சனி, 30 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 4


டிக்கட் பரிசோதகர் என்னிடம் டிக்கெட் கேட்டார். நானும் வாங்கி வைத்திருந்த டூரிஸ்ட் டிக்கட்டைக் காட்டினேன். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். அப்போதே ஏதோ வில்லங்கம் போல் இருக்கிறது என்று மனதிற்குள் பொறி தட்டியது. இருந்தாலும் "கெத்தை" (Self Confidence) விடாமல் ஏதாவது பிரச்சினையா என்றேன். அவர் சொன்னார், "இந்த பாஸ் சிட்டி வரம்பிற்குள் பிரயாணம் செய்வதற்குத்தான் செல்லுபடியாகும். நீங்கள் சிட்டி லிமிட்டைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டீர்கள் என்றார்."

நான் உடனே சுருதி இறங்கிப்போய், டிபன்ஸ் மோடுக்கு மாறினேன். "ஐயா, நான் அசலூருங்க, உங்க ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று வந்தேன். இந்த உள்  விவகாரங்களெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இப்போது என்ன செய்யலாம்" என்றேன். அவர் நீங்கள் டூரிஸ்ட்டாக இருப்பதால் இது வரைக்கும் வந்ததற்கும் திரும்ப போவதற்கும் உண்டான சாதாரண கட்டணம் மட்டும் வசூலிக்கிறேன். இதுவே ஊள்ளூர்க்காரர்களாயிருந்தால் பெரிய தொகை பைன் கட்ட வேண்டியிருக்கும் என்றார்.

எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையுடனே போயிற்று என்று நினைத்துக்கொண்டு அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். அவர் ரசீது கொடுத்து விட்டு, வரும் ஸ்டேஷனில் இறங்கி, திரும்பிப் போகும் ரயிலில் சிட்டி போய்ச் சேருங்கள் என்றார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான காட்சியைக் கண்டேன்.

அந்த ஊர் நகரின் வெளிப்புறத்தால் உள்ள ஒரு சிறாய கிராமம். அன்று ஒரு விடுமுறை நாள் போலும். அங்கு ஒரு பெரிய வேளியில் சிறிய சிறிய பிளாட்டுகள் போட்டிருந்தார்கள். அதில் பலவிதமான செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிளாட்டிலும் பெரியவர்கள், சிறியவர்கள் ஆகியோர் குடும்பம் குடும்பமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். இது ஒரு வழக்கம் போல் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு நான் திரும்ப வேண்டிய ரயில் வந்ததால் திரும்பி விட்டேன்.

நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில்.