புதன், 9 மார்ச், 2016

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !

                                                  Image result for பதிவர்கள்

ஒரு காலத்தில் (இப்பத்தானுங்க 2015 ல, அதாவது பத்து மாசத்துக்கு முன்னால) நான் இருந்த இருப்பன்ன? இன்றிருக்கும் இருப்பென்ன? நினைச்சுப் பாக்கவே ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

 நான் ஒரு பதிவு போட்டா ஆயிரம் பேருக்குக் குறையாமப் பாப்பாங்களே.

31-5-15 அன்று நான் எழுதிய "அந்தக் காலத்து சினிமாத் தியேட்டர்கள்." என்ற பதிவிற்கு வந்த பார்வையாளர்கள் 1523 பேர்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் நான் எழுதியிருக்கும் "தேவலோக நகர்வலம்" என்ற பதிவிற்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் வெறும் 260 பேர்கள். இத்தனைக்கும் அந்தப் பதிவு நல்ல நகைச்சுவையான பதிவு.

பதிவர்கள் எல்லாம் எங்கே காணாமல் போனார்கள்?

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் என் தமிழ்மணம் ரேங்க் 10 ல் இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 260 பார்வையாளர்கள் மட்டுமே பார்த்திருக்கும் ஒரு தளம் பத்தாவது ரேங்கில் இருக்கிறது என்றால், நூறு, இருநூறு ரேங்கில் இருக்கும் தளங்களுக்கு எத்தனை பார்வையாளர்கள் வந்திருப்பார்கள்?

நான் நினைப்பது என்னவென்றால் இன்னும் ஓரிரு வருடங்களில் பதிவு எழுதுபவர்கள் என்னைப்போன்ற சில கிழடுகள் மட்டுமே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

திங்கள், 7 மார்ச், 2016

3. தேவலோக நகர்வலம்


காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தேடினேன். யாரையும் காணோம். காப்பி எப்படி குடிப்பது என்று தெரியவில்லை. பொதுவைக்கூப்பிட்டு விசாரித்தேன். அவரும் அதற்காகத்தான் அலைந்து கொண்டிருந்தார். செக்கும் வந்து சேர்ந்தார்.

அப்போது என் ஞானதிருஷ்டியில் பார்த்தபோது தேவலோகத்தில் ஒரு பயலும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. காலையில் டிபனும் சாப்பிடமாட்டார்களாம். சரி என்று காமதேனுவை வரச்சொன்னேன். அது வந்து "பிரபோ, என்ன வேண்டும்?" என்று கேட்டது.

இதோ பார் காமதேனு, இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருந்து எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சப்ளை செய். அப்புறம் வேறு ஏற்பாடு செய்யலாம். இப்போது எங்களுக்கு மூன்று காப்பி. நல்லா ஸ்ட்ராங்கா கொண்டு வா" என்றோம். உடனே காப்பி வந்தது. அருமையாக இருந்தது. காலை உணவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டது. ஆளுக்கு இரண்டு இட்லி, ஒரு உளுந்து வடை, ஒரு நெய் ரோஸ்ட், ஒரு காப்பி, அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு, காலைக்கடன்களை முடித்து, குளித்து விட்டு வந்தோம்.

இன்றைக்கு என்ன செய்தி, பார்க்கலாம் என்று பார்த்தால் ஒரு நியூஸ் பேப்பரையும் காணோம். அப்போது நாரதர் வந்தார். அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏதும் இல்லை. கையில் தம்புரா, வாயில் நாராயண நாமம். வாருங்கள் நாரதரே, சௌக்கியம்தானே என்று கேட்டேன். நான் சௌக்கியம், இந்திரன்தான் கொஞ்சம் சோர்ந்திருக்கிறான். மும்மூர்த்திகளுக்கு அவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை போலிருக்கிறது. அதுதான் உங்களை பூலோகத்திலிருந்து வரவழைத்திருக்கிறார்கள். உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும், என்றார்.

இந்த ஆளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், இவனுக்கு தேவைக்கு மேல் விஷயம் தெரிந்திருக்கிறது என்று முடிவு செய்து, நாரதரே, உங்களுக்கு ஒரு விசேஷப் பதவி கொடுக்கிறேன். அதாவது நீங்கள்தான் இனி தேவலோகப் பிரசுரகர்த்தர். அதாவது முதலில் இங்கு ஒரு செய்தித்தாள் ஆரம்பித்து அதில் தேவலோகத்தில் நடப்பவைகள் எல்லாம் பிரசுரிக்கவேண்டும். நீங்கள் எங்கள் புது ஆபீசிலேயே ஒரு ரூமில் இருந்து கொள்ளலாம் என்று சொன்னேன்.

அவர் ஒத்துக்கொண்டார். பத்திரிகைக்கு பெயர் வைத்தோம். "தேவ தந்தி"
நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் நீங்கள் ஆபீஸ் சென்று அங்கு மயன் இருப்பார். பத்திரிக்கை முதல் பிரதியை அச்சடித்து விநியோகியுங்கள் என்றேன். எத்தனை காப்பி அடிப்பது என்றார். இங்கு இருப்பது முப்பத்திமுக்கோடி நபர்கள். ஆளுக்கு ஒன்று. உபரியாக ஒரு பத்தாயிரம் காப்பிகள். அவ்வளவுதான் என்றேன். நாரதர் போய்விட்டார்.

நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போனோம். அன்றைய தேவதந்தி டேபிள்மேல் இருந்தது. அதில் நாங்கள் மூவரும் தேவலோகம் வந்து பதவி ஏற்றது, இந்திரனின் வருத்தம், நாங்கள் புது ஆபீசில் குடியேறியது, அன்று நகர்வலம் செல்வது ஆகிய விவரங்கள் அனைத்தும் விலாவாரியாக கொடுக்கப்பட்டிருந்தன. 

மயனைக்கூப்பிட்டு நகர்வலம் போகலாமா என்றேன். அவர் சரி என்றார். நாங்கள் மூவர், மயன், நாரதர் ஆகக்கூடி ஐந்து பேர். ஆபீசை விட்டு வெளியில் வந்தோம். வெளியில் எந்த வாகனமும் காணவில்லை. மயனிடம் என்ன, வாகனம் எதுவுமில்லையா? என்றேன். மந்திரி, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு லொடலொட புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானை இருக்கிறது. அதை வேண்டுமானால் வரச்சொல்லட்டுமா என்றான்.

மயன், யானையெல்லாம் சரிப்படாது. புஷ்பக விமானத்தில் பூலோகத்திலிருந்து வந்த உடம்பு வலியே இன்னும் சரியாகவில்லை. பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் "ஹெலிகாப்டர்" என்னும் பெயரில் விற்கிறார்கள். அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும். ஒரு அரை டஜன் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன். கூடவே அதை ஓட்டுவதற்கு ஆறு பைலட்டுகளையும் ஆறு மாத டெபுடேஷனில் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றேன்.

மயன் ஆனாலும் படு சுறுசுறுப்பு. அடுத்த சில நிமிடங்களில் ஆறு ஸ்பெஷல் விஐபி ஹெலிகாப்டர்கள் பைலட்டுகளுடன் தயாராக நின்றன. இன்று நாம் எல்லோரும் ஒரு ஹெலிகாப்டரிலேயே போகலாம் என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டோம்.

எங்கு பார்த்தாலும் தேவர்கள். ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். ஜிகுஜிகு துணிகளில் பஞ்சகச்சமும், மேலாடைகளும் அணிந்திருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். பொது - நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே, தலைவா, என்றார். சும்மா இரும் பொது என்று சொல்லிவிட்டு, அந்த தேவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன்.

தேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. நாரதரே, நாம் கீழே இறங்கி அவர்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டேன். அவர் பேஷாப் பேசலாமே என்றார். ஹெலிகாப்டரை கீழே இறக்கினோம்.

நாரதர் போய் நாலைந்து ஜோடி தேவர்களைக் கூட்டிவந்தார். நெருக்கத்தில் பார்க்கும்போதுதான் மேலும் பல விஷயங்கள் தெரிய வந்தன. இந்தப் பயல்களின் கால்கள் தரையிலிருந்து ஒரு ஜாண் மேலேயே இருந்தன. எல்லோருடைய மூஞ்சிகளும் ஜப்பான்காரன் மூஞ்சி மாதிரி ஒரே மாதிரியாக இருந்தன. ஒரு ஆளைக் கூப்பிட்டு உன் பெயரென்ன என்று கேட்டேன். அவன் விழித்தான்.

நாரதரிடம் இவன் பெயர் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். நாரதர் இவர்களுக்கெல்லாம் பெயர் இல்லை என்றார். என்ன, இவன்களுக்குப் பெயர் இல்லையா, அப்புறம் எப்படி ஒவ்வொருத்தனையும் கூப்பிடுவீர்கள் என்று கேட்டேன். அவர்களை எதற்குக் கூப்பிடவேண்டும்?அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்? என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.

நாரதரே, எங்கள் பூலோகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அவர்கள் அந்தப் பெயரினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், அப்படி இங்கே இவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையா? என்றேன். இல்லை என்றார். சரிதான், நம் ஊரில் தெருவில் திரியும் ஆடுமாடுகளுக்கெல்லாம் பெயரா வைத்திருக்கிறோம், அது மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்த மாதிரி இருந்தால் நம் திட்டங்களுக்குச் சரிப்படாதே, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சித்திரகுப்தன் ஞாபகம் வந்தது.

அவனை அழைத்தேன். உடனே வந்து "வணக்கம் மந்திரி பிரபோ" என்றான். அன்றைய பத்திரிக்கையைப் படித்திருக்கிறான். சித்திரகுப்தா, இதென்ன இங்குள்ளவர்களுக்கெல்லாம் பெயரே கிடையாதாமே, ஏன் என்றேன். பிரபோ, அதற்கு அவசியமே ஏற்படவில்லை என்றான். நான் "அதற்கு அவசியம் இப்போது வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் பெயர் கொடு" என்றேன். பிரபோ, அவ்வளவு பெயர்களையும் உடனே கண்டுபிடிப்பது சிரமம். நடைமுறைச் சிக்கலும் வந்து விடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் நெம்பர் கொடுத்துவிடலாமென்றான்.

சரி, அப்படியே செய்துவிடு. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள அட்டை தயார் செய்து, அதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லிவிடு என்றேன். நெம்பர் கொடுப்பதற்கு முன் சில வேலைகள் இருக்கின்றன. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு மயனைக் கூப்பிட்டேன்.

மயன், இவர்களை ஒரு ஒழுங்கில் குடியமர்த்தவேண்டும். இப்போது இவர்கள் எங்கே குடியிருக்கிறார்கள் என்றேன். அப்படியென்றால்.... என்று மயன் இழுத்தார். இவர்கள் இப்படியே உலாத்திக்கொண்டு இருப்பார்கள், இவர்களுக்கு வீடு வாசல் என்று ஒன்றும் கிடையாது என்றார். என்னடா, நம் பூலோக தெரு நாய்கள் கதி மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.

அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். செக்கு, நீயும் இதைக் கேட்டுக்கொள். நீதான் இனிமேல் இந்த குடியமர்ப்புகளை பரிபாலனம் செய்யவேண்டும். இந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரித்து குடியமர்த்தவேண்டும். இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம். ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோடி தேவர்கள். மாநிலத் தலைநகரில் பத்து லட்சம் தேவர்கள் இருக்கட்டும். மாவட்டத் தலைநகரில் ஒரு லட்சம் தேவர்கள். வட்டத் தலைநகரில் பத்தாயிரம் தேவர்கள். மீதி 70 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் மொத்தம் உள்ள 7000 கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் பேராக இருக்கட்டும். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆளுக்குப் பத்து ஹெக்டேர் (25 ஏக்கர்) நிலம் இருக்கட்டும். அதில் கிணறு, மோட்டார் பம்ப்செட் வசதியும் இருக்கட்டும்.

எல்லோருக்கும் குடியிருக்க வீடுகள் தயாராகட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஜோடி தங்கட்டும். ஆக மொத்தம் 16 கோடி 50 லட்சம் வீடுகள் இப்போதைக்குப் போதும். ஜனத்தொகை பெருகும்போது அவர்களுக்கு, பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர், மின்சாரம், பாதாளச்சாக்கடை இணைப்பு ஆகியவைகளைக் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டில், மெத்தை, மாடுலர் கிச்சன், டிவி, டெலிபோன் ஆகியவை இருக்கட்டும். அவைகளுக்கு உடனடியாக உபயோகம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தேவைப்படும்.

மாநிலத் தலைநகரங்கள், மாவட்டத்தலைநகரங்கள், வட்டத்தலைநகரங்கள் ஆகியவற்றில் அந்தந்த இடங்களுக்குத் தகுந்த மாதிரி அலுவலங்கள் கட்டுங்கள். அவை சகல வசதிகளும் பொருந்தியதாக இருக்கட்டும். இது தவிர ஒவ்வொரு நகரத்திற்கு அருகாமையிலும், கூடவே பத்துப் பத்து சேடலைட் நகரங்கள் அமைக்க தேவையான காலி இடம் வைத்திருங்கள்.

அனைத்து மாநிலத்தலைநகர்களும் ஆறு வழிப்பாதை மூலம் இணையுங்கள். மாவட்டங்களுக்கு இடையே நான்கு வழிப்பாதைகள். வட்டங்களுக்கு இடையேயும் கிராமங்களுக்கு இடையேயும் இரு வழிப்பாதைகள் தயாராகட்டும்.

மயன் இந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். சித்திரகுப்தனிடம் இந்த தேவர்களை இந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்துங்கள். அப்புறம் அவர்களுக்கு நெம்பர் கொடுப்பது எளிது. ஒவ்வொரு  ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள். முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும். அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும். மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன். சித்திரகுப்தன் சரி என்று சொல்லிவிட்டு அந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான்.

அப்புறம் ஒரு ஜோடியைக்கூப்பிட்டு மற்ற விஷயங்களை விசாரித்தோம். அந்த விசாரணையில் தெரிய வந்தது அவர்களை பேசுவது தேவபாஷை அதாவது வடமொழி. அவர்களுக்கு பசி தாகம் கிடையாது. அங்கு எப்போதும் பகல்தான். அவர்கள் தூங்குவது இல்லை. அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வப்போது கொஞ்சம் சோம்பானம் மட்டும் அருந்துவார்கள். அது இந்திரன் மாளிகையில் பீப்பாய் பீப்பாயாக வைத்திருக்கிறது. அந்தப் பீப்பாய்கள் தீரத்தீர, காமதேனு அவைகளை நிரப்பி வைத்து விடும்.

ஏறக்குறைய பூலோகத்தில் தெருவில் திரிந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சரி, இவைகளை ஒவ்வொன்றாக கவனிப்போம் என்று முடிவு செய்தேன்.

காலையில் சாப்பிட்ட டிபன் ஜீரணமாகிவிட்டிருந்தது. நாரதரிடம் என்ன, மதிய உண்வு சாப்பிடலாமா என்று கேட்டேன். அது என்ன மதிய உணவு? அதை எதற்கு சாப்பிடவேண்டும்? என்றார். வாருங்கள், காட்டுகிறேன் என்று சொல்லி, அவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் இருப்பிடம் சென்றோம். காமதேனு காத்துக் கொண்டு இருந்தது.

அதனிடம் டில்லி அசோகா ஹோட்டலில் மதிய உணவிற்கு என்னென்ன செய்திருக்கிறார்களோ, அதில் எல்லாவற்றிலும் எங்களுக்குத் தேவையான அளவு கொண்டுவா என்று சொல்லிவிட்டு, கைகால்கள் கழுவிவிட்டு டைனிங்ஹால் வந்தோம். சாப்பாடு தயாராக இருந்தது. நாங்கள் நால்வரும் (நாரதர் உட்பட) உட்கார்ந்தோம். இதுதான் மதிய உணவா என்று நாரதர் கேட்டார். ஆமாம் நாரதரே, இங்கே நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பிட மாட்டீர்களா என்று கேட்டேன். அவர் சொன்னார், தேவலோகத்தில் பசி, தாகம் கிடையாதாகையால் இதற்கெல்லாம் அவசியமில்லை என்றார்.


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

தொடரும்...

வெள்ளி, 4 மார்ச், 2016

2. இந்திரனுடன் ஒரு ஒப்பந்தம்.



அரண்டு போன இந்திரனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போனேன். இங்க பாரு, இந்திரா. கவலைப்படாதே, உனக்கு என்ன வேண்டுமோ அதைச்சொல்லு, நான் ஏற்பாடு செய்கிறேன் என்றேன். அப்போதுதான் அவன் கொஞ்சம் தெம்பானான்.

இந்திரன் சொன்னான். இதப்பாருங்க புது ராஜா, நான் இந்த "சேர்ல" உக்காந்து பல கோடி வருஷம் ஆச்சு. இந்த ரம்பை, ஊர்வசி நாட்டியம், சோமபானம், இந்திராணியுடன் சல்லாபம் இப்படி எல்லாம் பழகிப்போச்சு. இது எல்லாம் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

சில பேர் இந்த "சேருக்கு" ஆசைப்பட்டு என்னென்னமோ யாகம் எல்லாம் செஞ்சாங்க. அவங்களையெல்லாம் சாம, பேத, தான, தண்ட உபாயங்களினால் ஒழிச்சுக் கட்டி விட்டேன். இப்ப இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கிறாங்களே, இது நியாயமா என்று அழுதான்.

நான் யோசிச்சேன். நமக்கும் இந்த ஊரு புதுசு, பழைய ஆள் ஒருத்தன் நம்ம பக்கம் இருந்தா, நாம தைரியமா இருக்கலாம் என்று யோசனை செய்து இந்திரனிடம் கூறினேன்.

இந்திரா, பயப்படாதே. உன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. நீ எப்போதும்போல் டான்ஸ் பார்த்துக்கொண்டு இந்திராணியுடன் சந்தோஷமாக இருக்கலாம். உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு, அதை நான் செய்து தருகிறேன். நீ செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் என்ன செய்தாலும் அவைகளை நீ கண்டு கொள்ளாதே என்றேன்.

இந்திரன் மிகவும் சந்தோஷப்பட்டு, நீதான் என் கண்கண்ட தெய்வம். எனக்கு இந்த "சேரும்" பழைய வாழ்க்கையும் இருந்தால் போதும், நீ என்ன செய்தாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன், என்ன, எனக்கு அவ்வப்போது கொஞ்சம் "சபலம்" வரும், அப்போது மட்டும் நீ கவனித்துக் கொண்டால் போதும் என்றான்.

அதற்கென்ன, அப்படியே செய்தால் போகிறது என்று சொல்லிவிட்டு, இனி நீதான் இங்கு ராஜா, நான் வெறும் மந்திரிதான், என்னை மந்திரி என்று கூப்பிட்டால் போதும் என்று சொல்லி விட்டு அடுத்து என் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் எதிர்ப்பை வெற்றிகரமாகச் சமாளித்த கர்வம் என் முகத்தில் தெரிந்தது. அதை கர்சீப்பினால் அழுந்தத் துடைத்தேன். ஆரம்பத்திலேயே இந்த கர்வம் வந்தால் காரியங்கள் கெட்டுப்போகும் அல்லவா?

அடுத்து, நான் கூட்டிக்கொண்டு வந்திருந்த பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூப்பிட்டேன். இதுவரை நடந்தவைகளை அவர்கள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இப்போதுதான் வாயைத் திறந்தார்கள். பஞ்சாயத்துத் தலைவர் சென்னார் - "தலைவரே, அருமையான டீல், இனி நமக்கு இங்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள், உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணட்டுமா" என்றார்.

நாம ஒருத்தருக்கொருவர் பாராட்டுவது இப்போது வேண்டாம், நிறைய வேலைகள் இருக்கின்றன, வேலையைத் துவங்குவோம் என்று சொல்லிவிட்டு, இனிமேல் பஞ்சாயத்து தலைவர் பெயர் "பொது உறவுச் செயலாளர்" சுருக்கமாக "பொது". ரெவின்யூ இன்பெக்டர் என் "ஸ்பெஷல் செக்ரடரியாக" (சுருக்கமாக "செக்கு") இருப்பார்.

முதலில் நமக்கு நல்லதாக ஒரு ஆபீஸ் வேண்டுமே என்றேன். அங்கு திரிந்து கொண்டிருந்த ஒரு தேவனைக் கூப்பிட்டு இந்த ஊரில் நல்ல பில்டிங்க் கான்ட்ராக்டர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவன் திருதிருவென விழித்தான். மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டேன். மறுபடியும் அப்படியே விழித்தான். நமது "பொது" வைக்கூப்பிட்டு இதைப் பாருங்க, பொது, நம்ம ஆபீஸ் கட்ட ஒரு நல்ல கான்ட்ராக்டர் வேணுமே, இந்த ஊர்ல யார் இருக்காங்கன்னு இவங்கிட்ட விசாரிச்சு சொல்லுங்க, என்றேன்.

அவர் அவனை நைசாக அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போய் பேசினார். கொஞ்ச நேரம் கழித்து இருவரும் வந்தனர். அந்த தேவன் வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டே வந்தான். "பொது" சொன்னார். நம்ம பாஷை முதலில் இவனுக்குப் புரியலைங்க. அப்புறம் நான் புரிய வச்சேனுங்க. இங்க "மயன்" அப்படீன்னு ஒரு கான்ட்ராக்டர் இருக்காராம். ஊர்ல என்ன வேலைன்னாலும் அவர்தான் செய்வாராம். இந்த ஆள் அவரோட செக்ரட்டரியாம். நாம சொன்னா அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவாராம். இந்த சேவைக்காக நாம் இவரைக் கவனித்துக் கொள்ளவேண்டுமாம்.

என்னடா இது, இந்த ஊர் நம்ம ஊரை விட மோசமாக இருக்கும் போல இருக்குதே, சரி அதை அப்புறம் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு அந்த தேவனிடம் மயனை கூட்டிக்கொண்டு வரும்படி சொன்னேன். கொஞ்ச நேரத்தில் மயன் வந்தான். அவனைப் பார்த்ததும் நான் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன்.

தலையில் வைரக் கிரீடம், கழுத்தில் ஏறக்குறைய ஒரு கிலோ தங்க நகைகள், தங்க வாள், பத்துவிரல்களிலும் தங்க மோதிரங்கள், இப்படி ஒரு நடமாடும் நகைக் கடை மாதிரி தெரிந்தான். சரி இருக்கட்டும், இவனை இன்று சரி செய்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தேன்.

நான் - நீர்தான் இந்த ஊரில் கான்டராக்டராமே.

மயன் - என்னை தேவலோக சிற்பி என்பார்கள். நீ யார்?

நான் - நான்தான் இந்த ஊருக்கு இப்போது ராஜா. என்னை மந்திரி என்று கூப்பிடவேண்டும். முதலில் என்னை மரியாதையுடன் அழைத்துப் பழகும்.

மயன் - என்னை உட்காரச் சொல்லக்கூட உனக்குத் தெரியவில்லையே.

நான் - அப்படியா, உட்கார்.

மயன் - எங்கே உட்காருவது?

நான் - தரையில்தான்.

மயன் - என்னை என்னவென்று நினைத்தாய், மானிடப் பயலே

என்று சொல்லிக்கொண்டு என் மேல் பாய்ந்தான். அவனைக் கையசைத்து அப்படியே நிற்கவைத்தேன். அவனைப் பார்த்து "இது என்ன டிரஸ், ஜிகிஜிகு வென்று டிராமாக்காரன் போல் டிரஸ். முதலில் இதை மாற்றி காக்கி அரைச்சட்டையும் காக்கி அரை டிராயரும் போட்டுக்கொண்டு வா" என்றேன். அவனுக்கு பயங்கர கோபம் வந்தது. என்னை கடிப்பவன்போல் பாய்வதற்கு எத்தனித்தான்.

இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று அவனுடைய ஆடை ஆபரணங்களைக் களைந்து வெறும் உள்ளாடையுடன் அவன் கைகளைக் கட்டி நிற்கவைத்தேன். அட, மடக்கான்ட்ராக்டரே, இனி நான்தான் உங்களுக்கு எஜமான், என் பேச்சைத்தான் நீ இனிமேல் கேட்கவேண்டும். மறுத்தால் உன்னை நரகத்திற்கு அனுப்பிவிடுவேன் என்றேன். அவனுக்கு இப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.

மந்திரி ஐயா, என்னை மன்னியுங்கள், உங்கள் பிரபல்யம் தெரியாமல் தப்பு செய்துவிட்டேன். இனி நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று காலில் விழுந்தான். சரி என்று சொல்லிவிட்டு, இத பார், மயன், நாங்கள் மூன்று பேர் வந்திருக்கிறோம், எங்களுக்கு ஆபீஸ் நல்ல முறையில் கட்டிக்கொடுக்கவேண்டும். அதில் இன்னும் பல டிபார்ட்மென்ட்டுகளை இருத்த கூடுதல் இடம் வேண்டும்.  கூடவே, நாங்கள் தங்குவதற்கான் வசதிகளையும் கட்டவேண்டும். எப்போது ரெடியாகும் என்றேன். அவன் நீங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது நேரம் இளைப்பாருங்கள், அதற்குள் முடித்து விடுகிறேன் என்றான்.

நாங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது இளைப்பாறி விட்டு வந்தால் நிஜமாகவே எங்கள் ஆபீஸ் ரெடியாக இருந்தது. மயனைப் பாராட்டினேன். மயனே, நீ கெட்டிக்காரன், உனக்கு நிறைய வேலை இருக்கிறது. உன் பரிவாரங்களுடன் இந்த ஆபீசுக்கே வந்து விடு என்றேன். அவனும் சரியென்றான்.

எங்களுக்கு பிரயாணக் களைப்பு அதிகமாக இருந்ததால் தூங்கப் போனோம். மயன் நிஜமாகவே 5 ஸ்டார் வசதிகளுடன் எங்கள் இருப்பிடத்தை தயார் செய்திருந்தான். நன்றாகத் தூங்கி எழுந்தோம். முகம், கைகால்களை கழுவிக்கொண்டு டீ சாப்பிட்டு விட்டு ஆபீஸ் போனோம். 

சும்மா சொல்லப்படாது. மயன் உண்மையிலேயே படு கெட்டிக்காரன். ஆபீசை வெகு ஜோராக கட்டியிருந்தான். என்னுடைய ரூம் சகல வசதிகளுடன் இருந்தது. மயன் வெராண்டாவில் கையைக்கட்டிக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான். காக்கி அரை டிராயரும் காக்கி அரைச்சட்டையும் போட்டிருந்தான். பரிதாபமாக இருந்தது. அவனையும் நம்ம பொது மற்றும் செக்கை ரூமுக்கு கூப்பிட்டேன்.

முதல் மந்திராலோசனை கூட்டம் துவங்கியது.

இங்க பாருங்க மயன் (இனி இவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்போம் என்று முடிவு செய்தேன்), இனி உங்கள் பதவி "சீப் இன்ஜியர்". இனிமேல் நீங்கள் கோட், சூட் போட்டுக்கொண்டு ஆபீஸ் வரலாம். உங்கள் கீழ் பணிபுரியும் ஆட்கள் இந்த காக்கி யூனிபார்ம் போட்டுக் கொள்ளட்டும். நாளை காலை நாம் எல்லோரும் இந்த தேவலோகத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு என்னென்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம்.

அப்போது மயன் சொன்னார்- மந்திரி சார், நாம் நகர் வலம் போகும்போது நாரதர் இருந்தால் நன்றாக இருக்கும். அவருக்குத்தான் நாட்டு நிலவரம் நன்றாகத் தெரியும் என்றார். அப்படியே ஆகட்டும், காலையில் வரச்சொல்லி செய்தி அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டு எங்கள் இருப்பிடத்திற்கு சென்றோம்.

சரி தூங்கலாம் என்று பார்த்தால் எங்கும் வெளிச்சமாகவே இருக்கிறது. இருட்டே ஆகவில்லை. சூரியன் மறையவே இல்லை. சரி இதை தூங்கி எழுந்து கவனிக்கலாம் என்று முகத்தை போர்வையால் நன்கு மூடிக்கொண்டு தூங்கினேன்.  

புதன், 2 மார்ச், 2016

அட்டாலியிலிருந்து !

அநேகம் பேருக்கு அட்டாலி என்றால் என்ன என்று தெரியாமலிருக்கலாம். இங்கிலீஷில் Barn என்று சொல்வார்களே அதைத்தான் எங்க ஊர்ல அட்டாலின்னு சொல்ற வளக்கம். உங்க ஊர்ல எல்லாம் பரண் அப்படீன்னு சொல்வாங்க.

வேண்டாத அதாவது உடனடித் தேவைக்கு வேண்டாத சாமான்களை இங்கு போட்டு வைப்பார்கள். அப்படி என்னுடைய பழைய பதிவுகளை கூகுளாண்டவர் பரணில் போட்டு வைத்திருக்கிறார். கொஞ்ச நாட்களாக எனக்கு கடுமையான கற்பனை வறட்சி. ஒரு டாபிக்கும் கிடைக்கமாட்டேன் என்கிறது.

அதனால் பரணில் ஏறித் தேடிப்பார்த்தேன். பழைய பதிவுகளில் ஒரு நல்ல சீரீஸ் கிடைத்தது. அதை வைத்து கொஞ்சம் நாட்களை ஓட்டலாம் என்று முடிவு செய்து முதல் பதிவை இங்கு போடுகிறேன்.

1.தேவலோகத்தில் ஒரு புரட்சி


நான் நேற்றிரவு ஒரு கனா கண்டேன். அந்தக் கனவில் மும்மூர்த்திகளும் தோன்றி, மகனே, உன்னால் ஒரு பெரிய காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு நீ தயாரா என்று கேட்டார்கள். ஆஹா, மும்மூர்த்திகளும் கேட்கும்போது மறுத்தால் நன்றாக இருக்காது என்று, சரி என்று சொன்னேன்.

அப்போது அவர்கள் சொன்னதின் சுருக்கம்:

முமூ (மும்மூர்த்திகள்) - மகனே, இந்திர லோகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். அங்கே தற்போது இந்திரன் என்று ஒரு கையாலாகாத ராஜா ஆண்டு கொண்டிருக்கிறான். அவன்  ஒரு சரியான சோம்பேறி. எப்போதும் டான்ஸ் பார்த்துக்கொண்டு நாட்டின் நலனைக் கவனிப்பதில்லை. தேவர்கள் எல்லோரும் சோர்ந்திருக்கிறார்கள். நீதான் அந்த நாட்டை சீர்திருத்தவேண்டும்.

நான் - ஐயன்மீர், எனக்கு வயதாகி விட்டது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. என்னால் எப்படி இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும்?

முமூ (மும்மூர்த்திகள்) - தேவலோகத்திற்கு வந்து ஒரு "புல்" பாட்டில் சோமபானம் அருந்தி ஒரு மணி நேரம் ஊர்வசியின் நாட்டியம் பார்த்தால் உன் சோர்வெல்லாம் பறந்து போய்விடும்.

நான் - ஊர்வசி இப்போ அங்கதான் இருக்காங்களா?

முமூ - மகனே, அது சினிமா ஊர்வசி இல்லை, நிஜ ஊர்வசி. நீ முதலில் புறப்படு. காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.

நான் - அது சரி, அங்கே நான் என்ன சீர்திருத்தம் வேண்டுமானாலும் செய்யலாமா?

முமூ - நீ என்ன செய்தாலும் யாரும் உன்னை ஒன்றும் கேட்க மாட்டார்கள். கேட்கக்கூடாது என்று உத்திரவு போட்டிருக்கிறோம். தவிர, உனக்கு சர்வ சக்தியும், சர்வக்ஞானமும் சர்வ பராக்கிரமும் கொடுத்திருக்கிறோம். நீ கிழித்த கோட்டை ஒருவரும் தாண்ட மாட்டார்கள்.   உனக்கு 100 ஆண்டுகள் டைம் கொடுத்திருக்கிறோம். அதற்குள் நீ எப்படியாவது தேவலோகத்தை சுறுசுறுப்பாக்கிவிடவேண்டும்.

நான் - அப்படியே செய்கிறேன். எனக்குத் துணையாக பூலோகத்திலிருந்து இரண்டு பேர் வேண்டுமே?

முமூ - எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். சீக்கிரம் புறப்பட்டால் போதும்.

நான் உள்ளூர் பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூட்டிக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன்.

அவர்களுடைய புஷ்பக விமானத்தில் ஏறிச்சென்றோம். அந்த புஷ்பக விமானம் அரதப் பழசு. லொடலொடவென்று சத்தம். உட்காருவதற்கு மரப் பெஞ்சுகள். ஏர் ஹோஸ்டஸ் ஒருவரும் இல்லை. சரி. நாம் பதவி ஏற்றதும் முதலில் நம்முடைய உபயோகத்திற்காக சவுதி மன்னர் டிசைன் செய்திருக்கும் விமானம் போல் ஒன்று வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எல்லோரும் தேவலோகம் போய்ச் சேர்ந்தோம்.  அங்கு இறங்கியதும்தான் கவனித்தேன். எங்களை வரவேற்க ஒரு ஈ, எறும்பு கூட விமான நிலையத்திற்கு வரவில்லை. மும்மூர்த்திகளிடம் என்ன, நம்மை வரவேற்க ஒருவரையும் காணவில்லையே என்றேன். அதற்கு விஷ்ணு, நாட்டின் நிலை எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது பார்த்தாயா, இதையெல்லாம் சீர்திருத்தத்தான் உன்னை வரவழைத்திருக்கிறோம் என்றார்.
ஒரே வருடத்தில் பாருங்கள். நான் என்னவெல்லாம் மாற்றிக்காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு இந்திர சபைக்குச் சென்றோம். அங்கு இந்திரன் ரம்பை ஊர்வசியின் நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டு நாங்கள் வந்ததையே கவனிக்கவில்லை. பிரம்மா அவனருகில் சென்று அவனைத் தொட்டபிறகுதான் அவன் நாங்கள் வந்ததை அறிந்து எங்களை வரவேற்றான்.

நாட்டியம் பார்க்கத் தடை ஏற்பட்ட வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது. மும்மூர்த்திகளும் அவனைப் பார்த்து இதோ இங்கு வந்திருக்கும் மானிடன்தான் இனிமேல் இந்த தேவலோகத்திற்கு அரசன். நீ இனி ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்றார்கள். இந்திரனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

அதெப்படி மூன்று மாத நோட்டீஸ் கொடுக்காமல் என் பதவியைப் பறிக்கலாம் என்றான். மும்மூர்த்திகள் அதற்குப் பதிலாக உனக்கு மூன்று மாத சம்பளம் இதோ, வாங்கிக்கொண்டு உடனடியாக இடத்தைக் காலி செய் என்றார்கள். அவன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நான் தேவர்களைச் சேர்த்துக்கொண்டு ஸ்ட்ரைக் செய்வேன் என்றான். மும்மூர்த்திகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

என்னைப் பார்த்தார்கள். அவர்கள் எனக்கு சர்வ சுதந்திரமும் சர்வ வல்லமையும் கொடுத்திருந்த படியால், நான் அவர்களைப் பார்த்து நீங்கள் கவலைப்படவேண்டாம், இனிமேல் நான் கவனித்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்று சொல்லி அவர்களை வழியனுப்பினேன்.


தொடரும்...

செவ்வாய், 1 மார்ச், 2016

நான் எங்கே?


நான் எங்கே?






இங்க டை கட்டீட்டு ஒளிஞ்சிகிட்டு இருக்கேன் பாருங்க


லைட் போதவில்லை

விழா நடத்தும் முகவர் கடைசீல வரும்போது இப்படித்தான் இடம் கிடைக்கும்!

திங்கள், 29 பிப்ரவரி, 2016

என் தலைக்கனம் மறைந்தது.


விவசாயக் கல்லூரியில் 1953 முதல் 1956 வரை படித்து பாஸ் செய்து இன்று வரை உயிருடன் இருக்கும் வகுப்புத் தோழர்கள் ஒன்று கூடி நாங்கள் பாஸ் செய்து 60 வருடங்கள் ஆனதைக் கொண்டாட முடிவு செய்தோம் என்கிற விபரம் அன்பர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

இப்படி விழா ஒன்று கொண்டாடலாம் என்று சென்னையிலிருக்கும் எனது வகுப்புத் தோழர் முனைவர் வசந்தராஜ் டேவிட் என்பவருக்குத்தான் முதலில் ஞானோதயம் தோன்றியது. அதற்குக் காரணம் பத்து வருடங்களுக்கு முன் இதேமாதிரி என் வகுப்புத் தோழர்களின் சந்திப்பை அவர்தான் திட்டமிட்டு நடத்தினார்.


இவர்தான் வசந்த்ராஜ் டேவிட்
பிரபல பூச்சி இயல் விஞ்ஞானி

நாங்கள் படித்த கல்லூரி வளாகத்திலேயே கொண்டாடலாம் என்று அவர் முடிவு செய்து, என்னைத் தொடர்பு கொண்டார். காரணம் கோயமுத்தூரில் இருக்கும் என் வகுப்புத் தோழர்களில் இணைய வசதி வைத்துக்கொண்டு அதை நோண்டிக் கொண்டிருப்பவன் நான் ஒருவன் மட்டும்தான். அவர் கேட்டவுடன் நான் "அதற்கென்ன, கொண்டாடினால் போச்சு" என்று சொல்லிவிட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகியிருக்கும். அப்படியானால் அதற்கான வேலைகளைத் தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டார்.

எனக்குள் வேறு ஒரு மனிதன் ஒளிந்து கொண்டு இருக்கிறான். அவன் தன்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணம் கொண்டவன். நான் சும்மா இருந்தால் கூட அவன் முந்திரிக்கொட்டை போல இந்த மாதிரி விஷயங்களில் என்ன இழுத்து விட்டு விடுவான். அப்படித்தான் இந்த வேலை என் தலை மேல் ஏறிவிட்டது. அதிலிருந்து எனக்கு ஒரே தலைக்கனம்தான்.

எனக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. அதாவது தலையில் பொறுப்பு ஏறி விட்டது.
மூன்று மாதமாக அல்லும் பகலும் இதே நினைப்புத்தான். இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகுமே தவிர குறையாது. அப்படிப்பட்ட ஒரு வேதனையை அனுபவித்து வந்தேன். ஒரு பொறுப்பு எடுத்தால் அதை குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற எண்ணம்தான் இப்படி ஒருவனை அலைக்கழிக்கும்.

எப்படியோ விழாவிற்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து 27-1-2016 அன்று விழாவைக் கொண்டாடிவிட்டோம். எங்கள் ஆசிரியர்களில் நான்கு பேர் தவிர மற்றவர்கள் இப்போது இல்லை. அதில் ஒருவர் 97 வயது ஆகிவிட்டாலும் உற்சாகம் குறையாமல் எங்கள் விழாவில் கலந்து கொண்டார். அவர்தான் முனைவர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


நடுவில் பட்டு வேஷ்டியுடன் இருப்பவர்தான் டாக்டர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


விழாவில் ஒரு குறையும் ஏற்படவில்லை. தலையிலிருந்த கனம்  அதாவது தலைக்கனம் மறைந்து விட்டது. விழாவிற்கு வந்திருந்த நண்பர்கள்


டாக்டர் தனபாலன், திரு பார்த்தசாரதி, திரு சிவராமன்



விழாவின் விருந்தினர்கள் அனைவருமாக எடுத்துக்கொண்ட போட்டோ.



சனி, 20 பிப்ரவரி, 2016

நான் எடுத்த உறுதி மொழிகள்


                                 

நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர். எங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு மாதாந்திர செய்தி மடல் வெளியிடப்படுகிறது. இந்த மாத செய்தி மடலில் பிரசுரமான ஒரு கேள்வி-பதில் பகுதி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி இங்கே பதிகிறேன்.

கேள்வி: முதியோர் வைத்திய நிபுணரிடம் கேட்கப்பட்ட கேள்வி.

எனக்கு வயது 75. கூட்டுக்குடும்பத்தில் நன்றாகவே இருக்கிறேன். பொதுவாக இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு இளைஞர்கள்தான் காரணம் என்று சொல்வதை விட, முதியவர்களாகிய நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? உங்களின் நீண்டகால அனுபவம் என்னைப்போன்ற பல முதியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று இக்கடித த்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

பதில்:

இதுவரை யாரும் கேட்காத ஒரு பயனுள்ள கேள்வியைக் கேட்பது உங்கள் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறது. இதோ, முதியவர்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கொடுத்துள்ளேன்.

உறுதி மொழி 


  • எனக்கு வயதாகிக்கொண்டு வருவதை உணர்கிறேன். சீக்கிரமே நான் முதுமையை எட்டி விடுவேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் குணம் எனக்கு வந்து விடக்கூடாது. குறிப்பாக எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏதாவது கருத்துச் சொல்லியே ஆகவேண்டும் என்ற உணர்வு எனக்கு எழக்கூடாது.
  • எல்லோரது தவறுகளையும் திருத்துவதுதான் என் வேலை என்ற நினைப்பு எனக்கு வரக்கூடாது.எனது அனுபவமும் அறிவும் எனது பொக்கிஷம். அறிவுரை என்ற பெயரில் எல்லோரிடமும் அதை இறைத்து விடமாட்டேன்.
  • நீள நீளமான வாக்கியங்களைத் தவிர்த்து, ஒற்றை வார்த்தையில் எதையும் சொல்லும் பக்குவம் வரவேண்டும்.
  • என் கஷ்டங்களையும் வலிகளையும் பற்றி எல்லோரிடமும் பலம்பாமல், அடுத்தவர் கஷ்டங்களையும் காது கொடுத்து கேட்கும் பொறுமை பெற வேண்டும்.
  • எல்லாமே ஞாபகத்தில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் ஞாபகத்தில் இருந்தால் போதும். துயரமான தருணங்களை என் ஞாபக மறதி நோய் எடுத்துக்கொள்ளட்டும்.
  • நானும் தவறுகள் செய்யக்கூடிய சாதாரண மனிதப்பிறவிதான் என்ற நினைப்பு எனக்கு எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் வாக்கு வாதங்களை அது தவிர்த்து விடும்.
  • எல்லோருக்கும் கருணை காட்டும் மனம் வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும். அடுத்தவர்களின் சிறந்த குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் தாராள உள்ளம் வேண்டும். யாரையும் அதிகாரம் செய்யும் முரட்டு குணம் மட்டும் வேண்டாம்.

                                                  Image result for flower

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பதிவர் சங்கம் தேவையா?

வியாழன், 15 டிசம்பர், 2011

பல வருடங்களுக்கு முன்பு 2011 ல் நான் எழுதிய ஒரு பதிவு. இப்போது பதிவர் சங்கம் பற்றிய பதிவுகள் வருகின்றபடியால் அதை மீள்பதிவு செய்கிறேன்.



பதிவுலகம் ஒரு மாயாலோகம். இங்கு பெரும்பான்மையோருக்கு நிஜமுகம் கிடையாது. கூகுளாண்டவர் புண்ணியத்தாலே நாம் எல்லோரும் எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறோம். கூகுள் பஸ் புஸ் ஆனதைப்போல பதிவுகளும் நித்திய கண்டம் பூர்ணாயுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, புரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் நமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பு தேவைப் பட்டதால் உருவான அமைப்புகள். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் அவரவர்கள் பாதுகாப்பைக் கருதி சங்கங்கள் உருவாக்கப் பட்டன. கோவையில் நடைப் பயிற்சியாளர்களும் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பு நோக்கம் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு பல விதமான பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால் கனவுலகப் பயணிகளான பதிவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு தேவைப்படுகிறது? பதிவர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றால் அதற்கு ஒரு அமைப்பு உருவாக்குவது தேவை. இந்த மாதிரியான அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஈரோடு பதிவர் சங்கமம் ஒரு நல்ல முன்மாதிரியாக செயல்படுகிறது. நெல்லையில் திரு. சங்கரலிங்கம் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னையில் பதிவர் சந்திப்பு அவ்வப்போது நடக்கிறது என்பது பதிவுகளிலிருந்து தெரிகிறது. அங்குதான் பதிவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் சென்னைப் பதிவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க முயன்று அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது பல பதிவர்கள் அறிந்ததே.

பதிவர்கள் கலந்துரையாடல்களுக்காக மட்டும், எந்த வித சட்ட கட்டுப்பாடுகளும் இல்லாத அமைப்புகள்தான் வெற்றிகரமாக செயல்படும்.

21 கருத்துகள்:

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
    பதிலளிநீக்கு
  2. //நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, பிரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் தமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.//

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
    பதிலளிநீக்கு
  3. V.Radhakrishnan said...

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.

    சங்கம் வைத்தால் இதெல்லாம் கிடைக்காது, ராதாகிருஷ்ணன்.
    பதிலளிநீக்கு
  4. தான் தன் சுகம் தன்குடும்பம் என இல்லாது
    பொது நல நோக்கில் சிந்திக்கவும் கருத்துக்களை
    எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடவும் செய்கிறவர்கள்
    தங்கள் நலன்களுக்கென அல்லது தங்கள் 
    கருத்துரிமைக்கு எதிராக வரும் விஷயங்களை
    தடுக்கவாவது ஒரு அமைப்பு இருப்பது 
    சரியெனத்தான் எனக்குப் படுகிறது
    த.ம 3
    பதிலளிநீக்கு
  5. ஏன் பதிவர்களுக்காக ஒரு சங்கம் முழுமையாக அமைக்கப் பெறக்கூடாது..?

    http://sattaparvai.blogspot.com/2011/11/100_21.html
    பதிலளிநீக்கு
  6. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  7. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  8. திருவாரூர் உள்ளிட்ட "தஞ்சை, நாகை மாவட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு" வைத்து மாதநதோறும் சந்திப்புகள் செய்தோம். பெரும் எழுத்தாளர்களை அழைத்து சில ஆண்டு விழாக்கள் நடத்தினோம். சுமார் 12, 13 ஆண்டுகளுக்குப் பின் அந்த அமைப்பே இல்லை.
    பதிலளிநீக்கு
  9. Palaniappan Kandaswamy 

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?
    பதிலளிநீக்கு
  10. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...

    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,
    பதிலளிநீக்கு
  11. //ஜோதிஜி திருப்பூர் said...
    Palaniappan Kandaswamy 

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?//

    இதுதான் இனடர்நேஷனல் ஸடைல் என்று ஒரு அமெரிக்க அன்பர் எடுத்துக் காட்டினார். நல்ல சாமாசாரம் என்று உடனே எடுத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. ஜோதிஜி.

    தவிர பதிவுலகில் PhD யாவது DSc யாவது. எல்லாம் எண்ணுதான். எதற்கும் என்னுடைய முந்தைய பதிவையும் பார்த்து விடுங்களேன்.
    பதிலளிநீக்கு
  12. //இராஜராஜேஸ்வரி said...
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...
    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,//

    சென்னையில் போன வருடம் ஒரு சங்கம் ஆரம்பிக்க போட்ட முதல் கூட்டத்திலேயே கலகம் வந்து சங்கம் என்ற சங்கதியையே விட்டுவிட்ட கதை தெரியுமுங்களா?
    பதிலளிநீக்கு
  13. அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
    பதிலளிநீக்கு
  14. //cheena (சீனா) said...
    அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    பதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பதிவர்களில் பல சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பதிவுகளில் இதைப்பற்றி விழிப்புணர்வு பதிவுகள் போட்டால் பயனுள்ளதாக அமையும்.

    நீங்கள் வலைச்சரம் மூலமாக ஒரு வேண்டுகோள் வைக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
    பதிலளிநீக்கு
  15. தவறு இல்லையென்றே நான் கருதுகிறேன்,பின்னாளில்
    பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது போன்ற சூல்நிலைகள் உருவாகின்றது எனவே கருதுகின்றேன்,பதிவர் சங்கமத்தில் கூடி இதை பற்றி அய்யா விவாதியுங்கள்....அங்கு சந்திப்போம் நன்றி!
    பதிலளிநீக்கு
  16. நாம் நன்றாகத் தானே போய்க் கொண்டுள்ளோம். இதில் சங்கம் ஏன்?.சங்கம் வந்து ஊர் இரண்டுபட வேண்டாம்.
    வேதா. இலங்காதிலகம்.
    பதிலளிநீக்கு
  17. நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. 


    உங்கள் கருத்துக்காக 

    காதல் - காதல் - காதல்
    பதிலளிநீக்கு
  18. //எனக்கு பிடித்தவை said...
    நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. 
    உங்கள் கருத்துக்காக 
    காதல் - காதல் - காதல்//

    புதியவர்களுக்குத்தான் புதுப் புதுக் கருத்துகள் தோன்றுமாமே! ஒன்றும் வேண்டாம், இப்படியான கருத்து ஒன்று பதிவுலகத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் போதும்.
    பதிலளிநீக்கு
  19. கைபுள்ள ரேஞ்ஜில் சங்கம் ஆகிவிட போகிறது.

    ஆணீயே புடுங்க வேணாம். be care full.என்ன சொன்னேன்ங்க !
    பதிலளிநீக்கு