செவ்வாய், 15 அக்டோபர், 2019

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே!


இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங்கு தேவையில்லை.

பிளாக்கரில் ஏதோ நோண்டிக்கொண்டு இருக்கையில் என்னுடைய பிளாக்கைப் பற்றி கூகுளார் சில விபரங்களை என் முன் எடுத்து வைத்தார். முக்கியமாக அவர் சொன்னது என்னுடைய பிளாக் இன்னும் உயிருடன் இருக்கிறது. அதை இன்னும் சில அன்பர்கள் பார்த்துக்கொண்டும் பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

நான் இந்தப் பதிவுலகம் அஸ்தமித்துப் போய்விட்டது என்று நம்பிக்கொண்டிருக்கையில் இந்த விபரங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தன.

15-10-2019 அன்று எடுத்த ஸ்கிரீன் ஷாட்

இந்த விபரங்கள் 15-10-19 அன்று கூகுளாரின் தயவில் ஸ்கிரீன் ஷாட்டாக எடுக்கப்பட்டது. இது வரைக்கும் என்னுடைய பதிவை 13 லட்சம் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள் என்கிற விஷயம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தவிர போன மாதம் ஏறக்குறைய 5000 பேர் இந்த தளத்தைப் பார்வையிட்டு இருக்கிறார்கள்.

இந்த எண்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் நம் தளத்திற்கு இன்னும் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றுவது சரியல்ல. அவர்களுக்காகவாவது இனி பதிவுகள் எழுதியே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இந்தப் பதிவுலகில் நான் 2009 ம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். இன்றைக்கு ஏறக்குறைய 10 வருடங்கள் ஓடி விட்டன. அன்று பதிவுலகில் கொடி கட்டிப் பறந்தவர்களில் அநேகம் பேர் காணாமல் போய்விட்டார்கள். ஒரு சிலர்தான் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதில் முக்கியமானவர்கள்.

1, துளசி டீச்சர் அவர்கள்
2.திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள்
3. திரு G.N.பாலசுப்பிரமணியன்
4. திரு ஸ்ரீராம் அவர்கள்
5.திரு கண்ணன் அவர்கள்
6.திரு வே.நடனசபாபதி அவர்கள்

இன்னும் மற்ற சிலர்.

இது தவிர வருடந்தோறும் பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டு பதிவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கவும் வசதியாக இருந்தது. அனைத்தும் இப்போது கனாக் கண்ட மாதிரி காணாமல் போயின. எல்லாம் காலத்தின் கோலம். இதில் முகப்புத்தகம், வாட்ஸப்  போன்றவைகளின் பங்கும் உண்டு.

ஆனால் மற்ற மொழிகளில் பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன, சில பதிவுகளின் மூலம் சிலர் பணம் கூட ஈட்டுகிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது. நான் எழுதுவதைப் படித்து விட்டு ஏதோ நான்கு பேர் என்னைத் திட்டி பின்னூட்டம் போட்டால் அதுவே போதும் எனக்கு. பாராட்டுகளை விட கண்டன பின்னூட்டங்கள்தான் என்னை விழிப்பாக வைத்திருக்கும். என் வயதில் அது ஒன்றே எனக்குத் தேவையானது.

பார்ப்போம்.



புதன், 11 செப்டம்பர், 2019

தஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை.

தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும்.  இந்தப்பதிவில் அந்த வர்த்தையை அந்தப் பொருளில்தான் உபயோகப்படுத்தியிருக்கிறேன். வேறு விதமான அர்த்தங்கள் கற்பித்துக்கொள்ளாதீர்கள்.

பொதுவாக அரசுத்துறை அதிகாரிகளை (நீதித்துறையும் ஒரு அரசுத்துறைதானே) மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடமாறுதல் செய்வது வழக்கம்தான். இது சாதாரண அதிகாரிகளுக்குப் பொருந்தும். ஆனால் பெரிய பதவிகளில் இருக்கும் நீதிபதிகள், அரசு செக்ரடரிகள், பல்வேறு துறைத்தலைவர்கள் போன்ற அதிகாரிகளை மாற்றும்போது சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அவர்களாக விருப்பப் படும்போது அல்லது அத்தகைய பதவிகளில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய பின்பு அவரை இடமாற்றம் செய்வார்கள். அதே மாதிரி ஒருவர் பதவு உயர்வு பெறும்போதும் வழக்கமாக இட மாற்றம் செய்வது உண்டு. இத்தகைய இடமாற்றங்கள் போதுவாக அந்த அதிகாரிக்கு பெரிய மனத்தாங்கல் ஏற்படாது.

ஆனால் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாது. அந்தக் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் மேலிடத்திற்கு அசவுகரியங்கள் ஏற்படும்போது அந்த அதிகாரியை அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகும்.அப்போது அவரை முக்கியமல்லாத பதவிகளுக்கு மாற்றுவார்கள். அவருடைய பதவியின் தரத்தில் மாற்றமிருக்காது. ஆனால் பதவியின் முக்கியத்துவம் மிகவும் குறைந்துவிடும்.

இத்தகைய சூழ்நிலையில் அந்த அதிகாரி சம அதிகாரிகளின் மதிப்பில் மிகவும் தாழ்ந்து விடுவார். இது ஏறக்குறைய ஒரு பதவி இறக்கம் போலப் பாவிக்கப்படும். இது ஒரு அவமானமாகும். பலர் இதைத் தாங்க முடியாமல் விடுமுறையில் செல்வார்கள். ஒரு சிலர் வேலையை ராஜினாமா செய்வார்கள். மேலிடத்தில் இதை எதிர்பார்த்துத்தான் காயை நகர்த்துவார்கள்.

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமில்லை. ஆகவே தஹில் இரானியை மாற்றுவதற்கு வலுவான அரசியல் காரணங்கள் ஏதாவது இருந்திருக்கலாம். எப்படியானாலும் சம்பவம் நடந்து விட்டது. அதற்கு எதிர்வினையும் ஏற்பட்டாகி விட்டது. இதற்கு மேல் மேலிடம் இறங்கி வந்து சமாதானம் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல் சம்பந்தப்பட்டவரும் தன் நிலையிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ள முடியாது.

இதை ஒரு விபத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

புதன், 5 ஜூன், 2019

ஞாயிறு, 2 ஜூன், 2019

இந்தி எதிர்ப்பும் திராவிடக் கட்சிகளும்.

1950 களில் திராவிடக் கழகம் பெரியார் தலைமையில் இயங்கியபோது நாத்திகமும் பிராமணத் துவேஷமும்தான் அந்தக் கட்சிக் கொள்கையாயிருந்தது. பின்பு பெரியார் மணியம்மையைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தி.மு.க. தோன்றியது.

அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மட்டும் நம்பியிராமல் மாணவர்களைக் கவரும் பொருட்டு இந்தி எதிர்ப்பைத் தங்கள் முக்கிய கொள்கையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை. போராடுவதற்கு ஏதாவது சாக்கு வேண்டும், அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைதான் இது.

இந்தப் போராட்டம் பல்வேறு கட்டங்களில் பலவிதமாக நடத்தப்பட்டு கடைசியில் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் இந்தி சொல்லிக்கொடுப்பது நின்று போயிற்று. இந்த நிலையினால் தமிழ் இளைஞர்கள் இந்தி படிக்காமல் மத்திய அரசு வேலைகளைக் கோட்டை விட்டார்கள். ஆனால் பிராமணர்கள் தனிப்பட்ட முறையில் இந்தி கற்றுக்கொண்டு டில்லிக்கோட்டையில் பல முக்கிய பதவிகளில் கோலோச்சினார்கள், கோலோச்சுகிறார்கள்.

இப்போது மத்திய அரசு இந்தியை பாடத்திட்டத்தில் சேர்த்தால் நல்லதாகப்போச்சு என்று இருக்காமல் அதை எதிர்த்து உயிர் தியாகம் செய்ய இந்த திராவிடக்கட்சிகள் கூவுகின்றன. இந்தத் திராவிடக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு இந்தி படிப்பிக்கிறார்கள். இந்த அடிமட்ட மக்கள்தான் அறிவு கெட்டுப்போய் இந்தி எதிர்ப்புக் கோஷம் போட்டுக்கொண்டு அழிந்து போகிறார்கள்.

தமிழன்தான் தமிழனுக்கு எதிரி.

வியாழன், 16 மே, 2019

சரித்திரம் தெரியுமா?

எனக்கு 13 வயது இருக்கும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த சரித்திரப் பாடத்தின் மீது ஒரு வெறுப்பு. மண்டையில் ஏறவே இல்லை. என் வாத்தியார் இந்தப் பாடத்தில் சுலபமாகப் பாஸ் செய்ய ஒரு வழி சொல்லிக் கொடுத்தார். ஏதாவது ஒரு ராஜா தன் ஆட்சியின்போது செய்த சாதனைகள் என்னவென்று கேட்டால் எதுவும் யோசிக்காமல் சாலைகள் போட்டார், சாலைகளின் ஓரத்தில் மரம் நட்டார், குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் கட்டினார் என்று இப்படி எழுதினால் போதும், நீ பாஸ் ஆகி விடுவாய் என்று சொல்லிக்கொடுத்தார்.

அது போலவே எழுதி சரித்திரம் பாஸ் செய்து மேல் படிப்புகளெல்லாம் படித்து மேலே வந்தது ஒரு பெரிய கதை.

ஆனால் என்னுடைய ஆயுள் காலத்திலேயே ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது. நான் மேற்கூறியவாறு சரித்திரம் படித்துக்கொண்டு இருக்கும்போது தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை சினிமா பாணியில் பத்திரிக்கைக்காரர்கள் பிரசுரித்தார்கள்.

அதில் எனக்கு நினைவு இருப்பதெல்லாம் அந்த படு கொலையைச் செய்தவன் ஒரு தேசத்துரோகி என்றும் அவன் பெயரைச் சொன்னாலே ஏழேழு தலைமுறைக்கும் பாவம் வந்து சூழும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இன்றைக்கும் அவன் பெயரைச் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது.

இது நடந்து ஒரு எழுபது வருடங்கள் ஆகியிருக்கும். இன்றைக்கு அவனை யாரோ ஒரு சினிமா நடிகர் என்னமோ சொல்லிவிட்டார் என்பதால் இந்த தேசமே அந்த நடிகரை கால்வேறு கைவேறு ஆக்கத்துடிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மகாத்மா காந்தி சிலைக்குப் பக்கத்திலேயே அவன் (அவர் என்று சொல்ல வேண்டுமோ) சிலையை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு எழுபது வருடத்திலேயே, என் வாழ்நாளில் நடந்ததையே மக்கள் மாற்றுகிறார்கள் என்றால், 1000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாய் சரித்திரத்தில் சொல்பவைகளை எவ்வாறு நம்பவது?

பின் குறிப்பு; இது ஒரு சரித்திர ஆராய்ச்சிப் பதிவுதானே தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை என்று ஆணையிட்டுச் சொல்கிறேன். அப்படியும் இந்தப் பதிவிற்கு உள் நோக்கம் கற்பிப்பவர்கள் ஏழேழு ஜன்மத்திற்கும் இந்தியாவிலேயே பிறக்கக்கடவது என்று சாபம் கொடுக்கிறேன்.

17-5-2019  / 6.00 AM    இதையும் பாருங்கள்;

Bhopal candidate Pragya Thakur courted fresh controversy on  .. 

ஞாயிறு, 12 மே, 2019

காதல் விபத்துகள்


காலையில் பேப்பரைத் திறந்தால் கொலைச்செய்திகள்தான் முதலில் கண்ணில் படுகின்றன. அவைகளில்  பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டதாக இருப்பது வருத்தத்குரியது. அதிலும் குறிப்பாக எங்கள் மாவட்டம் அதில் முன்னிலை வகிப்பதைக் கண்டு தலை குனிகிறேன்.


தற்காலத்தில் காதல் கல்யாணங்கள் அதிகமாக நடப்பதாக நான் நினைக்கிறேன். அவைகளில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவுகின்றன என்பது ஒரு பரிதாபம்.

ஏன் காதல் கல்யாணங்கள் தோல்வியில் முடிகின்றன என்று பார்த்தால், சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

கல்யாணம் என்றால் என்ன, கல்யாணம் செய்துகொண்ட பிறகு அந்தக் கணவன் மனைவிக்கு உண்டான பொறுப்புகள் என்னென்ன, இவைகளைப் பற்றி இன்றைய காதலர்கள் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பம் அமைப்பது என்பது விளையாட்டுக் காரியம் அல்ல. ஆனால் 21 அல்லது 22 வயது வேலையில்லாத ஒருவன் 18 வயது கல்லூரியில் படிக்கும் பெண்ணைக் காதல் கல்யாணம் செய்தால், அவனுக்கு குடும்பப் பொறுப்புகள் என்ன என்று தெரியுமா?

அதிலும் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடைபெறும் கல்யாணங்களில் அவர்கள் தங்கள் சுய காலிலேயே நிற்க வேண்டும் என்றால் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா?

உலகம் போற போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.