திங்கள், 30 ஜனவரி, 2012

ஒரு கற்பனை நிகழ்வு (நிஜம்)



சமீபத்தில் ஒரு நாள் என் மச்சினன் வந்திருந்தான். அவன் வரும்போது நான் கணினியில் மும்முரமாக இன்டர்நெட்டில் பிளாக் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் வந்ததைக் கூட கவனிக்கவில்லை. அவனாக என்னைக் கூப்பிட்டபோதுதான் அவன் வந்திருப்பது தெரிய வந்தது. பிறகு நடந்ததைப் பாருங்கள்.

மச்சினன்: என்னங்க மாமா, நான் வந்ததக் கூடப் பாக்காமெ என்ன பண்ணிட்டிருக்கீங்க?

மாமா: வா மாப்ளே, கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பார்த்திட்டிருக்கேன்.

மச்சினன்: இன்டர்நெட்னா அது என்னங்க மாமா?

மாமா: டேய், அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாதுடா.

மச்சினன்: உங்களுக்குச் சொல்லத் தெரியல்ல, அத மறைக்கறதுக்கு இந்த சமாதானம் சொல்றீங்க.

மாமா: டேய், அது தெரியாமயா கம்ப்யூட்டர் வாங்கி வச்சிருக்கிறேன்.

மச்சினன்: அப்போ எனக்கு இன்டர்நெட்டுன்னா என்னன்னு சொல்லுங்க.

மாமா: அது ஒரு பிரபஞ்சம் மாதிரி. ஆரம்பம் எது, முடிவு எதுன்னே தெரியாது. சுரங்கத்தை வெட்டினா எப்படி போய்ட்டே இருக்குமோ அந்த மாதிரி இதுலயும் போய்ட்டே இருக்கும். சில சமயம் உள்ளே போய்ட்டு வெளில வரமுடியாமயும் போயிடும்.

மச்சினன்: அதுல நீங்க என்ன பண்ணறீங்க.

மாமா: நானா, அதுல பிளாக் எழுதறேன்.

மச்சினன்: அதென்னங்க பிளாக்கு, அப்படீன்னா என்னங்க மாமா?

மாமா: அது வந்து இன்டர்நெட் ஒரு பெரிய உலகம்னு சொன்னனில்லயா? அதுல ஒரு ஊர்ல ஒருத்தன் பெரிய சுவர் கட்டி உட்டுருக்கான். யார் வேணும்னா போயி அந்த செவுத்தில அவங்கவுங்களுக்கு தோண்றத எழுதி வச்சுக்கலாம். அதுதான் பிளாக்கு.

மச்சினன்: ஏன் மாமா அப்ப அந்த செவுத்த கட்டி வச்சிருக்கிறவன் ஏதாச்சும் வாடகை கேக்கமாட்டானா?

மாமா: இப்பத்திக்கு சும்மாதான் கொடுத்திருக்கான். பின்னாடி எப்பவாச்சும் காசு கேட்டாலும் கேப்பான். அப்படி காசு கேட்டான்னா, இப்ப பிளாக் எழுதிட்டு இருக்கறவென்லாம் துணியக் காணோம், துண்டக் காணோம்னு ஓடிப்போயிடுவாங்க.

மச்சினன்: இப்படி பிளாக் எழுதறீங்களே, அதனால என்ன வருதுங்க மாமா?

மாமா: ஒரு சிங்கிள் டீக்குக் கூட வக்கில்லே மாப்பளே.

மச்சினன்: அப்பறம் எதுக்கு இந்த கசமாலத்தைக் கட்டீட்டு அளுகிறீங்க, மாமா?

மாமா: அதுல பாரு மாப்ள, இந்த பிளாக் எழுதறது சீட்டாட்டம் மாதிரி. காசு வருதோ இல்லையோ, காலைல எந்திருச்ச ஒடனே கம்ப்யூட்டரத் தொறந்து பிளாக்கப் பாக்கலீன்னா பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிப் போகுது மாப்ள.  

மச்சினன்: அக்கோவ், மாமாவுக்கு பயித்தியம் நல்லா முத்திப்போச்சு, அதுக்கு மந்திரிக்கோணும் அக்கா, எங்கூர்ல ஒரு நல்ல மந்திரவாதி இருக்கான் அக்கா, நான் இப்பவே போயி அவன கூட்டிட்டு வந்து ஒரு மண்டலம் மந்திரிச்சாதான் மாமா வழிக்கு வருவாரு அக்கா.

அக்கா: என்னமாச்சும் பண்ணி உங்க மாமாவை இந்தப் பயித்தத்திலிருந்து காப்பாத்திடறா தம்பி.

மச்சினன்: இப்பவே ஊருக்குப் போறேன் அக்கா.

முற்றிற்று