திங்கள், 29 மார்ச், 2010

ஆளவந்தார் கொலைக்கேஸ் முடிவு.

 

 
டரங்க் பெட்டியும் தலைப்பார்சலும் கிடைத்த பிறகு போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டது. ஆளவந்தார் வீட்டிலிருந்தும் அவர் வேலை பார்த்த கம்பெனி முதலாளியிடமிருந்தும் ஆளைக்காணவில்லை என்ற புகார் போலீஸுக்கு கிடைத்தது. இருவரையும் கூப்பிட்டு தலையைக் காட்டியதில் இறந்தது ஆளவந்தார்தான் எனபது உறுதியாகியது.

பிறகு என்ன, விசாரணையில் எல்லா விவரங்களும் தெரியவந்தன. வில்லனும் கதாநாயகியும் பெங்களூர் புறப்பட்டுச் சென்ற வரையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பத்திரிக்கைகளில் வெளியாகிக்கொண்டு இருந்தன. இந்தச் செய்திகளை -யெல்லாம் படித்தவுடன் வில்லனுக்கும் கதாநாயகிக்கும் இருப்புக்கொள்ளவில்லை. அதிக நாள் தலை மறைவாக இருக்கமுடியாது எனத்தெரிந்தது. இருவரும் மெட்ராஸ் கோர்ட்டில் வந்து  சரண்டர் ஆகிவிட்டார்கள்.

போலீஸ் விசாரணை எவ்வளவு நாள் நடந்தது என்பது சரியாக நினைவில்லை. விசாரணை முடிந்து கேஸ் கோர்ட்டிற்கு வந்த பிறகுதான் வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. 200க்கும் மேற்பட்ட சாக்ஷிகள். 20க்கும் மேற்பட்ட சாதனங்கள். இவைகளையெல்லாம் ஒரு ஆங்கில துப்பறியும் படம் பார்ப்பது போன்று விசாரணை விபரங்கள் பந்திரிக்கைகளில் வெளியாயின. தினத்தந்தியில் வழக்கு விபரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. பத்திரிக்கையின் விற்பனை பல மடங்கு உயர்ந்தது.

மெட்ராஸ்வாசிகள் அநேகம் பேர் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு கேஸ் விசாரணையைப் பார்க்கப் போனார்கள். கேஸ் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேல் நடந்தது. கடைசியாக கேஸ் விசாரணை முடிந்து வக்கீல்கள் வாதம் முடிந்து கேஸ் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

தீர்ப்பு நாள் விடியற்காலையிலிருந்தே ஹைக்கோர்ட்டில் கூட்டம் கூடிவிட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜட்ஜ் உள்ளே போவதற்கே போலீஸ் உதவி தேவைப்பட்டது. ஜட்ஜ் தீர்ப்பு கூறும் நேரம் வந்துவிட்டது. கோர்ட்டில் மயான அமைதி. தீர்ப்பு படிக்கப்பட்டது. வில்லனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கதாநாயகிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தீர்ப்பு வழங்கப்பட்டது.   



இப்படியாக ஓர் ஆண்டுக்கு மேல் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த கேஸ் முடிவிற்கு வந்தது.

பின் குறிப்பு: தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்த இருவரும் மக்கள் சமுத்திரத்தில் மறைந்து போனார்கள்.