ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

சென்னை பதிவர் சந்திப்பு - ஒரு வேண்டுகோள்.

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நான் 1-9-2013 காலை ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்து சேர்கிறேன். என்னைப் போல் அன்று காலையில் பல பதிவர்கள் வரும் வாய்ப்பு இருக்கலாம்.

நான் ஒரு விஐபி யாக இருந்திருந்தால் என்னைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு தங்குமிடத்தில் தங்க வைத்து காலைக்கடன்களை முடித்த பின் டிபன் சாப்பிடவைத்து, சந்திப்பு நடக்குமிடத்திற்கு கூட்டிப்போய் விடுவதற்கு ஆட்கள் வருவார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது.

இன்று நான் அதைப்பற்றி கனவு கூடக் காண முடியாது. தேவையுமில்லை. ஆனாலும் பணத்தைக் கணக்குப் பார்க்காமல் சில ஆயிரங்கள் செலவு செய்தால் அந்த சௌகரியம் இன்றும் கிடைக்கும். அப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய சூழ்நிலையில் நான் வளராததினால் இன்றும் அப்படி செலவு செய்ய மனம் வருவதில்லை. தவிர அப்படி செலவு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் இல்லை.

ஆகையினால் எனக்கு வேண்டியது இரண்டே இரண்டு செய்திகள்தான். இந்தச் செய்திகள் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

1. சென்னை ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் முன்பு, அதாவது இருபது முப்பது வருடங்களுக்கு முன், குளிப்பதற்கு வெந்நீருடன் பாத்ரூம் கிடைக்கும் என்று வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள ஓட்டல்களில் போர்டுகள் தொங்கும். அன்று பத்து ரூபாய் வாங்குவார்கள். இன்று ஐம்பது அல்லது நூறு ரூபாய் கேட்பார்கள். அப்படிப்பட்ட வசதி இன்றும் இருக்கிறதா?

2. சென்னை சென்ட்ரலிலிருந்து வடபழனி வருவதற்கு டவுன் பஸ் நெம்பர் என்ன? (17ம் நெ. பஸ் என்று பழைய ஞாபகம்.)

சென்னைப் பதிவர்கள் யாராவது இந்த இரண்டு செய்திகளையும் கொடுத்தால் உதவியாயிருக்கும்.

நாங்கள் இங்கே ரூம் போட்டிருக்கிறோம், அங்கு வந்து விடவும் என்கிற மாதிரி விவரங்கள் வேண்டாம். நான் யாருக்கும் (என்னை உட்பட) சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இந்த விவரங்கள் இல்லாவிட்டாலும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் இருக்கிறது. காலை 9 மணிக்கு டாண் என்று சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுவேன்.

இந்த விவரங்கள் என் தைரியத்தை இன்னும் கொஞ்சம் கூட்டும்.