புதன், 9 நவம்பர், 2011

தலைமுறை இடைவெளி


வயசானவங்க கிட்ட இருக்கிற ஒரு பெரிய துர்க்குணம் என்னன்னா, எதையாச்சும் புடிச்சுகிட்டு, தொணதொணன்னு பேசிக்கிட்டே இருக்கறதுதான். (இப்ப நான் பதிவில பண்ணுகிறேன் பாருங்க, அந்த மாதிரி).

“நாங்கல்லாம் அந்தக்காலத்தில” அப்படீன்னு ஆரம்பிச்சா அன்னக்கி பூராவும் அதையே வேறு வேறு வார்தைகள்ல பேசிக்கிட்டே இருப்பாங்க. சங்கீத வித்வான்கள் இதை “சங்கதி” பாடறது என்பார்கள். ஒரே பல்லவியை வெவ்வேறு பாணியிலே ஒரு பத்து இருபது தடவை பாடுவார்கள். எவ்வளவு அதிக தடவை பாடுகிறாரோ அந்த அளவுக்கு அவர் பெரிய வித்வான்.

ஆனா இந்தக் கெளடுக பேசறது ஒரே கழுத்தறுப்பா இருக்கும். பொண்டாட்டி சத்தமா ஒரு கொரல் கொடுத்தாத்தான் இது நிக்கும். பேராண்டிகளெல்லாம் ஒரே ஓட்டமா ஓடி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவார்கள். சில பெரிசுக, எதிர ஆள் இல்லாட்டியும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மூளையில் இரண்டொரு மறைகள் வயதானதினால் லூசாகி இருக்கும். அதனால்தான் இந்த தனி ஆவர்த்தனம்.

அடுத்த தலைமுறைக்காரங்க என்ன செய்தாலும் தப்பு கண்டு பிடிப்பாங்க. இந்தக் காலத்துப் பசங்க சட்டை, பேன்டெல்லாம் வாங்கற பணம் ஒரு பெரிய குடும்பத்தின் ஒரு மாதச்செலவுக்கு மேல் இருக்கும். என் நண்பர் ஒருவர் பேராண்டி வாங்கி வந்த துணியின் விலையைக் கேட்டிருக்கிறார். அவன் அதன் உண்மை விலையில் பாதி சொல்லியிருக்கிறான். அவரும் இவ்வளவு விலையா என்று சொல்லிவிட்டு, அவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார். இரண்டு நாள் கழித்துத்தான் அதன் உண்மை விலையை யாரோ அவருக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் பேரனைக் கூப்பிட்டு என்னிடம் ஏன் அப்படி சொன்னாய் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பேரன் “ நான் உண்மை விலையைச் சொல்லியிருந்தால் உங்களுக்கு “ஹார்ட் அட்டேக்” வந்திருக்குமே, அதனால்தான் உண்மை விலையைச் சொல்லவில்லை” என்று சொன்னானாம். இது எப்படியிருக்கு பாருங்க. ஆனாலும் பேராண்டி விவரமாத்தான் சொல்லியிருக்கிறான்.

இதுதான் தலைமுறை இடைவெளி. இன்றைய இளைய தலைமுறையினரின் பொருளாதார நிலை வயதானவர்களின் இளமைக்கால பொருளாதாரத்திலிருந்து மிகவும் மாறுபட்டது. அதை வயதானவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆகவேதான் இந்த இடைவெளி. வயதானவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் இன்றைய இளைய சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உங்களால் முடியாது. ஆகவே அவர்களை அனுசரித்துக் கொண்டு போனால் எல்லோருக்கும் மகிழ்ச்சியாயிருக்கும்.