வெள்ளி, 17 ஜூன், 2016

ஒரு காதல் கதையும் ஒரு கொலையும்

                                   Image result for காதலர்கள் படங்கள்

ஒரே ஒரு ஊர்ல ஒரு இளிச்சவாய விவசாயி. அவனுக்கு ஒரு பொண்டாட்டியும் ஒரு வைப்பாட்டியும். பொண்டாட்டிக்கு ஒரு பையன், ரெண்டு பெண்கள். வைப்பாட்டிக்கு எத்தனைன்னு தெரியலை.  பணம் நெறய பேங்கில போட்டு வச்சிருக்கான். குடும்பத்த ஒரு ஊர்ல விட்டுட்டு இவன் வைப்பாட்டியோட வேற ஊர்ல விவசாயம் பாக்கறான்.

ஆனா எழுதப் படிக்கத் தெரியாது. சரி, பொண்ணாவது நல்லாப் படிக்கட்டும் என்று பொண்ணைப் படிக்க வைக்கிறான். பொண்ணு புத்தகப் படிப்பை விட வாழ்க்கைப் படிப்பை அதிகமாகப் படிக்கிறாள். அவ காலேஜுக்குப் போற வழில ஒரு தெல்லவாரி. எட்டாம்  கிளாசோட படிப்பு போதும்னு நின்னுட்டான். அவன் (வயது 20) நல்லா ஸடைலா டிரஸ் பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு இருந்தான்.

நம்ம கதாநாயகி (வயது 18) அவனக்கண்டு மயங்கிட்டாள். அப்பன்காரன் பேங்க் கணக்கிலிருந்து இவதான் பணம் எடுக்குற வழக்கம். கதாநாயகனுக்கு சொந்தமா பைக் இல்லை. இவ அப்பன்காரன் கணக்கில இருந்து அறுபது ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொடுத்து அவனை பைக் வாங்கச்சொல்லி இருக்கிறாள்.

அந்த பைக்கில ரெண்டு பேரும் ஊர் சுற்றியிருக்கிறார்கள். இது அப்பன்காரனுக்குத் தெரிஞ்சு போச்சு. பொண்ணைக் கூப்பிட்டு கண்டிச்சிருக்கிறான்.  பொண்ணோட அம்மா பொண்ணு கட்சி. அம்மாவும் பொண்ணும் யோசனை பண்ணுனாங்க. அப்பன்காரனைப் போட்டுத்   தள்ளினாத்தான் நாம நம்ம இஷ்டம் போல் இருக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

நம்ம கதாநாயகி நம்ம கதாநாயகனைக் கலந்து ஆலோசனை பண்ணினாள். அவன் கொஞ்சம் பணம் கொடுத்தால் நான் ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கதாநாயகி ஒன்றரை லட்சம் ரூபாய் பேங்கிலிருந்து எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் நன் நணபர்கள் மூன்று பேரைச் சேர்த்துக்கொண்டு அவன் விவசாயம் பார்க்கும் ஊருக்குப்போய் காத்திருந்திருக்கிறார்கள்.

அந்த விவசாயி தன் பண்ணையில் இருக்கும் மாடுகளிலிருந்து பால் கறந்து அதை பால் சொசைட்டியில் ஊற்றுவதற்காக காலை 4 மணிக்கு புறப்பட்டிருக்கிறான். ஒரு மறைவான இடத்தில் இந்த நான்கு பேரும் அவனை வழிமறித்து அருவாட்களால் வெட்டிச் சாய்த்து விட்டு வந்து விட்டார்கள்.

போலீஸ் வந்து பார்த்தது. உடனடியாக ஏதும் துப்புக் கிடைக்கவில்லை. பிணத்தைக் குடும்பத்தார்கள் எடுத்து அடக்கம் செய்து விட்டார்கள். போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே நம் கதாநாயகிக்கு பயம் வந்து விட்டது. கோர்ட்டில் போய் சரண்டைந்து  விட்டாள். பிறகு நம் கதாநாயகனும் அவன் கூட்டாளிகளும் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். எல்லோரும் இப்போது ஜெயில் களி சாப்பிட்டுக்கொண்டு சுகமாக இருக்கிறார்கள்.

இந்தக் கதையின் நீதி என்னவென்றால் தன் பணத்தை தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

                               Image result for காதலர்கள் படங்கள்

புதன், 15 ஜூன், 2016

அரசியல் கட்சி ஆரம்பித்து வளர்ப்பது எப்படி?

                           

நான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என்று யோசித்தேன். அதற்குக் காரணம் இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் அக்-மார்க் சுயநலவாதிகளால் நடத்தப்படுகிறது என்ற எண்ணம் என் மனதினுள் தோன்றியதே. இந்த நாட்டிற்கு நம்மாலான சேவை செய்யாவிட்டால் நாம் பிறந்ததிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று என் மனச்சாட்சி சொல்லியது.

இதற்காக ஒரு ஆராய்ச்சி செய்தேன். அரசியல் கட்சியில் சேர்ந்து வளர்ந்தவர்களின் கதைகளை எல்லாம் விசாரித்து அறிந்தேன். அந்த ஆராய்ச்சியில் நான் அறிந்தவைகளை எல்லோரும் தெரிந்து பயனடையட்டும் என்று இங்கே பதிவு செய்கிறேன்.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் நீங்கள் இப்போது இருக்கும் ஏதாவதொரு கட்சியில் தொண்டனாகச் சேரவேண்டும். அப்படி தொண்டனாகச் சேருவதற்கு அந்தக் கட்சியில் இப்போது இருக்கும் ஒரு முக்கியப் புள்ளியிடம் அடியாளாகச் சேரவேண்டும். அடியாள் என்றால் என்னவென்று உங்களுக்கு இன்னேரம் புரிந்திருக்க வேண்டும்.

ஓரிரு ஆண்டுகள் இவ்வாறு சேவை புரிந்தபின் நீங்களே ஒரு தலைவனாக மாறவேண்டும். இதற்கான வழி முறைகள் இந்த இரண்டாண்டு அடியாள் பயிற்சியில் தெரிந்து கொண்டிருக்கவேண்டும். தலைவன் என்றால் உங்களுக்கு கீழே நாலைந்து அடியாட்கள் இருக்கவேண்டும்.

அடியாட்களுக்கு தினமும் பிரியாணியும் குவார்ட்டரும் சப்ளை செய்யவேண்டும். அதற்கு நிதி வசதி வேண்டும். இந்த நிதி வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு சில யுத்திகள் உண்டு. முதலில் உங்கள் மனச்சாட்சியை அழித்து விடவேண்டும். உங்கள் பகுதியில் இருக்கும் வியாபார ஸ்தலங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று ஒரு சந்தா வசூலிக்கவேண்டும். அந்தப் பகுதியில் என்ன அடிதடி நடந்தாலும் நீங்கள் அங்கே தவறாமல் ஆஜராகி கட்டைப் பஞ்சாயத்து நடத்தி தீர்ப்பு சொல்லவேண்டும். இதற்கு மாமூல் வசூலிக்கவேண்டும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏதாவதொரு கட்சியின் எம்எல்ஏவைப் பிடித்துக்கொள்ளவேண்டும். கட்சி கூட்டங்களுக்கெல்லாம் நீங்கள் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அவருக்குச் செலவு வைக்காமல் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் மூலமாக அப்படியே ஒரு மந்திரியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்படி உங்கள் செல்வாக்கு பெருகியவுடன் உள்ளாட்சித் தேர்தல்களில் நின்று கவுன்சலராகி விட வேண்டும்.

அடுத்த படி சட்டசபைத்தேர்தலில் நின்று ஒரு எம்எல்ஏ ஆகிவிடவேண்டும். இதற்குள் உங்களுக்கு உள்ளூரில் ஏகப்பட்ட தொண்டர்களும் அடியாட்களும் சேர்ந்திருப்பார்கள். அடுத்த சட்டசபைத் தேர்தல் வரும்போது உங்கள் இனமக்களை வளைத்துப்போட்டு ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து விடுங்கள்.

அவ்வளவுதான். அரசியல் கட்சி ஆரம்பித்தாயிற்று. நீங்கள் தலைவர் ஆகிவிட்டீர்கள். இனி செய்யவேண்டியது ஸ்விஸ் பேங்கில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டியதுதான்.

ஞாயிறு, 12 ஜூன், 2016

இந்த உலகத்தின் வாழ்நாள் எவ்வளவு?

Image result for life is beautiful

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் வாழ்கின்றது. அவைகள் பிறக்கின்றன, வாழ்கின்றன, இறக்கின்றன. மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. அல்லது இப்படிக்கூறலாம். பிரச்சினைகளை அவை சாதாரணமாக, இயற்கையாக ஏற்றுக்கொள்கின்றன.

மனிதன் ஒருவன்தான் தன்  சிந்திக்கும் திறனால் இயற்கையுடன் இசைந்து வாழ மறுக்கிறான். இயற்கையை தன் மனதுப்படி வளைக்க எண்ணுகிறான். வளைக்கிறான். இன்றைய பல நவீன உபகரணங்களுக் செயல் சக்திகளும் அதன் விளைவே.

ஆனால் அதனால் சில வேண்டாத விளைவுகளும் ஏற்படுகின்றன. அவைகளைக் களைய மனிதன் முற்படும்போது பல தடங்கல்கள் வருகின்றன. அவைகளில் முக்கியமான ஒன்று மனித இனத்தின் ஜனத்தொகை.

மனிதனின் வியாதிகளைக் கட்டுப்படுத்தி அவன் வாழ்க்கையில் உள்ள இயற்கை எதிர்ப்புகளை நீக்கி விட்டபடியால் மனிதன் அதிக நாள் உயிருடன் இருக்கிறான். மனிதனின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. தவிர அவனுடைய அதீத தேவைகளுக்காக பல இயற்கை வளங்களை அழிக்க நேரிடுகிறது.

இப்படியே ஜனத்தொகை அதிகரித்து, அவனுடைய தேவைகளுக்காக இயற்கை வளங்களையும் அழித்துக்கொண்டே போனால் இந்த உலகம் என்ன ஆகும்? விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.ஆனாலும் இயற்கையைக் காப்பி அடித்து ஒரு குண்டுமணி அரிசியைக்கூட நாம் இது வரை பெறவில்லை.

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு பிரளயம் வந்து உலகம் அழியும் என்று நம் புராண இதிகாசங்கள் சொல்கின்றன. அது உண்மையாகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

வெள்ளி, 10 ஜூன், 2016

நான் ஒரு பைத்தியக்காரன்


                                  Image result for பைத்தியக்காரன்

எல்லோரும் அநேகமாக தாங்கள் போகும் வழியில் தங்கியிருக்கும் ஏதோவொரு பைத்தியக்காரனைப் பார்த்திருப்பார்கள். அந்த உருவம் உங்கள் கண்களின் வழியே மூளைக்குச் சென்றிருக்குமானால் ஒரு சில விநாடிகள் ஒரு பரிதாபம் உங்களுக்குள் தோன்றியிருக்கும். அதன் பிறகு உங்கள் அன்றாட வாழ்வின் போராட்டங்கள் இந்த நினைவை அழித்திருக்கும்.

அடுத்த தடவை இந்த மாதிரி ஒரு பைத்தியக்காரனைப் பார்த்தால் ஒரு சில மணித்துளிகள் நின்று அவனைக் கவனியுங்கள். நீங்கள் கவனிப்பதை அவன் பார்த்தால் கூட அதைக் கண்டு கொள்ள மாட்டான். அவன் அருகே மூன்று அல்லது நான்கு சாக்கு மூட்டைகள் இருக்கும். அதில் பலதரப்பட்ட குப்பைகள், தெருவில் கிடக்கும் சாமான்களைச் சேகரித்து வைத்திருப்பான். அவைகள் ஏதோ மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் போன்று அவைகளைப் பாதுகாப்பான்.

உங்களுக்கு அவைகள் வெறும் குப்பைகளாகத்தான் தெரியும். இவன் ஏன் இந்தக் குப்பைகளை இவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்கிறான் என்று உங்களுக்குப் புரியாது. அவன் பைத்தியக்காரன்தானே, அப்படித்தான் இருப்பான் என்று உங்கள் மனதைச் சமாதானம் செய்து கொண்டு உங்கள் வேலையைப் பார்க்கப் போய் விடுவீர்கள்.

நேற்று நான் நடைப் பயிற்சி சென்றுவிட்டுத் திரும்பும்போது ஒரு போதி மரத்தின் கீழ் சில நொடிகள் நிற்க வேண்டி  வந்தது. அப்போது எனக்கு இந்தப் பைத்தியக்காரனின் சிந்தனை வந்தது. அப்போது திடீரென்று என் மூளியில் ஒரு பொறி தட்டியது. ஆஹா, அந்தப் பைத்தியக்காரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாமும் எவ்வளவு வேண்டாத பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம் என்று தோன்றியது.

வேண்டாத பொருட்கள் என்று நான் குறிப்பிடுவது நாளைக்குத் தேவைப்படலாம் என்று எண்ணி எவ்வளவு பொருட்களை நாம் சேகரிக்கிறோம்? ஆனால் அவைகளை நாம் வருடக்கணக்காக உபயோகப்படுத்தியதே இல்லை. இனி வரும் காலங்களிலாவது அவைகளை உபயோகப்படுத்துவோமா என்றும் தெரியாது. சரி, அவைகளை உபயோகப்படுத்தக்கூடிய யாருக்காவது கொடுக்கலாமே என்றால் அதற்கும் நம் மனது இடம் கொடுப்பதில்லை. ஆனாலும் பைத்தியக்காரன் சாக்கு மூட்டைகளைப் பாதுகாத்து வைத்திருப்பது போல் அவைகளை நாம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.

 அப்படி நான் பாதுகாப்பாக வைத்திருக்கும் சில பொருட்கள்- தேவைக்கு அதிகமான பணம், உபயோகப் படுத்தாத நாட்குறிப்பு ஏடுகள், பேனா, பென்சில், துணிகள், கம்ப்யூட்டர் சிடிக்கள், இன்னும் பல. இப்போது சொல்லுங்கள், நான் பைத்தியக்காரன்தானே!

புதன், 8 ஜூன், 2016

கவர்ச்சி வேண்டும் எங்கும் எதிலும் !

                          Image result for attractive packaging to attract customers

கவர்ச்சிகரமாக பேக் செய்யப்பட்ட பொருட்கள் வாங்குபவர்களை அதிகமாக ஈர்க்கின்றன என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. பொருட்களின் தரம் அந்த பேக்கேஜிங்க்கின் கவர்ச்சியைப்போல் நன்றாக இருக்கும் என்று மக்களின் உள்மனது சொல்வதே இதற்குக் காரணம்.

                               

                                           Image result for indian cine actress gallery

தெருவில் நடந்து போகும்போது ஒரு பெண் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றால் அவளைத் திரும்பிப் பார்க்காத ஆண்களும் உண்டோ? ஜவுளிக் கடைக்குச் செல்வதாக இருந்தால் கவர்ச்சியாக அலங்காரம் செய்து வைத்துள்ள கடைக்கே நாம் போகிறோம். ஓட்டல், சினிமா, எதுவாக இருந்தாலும் கவர்ச்சியாகத் தோற்றம் அளிக்கும் இடத்திறகே எல்லோரும் போகிறோம்.

பதிவுலகம் நிஜ உலகின் ஒரு நீட்சியே அல்லவா? அப்புறம் இங்கும் மனிதன் கவர்ச்சியை எதிர்பார்ப்பதில் தவறு என்ன? பதிவுகளில் கவர்ச்சி எதில் இருக்க முடியும்? தலைப்பில்தானே! ஆகவே தங்கள் பதிவிற்கு அதிக வரவேற்பு வேண்டுவோர் தலைப்பை கவர்ச்சிகரமாக வைப்பதில் தவறு என்ன? தலைப்பைப் பார்த்துதான் வாசகர்கள் அனைவரும் பதிவிற்குள் வருகிறார்கள். என்னுடைய போன பதிவில் அப்படியொரு தலைப்பை வைத்ததினால்தான் மளமளவென்று ஹிட்கள் ஏறின.

இது ஒரு வகை ஏமாற்று அல்லவா என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. நீங்கள் அலுவலகத்திற்குப் போகும்போதும் அல்லது ஒரு கல்யாணத்திற்கு போகும்போதும் எப்படி உடை உடுத்துகிறீர்கள்? வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அதே உடையில் இருக்கிறீர்களா?
இல்லையல்வா? அது ஒரு வகை ஏமாற்றல்தானே?

இதனால்தான் அந்தக்காலத்தில் யாரோ ஒருவன் "உலகமே ஒரு நாடக மேடை" என்று சொல்லிவிட்டுப் போனான். அந்த நாடக மேடையில் நாம் ஒவ்வொருவரும் அந்தந்த பாத்திரத்திற்குத் தகுந்தமாதிரி வேடம் போடுகிறோம். அது மாதிரிதான் பதிவிற்கும் அந்தந்த நேரம் போல் தலைப்பு வைக்கலாம். தவறில்லை.
                                      Image result for blogger icon

திங்கள், 6 ஜூன், 2016

நேத்து ராத்திரி யம்ம்மா தூக்கம் போச்சுதே யம்ம்மா

                         

நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் தாத்தா காலத்தில் பக்கத்து கிராமத்தில் இருந்து கோயமுத்தூருக்கு குடியேறினவர்கள். அப்போது கோயமுத்தூரில் புதிதாக லேஅவுட் போட்ட ஆர்எஆஃபுரம் பகுதியில் ஒரு இடம் வாங்கி கிராமத்து பாணியில் ஒரு ஓட்டு வீடு கட்டி குடியிருந்தார்கள். நான் அந்த வீட்டில்தான் பிறந்தேன்.

நான் ஏழாவது படிக்கும்போதுதான் வீட்டிற்கு மின்சார கனெக்ஷ்ன் வந்தது. மின்சாரம் லைட்டுகளுக்கு மட்டும்தான். மின் விசிறிகளெல்லாம் பெரிய பணக்காரர்கள் வீட்டில்தான் இருக்கும். அப்போதெல்லாம் கோவையில் மே மாதம் மட்டும்தான் பகலில் கொஞ்சம் புழுக்கமாக இருக்கும். ஒரு மூங்கில் விசிறியை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டினோம். இரவு வேளைகளில் புழுக்கமாக இருந்ததாக நினைவு இல்லை.

                               Image result for ஓலை விசிறி

நான் படித்து முடித்து வேலைக்குப் போய் பாட்டியுடன் தனிக்குடித்தனம் வைத்தபோதுதான் ஒரு மேஜை விசிறி வாங்கினேன். பிறகு கல்யாணம் ஆகி குடும்பம் பெரிதான பிறகுதான் சீலிங்க் பேஃன் வாங்கினேன். அதாவது என்னுடைய 35 வது வயதில்.

பிறகுதான் வசதிகள் பெருகின. மாடர்ன் டாய்லெட், கட்டில், பஞ்சு மெத்தைகள், இத்தியாதி. இவைகளுக்குப் பழகிய பிறகு எங்காவது உறவினர்கள் வீட்டிற்குப் போனால் இந்த வசதிகள் இல்லாவிட்டால் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். பழக்கம் மனிதனை எப்படி மாற்றுகிறது பாருங்கள்.

என்னுடைய 75 வது வயதில் வீட்டை மாற்றிக் கட்டின பிறகுதான் ஏசி மெஷின் மாட்டினேன். இப்படியாக படிப்படியாக வளர்ந்து இப்போது வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் எல்லா வேலைகளும் முடங்கிப்போய்விடுகின்றன.

அப்படித்தான் நேற்று இரவு மின்சாரம் போய்விட்டது. விடியும் வரை வரவில்லை. அவ்வளவுதான். நேற்று ராத்திரி யம்மா என்று பாடவேண்டியதாய்ப் போயிற்று,
  
                 

சனி, 4 ஜூன், 2016

கோவை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் மூடு விழா

                                
டிரைவரைக் கூப்பிட்டு ஆபீசின் முன்னால் மாட்டப்பட்டிருந்த சங்கத்தின் போர்டைக் கழட்டச்சொன்னேன். பிறகு எல்லோரையும் கூப்பிட்டு ஆலோசனை நடத்தினோம்.

பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் சங்கக் கணக்கில் எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்று கேட்டேன். அவர் ஏழு கோடியே ஐம்பது லட்சம் இருக்கிறது என்றார். சரி அப்படியா என்று கேட்டுக் கொண்டேன்.

டிரைவரைக் கூப்பிட்டு ஐயா. நடந்தவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா. இனி நீங்கள் வேறு வேலைதான் பார்த்துக்கொள்ளவேண்டும். இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்தபடியால் உங்களுக்கு ஒரு பத்து லட்சம் ரூபாய் கொடுக்கிறோம். அந்தப் பணத்தில் ஒரு டாக்சி வாங்கி ஓட்டிப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அவருக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்து அனுப்பினேன். அவர் சங்கத்தின் கார் சாவியை என் மேஜை மீதி வைத்து விட்டு நன்றி சொல்லி விடை பெற்றார்.

ஸ்டேனோவைக் கூப்பிட்டு, இதோ பாருங்க அம்மா, சங்கத்தை நாங்கள் மூடுகிறோம். இந்தக் கம்ப்யூட்டர், அதற்குண்டான மேஜை, நாற்காலி ஆகியவைகளை நீங்கள் எடுத்துக்கொண்டு போய் எங்காவது ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்ததிற்காக உங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுக்கிறோம் என்றேன். அந்த அம்மா சந்தோஷமாக விடை பெற்றுச் சென்றார்.

பொதுவிடம் சொன்னேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. நான் என்னென்னமோ கனவு கண்டு கொண்டிருந்தேன். அத்தனையும் வீணாகப் போய்விட்டது. உங்களையும் சென்னையிலிருந்து இங்கே கூப்பிட்டு அலைக்கழித்து விட்டோம். என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி சமாதானப் படுத்தினேன். உங்கள் சிரமங்களுக்காக உங்களுக்கு இருபது லட்சம் ரூபாய் இந்தப் பையில் இருக்கிறது. எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒரு இன்னோவா சேலன்ஜர் ஏசி டாக்சியைக் கூப்பிட்டேன். அந்த டிரைவரிடம் இவரைப் பத்திரமாக சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போய் அவர் வீட்டில் விட்டு விட்டு திரும்பி வந்து எனக்குத் தகவல் சொல்லவேண்டும் என்று சொல்லி அவருக்கு விடை கொடுத்து அனுப்பினேன்.

அந்த டாக்சி எங்கள் கூட பணி புரிந்த நண்பருடைய சொந்தக்காரருடையது. எங்களுக்கு எப்போது டாக்சி வேண்டுமானாலும் அவர்தான் அனுப்புவார். அந்தக் கம்பெனியின் எல்லா டிரைவர்களும் நல்ல பழக்கம். அந்த டிரைவரைக் கூப்பிட்டு, இப்போது நீங்கள் கூட்டிப்போகும் நண்பர் ஒரு மிக மிக முக்கியமானவர். மற்ற பயணிகளை நடத்துவது போல் இவரை நடத்தாதீர்கள். டோல்கேட் கட்டணங்களை எல்லாம் நீங்களே கட்டுங்கள். நடுவில் நல்ல ஓட்டல்களில் நிறுத்தி அவருக்கு அவ்வப்போது டிபன் காப்பி வாங்கிக்கொடுங்கள். பில் நீங்கள் கொடுத்து விடுங்கள். அவரை வீட்டில் விட்டவுடன் ஏதாவது டிப்ஸ் கொடுத்தால் வாங்கக்கூடாது.

தவிர, நான் இப்போது சொல்லும் லிஸ்ட்டில் உள்ளவைகளை உடனே வாங்கிக் கொண்டு அவரை அவர் விட்டில் இறக்கி விடும்போது அந்தப் பொருட்களை அந்த வீட்டு அம்மாவிடம் கொடுத்து விடுங்கள்.

1. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக் - 5 கிலோ
2. ஜே.ஆர் இங்கிலீஷ் பேக்கரியில் ஒரு ஐந்து வகை கேக்குகள் ஒவ்வொரு டஜன்.
3. காளம்பாளையம் விதையில்லா புளூ திராக்ஷை - 4 பெட்டி
4. மல்கோவா மாம்பழம் - 50
5. காஷ்மீர் ஆப்பிள் - 5 கிலோ
6. சிறுமலை வாழைப் பழம் - 100
7. ஊட்டி உருளைக்கிழங்கு - 10 கிலோ
8. கல்லார் மங்குஸ்தான் - 10 கிலோ
9. ராம்ராஜ் கடையில் ஐயா சைசிற்கு ஒரு பட்டுச்சட்டை, ஒரு பட்டு வேஷ்டி
10. நம்ம பிஎஸ்ஆர் கடையில் அம்மாவிற்கு ஒரு பட்டு சேலை.

எல்லாவற்றையும் கம்பெனி கணக்கில் வாங்கிக் கொண்டு பிற்பாடு பில்களை என்னிடம் கொடுங்கள். சென்று வாருங்கள் என்று அவர்களை வழி அனுப்பி வைத்தேன்.

இப்போது நாங்கள் மூன்று பேர் மட்டும் இருந்தோம். நான், உபதலைவர், காரியதரிசி ஆகியோர். அவர்களிடம் நான் சொன்னேன். இந்த அட்வென்சர் ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரி ஒரு வழியாய் முடிந்தது. இனி நாம் நம் வழக்கமான சாப்பிடுவதும் தூங்குவதுமான வேலையைப் பார்க்கலாம்.

சங்க சொத்துக்களை என்ன பண்ணலாம் என்று யோசித்தோம். சங்கத்திற்கு வாங்கின காரை நான் வைத்துக்கொள்கிறேன். ஆபீசில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களை நீங்கள் இருவரும் எடுத்துக்கொள்ளுங்கள். பேங்கில் செலவு போக மீதி இருக்கும் ஏழு கோடியில் நான் மூன்று கோடி எடுத்துக்கொள்கிறேன். உங்கள் இருவருக்கும் ஆளுக்கு இரண்டு கோடி வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் சந்தோஷமாக ஒத்துக்கொண்டார்கள்.

இப்படியாக கோவை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் மூடு விழாவை வெற்றிகரமாக முடித்து விட்டு ஆபீஸ் சாவியைக் கட்டிடத்துக்காரரிடம் கொடுத்து விட்டு சங்கத்தின் காரில் ஏறி மூவரும் ரெசிடென்சி ஓட்டலுக்குப் போய் மூடு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி விட்டு அவரவர்கள் வீடு போய்ச்சேர்ந்தோம்.
                    

வியாழன், 2 ஜூன், 2016

கைக்கு விலங்கு வந்தது.

                   Image result for rioting crowd

அன்று மாலை வெளியான செய்தித்தாள்களில் கிறுக்கர்கள் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளை விவரமாகப் பிரசுரித்திருந்தார்கள். அவைகளின் சாராம்சம்.

தமிழ்நாட்டில் விரைவில் இனக்கலவரம் மூளப்போகிறது. தமிழ் நாட்டிலுள்ள மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்களை வெளியேற்ற போராட்டம் வெடிக்கப் போகிறது. வெளி மாநிலத்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு குடி பெயரவும். இத்தியாதி, இத்தியாதி.

இந்தச் செய்திகளைப் பார்த்தவுடன் ஏதோ அனர்த்தம் விளையப்போகிறது என்று என் உள் மனது எச்சரித்தது. சரி வருவது வரட்டும் என்று தூங்கப்போனேன். காலையில் எழுந்து அன்றைய செய்தித்தாள்களைப் படித்தால் பகீரென்றது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள் எல்லோரும் இன்று பந்த் நடத்தப்போகிறோம் என்று அறிக்கை விட்டிருந்தார்கள்.



"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்ற பாடலைப் பாடியபடியே சங்க அலுவலகத்திற்குப் போனேன். சங்க அலுவலகமே தெரியாத அளவிற்கு அந்தத் தெரு முழுவதும் ஜனக்கூட்டம். எள் போட்டால் எள் கீழே விழாது. அந்த அளவிற்குக் கூட்டம். என்னவென்று நைசாக விசாரித்தேன். இந்தக் கூட்டம் கிறுக்கர்க்ள தமிழ்ச்சங்கத்திற்கு எதிராக பந்த் செய்யும் கூட்டம் என்றார்கள்.

நான், உபதலைவர், காரியதரிசி, பொது ஆகிய நாங்கள் கட்டிடத்தின் பின் வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் எங்கள் அலுவலகத்தினுள் பிரவேசித்தோம். இதே வழியாக ஏற்கெனவே டிரைவரும் ஸ்டெனோவும் ஆபீசிற்குள் வந்திருந்தார்கள். வெளியிலிருந்து சத்தம் அதிகமாகிக்கொண்டு வந்தது.

டிரைவரிடம் அவர்கள் என்ன கோஷம் போடுகிறார்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார். தமிழ்நாடு எங்களுக்கே என்று அவரவர்கள் பாஷையில் கோஷம் போடுகிறார்கள் என்றார். பரவாயில்லையே, தமிழ்நாட்டின் தலைவிதி இந்த அளவிற்குப் போய்விட்டதா என்று நினைத்துக்கொண்டு, பொதுவிடம் காவல் துறைக்கு போன் பண்ணுங்கள் என்றேன்.

அதற்குள் போலீஸ் சைரன்கள் சத்தம் பலமாகக் கேட்டது. டிரைவர் ஜன்னல் வழியாக நைசாக எட்டிப்பார்த்து விட்டு. பத்து ஜீப்களில் போலீஸ் ஆபீசர்களும் மூன்று பஸ்களில் போலீஸ் ஜவான்களும் வந்திருக்கிறார்கள் என்றான். நல்லதாகப் போயிற்று என்றேன். சற்று நேரத்தில் நான்கு போலீஸ் ஆபீசர்களும் பத்துப் பதினைந்து போலீஸ் ஜவான்களும் ஆபீசுக்குள் வந்து சேர்ந்தார்கள்.

அவர்களில் முதன்மையாகத் தெரிந்தவர் "யாரய்யா இந்த சங்கத்தின் தலைவர் என்றார். நான் பவ்யமாக நான்தான் என்றேன். இவர்கள் எல்லாம் யார் என்றார், நான் விவரம் சொன்னேன். அவர் பின்னால் திரும்பி இந்த டிரைவர் மற்றும் ஸ்டேனோவை விட்டு விட்டு மற்றவர்களை அரெஸ்ட் செய்யுங்கள் என்றார். உடனே போலீஸ் ஜவான்கள் எங்கள் கைகளில் விலங்கு மாட்ட வந்தார்கள்.

நான் அந்த சீனியர் போலீஸ் ஆபிசரிடம், சார் நாங்கள் எல்லாம் பெரிய உத்தியோகத்தில் இருந்து ரிடைர்டு ஆனவர்கள், தவிர எல்லோரும் சீனியர் சிடிசன்ஸ், எங்களுக்கு விலங்கு மாட்டி அவமானப்படுத்தாதீர்கள், நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் வருகிறோம் என்றேன்.

எங்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கலெக்டர் ஆபீசுக்கு கூட்டிப்போனார்கள். அங்குள்ள மீட்டிங்க் ஹாலில் எங்களை உட்காரவைத்து போலீஸ்காரர்கள் சுற்றிலும் நின்று கொண்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து கலெக்டர் அம்மா (உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்தார்கள். நாங்கள் எல்லோரும் எழுந்திருந்து வணக்கம் சொன்னோம்.

அந்த அம்மா என்னைப் பார்த்து " என்னா மேன், என்னா தகறார் பண்றே? என்றார்கள். அவர்கள் கலெக்டராக வந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. இந்த இரண்டு மாதத்தில் அவர் கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தைகள் இந்த மூன்று மட்டும்தான். நான் பவ்யமாக எழுந்திருந்து தமிழில் ஏதோ சொல்லப்போனேன். அதற்குள் போலீஸ் கமிஷனர் ஆங்கிலத்தில் விலாவாரியாக எங்கள் சங்கத்தின் செயல்பாடுகளை கலெக்டர் அம்மாவிடம் சொன்னார்.

எனக்கு அவர் சொன்னது அரைகுறையாகப் புரிந்தது. அதாவது எங்களை பயங்கர தீவிரவாதிகள் என்று சொல்லுகிறார் என்பது வரைக்கும் என் அரைகுறை ஆங்கில அறிவிற்குப் புரிந்தது. கலெக்டர் அம்மாவும் ஆங்கிலத்தில் அவரிடம் இந்த ஆட்கள் எல்லாம் மிகவும் வயதானவர்களாகத் தெரிகிறது. உங்கள் மாமூல் முறைகளைக் கையாண்டீர்களானால் இவர்கள் மேல் லோகம் போய் சேர்ந்து விடுவார்கள். அப்புறம் என் பெயர் கெட்டுவிடும். கொஞ்சம் அறிவுரை சொல்லி சங்கத்தை உடனடியாக மூடச்சொல்லி அனுப்புங்கள் என்றார்.

போலீஸ் கமிஷனர் எங்களை வெளியில் கூப்பிட்டு வந்து, கலெக்டர் அம்மா சொன்னதைக் கேட்டீர்கள் அல்லவா? உடனடியாகப் போய் சங்கத்தைக் கலைத்து விட்டு அவரவர்கள் வீட்டுக்குப் போய் ஒழுங்காக இருங்கள் என்றார். நாங்களும் அவருக்கு மிக்க நன்றி சொல்லிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து ஆபீஸ் வந்து சேர்ந்தோம்.

ஆபீசில் கட்டிடத்தின் சொந்தக்காரர் எங்களுக்காகக் காத்திருந்தார், எங்களைப் பார்த்தவுடன் "என்ன சார் வயதானவங்களாச்சேன்னு உங்களுக்கு கட்டிடத்தை வாடகைக்குக் கொடுத்தால் இப்படி கலாட்டா பண்ணுகிறீர்களே" என்று சத்தம் போட்டார். நாங்கள் அவரைப் பார்த்து மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா. தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டது. நாங்கள் இப்போதே ஆபீசைக் காலி செய்து விடுகிறோம். நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றோம். இதைக்கேட்டவுடன் அவருக்கு வாயெல்லாம் பல்லாக ஆகி விட்டது. சரி, சீக்கிரம் காலி பண்ணுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

நாங்கள் சங்கத்தைக் கலைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டோம்.

செவ்வாய், 31 மே, 2016

தமிழன் என்பது ஒரு நாடக வேடமே !

                           Image result for தமிழன் வரலாறு

பொது உறவு அதிகாரியாக இருக்க பிரபல பதிவர் ஒத்துக்கொண்டபடியால் அவரை உடனே அப்பதவிக்கு நியமனம் செய்து அவரும் உடனடியாக வேலையில் சேர்ந்து விட்டார். அவருக்கு நான் கொடுத்த முதல் வேலை என்னவென்றால் நம் சங்கத்தின் செயல்பாடுகளை நல்ல முறையில் மக்களிடம் போய்ச்சேறுமாறு நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதே. அவரும் சரியென்று சொல்லிவிட்டு தன் வேலையைக் கவனிக்கப்போய்விட்டார்.

ஒரு மாதம் சென்ற பிறகு அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் அவருடன் இரண்டு உதவிப் பேராசிரியர்களும் கூடவே பத்து ஆராய்ச்சி மாணவ, மாணவிகளும் வந்தார்கள். தேனீர் அருந்தியவுடன் விவாதத்தை ஆரம்பித்தோம்.

த.து.தலைவர்தான் ஆரம்பித்தார். கி.த.ச. தலைவரே, நீங்கள் கேட்ட விவரத்தைப் பற்றி சிந்தித்தேன். சிந்திக்க சிந்திக்க குழப்பம்தான் மிஞ்சுகிறதே தவிர ஒரு தெளிவு கிடைக்க மாட்டேனென்கிறது.

நான் -  இதிலென்ன குழப்பம். தமிழ் இனம் எவ்வளவு தொன்மையானது? இந்த இனத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு கடினமா?

ததுத (அதாவது தமிழ்த்துறைத் தலைவர்) - மண்ணின் மைந்தர்கள் என்று பார்த்தால் வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசுபவர்கள்தான் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். அவர்களைத்தான் தமிழர் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.  தமிழ் நாட்டில் வசிக்கும் பலர் வெளியில் தமிழிலும் வீட்டிற்குள் தெலுங்கு, கன்னடம், மலயாளம், ஹிந்தி, மராட்டி, பஞ்சாபி என்று இப்படி பல மொழிகளில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை எப்படி தமிழன் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

நான் - இது ஒரு சரியான குழப்பமான நிலைதான். அப்படி வீட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசக்கூடிய தமிழர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

ததுத - இந்தக் கணக்கை அரசு புள்ளி விவர ஏடுகளிலிருந்து சேகரித்தேன். அந்த விவரத்தைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.

நான் - பலவாயில்லை, சொல்லுங்கள்

ததுத - அப்படிப்பட்டவர்கள் மொத்தம் 24 சதவிகிதம் மட்டுமே இருக்கிறார்கள்.

நான் - அப்போ தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை சமூகம்தானா, இதென்ன அநியாயம் ?

ததுத - அது மட்டுமா? இந்த மாதிரி தமிழர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்து கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியே போனால் 2030 ல் தமிழ் நாட்டில் தமிழர்களே இருக்க மாட்டார்கள். எல்லோரும் அமெரிக்கா போயிருப்பார்கள். அங்கே அவர்கள் கிரீன் கார்டு வாங்கி அமெரிக்கர்களாக மாறியிருப்பார்கள்.

நான் - என்னய்யா இது அக்கிரமம்? தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்க மாட்டார்களா? அப்புறம் இங்கு இருப்பவர்கள் என்ன மொழி பேசுவார்கள்?

{இதற்குள் திமுதிமுவென்று ஒரு பதினைந்து பேர் விவாத அரங்கினுள் நுழைந்தார்கள். நான் "பொது" (அதாவது பொது உறவு அதிகாரி) யைப் பார்த்தேன். அவர் சொன்னார். நீங்கள் சொன்ன மாதிரி நமது கருத்துகள் மக்களுக்கு போய்ச்சேர நான்தான் இந்த பத்திரிக்கை நிருபர்களை வரச்சொன்னேன் என்றார். சரி அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து அமரச்சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு விவாதத்தைத் தொடர்ந்தோம்.}

ததுத - இதற்கு ஒரு வழி இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்களை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்றுவதுதான் அந்த வழி.

நான் - இதை சட்ட பூரவமாகச் செய்ய முடியாதே. மத்திய அரசு ஒத்துக்கொள்ளாதே.

ததுத -  இதற்கு வேறு ஒரு வழி இருக்கிறது. தமிழர்களை விட்டு ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம். தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று கோஷம் போடலாம். அப்போது இந்த வந்தேறிகள் பயந்து கொண்டு அவரவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள்.

நான் - இது ஒரு நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. "பொது" வைப் பார்த்து இதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி விட்டு கூட்டத்தை முடித்தேன்.

எல்லோரும் மதிய விருந்து உண்டுவிட்டு கிளம்பிப்போனார்கள்.

ஞாயிறு, 29 மே, 2016

தமிழன் என்பவன் யார்?

                              Image result for board meeting images
எங்கள் விவாதத்தில் முதலில் விவாதிக்கப்பட்ட பொருள் - தமிழன் என்பவன் யார்? என்பதே.

பல நூற்றாண்டு காலத்திற்கு முன் பாரதத்தின் தென் பகுதியில் தமிழர்கள் வசித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போதைய கேரளப் பகுதியும் தமிழ் நாடாகவே இருந்தது. தமிழகத்தில் மூன்று பேரரசர்கள் அதாவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். இந்த மூன்று அரசர்கள் ஆண்டு வந்த பகுதிகளில் உள்ளவர்கள் தமிழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

அப்போது போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத காரணத்தால் மக்கள் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குப் போவது அரிதாக இருந்தது. ஆகவே இந்த மூவேந்தர்களின் ஆட்சிப்பகுதியில் குடியிருந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில் குடியிருந்தார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காலம் காலமாக மாறாமல் அப்படியே இருந்து வந்தன.

இவர்களே தமிழர்கள் என்று அழைக்கப்ப்ட்டார்கள். அவர்கள் வாழ்ந்த முறையே தமிழர்களின் கலாச்சாரம் என்று அழைக்கப்ப்ட்டது. இந்தக்காலத்தில்தான் அரசர்கள் தினமும் தங்கள் சபா மண்டபத்தில் வந்து உட்கார்ந்தவுடன் மந்திரியைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி "மந்திரியே, மாதம் மும்மாரி பெய்கிறதா" என்பதே. மந்திரியும் இந்தக்கேள்விக்குப் பதிலாக, "ஆம் அரசே, மாதம் மும்மாரி பெய்கிறது" என்று பதில் கூறுவார்.

பிற்காலத்தில் போக்குவரத்து வசதிகள் பெருகின. தமிழ் நாட்டின் வளத்தினால் ஈர்க்கப்பட்டு பல தரப்பு மக்களும் இங்கே வரத்தொடங்கினார்கள். அதில் குறிப்பாக வட நாட்டிலிருந்து ஆரியர்களும் தெலுங்கு தேசத்திலிருந்து தெலுங்கர்களும் கன்னட தேசத்திலிருந்து  கன்னடர்களும் ஆவார்கள்.

இதன் பிறகே வர்ணாசிரம நியதிகள் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டன. நான்கு வர்ணங்களும் ஒவ்வொரு வர்ணத்திற்குள்ளும் நூற்றுக்கணக்கான ஜாதிகளும் வரையறுக்கப்ப்ட்டன. ஒவ்வொரு ஜாதிக்கும் வாழும் முறைகள் தனித்தனியாக உருவாகின. இதன் பிறகுதான் மக்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட ஆரம்பித்தன.

உன் ஜாதி பெரிதா, என் ஜாதி பெரிதா என்கிற போட்டி உருவாக ஆரம்பித்தது. இந்தப் போட்டியை சிலர் ஆதரித்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இதில் சில சௌகரியங்கள் இருந்தன.

இப்படி உருவானதுதான் ஜாதிகள். சில ஜாதிகள் தீண்டத்தகாதவை என்று குறிப்பிடப்பட்டன. சில ஜாதிகள் மேல் ஜாதிகள் என்று குறிப்பிடப்பட்டன. ஆளும் வர்க்கத்தினர் இந்த ஜாதி வேறுபாடுகளை தங்கள் சொந்த நலனுக்காக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மன்னர்கள் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. அவர்கள் ஆட்சியும் மறைந்து மக்களே மக்களை ஆட்சி புரியும் காலம் வந்தது. தற்போது அந்த முறைதான் இருக்கிறது. மக்கள் பல விதமான குண நலன்கள் உடையவர்களாய் இருந்தபடியால் யாரை ஆட்சி செய்ய அனுமதிக்கலாம் என்று யோசித்தபோது ஒரு நல்ல விடை கிடைத்தது. "தடியெடுத்தவன் தண்டல்காரன்" என்று ஒரு முது மொழி தமிழில் உள்ளது. அப்படியே தடியெடுத்தவர்கள் எல்லோரும் ஆட்சிக்கு வந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் பல தேசங்களிலிருந்து பல பாஷைகள் பேசும் மக்கள் தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்து இங்கேயே பலமாக வேறூன்றி விட்டார்கள். ஆகவே தற்போது தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தமிழர்களா அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மட்டும் தமிழர்களா என்ற குழப்பம் நிலவுகிறது. மண்ணின் மைந்தர்கள் என்று யாரை அடையாளம் காண முடியும்? "வந்தேறிகள்" என்று யாரைச் சொல்வது?

இந்தக் குழப்பங்களுக்குத்  தீர்வு வேண்டும் என்று வந்திருந்த தமிழ்த் துறைத் தலவரைக் கேட்டுக்கொண்டேன்.  அவர் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டவுடன் எனக்கு குழப்பம் அதிகமாகி விட்டது. எனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். நான் இதைப்பற்றி தீர சிந்தித்து ஒரு தெளிவான கருத்துடன் வருகிறேன். பிறகு நம் விவாதத்தைத் தொடரலாம் என்றார்.

அதுவும் சரிதான் என்று அவர்களை அனுப்பி வைத்தேன். அவர்கள் போவதற்கு முன் அவர்களுக்கு நல்ல சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அவர்களுக்கு கைச்செலவிற்காக ஒரு கவரும் கொடுக்கப்பட்டது.

இந்த மாதிரி விவகாரங்களைக் கவனிப்பதற்கு ஒரு நல்ல "பொது உறவுகள் அதிகாரி" இருந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு யாரைப்போடலாம் என்று யோசித்தபோது பிரபல பதிவர் திரு நடனசபாபதி அவர்கள் இந்த சங்கத்தில் பணி புரிய ஆசைப்பட்ட செய்தி தெரிந்தது. ஆஹா, நல்ல அனுபவம் வாய்ந்தவராயிற்றே, அவருடைய சம்மதத்தைக் கேட்டு அவரையே நம் சங்கத்தின் பொது உறவு அதிகாரியாக நியமனம் செய்து விடுவோம் என்று தீர்மானித்தோம்.

வெள்ளி, 27 மே, 2016

தமிழன் என்பவன் ஒரு தனி இனமல்ல !




அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் அவருடன் இரண்டு உதவிப் பேராசிரியர்களும் வந்திருந்தனர். அவர்களை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் புதிய அலுவலகத்தின் வரவேற்பறையில் சந்தித்தோம்.

அரசு கொடுத்த மான்யத்தில் கிறுக்கர்கள் தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு அலுவலகம் ஏற்பாடு செய்தது பதிவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்போது தெரிந்து கொள்ளுங்கள். மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு சதுர அடி பரப்பில் நகர மத்தியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டாவது மாடியில் குளிரூட்டப்பட்ட அலுவலகம். லிப்ட் வசதி உண்டு. வாடகை வெறும் 50000 ரூபாய் மட்டுமே. மின்கட்டணம், அலுவலக பராமரிப்பு ஆகியவைகளுக்குத் தனியாக 5000 ரூபாய்.

அலுவலகத்திற்கு வேண்டிய மேஜை, நாற்காலிகள் இத்தியாதிகள் வாங்க 10 லட்சம் ஆனது. தலைவர், உபதலைவர், காரியதரிசி ஆகியோருக்கு தலா 50000 ரூபாயில் ஆப்பிள் ஸ்மார்ட் போன் கொடுக்கப்பட்டது. அலுவலகத்திற்கு தனியாக ஒரு லேண்ட்லைன் போன், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர், பிரின்டர் இத்தியாதிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய். கம்ப்யூட்டரைப் பராமரிக்க மற்றும் மற்ற அலுவலக வேலைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு இளம் தமிழச்சியை அலுவலக உதவியாளராக மாதம் 10000 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தினோம்.

இன்டீரியர் டெக்கரேட்டர் ஒருவரைப்பிடித்து அலுவலகத்திற்குள் சிலபல டெக்கரேஷன்கள் ஒரு 10 லட்சம் ரூபாயில் செய்தோம். ஆங்காங்கே செயற்கைச் செடிகள் பொருத்தமாக வைக்கப்ப்ட்டன. அலுவலக உபயோகத்திற்காக ஒரு ஏசி கார் 20 லட்சம் ரூபாயில் வாங்கினோம். இந்தக் காரை ஓட்டுவதற்கு ஒரு நல்ல ஓட்டுனரை ஏற்பாடு செய்தோம். ஓட்டுனர் சம்பளம் மாதம் 15000 ரூபாய்.

இவை எல்லாம் வீண் செலவுகள் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் இனம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஓர் இனத்தை முன்னேற்ற விரும்பும் ஒரு சங்கத்தின் அலுவலகம் எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்கவேண்டாமா? அதற்காகத்தான் இந்த செலவுகள் செய்தோம்.

சங்க ஆபீஸ் தடபுடல்களைப் பார்த்த அம்மா பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவரும் கூட வந்த உதவிப்பேராசிரியர்களும் மலைத்துப்போய் விட்டார்கள். அவர்களை ஆசுவாசப் படுத்த குளிர் பானங்கள் கொடுத்து குடிக்கச்செய்தோம். பிறகு எங்களது செயல் திட்டங்களைப் பற்றி பேச ஆரம்பித்தோம்.



                              

செவ்வாய், 24 மே, 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கத்திற்கு அரசு மான்யம்

                 

இந்த சட்டசபைத்தேர்தலில் கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கம் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து தமிழக அரசு இச்சங்கத்தின் செயல்பாடுகளுக்காக 10 கோடி ரூபாய் மான்யம் கொடுத்திருக்கிறது.

சங்கம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த அரசு தமிழர்களை எந்தெந்த வகையில் முன்னேற்றியிருக்கிறது என்று ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுக்கவேண்டும். அவ்வளவுதான்.

சங்கத்தின் தலைவர் உடனே பொதுக்குழுவைக் கூட்டி இந்த விபரத்தை அறிவித்தார். காரியதரிசி உடனே ஒரு விண்ணப்பம் வைத்தார். இந்தப் பணத்தை பராமரிக்க ஒரு பொருளாளர் வேண்டுமே என்றார்.

தலைவர் (அதாவது நான்) இந்த சுண்டைக்காய் பணத்தைக் கையாள்வதற்கு ஒரு பொருளாளர் வேண்டுமா, எல்லாம் நானே பார்த்துக்கொள்வேன் என்று அந்த விண்ணப்பத்தை நிராகரித்தேன். பொருளாளர் போட்டால் அப்புறம் அவன் சொல்றமாதிரி நான் ஆடவேண்டி வரும் என்பது எனக்குத் தெரியாதா என்ன?

நீங்கள் (உபதலைவர் மற்றும் காரியதரிசி) போய் உடனடியாக அந்த "அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரை உடனடியாக இங்கு கூட்டி வாருங்கள் என்றேன். அவர்களும் அந்த வேலையாக சென்றார்கள்.

தொடரும்.

ஞாயிறு, 22 மே, 2016

கஜானா காலி என்று புலம்ப முடியாது.

                                  Image result for கன்டெய்னர்

வழக்கமாக தமிழ் நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பார்கள். அப்படி ஒரு கட்சி பதவிக்கு வந்தவுடன் வைக்கும் முதல் ஒப்பாரி, சென்ற அரசு கஜானாவைக் காலி செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த முறை அம்மா அவர்கள் அப்படி பிலாக்கணம் வைக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் கஜானாவும் அவர்களுடையது. காலி செய்ததும் அவர்களே. அப்புறம் எப்படி பிலாக்கணம் வைக்க முடியும்?

இந்த மாதிரி பணத்தை பல கன்டெய்னர்களில் வைத்து இருந்தால் அவைகளை கரையான் அரித்து விடாதா? இந்தக் கவலையில் எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வருவதில்லை. அதில் ஒரு சில கோடிகளை அப்படியே என் வீட்டிற்குத் தள்ளி விடக்கூடாதா? நானும் அவைகளின் மேல் சில காலம் படுத்துத் தூங்குவேன் அல்லவா? அம்மன்தான் கண் திறக்கவேண்டும் !

இப்படி தனிப்பட்ட கஜானாக்கள் இருக்கும்போது ரிசர்வ் வங்கி வேறு தனியாக கஜானாக்களை வைத்துப் பராமரிக்க வேண்டுமா என்பது என் இன்னொரு சந்தேகம். கஜானாக்களை பராமரிக்கும் வேலையை ஏன் தனியார்களுக்குக் கொடுக்கக்கூடாது? ரிசர்வ் பேங்க் கவர்னர் இந்த யோசனையை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் நன்கு அனுபவப்பட்ட கஜானா பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.