வியாழன், 12 நவம்பர், 2015

காது கருவிகள்

                                             Image result for காது மிஷின்
வயசானா பல்லு போகும். கண்ணு தெரியாது. காது கேட்காது. இவைகள் எல்லாம் சித்திரகுப்தன் தமக்கு அனுப்பும் நோட்டீசுகள். "அப்பா, பூலோகத்தில  பட்ட கஷ்டம் எல்லாம் போதும்ப்ஃபா, இங்க வந்திருங்க. உங்களுக்காக எல்லா சௌகரியங்களும் பண்ணி வச்சிருக்கோம் " னு அவன் அனுப்பும் நோட்டீசுகள் அவை.

ஆனால் நாம் கேட்போமா? "இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருக்கும் சொகங்களை அனுபவிச்சுட்டு வரேண்டா, மகனே" என்று இருப்பவர்கள்தான் அதிகம் பேர்.

பல்லு போனா செயற்கைப் பற்கள் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் இருக்கும் சிரமங்களை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போட்டுக்கிடலாம். அதில் அதிகம் சிரமம் இல்லை. எங்காவது மறந்து வச்சுட்டா தேடறதுக்கு இன்னொரு கண்ணாடி வேண்டும். அவ்வளவுதான்.

இந்தக் காது கேட்கறது இருக்குதே, இது ஒரு பெரிய சவால். இதை ஒரு சாபமாகவும் எடுத்துக் கொள்ளலாம்,  இல்லை, ஒரு வரமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பெண்டாட்டி வையறது கேட்காதுங்கறது ஒரு பெரிய வரம். ஆனால் நமக்கு வேலை ஆகவேண்டிய இடங்களில், பாங்க் போன்ற இடங்களில் நாம் ஒன்று கேட்க அவர்கள் ஒரு பதில் கூற, அது நமக்கு கேட்காமல் நாம் ஏறுமாறாக எதையாவது கூறப்போக, வம்பு வந்து விடும்.

காது கேட்காவிட்டால் வெளி வேலைகளுக்குப் போகாமல் இருந்து விட்டால் என்ன என்று சிலர் கேட்கலாம். இத்தனை நாட்களாக நாமே பார்த்த வேலைகளை இன்னொருவரை வைத்துப் பார்க்க மனது ஒப்புவதில்லை. இதுதான் பெரிய வேதனை.

சரி, காது மிஷின் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் பேச்சைக் கேட்டு என் நண்பர்கள் பலர் மிஷின் வாங்கி வைத்தார்கள். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அவர்களை அந்த மிஷினை உபயோகப்படுத்துவதாகக் காணோம். ஏனென்று கேட்டால் சும்மா இருக்கும்போது கூட உஸ் என்று ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த சப்தத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்ற பதில் வந்தது.

ஏனென்றால் அந்த மிஷின் வெளியில் இருக்கும் எல்லா சப்தங்களையும் பெரிதாக்கி காதுக்குள் செலுத்துகிறது. நாம் காதை கையினால் மூடிக்கொண்டால் ஹூம் என்று ஒரு நாதம் வருகிறதல்லவா.இந்த நாதத்தைத்தான் "ஓம்" என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். நாம் கையை எடுத்து விட்டால் இந்த சப்தம் நமக்கு கேட்காது. ஆனால் காது மிஷின் வைத்திருப்பவர்களுக்கு இந்த சப்தம் எப்போதும் பலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கும். காது மிஷின்களில் இதுதான் பெரிய தொந்திரவு.

இந்த சப்தம் கேட்காமல் இருக்க மிகவும் அதிக விலை கொடுத்து, ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, மிஷின் வாங்க வேண்டியிருக்கும். அவ்வளவு விலை கொடுத்து வாங்க மனது வராது. விலை குறைவான மிஷின்களுக்கே வாரம் ஒரு முறை பேட்டரி மாற்றவேண்டும். ஒரு பேட்டரியின் விலை 30 ரூபாய். இந்த விலைக்குப் பயந்துகொண்டு மிஷினை அடிக்கடி அணைத்து வைப்பார்கள். இப்படி அடிக்கடி அணைத்து பிறகு அதை ஆன் செய்வதால் இந்த சுவிட்ச் பழுதாகி மிஷினே உபயோகமற்றுப் போவதும் உண்டு.

பொதுவாக நான் சிபாரிசு செய்வது என்னவென்றால் பேசாமல் ஒரு அட்டையில் "எனக்கு காது கேட்காது" என்று எழுதி கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வதுதான்.

புதன், 11 நவம்பர், 2015

கருணை இல்லங்கள்


மனிதாபிமானம் இந்த உலகில் இன்னும் இருக்கிறது என்பதற்கு அடையாளம் கருணை இல்லங்கள்தான். பிறந்த குழந்தைகளிலிருந்து நாளை மூச்சை நிறுத்தப்போகும் வயதானவர்கள் உட்பட அனைவருக்கும் உதவக்கூடிய பல வகை கருணை  இல்லங்கள் கோயமுத்தூரில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இவ்வகையான இல்லங்கள் பெரும்பாலும் மனிதாபிமானத்துடனேயே செயல்படுகின்றன. ஏதோ ஒன்றிரண்டு மாறுபாடாக இருக்கலாம். தீபாவளி அன்று இப்படிப்பட்ட கருணை இல்லம் ஒன்றிற்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு வழங்கி வரலாமே என்று எனது நண்பர் விரும்பினார்.

அதற்காக நாங்கள் போன கருணை இல்லம், கோயமுத்தூர் என்ஜிஓ காலனியில் செயல்படும் ஒரு கருணை இல்லம். இதை நாங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது என் மச்சினன் வீட்டிற்கு எதிரில் இருந்ததுதான். முதல் நாளே என் மச்சினன் மகனுக்கு போன் செய்து நாங்கள் இது மாதிரி பலகாரங்கள் கொண்டு வருகிறோம் என்று சொல்லி கருணை இல்ல நிர்வாகியிடம் சொல்லி வைக்கச்சொன்னேன்.


எனது நண்பர், என் மச்சினன் மகன், நான்

இந்த மாதிரி கருணை இல்லங்களுக்கு உணவோ அல்லது பலகாரங்களோ கொண்டு செல்பவர்கள் முன்கூட்டியே சொல்லி அவர்கள் அனுமதி பெற்றுச் செல்வது தேவையானது. ஏனெனில் ஒரே சமயத்தில் தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்கள் வந்து விட்டால் அவைகளை அவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் வீணாவதற்கு வாய்ப்பு உண்டு.

நாங்கள் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்ததினால் இந்தக் குழப்பம் வரவில்லை. நாங்கள் காலை 10.30 மணிக்குச் சென்றோம். இந்தக் கருணை இல்லத்தில் பதினைந்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். மொத்தம் 35 பேர் இருக்கிறார்கள். நாங்கள் போன சமயம் 15 பேர் அவர்கள் உறவினர்களின் வீட்டுக்குப் போய்விட்டார்கள். மீதி இருந்தவர்களுக்கு மட்டும் நாங்கள் கொண்டுபோன பலகாரங்களை விநியோகித்து விட்டு மேலும் இருந்தவற்றை அங்கேயே மற்றவர்களுக்கும் கொடுக்கச்சொல்லி வைத்து விட்டு வந்தோம்.

தீபாவளி அன்றி இப்படி கருணை இல்லக் குழந்தைகளுக்கு பலகாரம் கொடுத்தது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

சில படங்கள்.

கருணை இல்லக் குழந்தைகள்


கருணை இல்ல நிர்வாகி திருமதி. பாலின்.


கருணை இல்லம்

செவ்வாய், 10 நவம்பர், 2015

மேக்கி நூடுல்ஸ்

                                               Image result for மேக்கி நூடுல்ஸ்

ஆறு மாத த்திற்கு முன் 10-6-2015 அன்று மேக்கி நூடுல்ஸ் பற்றி நான் போட்ட பதிவு.

லிங்க்: http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_10.html

அதில் கடைசி பாரா;

இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில்  New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.

இன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்தி. 100 நகரங்களில் மேக்கி நூடுல்ஸ்சுக்கான தடை நீக்கப்பட்டது. ஜிங்க் மற்றும் எம்எஸ்ஜி, ஜீபூம்பா என்று காணாமல் போயிற்று. எல்லோரும் தீபாவளிக்கு மேக்கி நூடுல்ஸ் சாப்பிட்டு ஆனந்தமாக இருக்க நரகாசுரனை வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்க மேக்கி.

திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி வாழ்த்துகள்


அன்பார்ந்த பதிவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்.



diwali greetings

பந்தி நாகரிகம் தெரியுமா ?

                                                                                                                                                                   

பந்தி நாகரிகத்தைப் பற்றி பல கட்டுரைகள் இணையத்தில் விரவிக்கிடக்கின்றன. அவைகளிலிருந்து சில கருத்துகள்.

                                         
                 

இலையில் சாப்பிடுவதுதான் தமிழ்நாட்டு வழக்கம். இலையில் எது எதை எந்த இடத்தில் பரிமாறவேண்டும் என்ற முறையை இந்தப் படம் காட்டுகிறது.

கையினால் சாப்பிடுவதுதான் நம்ம ஊரில் பொதுவான பழக்கம். அதற்காக ஐஸ்கிரீமையும் கையினால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கப்படாது.

ஏன் விருந்து படைக்கவில்லை என்று யாரையும் யாரும் கேட்கக் கூடாது. விருந்தளிப்பது அவரவர்கள் உரிமை.

விருந்தினர்கள் கேட்கும் பதார்த்தங்களை அவர்கள் விரும்பும் அளவிற்கு பரிமாறுவதே நற்பண்பு.

தமிழ் நாட்டில் வலது கையினால் சாப்பிடுவதே முறை.

தனிப்பட்ட விருந்துகளுக்கு முறையான அழைப்பு இருந்தாலொழிய போகக்கூடாது. பொதுவான சத்திரங்களில் நடக்கும் அன்னதானங்களில் யார் வேண்டுமானாலும் அழைப்பில்லாமலேயே கூடப் போகலாம்.

சில சமயங்களில் சத்திரங்களில் அன்னதானம் நடக்காமல் போகலாம். அப்போது உணவு விடுதிகளில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

எந்த விருந்தானாலும் விருந்தினர்கள் தாங்களாக எந்தப் பொருளையும் கொண்டுவந்து பந்தியில் சாப்பிடக்கூடாது.

முறையான அழைப்போடு வந்திருக்கும் எந்த விருந்தினரையும் எந்த வகையிலும் அவமானப்படுத்தக்கூடாது.

விருந்தில் படைக்கப்படும் எல்லாவற்றையும் உண்பதே பண்பு.

விருந்து சாப்பிட்ட பின் கை கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால் கை கழுவுவது அவரவர்கள் விருப்பம்.

அப்புறம் இப்படி சாப்பிடக்கூடாது.

​இப்படித்தான் சாப்பிடவேண்டும்.




அவ்வளவுதானுங்க. எல்லாம் சரியா இருக்குங்களா? ஒண்ணும் தப்பாயிடலயே?

ஞாயிறு, 8 நவம்பர், 2015

கணினியும் கண்ணாடிகளும்

                                      Image result for spectacled cine actress

நாற்பது வயதுக்கு மேல் எழுத்துகளோடு வாழும் எவருக்கும் கண் கண்ணாடி போடுவது அவசியமாகி விடுகிறது. நான் என்னுடைய 43 வது வயதில் கண்ணாடி போட்டேன். அது வரை மங்கலாகத் தெரிந்துகொண்டிருந்த எழுத்துக்கள் எல்லாம் பளிச்சென்று இருந்தன. கண்ணாடி போடவேண்டியதின் அவசியம் அன்று புரிந்தது.

அப்போதெல்லாம் "பைஃபோகல்" எனப்படும் கண்ணாடிகள்தான் பிரபலமாக இருந்தன. (ஏன் இப்போதும் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்ட கண்ணாடிகளைத்தான் உபயோகிக்கிறார்கள்.) அப்போது கம்ப்யூட்டர்கள் வரவில்லை. அதனால் இந்தக் கண்ணாடிகள் போதுமானவையாக இருந்தன.

கம்ப்யூட்டர்கள் இன்று இருக்கும் மாதிரியில் வர ஆரம்பித்த உடன் கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு கண்ணாடி போட்டவர்கள் கஷ்டப்பட்டார்கள். "பைஃபோகல்" கண்ணாடி புத்தகங்களைப் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதைப் போட்டுக்கொண்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு தலையைத் தூக்கித் தூக்கி பார்த்ததில் கழுத்து வலி வந்தது.

இந்த சிரமத்தைப் போக்குவதற்காக "பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் பாகத்தின் பவரில் ஒரு தனிக்கண்ணாடி தயார் செய்து உபயோகப் படுத்தினார்கள். இதனால் தலையைத் தூக்கி கம்ப்யூட்டர் திரையைப் பார்க்க வேண்டியதில்லை. சாதாரணமாகப் பார்த்தால் போதும்.

இது வரைக்கும் எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் எங்கள் சங்கத்திற்கு ஒரு கண் டாக்டர் வந்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு நுணுக்கம் அனைவருக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.

"பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் உள்ள பாகத்தின் பவர் புஸ்தகங்கள் படிப்பதற்காக நிர்ணயித்தது. புத்தகங்களை நாம் சாதாரணமாக ஒன்றரை அடி தூரத்தில் வைத்துப் படிப்போம். அதற்கு இந்த "பைஃபோகல்" கண்ணாடிகள் போதுமானவை. ஆனால் கம்ப்யூட்டர் திரையை நாம் இரண்டடி தூரத்தில் வைத்துப் பார்க்கறோம். அதற்கும் இந்த புத்தகம் படிப்பதற்கான பவர் உள்ள கண்ணாடியையே பயன்படுத்தினால் கண்ணிற்கு அசதி உண்டாகும்.

படிப்பதற்கு உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவரில் 0.5 பவரைக் குறைத்து ஒரு கண்ணாடி உபயோகப்படுத்தினால் இந்த அசதி வராது. இந்த நுணுக்கத்தை அந்த கண் டாக்டர் கூறினார்.

நான் அதற்கு முன்பிருந்தே அப்படியான ஒரு கண்ணாடியைத்தான் உபயோகப்படுத்தி வருகிறேன். சைனா கண்ணாடிகள் எல்லா பவர்களிலும் மிகவும் சலீசாகக் கிடைக்கின்றன. விலை 100 முதல் 150 க்குள்தான் இருக்கும். எனக்கு படிப்பதற்கான பவர்  +3.0. கம்ப்யூட்டரைப் பார்ப்பதற்காக நான் உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவர் +2.5. இந்த முறையில் நான் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தி வருகிறேன்.

பலரும் இந்த நுணுக்கத்தை அறிந்திருக்கலாம். ஆனாலும் சிலருக்குத் தெரியாமல் இருக்க க்கூடும். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

                                     Image result for computer

சனி, 7 நவம்பர், 2015

மேலும் சில சொந்தக் கருத்துகள்

என்னுடைய கம்பயூட்டரில் இணைய இணைப்பு இல்லாதபோது என் கைபேசியில் இருக்கும் இணைய இணைப்பை பயன் படுத்திப் பார்த்தேன். அதில் உள்ள தட்டச்சுப் பலகை மிகவும் சிறியதாகையால் என்னால் அதில் தட்டச்சு செய்ய முடியவில்லை. இரண்டாவது தமிழ் எழுத்துக்களை அதில் தரவிறக்கி வைக்காததால் ஆங்கிலத்தில்தான் தட்டச்சு செய்ய முடிந்தது.

என்னுடைய இணையம் செயல்படவில்லை என்று ஆங்கிலத்தில் ஒரு வரி மட்டும் தட்டச்சு செய்து வெளியிட்டேன்.

All bloggers to kindly note. My internet is not working for the last two days.  Hence my silence.

அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அருமை அய்யா.. பாருங்க பதிவர்களே எங்க நைனா எவ்வளவு அருமையா...!

திருக்குறள ஒரே வரியில் அதுவும் வேற்று மொழியில சொல்லியிருக்காரு..

ஆனா அதுக்கு விளக்கம்தான் எனக்கு தெரியல காரணம்.. எனக்கு கன்னடம் படிக்க தெரியாது...

இதை நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளவா அல்லது ஒரு பித்தனின் பிதற்றல் என்று எடுத்துக்கொள்ளவா என்று புரியாமல் குழம்புகிறேன்.

இந்த பின்னூட்டம் எனக்கு மனவருத்தம் தந்தது.

ஆனால் புலம்புவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

வெள்ளி, 6 நவம்பர், 2015

பதிவர் விழா பற்றிய சில கருத்துகள்

                                    

திரு ஹரணி அவர்கள் ஒரு பிரபல கதாசிரியர். கரந்தையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த புதுக்கோட்டை பதிவர் மகாநாட்டு போட்டிகளில் சுற்றுச் சூழல் என்கிற தலைப்பில் வந்த கட்டுரைகளை ஆய்வு செய்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தார். நல்ல கட்டுரைகளைத்தான் பரிசுக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனாலும் எனக்கு உள்ளூர ஒரு வருத்தம். ஒரு பேராசிரியராக இருந்துகொண்டு, பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒருவரின் கட்டுரையைப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
இருந்தாலும் அவருடைய எழுத்துக்களை நான் படித்து வந்தேன். அதில் அவர் ஒரு பதிவருக்குப் போட்டிருந்த பின்னூட்டங்களில் புதுக்கோட்டை பதிவர் மகாநாட்டின் செயல்பாடுகளுக்குப் பின் உள்ள நுணுக்கங்கள் பலவற்றைச் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நுணுக்கங்கள் இனி வரும் எந்த பொது நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.
பொதுவாகப் பதிவுலகில் பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் மிகக்குறைவு. அதனால் பல நல்ல கருத்துகள் வெளியில் தெரியாமல் போகின்றன. ஆகவே அவைகளை ஒரு தனிப்பதிவாகப் போட விரும்பினேன். அவரிடம் அதற்கான அனுமதி கேட்டேன். சந்தோஷமாகக் கொடுத்தார். சம்பந்தப்பட்ட பதிவரின் பெயர் தெரியாத மாதிரி கொஞ்சம் திருத்தங்கள் செய்திருக்கிறேன்.
      இப்போது திரு ஹரணி அவர்களின் கருத்துகள்.

வணக்கம். வலைப்பதிவர் விழா குறித்த உங்களின் தொடர் கருத்துரையை (கட்டுரையை) வாசித்தேன். எனவே இது குறித்து உங்களிடம் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

மனித இனம் மொழியைக் கண்டறியத் தொடங்கிய காலத்துப் பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழிக்கு வந்த காலக்கட்டம் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியது. எழுத்து மொழியில் படைப்பை உருவாக்கத் தொடங்கிய காலத்து இது குறித்த திறனாய்வில் அறிஞர்கள் தனி மனிதனின் சுயத்தை வெளியிடவும் தனக்குத் தெரிந்ததை அடுத்தவர்க்குக் காட்சிப்படுத்தவும் தான் தனித்துவமும் திறமையுமிக்கவன் என்பதையும் உணர்த்தவே படைப்பாக்கம் நிகழ்ந்தது என்று கருத்துரைத்தனர். பின்னர் அப்படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தின் கணிசமான விழுக்காட்டில்தான் அது சமூகநலனுக்கானதாக மாறுகிறது எனும்போது அடுத்த தன் படைப்பின் தன்மையைப் படைப்பாளன் வெளிப்படுத்துகிற சூழல் மாற்றமடையத் தொடங்கியது.

இவ்வாறு தன்னுடைய திறன், படைப்பாக்கத்திறன், கற்பனை, ஆற்றல், அறிவு, அனுபவம் இவற்றைப் படைப்பாளன் வெளியிடத்தொடங்கினான். இதன் உச்ச வளர்ச்சியில் கணினியும் இணையமும் நன்கு பழக்கத்திற்கு வந்தபின்னர் வலைப்பக்கம் ன்பதை உணரத் தொடங்கினோம். வலைப்பக்கம் என்பது அவரவர் வயது, வாழ்க்கைச்சூழல் , அனுபவவெளியில் எதனையும் எழுதி அது குறித்து அறியக் காத்திருந்தார்கள். இச்சூழலில் வலைப்பக்கம் என்பது பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிப் பல சுவாரஸ்யங்களைப் பரிமாறத் தொடங்கியது. விருப்பப்பட்டவர்கள் இதற்குக் கருத்துரை எழுதினார்கள். அது அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் பிடித்திருந்தது. இதனால் எழுதியவர்களும் எழுதியதை வாசித்தவர்களும் ஒரு பிடிக்குள் இருந்து விடுபடலை உணர்ந்தார்கள். அது அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அவர்களை யாரும் வாசிப்பதற்கோ அல்லது கருத்துரைப்பதற்கோ தடுப்பதற்கு இல்லாமல் இருந்த சுதந்திர வெளியாக வலைப்பக்கம் இருந்தது. அல்லது வாழும் காலத்தில் அவர்களின் சொற்களை மதிக்காதவர்களும் ஏற்காதவர்களும் நிராகரித்தவர்களும் ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தாகவும் மேலும் பாராட்டுரைக்கையில் மதிப்பிற்குரிய ஒன்றாகவும் அவர்களுக்கு வலைப்பக்கங்கள் எல்லா சுதந்திரங்களையும் சுவையான தருணங்களையும் தந்திருந்தது. என்றாலும் எதிரான கருத்துரைகளும் வெளியிடப்பட்டாலும் அதனை ஏற்பதுபோல அதற்கு மறுத்தோ அல்லது தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்றோ பதிலுரைப்பதற்கும் வலைப்பக்கம் உதவியது. இதன் பொருள் மனித வாழ்க்கை குறைகளும் நிறைகளும் கலந்து கலந்தே எப்போதும் இருக்கும் என்பதை மறைபொருளாகக் கொண்டது என்பதுதான்.

படைப்பவர்கள் எல்லோரும் படைப்பாளிகள் என்பதில் நுட்பமான வேறுபாடுகள் நிறைந்து கிடக்கின்றன. எழுத்துக்களோடு நின்றுவிடுகிற படைப்பாளிகள் பலர். எழுத்துக்களோடு சில தேவைகளை உள்ளடக்கிக் களத்தில் இறங்குகிறவர்கள் சிலர். முழுக்க முழுக்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொள்கிறவர்கள் சிலர். இந்த மூன்றாவது பிரிவுதான் படைப்பிலக்கியம் என்பதையும் அது சமூகத்தின் அவலத்தையும் தேவையையும் சிக்கலையும் உணர்ந்து போராடுவது என்பதை உறுதிச்செய்வதாகும். அண்ணல் காந்தியடிகள், பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ், மார்ட்டீன் லூதர் கிங், அன்னை தெரசா எனப் பெருகி நிற்கும் சான்றுகளில் சிலவாக இவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் யாரும் வலைப்பக்கங்களை ஏற்படுத்திக்கொண்டவர்கள் இல்லை. இவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அல்லது பெரும்பான்மை விழுக்காடு வலைப்பக்கம் இவர்களின் சொற்களையும் போராட்டங்களையும் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் நம்பியே இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த மூன்றாவது பிரிவை உருவாக்க முதலாவது, இரண்டாவது பிரிவுகளின் செயற்பாடுகள் அவசியமாகின்றன. இந்த இரண்டாவது பிரிவின் செயற்பாடுகளை மேற்கொள்கிறவர்களாகத்தான் புதுகை வலைப்பதிவர் சந்திப்பை நடத்தியவர்கள் உணரப்படுகிறார்கள். எங்கெங்கோ நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பை நாம் நடத்திப் பார்க்கலாம். இப்படியொரு வலைச்சமூகம் இயங்கி வருகிறது. அவர்களும் அவரவர் வலைப்பதிவுகளில் இந்த சமுகத்தின் முதல் மனிதன் தொடங்கிக் கடைசி மனிதன் வரை வாழ இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தவே இம்மாநாடு.

இம்மாநாட்டில் தாங்கள் உணர்ந்த சில குறைபாடுகள் உங்கள் மனத்தை வருத்தியிருக்கின்றன. அதனைப் பெரிதுபடுத்தியிருக்கவேண்டாம் என்பதுதான் என்னுடைய வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். இதற்குத்தான் மேற்சொன்ன நீண்ட முகவுரையை நான் எழுதவேண்டியதாயிற்று. ஏன் என்றால் சில நபர்கள் இருக்கக்கூடிய ஒரு குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகள் பழக்கப்படுத்தப்பட்ட திட்டமிடல் என்றாலும் ஒவ்வொரு நாளும் விடியும்போது அதில் மாற்றங்கள் நிகழ்ந்து சிக்கல்கள் உருவாகின்றன என்பது வெளிப்படையானது. எல்லாவற்றையும் குற்றவிரல் கொண்டு வெகு எளிதாக சுட்டிவிடமுடியும். ஆனால் நம்மைநோக்கிய நிகழ்வில் அது பெரிதான வருத்தத்தை ஏற்படுத்தும்போது அதிகம் வலிக்கும்.

எந்த ஒரு நிகழ்வும் கூட்டு உழைப்பால் உருவாவது. ஒருவர் பிசகினால்கூட அந்த உருவம் சிதைந்துவிடும். இந்த வலைப்பதிவர் சந்திப்பும் அப்படித்தான். அது முழுமையுற அதன் முக்கிய கரு பதிவர்கள்தான். ஆயிரம் திட்டமிடல்கள் வைத்திருந்தும் அவர்கள் கேட்டதை எத்தனை பேர் ஒழுங்குபடச் செய்திருப்பார்கள் யோசித்துப் பாருங்கள்.

சரியான நேரத்தில் வருகையைப் பதிந்தார்களா? சரியான விவரங்களை விடுபடாமல் தந்தார்களா? கேட்ட வடிவத்தில் தந்தார்களா? அவர்கள் கேட்டதையெல்லாம் உடனுக்குடன் செய்தார்களா? வலைப்பதிவர் கையேட்டிற்கு எல்லாவற்றையும் ஒரே தடவையில் அனுப்பி வைத்தார்களா? விவரம் மட்டும் அனுப்பி வைத்தவர்கள் யார்? போட்டோ மட்டும் அனுப்பி வைத்தவர்கள் யார்? போட்டி விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றினார்களா? குறிப்பிட்ட தலைப்பை உணர்ந்தார்களா? குறிப்பிட்ட பக்க வரையறையைப் பின்பற்றினார்களா? அவர்கள் அதற்கான தகவல்களை அவர்களே சேகரித்தார்களா? முன்பே குறித்திருந்த இறுதிநாளுக்குள் அனுப்பி வைத்தார்களா? நாள் நீட்டித்தபின் அனுப்பிவைத்தவர்கள் யார்? அதற்குப் பின்னரும் அனுப்பி வைத்தவர்கள் யார்? இத்தனை ஏற்பாடுகளையும் வலைப்பதிவர் சந்திப்பிற்குள் ஒழுங்கமைக்கவேண்டும் என்று படாதபாடு பட்டவர்களின் நிலையை யோசித்தவர்கள் யார்? முக தாட்சயண்யத்திற்காகச் சமரசம் செய்துகொண்டவர்கள் நிலை என்ன? மேடை, அலங்காரம், வரவேற்பு, அடையாள அட்டை, அதற்கான எண்கள், கைப்பைகள், பேனா, குறிப்பேடு, வலைப்பதிவர் விவரப்புத்தகம் இவையெல்லாம் ஒரு கூட்டுக்குள் எப்போது வந்தது? விழாவிற்கு முன்னர் வலைப்பதிவர் கையேட்டைக் கொண்டுவர பட்ட பாட்டை மேடையில் சொன்னார்களே கேட்டவர்கள் எத்தனை பேர்? மேடைக்கு வரும் முக்கிய விருந்தினர்களைக் கடைசிவரை உறுதி செய்துகொண்டிருக்கவேண்டுமே அவர்களின் நிலை என்ன? ஓடிஓடி விழா ஏற்பாடுகளை செய்தாலும் அவர்களின் சோர்வுபெட்ரோல் இல்லாமல் சட்டென்று நிற்கும் வண்டியின் நிலை.. சாப்பாட்டிற்கு எல்லாப் பொருள்களை வாங்கித்தந்தும் முதல் நாளிரவில் வராத முக்கியமான பொருளுக்கு அலைந்தவர்கள்.. ஒட்டவும்..ஓடவும்.. கட்டவும்.. கணக்கிடவும்.. அரங்கை ஒழுங்குபடுத்தவும்.. எத்தனை பாடுகள்? ஆயிரம் பேர்கள் இருக்கலாம். ஆனால் ஆயிரம் குணங்கொண்டவர்கள். அவர்களை ஏதோ ஒரு அன்புச்சங்கிலியால்தான் ஒருங்கிணைக்கமுடியும்.. ஒருங்கிணைப்பவர்கள் தாங்கள் இறங்கிவரவேண்டும.

வந்திருக்கும் எல்லாக் கவிதைகளுக்கும் ஓவியங்களைப் போட்டுவிடுங்கள்.. எல்லாவற்றையும் ஒட்டிவிடுங்கள் சொல்லியிருக்கலாம்.. ஏதோ ஒன்று சிலவற்றிற்கு ஓவியங்கள் வரையமுடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.. ஓவியருக்கான சில சங்கடங்கள் இருக்கலாம்.. ஒட்டுவதற்குகூட சங்கடங்கள் இருந்திருக்கலாம்.. அதன் உண்மைநிலையை யார் உணர்வது?

இந்தப் பொதுவிழாவிற்கான முழு இசைவையும் அவரவர் தங்கள் குடும்பங்களில் பெற்றிருப்பார்களா? தாராளமாக செய்யுங்க என்று சொன்ன மனைவிமார்கள் எத்தனைபேர்? இதெல்லாம் ஒரு வேலைன்னு போறீங்க என்று சொன்னவர்கள் எத்தனைபேர்? போங்க.. போயிட்டுக் காலத்தோட வீட்டுக்கு வந்து சேருங்க.. இப்படி பல.

இரண்டு பன்னாட்டுக் கருத்தரங்குகள்.. உலகளவில்
நாலைந்து தேசியக் கருத்தரங்குகள்
பத்து பதினைந்து பயிற்சி வகுப்புகள்

இவற்றில் எல்லாம் ஓராண்டுக்கு முன்பிருந்தே காலை ஒன்பதுமணி தொடங்கி இரவு 11 மணிவரை படாதபாடு பட்டும் வாங்கியதென்னவோ கெட்ட பெயர்கள்தான்.. அடையாள அட்டை வழங்கும் குழுஉணவு டோக்கன் வழங்கும் குழுஆய்விதழ்கள்.. கைப்கைகள்.. தங்கும் விடுதியின் சாவி வழங்கும் குழு.. இப்படிப் பல குழுக்கள் ஒவ்வொரு குழுக்கும் ஐந்துபேர் என ஓரண்டிற்கு முன்பே திட்டமிட்டிருந்து அந்த நாளின் விருந்தாளிகள் வரும்போது எல்லாவற்றையும் வழங்கிய ஐந்துபேரில் நானும் ஒருவன். அத்தனை குழு உறுப்பினர்களும் கழுத்தறுத்துவிட்டார்கள். இருப்பினும் எல்லாவற்றையும் மீறி கடவுள் அருளால் விழா இனிதே நிறைவுறும். முழுமையான ஒரு லட்டை எறும்புகள் அரித்தது போக மிச்சமிருப்பதுபோல.

நடுவர்கள் பற்றி பொதுவான கருத்தில் என்னையும் தாக்கிவிட்டீர்கள். நான் நடுவர் என்று தெரியாது உங்களுக்கு என்பது அப்பட்டமான உண்மை. நான் சுற்றுச்சூழல் கட்டுரை பிரிவிற்கு நடுவராக இருந்தேன். அதில் நான் நடுவராக செயல்பட்டதை விவரமாக திருமிகு ந.முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு உரிய முறைப்படித் தெரிவித்து என் முடிவை அறிவித்திருந்தேன்.

மூன்றுமுறை கணிப்பொறியில் வாசித்து கண்கள் வலிகண்டுவிட்டன. எனவே நான்காவது முறையாக எல்லாவற்றையும் கணிப்பொறியிலிருந்து பிரிண்ட் எடுத்து வரிசைப்படி அடுக்கி மறுபடியும வாசித்தேன். வாசிப்பின்போது நான் கவனத்தில் கொண்ட நானே வகுத்துக்கொண்ட சில விதிகளையும் தெரிவிக்கிறேன்.

கட்டுரையின் தலைப்பு சரியாக இருக்கவேண்டும். போட்டியின் பொருண்மைக்கு மிக அண்மையாக இருக்கவேண்டும். அழகியலாக இருக்கவேண்டும். உணர்வூட்டுவதாக இருக்கவேண்டும். படிக்கத் தூண்டவேண்டும். இல்லையெனில் மதிப்பெண்ணை வெகு குறைவாகத் தந்திருந்தேன்.

கட்டுரையின் அளவு அறிவித்த எல்லையை மீறக்கூடாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பான்மை வேண்டும். எனவே அளவு மீறிய கட்டுரைகளை வாசித்தும் அதில் நல்ல செய்திகள் இருந்தாலும் எல்லை மீறிய தன்மைக்காக மதிப்பெண்களைக் குறைத்தேன்.

எந்தப் பொருண்மையிலான கட்டுரைக்கும் வலைப்பதிவர்கள் எழுதுவது என்பது வெகு சுலபம். ஏனெனில் அவை குறித்த தகவல்கள் இறைந்துகிடக்கும் இணையத்திலிருந்து எடுப்பது சுலபம். எனவே கட்டுரை என்பது செய்திகளை அடுக்குவது அல்ல. உண்மையில் அவற்றின் சிக்கலை விபரீதத்தை உணர்த்த முற்படும் கருத்துக்களை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொண்டேன்.
மேலும் கருத்துக்களைத் தட்டச்சிடும்போது வடிவமைக்கும் பாங்கும் முக்கியமானது. ஏனெனில் உண்மையில் போட்டியில் வெல்வது என்பதையும் தாண்டி சுற்றுச்சூழலின் ஆபத்தை உணர்த்து பொறுப்புணர்ச்சியும் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் போக்கு நிச்சயம் மாறுபடும். இந்த சமூக அக்கறையுள்ளவர்களின் கட்டுரைகளே உண்மையானவை.
கட்டுரையின் மொழிநடையில் அழகியல் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலினைப் பராமரிக்காமல் விட்டால் ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்திய சொற்களையும் அதற்கான உத்திகளையும் கவனத்தில் கொண்டேன்.

முக்கியமானது கட்டுரையின் தொடக்கமும் முடிவும். இவை நல்ல கட்டுரையின் முக்கியமான கூறுகள். செய்திகளின் ஒருங்கிணைப்புத் தன்மை, கட்டுரையாளரின் நடை, நம்பகத்தன்மை, சான்றுகள் எனவும் கவனித்தேன்..

ஒரு கட்டுரை தொடர்பற்றிருந்தது. அதற்கு மதிப்பெண்கள் வழங்கவேயில்லை.

99
விழுக்காடு எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் நமது விருப்பம்போல எழுதுவோம் என்கிற மனோபாவத்தில் இருப்போர் விழுக்காடும் 99தான். என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எனக்கு இன்றும் கட்டுரையாளர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால் நான் படித்த ஒவ்வொரு கட்டுரையும் எனக்குத் தெரியும். அதில் தெரிவு செய்த கட்டுரையின் சொற்களும் நினைவில் உள்ளன. முடிந்தவரை மனச்சான்றுக்கு மாறாமல் நடுவராகப் பணியாற்றினேன். இதற்குக் காரணம் இன்றுவரை உலகின் பன்னாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருப்பதுதான். மட்டுமல்லாமல் மனசாட்சிக்குப் பயந்து கடமையாற்றுவது என்பதை வாழ்க்கையின் மெய்ம்மையாகக் கொண்டிருப்பதும்தான்.

புதுகையில் நடந்த வலைப்பதிவர் விழா என்பது நாம் எல்லோரும் சேர்ந்து நடத்திய விழாதான். நம்மின் பிரதிநிதிகளாக திருமிகு ந.முத்துநிலவன் ஐயா அவர்களும், திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் திருமிகு தங்கம் மூர்த்தி கவிஞர் கீதா அவர்களும் இருந்தார்கள். ஒருநாள் விழா என்றாலும் அதனைச் செயற்படுத்த எத்தனையோ நாட்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. எனவே நான் இவர்களின் வழியையும் வலியையும் உணர்ந்தவன்.

மேற்குறிப்பிட்ட அத்தனை கருத்துக்களும் என் கருத்துக்கள்.

நன்றி வணக்கம்.

அன்புடன்
ஹரணி 25.10.2015 இரவு 11.00 மணி.

நன்றி: இந்தக் கருத்துரைகளை என் தளத்தில் பதிவாகப் பதிவதற்கு அன்புடன் அனுமதி வழங்கிய திரு. ஹரணி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அப்படியே இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்களுக்கும் நன்றி.