாரம் நீர். நீரின்றி இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் கூறிப் போனார். ஆனால் இந்த நீர் வளங்களை நாம் எவ்வளவு மோசமாகக் கையாள்கிறோம் என்று பாருங்கள்.

நாம் பெற்ற இயற்கை வளங்களில் மிக முக்கியமானது நீர் வளம். இந்த நீர்வளத்திற்கு ஆதாரம் மழையே. ஆனால் இந்த மழையின் அளவைக் குறைக்க நாம் செய்யும் செயல்களைப் பற்றி யாராவது சிந்திக்கிறோமா? மலையிலுள்ள காடுகள்தான் மழைக்கு மிக முக்கியமாகத் தேவை. மழை பெய்வதற்கும் பெய்த மழை நீரை சேமித்து வைத்து அதை ஆற்று நீராக்கி கொடுப்பதுவும் இந்த மலைக்காடுகள்தான்.

ஆனால் இன்று இந்த மலைக்காடுகளை அழித்து மரங்களை தொழிற்சாலைகளுக்கும் வீடுகளுக்கும் உபயோகப்படுத்தி மழையின் அளவைக் குறைத்து விட்டோம். இப்போது பெய்யும் மழையும் காடுகளில் சேமித்து வைக்கப்படாமல் ஒரேயடியாக சமவெளிகளில் வெள்ளமாகப் பாய்ந்து வீணாவதோடு நிற்காமல் பல சேதங்களையும் ஏற்படுத்துகிறது.

தவிர, இருக்கும் ஆறுகளையும் நாம் சரி வரப் பராமரிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. மக்கள் தொகை அதிகரிப்பினால் நகரங்கள் பெரிதாகி விட்டன. அங்கிருந்து வெளியாகும் கழிவுப்பொருட்களும் அதிகரித்து விட்டன. இவைகளுடன் கூட பல தொழிற்சாலைக் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. இந்த கழிவுகளை எல்லாம் நல்ல முறையில் மேலாண்மை செய்யாமல் ஆறு, குளங்களில் விட்டு விடுகிறோம். கங்கை ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு எத்தனை ஆயிரம் கோடி பணம் செவழித்தும் எதிர்பார்க்கும் பலன் கிட்டுவதில்லை.

இதற்கு பல நகரங்களின் ஆட்சியாளர்களும் பொறுப்பாவார்கள். நாம் இயற்கை நமக்கு அளித்த வளத்தைப் பாழாக்குகிறோமே என்ற உணர்வு அற்றுப்போய் நகர கழிவுகளை ஆறுகளில் கலக்க விடுகிறார்கள்.
ஆற்று நீரை அசுத்தப்படுத்த முற்படும் ஒவ்வொருவரும் தேசத்துரோகிகள் ஆவார்கள். நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக்கொள்கிறோம் அல்லவா? பொதுச் சொத்து என்றால் மட்டும் ஏன் இந்த மாதிரி உணர்வுகள் வரவில்லை. இந்தக் கலாச்சாரம் வளராதவரை நாட்டை முன்னேற்றுவது கடினம் அல்லவா? இது மக்களின் அறியாமையா அல்லது கலாச்சாரமா என்று தெரியவில்லை. எதுவாயினும் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடமை.

அடுத்த நீர் நிலை ஆதாரம் ஏரி, குளங்கள் ஆகியவை. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் அந்த உபரி நீரைச் சேமித்து வைத்து மனிதனின் அன்றாடத் தேவைகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்த நம் முன்னோர்கள் கண்டு பிடித்த அருமையான திட்டம். இந்த திட்டம் பல நூற்றாண்டு காலம் பயனுள்ளதாக செயல்பட்டு வந்தது. ஆனால் நாட்டின் ஜனத்தொகை பெருகப் பெருக மக்களின் இருப்பிடத்தேவை பெருகிக்கொண்டு வந்தது. வாழ்க்கையின் அடித்தள மக்களுக்கு இந்த ஏரி, குளங்களின் கரைகள் வசதியாகப் போயின.

ஏரி குளங்களின் கரைகளில் குடிசைகள் போட்டுக் குடியிருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இவர்களினால் உண்டாக்கப்படும் கழிவுகள் அந்த ஏரி குளங்களின் நீரில்தான் கலக்கின்றன. ஆடுமாடுகள் மற்றும் மனிதர்கள் உபயோகப்படுத்தி வந்த நிலை மாறி இந்த நீர்கள் கழிவு நீராக மாறி, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கிறது.

இது தவிர இத்தகைய ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குளத்திற்குள்ளேயே சென்று விடுகிறார்கள். மழைக் காலத்தில் குளத்திற்கு நீர் வரும்போது இவர்கள் குடிசைக்குள்ளும் நீர் வந்து விடும். அதைத் தவிர்ப்பதற்காக இவர்கள் செய்யும் காரியங்கள் சொல்லத்தகாத அக்கிரமம் ஆகும். குளத்தின் கரைகளையே உடைத்து நீர் வெளியேறும்படி செய்து விடுகிறார்கள். இதைப்போல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் வேறு யாரும் கிடையாது.

அடுத்ததாக நிலத்தடி நீர். இது நிலத்தின் கீழ் பல அடி ஆழத்தில் இருப்பதால் இதை அதிகமாக மாசு பண்ண முடிவதில்லை. ஆனால் இதை பேராசைப்பட்டு உறிஞ்சியே தீர்த்து விட்டோம். சில நூறு அடிகளுக்குள் கிடைத்துக் கொண்டிருந்த நிலத்தடி நீர் இன்று ஆயிரம் அடிகளுக்கு கீழ் போய்விட்டது.

நிலத்தடி நீர் வங்கி கணக்கு மாதிரி. நாம் எவ்வளவு பணம் போட்டிருக்கிறோமோ அவ்வளவு பணம்தான் எடுக்க முடியும். நிலத்தடி நீரும் அப்படித்தான். மழை நீர் எவ்வளவு மண்ணிற்கு கீழ் போய் சேமிப்பாகிதோ அந்த அளவுதான் எடுக்க வேண்டும். ஆனால் மனிதனின் பேராசைக்கு அளவே இல்லை. எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உறிஞ்சி விட்டான்.

பல இடங்களில் இப்போது நிலத்தடி நீரே இல்லை என்ற அளவிற்குப் போய்விட்டது. இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்படவேண்டும். நிலத்தின் அடியில் இருக்கும் நீர் தனி மனிதனின் உரிமையல்ல. அது சமூகத்தின் சொத்து. தன மனிதன் தனது அதிக பலத்தால் எல்லோருக்கும் பொதுவான நிலத்தடி நீரை தான் மட்டும் உறிஞ்சி விடுகிறான். இது ஏறக்குறைய அடுத்தவன் வீட்டில் கன்னம் போட்டு திருடுவதற்கு ஒப்பாகும்.

இந்த உணர்வு ஒருவருக்கும் ஏற்படுவது இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலை ஆகும். பொதுச் சொத்து என்றால் அது யாருக்கும் சொந்தமல்ல. அதை எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம் என்கிற உணர்வு மக்களிடையே இருந்து மறைந்தால்தான் ஒரு நாடு முன்னேறும். பொது சொத்து என்பது நம்முடையது. நாம் கட்டும் பல்வேறு வகையான வரிகளால் வாங்கப்பட்டது. அதைக் காப்பாற்றுவது நம் கடமை என்று உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படவேண்டும்

இம்மாதிரியான கடமை உணர்வை ஒவ்வொருவரிடத்திலும் தோற்றுவிப்பதுதான் இன்றுள்ள தலையாய பணி. இதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று ஆராய்ந்து சரியான திட்டங்கள் தீட்ட வேண்டும்.
இம்மாதிரி செயல்களை அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன் வந்து நடத்தவேண்டும். அதற்கான செயல் திட்டங்களை அரசே முன் நின்று விவாதங்கள் நடத்தி முடிவு செய்யலாம்.

நமது பள்ளிகளில் இத்தகைய சுற்றுச் சூழல் பிரச்சினைகளைப் பற்றியும் அவைகளைத் தடுப்பது பற்றியும் விரிவான பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். தவிர நகராட்சி அமைப்புகள், தொழிற்சாலை நிர்வாகிகள் ஆகியோருக்கும் இந்த சுற்றுச் சூழல் பிரச்சினைகளை கையாள்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நம் சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை முதலில் தனி மனிதன் உணரவேண்டும். பிறகு அத்தகையவர்களை குழுவாகச் சேர்த்து சரியானபடி வழி நடத்தவேண்டும். இது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகள் கொடுத்து வழி காட்டவேண்டும்.

இது மக்களின் நல வாழ்விற்கு மிகவும் அவசியமான ஒரு செயல் திட்டமாகும். மனித இனத்தின் எதிர்காலம் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பில்தான் இணைந்திருக்கிறது. இதை அனைவரும் உணர்ந்து தங்கள் கடமையை சரியாக நிறைவேற்றினால்தான் இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெறும்.

உறுதி மொழிகள்:

(1) இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே என்று உறுதி கூறுகிறேன். 

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்றும் உறுதிமொழி கூறுகிறேன்.

(3) இந்தப் படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல. இப்போட்டியின் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதி கூறுகிறேன். .