திங்கள், 12 மே, 2014

கட்டைப் பேனாக்கள்

நாம் எழுத்தாணி உபயோகப்படுத்திக்கொண்டிருந்தபோது ஐரோப்பாவில் இறகுப் பேனாவை பயன்படுத்தினார்கள். பேப்பர் கண்டுபிடிக்காதபோது அவர்கள் மரப்பட்டைகளை உபயோகப்படுத்தினார்கள்.
இதிலிருந்து மாறி வந்தது தான் கட்டைப் பேனாக்கள். இவை 1960 ம் வருடத்திற்கு முன் மிகவும் பிரபலமாக இருந்தன.


இவைகளை தொட்டு எழுதும் பேனாக்கள் என்றும் கூறுவார்கள். சர்க்கார் ஆபீசுகளில் ஒவ்வொரு மேஜையிலும் தவறாது இடம் பெற்றிருக்கும்.
இந்தப் பேனாவை உபயோகித்து எழுதுவதற்கு நல்ல திறமையும் அனுபவமும் வேண்டும். அப்டிப்பட்ட அனுபவஸ்தர்கள் எழுதினால் எழுத்துக்கள் ஒரே சீராக இருக்கும். இல்லையென்றால் வரி ஆரம்பிக்கும்போது இங்க் அதிகமாகவும் வரி முடியும்போது எழுத்து மங்கலாகவும் இருக்கும்.

நான் இந்தப் பேனாக்களை உபயோகப்படுத்தியிருக்கிறேன். இதற்கு உபயோகிக்க இங்க் வில்லைகள் அந்தக்காலத்தில் பெட்டிக்கடைகளில் கிடைக்கும். ஒரு வில்லை காலணா (ஒன்றரை நயா பைசா) என்று ஞாபகம். காலணா என்பது நான் சிறுவனாக இருந்தபோது ஒரு கணிசமான தொகை. அதை வைத்துக்கொண்டு ஒரு இலந்தை வடகம் வாங்கலாம். ஒரு தேங்காய் பர்பி வாங்கலாம். அன்று ஒரு சிறுவன் கையில் காலணா இருந்தால் அவன் அன்று பள்ளியில் ஒரு பெரிய ஹீரோ.

இந்தப் பேனாக்கள் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்டவை. ஒரு முனையில் நிப் சொருக ஒரு அமைப்பு இருக்கும். அந்த நிப்பை சொருகி பின் மைக்கூட்டில் மையைத் தொட்டு எழுதவேண்டும். இதன் பின்னால் கண்டு பிடிக்கப்பட்டதுதான் பவுன்டன் பேனா என்று சொல்லப்படுபவை. இதில் இரண்டு வகை உண்டு. கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றும் வகை. இன்னொன்று தானே இங்க் நிரப்பிக்கொள்ளும் வகை.

பேனாவின் கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றுவது ஒரு பெரும் யுத்தம். இங்க்கை கீழே சிந்தாமல் இங்க் ஊற்றிய சிறுவர்கள் அநேகமாக இல்லை. அப்படி செய்து " அம்மாவிடம் "கடங்காரா" பட்டம் வாங்காதவர்கள் இல்லை. இத்தகைய பேனாக்கள் கூட அன்று மேலை நாட்டிலிருந்துதான் இறக்குமதியாகிக்கொண்டிருந்தன.  பிளேக் பேர்டு, ஸ்வேன், பார்க்கர், பைலட், ஷெஃபீல்டு ஆகியவை அன்று பிபலமானவை.

இந்தியா சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் பேனா தயாரிப்பு இங்கு தொடங்கியது. இங்குகளும் தயாரிக்கப்பட்டன. "கேம்லின்" தயாரிப்புகள்தான் இன்று மார்க்கெட்டில் நிரம்பிக்கிடக்கின்றன. நடுவில் சைனாவிலிருந்து "ஹீரோ" பேனாக்கள் திருட்டுத்தனமாக வர ஆரம்பித்தன. சும்மா சொல்லக்கூடாது. அந்தப் பேனாக்கள் உண்மையிலேயே நன்றாக இருந்தன. இன்றும் நன்றாக இருக்கிறது.


அந்தக் காலத்தில் "ஹீரோ" பேனா வைத்திருப்பதுதான் பேஷனாக இருந்தது.இப்போது அதன் மவுசு பெரிதும் குறைந்து விட்டது. விதம் விதமான ஹீரோ பேனாக்கள் வாங்கி சேமித்து வைத்திருந்தேன். அதை எல்லாம் இப்போது பேரன்களுக்கு கொடுத்து விட்டேன்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பால்பாய்ன்ட் பேனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. அவை வந்த புதிதில் அவைகளின் தரம் இன்று இருப்பதைப்போல் இருக்கவில்லை, எந்தப் புதிய கண்டு பிடிப்பு வந்தாலும் அதை எதிர்ப்பவர்கள் நம் நாட்டில் உண்டுதானே. குறிப்பாக பேங்க் ஆசாமிகள்.

செக்குகளில் பால் பாய்ன்ட் பேனாவால் கையெழுத்துப் போட்டால் செல்லாது என்றார்கள். அதற்கு அவர்க்ள கொடுத்த வியாக்யானம்தான் வேடிக்கை. பால்பாய்ன்ட் பேனாவால் எழுதும்போது கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும். அப்படி அழுத்தி செக் புக்கில் எழுதினால் கீழே இருக்கும் செக்கிலும் அந்தக் கையெழுத்தின் அடையாளம் விழுந்து விடும். அதை வைத்து யாராவது வேற்று ஆட்கள் அந்தக் கையெழுத்தை ஒரிஜினல் மாதிரி போட்டு பணத்தைக் களவாண்டு விடுவார்கள், அதனால் பால்பாய்ன்ட் பேனா உபயோகப்படுத்தக்கூடாது என்றார்கள்.

அப்படி சொன்னவர்கள் இன்று எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. பேங்குகளில் இங்க் பேனாவை மருந்துக்குக்கூட காண முடிவதில்லை. எல்லோரும் பால் பாய்ன்ட் பேனாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இன்று பால்பாய்ன்ட பேனாக்களில் எத்தனை வகை இருக்கறது என்று யாராலும் சொல்ல முடியாதென்று நினைக்கிறேன். ஒரு சமயம் பள்ளிச் சிறுவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்குத்தான் லேட்டஸ்ட் சமாச்சாரங்கள் தெரியும். கடைகளில் போய் இங்க் பேனா வேண்டும் என்றால் மேலும் கீழும் பார்க்கிறார்கள்.

இப்போது கம்ப்யூட்டர் வந்து விட்டது. பேப்பரில் எழுதுவது என்பதே ஏறக்குறைய மறந்து போக ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பேனாக்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் இன்னும் ஹீரோ பேனாவும் கேம்லின் இங்க்கும் வைத்திருக்கிறேன். அவைகளை அவ்வப்போது உபயோகப்படுத்தவும் செய்கிறேன்.