ஞாயிறு, 8 மே, 2016

வருகின்ற தேர்தலில் ஓட்டுப்போடுவது எப்படி?

                         
                                 Image result for tamilnadu election 2016 comedy

தமிழக சட்டசபைத் தேர்தல் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் 10 நாளில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி விடும். இந்த தேர்தலில் எல்லோரும் ஓட்டுப்போடவேண்டும் என்று விடாது பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது. ஆகவே உங்கள் ஓட்டை வேட்பாளர்களில் நல்லவருக்குப் போடுங்கள் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். இது ஒரு உண்மையான புத்திமதி.

எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் என்னவென்றால் வேட்பாளர்களில் நல்லவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான். அனைத்து வேட்பாளர்களும் ஏதாவதொரு கட்சியின் சார்பில்தான் நிற்கிறார்கள். ஆகவே அந்தக்கட்சிகளின் தன்மை, அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு அவர்கள் செய்த நன்மைகள் இவைகளை வைத்துத்தானே அந்தக் கட்சியின் தன்மை பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அப்படித் தெரிந்துதானே ஓட்டுப்போட முடியும்.

கட்சிகள் ஆட்சி செய்தபோது அவர்கள் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். பல இலவசப் பொருள்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னும் இலவசங்கள் கொடுப்போம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

இந்த இலவசங்களை எப்படிக் கொடுக்க முடியும் என்பது எனக்கு வேண்டாத சிந்தனை. ஒன்று மட்டும் நிச்சயம். யார் வந்தாலும் இலவசங்கள் தொடரும். ஆகவே யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? எனக்கு இலவசங்கள் வருமல்லவா?

இந்த சிந்தனையில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் மக்களே. ஆகவே நான் ஓட்டுப்போட்டாலும் போடாவிட்டாலும் ஏதோ ஒரு கட்சி ஜெயித்து ஆட்சிக்கு வரும். அவர்கள் இலவசங்களை வாரி வழங்கப் போகிறார்கள். இதில் ஏதாவது லாஜிக் தவறு இருக்கிறதா?

தேன் எடுப்பவன் புறங்கையில் வழியும் தேனை, நக்கத்தான் செய்வான். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் ஓட்டுப்போட அவசியம் இருப்பதாக க்கருதவில்லை. நீயெல்லாம் ஒரு படித்தவனா, உன் ஜனநாயக உரிமையை இப்படிக் கேவலமாகப் பேசுகிறாயே, உனக்கு வெட்கம் மானம் இல்லையா என்று எல்லோரும் கேட்பீர்கள் என்று தெரியும்.

என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் நான் கட்டாயம் ஓட்டுப்போடுகிறேன். போட்டியில் இருக்கும் கட்சிகளில் யோக்கியமான கட்சி எது? இதற்கு யாராவது ஒருவராவது பதில் சொன்னால் போதும்.

இப்படிச் சிந்திப்பதால்தான் அனைத்துக் கட்சிகளும் படித்தவர்களை வெறுக்கின்றன.

                                   Image result for tamilnadu election 2016 comedy

சனி, 7 மே, 2016

காதல் கல்யாணங்கள்

ஒரு ஊழியனின் குரல் 

என்கிற தளத்தில் வெளி வந்த
இப்பெண்ணின் கேள்விக்கு பதிலென்ன?

என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்.


நான் இந்த கலப்புத் திருமணங்களைப் பற்றி சில சொந்தக் கருத்துகள் வைத்திருக்கிறேன். அவை என்னைப் பிற்போக்குவாதியாகவும் சாதி வெறியனாகவும் இன்னும் பல அடைமொழிகளுக்கு உரியவனாகவும் காட்டலாம். அவைகளைப் பற்றி கவலைப்படாமல்தான் இந்த பின்னூட்டம் போடுகிறேன். இந்தப் பின்னூட்டம் மேலும் பல மாற்றுக்கருத்துகளுக்கு வழி வகுத்தால் நன்மை உண்டாகும்.

காதல் என்பது ஒரு பருவக்கவர்ச்சியே என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்க சாத்தியமில்லை. இதை சரியான கோணத்தில் கையாள்வதற்கு நம் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.நாம் வாழும் காலம் என்ன, நம் வாழ்க்கையை வாழ என்னென்ன தேவைகள் உண்டு, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற நாம் என்ன தகுதி பெற்றிருக்கவேண்டும் என்ற சிந்தனைகள் ஒவ்வொரு பொறுப்புள்ள இளைஞன் மற்றும் இளைஞிக்கு வேண்டும்.

18 வயது பெண்ணும் 21 வயது பையனும் கல்லூரியில் பழகும்போது காதலில் ஈடுபட்டு கல்யாணம் செய்து கொண்டால் அவர்களுக்கு வாழ்க்கை நடத்த என்ன பொருளாதார வசதி இருக்கும்? என்ன உலக அனுபவம் இருக்கும்? இந்த நடைமுறை உண்மையைப் புரிந்து கொள்ளாமல் காதல் என்ற போர்வையைப் போர்த்துக்கொண்டு கல்யாணம் செய்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் தோற்று விடுகிறது.

இந்த மாதிரி கல்யாணங்களில் சாதி வேறுபாடும் கலந்து விட்டால் அந்தக் காதலர்களின் வாழ்க்கை இன்னும் பிரச்சினைக் குரியதாகிறது. இந்தப் பிரச்சினையை ஒரு சமுதாயப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அதற்கு மாற்று வழிகளாக ஏதாவது கருத்துகள்  மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இந்தப்பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். இந்த நிகழ்வுகளுக்கு வெறும் சாதிச் சாயம் மட்டுமே பூசி சாதி வெறியை அதிகரிப்பதினால் யாருக்கு என்ன பயன்?

கல்யாணம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணும் சமநிலையில் இருக்கவேண்டும். அதாவது அவர்கள் குடும்பம், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள் இத்தியாதி. இவை சமநிலையில் இருந்தால்தான் அவர்களின் திருமணம் வெற்றிகரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கலப்புத் திருமணங்களில் இந்த சம நிலை இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே அவைகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.

ஜாதி வெறி என்று சொல்வதினால் அது உடனே மறைந்து போகப் போவதில்லை. இதை அரசியலாக்குவதால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எந்த விடிவும் ஏற்படப்போவதில்லை. இந்த நிலை மாறுவதற்கு தமிழ் நாட்டில் இன்னும் பல காலங்கள் ஆகும். அதற்குள் கீழ் நிலையிலிருப்பவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு அவர்களுக்கு வழிகாட்டத் தகுந்த தலைவர்கள் வேண்டும். இதற்கெல்லாம் காலம் பிடிக்கும். அதற்குள் அவசரப்பட்டு கலப்புத் திருமணங்கள் செய்யும் ஜோடிகள் பல இன்னல்களுக்கு ஆளாகத்தான் வேண்டும்.

நம் சமுதாயம் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடையுமா, அடையாதா, அடையும் என்றால் எத்தனை காலம் பிடிக்கும் என்பதே ஒரு பெரிய கேள்விக் குறிதான்.

இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. சம்பந்தப்பட்டவர்களின் உணர்ச்சியைத் தூண்ட வல்லது. ஆகவே இதைப்பற்றி எழுதும்போது மிகவும் கவனமாகத்தான் எழுதுகிறேன். நான் இந்தப் பதிவு எழுதுவதின் நோக்கமே ஒரு சமுதாய மாற்றத்திற்கான சிந்தனைகள் வளர வேண்டும் என்பதற்காகவே. அப்படியும் சிலர் என் மீது தனிப்பட்ட முறையில் கோபப்படலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரச்சினையை விட்டு விட்டு தனி நபர் மீது கோபம் கொள்வது எந்த வகையிலும் அந்தப் பிரச்சினை தீர்வதற்கு உதவாது என்பதை உணர வேண்டும்.

வியாழன், 5 மே, 2016

கந்தனின் கோடைகால திண்டாட்டம்-பாகம் 2

                     
                          Image result for amazon logo
சென்ற பதிவின் கடைசி வரிகள்.

என் பேங்க் கணக்கில் இருந்து எட்டாயிரம் ரூபாய் அவன் கணக்கிற்குப் போனது. கேமரா வருகிறது, வந்து கொண்டே இருக்கிறது என்று ஈமெயில் செய்திகள் மணிக்கொரு தரம் வந்தன. நானும் வாயில் ஈ போவது தெரியாமல் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன். கடைசியில் ஒரு நாள் கேமரா பார்சல் வந்தே விட்டது.

அதை வாங்கி புதுப்பெண்டாட்டியைக் கொண்டாடும் நாசூக்கில் பிரித்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி.........


நான் கேட்ட மாடலுக்குப் பதிலாக அதற்கு இரண்டு படி கீழேயுள்ள மாடல் கேமராவை அனுப்பியிருந்தான். அதைப் பார்த்தவுடனேயே என் மனம் கீழே விழுந்த கண்ணாடிக்கோப்பை மாதிரி சுக்கு நூறாக உடைந்தது.

சிந்தனாகூலத்தில் ஆழ்ந்தேன். வீறுகொண்டெழுந்து போராடலாமா அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு இந்த மாடல் கேமராவையே வைத்துக்கொள்ளலாமா என்று இரு யோசனைகளுக்கிடையில் கொஞ்ச நேரம் போராடினேன். நாம் பிறந்த இனம் என்ன? வளர்ந்த விதம் என்ன? ஒரு பிரச்சினையை எதிர் கொண்டு போராடாமல் தோல்வியை ஒப்புக்கொண்டால் வருங்கால சந்ததியினர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற தன்மான உணர்ச்சி பிரவாகமாக ஊற்றெடுத்தது.

போராடத் தயாரானேன். முதலில் அந்தக் கம்பெனிக்கு ஒரு செய்தி அனுப்பினேன். உடனே பதில் வந்தது. அந்த த் தவறான மாடல் கேமராவைத் திருப்பி அனுப்பி விடுங்கள். நாங்கள் உங்கள் பணத்தை அனுப்பி விடுகிறோம் என்றார்கள்.

நான் இரண்டு கேள்விகள் கேட்டேன். 

1. நான் அந்தக் கேமராவை எப்படித் திருப்பி அனுப்புவது? அதற்கு வேறு தண்டச்செலவு செய்யணுமா? 

2. எனக்கு கேமராதான் வேண்டும், பணம் வேண்டாம். நான் இந்தக் கேமரா மீது  மிகுந்த ஆசை கொண்டுள்ளேன். அது கிடைக்காவிட்டால் நான் வாழ்க்கையை வெறுத்து விடுவேன்.

முதல் கேள்விக்கு பதில் - நீங்கள் அந்தக் கேமராவை அது வந்த பெட்டியிலேயே வைத்து நன்றாக பேக் செய்து வைத்திருங்கள். எங்கள் ஆள் வந்து வாங்கிக்கொள்வான் என்றார்கள்.

இரண்டாவது கேள்விக்கு பதில் - நீங்கள் கேட்ட கேமராவையே அனுப்புகிறோம் என்றார்கள்.

நான் இந்த வேண்டாத கேமராவை நன்றாக பேக் செய்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஒருத்தனும் வரவில்லை. மறுநாள் இன்டர்நெட்டில் தேடி அமேசான் கம்ப்ளெய்ன்ட் தளத்தைக் கண்டுபிடித்தேன். அதில் என்னுடைய பிரச்சினையை சொன்னேன். ஐந்து நிமிடத்தில் போனில் என்னைத் தொடர்பு கொண்டார்கள். நான் விபரம் கூறியவுடன் இன்று மாலைக்குள் அந்த பார்சலை எங்கள் ஆள் வந்து வாங்கிக்கொள்வான் என்றார்கள்.

மாலை வந்தது. பிறகு இரவும் வந்தது. ஒருவனையும் காணோம். தூங்கி எழுந்தேன். இதை விடக்கூடாது என்று திரும்பவும் கம்ப்ளெய்ன்ட் டிபார்ட்மென்டுக்கு புகார் அளித்தேன். அந்தப் புகாருக்கு பதில் கொடுத்த பெண்மணி இன்று கட்டாயம் அந்தப் பார்சலை வாங்க ஆள் வரும். நீங்கள் கவலைப்படவேண்டாம் என்று உறுதி அளித்தாள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் நான் இந்தியாவிலிருந்து புகார் அளித்தால் வேறு ஏதோ நாட்டிலிருந்து போன் பேசுகிறார்கள். அந்த நெம்பருக்கு திரும்ப பேச முயற்சித்தால் கனெக்ஷன் கிடைப்பதில்லை. சரி விதிப்படி நடக்கட்டும் என்று காத்திருந்தேன். அன்று மாலை ஒருவன் வந்து அந்தப் பார்சலை வாங்கிக்கொண்டு ஒரு ரசீது கொடுத்து விட்டுப் போனான்.

சரி, பாதி கிணறு தாண்டி விட்டோம் என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். நான்கு நாள் ஆகியது. அந்தக் கம்பெனிக்காரனிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. அவ்வளவுதான், நம் பணம் அரோகராதான் போலிருக்கிறது என்று முடிவு செய்து விட்டேன். இருந்தாலும் முயற்சிப்போம் என்று இன்டர்நெட்டை மேய்ந்ததில் இன்னொரு முனை கிடைத்தது. அதாவது இந்த மாதிரி நடந்தால் இந்த தளத்தில் புகார் அளித்தால் விசாரித்து நம் பணத்தைத் திருப்பிக்கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள்.



இதில் நான் என் புகாரைப் பதிந்தேன். அதற்கு உடனே பதில் வந்தது. உங்கள் புகாரைப் பெற்றுக்கொண்டோம். ஒரு மாதத்தில் இதைப்பற்றி விசாரித்து நீங்கள் சொன்னது உண்மையாக இருந்தால் உங்கள் பணம் திருப்பியளிக்கப்படும். அதற்குள் அந்த கம்பெனிக்காரன் நீங்கள் கேட்ட பொருளைக் கொடுத்து விட்டால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும் என்றார்கள். சரி, ஏதோ நாம் புகார் அளித்தால் பதிலாவது சொல்கிறார்களே, அந்த மட்டில் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

இந்தப் புகார் அளித்த விபரம் எல்லாம் அந்த கேமரா அனுப்பிய கம்பெனிக்காரனுக்கும் போகும் போல் இருக்கிறது. அவன் உடனேயே, ஐயா உங்கள் பொருளை அனுப்பி விட்டோம், இரண்டு நாளில் வந்து விடும், வந்தவுடன் இந்தப் புகாரை தயவு செய்து திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டியிருந்தான்.

இரண்டு நாளில் கேமரா பார்சல் வந்து விட்டது. பிரித்துப் பார்த்தேன். நான் கேட்ட மாடல் கேமராவே இருந்தது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் எல்லாம் அந்தக் கேமராவில் எடுக்கப்பட்டவைகளே. நான் கொடுத்த புகாரையும் வாபஸ் பெற்றுக்கொண்டேன்.


இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் அமேசான் கம்பெனி என்பது வெறும் புரோக்கர் கம்பெனிதான். அவன் ஒரு பொருளையும் உற்பத்தி செய்வதில்லை. பல வியாபாரக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு 
நம் போன்றவர்களிடமிருந்து ஆர்டர் பிடித்துத் தருகிறான். இதில் அமேசான்காரனுக்கு கமிஷன். அதை வைத்து அவன் பிழைக்கிறான். பொருட்கள் சப்ளை செய்யும் கம்பனிகளுக்கு அமேசான்காரனால் கூடுதல் பிசினஸ் கிடைக்கிறது.

இப்படி இவர்கள் இரண்டு பார்ட்டியும் நம்மால் பயனடைகிறார்கள். இதில் கூடுதலாக அமேசான்காரன் சொந்தமாக ஒரு கூரியர் சர்வீஸ் வைத்திருக்கிறான். இதன் மூலமாகத்தான் நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் எல்லாம் வருகின்றன. இதில் ஒரு கூடுதல் வருமானம் அமேசான் காரன் பெறுகிறான்.

ஆன்லைன் வியாபாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஆனாலும் இதில் சிக்கல்கள் இருக்கின்றன. நாம்தான் கவனமாக செயல்படவேண்டும்.


செவ்வாய், 3 மே, 2016

கந்தனின் கோடைகால கொண்டாட்டம்.


''To live is to change "  என்று இங்கிலீஸ்காரன் சொல்லிவைத்துப் போனான். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொன்மொழி. கல், மண், மரம் இவைகள்தான் மாறாமல் இருக்கும். அவை உயிரற்றவை. உயிருள்ள எதுவானாலும் மாறிக்கொண்டுதான் இருக்கும், இருக்கவேண்டும்.

சில வருடங்களுக்கு முன் ஒரு சோனி கேமரா வாங்கி உபயோகித்து வந்தேன். அது 14.2 MP + 4 x zoom  திறன் கொண்டது. வாங்கி ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. நன்றாகத்தான் படம் எடுத்துக் கொண்டு இருந்தது. ஆனாலும் என் விதி சதி செய்தது. சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் இதே மாதிரியான கேமரா 20.1 MP + 5 x zoom திறனுடன் கிடைப்பதாக அறிவித்திருந்தார்கள். அப்புறம் என்ன, உள்ளங்கையில் அரிப்பு ஆரம்பித்து விட்டது.

நான் வழக்கமாக இந்த மாதிரி சாமான்கள் வாங்கும் கடைக்குப் போனேன். சோனி கேமரா 20.1 mp யில் வேண்டும் என்று கேட்டேன். அவன் ஒரு மாடலைக் காட்டி இது 7000 ரூபாய் விலை என்றான். நான் சிறு வயது முதல் வறுமைக்கோட்டிற்கு சற்று அருகில்தான் வசித்து வந்தேன். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய்
இவைகளின் மதிப்பை நான் நன்கு அறிவேன். அவைகளைக் கையாள்வது எனக்கு சுலபமாக இருந்தது.

ஆனால் இந்த மாதிரி 7000 ரூபாய் சமாச்சாரம் எல்லாம் என் சிந்தனையின் வரம்பிற்கு அப்பாற்பட்ட விஷயம். அதனால் அந்த கேமரா அவ்வளவு விலை பெறுமா, அது நமக்குத் தேவையா என்றெல்லாம் யோசிக்க என் மூளை வேலை செய்யவில்லை. அதனால் உடனே அதை வாங்கிவிட்டேன்.

இப்போது என் கவலை இந்த பழைய கேமராவை என்ன பண்ணுவது என்பதுதான். இரண்டு கேமராக்களை வைத்திருந்தால் சக்களத்திச் சண்டை வந்து விடும். ஆகவே பழைய கேமராவை யாருக்காவது அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து எனக்குத் தெரிந்த ஒருவரின் குழந்தைக்குக் கொடுத்து விட்டேன்.

இந்த விவகாரத்தில் நான் செய்த ஒரு தவறு என்னவென்றால், இந்த சமாச்சாரத்தை என் வீட்டுக்காரியிடம் சொல்லி விட்டேன். அவள் சும்மா இருப்பாளா? என் இரு மகள்களிடமும் சொல்லி விட்டாள். அவ்வளவுதான் எல்லோரும் என்னை பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்கள். அந்தக் கேமராவை எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா என்று ஒவ்வொரு மகளும் கேட்க ஆரம்பித்தாள்.

நான் இருதலைக் கொள்ளி எறும்பு ஆனேன். அப்புறம் இன்னொரு சங்கதியும் சேர்ந்து கொண்டது. நான் புதிதாக வாங்கிய கேமராவில் உள்ள லென்ஸ் "சோனி லென்ஸ் ஆக இருந்தது. கேமரா வாங்கும்போது நான் இதைக் கவனிக்கவில்லை. நான் அன்பளிப்பு கொடுத்த கேமராவில் carl-zeiss லென்ஸ் இருந்தது. carl-zeiss லென்ஸ்தான் உலகப் பிரசித்தி பெற்ற லென்ஸ். எனக்கு மனதில் ஒரு ஏக்கம் வந்து விட்டது. அடடா, ஏமாந்து விட்டோமே என்ற எண்ணம் வந்து விட்டது.

                                 Image result for sony dsc w 830
உடனே ஏதாவது செய்தாக வேண்டுமே? அமேசானைச் சரண்டைந்தேன். அவன் ஆஹா, ஒரு இளிச்சவாயன் சிக்கினான் என்று சந்தோஷப்பட்டு, பலவிதமான கேமரா சரக்குகளை என் முன் கடை பரப்பினான். அந்த உபசாரத்தில் நான் மயங்கிப்போனேன். ஒரு கேமரா carl-zeiss லென்சுடன் இருந்தது. சரி, இதை வாங்கிக்கொள்கிறேன் என்றேன். அவன் உடனே என்னென்னமோ செய்தான். நானும் சாமி மாடு மாதிரி தலையை ஆட்டினேன்.

என் பேங்க் கணக்கில் இருந்து எட்டாயிரம் ரூபாய் அவன் கணக்கிற்குப் போனது. கேமரா வருகிறது, வந்து மொண்டே இருக்கிறது என்று ஈமெயில் செய்திகள் மணிக்கொரு தரம் வந்தன. நானும் வாயில் ஈ போவது தெரியாமல் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன். கடைசியில் ஒரு நாள் கேமரா பார்சல் வந்தே விட்டது.

அதை வாங்கி புதுப்பெண்டாட்டியைக் கொண்டாடும் நாசூக்கில் பிரித்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி.........

தொடரும்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

நான் கேமரா வாங்கின கதை

                                            Image result for box camera images

நான் சிறுவனாக இருந்தபோது கேமரா என்றாலே ஒரு ஆச்சரியம். அதில் பிலிம் சுருளைப் போட்டு படம் எடுத்து அந்த பிலிம் சுருளை இருட்டறையில் என்னமோ செய்து நெடிவ் பிலிம் என்று ஒன்றைக் காண்பிப்பார்கள். இன்றைய எக்ஸ்-ரே மாதிரி இருக்கும். தலைமுடி எல்லாம் வெள்ளையாக இருக்கும்.

அதை திரும்பவும் இருட்டறைக்குள் கொண்டுபோய் பிரின்ட் போடுகிறேன் என்று சொல்லி அப்புறம் அதைக் காயவைத்துக் காட்டுவார்கள். அப்போது ஆட்களின் முகம் ஓரளவு தெளிவாகத் தெரியும். எல்லாம் கருப்பு வெள்ளைப் போட்டோக்கள்தான்.

இந்த பிலிம் வாங்குவது, கேமரா வாங்குவது, போட்டோ எடுப்பது. பிலிமைக் கழுவி பிரின்ட் போடுவது என்று இந்த செயல்கள் மிகுந்த சள்ளை பிடித்தவை மட்டுமல்ல, மிகுந்த பொருட்செலவும் ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே கேமராக்களும் போட்டோ எடுப்பதும் வசதி படைத்தவர்களின் செயல்களாகவே இருந்தன.

                              Image result for box camera images

பல விழாக்களின் போது குரூப் போட்டோ எடுப்பார்கள். அதற்கு ஒரு நல்ல போட்டோகிராபரிடம் முன்பே சொல்லி வைக்கவேண்டும். விழாவில் பங்கு கொள்பவர்கள். இவர்கள் வரும்போதே பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வருவார்கள். இவர்கள் கேமராவைக் கொண்டுவருவதற்கு ஒரு தனி வாகனம் வேண்டும். சொன்ன நேரத்திற்குச் சரியாக அரை மணி நேரம் கழித்து வருவார்கள்.

வந்தவுடனேயே காலில் வெந்நித் தண்ணியைக் கொட்டிக் கொண்டவர்கள் மாதிரி பறப்பார்கள். எல்லோரும் சீக்கிரம் வரிசையாக நில்லுங்கள். நான் இன்னொரு இடத்திற்குப் போகவேண்டும் என்று பாவலா காட்டுவார்கள். எல்லோரும் நின்ற பிறகு ஒவ்வொருவரையும் அவர்கள் நின்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவார்கள். நீங்கள் உயரம், ஆகவே சென்டருக்குப் போங்கள், நீங்கள் குட்டை, முன்னுக்கு வாருங்கள், இப்படி சொல்லி எல்லோரையும் இடம் மாற்றி நிற்க வைப்பார்கள்.

இதற்குள் அவருடைய அசிஸ்டென்ட், கேமராவை அதன் ஸ்டேண்டில் மாட்டி வைத்திருப்பான். அந்த கேமரா ஏறக்குறைய ஒரு டிரங்க் பாக்ஸ் சைசில் இருக்கும். இந்தக் கேமராமேன் அந்தக் கேமராவை ஒரு கருப்புத்துணியால் மூடிக்கொண்டு தன் தலையை அதற்குள் விட்டுக்கொண்டு ஏதேதோ செய்வார். பிறகு பிலிமை அதற்குள் வைப்பார். அந்த பிலிம் ஒரு மரப்பெட்டிக்குள் இருக்கும். அதை அந்த கருப்புத்துணிக்குள் கொண்டு போய் கேமராவில் மாட்டுவார். பிறகு அதிலிருந்து மந்திரவாதி மாதிரி ஒரு பலகையை வெளியில் இழுப்பார்.

இந்த வேலைகள் எல்லாம் கருப்புத்துணிக்குள்ளேயே நடக்கும். பிறகு கேமரா பக்கத்தில் வந்து நின்றுகொண்டு எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பார். அப்புறமும் ஆட்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து நிறுத்துவார். அப்புறம் எல்லோரையும் நேராக கேமராவைப் பார்க்கச்சொல்லுவார். கண்களைச் சிமிட்டாதீர்கள் என்பார் அப்புறம் ஸ்மைல் பிளீஸ் என்று சொல்லிவிட்டு கேமரா லென்ஸை மூடியிருக்கும் மூடியை ஒரு ஸ்டைலாக எடுத்து விட்டு ஒரு செகன்ட்டில் மூடி விடுவார்.

இவ்வளவுதான் படம் எடுத்தாயிற்று. ரிசல்ட் தெரிய இரண்டு நாளாகும். எங்களுக்கு வழக்கமாக போட்டோ எடுக்கும் போட்டோகிராபர் இரண்டு படம் எடுப்பதாகச் சொல்லுவார். ஆனால் ஒருபடம்தான் எடுப்பார். முதலில் எடுக்கும் படத்தில் பிலிம் இருக்காது. இப்படி எங்களை ஏமாற்றிக்கொண்டு வந்தவர் ஒரு சமயம் இரண்டு தடவையும் பிலிம் போடாமல் படம் எடுத்து விட்டார். அப்புறம் இன்னொரு நாள் திரும்பவும் போட்டோ எடுத்தோம்.

இதற்குப் பிறகு கைக்கு அடக்கமான பாக்ஸ் கேமராக்கள் வந்தன.


இவைகளிலும் பிலிம் போடவேண்டும். ஒரு பிலிம் ரோலில் இருந்து 12 முதல் 16 படங்கள் வரை எடுக்கலாம். ஆனால் இதைக் கையாள்வதற்கு கொஞ்சம் அனுபவம் தேவை. தவிர இவைகளில் ஃபிளேஷ் இல்லாததால் வெளிச்சம் குறைவான இடங்களில் படம் எடுக்க முடியாது. படம் எடுத்த பிறகு பிலிம் ரோலை ஜாக்கிரதையாக வெளியில எடுத்து போட்டோ ஸ்டுடியோவில் கொடுத்தால் அதைக் கழுவி பிரின்ட் போட்டு போட்டோக்களைக் கொடுப்பார்கள். 

போட்டோ எடுத்தவுடன் பிலிம் ரோலை வெளியில் எடுத்து பிரித்துப் பார்த்து எங்கே என் படத்தைக் காணோமே என்று கேட்ட மகா புத்திசாலிகள் எல்லாம் அந்தக் காலத்தில் உண்டு. 

இந்த வேலைகள் எல்லாம் செலவு வைக்கும் வேலைகள். பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். சாதாரண ஜனங்கள் கேமராவைத் தொட்டுக் கூடப் பார்க்கமுடியாது.

பிறகு சினிமா வேகமாக வளர்ந்தபோது அதற்குத் தேவையான 35 மிமீ பிலிம்களும் அதிகமாக உற்பத்தியாயின. அவைகளை ஏன் தனிப்பட்ட நபர்களின் உபயோகத்திற்கும் பயன்படுத்தக்கூடாது என்று யாரோ ஒரு மகானுபாவனுக்குத் தோன்றி, 35 மிமீ கேமராக்கள் வந்தன. அவை மிகவும் பிரபலமடைந்தன. அந்த பிலிம் ரோலை டெவலப் செய்து பிரின்ட் போட ஆட்டோமேடிக் மிஷின்கள் வெளியாட்டிலிருந்து இறக்குமதியாகி, சக்கைப் போடு போட்டன.

பிறகு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வளர்ந்தவுடன் டிஜிடல் கேமராக்கள் வந்தன. இவைகளில் பிலிம் போடவேண்டிய செலவு இல்லை. ஆகவே இவை சீக்கிரத்தில் பிரபலமானது. தொழில் நுட்பம் வளர வளர இவைகளில் புதுப்புது நூதன உத்திகள் புகுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான வகை கேமராக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றதை விட நான்தான் உசத்தி என்று போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் கொடுக்கின்றன.

பிறகு செல்போனில் கேமராவைப் புகுத்தினார்கள். இப்போது கேமரா ஏறக்குறைய வெற்றிலைபாக்கு போடுவது போல் ஆகிவிட்டது. இருந்தாலும் போட்டோவிற்கு இன்னும் மவுசு இருக்கிறது. விடியாவிற்கு இன்னும் அதிக மதிப்பு இருக்கிறது. ஒவ்வொரு கல்யாணத்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து போட்டோ மற்றும் விடியோ எடுக்கிறார்கள்.

இப்படி உலகம் போய்க்கொண்டிருக்கையில் நான் மட்டும் தனித்தீவாக செயல்பட முடியுமா? ஆகவே நானும் ஒரு கேமரா வாங்கினேன். ஊள்ளூர் கேமராக்கள் என் போன்ற பெரிய மனுசனுக்கு பொருந்தாதாகையால் அமேசான் போய் அதாங்க அமேசான் இன்டர்நெட் கடைக்குப் போய் ஒரு டப்பா கேமரா வாங்கினேன். ஏனென்றால் அங்கு பல லட்சம் ரூபாய் விலையில் கூட கேமராக்கள் இருக்கின்றன.

நான் ஏதோ ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை என்கிற மாதிரி சில ஆயிரம் ரூபாய்களில் ஒரு கேமரா வாங்கினேன்.
                         
                               Image result for sony DSC w830 camera
இந்தக் கேமராவில் இன்னும் சீரியசாகப் படங்கள் எடுக்கவில்லை. சீக்கிரமே எடுத்து பதிவில் போடுகிறேன்.

திங்கள், 25 ஏப்ரல், 2016

20. கனவு கலைந்தது.


ஆஹா, இந்திய நாடு சீக்கிரமே வல்லரசாகப்போகிறது என்ற நினைப்பில் ஆனந்தமாக இருந்தேன். திடீரென்று ஒரு இடிச்சப்தம் கேட்டது. உடனே மழையும் பெய்ய ஆரம்பித்தது.

என்னடா இது, வேளை கெட்ட வேளையில் மழை பெய்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என் மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது. ரிடையர் ஆனாலும் ஆனீங்க, எப்பப் பாரு தூக்கம்தானா, எழுந்திரீங்க, வாசல்ல யார் யாரோ வந்து நிக்கறாங்க, என்னன்னு போய்ப்பாருங்க, என்றாள்.

அப்பத்தான் நான் இவ்வளவு நேரமும் கனவு உலகத்தில் இருந்திருக்கிறேன் என்று புரிந்தது. எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்தேன். அங்கு கார்ப்பரேஷன் பிளம்பர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். நாளைக்கு உங்கள் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்போகிறோம், உங்கள் பைப் கனெக்ஷன் உடைந்தாலும் உடையலாம் என்றார்.

சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றேன். கொஞ்சம் சம்திங் கொடுத்தால் அந்தப் பசங்களை உங்கள் பைப்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன் என்றான். சரியென்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு திரும்பினால் இன்னொருவன்.

நீங்க யாருங்க என்றேன். நான் டெலிபோன் டிபார்ட்மென்டுங்க. நாளைக்கு ரோடைத் தோண்டும்போது உங்கள் டெலிபோன் வயர் அறுந்தாலும் அறுகலாம் என்றான். அய்யய்யோ, டெலிபோன் இல்லாவிட்டால் இன்டர்நெட் இருக்காதே. அத்துடன் நம் உயிரும் இருக்காதே என்று நினைத்து அதற்கு என்ன பண்ணலாம் என்றேன். வயர் அறுகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை கொஞ்சம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றான்.

சரி என்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பினால் இன்னொருத்தன். நீ யாரப்பா என்றேன். நான் எலெக்ரிசிட்டி டிபார்ட்மென்ட்டுங்க என்று தலையைச் சொறிந்தான். எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அவனுக்கும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வந்து காபி குடித்தேன்.

நம் நாடு என்னவாகும் என்று யோசனையில் மூழ்கினேன். நம் மக்கள் என்ன கஷ்டம் வந்தாலும் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று வாழ்வார்கள் என்று புரிந்தது. கனவில் வரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய பதிவைப் படிப்பதற்கே பயப்படும் ஒரு இனம், நிஜ வாழ்வில் மாற்றங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பது என் மர மண்டையில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார். கனவுதான் காண முடியும் போல் இருக்கிறது.

(எங்க வீட்டு ரோஜாப்பூ)

வியாழன், 21 ஏப்ரல், 2016

19. அவசரச் செய்தி

                                          Image result for Indian election 2016

வந்த அவசரச்செய்தி என்னவென்றால், அனைத்து மாநிலங்களிலும் சில ஓட்டுச் சாவடிகளை "பூத் கேப்சர்" செய்வதற்காக குண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.


இந்தக் குண்டர்களை ஓட்டுச் சாவடியில் இருக்கும் நமது கிங்கரர்களே கவனித்துக்கொள்வார்கள் என்றாலும் ஓட்டுச் சாவடிக்குப் பக்கத்தில் சலசலப்பு எதற்கு என்று, அவர்கள் அனைவரையும் நமது தூதரகத்திற்கு கொண்டுவரச் சொன்னேன்.

எல்லோரும் வந்து மீட்டிங் ஹாலில் உட்கார்ந்தார்கள். எதற்காக பூத் கேப்சர் பண்ண முயன்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும்போதும் இதுதான் எங்களுக்கு வேலை. இந்தந்த பூத்துகளை கேப்சர் செய்யுங்கள் என்று வேட்பாளர்கள் சொல்லுவார்கள். அதன்படி செய்வோம். அடுத்த எலெக்ஷன் வரும்வரை நாங்கள் வாழ்வதற்கான செலவிற்கு பணம் கொடுப்பார்கள். அதை வைத்து பிழைத்துக்கொண்டிருந்தோம்.

இந்த எலெக்ஷனில் எங்களை ஒருவரும் கூப்பிடவில்லை. எங்களுக்குத் தெரிந்த தொழில் இது ஒன்றுதான். அதனால்தான் இந்த வேலைக்குக் கிளம்பினோம் என்றார்கள்.

அப்படியா சேதி, உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பணம் கொடுக்கப்படும். நீங்கள் அனைவரும் எல்லைக் காவல் படையில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளம் உங்கள் வீட்டில் கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

பிறகு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. 98 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. நடக்க முடியாதவர்களும் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களையும் தவிர அனைவரும் ஓட்டுப்போட்டிருந்தார்கள்.

மறு நாள் காலையில் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தது. மதியத்திற்குள் முடிவுகள் வெளியாகிவிட்டன. தேசீயக் கட்சி, எதிர் பார்த்தது போல் 90 சதம் இடங்களில் வெற்றி பெற்றார்கள். எதிர்க்கட்சிகளுக்கு 10 சதம் இடங்கள் கிடைத்தன. இது எப்படி நடந்தது என்று அனைத்து மக்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அந்த ரகசியம் தேவலோக தூதரகத்தில் இருக்கும் சூபர் கம்ப்யூட்டருக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.

மாநில சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதினைந்து நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன, மாநில அரசின் பொறுப்புகள் என்ன, அவைகளை நிறைவேற்றுவது எப்படி ஆகிய விஷயங்களில் அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதே மாதிரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லோரும் நாட்டை ஆளுவதற்கு தயாராகி விட்டார்கள்.

இந்தப் பயிற்சிகளில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் வருமாறு.

1. இந்திய நாட்டில் இனி லஞ்சம் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது.

2. இலவசங்கள் எந்த ரூபத்திலும் இல்லை.

3. அனைவரும் வேலை செய்யவேண்டும்.

4. தொழிற்சாலைகள் தரமான பொருள்களையே உற்பத்தி செய்யவேண்டும்.

5. நாட்டில் பிச்சை எடுப்பது ஒழிக்கப்பட்டு விட்டது.

6. எல்லோரும் சமம். யாருக்கும் எந்தவிதமான சலுகைகளும் இல்லை.

7. பொருட்களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் 30 சதம் லாபம் உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

8. வியாபாரத்தில் வாங்கும் விலைக்கு மேல் 10 சதம் மட்டுமே அதிகப் படுத்தி விற்கலாம்.

9. அனைத்து அரசு நிறுவனங்களும் மக்களின் சேவைக்காகவே தரமாக பணியாற்றும்.

10. ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடும்.

11. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் நகரின் மையப் பகுதிகளில்  தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

12. நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் அரசு அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

13. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து விதிகள் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும்.

14. கல்விக்கூடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். தனியார் கல்விக்கூடங்களை அமைப்பது தடுக்கப்படுகிறது.

15. போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும்.

16. பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களுக்கு எந்த ஆடம்பர வசதிகளும் தரப்படமாட்டாது. மத்திய மந்திரிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்யலாம்.

17. டில்லியில் மீட்டிங் வைத்து மாநிலங்களிலிருந்து மந்திரிகளையும், செயலர்களையும் கூப்பிடும் வழக்கம் அடியோடு நிறுத்தப்படுகிறது.

இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவைகளை எனக்குத் தெரிவிக்குமாறு எல்லோருக்கும் அறிவித்தேன். பாராளுமன்றமும் சட்டசபைகளும் செயல்பட ஆரம்பித்தன. நாடு ஒழுங்கான பாதையில் போக ஆரம்பித்தது.