செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இரண்டு யோசிக்க வைக்கும் செய்திகள்.


ஒன்று.

திருநெல்வேலி ஆலங்குளம் அருகே ஒரு காரும் லாரியும் மோதினதில் எட்டு பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு பேர் சீரியசாக இருக்கிறார்கள். மிகவும் பரிதாபமான செய்தி. படிப்பதற்கே கஷ்டமாக இருந்தது.

இந்தக் கஷ்டம், பரிதாபம் இவைகளை விட்டுவிட்டு செய்தியை அலசினால் தெரியக்கூடிய கருத்துகள்.
  
  1. ஒரு குடும்பத்தினர் பணத்தை மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இன்னொரு உறவினர் வந்த வாடகைக் காரில் ஏறியிருக்கிறார்கள். கார் சக்திக்கு மீறிய அதிக பாரத்தை ஏற்றியிருக்கிறது.
  2.   கார் கொண்டு வந்த உறவினர், எல்லோரும் ஏறினால் இட நெருக்கடி ஏற்படும் என்று சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
  3.   கார் டிரைவர் 22 வயதுப் பையன். அவன் இப்படி அதிக பாரம் ஏற்றினால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவில்லை.
  4.   கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும், காரில் அதிக பாரம் இருக்கும்போது காரை ஓட்டுவதும் வளைப்பதுவும் எவ்வளவு கடினம் என்று.
  5.   டிரைவருக்கு இரவு சீக்கிரம் ஊர் போய்ச் சேரவேண்டிய அவசியம் இருந்திருக்கலாம். ஆகவே வேகமாக காரை ஓட்டியிருக்கிறார்.
  6.   அதிக பாரத்தினாலும், அதிக வேகத்தினாலும் வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வண்டிக்கு இடம் கொடுக்க முடியவில்லை.
  7.   லாரிக்காரனும் அதே மாதிரி வளவில் இடம் கொடுக்காமல் வந்திருக்கலாம்.
  8.   விபத்து நடந்துவிட்டது. 8 உயிர்கள் நஷ்டம். எத்தனை அழுது புரண்டாலும் உயிர்கள் மீளப்போவதில்லை.

காரில் போகும்போது சில கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். டிரைவர் ஓட்டினாலும் கூட செல்பவர்கள் கண்காணிப்பாக இருந்து செயல்படவேண்டும். அதிக வேகம் போகும்போது டிரைவரை கண்டிக்கவேண்டும். அதற்கு தைரியம் இல்லாவிடில் காரில் போகக்கூடாது. அதிக பாரம் ஏற்றுவதில் கண்டிப்பு வேண்டும். தயவு தாட்சண்யம் கூடாது. விபத்து ஏற்பட்டபின் வருத்தப்படுவதில் எந்த பலனும் இல்லை.

இரண்டு.

வேளச்சேரியில் மனித உரிமைக் கழகத்தினரை பொது மக்கள் நன்றாக மட்டம் தட்டியிருக்கிறார்கள். எப்போதும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதுவும் செய்வதில்லை. திருட்டுக் கொடுத்தவனுக்கு ஒன்றும் சொய்ய மாட்டார்கள். திருடனைப் பிடித்து தண்டித்தால் இவர்களுக்கு உடனே மனித நேய உணர்வு பொங்கிக்கொண்டு வரும்.

கொலை நடந்துவிட்டால் கொலையுண்டவனின் குடும்பத்தைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். கொலைகாரனுக்காக பரிந்து பேசிப் போராட்டம் நடத்துவார்கள். இவர்களை எல்லாம் சுண்ணாம்புக் காளவாயில் வைத்து வேகவைக்கவேண்டும்.