சனி, 25 பிப்ரவரி, 2017

எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்!

Image result for lean manImage result for big man    ➨➨➨

காலம் மனிதனின் வாழ்வில் பல மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாகும்.

என்னுள் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றத்தைப் பற்றி இங்கு விவரிக்கிறேன்.

நான் உயர் நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது துப்பறியும் நாவல்களில் ஆர்வம் உண்டாயிற்று. என் ஒன்று விட்ட அண்ணன் இந்த ஈடுபாட்டை என்னுள் ஏற்படுத்தினான். இந்த ஆர்வம் ஒரு கட்டத்தில்   (கெரசின், பெட்ரோல் ஆகிய எதுவுமில்லாமலேயே) கொழுந்து விட்டு  எரிய ஆரம்பித்தது.

எப்படியென்றால் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக்  கொண்டிருக்கும் போதே, டெஸ்க்குக்கு அடியில் இந்த நாவல்களை வைத்துப் படிக்கும் அளவிற்குப் போய்விட்டது. வீட்டில் இரவு என்னேரமானாலும் எடுத்த புத்தகத்தைப் படித்து முடிக்காமல் தூங்க மாட்டேன்.

ஒரு மணி நேரத்தில் தமிழ் புத்தகங்களானால் 130 பக்கங்கள் படிப்பேன். ஆங்கில புத்தகங்களானால் 90 பக்கங்கள் படிப்பேன். ஆனந்த விகடன், குமுதம் வாரப் பத்திரிகைகளை தவறாமல் வாங்கி அவைகளில் வரும் தொடர்கதைகளை தனியே பிரித்து வைத்து, அது முடிந்தவுடன் பைண்ட் செய்து வைப்பேன்.

இப்படியெல்லாம் படித்துக் கொண்டிருந்த நான் இப்போது ஆனந்த விகடன் குமுதம் பத்திரிக்கைகளைத் தொடுவதே இல்லை. அவைகள் முன் மாதிரி இல்லை என்பதுவும் ஒரு காரணம். மற்ற கதைகளைப் படிப்பதற்கு ஆர்வம் இல்லை.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் ஒரு "டேப்" எனக்கு பரிசளித்தார். அதில் அமேசான்காரன் இலவசமாகவும் சலீசான விலையிலும் பல புத்தகங்களைக் கொடுத்தான். அவைகைள வாங்கி வைத்துள்ளேன். அதில் பல துப்பறியிம் கதைகள்

அவைகளைப் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஒரு நான்கைந்து பக்கங்கள் பிடித்தால் அதில் வரும் சஸ்பென்சைத் தாங்க முடிவதில்லை. நரம்புகள் புடைக்கின்றன. இரத்தம் சூடேறுகிறது. நெஞ்சு படபடக்கிறது. பிறகு அந்தக் கதையைத் தொடர முடிவதில்லை. மறு நாள் படிக்க ஆரம்பித்தால் இன்னும் ஒரு நான்கு பக்கங்களே படிக்க முடிகிறது.

இப்படியாக ஒரு கதையை முடிக்க பத்துப் பதினைந்து நாட்கள் ஆகின்றன. நினைத்துப் பார்த்தேன். ஒரு நானூறு பக்க நாவலை மூன்று மணி நேரத்தில் படித்த நான் எப்படி ஆகி விட்டேன் என்று நினைக்கும் போதுதான் என் வயதின் தாக்கம் புரிகிறது. இனி அந்த நாட்கள் வரப்போவதில்லை. மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.