திங்கள், 9 டிசம்பர், 2013

ஆம்ஸ்டர்டாமிலிருந்து இஸ்ரேல் வரை


இந்த பயணத் தொடரை சீக்கிரம் முடித்து விட்டேன் என்று பலரும் குறைப்பட்டுக் கொண்டதால் நான் சென்ற அடுத்த ஊரைப் பற்றி எழுதுகிறேன்.

நெதர்லாந்திலிருந்து அடுத்தபடியாக நான் போனது இஸ்ரேல் நாடு. இந்த இஸ்ரேல் நாடு உருவான விதம் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நாடே இல்லாத யூதர் இனத்தினவர்களுக்காக அமெரிக்கா உருவாக்கிக்கொடுத்த ஒரு நாடு. இந்த நாடு இருந்த இடத்தில் இதற்கு முன்பு முஸ்லிம்களின் நாடான பாலஸ்தீனியம் இருந்தது. முஸ்லிம்களை விரட்டியடித்துவிட்டு அங்கு யூதர்கள் குடியேறினார்கள்.

இந்த நிலை வருவதற்குக் காரணம் யூதர்களும் முஸ்லிம்களும் ஒரே பிரதேசத்தில் இருந்து உருவானவர்கள். இருவரும் அண்ணன்-தம்பி என்றே சொல்லலாம். ஜெருசலேம் இருவருக்கும் பொதுவான புனிதஸ்தலம். யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முதல் கோயில்கள் அங்கு இருக்கின்றன. அண்ணன்-தம்பிகளுக்கிடையான சண்டையில் இருவரும் பிரிந்து விட்டார்கள். ஆனாலும் அவர்கள் இடையே பல ஒற்றுமைகள் இன்றும் இருக்கின்றன.

யூதர்களுக்கான மொழி ஹீப்ரூ. முஸ்லிம்களுக்கான மொழி உருது. உலகிலேயே இந்த இரண்டு மொழிகள்தான் வலமிருந்து இடது புறமாக எழுதப் படுகின்றன. உருதுவிலிருந்து தோன்றிய அரபியும் இதே மாதிரிதான். அரபியிலிருந்து தோன்றிய உருதுவும் இதே மாதிரிதான். இந்த மொழிகளில் நாம் வழக்கமாக முதல் பக்கம் என்று உபயோகப்படுத்துவது அவர்களுக்கு கடைசி பக்கம். அவர்கள் புஸ்தகங்களை எடுத்தால் நாம் வழக்கமாக கடைசிப் பக்கம் என்று சொல்லும் பக்கத்திலிருந்துதான் ஆரம்பமாகும், எல்லாம் தலைகீழ்.

யூதர்களின் ஆப்ரஹாம் முஸ்லிம்களின் இப்ரஹீம் ஆனார். ஜோசப்  யூசுப் ஆனார். இப்படிப் பல உதாரணங்கள் காட்ட முடியும். இன்னும் அதிக விவரங்கள் வேண்டுவோர் கூகுளாரிடம் செல்லவும்.

இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கையைப் பற்றி அறிவீர்கள். எப்போதும் பாலுக்கும் காவல்-பூனைக்கும் தோழன் கதைதான். அரேபியர்களிடமிருந்து நமக்கு பெட்ரோலியம் வேண்டும். இஸ்ரேல் அரேபியர்களுக்கு எதிரி. நண்பனின் எதிரி நமக்கும் எதிரிதானே? அதனால் இஸ்ரேலுடன் நமக்கு "டூ". இந்தியாவிலிருந்து இஸ்ரேலுடன் ஒருவரும் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது. அங்கு செல்ல பாஸ்போர்ட்டில் அனுமதி இல்லை. இந்தியாவில் இஸ்ரேலுக்கு தூதரகம் இல்லை. அதனால் விசாவும் கிடைக்காது.

அமெரிக்கா இந்தியாவின் சட்டாம்பிள்ளை. அவனுக்கு இஸ்ரேல் செல்லப் பிள்ளை. இஸ்ரேலுடன் நாம் "டூ" விட்டாயிற்று. இதை எப்படி சரிக்கட்டுவது. எல்லாம் மூக்கால் அழுதுதான். ஐயா, எனக்கு பெட்ரோல் இல்லாவிட்டால் செத்துப் போய் விடுவேன். அரேபியர்கள்தான் எனக்கு பெட்ரோல் ஆதாரம். அதனால் அவர்களை சமாதானமாக வைத்துக் கொள்வதற்காக இஸ்ரேலுடன் சும்மானாச்சுக்கும் "டூ" விட்டிருக்கிறேன். நீங்கள் தப்பாக நினைக்கவேண்டாம். அரேபியர்களுக்குத் தெரியாமல் இஸ்ரேல் விஷயத்தில் நீங்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்கிறேன் என்று சொல்லி அவர்களை சமாதானம் செய்தாகி விட்டது.

இது எல்லாம் 1990 ல் இருந்த நிலை. இப்போது பல மாற்றங்கள் வந்து விட்டன. எனக்கு ஒரு நப்பாசை. இந்த நாட்டைப் பார்த்துவிடவேண்டும் என்று. காரணம் இந்த நாட்டில்தான் சொட்டு நீர்ப்பாசனம் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியது. நான் இங்கு நீர் நுட்பவியல் மையத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததால் இந்த நாட்டைப் பார்த்து விட்டு வந்தால் ஒரு கெத்தாயிருக்கும் என்று நினைத்தேன்.

ஸ்வீடனுடன் நாங்கள் தொழில் நுட்ப ஒத்துழைப்பு வைத்திருந்ததால் என்னை ஸ்வீடனுக்கு அழைத்தார்கள். அங்கு சென்றபோது என்னுடைய புரோக்ராம் பொறுப்பாளரிடம் என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். அவர் "நோ பிராப்ளம்" என்றார். யூரோப், அமெரிக்கா போன்ற நாடுகளில் நாம் என்ன சொன்னாலும் முதலில் அவர்கள் சொல்லுவது "நோ பிராப்ளம்" என்றுதான். நம் ஊரின் நிலை உங்களுக்கே தெரியும்.

ஆனால் இஸ்ரேலுக்கு விசா வாங்கப் போனபோதுதான் பிராப்ளம் ஆரம்பித்தது. என்ன பிராப்ளம் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?