புதன், 28 நவம்பர், 2012

சட்டமும் மனிதாபிமானமும்

சட்டம் பெரிதா? மனிதாபிமானம் பெரிதா?

நீதி அறிந்தவர்கள் எப்பொழுதும் மனிதாபிமானத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளார்கள். இந்திய நீதித்துறையின் கோட்பாடுகளின்படி, சட்டத்திலுள்ள ஓட்டைகளினால் 99 சதம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பித்தாலும் சரி, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். அதனால்தான் பெரிய குற்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறுவதில்லை.

மாவட்ட ஆட்சியர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரங்களைப் பற்றி சாதாரண குடிமகன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த அதிகாரங்களை அவர் சாதாரண நேரங்களில் பயன் படுத்துவதில்லை. பேரிடர் காலங்களில் மட்டுமே பயன்படுத்துவார். இது முற்றிலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயல்பட அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள்.

ஒவ்வொரு உயர் அதிகாரிக்கும் இப்படிப்பட்ட அதிகாரங்கள் உண்டு. ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் பயம். நாளைக்கு யாராவது கேள்வு கேட்டால் என்ன சொல்வது என்ற பயம். இன்ன காரணத்திற்காக பொது நன்மைக்காக அல்லது ஒரு தன் மனிதனின் உரிமையைக் காக்க, இந்த முடிவை நான் எடுத்தேன் என்று சொல்லக்கூடிய தார்மீக பலம் அவர்களுக்கு இல்லை.

சமீப காலத்தில் பல கொலைகளில், அவை தற்காப்பிற்காக செய்யப்பட்டவை என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்தபோது உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை அரெஸ்ட் கூட செய்யாமல் விட்டிருக்கிறார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் சட்டத்தை விட மனிதாபிமானம்தான் உயர்ந்தது என்று அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் சரித்திரம் நினைவு கொள்கிறது.

என் சர்வீசில் நடந்த ஒரு சம்பவம். நான் தஞ்சாவூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் இரவு 8 மணிக்கு ஆபீஸ் ஜீப்பில் என் இருப்பிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது தஞ்சாவூர் அவுட்டரில் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அப்பாது லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. மின்சாரமும் இல்லை. ரோடு முழுவதும் இருட்டு.

என் வீட்டிற்கு சமீபத்தில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு வயதான அம்மா கையைக் காட்டி என் வண்டியை நிறுத்தினார். நான்தான் ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்தேன். நான் வண்டியை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா, "என் மகளுக்கு பிரசவ வலி வந்திருக்கிறது. உடனே ஆஸ்பத்திருக்குப் போகவேண்டும். இந்த இருட்டிலும் மழையிலும் ஒரு ஆட்டோ கூட இந்தப் பக்கம் வரவில்லை. நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்" என்றார்கள்.

அரசு வண்டியை சொந்தக் காரியங்களுக்கு பயன் படுத்தக்கூடாது என்பது சட்டம்.  ஆனால் அங்கு நான் எதிர்கொள்வது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. நான் அதிகம் யோசிக்கவில்லை. சரி, வாருங்கள் என்று அந்த அம்மாவின் வீட்டிற்குச் சென்று அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு, நான்கு கி.மீ. தூரத்திலுள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தேன். அந்த அம்மா பலமுறை நன்றி சொல்லிவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தார்கள். நான் அந்தப் பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

நான் செய்தது சட்டத்திற்குப் புறம்பாயிருக்கலாம். ஆனால் என் மனச்சாட்சியின்படி அது ஒரு மனிதாபிமானச் செயல். அதை நான் செய்திருக்காவிடில் என் ஆயுள் முழுவதும் என் மனச்சாட்சி என்னைக் குத்திக்கொண்டு இருந்திருக்கும். இந்த காரியத்திற்காக எனக்கு ஏதும் தண்டனை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். என்னுடைய பெரிய அதிகாரியை அடுத்த முறை சந்தித்தபோது இதைச் சொன்னேன். அவர் நீ செய்தது சரிதான், ஆனால் வண்டியின் லாக்புக்கில் எழுதாதே, பின்னால் ஆடிட்டர்கள் வீணாக தொந்திரவு செய்வார்கள் என்று சொல்லிவிட்டார்.

ஒவ்வொரு உயர் அதிகாரியும் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக, மனிதாபிமான அடிப்படையில், முடிவுகள் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே நிதரிசனம்.