சனி, 17 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-1)

எல்லோரும் தாங்கள் பிரபல பதிவராக ஆகவேண்டுமென்றுதான் விரும்புவார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் (இருந்தால் மட்டுமே) மேலே படிக்கவும். அந்த ஆசை இல்லையென்றால் உடனே இந்த தளத்தை மூடிவிட்டு வேறு உபயோகமான வேலையைப்பார்க்கவும்.
ஆனால் இவை அனைத்தும் என் சொந்தக்கருத்துக்களே. யாருடைய மனதையும் எள்ளளவும் புண்படுத்துவதற்காக இந்த பதிவை எழுதவில்லை. அப்படி யாராவது தங்கள் மனது மிகவும் புண்பட்டு விட்டதாக எண்ணினால் அவர்களுக்கு என் அட்வான்ஸ் அபாலஜூஸ் (apologies). (சரியான தமிழ் வார்த்தைகளை யோசிக்க சோம்பல்). புதிதாக பதிவு எழுதப்போகும் உங்களுக்காக மிகவும் எளிய முறையில் படிப்படியாக கொடுத்திருக்கிறேன்.
முதல் படி :-
நீங்கள் முதலில் ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டும். இந்த பதிவைத்தான் நீங்கள் பிரபலப்படுத்தப போகிறீர்கள். பதிவு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாதா? அப்படியென்றால் நீங்கள் இந்த விளையாட்டிற்கு லாயக்கில்லை. பேசாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருங்கள்.
இரண்டாவது படி:-
இந்தப்பதிவிற்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் அல்லவா? இது ரொம்ப, ரொம்ப முக்கியம்! சுடுகாடு’’, பாழுங்கிணறு’’, ‘பன்னிக்குட்டி’’, ‘எங்க வீட்டு பொடக்காழி’’ இந்த மாதிரி ஒரு நல்ல பெயராக யோசித்து ஒரு பெயர் வைக்கவும். அடுத்த்தாக உங்களுக்கு (பதிவர்) ஒரு பெயரை தேர்ந்தெடுக்கவும். காட்டான், மொல்லமாரி, முடிச்சவிழ்க்கி, கொலைகாரன், இந்த மாதிரியான ஒரு பெயரை உங்களுக்கு சூட்டிக்கொள்ளவும்.
என்னய்யா இது அக்கிரமமாக இருக்கிறதே! படித்தவர்கள் எழுதும் வலைத்தளங்களை இப்படி கொச்சைப்படுத்தலாமா என்று நினைக்கிறீர்களா? இதற்கே இப்படி தயங்கினால் நீங்கள் வலையுலகத்தில் ஓரங்கட்டப்படுவீர்கள். தயக்கப்படாதீர்கள். இனி வருபவை இதைத்தூக்கி சாப்பிடும்படியாக இருக்கும். முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள். தைரியமாக மேலே படியுங்கள்.
மூன்றாவது படி:-
ஆகக்கூடி உங்கள் முதல் பதிவை ஆரம்பித்து விட்டீர்களா! வாழ்த்துக்கள். இதே மாதிரி மேலும் ஒன்பது பதிவுகள் வெவ்வேறு பெயர்களில் ஆரம்பியுங்கள். எதற்காக இன்னும் ஒன்பது பதிவுகள்? எனக்கு ஒரு பதிவை பிரபலமாக்கினால் போதுமே, எதற்காக இந்த வீண் வேலை என்று நினைக்கிறீர்களா? பதிவுலக நுணுக்கங்கள் புரியும் வரை குரு சொல்வதை ஒழுங்காகக்கேட்டுப்பழகுங்கள். எல்லாம் உங்கள் நன்மைக்கே!!!
நான்காவது படி;-
உங்கள் நண்பர்களில் கணினி வைத்திருப்பவர்கள் பத்து பேரைப்பிடியுங்கள். அவர்களைத் தாஜா செய்து, அவர்களை நன்றாக கவனித்து – அது எப்படி என்பது போகப்போக விளங்கும் – அவர்கள் ஒவ்வொருவரும் தலா பத்து பத்து வலைத்தளங்களை ஆரம்பிக்கச்சொல்லுங்கள். இது எதற்கு என்று பின்னால் விளக்குகிறேன்.
ஆச்சா! இப்போது நீங்கள் உங்கள் பதிவை பிரபலமாக்குவதற்கு வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்தாகிவிட்டது. இனி பதிவு எழுதவேண்டியதுதான் பாக்கி.
இதுவரை எழுதியவற்றையெல்லாம் பலமுறை படித்து மனதில் பதிநவைத்துக்கொள்ளுங்கள். மீதி அடுத்த பாகத்தில்....
பாகம் 2 – தொடரும்...


செவ்வாய், 29 செப்டம்பர், 2009

பதிவுலக நாற்றம்!!!

திருவிளையாடல் புராணம் சினிமாவில் பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் என்னவென்றால் ‘’பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நாற்றம் உண்டா’’ என்பதுதான். இங்கு நாற்றம் என்பதின் பொருள் நல்ல மணம் என்பதாகும். ஆனால் தலைப்பில் கொடுத்துள்ள நாற்றம் வேறு. இது ‘’கூவத்தின் நாற்றம்’’.
நான் பதிவுலகத்தில் நுழைந்து ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

என்னுடைய அனுமானம் என்னவாக இருந்த்தென்றால் பதிவுலகம் என்பது மெத்தப்படித்த மேதைகளால் செய்யப்படும் ஒரு காரியம். இங்கு எல்லோரும் நாகரிகம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இங்கு எழுதப்படும் செய்திகளும் எழுத்து நடையும் மிகவும் கண்ணியமாயிருக்கும். இப்படித்தான் நினைத்துக்கொண்டு பதிவுலகத்திற்குள் நுழைந்தேன்.
எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. கொஞ்ச நாள் கழித்து திடீரென்று ஒரு சலசலப்பு. ஓர் நாற்றம் (?). என்னவென்று புரிவதற்கே நான்கு நாட்கள் ஆகிவிட்டது.

பிறகு பல பதிவுகளைப் படித்து நிலைமையை ஒருவாறாக புரிந்து கொண்டேன். என்ன புரிந்தது என்றால் ‘’நிறைய பதிவர்களுக்கும் டாஸ்மாக் ஆதரவாளர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை’’ என்பதுதான். இப்படி எழுத என் மனம் கூசுகின்றது. பதிவர்கள் என்னை மன்னிக்கமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தெருக்குழாய் சண்டை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்த்தில்லை. அங்கு பெண்கள் பேசுவதைக்கேட்டால் பிறகு தண்ணீரையே குடிக்கமுடியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வலையுலக சண்டை குழாய்ச்சண்டையையும் மீறினதாக இருக்கிறது. இப்போது என்னுடைய கவலையெல்லாம் இந்த வலையுலகில் தொடர்ந்து இருக்கலாமா அல்லது மூட்டை கட்டி வைத்துவிட்டு ஓடிவிடலாமா என்பதுதான்!

இருந்தாலும் ஒரு தமிழனாகப்பிறந்துவிட்டு இப்படி பயந்து ஓடுவது தமிழ் இனத்தையே (முறத்தினால் புலியை விரட்டிய வீரத்தமிழிச்சி பரம்பரையல்லவா) அவமதிப்பது போல் ஆகுமே என்று மனதைத்தேற்றிக்கொண்டு பதிவைதைதொடரலாமென்று இருக்கிறேன்.

நான் படித்த பதிவுகளிலிருந்து எனக்கு புரிந்தது என்னவென்றால் இது ஒரு பங்காளிச்சண்டை மாதிரி படுகின்றது. சொத்து பிரிப்பதில் பங்காளிகளுக்குள் எப்போதும் சண்டை வரும். ஆனால் சண்டையின் ஆரம்ப கட்டத்தில் அது பங்காளிச்சண்டைமாதிரியே தெரியாது. சம்பந்தமில்லாத விஷயங்களில் ஆரம்பிக்கும். இங்கும் அப்படித்தான் நடக்கிறது. இப்போது இந்த பங்காளிச்சண்டை சிறிது ஓய்ந்திருக்கிறது. என்னால் இந்த அமைதி கெடவேண்டாம் என்று இத்துடன் முடிக்கிறேன்.

தொடரும....

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

கோளாறு

கொங்கு நாட்டிலே கோளாறு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் – தகராறு, வம்பு, தவறு, நட்டு லூஸு, இப்படி பல அர்த்தங்கள் உண்டு. ‘ஏண்டா கோளாறு பண்றே?’ என்று சொன்னால் ‘ஏன் தகராறு பண்ணுகிறாய்?’ என்று அர்த்தம். ‘அவன் கொஞ்சம் கோளாறு பிடித்த ஆளப்பா’ என்றால் அவனுக்கு கொஞ்சம் மறை கழண்டு போய்விட்டது என்று புரிந்து கொள்ளவேண்டும். ஒரு காரியம் கோளாறாய் போய்விட்டது என்றால் அந்த காரியம் கெட்டு விட்டது என்று அர்த்தம்.

இப்படியிருக்கையில் எனக்கு ஆபீஸில் மதுரைக்கு மாற்றல் ஆகிவிட்டது. தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் கொண்டுபோய் செட்டில் ஆனேன். ஆபீஸ் குவார்ட்டர்சில் வீடு. அப்போது ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தேன். ஒரு நாள் அந்த ஸ்கூட்டரில் ஒரு கோளாறு.

ஒரு லீவு நாளன்று உள்ளூர் நண்பன் ஒருவனைக்கூட்டிக்கொண்டு ஒரு ஸ்கூட்டர் வொர்க்ஷாப்பிற்கு போனேன். அங்கு அந்த வொர்க் ஷாப் அதிபரிடம் விபரத்தை, அதாவது ஸ்கூட்டரில் ஏற்பட்டுள்ள கோளாறைச் சொன்னேன். அவர் உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேளையாளைக் கூப்பிட்டு ‘டேய், ஐயா நம்ம கடைக்கு புதுசாய் வந்திருக்கிறார், அவர் வண்டியை கோளாறாய் செய்து முடிச்சிறு’ என்று கூறினார்.


இதைக்கேட்ட எனக்கு பகீரென்று ஆகிவிட்டது. ஏற்கனவே கோளாறு என்றுதானே இங்கே கொண்டு வந்திருக்கிறோம். இவர் என்னடாவென்றால் இதை இன்னும் கோளாறாக்க சொல்லுகிறாரே என்று கூட வந்த நண்பரை தனியாக கூட்டிக்கொண்டு போய் ‘இதென்னப்பா, ஏற்கனவே வண்டியில் கோளாறு என்றுதானே இங்கே கொண்டு வந்திருக்கோம், இந்த கடைக்காரர் இதை இன்னும் கோளாறு பண்ணச்சொல்கிறாரே? வேறு கடையைப் பார்க்கலாமா’ என்று கேட்டேன். அந்த நண்பன் பலமாக சிரித்தான்.

எனக்கு கோபம். நான் ஒரு சீரியஸ் மேட்டர் சொல்கிறேன், இவன் விளையாட்டாக சரிக்கிறானே என்று மனதில் நினைத்துக்கொண்டு ‘ஏன் சிரிக்கிறாய்’ என்று கேட்டேன்.
அவன் கடைக்காரரிடம் என்னைக்கூட்டிக்கொண்டு போய் ‘சார் இவருக்கு ஒரு சந்தேகம். அவர் வண்டியில் ஏதோ கோளாறு என்றுதான் இங்கு வந்தோம். வந்த இடத்தில் நீங்கள் வண்டியை இன்னும் கோளாறு செய்யச் சொல்கிறீர்களே’ என்று கூறினார்.

இதைச்சொன்னவுடன் இருவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் திருதிருவென முழித்தேன். பிறகு கடைக்காரர் நண்பரைப்பார்த்து ‘உங்கள் நண்பர் மதுரைக்கு புதுசா’ என்று கேட்ட்டார். அவரும் ‘ஆமாம்’ என்றார். கடைக்காரர் ‘அதனால்தான் இந்த சந்தேகம்’ என்று சொல்லிவிட்டு என்னைப்பார்த்து கூறினார் ‘சார், இந்த ஊர்லே கோளாறு என்றால் கெட்டிக்காரத்தனமாக அல்லது புத்திசாலித்தனமாக என்று அர்த்தம் சார், நீங்கள் கவலைப்படாமல் போய்ட்டு நாளைக்கு வாங்க, வண்டி ரெடியாய் இருக்கும்’ என்றார்.

மதுரையில் மேலும் சில வருடங்கள் இருந்தேன். இந்த ‘கோளாறு’ விஷயம் பழக்கமாகிவிட்டது. யாராவது ‘டேய், அந்த வேலையை கோளாறாய் முடித்துவிட்டு வா’ என்று சொன்னால் அதை சாதாரணமாய் எடுத்துக்கொள்வேன். பிறகு சொந்த ஊருக்கு வந்தவுடன் கோளாறை கோளாறாகப் பார்க்க பழக வேண்டியதாய் போய்விட்டது.

தொடரும்.....

புதன், 26 ஆகஸ்ட், 2009

பை, பைய, பைக்கட்டு

எனக்கு ஒரு சமயம் மதுரைக்கு மாற்றலாகி குடும்பத்துடன் அங்கே குடியேறினேன். எனக்கு விவசாயக்கல்லூரி வளாகத்திலேயே குவார்ட்டர்ஸ் கிடைத்தது. அங்கிருந்து மதுரை டவுன் சுமார் 10 கிலோ மீட்டர் இருக்கும். டவுனிலிருந்து வருபவர்களுக்காக ஆபீஸ் முடிந்த்தும் ஒரு கல்லூரி பஸ் புறப்படும். குவார்ட்டர்ஸில் கடியிருப்பவர்களும் சில சமயம் இந்த பஸ்ஸில் ஏதாவது வாங்க வேண்டியது இருந்தால் போவோம்.
அப்படி ஒரு முறை நான் போகவேண்டியிருந்தது. சாமான் வாங்க பை எடுத்து வரவில்லை. ஆகவே ஆபீஸ் பையனைக்கூப்பிட்டு ‘என் வீட்டிற்குப் போய் ஒரு பைய (பையை) வாங்கிக்கொண்டு வா’ என்று அனுப்பினேன். போனவன் போனவன்தான். ஆபீஸ் பஸ் புறப்படும் வரையிலும் வரவேயில்லை. சரி, கடையில் பை வாங்கிக்கொள்ளலாம் என்று நான் டவுனுக்கு போய்விட்டேன்.
மறுநாள் ஆபீஸ் வந்த்தும் அந்த பையனைக்கூப்பிட்டு ‘ஏன் நான் நேற்று பைய வாங்கிக்கொண்டு வரச்சொன்னேனே, ஏன் வரவில்லை’ என்று கேட்டேன். அதற்கு அவன் ‘நீங்கள்தான் வீட்டிற்கு போய்விட்டு பைய வரச்சொன்னீர்கள்’ என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த மதுரை நண்பர் என்ன ஏது என்று விசாரித்துவிட்டு சிரித்தார். ஏன் சிரிக்கிறீரகள் என்று கேட்டதற்கு ‘ஆமாம், நீங்கள் அவனை வீட்டிற்கு போய்விட்டு பைய வரச்சொல்லியிருக்கிறீர்கள். அவன் அது போல செய்திருக்கிறான்’ என்றார். அப்புறம்தான் மதுரையில் ‘பைய’ என்றால் ‘மெதுவாக’ என்று அர்த்தம் என்று விளக்கினார்கள்.
சரி. எனக்கு பை (bag) வேண்டுமென்றால் நான் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘பைக்கட்டு’ வாங்கி வா என்று கூறவேண்டும் என்றார். எங்க ஊரில் (கோவை) பைக்கட்டு வாங்கி வா என்று சொன்னால் ஒரு கட்டு பை வாங்கிக்கொண்டு வந்து நிற்பார்கள். இப்படியாக கொஞ்ச நாளில் நானும் மதுரைத்தமிழுக்கு பழக்கமானேன்.
இன்னும் வரும்....

ஒரு நல்ல காட்சி

நான் ரசித்தது


Posted by Picasa

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

கொங்கு வட்டார வழக்குகள் – 1

கோயமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கொங்கு மண்டலம் என்று கூறுவதுண்டு. இந்த பகுதி மக்கள் பேசும் தமிழ் ஒரு மாதிரியாக இருக்கும். அது சினிமாவில் கோவை சரளா போன்றோர்களால் மிகவும் பிரபலமாகிவிட்டது. புதிதாக கேட்பவர்களுக்கு தமாஷாகக்கூட இருக்கும்.
நான் விவசாயக்கல்லூரியில் படிக்கும்போது சிலர் ‘ஆஹா, கொங்கு தமிழ் எனக்கு நல்லா தெரியும் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதுண்டு. அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்பேன். எங்கே இதன் பொருள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம் – அங்கராக்கு சோப்பிலே தொரப்புக்காய் இருக்குது எடுத்துட்டு வா புள்ளேய் – என்றால் முழிப்பார்கள். கொங்கு நாட்டிலேயே பிறந்திருந்தாலும் நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் இந்த கேள்விக்கு முழிப்பார்கள்.
ஷர்ட் பாக்கெட்டில் சாவி இருக்கறது, எடுத்து வா – இதுதான் அர்த்தம்.
இங்கு பேசுபவர்களின் பேச்சில் மரியாதையும் பண்பும் நிறைந்திருக்கும். புதிதாக யாரையாவது பார்த்தால் – என்னங்க நம்ம வீட்டிலே எல்லோரும் நல்லா இருக்காங்களா – என்று நலம் விசாரிப்பார்கள். வேறு மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் – இவர் வீட்டிலே நல்லா இருக்காங்களா என்று எனக்கு எப்படி தெரியும் என்று முழிப்பார்கள். இதை மிகவும் நுணுக்கமாக யோசித்தால்தான் விளங்கும். உங்கள் வீடு வேறு என் வீடு வேறு என்று வேறுபடுத்தி பார்க்காமல் இரண்டு வீடும் ஒன்றுதான் என்ற எண்ணத்திலிருந்து வரும் வார்த்தைகள் அவை.
நம்ம வீட்டு அம்மா செளக்கியங்களா என்று முதன்முதலாக கேட்பவர்கள் கொஞ்சம் ஆடிப்போய்விடக்கூடும். இந்த அன்னியோன்யம் வேறு மாவட்டங்களிலே பார்ப்பது அரிது.
தொடரும்....

வியாழன், 16 ஜூலை, 2009

சென்னை தமிழும் கொங்கு கவுண்டரும்

எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ரொம்ப நாளாக சென்னையில் வசித்து விட்டு சமீபத்தில் கோவைக்கு வேலை மாற்றலாகி குடி வந்தார்கள். அந்த வீட்டிலுள்ள காலேஜ் போகும் பெண் என் மகளுக்கு பழக்கம். அந்த பெண் கோவையில் பேசும் தமிழைக்கேட்டு விட்டு ‘ இங்கே என்ன தமிழ் இப்படி பேசுகிறார்கள், இழுத்து இழுத்து பேசுகிறார்கள். அப்புறம் அது என்ன எதற்கெடுத்தாலும் ஒரு ‘..ங்க’ போட்டு, என்னங்ங்ங்ங்கேகேகே... என்று இழுக்கிறார்கள்’. கொங்கு தமிழ் ஏறக்குறைய சினிமாவில் கோவை சரளா வசனங்கள் மூலமாக அனைவரிக்கும் பரிச்சயமாயிருக்கும். சினிமா பார்க்காதவர்களுக்காக சில மாதிரி சம்பாஷணைகள்;

வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வரும் புருஷனிடம் மனைவி;
ஏனுங்க, வேலையிலிந்து ஊட்டுக்கு வர இத்தனை நேரம் ஏனுங்க, நீங்க வேலைக்கு போனதுக்கப்பறம் உங்க அம்மா பண்ற ரவுசு என்னாலெயெ தாங்க முடியலைங்க. அப்பறம் உங்க பசங்க பண்ற லொள்ளு மீறிப்போச்சுங்க, இதுக்கு என்னாச்சும் பண்ணுங்க’.
இந்த ரேஞ்சில் பேச்சு போகும்.

சென்னையில் எப்படியென்றால்;
‘என்னா நீ, வூட்ல சொல்லிகினு வந்த்ட்யா, கஸ்மாலம், நட்ரோட்ல போறயே, மண்டேலே மசாலா (க்)கீதா, எத்னாச்யும் லாரி கீரி பட்டா என்னா, ஆஸ்பத்ரிக்கு பூடுவே.’

கோயமுத்தூரிலிருந்து புதிதாக சென்னை செல்பவர்களுக்கு இந்த பாஷை ஒரு ஷாக்காக இருக்கும். யாரையும் ஒருமையில் அழைத்துப்பழக்கமில்லாத கோயமுத்தூர் கவுண்டர் ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போய் விடுவார். பிறகு கொஞ்சம் பழகின பிறகுதான் இதை சகித்துக் கொள்வார். ஊருக்கு திரும்பிப்போனதும் பல நாட்களுக்கு பார்த்தவர் எல்லோரிடமும் இந்த மெட்ராஸ் பாஷையைப்பற்றித்தான் பேசுவார். ‘’மெட்ராஸில ஒரு பயலுக்கும் மரியாதையே தெரியாது. அங்க பேசற மாதிரி நம்ம ஊர்லெ பேசினா எல்லாப்பயலும் நம்மை அடிக்க வந்த்ருவான்.’’ இப்படியே பல நாட்களுக்கு புலம்பிக்கொண்டு இருப்பார்.
தொடரும்....

ஞாயிறு, 17 மே, 2009

2009 தேர்தல் முடிவுகள்

ஆஹா, தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. முடிவுகள் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும். என்னைப்பொருத்த வரையில் இந்த முடிவுகள் எனக்கு சாதகமானவையே. எப்படியென்றால் மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அரசு ஊழியர்களின் சம்பள சீரமைப்பு நடக்கும். எனக்கும் அதனால் லாபம் உண்டு. ஆகவே இந்த தேர்தல் முடிவுகளை நான் வரவேற்கிறேன்.
இது சுயநலம் அல்லவா என்று கேட்கலாம். எனக்கு உரிமையானதைப் பெறுவது எப்படி சுயநலமாகும்? அடுத்தவனை ஏமாற்றி தன்னுடைய காரியத்தை செய்வதுதான் சுயநலம் என்று நான் நினைக்கிறேன். கருத்துக்கள் மாறுபடலாம்.
ஆக மொத்தம் தேவ.......யாக்களுக்கு இந்த தேர்தல் முடிவு மிகவும் ஏமாற்றமாக இருக்கும். குறிப்பாக வன்னியர் தலைவர் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. இந்த ஆள் முக..வை விட்டு ஜெ. யைப்பிடித்தது முற்றிலும் தன் சுயநலத்திற்காகவே. கொள்கையாவது மண்ணாங் கட்டியாவது! இந்த ஆள் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் மண்ணைக்கவ்வியது பலருக்கு திருப்தி அளிக்கும். எனக்கும் அவ்வாறே.
‘’கொங்கு முன்னேற்றப் பேரவை’’ என்று புதிதாக ஒரு கட்சியை கவுண்டர்கள் சார்பில் ஆரம்பித்தார்கள். முதலில் இது ‘’கொங்கு வேளாளக்கவுண்டர்கள் முன்னேற்றப் பேரவை’’ என்றுதான் ஆரம்பித்தார்கள். நானும் போயிருந்தேன். ஆரம்பித்த நாளே பல்டி அடித்து வேளாளக்கவுண்டர்கள் பெயரை நீக்கி கொங்கு முன்னேற்றப் பேரவை என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள். இதை எதற்காக ஆரம்பித்தார்கள், ஏன் பெயர் மாற்றம் செய்தார்கள் என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. இந்த மாதிரி ஜாதிக்கட்சிகளில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்த்தில்லை. இப்போதும் இல்லை. ஆகவே இந்த கட்சியும் மண்ணைக்கவ்வியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
எப்படியோ, இன்னும் 5 வருடத்திற்கு வண்டி ஓடும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
தொடரும்......

வியாழன், 14 மே, 2009

மக்களவைத்தேர்தலும் மாக்களும்.

இன்னுமொரு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் நான் பார்த்தது என்னவென்றால் ஒருவரும் உண்மை பேசவில்லை. கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் வழி. ஏனென்றால் எல்லோரும் சொல்வது என்னவென்றால், இந்த கூட்டணி தேர்தலுக்கு மட்டுமே. தேர்தல் முடிந்த பிறகு நிலைமையைப் பொருத்து யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டு சேர்ந்து கொள்வோம் என்று. ஆக மொத்தம் யார் அதிகமாக காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முந்தி விரிக்க தயார். இப்படிப்பட்ட தே....யாக்கள் ஆட்சிக்கு வந்து நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்யப்போகிறார்கள்.

என்ன சேவை தெரியுமா? மக்களின் தலையை மொட்டை அடிக்கும் சேவைதான். இந்த மகத்தான சேவையில் யார் கூட்டுக்கு வந்தாலும் சரியே, நாங்கள் கூட்டு வைத்துக்கொள்வோம். இதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் கொள்கை. இது தவிர இன்னுமொரு சேவை கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் செய்யப்போவது என்னவென்றால், தேசசேவை. தேசசேவை என்றால் என்னவென்று சிலருக்கு புரியாமல் இருக்கலாம். அது என்னவென்றால் நம் நாட்டை எதிரிகள் ஆக்ரமிப்பு செய்வதை தடுப்பது. எப்படி என்றால் எங்கு எல்லாம் பூமிகள் கேட்பாரற்று கிடக்கிறதோ அவைகளையெல்லாம் காபந்து பண்ணுவது. எப்படி? அந்த பூமிகளை அப்படியே விட்டு வைத்திருந்தால் பாகிஸ்தான் போன்ற நாடுகள் படையெடுத்து வந்து அவைகளை ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள். ஆகவே அவைகளை தன் சொந்தப்பொருப்பில் வைத்திருந்து காப்பாற்றி வருங்கால சந்த்தியின்றுக்கு கொடுப்பார்கள். வருங்கால சந்த்தியினர் என்றால் யாரென்று தெரியாதவர்கள் அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கு போட்டுக்கொள்ளலாம்!

புதன், 6 மே, 2009

தங்கத்தமிழும் அரசியலும்

‘’தமிழுக்காக என் உயிரையும் கொடுப்பேன்.’’
‘’தமிழ் மொழிதான் என் மூச்சு, அதைக்காப்பற்றத்தான் நான் உயிரோடு இருக்கிறேன்’’
இந்த வசனங்களை கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல்வாதிகளும் அடிக்கடி பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். குறிப்பாக பேசுவதற்கு வேறு விஷயங்கள் இல்லாதபோது இந்த விஷயம் அலசப்படும். ஒருவர் இதைப்பற்றி பேசிவிட்டால் மற்றவர்கள் எல்லோரும் நான் என்ன அவனுக்கு சளைத்தவனா என்று ஒவ்வொருவரும் இந்த தமிழனின் தன்மானத்தைப் பற்றி பேசுவார்கள்.
அடுத்த அரசியல்வாதியை கேவலப்படுத்த இந்த தமிழை ஒரு ஆயுதமாகப்பயன்படுத்தும் கட்சிகளும் உண்டு. ‘’அவன் தமிழனே அல்ல, அவன் பக்கத்து மாநிலத்திலிருந்து குடி பெயர்ந்தவன், அவன் வீட்டில் ..... மொழி பேசுகிறான் தெரியுமா?’’ இந்த தாக்குதலுக்கு பதிலே கிடையாது.
அந்த வகையில்தான் ஈழத்தமிழனின் பிரச்சினையும். ‘’நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு’’. இந்த வகையில் ஈழத்தமிழனுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் சேவை செய்து அவனைக்காப்பாற்றி வருகிறார்கள். 13ம் தேதி எலக்சன் முடிந்து 16ம் தேதி முடிவுகள் வெளியானவுடன் நடக்கப்போகும் குடுமிப்பிடி சண்டையில் ஈழப்பிரச்சினை காணாமல் போகும்.
தொடரும்.......

திங்கள், 4 மே, 2009

தேர்தலும் சாதாரண பிரஜையும்

2009 பாராளுமன்ற தேர்தல்களின் கடைசி கட்ட வாக்குப் பதிவுகள் தங்கத்தமிழ் நாட்டில் வருகின்ற 13ந்தேதி நடைபெறப்போகின்றது. பாண்டிச்சேரியையும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள். எனக்கு அவ்வளவாக அரசியலில் ஈடுபாடு இல்லை. எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாளனும் இல்லை. ஆனால் சுற்றிலும் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு வருகிறேன்.
நான் கொஞ்சம் படித்திருக்கிறேன் (அதாவது Ph.D. விவசாயம்). இந்த அரசியல்வாதிகளுக்கு படித்தவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை என்பது என் எண்ணம். காரணம் இந்த படித்தவன் பேசிப்பேசியே காரியத்தைக் கெடுத்து விடுவான். அடுத்தவன் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டான். காசு வேண்டுமென்று கேட்க மாட்டான். காசு கொடுத்தாலும் வாங்கமாட்டான். அவன் யாருக்கு ஓட்டு போடுவான் என்று கணிக்க முடியாது. இப்படிப்பட்டவனை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் பண்ண முடியும்?
அரசியல்வாதிக்கு வேண்டியது, கேள்வி கேட்காமல் அவன் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு, அவன் போடும் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு அவன் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடவேண்டும். அவ்வளவுதான். கூட்டங்கள் போட்டால் பேட்டா வாங்கிக்கொண்டு லாரியில் ஏறிக் கொண்டு போய் கோஷம் போட வேண்டியது. இல்லாவிட்டால் எதிர்க்கட்சி கூட்டத்தில் போய் கலாட்டா செய்து கூட்டத்தைக் கலைப்பது.
இந்தக்காரியங்கள் எதிலும் இந்த படித்த முட்டாள் இருக்கிறானே, அவன் உபயோகப்படமாட்டான். பிறகு அவனை வைத்துக்கொண்டு என்ன அரசியல் செய்து உருப்படியாவது? அது மட்டுமா! தேவையில்லாத (அதாவது அரசுயல்வாதிக்கு தேவையில்லாத) கேள்விகளைக்கேட்டு மக்களை குழப்புவான். ஒரு வேட்பாளர் சொல்கிறார்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் மும்மாரி பொழிய வைப்போம், தபிழ்நாட்டின் ஆறுகளில் பாலாய் ஓடும், எல்லோருக்கும் சாப்பாடு அவரவர் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும், யாரும் வேலைக்கு சென்று கஷ்டப்பட வேண்டியதில்லை. இப்படி எல்லாவேட்பாளர்களும் தங்களுக்கு முடிந்தவரை எல்லோர் காதிலும் பூ சுற்றுகிறார்கள். இதைக்கேட்கும் இந்நாட்டு குடிமகன்கள் (?) ஆகா, இவரல்லவோ நம்மை வாழவைக்க வந்த தெய்வம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.
இந்த படித்தவன் என்ன செய்வான். அரசியல்வாதி கூறுவதில் சொத்தை சொள்ளை கண்டு பிடித்து, மேலும் புள்ளி விவரங்கள் சேகரித்து, இந்த வேட்பாளர் சொல்வது போல் செய்யமுடியாது என்று பேசுவான். ஆனால் நம் நாட்டு குடிமக்கள் விவரமானவர்கள். இந்த படித்த முட்டாள்கள் பேச்சைக்கேடகக்கூடாது, அவர்கள் தாங்களும் பிழைக்க மாட்டார்கள், அடுத்தவனையும் பிழைக்க விடமாட்டார்கள் என்று முடிவு செய்து யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அந்தக்கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.
எனக்குத்தெரிந்து 1968 லிருந்து இப்படித்தான் நடைமுறை. நடப்பவை நடந்தே தீரும்.
தொடரும்.......

வியாழன், 23 ஏப்ரல், 2009

அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள்

மனிதன் இயற்கையில் மிகவும் நல்லவன். ஆனால் சூழ்நிலை அவனைப்பலவாறாக மாற்றுகிறது. குறிப்பாக அவன் அரசு நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்த பின் அவன் வெகுவாக மாறிப்போகிறான்.
நேற்று வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு வேலை. ஒன்றுமில்லை. என்னுடைய மகளின் கார் பேங்க் லோனில் வாங்கியிருந்தாள். காரின் RC புத்தகத்தில் அந்த காரின் மேல் கடன் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்த்து. கடன் கட்டி முடிந்தாகிவிட்டது. இந்த விபரம் அந்த காரின் RC புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு ஒரு படிவம் இருக்கிறது. அந்த படிவத்தைப்பூர்த்தி செய்து அதனுடன் காரின் புகை சான்று, காரின் RC புத்தகம், இன்ஷூரன்ஸ் சான்று, பாங்கிலிருந்து கொடுத்த NOC, ஒரு ரிஜிஸ்டர் தபால் கவர் (30 ரூபாய்) இவைகளையெல்லாம் சேர்த்து பின் பண்ணி ரூபாய் 125 பணம் கட்டி அதற்கு உண்டான எழுத்தரிடம் கொடுக்கவேண்டும்.
ரொம்பவும் எளிதாக தோன்றுகிறதல்லவா! நேரில் அனுபவித்தால்தான் அதனுடைய சிரமம் தெரியும். பணம் கட்டுவதற்கு மட்டும் சுமார் பத்து பேரைக் கேட்டிருப்பேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவுன்டரைக்காட்டினார்கள். எல்லா கவுன்டர்களிலும் கூட்டம். இதனிடையில் கம்ப்யூட்டர் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை இவ்வாறு அலைந்த பின்பு ஒரு கவுன்டரில் ஒருவாறாக பணத்தைக்கட்டி முடித்தேன். பின்பு இந்த பாரங்களை தபால் செக்சனில் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அங்கு சொன்றால் தபால் வாங்குபவர் அங்கு இல்லை. வேறு அலுவல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். எப்போது வருவார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.
அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த போது அந்த ஆபீஸை சேர்ந்த ஒருவர் அந்த வழியில் போய்க்- கொண்டிருந்தார். அவரை வழிமறித்து ஒரு பெரிய வணக்கம் போட்டு ‘’சார், இந்த பாரத்தை தபால் செக்ஷனில் கொடுக்க வேண்டும். அங்கு அவரைக்காணவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்று அழாக்குறையாக சொன்னேன். அவர் இந்த உலகில் தப்பிப்பிறந்தவர். என்னுடைய பார்த்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து ‘’சார், நீங்கள் நாளை மாலை 4 மணிக்கு வந்து ஈ.4 செக்ஷனில் ஆனந்த் என்பவரிடம் இதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவருக்கு மிகுந்த நன்றி சொல்லிவிட்டு அடுத்த நாள் மாலை 4 மணிக்கு ஈ.4 ஆனந்தைப்பார்த்தேன். அவர் பேரைக்கேட்டுவிட்டு ஆமாம், பாரம் இங்கேதான் இருக்கிறது, காலையில் பார்த்தேன், கொஞ்சம் உட்காருங்கள், தேடி எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன மாதிரியே 2 நிமிடத்தில் பாரத்தை எடுத்து விட்டார். ஆனால் அதில் ஒரு வேலையையும் செய்யவில்லை.
சார், கொஞ்சம் இருங்கள், என்று சொல்லிவிட்டு உடனே பழைய ரிஜிஸ்டரைத்தேடி எடுத்து என்ட்ரி போட்டு ஒரு 5 நிமிடத்தில் பாரத்தை என்னிடம் கொடுத்து ‘’ சார், இதை மேலே உள்ள தபால் செக்ஷனில் கொடுத்து என்ட்ரி போட்டு வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்றார். அதை வாங்கிக்கொண்டு தபால் செக்ஷனுக்கு போனேன். அவர் இருந்தார். அவருக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு இந்த பாரங்களைக்கொடுத்தேன். அவர் அதில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு காரின் RC புத்தகத்தையும் இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டையும் கொடுத்தார். ஒரு பெரிய சலாம் போட்டுவிட்டு வந்த வேலை முடிந்த சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தேன்.
Ph.D. படித்து ஒரு அரசுப் பணியில் 38 வருடங்கள் வேலை பார்த்த எனக்கே இந்த RTO ஆபீஸ் வேலையில் இவ்வளவு அலைச்சல் பட வேண்டியிருந்ததென்றால் சாதாரண படிப்பு அதிகமில்லாத மக்கள் எப்படி இந்த மாதிரி காரியங்களைச் செய்வார்கள் என்று யோசித்தேன். அப்போது ஒரு உண்மை தெரிந்தது. RTO ஆபீசுக்கு வெளியே சின்ன சின்னதாக டேபிள் போட்டுக்கொண்டு பலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பலவிதமான பாரங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த பாரங்களை நிரப்பிக்கொடுத்தும் RTO ஆபீஸ் விவகாரங்களில் அனுபவம் இல்லாதவர்களுக்கு உதவி செய்துகொண்டும் இருக்கிறார்கள். மேலும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இவர்கள் உதவி செய்கிறார்கள். செய்யும் உதவிக்காக உதவிபெற்றவர்கள் கொடுக்கும் நன்றியை (பணம்) வைத்துக்கொண்டு ஜீவனம் செய்கிறார்கள். இவர்களின் பணி மகத்தானது. ஆனால ஜனங்களும் அதிகாரிகளும் இவர்களை ‘’புரோக்கர்கள்’’ என்று கேவலமாக சித்தரித்து இவர்கள் ஏதோ தீவிரவாதிகள் என்பது போல் நடத்துகிறார்கள். என்னுடைய பார்வையில் இவர்கள் செய்வது உண்மையான மக்கள் சேவை. வாழ்க இவர்கள் தொண்டு.
தொடரும்.....

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல்

கோடை விடுமுறையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அப்போது தங்கள் வீட்டைப்பூட்டி விட்டு செல்வார்கள். இப்படி பூட்டியிருக்கும் வீடுகளை திருடர்கள் நோட்டம் போட்டு, அந்த வீடுகளில் இரவு நேரங்களில் (பல சமயங்களில் பகலிலேயே கூட) பல வகைகளில் உள்ளே புகுந்து திருடுகிறார்கள். தினமும் இந்த செய்திகள் செய்தித்தாள்களில் வருகின்றன.
குறிப்பாக திருட்டு போகும் பொருட்கள் நகைகளும் பணமும்தான். அதுவும் அதிக அளவில். இதில் புரியாதது என்னவென்றால், வெளியூர் போகிறவர்கள் ஏன் அவ்வளவு நகைகளையும் பணத்தையும் வீட்டில் வைத்துவிட்டுப் போகிறார்கள் என்பதுதான்.
வடநாட்டில் வீடுகளை வெளியில் பூசுவதில்லை. வெறும் செங்கல் சுவர் மட்டும்தான் வெளியில் தெரியும். வீட்டுக்குள் எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் வெளியில் ஒன்றும் தெரியாது. இது ஏனென்றால் அங்கே பல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் படையெடுத்து எல்லோருடைய சொத்துக்களையும் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். ஆகவே அங்குள்ள மக்களின் மனோபாவம் மிகவும் மாறுபட்டது. சொத்துக்களைச் சேர்த்து திருட்டுக்கொடுப்பதை விட அதை நாமே அனுபவித்து விட்டுப்போகலாமே என்ற எண்ணம் வலுவாக ஊறியிருக்கிறது. ஆகவே அவர்கள் தாங்கள் சம்பாதிப்பதை தாங்களே அனுபவிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தன் மகனுக்கு, தன் பேரனுக்கு, தன் கொள்ளுப்பேரனுக்கு என்று சேர்த்து வைக்கிறார்கள். அப்படி சேர்த்து வைத்ததை எவனோ கொள்ளையடித்துக்கொண்டு போகிறான்.
ஓரளவிற்கு சேமிப்பு அவசியம்தான். ஆனால் பலரும் செய்வது என்னவென்றால் தான் சரியாக சாப்பிடாமல் கூட வருங்கால சந்ததியினருக்கு சேமிக்கிறார்கள். இது தேவையில்லாதது. ஆனால் மக்கள் எப்போது மனம் மாறுவார்கள் என்று செரியவில்லை.
தொடரும்...

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

விபத்துகளின் எண்ணிக்கை

கோவையில் மட்டும் கடந்த மாதம் தெரு விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 என்று செய்தித்தாள்களில் பிரசுரமாகியிருந்தது. இது தமிழ்நாட்டிலேயே அதிக பட்ச இறப்பு என்றும் கூறப்பட்டிருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த விபத்துக்களுக்கு காரணம் அரசு போக்குவரத்து வாகனங்கள்தான். நல்ல சேவை.
இந்த விபத்துக்களை செய்தித்தாள்களில் காலையில் படித்து மாலையில் மறந்து போகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பைப் பற்றி நம்மில் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இத்தகைய விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ரோடில் செல்லும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நாமும் ஒரு நாள் இந்த மாதிரி செய்தியாகலாம்.
வேகம், வேகம், வேகம். இதுவே நம் ஒவ்வொருவரின் தாரக மந்திரம். எதிலும் வேகம். எல்லாவற்றிலும் வேகம். யமலோகத்திற்கு போவதற்கும் வேகம். என்ன செய்ய முடியும்? மக்கள் சிந்தக்க வேண்டும்.
தொடரும்....

திங்கள், 6 ஏப்ரல், 2009

பஸ்களும் விபத்துக்களும்

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் போக்கு வரத்து தேவைகளும் அதிகரித்து விட்டன. பஸ்கள், லாரிகள், மினிபஸ்கள், வேன்கள், கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஸகூட்டர்கள் என்று பல விதமான வாகனங்கள் பல மடங்கு அதிகமாகி விட்டன. இந்த வாகனங்கள் அதிகரிப்புக்கு ஈடாக ரோடுகள் அதிகரிக்கவில்லை. அதனால் அடிக்கடி ரோடுகளில் விதவிதமான விபத்துக்கள் நடக்கின்றன.
வாகனங்கள் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வேண்டும். கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தனியாக ஸ்பெஷல் லைசன்ஸ் வேண்டும். இப்படியெல்லாம் சட்ட புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இவை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று யாரும் பார்க்கிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியே?
குறிப்பாக அரசு நடத்தும் பஸ் நிறுவனங்களில் இருக்கும் பஸ் டிரைவர்கள் பெரும்பாலும் அனுபவம் குறைந்தவர்கள். அவர்களிடம் ஒரு பெரிய பஸ்ஸைக்கொடுத்து ஓட்டச்சொன்னால் அவர்கள் அவர்களுடைய திறனுக்குத் தக்கவாறுதான் ஓட்டுவார்கள். சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் செய்யும் தவறுகளினால்தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களோ ரோடு முழுவதும் அவர்களுக்காகவே இருக்கிறது என்ற எண்ணம். பின்னால் வரும் கனரக வாகனங்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. மேலும் இந்த வாகனங்களில் எவ்வளவு பேர் போகமுடியும் என்ற உணர்வும் கிடையாது. ஒரு TVS 50 மொபட் வண்டியில் தன் குடும்பம் முழுவதையும் (5 பேர்) ஏற்றிக்கொண்டு போகிறார்கள். வண்டி இழுக்கமாட்டேன் என்கிறது. முக்கி முனகிகுகொண்டு மேட்டில் ஏறும்போது பின்னால் வேகமாக வரும் பஸ் அல்லது லாரி இந்த மொபட்டின் மேல் லேசாகப்பட்டால் போதும். மொபட்டில் போகிறவர்கள் அந்த லாரியின் முன்னால் விழுந்து.... பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் தினமும் பேப்பரில் பார்க்கிறோம்.
ஆக மொத்தத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு இருக்கிறது. ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
தொடரும்.....

வியாழன், 26 மார்ச், 2009

நான் படித்த புத்தகம்

கொலஸ்ட்ரால்-குறைப்பது எப்படி என்ற புத்தகத்தை டாக்டர் சு.முத்துக்குமாரசாமி என்பவர் எழுதி New Horizon Media Pvt. Ltd. என்ற நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் யாராவது கொஞ்சம் தலைக்கனம் பிடித்து அலைந்தால் ‘அவனுக்கு கொழுப்பு ஏறிப்போச்சு என்று சொல்வது வழக்கம்’. இது ஒரு பேச்சுக்காக சொல்வது. ஆனால் தற்போது பெரும்பாலான-வர்களுக்கு நிஜமாகவே கொழுப்பு அதிகமாகி விட்டது. மருத்துவர்கள் இதை நாகரிகமாக கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
ஒரு மனிதனுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்றவுடனேயே எல்லோரும் நினைப்பது என்னவென்றால் ஏதோ அந்த மனிதனுக்கு வரக்கூடாத நோய் வந்து விட்டது, அந்த ஆள் அவ்வளவுதான் என்கிற மாதிரிதான் நினைக்கிறார்கள்.
டாக்டர் முத்து செல்லக்குமார் அவர்கள் இந்த புத்தகத்தில் கொலஸ்ட்ரால் என்றால் என்ன, மனிதனின் உடலில் கொலஸ்ட்ரால் எவ்வாறு இருக்கிறது, அதன் தேவை என்ன, கொலஸ்ட்ரால் அதிகம் உடலில் சேர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பவைகளைப்பற்றி சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார்.
மனிதனின் உடம்பில் புரதம் மற்றும் கொலஸ்ட்ரால், இவை இரண்டும்தான் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடம்பின் எல்லா பகுதிகளும் இந்த இரண்டு பொருள்களினால்தான் உருவாகியிருக்கின்றன. ஆகவே கொழுப்பையே உணவிலிருந்து விலக்குவது முடியாத காரியம். நாம் கொழுப்பை சாப்பிட்டே ஆகவேண்டும். ஆனால் எந்த வகையான கொலஸ்ட்ரால்கள் உடலுக்கு ஏற்றது என்று அறிந்து அவ்வகை உணவுகளைத் தேர்ந்து சாப்பிடவேண்டும். இதற்கான வழிகளை இந்த புத்தகத்தில் விரிவாக காணலாம்.
கொழுப்பின் வகைகளைப்பற்றியும் அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விரிவாக இந்தப்புத்தகத்தில் கூறப்படுகிறது. கொலஸ்ட்ரால் சேர்ந்த பொருட்களைச் சாப்பிடாமல் நாம் உயிர் வாழ முடியாது. ஆனால் அந்த கொலஸ்ட்ரால் அதிகமாகிப்போனால் உடலில் வேண்டாத விளைவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது எவ்வாறு ரத்தக் குழாய்களில் உட்புறம் படிந்து ரத்த அடைப்பு ஏற்பட வழி வகுக்கிறது என்பதை நன்கு படங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த ரத்த அடைப்பு இருதயத்திற்கு போகும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பில் முடியும் என்பதை அழுத்தமாக கூறியுள்ளார்.
கொழுப்பில் நல்லது, கெட்டது என்று இரண்டு வகை உண்டு என்பதே பலருக்கு ஒரு புதுமையான செய்தியாக இருக்கும். நம் உடம்பில் இந்த பல வகை கொலஸ்ட்ரால் சத்துக்கள் எவ்வளவு இருக்க வேண்டும், அவைகள் அதிகமாக இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர் விளக்கமாக கூறியிருக்கிறார். மேலும் ஒமெகா கொலஸ்ட்ரால் அமிலங்கள் என்றால் என்ன, அவை நமக்கு எவ்வாறு உபயோகப்படுகின்றன என்ற தகவல்கள் புதிதானவை. நம் உடம்பில் இருக்கும் பல்வேறு வகை கொலஸ்ட்ரால்களை எவ்வாறு டெஸ்ட் மூலம் கண்டு பிடிக்கலாம், அவை எவ்வளவு அளவில் இருக்கவேண்டும் என்ற கணக்குகளை ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த என்னென்ன மருந்துகள் உபயோகப்படுத்தலாம் என்பதைப் பற்றியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சாதாரணமாகவே ஒவ்வொருவரும் தம்முடைய உணவு, உடற்பயிற்சி ஆகியவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். ருசிக்காக எண்ணையில் பொரித்த பலகாரங்களை சாப்பிட்டால் எவ்வாறு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதைப்பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண நடைப்பயிற்சி கூட எவ்வாறு கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரியங்களில் கவனமாக இருந்தாலே கொலஸ்ட்ரால் சம்பந்தமான பெரும்பாலான தொந்திரவுகளிலிருந்து நாம் விடுதலை பெறலாம்.
Fast Food கலாச்சாரத்திற்கு அடிமையாகி இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். தெருவோரங்களில் எண்ணையில் பொரித்துக் கொடுக்கப்படும் தின்பண்டங்களில் இருக்கும் எண்ணையால் உடலுக்கு எவ்வாறு கேடு விளைகிறது என்பதை இந்த புத்தகத்தை படித்தால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

மூத்த குடிமக்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயன் படக்கூடியது. ஒவ்வொரு வகை உணவிலும் எவ்வளவு கொலஸ்ட்ரால்ச்சத்து உள்ளது என்ற பட்டியல் எல்லொருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உணவில் எந்தெந்த எண்ணைகள் சேர்த்துக்கொள்ளலாம், எவைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. வயதான பிறகு தங்களுடைய உடல் நலத்தில் மூத்த குடிமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன.
சில குறைகள்;
பக்கம் 32ல் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் பல உணவு வகைகள் நம் நாட்டினருக்கு பரிச்சயமில்லாதவை. உணவு மாற்றங்களைப பற்றி எழுதும்போது சில இடங்களில் மிகவும் டெக்னிகலாக இருக்கின்றன. அவை மூத்த குடிமக்கள் பலருக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருக்கலாம். மற்றபடி இந்த புத்தகம் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடயதாகவே இருக்கிறது.
நல்ல சரளமான தமிழில் எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒரு புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும் அதை தைரியமாக பிரசுரித்த NHM நிறுவனத்திற்கும் என்னுடைய பாராட்டுகள். புத்தகத்தின் அட்டைப்படமும் மற்ற அமைப்புகளும் நன்றாக இருக்கின்றன.
புத்தகத்தின் பிரசுர விவரங்கள்;
கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி?
ஆசிரியர்; டாக்டர் சு.முத்து செல்லக்குமார்
முதல் பதிப்பு – அக்டோபர், 2008
128 பக்கம் விலை; ரூ.60
பிரசுரித்தவர்; பத்ரி சேஷாத்ரி
Published by:
New Horizon Media Pvt. Ltd.,
No. 33/15, Eldams Road,
Alwarpet, Chennai-600 018.

Email : support@nhm.in
Website: www.nhm.in

புதன், 11 மார்ச், 2009

நாட்டு நடப்பு – 3

இன்றைய செய்தி-கோவையில் நான்கு இடங்களில் பெண்களிடமிருந்து நகை பறிப்பு. தங்கம் பவுன் 11 ஆயிரம் ரூபாயக்கு மேல் விற்கிறது. தங்கத்தை விற்பது எளிது. ஆகவே அதை திருட பல கயவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் தமிழ்நாட்டுப்பெண்களுக்கு கழுத்தில் ஒரு இரண்டு பவுனாவது இல்லாவிட்டால் அவர்களுக்கு மூச்சு விட முடியாது. மிடில் கிளாஸ் குடும்பம் என்றால் குறைந்தது ஒரு பத்து பவுனாவது கழுத்தில் வேண்டும். பத்து பவுன் என்றால் இன்றைய விலையில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்.
இதைப்பார்க்கும் வழிப்பறித்திருடனுக்கு அல்வா சாப்படுகிற மாதிரி. இரு சக்கர வாகனங்களில் இரண்டு பேர் வேகமாக மேலே இடிப்பது போல் பக்கத்தில் உரசிக்கொண்டு போவார்கள். பின்னால் உட்கார்ந்திருப்பவன் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் கழுத்தில் இருக்கும் நகையை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுவார்கள். என்ன நடந்தது என்று அந்த பெண்ணுக்குத் தெரிவதற்குள் அந்த திருடர்கள் கண்ணுக்குத்தெரியாத தூரத்திற்கு சென்று விடுவார்கள்.
நகையை பறிகொடுத்த பெண் சுதாரித்து சத்தம் போடுவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருக்கும். போலீசுக்கு தகவல் போய் அவர்கள் வந்து விசாரிக்கும்போது இந்தப்பெண்ணிற்கு அழுகைதான் வருமே ஒழிய கோவையாக வார்த்தைகள் வராது.
பிறகு என்ன? வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பத்து-இருபது தடவை நடந்தபின் ‘நகை போனால் போகிறது, இந்த தொந்தரவிலிருந்து தப்பித்தால் போதும்’ என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் துக்க விசாரிப்புகள் வேறு. சொந்தக்காரர்களின் விசாரிப்பு வேறு விதமாக இருக்கும். உனக்கு எப்போதும் ஜாக்கிரதை போறாது. வெளியில் நகை போட்டுக்கொண்டு போகையில் அக்கம் பக்கம் பார்த்து ஜாக்கிரதையாக போகக்கூடாதா? நகை போன துக்கம் ஒரு பக்கம், இந்த ஈவிரக்கமில்லாத விசாரிப்புகள் இன்னொரு பக்கம், எல்லாம் சேர்ந்து அந்தப்பெண் படும் பாடு இருக்கறதே அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
இதை விடக்கொடுமை என்னவென்றால் அந்தப்பெண்ணின் கணவன் இருக்கிறானே அவன் படுத்தும் பாடு ஆயுளுக்கும் தொடர் கதையாகத்தொடரும். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த நகையாக இருந்ததோ போச்சு, அவன் பேச்சைக் கேட்டு காதில் இரத்தம் வந்து விடும்.
சரி உலகத்தில் இப்படி நடக்கிறதே, நாமாவது ஜாக்கிரதையாக ஏதாவது டூப்ளிகேட் நகை அல்லது வடநாட்டுப்பெண்கள் போடுவது போல் ஏதாவது ஒரு அரை பவுனில் ஒரு செயின் கண்ணுக்குத் தெரியாமல் போடலாம் என்று நினைப்பார்களா? மாட்டார்கள், அவள் அஜாக்கிரதையாக இருந்ததால்தான் அவள் நகையை திருடன் அறுத்துக்கொண்டு போனான். நானெல்லாம் அப்படி அஜாக்கிரதையாக போகமாட்டேன் என்று பீத்திக்கொள்வாள். அவளும் ஒரு நாள் தன் நகையை திருட்டுக்கொடுப்பாள்.
வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும். மேலும் அவர்கள் அணிவது 18 அல்லது 14 கேரட் தங்க நகைகள்தான். நம் தமிழ் பெண்களுக்கு மட்டும் இந்த நகை மோகம் எப்படி பிடித்த்து என்று தனியாக ஒரு ஆராய்ச்சி நடத்த வேண்டும.
தொடரும்....

திங்கள், 9 மார்ச், 2009

நாட்டு நடப்பு – 2

தினமும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளில் முக்கியமானவை திருட்டுச்செய்திகள்தான். திருட்டுகளில் பலவகை. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
வங்கிகளில் பணம் எடுத்து வரும்போது திருட்டுக்கொடுப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. இரண்டொரு பண நோட்டுக்களை வழியில் போட்டுவிட்டு ‘ஐயா, இந்த நோட்டு உங்களது போல இருக்குதே’ என்று கூறுவார்கள். நீங்களும் ஓஹோ, நம் பணம் தானோ என்று அதை எடுக்க முயற்சி செயவீர்கள். அந்த சமயத்தில் உங்கள் கவனம் அந்த கீழே கிடக்கும் பணத்தின் மீதுதான் இருக்கும். அப்போது அந்த திருடர்கள் உங்கள் பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. இரண்டொரு நிமிடங்கள் கழித்துத்தான் என்ன நடந்தது என்று புரியும். அதற்குள் அந்த திருடன் கண்காணாமல் போயிருப்பான்.
இந்த மாதிரியான செய்திகள் அநேகமாக வாரத்திற்கு ஒருமுறையாவது வருகின்றன. மக்கள் இந்த செய்திகளைப் பார்த்துவிட்டு என்ன நினைப்பார்கள் என்று புரியவில்லை. நமக்கு இந்த மாதிரி நடக்க்காது என்று நினைப்பார்கள் போலும். ஆனால் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால் மனித மனம் சபல புத்தி உள்ளது. எதுவும் சும்மா கிடைக்கிறது என்றால் அவனது புத்தி அப்போது வேலை செய்வதில்லை. என் பாட்டி ஒரு பழமொழி சொல்வார்கள் – ஒருத்தன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒருவன் யானை, யானை, கடனுக்கு யானை என்று விற்றுக்கொண்டு போனான். இந்த சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய நிறைய சோறு, பேச மடியவில்லை, இடது கையினால் எனக்கு ஐந்து என்று சாடை காட்டினானாம், அது போல சும்மா கிடைக்கு மென்றால் எதுவாக இருந்தாலும் கை நீட்டுவதுதான் நம் ஜனங்களுக்கு பழக்கம். இந்த பழக்கம் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் பணத்தை கீழே பார்த்தவுடன் அது நம்முடையதுதானா என்ளு கொஞ்சமும் யோசிக்காமல் அதை எடுக்க முயற்சிக்கிறான். நஷ்டம் அடைகிறான். இந்த ஆசையானது மக்களை மேலும் எப்படி அலைக்கழிக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தொடரும்....

சனி, 28 பிப்ரவரி, 2009

நாட்டு நடப்பு – 1

உலகத்தில் எல்லோரும் தனக்கு எல்லாம் தெரியும்; தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தினால் அடுத்தவர் சொல்லும் நல்லதைக் கேட்க விருப்பப் படுவதில்லை. ஆனால் யாராவது துர்புத்தி சொன்னால் அதை மட்டும் கேட்டுக்கொள்வார்கள். இது உலக வழக்கம்.
தனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை என்ற தெளிவு 75 வயதுக்கு மேல்தான் வருகிறது. ஆனால் அப்போது இந்த அறிவு வருவதினால் அவனுக்கு பெரிதாக நன்மை ஒன்றும் விளையப்போவதில்லை. ஆனால் ஒரு நன்மை உண்டு. முன்னால் கேட்பவர்கள் கேட்காதவர்கள் எல்லோருக்கும் இலவச அறிவுரை கூறி வந்ததை இப்போது நிறுத்திக்கொள்ளலாம். அப்படி நிறுத்துபவர்கள் புத்திசாலிகள். பெரும்பாலானவர்கள் அவ்வாறு நிறுத்துவதில்லை. அவர்கள்தான் தங்கள் குடும்பத்தினரால் ஒதுக்கப்படுகிறார்கள்.
வயதானால் அவர்களை அறியாமலேயே அதிகமாகப்பேச வேண்டும் என்கிற அவா தங்களை அறியாமல் வந்து விடுகிறது. இதை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். இது மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு வயதானவரும் இந்த எச்சரிக்கையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். ....தொடரும்....

வியாழன், 26 பிப்ரவரி, 2009

சு.சாமியும் வக்கீல்களும்

சுப்பிரமணியசாமி என்கிற கோமாளி எதற்காக உயர்நீதி மன்றத்திற்கு வந்தார் என்று ஆராய்ந்தால் பல காரணங்கள் கூறலாம். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அரசு ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அதற்கு ஆதரவு கொடுக்கட்டும். ஏன் தன்னையும் ஒரு கட்சிக்காரனாக சேர்த்துக்கொள்ள விண்ணப்பம் போட்டு அதற்காக நேரில் ஆஜராக வேண்டும். நீ ஒரு பார்ப்பானாக இருப்பதினால் தானே இதற்கு தலைப்பட்டிருக்கிறாய்?
ஜனநாயக நாட்டில் இதற்கு கூட உரிமை இல்லையா என்று கேட்கலாம். உங்கள் ஜனநாயக உரிமையை யாரும் மறுக்கவில்லை. ஆனால் உயர் நீதிமன்றத்தில் நின்று கொண்டு பார்ப்பனரல்லாதாரை திட்டுவதற்கு இவருக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?
பிறகு குய்யோ முறையோ என்று கத்துவது எதற்காக? இதைப்பற்றிய ஒரு வலைப்பதிவில் சில பார்ப்பனர்கள் பார்ப்பனர்களல்லாதாரை இஷ்டத்திற்கும் திட்டியிருக்- கிறார்கள். இந்த சமாசாரத்தை விரிவாகப்பேசி பட்டி மன்றம் நடத்த எனக்கு ஆசையில்லை. ஆனால் ஏதோ இவர்களுக்குத்தான் கணக்கு தியரமும் கெமிஸ்ட்ரி பார்முலாவும் வரும் என்று சொல்லியிருப்பதுதான் வேடிக்கை. போன நூற்றாண்டில் வேண்டுமானால் அது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பார்பானைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பார்ப்பனல்லா -தவரும் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த வலைப்பதிவில் கூறியிருப்பதை வைத்து பார்க்கும்போது என்ன தெரிகிறதென்றால், இந்த பார்ப்பனர்கள் இன்னும் அவர்களுடைய அடிப்படை குணங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான். ஒரு பெரியார் இல்லையென்றால் நம்மை எந்த அளவு கீழே தள்ளியிருப்பார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும்.
தொடரும்.....

புதன், 25 பிப்ரவரி, 2009

பொது சேவை-3

இந்திய தேசீய குணங்களில் ஒன்று செம்மறியாட்டு மனப்பான்மை. கூட்டமாக இருக்கும்போது தலைவன் என்ன சொன்னாலும் அதைப்பற்றி சிறிதும் சிந்தியாது உடனே காரியத்தில் இறங்குவார்கள். நூறு பேர் சேர்ந்து ஒரு கோஷம் போட்டால் இவனும் அவர்களுடன் சேர்ந்து கோஷம் போடுவான். என்ன, ஏது என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டான். ஆஹா நம் தலைவர் சொல்லிவிட்டார், அந்த காரியத்தை உடனே செய். அவ்வளவுதான்.அதிலும் இன, மதம், மொழி, ஜாதி விவகாரம் என்று வந்து விட்டால் அவ்வளவுதான், வேறு எதையும் பார்க்கமாட்டான். தலைவன் என்ன சொல்லுகிறானோ அதுதான் வேதவாக்கு. வெட்டு என்றால் வெட்டுவான், அடி என்றால் அடிப்பான், கொல் என்றால் கொலவான். அதன் பின் விளைவுகளைப் பற்றி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டான். தலைவன் தன் ஆபீஸ் ரூமின் பாதுகாப்பில் உட்கார்ந்து கொண்டு மக்களை பகடைக்காய்களாக நகர்த்திக்கொண்டு இருப்பான்.அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் கட்சிகளை வளர்ப்பது இவ்வாறுதான். அவர்கள் சூழ்நிலையை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் போதும். உடனே போராட்டம் ஆரம்பித்து விட வேண்டியதுதான். உதாரணத்திற்கு இலங்கைத்தமிழர் பிரச்சினை. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வந்து அகதிகளாக வருடக்கணக்கில் முகாம்களில் பல இன்னல்களுக்கு இடையே தங்கியிருக்கிறார்கள். இப்போது பல விதமான போராட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சித்தலைவர்கள் அந்த முகாம்களுக்குப் போயிருப்பார்களா என்பது சந்தேகமே.ஆனால் இப்போது இலங்கையில் விடுதலைப்புலிகளின் மேல் இலங்கை அரசு போர் தொடுத்தவுடன் இங்கே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் தமிழர்களின் பேரில் அப்படி ஒரு பாசம் பொத்துக்கொண்டு போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களினால் இலங்கைத்தமிழர்களுக்கு என்ன பயன் இருக்கிறதோ இல்லையோ, இங்கேயுள்ள அரசியல் கட்சிகள் தங்களை நன்றாக வளர்த்துக்கொள்ளும். தொடரும்........

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

பொது சேவை-2

பொது சேவை-2
ஒவ்வொரு நாட்டிற்கும் தேசீய குணம் என்று ஒன்று உண்டு. உதாரணமாக ஜப்பான் நாட்டை ஒடுத்துக்கொண்டால் அந்த நாட்டு மக்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்கள். ஜெர்மனி நாட்டவர்கள எடுத்துக்கொண்டால் தரமான பொருட்களை தயாரிப்பதில் வல்லுநர்கள். ஐரோப்பியர்களை எடுத்துக்கொண்டால் ஒழுக்கத்திற்கும் எந்த சூழ்யிலையிலும் மனம் தளராமல் கடமையை செய்வதில் முனைப்பாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட குணாதசியங்கள் இருக்கிறது.
ஆனால் இந்தியர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய குணாதசியங்கள் என்று எதைக்கூறுவது என்பது பெரிய கஷ்டமான சமாசாரம் ஆகும். முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். நாடும் மற்றவர்களும் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போகட்டும்; நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற பரந்த மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
மற்ற எல்லா நாட்டு மக்களும் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாடும் மற்ற மக்களும் நன்றாக இருந்தால்தான் நானும் நன்றாக இருக்க முடியும் என்று எண்ணி அதற்காக தங்கள் கடமைகளை சரியாகச்செய்கிறார்கள்.

ஆனால் இந்திய நாட்டு மக்களோ என்றால் எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்று செயல்படுபவர்கள். அப்படி ஏதும் வீடு எரியவில்லை என்றால் அவர்களே வீட்டிற்கு தீ வைப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். அபெபடு வைத்த தீயைத்தான் சமீபத்தில் சின்னத்திரைகளில் விரிவாக்கஃ காட்டினார்கள்.
சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் காவல் துறையினரும் சட்ட வல்லுனர்களும் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நடத்திய போராட்டம் ஒரு உச்ச கட்ட ஜனநாயகப் படுகொலை. அநாகரிகத்தின் எல்லைக்கோடு. அதுவும் ஒரு நீதிபதிக்கும் கூட தலையில் காயம் பட்டிருக்கிறது. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற போக்கு எல்லா இடங்களிலும் பரவி விட்டது. எதிர்காலத்தில் மக்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவது கூட அச்சத்துடன்தான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இப்படி ஏன் நடக்கிறது என்று யோசித்தால் அதற்கு காரணம் நமது நாட்டிற்கு என்று ஒரு தேசிய குணம் கிடையாது. தேசப்பற்று கிடையாது. நாட்டின் உச்ச ஸ்தாபனமான நாடாளுமன்ற சபையிலே மக்களின் நடவடிக்கைகளுக்கு முன் உதாரணம் இருக்கிறது. இந்த நாட்டின் தலை விதியையே நிர்ணயிக்கும் நாடாளுமன்ற உருப்பினர்களின் நடத்தையைப் பார்க்கும்போது உயர்நீதி மன்றத்தில் நடந்தவை மிகவும் சாதாரணமானவையே. இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வதற்கு நாம் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தொடரும்.....

புதன், 18 பிப்ரவரி, 2009

பொது சேவை-1

பொது சேவை-1
ஆகவே எப்படியாவது இந்த சமூகத்தை சீர்திருத்தி விடுவது என்று தீர்மானம் செய்தாகிவிட்டது. அதை எப்படி செய்யலாம் என்று யோசித்தபோது இந்த வலைத்தளத்தை அதற்கு பயன்படுத்தலாமே என்ற எண்ணம் உதித்தது. உடனே அதை நடைமுறைப்படுத்துகிறேன்.
ஆனால் உலகத்தில் நடைமுறை எப்படியென்றால் யாரும் அடுத்தவர் சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்வதில்லை.நேற்றுப்பிறந்த குழந்தை முதல் நாளை சாகப்போகும் கிழவன் வரை யாரும் பிறர் சொல்வதை, அது நன்மையே பயக்குமென்றாலும் தான் நினைத்ததுதான் சரி, எனக்கு யாரும் சொல்லவேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறார்கள்.
இது மனிதனின் இயற்கை குணம். இதை யாராலும் மாற்ற முடியாது. பிறகு ஏன் எல்லோரும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க முற்படுகிறார்கள் என்றால் தனக்கு மற்றவர்களை விட அறிவு அதிகம் என்று காட்டிக் கொள்ளத்தான். அவன் சொல்வதை அடுத்தவன் கேட்க மாட்டான் என்று அவனுக்கு நன்றாகத்தெரியும். ஆனால் ஏன் அறிவுரை கூற முற்படுகிறான் என்றால் பின்னால் மற்றவன் ஒரு கஷ்டம் என்று சொல்லும்போது ‘’ நான் அன்றே சொன்னேனே கேட்டியா?’’ என்று குத்திக் காட்டுவதற்- காகத்தான்.
இவ்வளவு பேசும் நீ எதற்காக இப்போது அறிவுரை கூற முற்பட்டிருக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கோ வேறு வேலை இல்லை, மற்றவர்களுக்காக நீ என்ன செய்தாய் என்று வருங்கால சந்த்தியினர் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது அல்லவா? அதற்காகத்தான். ஊதற சங்கை ஊதி வைத்தால் விடியும்போது விடியட்டும் எனகிற பரந்த நோக்கில் இந்த தளத்தைப்பயன்படுத்துகிறேன்.
தொடரும்.....

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நதிமூலம்-5

நதிமூலம்-5
உலகம் உய்வதற்காக பல அவதாரபுருஷர்கள் நம் நாட்டில் அவதரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமானவர்கள் அல்ல. தற்கால சமூகத்தை புணருத்தாரணம் செய்ய அவதரித்துள்ள அவதார புருஷர்கள் இன்றைய இன்டர்நெட் வலைத்தளங்களில்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் சேவையை நீங்களே அனுபவித்தால்தான் அதனுடைய பூரண இனபத்தைப்பெற முடியும். இருந்தாலும் என்னால் முடிந்த வரையில் விவரிக்கிறேன்.
மனிதனுக்கு எப்போதும் அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறுந்து கொள்வதில் அலாதி ஆனந்தம். இந்த வலைத் தளங்கள் இந்த ஆசையை பூரணமாக நிறைவேற்றுகின்றன.
உதாரணத்திற்கு ஒரு தளத்தில் என்ன சொல்லியிருக்- கிறார்கள் என்று சொல்கிறேன்.
‘’நான் இன்று காலையில் எழுந்தேன். பல் விளக்கினேன். காபி குடித்தேன். நாயைக்குளிப்பாட்டினேன். நானும் குளித்தேன். டிபன் சாப்பிட்டேன். என் சமையல் அறையில் கரப்பான் பூச்சி வந்தது. கம்ப்யூட்டரில் இதை எழுதினேன். ........ இப்படியே இரவு தூங்கப்போவது வரை விலாவாரியாக விவரித்து விட்டு, பிறகு தூங்குவார்கள் (என்று நினைக்கிறேன்)’’
நல்ல வேளை அதற்குப்பிறகு நடப்பவற்றை தற்சமயம் விவரிப்பதில்லை. அதைப்பற்றியும் விவரிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லது அப்படி எழுதியவை என் கண்ணில் படாது போயிருக்கலாம்.
ஆஹா தேச சேவை செய்ய இப்படியும் ஒரு வழி இருக்கிறதா, இத்தனை நாள் நமக்கு தெரியாமல் போய்விட்டதே, நம் ஓய்வு நாளை பயனுள்ளதாய் கழித்து போகுமிடத்திற்கு புண்ணியம் தேடிக்கொள்வோம் என்று முடிவு செய்து இந்த வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன்.
எவ்வளவு நாள் நடக்கும், எத்தனை பேர் இதைப்பார்ப்பார்கள் என்றெல்லாம் எனக்கு யோசனை இல்லை. எப்படியோ, பொழுது போவதற்கு ஒரு வழி பிறந்தது. மேலும் என் மாமனார் வீட்டார் நான் பஞ்சமாபாதகத்திலிருந்து மீண்டு விட்டேன் என்ற சந்தோஷமும் அடையவும் இந்த வேலை காரணமாய் அமைந்தது. ஆகவே எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கலாம் என்று இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன். இது சந்தோஷத்தை கொடுக்குமா அல்லது கஷ்டத்தை கொடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
இதுதான் இந்த வலைத்தளத்தின் நதிமூலம்..............தொடரும்..

சனி, 14 பிப்ரவரி, 2009

நதிமூலம்-4

காலை 3 மணிக்கு எழுந்திருந்து கணிணி முன்பு உட்கார்ந்து மின்னஞ்சல் உருவாக்கி இன்டர்நெட்டுக்குள் போனால் ஒரு நிமிடத்திற்குள் இந்த மின்னஞ்சல் போய்விடும். பிறகு மீதி உள்ள 14 நிமிடத்தை என்ன செய்வது? ஏதாவது செய்யலாம் என்று வலைத்தளங்களுக்குள் பிரவேசித்தேன். சிறிது காலம் ஒன்றும் திசை தெரியாமல் குழம்பி பிறகு ஒருவாறாக இன்டர்நெட்டின் நுணுக்கங்களை புரிந்து கொண்டேன். குறிப்பாக கூகுள் தேடுதளம் மிகவும் உபயோகமாக இருந்தது. பலவிதமான பொருள்களைப்பற்றி தேடியதில் பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.
இளைஞர்கள் (60+) எவ்வாறு உடல்நலத்தை பேணுவது என்பதில் இருந்து விமானம் எப்படி பறக்கிறது என்பதுவரை பார்த்தபிறகு வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போதுதான் என் நண்பர் ஒருவர் ஒரு துண்டு பிரசுரம் எங்கள் குழு கூட்டத்தில் விநியோகித்தார். அதில் அவர் ஆரம்பித்து நடத்திவரும் ஒரு வலைத்தளம் (வலைத்தளமா அல்லது வலைப்பூவா, எனக்கு சரியாகத்தெரியவில்லை) பற்றி குறிப்பிட்டிருந்தார். அதைத்தேடி கண்டுபிடித்து பார்த்தேன். மிகவும் அழகான மலர்களின்(?!) படங்கள் (நம் தமிழ் கலாசாரப்படி பெண்களும் மலர்கள்தானே) மற்றும் பல செய்திகள் சுவையாக வெளியிட்டிருந்தார்.
சில காலம் இதைப்பார்த்த பிறகு சலிப்பு ஏற்பட்டு இது மாதிரி வேறு தளங்கள் இருக்கிறதா என்று தேடினேன். தேடும்போதுதான் தெரிந்தது – உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இந்த வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் எல்லாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள், அவர்களுக்கு குடும்பம் உண்டா, அப்படி இருந்தால் அதை யார் கவனிக்கிறார்கள், இந்த கணிணி நோண்டுவேலை செய்வதற்கு யார் செலவு செய்கிறார்கள் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த தளங்களில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தேன். பார்த்ததில்.....
வளரும்....

வியாழன், 12 பிப்ரவரி, 2009

நதிமூலம்-3

அமெரிக்கா ஒரு சொர்க்கபுரிதான். ஆனால் என்னதான் சொர்க்கமாய் இருந்தாலும் பேசுவதற்கு ஆள் இல்லாவிட்டால் அது நரகம்தானே. என் நண்பருக்கு இந்த விஷயம் நன்றாகத்தெரியும். ஆகவே அமெரிக்கா போவதற்கு முன்பே என்னிடம் ஒரு எழுதா ஒப்பந்தம் போட்டு விட்டுத்தான் போனார். அது என்னவென்றால் தினமும் நான் அவருக்கு ஒரு மின்னஞ்சலில் இங்குள்ள நாட்டு நடப்புகளை அனுப்ப வேண்டும். நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் இந்த மின்னஞ்சல் அனுப்புவதற்கு நான் பட்ட கஷ்டங்களை பிறகு எழுதுகிறேன்.
என்னுடைய கணிணியில் இன்டர்நெட் தொடர்பு இல்லை. என் மகளுடைய இன்டர்நெட் தொடர்பில் கொஞ்ச நாள் மின்னஞ்சல் அனுப்பி வந்தேன். பிறகு அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் வந்தபடியால் நானே ஒரு இன்டர்நெட் இணைப்பு வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நமது அரசு வழங்கும் இணைப்பை வாங்கினேன். நீண்ட நாள் பழக்கத்தினால் எது மலிவாக கிடைக்குமோ அதைத்தான் வாங்கிப்பழக்கம். அப்படி வாங்கியதுதான் 280 ரூபாயில் ஒரு வருடத்திற்கு 50 மணி நேர பேக்கேஜ். இன்டர்நெட் பேக்கேஜில் இரண்டு விதமான செலவுகள் உண்டு. ஒன்று உபயோகிக்கும் நேரத்திற்கான செலவு. தாவது இந்த 50 மணி நேரத்திற்கு 280 ரூபாய் என்றால் ஒர் மணி இன்டர்நெட் உபயோகித்தால் ரூபாய் 5.60 அம்பேல். இரண்டாவது நாம் இன்டர்நெட் உபயோகிக்கும் நேரத்திற்கு உண்டான தொலைபேசி கட்டணம். இது பகலில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.9.60 ஆகும். அதாவது 71/2 நிமிடத்திற்கு ஒரு யூனிட் சார்ஜ்.
என்னைப்போன்ற தாராள மனசுக்காரங்களுக்காக அரசு பெரிய மனசு பண்ணி இதில் இரண்டு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. உபயோகித்தவர்களுக்கு தெரியும். ஒன்று இரவு 11 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் இன்டர்நெட் உபயோகித்தால் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம் இல்லை. மேலும் இரவு 10.30 மணியிலிருந்து காலை 7.30 மணி வரை இன்டர்நெட் உபயோகித்தால் தொலைபேசி கட்டணம் பாதிதான் ஆகும் அதாவது ஒரு மணிக்கு ரூ.4.80 தான். 15 நிமிடங்களுக்கு ஒரு யூனிட் சார்ஜ். நான் என்ன செய்திருப்பேன் என்று யூகிப்பது ஒன்றும் அப்படி கடினமான விஷயம் அல்ல.
வழக்கமாகவே எனக்கு காலையில் 3 மணிக்கு விழிப்பு வந்துவிடும். ஆகவே இந்த சலுகைக்கட்டணத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை.
பிறகு....

புதன், 11 பிப்ரவரி, 2009

நதிமூலம்-2

கணிணியில் சீட்டு விளையாடுவதைப்பற்றி போன பகுதியில் எழுதியிருந்ததின் தொடர்ச்சி. ஒரு நாள் போனில் என் மனைவி வழி உறவினர் யாரோ என்னைக் கூப்பிட்டிருக்கறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு என் மனைவி, அவர் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று சொல்ல ஒரே கூத்தாகிப்போய்விட்டது. சீட்டு விளையாடுவது என்பது பஞ்சமா பாதகங்களில ஒன்றாக கருதப்படும் சமூகத்தில் பிறகு என் மாமனார் வகை உறவில் என் மதிப்பு என்ன ஆகி இருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.
சரி இந்த வம்பு வேண்டாம், ஆனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
இப்படி இருக்கும்போது என் நண்பர் ஒருவர் அமெரிக்காவுக்கு தன்னுடைய மகன் வீட்டிற்கு 6 மாத தங்கலுக்காக சென்று விட்டார். அவரும் என்னைப்போலவே ஓய்வு பெற்றவர். அவர் இங்கே இருக்கும்போது அவருக்கு என்ன வேலை என்றால் தினமும் காலையில் டிபன் சாப்பிட்டு முடிந்த்தும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு நண்பர் வீட்டிற்கு செல்வார். அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் பேசி உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வார். உலக நடப்பென்றால், திருவிளையாடல் சினிமாவில் சிவாஜி கணேசன் பாணியில் ‘நடந்தது, நடவாதது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும்’ அவருக்கு தெரிந்தாகவேண்டும். இல்லையென்றால் அன்று இரவு அவருக்கு தூக்கம் வராது.
இப்படியாக தினமும் காலையில் ஒரு நண்பர், மாலையில் ஒரு நண்பர் என்று முறை வைத்துக்கொண்டு நான்கு நாட்களுக்கு ஒரு சுற்று வீதம் வலம் வந்து செய்திகளை தெரிந்து கொள்வார். இது தவிர காலையிலும் மாலையிலும் இரண்டு குழுவினருடன் நடைப்பயிற்சியும் போவார். நடைப்பயிற்சியை விட அவருக்கு நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வதில்தான் ஆர்வம் அதிகம். இப்படிப்பட்ட அகோர செய்திப்பசி கொண்டவர் அமெரிக்காவில் போய் சிக்கிக்கொண்டால் எப்படியிருக்கும் ?
பொறுத்திருக்கவும்...

நதிமூலம்-1


நான் இந்த வலைப்பதிவு விளையாட்டுகளுக்கு புதியவன். என்னுடைய மகள் தனக்கு ஒரு கணிணி புதிதாக வாங்கிக்கொண்டு தான் வைத்திருந்த பழைய கணிணியை எனக்கு தானம் கொடுத்தாள். எனக்கு கணிணியில் முன்பே சிறிது பழக்கம் உண்டு. ரொம்ப காலத்திற்கு முன்பு நான் வேலையில் இருந்தபோது அலுவலகத்தில் ஒரு கணிணி என்னுடைய அறையில் வைத்திருந்தார்கள். அது கணிணிகள் (குறிப்பாக மேஜை மாடல்கள்) வரத்தொடங்கிய காலம். என்னுடைய அறையில் இருந்த மாடலில் நிலையான சேமிப்பு சாதனம் இல்லை. இரண்டு தகடு அறைகள் இருந்தன. ஒன்றில் (A drive) மென்பொருள் தகட்டைப்போட்டுவிட்டு இன்னொன்றில் (B drive) நமக்கான தகட்டைப் போட்டுக்கொண்டு கணிணியில் நம் சித்து வேலைகளைக் காட்டவேண்டும்.
நான் வகித்த பதவி காரணமாக கணிணியை உபயோகிப்பது எப்படி என்று யாரிடமும் பாடம கேட்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் இதை விடக்கூடாது என்ற எண்ணம் மனதில் விழுந்து விட்டது. மாலை 5 மணிக்கு மேல் கணிணி முன்பு உட்கார்ந்து நேரம் காலம் பார்க்காமல் ஒவ்வொரு படியாகப்படித்து முன்னேறி இன்று கணிணியைப்பிரித்து மேயும் அளவுக்கு முன்னேறியுள்ளேன்.
இப்போது ஓய்வு பெற்று வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும்போது இந்த கணிணி கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. கணிணி உபயோகிப்பது என்னைப்போன்ற இளைஞர்களுக்கு (அதாவது 60 வயதுக்கு கீழே உள்ளவர்கள் குழைந்தைகள், அதற்கு மேல் உள்ளவர்கள்தான் இளைஞர்கள். என்னுடைய வயது வெறும் 75 தான்) அதிகமாக பரிச்சயம் இல்லாததால் ஏதாவது விளையாட்டு விளையாடலாம் என்று முடிவு செய்து என்ன விளையாடலாம் என்று பார்த்தேன்.
கணிணிக்குள் பார்த்தபோது ஒரு சீட்டு விளையாட்டு கிடைத்தது. (Spider Solitaire). சில நாட்கள் விடாமுயற்சி செய்து இந்த விளையாட்டை கற்றேன். என்ன ஆயிற்று என்றால் இந்த விளையாட்டு என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. தூங்கும் நேரம் போக மீதி உள்ள நேரமெல்லாம் இதே பைத்தியமாக போய்விட்டது. என் மனைவி சாப்பிடுவதற்கு பல முறை கூப்பிட்டாலும் பிறகு வருகிறேன் என்று கூறி விட்டு இந்த சீட்டு விளையாட்டில் மூழ்கியிருந்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் ...
(தொடரும்)