திங்கள், 24 ஜூன், 2013

அக்காளைக் கட்டினால் தங்கச்சி இலவசம்


இலவசங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

சீலை வாங்கினால் ஜாக்கெட்டு இலவசம்.

சோப்பு வாங்கினால் சீப்பு இலவசம்.

இரண்டு சர்ட் (அல்லது பேன்ட்) வாங்கினால் மூன்றாவது இலவசம்.

இப்படி உலகில் பல வியாபார வித்தைகள் நடக்கின்றன.

இதைப் பார்த்த என் நண்பர் சொன்னதைத்தான் இந்தப் பதிவிற்கு தலைப்பாக வைத்திருக்கிறேன். இது வேடிக்கைக்காக சொன்னாலும் இலவசங்களின் தத்துவத்தை நன்றாக விளக்குகிறது.

இந்த பொது தத்துவம் இணையத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம்.

இவ்வுலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை என்பதை அனுபவசாலிகள் புரிந்துகொண்டிருப்பார்கள். காற்றும் தண்ணீரும் இயற்கை தந்த இலவசச் செல்வங்கள் என்று சிறுவயதில் பாடபுத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அவை எவ்வாறு வியாபாரப் பொருள்களாகி விட்டன என்று கண்கூடாகப் பார்க்கிறோம்.

இலவசம் என்று செல்லப்படும் அனைத்து விஷயங்களிலும் மறைமுகமாக ஏதோ ஒன்றை நம்மிடம் தள்ளிவிடுகிறார்கள் அல்லது அதனால் ஏதோவொரு லாபம் அவர்களுக்கு இருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

உலக நடைமுறை இவ்வாறு இருக்க இணையம் மட்டும் எப்படி வேறு விதமாக இருக்க முடியும்? இணையத்தில் இந்த உத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

கம்ப்யூட்டரை இயக்க பல மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்களில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தியாவசிய மென்பொருட்களுக்கான விலை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் ஏறக்குறைய எல்லோரும் காப்பியடிக்கப்பட்ட (Pirated) மென்பொருட்களை உபயோகிக்கிறோம்.

இது போக பல இலவச மென்பொருட்களை நம் பதிவுலக ஆர்வலர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில மென்பொருட்கள் உண்மையிலேயே இலவசமானவை. ஆனால் அவைகளின் மூலமாக ஏதோவொரு லாபம் அவர்களுக்கு கிடைக்கிறது. நம் காரியம் நடந்தால் சரி என்று நாம் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்கள் தங்களுடன் இன்னுமொரு இலவசத்தைக் கொண்டு வருகின்றன. பெரும்பாலான கம்ப்யூட்டர் வைரஸ்கள்  இவ்வாறுதான் நம் கம்பயூட்டருக்கு வந்து சேர்கின்றன.
சில வைரஸ்கள் பெரிய தீங்கு விளைவிக்காதவை. ஆனால் சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரையே முடக்கிப் போட வல்லவை.

ஆகையால்தான் எந்த வைரஸாக இருந்தாலும் தடுக்கவேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். இணையத்தை உபயோகப்படுத்தாதவர்கள் இந்த வைரஸ்களைக் கண்டு பயப்படத்தேவையில்லை. அவர்களை இந்த வைரஸ் இணையம் மூலமாக அணுகாது. வேறு வகைகளில் வரலாம்.

எந்தவொரு மென்பொருளையும் தரவிறக்கும்போது நல்ல ஆன்டிவைரஸ் மூலமாக பரிசோதித்து, பின்பு தரவிறக்குங்கள். அல்லது நண்பர்களிடம் விசாரித்துவிட்டு, பின்பு தரவிறக்குங்கள்.

கடந்த வாரத்தில் என்னுடைய கம்ப்யூட்டரை இரு முறை முற்றிலுமாக ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டி நேர்ந்தது. எனக்கு ஓரளவு இந்த தொழில் நுட்பம் தெரிந்திருந்ததினால் செலவு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் இந்த தொழில் நுட்பம் தெரியாதவர்களுக்கு வீண் செலவு ஏற்படும். ஆகவே இணையத்திலிருந்து எதையும் தரவிறக்கம் செய்யுமுன் தீர யோசித்து, பலரை விசாரித்து செயல்படவும்.