வியாழன், 10 பிப்ரவரி, 2011

பல்லி பிடிக்கத் தெரியுமா?

இது என்ன புதுசா இருக்குன்னு நினைக்காதீங்க. ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தெரிந்து கொள்ளவேண்டிய கலை இது. எத்தனை வீட்டுல இல்லத்தரசிகள் இந்த அப்பாவிப் பிராணியைப் பார்த்துவிட்டு ஊரைக்கூட்டி இருக்கிறார்கள் என்று விசாரித்தால் தெரியும்.


இதற்குத் தேவையான  உபகரணங்கள் மிகவும் சாதாரணமானவை.

1. ஒரு 4 அங்குல விட்டம் கொண்ட பிளாஸ்டிக் கிண்ணம்,
2. ஆறு அங்குல அளவில் ஒரு சதுர அட்டை. ரொம்ப கெட்டியாக வேண்டாம்.
3. நிறைய மனோ தைரியம்.
படம் 1 ஐப் பார்க்கவும்.

                                                                       படம் 1

இவைகளைத் தயார் செய்த பிறகு வீட்டில் எங்காவது பல்லி இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்கவும். தேவையானால் ஆணி புடுங்குவதை சில நாட்கள் தள்ளிப்போடவும். பல்லி வருவதை எளிதில் அறிந்து கொள்ளலாம். சமையல் அறையிலிருந்து திடீரென்று அமானுஷ்யமான அலறல் கேட்டால் பல்லி வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.

பல்லி சமையல் மேடையில் இருக்கும். ஏறக்குறைய படம் - 2 ல் இருக்கிற மாதிரி இருக்கும்.



படம் - 2

உங்கள் தளவாடங்களுடன் சமையலறைக்கு ஆஜராகவும். முதலில் உங்கள் துணைவியாரை ஜாக்கிரதையாக அப்புறப்படுத்தவும். பல்லியைப் பயப்படுத்தி விடவேண்டாம். பிறகு பல்லிக்கு மேல் நைஸாக பிளாஸ்டிக் கிண்ணத்தால் மூடவும். பல்லியின் வாலை நசுக்கி விடாதீர்கள். பல்லி வாலைத் துண்டித்துக்கொள்ளும். அப்புறம் வால் தனியாகத் துடித்துக் கொண்டு இருக்கும். அதை டீல் பண்ணுவது வேறு கலை. அதை அடுத்த வகுப்பில் சொல்லித்தருகிறேன். பார்க்கவும் படம் - 3.


 
படம் - 3
இப்போது பல்லி பிளாஸ்டிக் கிண்ணத்தின் உள்ளே சிக்கிக்கொண்டது. அதை எப்படி வெளியே எடுப்பது?  ஒரு கெட்டி அட்டை முதலில் எடுத்து வைத்தோமல்லவா, அந்த அட்டையை எடுத்து நைஸாக கிண்ணத்தின் அடியில் சொருகவும். பார்க்க படம் - 4.
அவ்வளவுதான். பிளாஸ்டிக் கிண்ணத்தை அட்டையுடன் சேர்த்து தூக்கி, திருப்பிக் கொள்ளவும்.



 படம்- 4
இப்போது பல்லி பிளாஸ்டிக் ஜெயிலில். இந்தப் பல்லியை இப்போது என்ன செய்வது?

பல options  இருக்கின்றன. அவைகளில் சில.

  1. வேண்டாதவர்கள் யாராவது இருந்தால் (கண்டிப்பாக இருப்பார்கள்) அவர்கள் தலையில் இந்தப் பல்லியைப் போடலாம். ஆனந்தபோதினி சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் சொல்லியுள்ள பல்லி விழும் பலன்படி, தலை மேல் பல்லி விழுந்தால் உடனே மரணம் ஏற்படும். உங்கள் அத்யந்த நண்பர் எந்த விதமான நோய்நொடிகளும் இன்றி வைகுந்தப்ராப்தி அடைந்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.

2. அப்படி இல்லாமல் அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் வைகுண்டம் போகவேண்டுமென்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் அந்தப் பல்லியை
அவர்கள் வீட்டில் சாம்பார் கொதிக்கும்போது நைஸாக உள்ளே போட்டுவிடவும். இதற்கு அசாத்திய மனோதைரியமும் பின்விளைவுகளை சந்திக்கும் பலமும் வேண்டும்.

3. இந்த இரண்டு வழிகளும் பிடிக்காதவர்கள் பல்லியை காத தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று விடுவிக்கவும். எக்காரணம் கொண்டும் பல்லிக்கு எந்த விதமான தொல்லையும் கொடுத்து விடாதீர்கள். அப்படிச் செய்தால் நீங்கள் இறந்த பிறகு, கல்ப கோடி காலம் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் வதக்கப்படுவீர்கள். அப்படித்தான் கருட புராணம் சொல்கிறது.


படம் - 5

நேர்முக வகுப்புகள் தேவைப்படுபவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு டிடி எடுத்து அனுப்பினால் ஏற்பாடு செய்யப்படும்.