செவ்வாய், 8 ஜூலை, 2014

சோதனைக்கு மேல் சோதனை, போதுமடா சாமி


நான் மாதம் 50 GB அளவிற்கு இன்டெர்நெட்டை உபயோகித்ததை கண்டுபிடித்து பிஎஸ்என்எல்- லுக்கு யாரோ வத்தி வைத்ததில் அவன் என்னுடைய இரவு நேர இலவச டவுன்லோடைப் பிடுங்கிக்கொண்டான். நானும் ஒருவாறு சமாதானமடைந்து, வேறு ஒரு கழுதையைக் கட்டின விவகாரத்தை போன பதிவில் பார்த்தோம்.

அந்த கோள் சொன்ன மகராசன் அத்தோடு நிறுத்தினானா, கூகுள்காரனிடம் போய் இப்படி ஒரு ஆள் யூட்யூப்பிலிருந்து மாசம் 50 GB இலவசமா டவுன்லோடு செஞ்சிட்டிருக்கானே, உங்கள் கம்பெனிக்கு எப்படி காசு வரும் என்று போட்டுக்கொடுத்து விட்டான் போல் இருக்கிறது. கூகுள்காரனுக்கு சொல்லவா வேண்டும்? யூட்யூபிற்கும் வைத்தான் ஆப்பு. இரண்டு நாட்களாக யூட்யூப் விடியோக்களை டவுன்லோடு செய்ய முடிவதில்லை.

Youtube Downloader  என்று ஒரு புரொக்ராம் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதை வைத்து யூட்யூபில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான விடியோக்களில் எதை வேண்டுமானாலும் டவுன்லோடு பண்ணி நம் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துக்கொண்டு, நமக்கு சௌகரியமானபொழுது பார்த்து ரசிக்கலாம். இதை உபயோகப்படுத்தித்தான் நான் இசை, சினிமா, ஆன்மீகம், சுற்றுலா, சமையல் சம்பந்தப்பட்ட பல விடியோக்களை டவுன்லோடு செய்து வந்தேன். இப்போது இந்த புரொக்ராம் யூட்யூப் விடியோக்களை டவுன்லோடு செய்ய மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறது.

இந்த யூட்யூப் கம்பெனி வேறு ஒருவர் கையில் இருந்தவரைக்கும் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. இப்போது இந்த யூட்யூப் கம்பெனியையும் கூகுள்காரன் வாங்கி விட்டான் என்று சொல்கிறார்கள். வாங்கினவன் பழைய மாதிரி கம்பெனியை நடத்தவேண்டியதுதானே? என்னைப்போன்ற இளிச்சவாயன்கள் தலையில் கை வைப்பானேன்? அவன்தான் (அவன் நாசமாய்த்தான் போவான்) இப்போது எந்த டவுட்லோடரையும் உபயோகித்து யூட்யூப் விடியோக்களை டவுன்லோடு செய்ய விடாமல் பண்ணி விட்டான்.

என்ன அக்கிரமம் பாருங்கள்? இந்த யூட்யூப்பில் இருக்கும் விடியோக்கள் பெரும்பாலானவை நம்மைப் போன்ற சாதாரண ஜனங்கள் எடுத்து யூட்யூபில் சேர்த்தவை. இந்த கூகுள்காரன் பெரிய திமிங்கலம். நம்மைப் போன்ற சாதாரண பொதுஜனம் இந்த திமிங்கலத்தோடு மோத முடியுமா?

உலகத்தில் கலி முத்தித்தான் போச்சு. நல்லவங்களுக்கு காலமில்லை. தனி மனித சுதந்திரம் எப்படியெல்லாம் பறி போகிறது, பாருங்கள்.