வியாழன், 30 டிசம்பர், 2010

மண்ணும் மண் வளமும்.

என்னுடைய இந்த http://swamysmusings.blogspot.com/2010/12/blog-post_28.html பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்: அதற்கான பதில்களை சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

சார், இது குறித்து இன்னும் விளக்கமாக எழுதுங்களேன். இப்போ நீங்கள் எழுதியிருப்பது புரிகிறது. ஆனால், இயற்கை விவசாயம் செய்யவே முடியாது என்று நீங்கள் சொல்லவில்லை, இல்லையா?

உங்கள் ஆர்வம் பாராட்டுக்குடையது. விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்ததினால் இந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. விவசாய சம்பந்தமான பல வலைத்தளங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே உங்களுக்குப் பதில் சொல்லும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

இயற்கை விவசாயம் செய்யமுடியும். ஆனால் அதைப்பற்றிய போதுமான விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளிவரும் பேட்டிகளை மட்டும் வைத்து நாம் ஒரு முடிவுக்கும் வர முடியாது, வரவும் கூடாது.

ரசாயன உரங்கள் இரண்டாம் உலகப்போர் நடக்கும் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அது வரையிலும் இயற்கையாகக் கிடைக்கும் இடுபொருள்களைக் கொண்டுதான் விவசாயம் நடந்து கொண்டு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு மகசூல் கிடைத்தது என்பதைப்பற்றி துல்லியமான புள்ளி விபரம் வேண்டுமென்றால் கிடைக்கும். அது மிகவும் குறைவாக இருந்தது என்று மட்டும் தெரிந்தால் இப்போதைக்குப் போதும். அந்த கால கட்டத்தில் உணவுப் பஞ்சங்கள் இருந்தன என்பதை நினைவில் கொண்டால் போதும்.

விளைச்சலை அதிகப்படுத்தவேண்டும் என்பதுதான் ரசாயன உரங்களை அறிமுகப்படுத்தியதன் நோக்கம். அது சுற்றுச் சூழலை எந்த அளவிற்கு பாதிக்கும் என்ற தெளிவு அப்போதைக்கு இல்லை. பிறகுதான் அதைப்பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளிலிருந்து கண்டுபிடித்தது என்னவென்றால், வரை முறையில்லாமல் ரசாயன உரங்களை உபயோகித்தால் மண்ணின் வளம் பாதிக்கும், விளையும் மகசூலின் தரம் குறையும் என்பதாகும்.

ஒரு உதாரணம் சொன்னால் இது நன்கு விளங்கும். ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் உடனடியாக அதிக சக்தி வேண்டுமென்பதற்காக குளுகோஸ் சாப்பிடுவார்கள். உடனடியான ஓட்டத்திற்கு வேண்டிய சக்தியை அந்த குளுகோஸ் கொடுக்கும். ஆனால் அந்த வீரருடைய உடம்பு சரியான உணவுகள் சாப்பிட்டு நல்ல திடகாத்திரமாக இருக்கவேண்டும். ஒரு நோஞ்சான் உடம்புக்காரரை குளுகோஸ் சாப்பிடச் செய்து ஓட்டப்பந்தயத்தில் ஓடச்செய்தால் அவர் ஜெயிப்பாரா? மாட்டார்.

அது போலத்தான் மண்ணும். மண் என்பது வெறும் உயிரற்ற பாறைத்துகள்கள் அல்ல. அது ஒரு உயிருள்ள, நம்மைப் போலவே வாழும் ஒரு பொருள். அது எப்படி வாழ்கிறது என்றால், அந்த மண்ணில் ஒரு சதம் அங்ககப்பொருள் (Organic matter) இருக்கிறது. அந்த அங்ககப்பொருளும் மண்ணின் துகள்களும் இணைந்து இருக்கின்றன. இதற்கு clay-humus complex என்று பெயர். இதுதான் மண்ணின் உயிர். இதில்தான் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவைகளின் செயலால்தான் பயிர்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கின்றன.

ரசாயன உரங்கள் போடுவதுடன், போதுமான இயற்கை உரங்களையும் போட்டு வந்தால் மண்ணின் வளம் கெடாமல் இருக்கும். வெறும் ரசாயன உரங்களை மட்டும் போட்டு வந்தால் நாளாவட்டத்தில் மண்ணின் வளம் குறைந்து மண்ணின் தன்மை மாறிவிடும். இந்தத் தத்துவத்தை விவசாய மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் பல காலம் முன்பே கண்டு பிடித்துள்ளார்கள். இந்த உண்மை எல்லா ஆராய்ச்சி இதழ்களிலும் புத்தகங்களிலும்
இருக்கிறது. இதையெல்லாம் படித்துத்தான் நாங்கள் பட்டம் வாங்கினோம்.

இந்த உண்மை முன்பே உங்களுக்கு, அதாவது விவசாய ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியமல்லவா? இதை மாற்ற ஏன் எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை என்று கேட்கலாம்? ஐயாமார்களே, அம்மாமார்களே, இந்த உண்மையை காலம் காலமாக எல்லா மேடைகளிலும், பத்திரிக்கைகளிலும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் மக்களின் மனப்பான்மை என்னவென்றால் நல்லது எதையும் கேட்கமாட்டார்கள். தங்கள் அரசியல் தலைவியை கைது செய்து விட்டார்கள் என்று கேட்டவுடன் விவசாய மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தைக் கொளுத்தி மூன்று மாணவிகளை உயிரோடு எரித்த சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த உணர்ச்சி வேகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு, ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதில் இருந்தால் நம் நாடு ஒரு வல்லரசாக என்றோ ஆகியிருக்கும்.